CJ for You: yoga

yoga

Showing posts with label yoga. Show all posts
Showing posts with label yoga. Show all posts

Oh God, don't you have any mercy? Part 01


 இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா?!

கடவுளே இல்லை என்ற மாற்றுக்கருத்து கொண்டவர்கள், இந்த கட்டுரையையும், எழுதுபவனையும் கூட புறம் தள்ளி விடலாம். அவர்களுக்கு இந்த விளக்கம் அவசியமற்றது. ஒரு வார்த்தைக்காக, ‘இறைவனே’ என்று எழுதினால் கூட, ஆண்பாலாக சொல்லுகிறாய், இதை எதற்கு நான் படிக்கவேண்டும் என்று தூர தள்ளும் ‘அதி மேதாவிகளுக்கும்’ இக்கட்டுரை தேவையில்லை.  அப்படியானால் யார் படிக்கலாம்? இறை என்பது என்ன? என்ற தேடுதலும், அதன் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்களும், யோகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களும் வருக, நீங்கள் தொடரலாம்.

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறீர்களா? இல்லவே இல்லை என்று மறுத்தால், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தகூடும். எனவே பிறர் அறியாமல், ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஏன்? இப்படியான வார்த்தையை, இறையை நோக்கி, வானத்தை நோக்கி, ‘என்மேல் இரக்கமே இல்லையா?’ என்று கேட்க ஆரம்பிக்கிறோம்? கவனிக்கலாமா?

காலம் காலமாக, வழிவழியாக இறை என்ற தெய்வீக தன்மையை, நாம் அறிந்திருக்கிறோம். அறிந்து என்பதை விட தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம். நம்முடைய தாய் தந்தை வழியாக, தாத்தா பாட்டி வழியாக நிச்சயமாக வந்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில், ஒவ்வொரு குடும்பத்திலும் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, இந்த இறை நம்பிக்கை அவசியமற்று போய்விட்டது. அதனால் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற மாற்றத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஒரு குடும்பத்தின் பரம்பரை உறுப்பினர்கள் வழியாக, பக்தியும், வழிபாடும், அதில் ஒழுங்கும், ஒழுக்கமும் குழந்தை பருவத்தில் இருந்தே கிடைக்கிறது. பக்தி தேவையா? என்று கேட்டால், வேதாத்திரி மகரிஷி ‘அவசியம்’ என்றுதான் சொல்லுகிறார். காரணம், குழந்தையை அதன் இயற்கை தன்மையோடு பொருந்தி வளர்வதற்கும், சமூகத்தின் நன்மைக்கும், உயர்வுக்குமான வழக்க பழக்கங்களை பெற்று, தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்காத விழிப்புணர்விக்கும் ‘பக்தி’ அவசியமே என்று சொல்லுகிறார். ஆனால், அங்கே இன்னொரு தொடர் விளக்கத்தை தருவதை மறந்துவிடக்கூடாது.

எதுவரை பக்தி அவசியம்? இறை என்பது என்ன? என்ற கேள்வி எழும்வரை அவசியமானது. இந்த இறை என்பது என்ன என்று தேடவேண்டுமானால், யோகத்திற்கு வந்துவிட வேண்டும். ஆனால், நம்முடைய வாழ்நாள் முழுவதும் நமக்கு பழக்க தோசத்தில், பக்தியே போதுமானதாக இருந்துவிடுகிறது. யோகத்திற்கு வருவதற்கு நிறைய முட்டுக்கடைகள், தடைகள், தடுமாற்றம், யோசனைகள் உண்டாகிவிடுகிறது. எளியமுறை குண்டலினி யோகம் இருப்பதையும் மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாத்திரியர்கள் அப்படியல்ல. தானாக யோகத்தில் ஆர்வம் கொண்டு பயணிப்போரும் அப்படியல்ல.

என்றாலும் கூட, பக்தி என்ற பழக்கதோசம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடவில்லை என்பது தான் உண்மை. என்னய்யா, இப்படி சொல்லுகிறாயே? என்று நீங்கள் கேட்கலாம். மறுக்கலாம். ஆனால் உண்மையாகவே சொல்லுகிறேன். இன்னும் பக்தியின் மயக்கம் நமக்கு, நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதில் ஆரம்பகால வேதாத்திரி மகரிஷியும் சிக்கித்தான் இருந்தார். ஆனால், பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் வழியாக, அந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உண்மை தெளிந்தார் என்பதை ‘ஞானக்களஞ்சியம்’ கவிதைகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.

‘சரிய்யா, இப்போ அதுல என்ன பிரச்சனை? அதைச்சொல்லு’ என்கிறீர்களா? எழுகின்ற பிரச்சனைக்கே நாம் தான் காரணம் என்கிறேன் நான். ஆனால் நாம் அதை நம்பத் தயாராகாமல், இறை மேல் பழியைப் போட்டு. ‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’ என்று இங்கேதான் ஆரம்பிக்கிறோம். சரியா? உண்மைதானே?

‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’

என்று நம்மிடமிருந்து ஒரு கதறல், புலம்பல், வேதனை வந்தால் என்ன அர்த்தம்? அதில் இருக்கும் உண்மை என்ன? விளக்கம் என்ன? என்று அறியலாமா? அடுத்த பதிவில் அறியலாமே!



Is health important to a man? Is mental resourcefulness important? Explain this dilemma.


ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? இந்த குழப்பமான நிலையையை விளக்குக.


இந்த கேள்விக்கு பதில் தரும் முன்பாக, கேள்வி கேட்டவரின் சூழல், வாழும் நிலை, தகுதி, இப்போதிருக்கும் வாய்ப்பு, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு என்ற அளவுகளைக் கொண்டு சொல்லவேண்டியதாக இருக்கிறது. 

நீங்கள் உலகவாழ்வில், ஒரு நல்ல உயர்வான நிலைக்கு, பொருள் செல்வாக்கோடு நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மன வளம் முக்கியம். அந்த மன வளத்தினால், உடலை நலமாக்கி, இந்த பொருள்முதல்வாத உலகில் வென்று உயரலாம். மனம் சோர்வாகவும், குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இயங்குமானால், அது உங்கள் உடலை, உடலுறுப்புக்களை கெடுக்கும். வேலை, வியாபாரம், தொழில் என்று எதனையும் செய்யவிடாது. முயற்சியில் தோல்வியை தரும். விளைவு, நட்டமாகும். இதனால் மனம் உற்சாகமாக இருக்க என்ன வேண்டும்? என்ற நோக்கத்தில் மன வளம் முக்கியம். இதற்கு யோகம் உதவுமா? நிச்சயமாக உதவும். ஆனால், யோகம் வாழ்க்கை இன்பத்தையும், பொருளாதாரத்தையும், இல்லறத்தையும் சிதைக்கிறது என்றுதானே, பெரும்பாலோர் நினைக்கிறார்கள்? சரிதானே?!

