CJ for You: modern

modern

Showing posts with label modern. Show all posts
Showing posts with label modern. Show all posts

Is exercise necessary for humans? Do dogs, cats, tigers, lions, elephants all exercise? Doesn't that live well and long?


மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியமா? தேவைதானா? நாய், பூனை, புலி, சிங்கம், யானை எல்லாம் உடற்பயிற்சியா செய்கிறது? அதெல்லாம் நன்றாக, நீண்டநாள் வாழ்வதில்லையா? விளக்கம் தருக.


அதானே? மிருகங்களும், பறவைகளும் உடற்பயிற்சியா செய்கிறது? மனிதனும் அவ்வாறே இருந்து விடலாமே? உங்கள் கேள்வி மிகச்சரிதான். உங்கள் சிந்தனையையும் பாராட்டலாம். ஆனால், நீங்கள் கற்கால மனிதனா? நவீன கால மனிதனா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? குகையில் வாழ்கிறீர்களா? குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்கிறீர்களா? கையில் தீபந்தம் இருக்கிறதா? கைபேசி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையை சொல்லி விடுங்கள்.

பறவைகள், விலங்குகள் இன்னமும் இயற்கை ஒட்டித்தான் வாழ்கின்றன. அதன் வரம்பை மீறிட அதற்கு தெரியாது. இனிமேலும் கூட, அவைகள் அப்படித்தான் வாழும். துரதிஷ்டவசமாக அவைகளுக்கு ‘ஐந்தறிவுதான்’ இருக்கிறது.

ஆனால், மனிதனுக்கு ஆறறிவு. அதனால் அவன், வரம்புகளை அமைத்துக் கொள்கிறான். என்றாலும் இயற்கையை மீறிடவும் செய்கிறான். அதனால், அவனுக்குரிய, இயற்கையின் அமைப்பு, வழிமுறை இவற்றிலிருந்து விலகி விடுகிறான். அவனுடைய, உடல், மனம், உயிர் ஆகியன பிரச்சனைக்குள்ளாகிறது. இதை நீங்கள், உங்களுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இப்படியான கேள்வி பிறந்திருக்கிறது. அதை என்னிடமும் கேட்கிறீர்கள்.

எனினும் உங்களை உடற்பயிற்சி செய்க, என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். வற்புறுத்தவும் மாட்டார்கள். கட்டளை இடவும் மாட்டார்கள். இந்த அரசாங்கமும் கூட திட்டமிடாது. அதனால் கவலை வேண்டாம். ஏதோ திடீரென உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைப்பார்த்து, பரிசோதனை செய்துவிட்டு, ‘ஏதேனும் உடற்பயிற்சி செய்க, நடைப்பயிற்சி கூட சரிதான்’ என்று சொல்லுவார். அதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் என்னய்யா ஆகிவிடப்போகிறது? என்பதுதானே உங்கள் நினைப்பு. அப்படியே இருந்துவிடுங்கள்.

இப்போது இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காலத்தில், அடடா, ஏதோ தப்பு செய்துவிட்டோமோ? என்று நினைப்பு வரும். அந்த நேரத்தில்கூட அதை கடந்தும் விடலாம். ஆனால், நல்லதை சொல்லாமல் என்னால் இருக்க முடியாதே? அதனால் இந்த காணொளியில் சொல்லப்படும் விளக்கத்தை கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முடிவு.

மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது தேவைதானா? உண்மையும் ரகசியமும் என்ன? 

வாழ்க வளமுடன்

Is it perfect the explaining the spiritual truth through with the modern science?


இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது வேதாத்திரியம் இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடுதான் அன்பர்களுக்கு, பயிற்சியோடும் விளக்கிவருகிறது என்பதை யாவரும் அறிவார்கள்

உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளியமுறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனிதகுலத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது. அருட்பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல [பிரபஞ்ச]மாக விளங்குகிறது. 

இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் (Repulsive Force) ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் (Attractive Force) ஆற்றலும் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தகளமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.

இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision & Regularity) எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும் முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால்தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும். பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, உடல் உள்ளப் பயிற்சி முறையே எளியமுறைக் குண்டலினி யோகமாகும்.

இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமுமாகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன்பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள். உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்குபடுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள்.

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க வளமுடன்.

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

Can we live at this present, at this second and live without mind in our life?


நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் சாத்தியமானதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் சாத்தியமானதா?


