CJ for You: life and live

life and live

Showing posts with label life and live. Show all posts
Showing posts with label life and live. Show all posts

Why the enlightenment is late through the yoga? How long it takes?


யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


பதில்:

உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.

அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.

இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.

எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.

தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

-

I am just standing in the dark



நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

இன்று மாலை மணி 5.25 , என் வீட்டின் மூன்றாவது தள மாடிக்கு வந்து நடந்துகொண்டிருந்தேன்.  வீட்டிற்குள்ளேயே “எளிய முறை உடற்பயிற்சி” செய்வதால், நடைபயணத்திற்கு செல்வதில்லை. என்றேனும் சூரியனின் மறைவு காட்சியை காண்பதற்காகவே, மாடிக்கு செல்வதுண்டு.

பாதி சூரியன் அடிவான மேகத்தால் மறைந்தும், கொஞ்சம் வெளிக்காட்டியும், மஞ்சளும் ஆரஞ்சும் கலந்து அடிக்கும் அந்த வண்ணக் கலவைக்காகவே, கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கலாம். மாலை சூரியன், வேகமாக பூமிக்கடியில் புதைவது போல தோன்றுவது ஒருவகை மாயைதான். சூரியன் மறைந்துகொண்டிருக்கும் அதேவேளையில் எதிர் கிழக்குவானில் மேகக்கூட்டங்கள் அதே வண்ணக்கலவையை கடன் வாங்கி பூசிக்கொண்டு மிளிரும் காட்சி அற்புதமானது. 

வடமேற்கிலிருந்து மிகப்பெரிய அம்பின் நுனிவிளிம்பு மட்டும் பாய்ந்து வருவதுபோல பறவைகள் கூட்டம், ஒரு கருப்பு கோடுகளாக தெரிகிறது, அருகில் வர வர, ஒரே அடுக்காக, ஒவ்வொரு பறவைக்கும் இதுதான் இடைவெளி என்று வகுத்துக்கொண்டு அந்த அளவு மாறாமல், ஒரு கீச்சும் இல்லாமல் என் தலைக்குமேல் என்னை கடந்து செல்கிறது. 



பார்த்துக்கொண்டே வியக்கிறேன்.  இவைகள் எங்கிருந்தன, இப்போது எங்கு செல்கின்றன என யோசிக்கிறேன்.  அடுத்தடுத்து இப்படி நான்கு பறவைகூட்டங்களை கண்டேன். சில கூட்டங்களில் அந்த அம்புநுனி விளிம்புக்கு முன்பு வழிகாட்டியாக சில பறவைகள் முன்சென்றதையும் கவனித்தேன்.

எப்படியான வாழ்வு இவைகளுக்கு? எப்படியான சுதந்திரம் இவைகளுக்கு? காலையும் மாலையும் இப்படியான ஊர்வலம். மனிதர்களைப்போல இவைகளும் “தினம்” இருக்கிறது. நட்பு, காதல், ஒற்றுமை, ஒழுங்கு, அறிவு எல்லாம் இருக்கிறது. பறவைகளுக்கு ஐந்தறிவுதான், இருக்கலாம். ஆனால் மனிதன் அதினினும் சிற்றறிவாக இருக்கிறானே? 

இவைகளைப்போல ஒரு மனிதனால், ஒரு தனி மனிதாகக்கூட வாழ முடியாத மனிதசமுதாயம் நாம் பெற்றிருக்கிறோம். வாழ வழி இல்லையென்றால் செத்துப்போ என்று முடிவுசெய்கிற அல்லது தூற்றுகிற மனிதம் இங்கே?! 

தன் காலடித்தடத்தை வானில் பதிக்காத பறவையினங்கள், விதைக்கவும் தெரியாத, அறுவடையும் செய்யாத நிலையிலும், அவைகளுக்கான வாழ்வு இந்தபுவியில் இருக்கிறதே! ஓவ்வொரு உயிரினமும் தனக்கென இருக்கின்ற வாழ்வை வாழ்கின்றன. முக்கியமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொள்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டது எது என ஆராயும் அறிவு அவைகளுக்கு இல்லை என்றாலும், எதனோடும் எல்லை மீறுவதற்கு கூட தெரியாது. 

மனிதனுக்குத்தான் எத்தனை பிணக்குகள்?! தன்னோடும் பிறரோடும், இந்த உலக மக்களோடும், இத்தனைக்கும் மேலாக இந்த இயற்கையின் மீதும்?! ஏன்? ஏன் இப்படி சிக்கிக்கொண்டான்? கண்ணுக்குத்தெரியாத காப்புகளை தானே எடுத்து பூட்டிகொண்டான். எல்லாம் நிறைவாக இருக்கும் இந்த உலகில், ஏன் வறுமையும், செழுமையும் எதிரெதிராக? 

சூரியன் மறைந்தபிறகும் மேற்குவானம் சிவந்து, பின் நீலமும், கருநீலமுமாக இருள் படரத்துவங்குவது வரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு நாள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது, நாட்காட்டியில் ஒரு தாள் கிழிக்கப்படும், நம் வாழ்வில் ஒரு நாள் கழிக்கப்படும். 

சிந்தித்துக்கொண்டிருக்கையில், என்மீதும் இருள்படர ஆரம்பித்தது. நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

-----------------------

Thanks to image: My mobile photos