இரண்டாவது வகை மனிதராக பார்த்தால், ஏதோ ஓரளவில் நிலையான பொருள் கிடைக்கிறது. அன்றாட வாழ்வு நகர்கிறது என்ற நிலையில் இருக்கும் மனிதரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பொருளில் நிறைவு பெற்று, இருப்பது போதும் என்ற அளவில், அன்றாட வரவில், கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மற்றதை சேவையாக உலகுக்கு திருப்பித்தரும் மனிதர்களையும், இங்கே இணைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இப்போது, உடல் நலம்தான் முக்கியம். ஏனென்றால், இதுநாள் வரை, அந்த உடலைக்கொண்டு, பலவிதங்களில் தூக்கம் கெட்டு, உடல் பலம் கெட்டு, தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திருப்பார்கள். உடலில் பலவித நோய்கள் தலைதூக்கி நிற்கும். சில உடல் உறுப்புக்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலர் ஏதேனும் அறுவைசிகிச்சையும் செய்திருப்பார்கள். உணவே மருந்து என்பதற்கு பதிலாக, மருந்தே உணவாக சாப்பிடம் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் இவர்கள், உடலை காத்திட வேண்டும், உடல் நலமே இவர்களுக்கு முக்கியம். பிறகு அதன் வழியாக மன நலன் காக்கப்பெறலாம்.

மூன்றாவது வகை மனிதர், உலக வாழ்க்கையில் இருந்தாலும், உள்முகமாகவே, தன்னைக்குறித்த ஒரு தேடுதலைக் கொண்டிருப்பார். ஒருவகையில் அது, அவருடைய முன்னோர்களின் விருப்பமாகவும், அதை நிறைவேற்றிட பிறந்தவராகவும் இருப்பார். இவருக்கு, நேரடியான யோகம் தேவை. அப்படியானால் பொருள் பணம் அவசியமில்லையா? என்ற கேள்வி எழும்தானே? இவர், இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்படுபவராக இருப்பார். வேண்டுதலும் எதிர்பார்த்தலும் இருக்காது. இருந்தாலும் அமைதி, இல்லையென்றாலும் அமைதி என்ற நிலையில் இருப்பார். உங்களில் கூட அப்படியாக சிலர் இருக்கலாம். இந்த மனிதர் யோகத்தில் உயர, உடல் நலமும் வேண்டும், மன வளமும் வேண்டும். ஆனால், முதன்மையாக, உடல் நலம் சீர் செய்துவிட்டால், அடுத்து மன வளம் நோக்கி தானாக நகர்ந்துவிடுவார்.

இப்படியாக, ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? என்ற கேள்விக்கான விடையை கண்டுவிட முடியும். இதை நீங்கள் மிகச்சரியாக எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதன்படி நீங்கள், பயிற்சியை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

-


What is the answer to those who say that the practice of yoga is a deception, a survival for a yogi?


யோக பயிற்சி என்பது ஏமாற்றுவேலை, யோகிக்கான பிழைப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் என்ன?



இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்லாம். ஒரு உண்மை விளக்க தத்துவ நிகழ்ச்சிக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் ஒரு இளைஞன், வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கிறான்.

‘சுவாமிஜி, உங்கள் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டேன். மகிழ்ந்தேன். உண்மைகளும் தெரிந்தன. இந்நிலையில், நான் உங்களைப்போல ஆகவேண்டும். அதற்கு என்னவழி?’

‘நல்லது, அது கடினமில்லை. இங்கே வழங்கப்படும் பயிற்சிகளில் இணைந்து, கற்றுக்கொள்க. அப்பயிற்சிகளே உன்னை, என்னளவிற்கு உயர்த்தித்தரும்.’

‘ஓ, அதற்கெல்லாம் விருப்பமில்லை. எளிமையாக உங்களைப்போல ஆகவேண்டும், அதுதான் என் நோக்கம்’

இளைஞனின் கருத்தை புரிந்துகொண்ட பின் ‘சரி, அப்படியானால், உடனடியாக ஒரு துணிக்கடைக்குச் சென்று, இதுபோல வெள்ளை குர்தா, வேஷ்டி, மஞ்சள் துண்டு வாங்கிக்கொள். அணிந்து தயாராகலாம். ஆனால் இதுபோல தாடி வளர, குறைந்தது மூன்று மாதம் ஆகுமே?’

‘ஆமா, ஆனாலும்...’

‘உனக்கு என்ன விருப்பமோ அதை நீயே செய்துகொள், ஒத்துவரவில்லை விட்டுவிடு’ என்று வேதாத்திரி பதிலளிக்கிறார்.

இப்படியாக, உண்மையை அறிந்து உணராமல், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், வெளி தோற்றத்தில் தன்னை, யோகியாக காட்டும் நபர் எப்போதுமே உண்டுதான். உண்மையான யோகிக்கு கிடைக்கும் மரியாதையை, தானும் பெற விரும்பி, இப்படி வேடமிட்டுக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் மக்களிடம், பணமும் பொருளும் பெற்று, தன்னை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் நிகழ, இப்படியான போலியான யோகிகளைதான் மக்களும் நம்புகிறார்கள் என்பதும் உண்மை. ஒரு யோகி, தன்னுடைய தோற்றத்தில், இப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது ஒரு நடைமுறை பழக்கமே அன்றி, கட்டாயமில்லை.

பெரும்பாலான யோகிகள், காவியும், பச்சையும், ஆரஞ்சு, மஞ்சள் துண்டு, தாடி, மீசை, ஜடாமுடி என்று இருப்பார்கள். கையில் நுகத்தடியும், கமண்டலமும் கூட உண்டு. புலித்தோல், நம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், அது இல்லை. ஆனால், வேதாத்திரி மகரிஷி இதற்கு மாறாக, வெள்ளை குர்தா, பஞ்சகட்சம் வேஷ்டி,  காவி துண்டு என்றுதான் அமைத்துக் கொண்டார். தாடி மீசை இயல்பாக அமைத்து கொண்டார். தான் உணர்ந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் வழியாகவும் தெளிவு செய்தார். விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டினார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின், வான் காந்த தன்னிறைவுக்குப் பிறகு, சில யோகிகள் வேடத்தை ஏற்றுக்கொண்டுதான் வலம் வருகிறார்கள். அவர்களையும், சுவாமிஜி என்றுதான் வேதாத்திரிய அன்பர்களும், மக்களும் அழைக்கிறார்கள். இவர்கள் உண்மையா? போலியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வேதாத்திரி மகரிஷி, சுவாமிஜி என்பதை விட, ஐயா என்று அழைப்பதை விரும்பினார் என்பதும் உண்மை. தன்னை அருட்தந்தை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொண்டார். விருப்பு வெறுப்பு ஏதுமில்லாத அரவணைப்பும், திருத்துதலும், கண்டிப்பும், பாதுகாப்பும், உயர்வு தருவதும் தந்தையின் பண்புகள் தானே!

இந்த போலியான யோகிகளை மக்கள் ஏற்பது, பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இன்றும், இப்போதும் உண்டுதான். எனினும், தன் காலத்திலேயே, மக்களின் அறிவு வளர்ச்சி மாறிவருகிறது. யோகிகளை அடையாளம் காண்பதில், மக்கள் நிலை இப்படி மாறியுள்ளது என்று அவரே விளக்க்குகிறார். ‘அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.'

‘யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.’

‘தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது. இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.’என்பதாக,  அருட்தந்தை வேதாத்திரி மகரிசி தெளிவு செய்கிறார்.

ஆனால், மக்களின் சுய சிந்தனையும், ஆராய்ச்சியும் அற்ற நிலையில், தோற்றத்திற்கு மதிப்புதந்து ஏமாறும் போக்கு மாறவில்லை என்பது உண்மையே. ஒரு பைத்தியக்காரரைக்கூட சித்தர் என்று சொல்லும் கூட்டமும், மதிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அதுபோல, காவியும், தாடியும், ஜாடாமுடியும் இருந்தாலே, இவர் யோகி என்று மதித்து, கைகட்டி, காலில் விழும் கூட்டமும் நம்மிடையே உண்டு. இதற்கு வழி, காலமும், அதுதரும் அனுபவமும் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

-

Is God man Correct? What is the truth on it? What is the connection between the God and Human?