பதில்:

உலகில் மனிதனின் வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையை வாழும் மனிதனுக்கும் உதவும் வகையில் எண்ணற்ர பயிற்சி முறைகள், இப்பொழுது கிடைத்துவருகின்றன. அக்காலத்திலும், மனிதனின் உண்மையறிய, பிறப்பின் நோக்கம் அறிய, இறை என்ற மெய்ப்பொருளின் உண்மையறிய யோகம் என்றும் பயிற்சி முறை சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது. யோகத்திற்கு வரமுடியாத, புரிந்துகொள்ளமுடியாத எளிய மனிதர்களுக்கு பக்தி என்ற முறை தோற்றுவிக்கப்பட்டது. நல்லது செய்தால்  புண்ணியம், கெட்டதும் தீயதும் செய்தால் பாவம் என்ற அறநெறி வாழ்க்கை முறையும் வழங்கப்பட்டது.

யோகம் என்பது சித்தாந்தம் என்றும், பக்தி வழியில் உருவானதை வேதாந்தம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த சித்தாந்தமும், வேதாந்ததமும் கூட காலத்தால் மாற்றம் பெற்றுவிட்டதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அதில் உள்ள சிரமங்கள், குழப்பங்கள், தடைகள் எல்லாம் நீங்கி எளிமையாகிவிட்டதை நாம் அறிவோம். எனினும் வேதாந்தத்தின் துணை அருகில் செல்வதற்கு மட்டுமே உதவும். சித்தாந்தம் மட்டுமே அந்த உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள உதவும்.

இந்த வளர்ச்சியில், நவீன காலத்தில் நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் என்றும் பலப்பல பயிற்சிமுறைகள் வந்துவிட்டன. இதை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும் ஏறக்குறைய ஒன்றுதான் எனினும், சிற்சில வித்தியாசங்கள் இருக்கலாம். நிகழ்காலம் என்பது, இன்று, இப்பொழுது, இந்த நொடி என்பதாக மட்டுமே சொல்லமுடியும். இதை சொல்லி முடிக்கும் பொழுதே அது இல்லாமல் போய், அடுத்த நொடி வந்து நின்றுவிடும். எனவே நிகழ்காலம் என்பதும், இக்கணம் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ள, ஆழ்ந்த பயிற்சி வேண்டும். கடந்து போனதையும், வரப்போவதையும் நினைக்காத மனம் அமையவேண்டும். அத்தகைய மனம் அமைவதற்கு பயிற்சிகள் வேண்டும்.

அத்தகைய பயிற்சிகள், யோகத்தில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நவீன கால பயிற்சிகளில் அது உண்டா? நிச்சயமாக உதவுமா? என்று சொல்லுவதற்கில்லை. மனம் மிக வலிமையானது. மிக நன்றாக நடித்து ஏமாற்றிவிடக் கூடியது. நம்மைவிடவும் திறமைசாலி. நாம் சொல்லிக்கொடுக்காமல் எல்லாவற்றையும், கற்று, பதிந்து, எடுத்துக்காட்டிவிடக் கூடியது. அப்படியான மனதை, வெறுமனே பயிற்சியால், நிகழ்காலத்தில் இரு, இக்கணத்தில் இரு என்று பழக்கிவிட முடியாது. ஒருவேளை அப்படி பயிற்சி கொடுத்தால், அதை, மனதை பழக்கிட நம் வாழ்நாள் போதாது என்று கருதிவிட இடமிருக்கிறது.

மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வது என்பது கட்டுக்கதை என்றுதான் சொல்லமுடியும். மனிதன் என்றாலே மனம்+இதன்=மனிதன் என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். இதில் மனதை தள்ளிவைத்தால், மனமற்ற நிலையில், மனிதன் இருப்பானா? அவனிடம் இதம் தான் இருக்குமா? மனமற்ற நிலையில் எப்படி அவன் வாழமுடியும்? செயல்பட முடியும்? ஒருவேளை அப்படி வாழ்வதாக தன்னையே ஏமாற்றிக்கொள்வானா? எனினும் இதற்கெல்லாம் பயிற்சி இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அந்த பயிற்சியால் மனதை தள்ளிவைத்தும், மனமற்ற நிலையிலும் வாழ முடியும் என்றுதான் சொல்லுகிறார்கள். ஆனால் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’. மனதை அறிய நினைக்காமல் தள்ளிவைப்பதும், மனமற்ற நிலையில் வாழ்வதும் எப்படி சாத்தியமாகும்?