நான் கடவுள் என்பது சரிதானா? அதன் உண்மை என்ன? மனிதனுக்கும் மெய்ப்பொருளுக்கும் உள்ள தொடர்பு என்ன?



மெஞ்ஞானத்தின் வழியாக, சித்தர்கள், ஞானிகள், மகான்கள், இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து உணர்ந்தார்கள். அந்த விளக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கு, பக்தி வழியாக, கருத்தாக வடிவமைத்தார்கள். விருப்பமுள்ளோர் கற்றுத்தேர யோகம் என்ற மனதின் வழியாக உண்மையறியும் பயிற்சிகளையும் கொடுத்தார்கள். ஒரு மனிதனின் ‘பிறவி நோக்கமும், கடமையும், நான் யார்? என்ற உண்மை அறிதலே’ என்பதையும் அறிவுறுத்தினார்கள். அந்த வகையில்தான், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்று சொன்னார்கள். விஞ்ஞானமும், எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்தி வழியிலான கருத்துக்களை, படைப்புத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை, தெய்வம் என்பதையும் நம்புவதில்லை. வழிபாடு, மந்திரம் இவற்றையும் புறந்தள்ளுகிறது. ஆனால், சில உண்மைகளுக்கு, விடை தெரியாமல் தடுமாறுகிறது என்பதும் உண்மையே. 

உதாரணமாக, ‘உலகில் இருப்பதெல்லாம், காட்சியும், பொருளும் ஆனவை. அவை மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியானால், மாறாதிருப்பது எது? என்ற கேள்விக்கு ‘என்றும், எப்போதும், எவ்விடத்திலும் இருப்பது எதுவோ அதுவே முதன்மையானது. அதை மெய்ப்பொருள் என்று உயர்வாக அழைக்கிறோம்’ என்கிறார். இதை வெட்டவெளி, சுத்தவெளி, இறை, தெய்வீகம், சிவம், ஈசன் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, இதனில் நான்கு தன்மைகள் கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவை, 1) பூரணம் என்ற வற்றாயிருப்பு 2) வேகம் என்ற பேராற்றல் 3) விவேகம் என்ற பேரறிவு 4) காலம் என்று வகைப்படுத்துகிறார். இந்த விளக்கத்தை, அந்த உண்மை நிலையை, யோகத்தின் வழியாக, அறிந்து உணர்ந்தவர் மட்டுமே, தெளிவு செய்திட முடியும். சும்மா, வெறுமனே, மேம்போக்காக சொல்லுவதும், புரிந்து கொள்வதும் உண்மை விளக்கம் ஆகாது. மேலும் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த உணர்தலை, ‘அதுவாகி நின்று அந்நிலையில் உணர்வதாகும்’ என்றும் வேதாத்திரி மகரிஷி தெளிவு செய்கிறார். மாணிக்க வாசகரும், திருவாசகத்தில் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற ஒருமையை குறிப்பிடுகின்றார். இங்கே தான், அத்துவைதம் இரண்டற்ற நிலை தெளிவாகிறது. ஆனால், உலகவாழ்வில் மயங்கி, அன்றாடம் இன்பம் தேடி, துய்த்து வாழும், சராசரி மனிதனுக்கு இது புரியுமா? தெரியுமா? என்றால் மிகக் கடினமே. இந்த நிலையில்தான், அந்த சராசரி மனிதர்களிடம், சித்தர்கள் சொன்ன ‘நான் கடவுள்’ விளக்கம் தொக்கி நிற்கிறது. இந்த வார்த்தையை, சாராசரி மக்களுக்கு ஏற்றபடி, இன்னொருவிதமாக சொன்னால், ‘கடவுளே நானாகவும் இருக்கிறது’ என்பதே சரியாகும்.

மேற்கண்ட நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, வேதாத்திரி மகரிஷி தரும், விளக்கத்தையும் இங்கே அறிந்து கொள்வோம். இதோ, 

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்_ என்ற தலைப்பிலான ஞானக்களஞ்சிய கவிதையில்...
கடவுள் எனப் படுபவனே மனிதனானான், 
கருத்தியங்கி, கருத்தறிந்தான்; 
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான் 
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான் 
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக் 
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான் 
கடவுள் ரகசியமதனைவெளியாய்க் காட்டும்  
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி. 
 
  இந்த கவிதையில் பொதிந்துள்ள, உண்மையையும், அவரே விளக்குகிறார். எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
 
  மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான். 

  இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.
 
  மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் – அறிய வேண்டிய நிலையில் – உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாகக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை. 

  அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான். இந்தவகையில், விளக்கமும் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
-

Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation.


உங்களுக்குத் தெரியுமா? குண்டலினி சக்தியாற்றலும் யோக சாதனையும் உண்மை விளக்கம். 

    
        குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், பல்லாண்டு காலமாக, கடின முறைகளால் சிக்கி இருந்த, குண்டலினி யோகத்தை, தான் கற்றுத் தேர்ந்து, உண்மை உணர்ந்து, அதை விஞ்ஞானத்தோடு உதாரணங்களால், விளக்கி, புரியவைக்கும் வழியில், திருத்தி அமைத்தார், எளியமுறை குண்டலினி யோகமாக, இல்லறத்தை விட்டு விலகிடாமல், பருவம் வந்த அனைவருமே, ஆண், பெண் பேதமின்றி கற்று, நான் யார்? என்ற கேள்விக்கான பதிலைப் பெற்று, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தை பெற வழிவகை செய்தவர். குண்டலினி சக்தியாற்றல் குறித்தும், யோகசாதனை குறித்தும் சொல்லும் விளக்கம், இதோ, 

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல், கீழ்நோக்கி போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.  

  மனிதன் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம்.  

  இந்த உயிர்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும். 

  ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும்.  

  இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும். 

        இந்த குண்டலினி உயர்த்துதல், தேர்ந்த குருவின் வழியாக, தீட்சையாக மட்டுமே பெற வேண்டியது அவசியம். சுயமாகவோ, தானாகவோ, அனுபவம் இல்லாதோரிடமோ, குறுக்குவழியிலோ, மந்திட உச்சாடன பூஜை வழியாகவோ செய்துவிடக்கூடாது. இதைக்குறித்த விளக்கம் அறிய, இந்த காணொளி தொகுப்பு உங்களுக்கு உதவலாம்.

-

குண்டலினி உயர்த்துதலும் ஆபத்து காரணிகளும் - Kundalini Raising and Risk Factors

https://www.youtube.com/playlist?list=PLQQJZk6S322lsF-zw6W4w-dLqJeJx2pyb

வாழ்க வளமுடன்.

-

மூலவடிவம்: அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.

-


Why Vethathiri maharishi not form as a Jeevasamati? Answer for the unwise question


வேதாத்திரி மகரிஷி ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? கேட்கும் பாமரனுக்கு பதிலும் விளக்கமும்.

உலகம் தோன்றி, ஜீவ பரிணாம எழுச்சியில், கடைசியாக பூத்த மலர்தான் ‘மனிதன் ' என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். என்றாலும் கூட, மனிதன் இப்போதைய மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. சக ஜீவராசிகளைப் போல, மிருகங்களின் நடவடிக்கை போல, அதன் செயல்களை பார்த்துத்தான் வாழ்ந்திருந்து வந்தான். ஐந்தறிவு மிருகங்கள் செய்கின்ற, 1) பிற உயிரை கொலை செய்தல், 2) பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை பறித்தல், 3) பிற ஜீவனின் உடலை உணவாக்கிக் கொள்ளுதல் ஆகிய, மனித இனத்திற்கு ஒவ்வாத குற்றங்களை செய்துவந்தான்.

எனினும், அவனுக்குள் இருக்கின்ற, தெய்வீகம், ‘இது உனக்கானது அல்ல’ என்ற விளக்கத்தை, தந்துகொண்டேதான் இருந்தது. அவனுக்குள் அறிவாக நிறைந்திருந்த, அந்த தெய்வீகம், மனித செயல்களின் விளைவுகளால், திருத்திக்கொண்டே வந்தது. அந்த விளக்கத்தை உணர்ந்த மனிதர்களில் சிலர், சிந்திக்கலானர்கள். தன் சிந்தனையில், எண்ணத்தில், சொல்லில், செயலில் திருத்தம் கொண்டு, நன்மையான, இன்பமான விளைவுகளில் மகிழ்ந்தார்கள். இயற்கையில் உள்ள, எங்குமே, எப்போதுமே நிறைந்திருக்கும் இன்பத்தையும், அதனோடு கலந்திருக்கும் தெய்வீகத்தையும் கண்டு, பிறருக்கும் வாழ வழிகாட்டினார்கள். தெய்வம் என்ற உண்மையையும் அறிந்து உணர்ந்தார்கள். அத்தகையோர், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் என்றானார்கள். 

நாம் வாழும் இத்தகைய நவீன விஞ்ஞான உலகிலும் கூட, ஆறாம் அறிவில் உயர்ந்ததாக கருதி வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனத்தினோடு, உண்மையான திருத்தம் வழங்கிட, இன்றும் இத்தகைய சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாகிக் கொண்டும், நல்ல வழிகளை அம்மனிதர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அக்காலம் முதல், இக்காலம் வரை, பாமரர் என்ற நிலைபாடுகொண்ட மனிதர்கள் உண்டு. இவர்களை பொதுவாக அறிவிலி என்று சொல்லுவது, பொருத்தமாகாது. அறிவு எல்லோருக்கும் உண்டு. அதில் மாற்றுகருத்து இல்லை. எனவே அறிவு இல்லாதவர் என்று சொல்லுவது தவறு. அந்த அறிவை பயன்படுத்த தெரியாதவர், பயன்படுத்த வழிகள் கற்றுக்கொள்ளாதவர். அந்த மாற்றத்திற்கு ஆர்வமில்லாதவர் என்று சொல்லலாம். எனவே இவர்களை பொதுவாக ‘பாமரன்’ என்று சொல்லுவது சிறப்பு.

இத்தகைய பாமரன் அன்றும் இருந்தான், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உங்களோடும் உண்டு. இவர்களை எப்படி அடையாளம் கொள்வது? அவனின், அறிவார்ந்த நிலை என்று நினைத்துக்கொண்டு, நம்மிடம் கேட்கும் கேள்விகளால் அடையாளம் காணலாம். உங்களிடமும் அப்படி சில கேள்விகளை கேட்பவர்களை அடையாளம் காண்பது எளிதுதான். இந்த பாமரர்கள் மேல் அக்கறை கொண்டு, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகியோர், பாமரர்களுக்கு விளக்கங்கள் சொல்லி, தெய்வீகத்தையும், மனித பிறப்பின் மூலத்தையும் பாடம் நடத்தினார்கள். என்றாலும் அது சிலவகையில்தான் உதவியது. அதனால், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தங்களுடைய, வாழ்நாளுக்குப் பிறகும், இவர்களுக்கு உதவலாம் என்று, தன் உயிரை தன் உடலிலேயே சுவரவிட்டு, உடலை விட்டு உயிர்பிரியாத நிலையில், தன் மூச்சை, வாழ்நாளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் உடலை சமாதியாக அமைத்து, அதன் மேலாக, ஆலயங்கள் எழுப்பி, ஜீவசமாதி என்றாக்கினார்கள். 

இத்தகைய ஜீவசமாதி, குடமுழுக்கு தேவையில்லாத, சக்தியாற்றல் நிரம்பியது ஆகும். வந்து வணங்கிச் செல்லும் அன்பர்களுக்கு, குறிப்பாக ‘பாமரர்களுக்கு’ உதவிடும். ஆனால் காலம் மாறியது. மக்களின் தரம் உயர்ந்தது. கல்வி எல்லோருக்கும் கிடைத்தது. ஆறாம் அறிவின் அற்புதம் விளங்கியது. மருத்துவம், விஞ்ஞானம், வானியல் மிக உயர்ந்தது. மனிதனின் வாழ்நாளும் உயர்ந்தது. ஆனால் பாமரன் பாமரனாகவே வந்துகொண்டு இருக்கிறானே?! ஒரு குரங்கிடம், ஒரு நிலக்கடலையை கொடுத்தால், வாங்கிக்கொண்டு, அதை இரண்டாக உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை உண்ணும் அனுபவ அறிவு அதற்கு இருக்கிறது தெரியுமா? ஆனால் இந்த பாமரன்?!



இக்காலத்திலும், உண்மை அறியாமலும், விளங்கிக் கொள்ளாமலும், அதை ஆராயாமலும், சிந்திக்காமலும், இன்னமும் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? உங்களை உயர்த்திடத்தான், வேதாத்திரியத்தின் வழியாக, மனவளக்கலை பயிற்சிகளை, முழுமையாக தந்துவிட்டாரே? அதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா? அதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாடமும் பயிற்சியும் வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

மனவளக்கலை பாடங்களை புரியாதவர், அதை கற்றும் செய்திட ஆர்வமில்லாதவர், தன்னை உயர்த்திக்கொள்ள விருப்பமில்லாதவர், சுலபமாக தன்னை, பிறரால் உயர்த்திக்கொள்ள பேராசை கொண்டவர், குறுக்குவழியை தேடக்கூடிய இவர்கள்தான், தன்னை ‘பாமரன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு  சித்தராக, மகானாக, ஞானியாக உங்களை நீங்களே உயர்த்திட, வழிகளை தந்த வேதாத்திரி மகரிஷியையே, ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? அப்படியானால் நீங்கள் பாமரன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    உங்களுக்காகவே, உங்களின் உயர்வுக்காகவே தன் வாழ்நாளெல்லாம் செயல்பட்டு, தன்னை வான்காந்தத்தில் நிரப்பிக்கொண்டு, இன்னமும் நம்மோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ‘குரு மகானை’ ஒரு சமாதிக்குள் அடைத்துவைக்க நினைக்கிறீர்களே? நியாயம் தானா பாமரனே?!

வாழ்க வளமுடன்.

-


Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?


முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


பதில்: 

இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.

இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால்,  அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.

ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?

இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே,  ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.

வாழ்க வளமுடன்.

-

What is the necessity of exercise? what is the difference within exercise and yoga asana?


நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பதில்:

ஒரு மனிதனுடைய வாழ்வியல் இயக்கங்கள், அவனுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. இதில் அவனின் உடல், மனம், மூளை ஆகிய முக்கிய பங்கு வகிக்கிறது. உடல், மனம், மூளை ஆகிய மூன்றிலும், அந்த இயக்கம் எல்லாமே பதிவாகவும் மாறிவிடுகிறது. பிறந்த குழந்தையின் இயக்கம், பெரும்பான்மையாக, பரம்பரை வழியான, உடல் செல்களின் பதிவுகளாக இருக்கிறது எனலாம். 