எப்படியோ, இந்த பயிற்சிகளால் உங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளாமல் இருந்தால் சரிதான். ஏதோ ஒருவழியில், உங்கள் பிறப்பின் நோக்கமான ‘நான் யார்?’ என்ற உண்மையறிதலை நோக்கி பயணம் செய்தால் நல்லதுதான். எந்த வகையிலும் நீங்கள் சிறக்க, நீங்களே முடிவெடுங்கள். நான் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

How we can avoid and escape the fake Godman in this modern world?


இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?

பதில்:
நல்லதாக, எல்லோருக்கும் பயன்படும் ஒரு பதிலுக்கான கேள்விதான். இந்த கேள்வியில் நீங்கள் அறியாமலேயே, இத்தகைய நபர்களின் நோக்கத்தையும் சொல்லிவிட்டீர்கள். போலியான இறைத் தத்துவ விற்பனர்கள் என்று. இந்த விற்பனர்களின் நோக்கம் உங்களிடமிருந்து எதைதோ, அவர்களுக்கு சாதகாமான ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இது இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல, ஞானியர்களுக்கும், யோகியர்களும், மகான்களுக்கும் கிடைத்த மரியாதையை பெறுவதற்கு தாங்களும் முயற்சிசெய்தும் மக்களை ஏமாற்றியவர்கள் அந்தக்காலத்திலும் உண்டுதான். இப்படியான போலிகளிடம் ஏமாற்றம் அடைந்து உங்களிடமிருந்தோ, மற்ற மனிதர்களிடமிருந்தோ பணம் போனால் கூட பரவாயில்லை, மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மனம் போனால்? அது சிதைந்து விடுமே?!

இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது, உண்மையான இறைத்தத்துவம் வழங்கும் இறையுணர்ந்தவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் உண்டு. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். இந்த இறைத் தத்துவத்தை, மற்றவர்களுக்கு வார்த்தைகளால் செயல்படுத்த, விளக்கிச் சொல்ல முடியாதவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மற்றும் இன்னும் பலர், இதை மக்களிடம் எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் ஆர்வம் கொண்டு பயிற்சி திட்டமாகவும் வழங்குகிறார்கள், வேதாத்திரியம் அப்படியான பயிற்சி முறைதானே!

அப்படியான பயிற்சிக்கும், கற்றுக்கொள்ளலுக்கும் ஒரு இணைப்பு பாலமாக, பொறுப்புணர்ந்து செயல்படவும், கைவிடாது தொடரவும், உறுதி கொள்ளவும், கட்டணம் செலுத்தும்படியான நிலை இருக்கிறது.

இலவசம், கட்டமில்லா நிலை, சேவை என்றால் உங்கள் மனமே அந்த, தத்துவத்தை, இறையுண்மையை, விளக்கத்தை, ஒழுங்கமைப்பை, உறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் செய்துவிடும்.

சும்மா கொடுத்த மருந்து வேலை செய்யுமா? என்று ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இந்தவித, தற்போதைய உலக இயல்பை, அந்த போலியான விற்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அப்படி போலியானவர்களாக காண்பது ஒரு நோய். அப்படி இருக்கக்கூடாது. அந்த நபர், விற்பனர் என்ன சொல்லுகிறார்? அனுபவம் பெற்றவரா? இதுவரை அவரின் பதிவுகள் எப்படி இருக்கின்றன? அவரின் வாழ்க்கைமுறை என்ன? எப்படி நேரில் பழகிக் கொள்கிறார்? ஒரு உண்மையை விளக்கத்தை எப்படி புரியவைக்கிறார்? கதையளக்கிறாரா? எளிமையாக சொல்லுகிறாரா? நேரத்தை கடத்துகிறாரா? குழப்புகிறாரா? இதையும் செய், அதையும் செய் என்று ஓட்டுகிறாரா? எல்லாவற்றை விட்டுவிடு என்கிறாரா? சொந்த அனுபவத்தை சொல்லுகிறாரா? யாரோ சொன்னதை சொல்லுகிறாரா? கதையாக கலவையாக கலந்தடிக்கிறாரா? தீர்மானமாக இதுதான் என்று உறுதியாக சொல்லுகிறாரா? என்று பலவாறாக கேள்விகள் கேட்டு அதற்கு பதிலை பெற்றபிறகுதான், அவரின் தன்மை தெரியவரும். அதுவரையிலும் அவரை போலி என்றுகூட சொல்லாதிருங்கள்!

ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த விற்பனரை புரிந்து கொள்வதற்காகவே, உங்களுடைய காலம் கொஞ்சம் வீணாகும் என்பதுதான். ஆனால் வேறுவழியில்லை. ஒருவேளை அவர் சிறப்பானவராக இருந்தால் அது உங்களுக்கு உதவும் கூடுமே?! இனி உங்கள் முடிவுதான்!
வாழ்க வளமுடன்.
-

Hope we can understand the secret of the beyond universe by science. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நவீன அறிவியல் வழியாக மனிதனின் மூலத்தை, பிரபஞ்சதிற்கு அப்பால் உள்ள ரகசியத்தை அறிந்துகொள்ள முடியாதா?


பதில்:

நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவரா? நீண்டநாள் வேதாத்திரிய சாதகரா என்று தெரியவில்லை. எனினும் விளக்கமாகவே சொல்லுகிறேன். குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ற பாமர மக்களின் தத்துவஞானி, தன்னுடை மெய்ப்பொருள் விளக்கத்தை விஞ்ஞானப் பார்வையில்தான்தான் விளக்கிச் சொல்லுகிறார். சந்தேகம் இருந்தால், அவரின் மனவளக்கலை நூலின் மூன்று பாகங்களும் உடனடியாக படியுங்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் காணொளி பதிவுகளை கேளுங்கள். உங்களுக்கே அது புரியவரும்!

நீங்கள் சொல்லும் நவீன அறிவியல், இன்னமும் சூரிய மண்டலத்தையே கடக்கவில்லையே?! சரி, அது ஏன் அறிவியல் என்று சொல்லாமல் விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது என்றால், அணு, அண்டம், விண், விண்வெளி குறித்த ஆராய்ச்சியை விண்ஞானம் என்று தானே சொல்லமுடியும்? ஆனால் ஏதோ அறிவியல் என்று தவறாக தமிழ்ப்படுத்தி விட்டார்கள் என்றே கருத்து நிலவுகிறது! இங்கே நாமும் விஞ்ஞானம் என்றே சொல்லிப்பழகுவோம்.

‘முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்

மொழிவதற்கு வார்த்தையின்றி முட்டிமோதி நின்றனர்

இந்தநாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை

இயங்கிடும் மின்சாரம்மூலம் எல்லோர்க்கும் உணர்த்தலாம்’

என்று தன்னுடைய ஞானக்களஞ்சியம் கவி வழியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தத்துவமாக மெய்ப்பொருளை குறிப்பிடும் பொழுது, மொழியால், வார்த்தையால், விளக்கத்தால் அங்கே ஓர் முழுமை கிடைப்பது கடினம். உள்ளதை உள்ளவாறு அறிய நீண்டகாலமும் எடுத்துக்கொள்ளும். அதனால்தான், அந்தக்கால கடினமான யோகத்தின் வழியாக உயிரின் உண்மையையும், இறையுண்மையையும் கண்டறிந்த சித்தர்கள், எளிய மக்களுக்காக பக்தியை உருவாக்கினார்கள். அதாவது வார்த்தையின்றி, விளக்கமின்றி, வணங்கும் கருத்தின் வழியாக நாளடைவில் உண்மை அறியலாம் என்ற வகையில் அதை அமைத்தார்கள். ஆனால் தற்காலத்தில் அதன் நோக்கம் திசைமாறிவிட்டது.

அப்படியானால், விஞ்ஞான விளக்கம் மெய்ப்பொருளை, இறையுண்மையை சொல்லிவிடுமென்றால், யோகமே தேவையில்லையே என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்ப்பீர்கள் தானே? அதற்கும் பதில் உண்டு. ஒரு உண்மையை 1) அறிந்து கொள்ளுதல் 2) புரிந்துகொள்ளுதல் 3) உணர்ந்துகொள்ளுதல் என்ற மூன்று வழியாக நமக்குள் எடுத்துக்கொள்ளலாம். விஞ்ஞானம் இந்த முதல் இரண்டுக்கு மட்டுமே உதவுகிறது. உதவ முடியும். அதுதான் அதனுடைய எல்லை. அதற்குமேல் விஞ்ஞானம் நகராது. அப்படியெல்லாம் இல்லீங்க, அறிவியலால் என்னென்ன உண்மையகள் அப்பட்டமாக தெரியவருகிறது என்று நீங்கள் அறிவீர்களா? என்று நீங்களே சொல்லலாம். அப்படியானால், உங்களால் முடியுமானால் கூட நகர்த்திப்பாருங்கள். (இதை ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நீங்கள் என்றால் நீங்கள் அல்ல. எதைச் சொன்னாலும் எடக்குமுடக்காக எதிர்கேள்வி கேட்பதற்கு சிலர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக!)

இன்னொரு விளக்கத்தையும் சொல்லி முடிக்கிறேன், கன்னியாகுமரி என்ற ஊர், இந்தியாவின் தென் கோடியில், தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கிறது. அந்த ஊரில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை NH52 வழியாக, நம் நாட்டின் தலைநகர் டெல்லி வரை செல்லலாம். அங்கே டெல்லி என்ற ஒரு கைகாட்டி இருப்பதாக வைத்துக்கொண்டால், அது டெல்லி அல்ல. அந்த சாலை வழியாக 2860 கிலோமீட்டர் நகர்ந்தால்தான் டெல்லி என்ற நகரம் கிடைக்கிறது. அதுபோல விஞ்ஞானம் வழியாக மெய்ப்பொருள் நிலையை அறியலாம், புரிந்தும் கொள்ளலாம். ஆனால் தத்துவத்தின் வழியாக மட்டுமே உணரமுடியும்!

கடைசியாக, விஞ்ஞானமில்லா மெய்ஞானம் நொண்டி, மெய்ஞானமில்லா விஞ்ஞானம் குருடு என்ற பழமொழியும் நம்மிடையே உண்டு.

வாழ்க வளமுடன்.

Someone told to me, the vasiyoga is the best way. Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று என்னிடம் சொல்லுகின்றனர். அது சரிதானா?


பதில்:

சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று அவர்கள் சொல்லுவதில் தவறில்லை. ஆனால், இப்போது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாயிற்றே. ஏற்கனவே வாசியோகத்தின் வழியாக, குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து மேலேற்றி, ஆக்கினைக்கு கொண்டுவந்து நிறுத்திப் பழகியவர் மட்டுமே, அதை பிறருக்கு சொல்லமுடியும். இந்தப்பயிற்சியில் ஏகப்பட்ட தடைகள் வரலாம். உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் வரக்கூடும். எல்லோருக்குமே முதல் முயற்சியிலேயே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி எழுந்துவிடுவதும் இல்லையே. முதலில் இதற்கான நுட்பத்தை சொற்களால் விளங்கிக் கொள்வதே கடினம்.

சரி, இன்னமும் இந்த வாசியோகம் முறையில்தான், குண்டலினி சக்தியை ஏற்றிக்கொள்ள வேண்டுமா? வேறு ஏதேனும் வழிகளே இல்லையா? கிடையாதா? கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாதா? அப்படி பயன்படுத்தினால் என்னதான் சிக்கல்?

சித்தர்கள் காலத்தில், கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட அதே வாசியோகம் தான் இன்னமும் இருக்கிறது என்று எப்படி நம்புவீர்கள்? அதுப்போலவே அந்தக்கால கடின சாதனைகளை இப்போதும் நாம் செய்யத்தான் முடியுமா? அதற்கான உடல் வலுவும், மன வலுவும் கூட இருக்கிறதா? 

ஆனால், இயற்கையும், அந்த தெய்வீகமுமே, சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, ஏற்கனவே தன்னிலை அறிந்து, மெய்ப்பொருள் அறிந்த ஒருவர், தன்னுடைய தவ ஆற்றல் சக்தியினாலேயே, மற்றறொருவருடைய குண்டலினி சக்தியை தொட்டு எழுப்பி, உடனடியாக, ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற விளக்கம் வந்துவிட்டதே?! குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் ஆண்டுக்காலத்திற்கு முன்னேலாயே நடைமுறையில் இருந்திருக்கிறது.  ஆனால் பரவலாக்கப்படவில்லை. ஆனால், வேதாத்திரி மகரிசி தானும் பெற்று, விளங்கிக் கொண்டு, தன்னுடைய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ வழியான ‘மனவளக்கலை’ மூலம் உலகில் உள்ள எல்லோருக்கும் கற்றுத்தந்து இன்னமும், அந்த தொட்டு எழுப்பி உயர்த்தும் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், இன்னமும் பழமையே சிறப்பு என்று தன்னை வருத்திக்கொள்வதில் பலன் என்ன? காலம்தான் வீணாகும் அல்லவா? ஆனால் உங்கள் விருப்பம்போல தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அதையாரும் தடுப்பதற்கில்லை!

வாழ்க வளமுடன்.

-