        நம்முடைய தினசரி நடவடிக்கைகளில், நாம் ஒன்றி செய்யும் பொழுது கற்பதும், பிறகு அனுபவத்தில் தானாக நடப்பதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உதாரணமாக, கார் ஒட்டிப் பழகும் பொழுது, அடிப்படை முதல், பலவித நுணுக்கங்களை நாம் கற்றுத்தேர்கிறோம். ஆரம்பத்தில் பயம் இருந்தாலும் கூட, நம்பிக்கையோடு கற்றுக்கொள்கிறோம். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே, உடல், மூளை, மனம், கண்கள் கூடி இயங்க, கார் ஓட்டுதல் தானாகவே நடைபெறுவதை நாம் உணரமுடியும். அதாவது, இயல்பான ஒர் வெளிப்பாடாக மாறிவிடும். இதுவே கற்றல், அனுபவம், இயல்பு என்றாகிறது.

இப்படியாக நல்லதும், தீயதும் நமக்குள் பதிகிறது. தீயுது நம்மிடம், நமக்குள்ளாக தேங்குமானால், அது வலியாகவும், நோயாகவும்கூட மாறிவிடும். அதை மாற்றிடவே, நம்மை திருத்தி அமைத்தல் அவசியம். இப்படி உடல், மனம், மூளை ஆகிய பதிவுகள் திருத்தியமைக்க, உடற்பயிற்சி நிச்சயமாக உதவுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதை, நாம் இங்கே கவனிப்போமா?

பாவப் பதிவுகள் உடலில் நோயாகவும், உள்ளத்தில் களங்கமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நோய்கள் உடலில் தான் தொற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் தேங்கியுள்ள நோய்களின் பதிவுகளை போக்குவதற்கு செல்களிடையே சீரான இயக்கம் தேவை. செங்கல்லை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சிமிண்டால் இணைத்து கட்டிடம் கட்டுவதைப் போல, செல்களினால் இந்த உடம்பு கட்டப்பட்டு அதை சீவகாந்தம் இணைத்துப் பிடித்துக் கொண்டுள்ளது.

ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அந்தச் செயலுக்குத் தகுந்தவாறு உடல் செல்களைச் சீரமைத்தால் தான் அதைச் செய்ய முடியும். உதாரணமாக நீரில் நீந்த வேண்டும் என்றால் முதலில் பயிற்சி செய்து உடற்செல்களைப் பழக்கி விட்டால் பிறகு எப்பொழுது நீரில் விழுந்தாலும் உடற்செல்கள் அதன் பழக்க வழியே இயங்கி நம்மைக் கரை சேர்த்து விடும். ஒரு தடவை செய்து பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த வழியே தான் அந்தச் செல்கள் இயங்கும். செயல்களுக்குத் தகுந்தபடி செல்களை அமைக்கப் பழகி விட்டால் அதன்படி அவை இயங்கும்.

நாம் பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்து பழகினோமோ, அந்தச் செயல்களுக்குத் தகுந்தவாறு செல்கள் நமது உடலில் அமைந்துள்ளன. அதை நன்மையான முறையில் மாற்றி அமைக்கவில்லை என்றால் மனதால் ஒன்றைச் செய்யலாம் என்று நினைத்தாலும் உடலானது அதற்கு ஒத்து வராது. அதனால் செல்கள் அனைத்தும் காந்த துருவ அமைப்பில் (Polarity arrangement) அமைந்துள்ளது. அதற்குள் காந்த சக்தி சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் அந்த காந்தத்தை வாங்கி அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என மாற்றி உடலை நடத்தி வருகின்றது.

ஆகவே மனிதன் செயல்புரிய உடற்செல்களின் சீரான இயக்கம் தேவை. உடற்செல்களின் இயக்கத்திற்கு உடற்பயிற்சி தேவை. யோகாசனம் என்பது வடமொழி. உடற்பயிற்சி என்பது தமிழ், என்பதாக தெளிவான விளக்கம் அளிக்கிறார், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why felt tired on the yoga journey? How long need to move and what is the solution?


வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?


பதில்:

நீங்கள் இப்படி கேட்பது நியாயமானதுதான். இன்றைய வாழ்வுக்கான சூழல் மட்டுமல்ல, பொதுவாகவே மனிதர்களின் வாழ்வில், குண்டலினி யோகம் என்பது தனித்துத்தான் நிற்கிறது. அது ஒரு வாழ்வியல் மாற்றாக, நம்முடைய வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியமான மனவளக்கலையின் வழியாகவே வந்திருக்கிறது எனலாம். யோகம் என்பது, குடும்பஸ்தனுக்கு ஆகவே ஆகாது என்ற நிலையில், அப்படி இல்லவே இல்லை என விளக்கமளித்து, இல்லறத்திலே யோகம் என்ற மாற்றத்தை கொண்டுவந்து, தகுந்த விளக்கமும், பயிற்சியும் அளித்தது ‘வேதாத்திரியம்’ மட்டுமே என்றால் அது மிகையில்லை.

யோகத்தின் வழியாக, தனிமனித விடுதலை பெற்று, நான் யார்? எந்த சிந்தனையின் ஊடாக, உண்மை அறிந்து, இறையுணர்ந்த தெளிவோடு, தன்னுடைய எண்ணம், சொல், செயல் வழியே, மிகத்தெளிவான வாழ்வியலில், இன்பம் மட்டுமே அனுபவித்து, தனக்கும் பிறருக்கும் துன்பமில்லாது வாழ்வதற்கு வழி சொல்வதுதான் ‘வேதாத்திரியம்’. அதுதான் இங்கே பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. படித்து பட்டயம் பெற்று, தகுதிச்சான்று அடைந்த உடனே, அந்த நிலையை நாம் அடைந்துவிட முடியாது என்பதை, நாம் மறந்துவிடுகிறோம்.

கற்றுக்கொண்ட பயிற்சிகளான, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, அகத்தாய்வு, மௌனம் ஆகிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்துவருவது முக்கியம். இது எவ்வளவு காலம் செய்யவேண்டும்? தொடரவேண்டும்? என்பது, நம்முடைய / நமக்கு கிடைக்கும் விளக்கத்தை மட்டுமே பொறுத்தது. பிறர் சொல்லக்கேட்டு விளங்கிக்கொள்வது என்பதை விட, அந்த விளக்கத்தை, உளப்பூர்வமாக தானாக உணர்வதுதான் ‘உண்மை விளக்கமாகும்’ ஒரு பலா பழத்தின் சுவையை என்னதான் மற்றவர் சொன்னாலும், அந்த பலா பழத்தின் சுவையை நீங்கள் அறிந்ததாகுமா? அந்த பலா பழத்தை, நீங்கள் பெற்று, சாப்பிட்டால் அல்லவா? அந்த சுவையும் ருசியும் நீங்கள் அறிந்ததாக கொள்ளமுடியும். அதுதானே உங்களுக்கு திருப்தியும், மன நிறைவும், இன்பமும் அளிப்பது இல்லையா? இதை எப்படி நீங்கள், பிறர் சொல்லும் வார்த்தைகளால் அறிந்துவிட முடியும்?

வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? என்று கேட்பதற்கு, முக்கியமான காரணம் ‘உங்களிடமிருக்கும் ஓர் எதிர்பார்ப்பு’ ஆகும். சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒர் பாத்திரத்தை, ஒரே நாளில் புதிதாக, விளக்கி வைக்க முடியுமா? ஆனால் தினமும் செய்தால், ஒர் நாளில் அது, புத்தம் புதிதாக காட்சியளிக்கும் தானே? அதுபோல, எதிர்பார்ப்பு இல்லாமல் தொடர்ந்து, வேதாத்திரியத்தில் பயணியுங்கள். ஒருபோதும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.

உங்கள் வாழ்வில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை இந்த யோகத்தோடு முடிச்சு போடாதீர்கள். யோகம் பொருளாதாரத்தை கெடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள், இன்னமும் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்றல், நிறைவு பெறவேண்டும் என்றால் அதில் ஈடுபடுங்கள். அதற்காக யோகத்தில் ஏமாற்றம் கொண்டு, கைவிட்டுவிட முயற்சிக்காதீர்கள். ஒரு ஓட்டப்பந்தய விளையாட்டில், பாதியில் நின்றுவிடுவதும், விலகிப்போவதும் ஒருபோதுமே பலனளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இறையருளும், குருவருளும் உதவட்டும். நானும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

Why can't I achieve economic fulfillment? Let me know the any solutions!


தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


பதில்: 

இப்போதைய வாழ்க்கைச் சூழலில், நம் எல்லோருக்குமே எழக்கூடிய கேள்வி என்பதில் ஐயமில்லை. வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு,  வாழ்த்திக்கொண்டும் வருகிறேன் என்பது சிறப்பு. சிலர், அதனால் இப்படி ஆகிற்று என்று வெட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு, சரியாக விளங்கிக்கொள்ளாமை ஆகும். எல்லாவற்றை விட்டுவிடு, அப்போதுதான் யோகம் சிறக்கும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்களாகவே தவறான முடிவில் இருந்திருக்கலாம்தானே? வேதாத்திரியம், இல்லறத்திலேயே நல்லறம் என்பதைத்தான் வழியுறுத்துகிறது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். அதற்கு உதாரணம் யார்? என்றால், நம்முடைய குரு மகான் வேதாத்திரி மகரிஷியே ஆகும். அவரும் நம்மைப்போலவே வாழ்ந்து, தன் வாழ்வின் நிறைவில், நமக்கெல்லாம் யோகத்தை பரப்பிட, வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கு வரலாம். ‘தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை’ என்று தனிநபர், சுயதொழில், சார்பு தொழில், வியாபாரம் செய்பவர்தான் இப்படியான நிலையில் இருப்பார். நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம். அரசு வேலைகள், தனியார் தொழில், வியாபார, வேலை நிறுவனம் என்றால், இந்த கேள்வியும், குழப்பமும் தேவை இருக்காது என்பது பொதுவான கருத்து. எனினும், அவர்களுக்கும் கூட, சூழ்நிலை காரணமாக, பொருளாதார நிறைவு கிடைப்பதில்லை.

இதற்கு என்னவழி? இங்கே ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என விரும்புகிறேன். 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...

மனிதராக இந்த உலகில் பிறப்பது கடின வாய்ப்பானது என்று ஆரம்பித்து, உடல்குறையின்றி, கண்பார்வை பாதிப்பாகவும், செவி குறைபாடு கொண்டும் பிறக்காமல் இருப்பதும் கடினம். இதையும் நீங்கி பிறந்துவிட்டாலும் கூட, ஞானமும் கல்வியும் தகுந்த காலத்தில் கிடைப்பதும், அதை கற்றுத்தேர்வதும் கடினம் என்று ஔவையார் தொடர்கிறார்.

இப்படி, உங்களுக்கு தகுந்த காலத்தில், இந்த உலகில் கல்வி நிச்சயமாக கிடைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உலகம் முழுவதுமே, கல்வியை தொழில்சார்ந்து அமைத்துக்கொண்டு விட்டது. அந்தக்காலம் போல, பிறவித்திறமை, அடிப்படைத்திறமை என்பதற்கெல்லாம், வேலை வாய்ப்பை வழங்குவதில்லை. இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நம்மை கல்வியில் நிறைவு செய்துகொள்வது அவசியம். ஐயா, எனக்கு அப்படியான கல்வி இல்லையே? என்றால், மக்களின் தேவையறிந்து சேவையோ, வேலையோ, தொழிலோ, வியாபாரமோ செய்து பொருளாதார நிலையை பெறலாம். இது அன்றாட பிழைப்பைச் சார்ந்த நிலையாக இருக்கும். நீங்கள் இன்று உழைத்தால், அது உங்களுக்கான வருமானம் தரும் என்பது உறுதி. ஆனால் நிறுவனம் சார்ந்த வேலை என்றால், அந்த கவலை இன்றி, மாதம் முழுவதும் உழைத்தால், சம்பளம் உறுதியானது. இந்த வித்தியாசம் உணர்ந்து கொள்க.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பிறரை எதிர்பார்த்தல், தான் செய்யவேண்டிய கடமையை செய்யாதிருத்தல், அதை உணர்ந்தும் கூட செய்யாதிருத்தல்’ ஆகிய மூன்றுமே, வாழ்வில் துன்பம் எழுவதற்கு காரணமாக இருக்கிறது என்கிறார். மேலும் போட்டி மிகுந்த இவ்வுலகில், தனிமனித பொருளாதார நிறைவு உடனடியாக கிடைக்க வழியேதும் இல்லை. உங்களால் முடிந்த அளவில், தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, மக்களின் தேவை அறிந்து, சேவையாகவும், உதவியாகவும் இருக்கக்கூடிய தொழில், வேலை, வியாபாரம் என்பது முக்கியம். அப்போதுதான் அம்மக்கள் உங்களுக்கும் உதவி, உங்களின் உழைப்புக்கும் மதிப்புத்தந்து, உங்களை பொருளாதாரத்தில் உயர்த்திட துணை நிற்பார்கள்.

வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு வாழ்த்துவது பலனளிக்கிறதா? என்றும் சிலர் நினைப்பார்கள். ஆம் நிச்சயமாக பலன் தருகிறது. உங்களைச் சூழ்ந்து இருக்கும் தேவையற்ற குழப்பம், கவலை, துன்பம் இவற்றை நீக்கி, இன்னமும் உற்சாகமாக செயல்பட உங்களுக்கு உதவுகிறது. உங்களைச் சூழ்ந்து நல்ல அலைகள் இருக்கச் செய்கிறது. அதன் வழியாக மக்களின் நட்பை பெற வழி கிடைக்கிறது. உங்களின் உயர்வுக்கு துணையாகிறது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தே போதுமானது. மேலும் உங்களுக்கு வாய்ப்பிருந்தால், சர்வ வஸ்ய தனாஆகர்ஷண சங்கபம் வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்று பூஜையாக செய்து வரலாம் என்பது என்னுடைய பரிந்துரையாகும். இதற்கான இணைப்பையும் இங்கே தருகிறேன்.

https://www.youtube.com/watch?v=kEe1HiHyjsg&list=PLQQJZk6S322n6isludZDiMAAWLiErCYAl&pp=iAQB

வாழ்க வளமுடன்.

-

Why no value for self skill and works? Can yoga will help for this situation?


தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதே? கல்லூரி படிப்பும், பட்டயமும் கூட மிக உயர்ந்த அளவில் தேவைப்படுகிறது. பொருள் ஈட்டுவதும் கடினமாகிவிட்டது. யோகம் இதற்கு உதவுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதே? கல்லூரி படிப்பும், பட்டயமும் கூட மிக உயர்ந்த அளவில் தேவைப்படுகிறது. பொருள் ஈட்டுவதும் கடினமாகிவிட்டது. யோகம் இதற்கு உதவுமா?


பதில்: 

உலகெங்கும் கோவிட்-19 என்று அழைக்கப்பட்ட, கரோனா தொற்றுநோய் தாக்கம், மூன்று ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது. நன்றாக இருப்பார் என்று நினைத்திருந்த பல  சாராசரி மனிதர்களை மட்டுமல்ல, புகழடைந்த மனிதர்களையும், நிறைய செல்வம், பொருள் நிறைவு பெற்றவர்களையும் பாதித்து, அவர்களின் வாழ்வை முடித்துவிட்டது. உலகில்  பெரும் தொழில், நிறுவன, வியாபார, விற்பனை எல்லாவற்றையுமே சிதைத்துவிட்டது என்பதை நாம் அறிவோம்.

உயர்ந்த நிலையில் இருந்த தொழில் வாய்ப்புக்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன என்பதும் உண்மை. இதனால் இருப்பது போதும், இனி இதை வைத்து உயர்வோம் என்ற நிலைக்கு எல்லாருமே வந்துவிட்டனர். புதிய தொழில் துவங்க யாருக்கும் விருப்பமில்லாத நிலையும் உள்ளது. குறிப்பிட்ட அளவில் வரும் வருமானம் போதுமானது என்று முடிவு செய்துவிட்டனர். பெரிய அளவில் மற்றுமொரு இழப்பை சந்திக்க யாருக்கும் விருப்பமில்லை. மக்களின் அடிப்படையான, அன்றாட தேவையான, மதிப்பூட்டும் சேவைகள் மட்டுமே அதிகமாக, இன்றைய காலகட்டத்தில் நிறைந்துள்ளது. 

காய்கறி, இறைச்சி, உணவு, சிற்றுண்டி ஆகிய இப்படியான விற்பனை தொழிலும், அடிப்படையான பலசரக்குகள், ஆடைகள், அணிகலன்கள் ஆகிய விற்பனைகள் மட்டுமே சிறப்பாக இன்றும் விரிந்திருக்கின்றன. சினிமா போன்ற பொழுதுபோக்குகள் குறைந்து வந்தாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் நல்ல நிலைக்கு மாறிவிட்டது. ஒவ்வொரு மனிதரும் தன்னளவில் இவ்வளவுதான் என் செலவுகள் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர். அது கரோனா கொடுத்த பாடம் என்றும் சொல்லலாம்.

இந்த நிலையில், உழைப்புக்கான மரியாதையும், அதன் வெகுமதியான கூலியும் எந்த வகையிலும் குறைவில்லை. சொல்லப்போனால் முன்னைவிட அதிக மதிப்பான விசயமாக மாறி இருக்கிறது. சில வேலைகளுக்கும், சேவைகளுக்கும் ஆள் இல்லை என்ற நிலைதான் இன்று தொடர்கிறது. 

இப்படியான சூழலில்தான், நீங்கள் கேட்ட 'தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்ட' நிலை தொடர்கிறது. என்றாலும், வாழும் சூழலுக்கு ஏற்றபடியாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம். சில வேளை முற்றிலுமாக நீங்கள், உங்களை வேறுமாதிரியாக மாற்றவேண்டியும் வரலாம். பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஒரு அரசு நிறுவனத்தில் 10 இடங்கள், வேலையாட்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றால், கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் வருகிறது என்று குறிப்பிடுவார்கள். பத்தாயிரம் என்ன? ஒரு லட்சம் விண்ணப்பங்கள் கூட வர வாய்ப்பு உண்டு. மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில், இது அதிசயமே இல்லை. அவ்வளவு போட்டி நிறைந்த உலகமாக மாறிவிட்டது. அதனால், வழக்கமான படிப்பு இல்லாமல், அதற்கு மேல், அதற்கு மேல் என்று தகுதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது. 

இந்த இடத்தில், யோகம் என்ன செய்கிறது? உதவிடுமா? என்றும் கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக யோகம் உதவுகிறது. எப்படி? உங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, ஊக்கம் தருகிறது. உங்கள் மனமும், மூளையும் தளராமல், பிரச்சனையில் சிக்கிடாது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை சிந்திக்க, உங்களுக்கு உதவுகிறது. அடுத்து என்ன செய்யலாம்? என்று சிந்தனையை கொண்டுவந்த உடனே, காட்சியாக தோன்றிவிட வாய்ப்புள்ளது. உலகில் எல்லாமக்களும் போகும் பாதையில், நாமும் போகாமல், மிகச்சரியான பாதையில் சென்று, சாராசரி வாழ்விலும், பொருள் துறையும் சிறப்பாக வாழ வழிகள் கிடைக்கும், அதை பயன்படுத்திடவும் முடியும். குழப்பத்திற்கு இடமிருக்காது.

உடலையும், மனதையும், உயிரையும் பலம் தரும் யோகத்தின் அருமையை அப்போது முழுமையாக உணர்வீர்கள் என்பது உறுதி, இதுவே சாதாரண மக்களுக்கும், யோகத்தில் இணைந்து பயணிக்கும் மக்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-

The best way and solution for the perfect and complete life!


உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?


பதில்:

ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?

ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?

மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?

உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும். 

மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Please explain simply the Mukti and Gnana in spirituality?


முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?


பதில்:

எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை (the source of all the forces) அறிவால் அறிந்து வாழ்வில் அமைதி பெறுவதே அறிவில் தெளிவு பெறுவதே முக்தி எனப்படும்.  

விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல் வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் விளக்க வழி வாழ்வே ஞான நெறியாகும்.

வாழ்வில் மனம் தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான்.  உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம் உயிர் மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருக்கின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருள்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் மனவளக்கலையினை அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. 

மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை யோகம் என்றும் ஆராய்ந்த பின் கண்ட விளக்க வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை ஞானம் என்றும் வழங்குகிறோம்  

வாழ்க வளமுடன்.

-

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Any of yoga chakra bottom of the Moolathara? Can we meditate there? What kind of benefits on that?


மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?


பதில்: 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும், தன்னளவில் ஒரு மையம் உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த அளவிலே இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும் கூட அதன் மையமாக ஒரு நிலை நிச்சயமாக உண்டு. அதுபோலவே எந்த ஜீவன்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் உடலின் நீளம் அகலம் அளவை எடுத்துக்கொண்டு வகுத்தால், அதன் மையத்திலும் ஓர் புள்ளியான நிலை உண்டு. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. அதுவே மூலாதாரம் என்று வழங்குகிறோம். இந்த விளக்கங்களின்படி, மூலாதாரத்திற்கு கீழே என்று சொல்லுவதற்கு இடமில்லை. நாம் நிமிர்ந்து நடப்பதால், மூலாதாரத்திற்கு கீழே என்று உங்களுக்கு சந்தேகம் எழுகிறதா? மேலே கீழே என்பதெல்லாம், நம்முடைய விளக்கத்திற்க்காத்தானே தவிர அப்படி எதும் இல்லை என்று சொல்லமுடியும். மேலும் பூவி ஈர்ப்பு ஒன்று இருப்பதால்தான் கீழே என்பது மேலே என்பதும் தோன்றுகிறது. வான் வெளியில், பிரபஞ்சத்தில் மிதக்கும், நாம் வாழும் பூமிக்கே மேலே கீழே என்று எப்படி, எதைச் சொல்லுவது? அதுப்போலவே மனிதனைத் தவிர்த்து, உணர்வன என்ற வகுப்பில் உள்ள, பாம்பு, பல்லி, முதலை, ஆமை இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லுவது?

மூலம் + ஆதாரம் என்பதுதான் மூலாதாரம் ஆகிறது. எப்பொருளுக்கும் ஓர் மையப்புள்ளி என்ற நிலைபாடு சரியானதுதான். எனவே மூலாதாரத்திற்கு கீழே என்ற சக்கரங்களும், ஆதாரமையங்களும் இல்லை என்பதே சரியானது.

உங்கள் கேள்வியில் உள்ளடக்கமாக இருக்கும், ஓர் சந்தேகத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டும். தெய்வீக திருவிளையாடல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகின்ற, உயிரின பரிணாமத்தில் இயல்பூக்கத்தின் வழியாகவே, தன்னை மேம்படுத்தி முழுமையான நிலைதான் மனிதன் ஆகும். மனிதன் என்ற நிலையில், அந்த தெய்வீகம் தன்னையே அறிந்து முழுமையும் செய்து கொண்டது. அப்படி இருக்கும்பொழுது, மூலாதரத்திற்கும் மேலே என்று சொல்லுவது தவறு, மூலாதாரத்திற்கு உயர்வான நிலை, ஆதார சக்கரங்களில் தான் நமக்கு, வேலை இருக்கிறதே தவிர கீழே இல்லை. நீங்கள் உங்களை ‘நான் யார்?’ என்ற தேடலின் வழியான உண்மையை அறிய, மூலாதார நிலை தாண்டிய உயர் நிலைகளை அடையவேண்டும்.

மூலாதாரத்திற்கு கீழே அதாவது, மூலாதாரத்திற்கு தாழ்வான நிலைகளில் நீங்கள், தனியாக ஒன்றும் செல்லவேண்டியதில்லை. அதுதான் வழக்கமாக நம் வாழ்நாளில் வந்து கொண்டே இருக்கிறதே? நம்மையும் பாடாய்படுத்துகிறதே? ‘என்னை மிருகமாக்கிறாதே’ என்று தானே நாம் மற்றவர்களிடம் சொல்லுகிறோம் / கத்துகிறோம். உண்மைதானே? இதற்கு வேதாத்திரி மகரிஷியே ஒரு விளக்கம் தருவார். பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கு, ஏதேனும் வாக்குவதம் முற்றி அடிதடியில் இறங்கினால், ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் மற்றவரை கடிக்கச்செய்வார், நகத்தால் பிராண்டுவார், கைகளால் தாக்குவார். இதெல்லாம் யார் செய்தது? நாம் பார்க்கின்ற காட்டுவிலங்குகள் செய்யும் செயல்கள் அல்லவா? இது ஏன் மனிதனிடம் வந்தது?

மனிதன் பரிணாமத்தின் வழியே, விலங்குகளின் மூலத்தைக் கொண்டவன். மனிதாக வந்தும் கூட அவனின், கருமையத்தில், விலங்கினத்தின் தன்மைகள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. அவன் அதிலிருந்து விலகி, மனம் இதனான மனிதனாக மாறிட, அவனின் உயிரின் இயக்க மையத்தை மாற்றி அமைத்து, உயர்த்திட வேண்டியது அவசியம். அதைத்தான் குண்டலினி தீட்சை என்று அழைக்கிறோம். மூலாதாரம், உயர்சக்தி மையம், மனதின் மூலமான காந்த மையம், வித்து சக்தியின் மையம் எல்லாமே கருமையம் என்ற ஒரே இடத்தில்தானே இயற்கையாக அமைகிறது. சராசரி மனிதன், நீங்கள் கேட்பது போல, கீழே தாழ்வான நிலையில் இருந்துதான் வாழ்கிறான். அவன் உயர்வடைய, சிறப்படைய, உண்மை உணர, தன்னையறிய, மூலாதாரத்தில் இருந்து உயர்வான நிலையைத்தான் தியானிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

யோகத்திற்கு வராமல், குருவின் வழியாக தீட்சையும் எடுத்துக்கொள்ளாத மனிதன் இயல்பாகவே தன்னை மறந்து, விலங்கினத்தின் பண்புகளை வெளிப்படுத்தியே வாழ்வான், வாழ்ந்துகொண்டு இருப்பான். இப்போது உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Why Vethathiriyam not mentioned Shivan, Shakti and all?


ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?


பதில்: 

அன்பரே, மிக நீண்ட ஆராய்ச்சிக்குரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதை இங்கே எழுத்தில் விளக்கமாக சொல்லிவிட முடியாது. அதை நேரடியாக, உங்கள் முன்னால் சொன்னால்தான் சரியாக புரிந்துகொள்ளவும் முடியும். உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கவேண்டும் என்றால், யாரேனும் உங்கள் ஆசிரியரிடம் கூட கேட்டு தெரிந்துகொள்ளலாம். எனினும் சில அடிப்படை உண்மைகளை, விளக்கங்களை இங்கே தருகிறேன். ஓரளவுக்கு உங்களுக்கான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.

ஒரு உண்மையை, மதிப்பான பொருளை, நிகழ்வை தெரிந்துகொண்ட நீங்கள், அதை பிற மக்களிடமும், சராசரி மனிதனிடமும், உங்களைவிட கல்வியில் ஆரம்பநிலையில் உள்ளவரிடம், கல்வி அறிவே இல்லாதவரிடம் சொல்லுவதென்றால் எப்படி சொல்லுவீர்கள்? ‘இது இப்படியானது’ என்று உயர்வாகத்தானே சொல்லுவீர்கள். அப்படி சொல்லவில்லை என்றால், அதன் தரம் தாழ்ந்துவிடும். மக்கள் அதை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள். தேவையும், அவசியமும் இல்லை என்று போய்விடுவார்கள். உண்மைதானே?

அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளை உணர்ந்தவராக இருந்தால்? அதை எப்படி சொல்லுவீர்கள்? இப்பொழுது ஒரு விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுபோலவே, மெய்ப்பொருள் உண்மையறிந்த ஞானிகள், மனிதனி பிறப்பின் கடமையே, அந்த மெய்ப்பொருளை உணர்வதுதான் என்பதை, மக்களுக்கு விளக்கம் தருவதற்காகவே, அந்த மெய்ப்பொருளை ‘சிவம்’ என்று சொன்னார்கள். உயிரினங்களை ‘சீவன்’ என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலையானது, உயர்வானது, மெய்யானது என்று பொருள் தரும் வார்த்தையாகும். ஆனால் பின்னாளில்தான் அது சிவனாக மாறிவிட்டது. சீவன் என்பதற்கு பொருத்தமாகக்கூட சிவன் வந்திருக்கலாம்.

மெய்ஞானிகள் சொன்ன, சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும், ஆன்மீகவாதிகள் சொல்லுகிற சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது தெளிவானது. பின்னது திறை மறைக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டதாகும். நாமும் பழங்காலமாக மெய்ஞானிகள் சொன்னதை விட்டுவிட்டு, ஆன்மீகவாதிகள் சொன்னதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். உண்மைதானே? சிவம் என்றாலும் சிவன் என்றாலும் ஒரு காட்சி அல்லவா வந்து நிற்கிறது. வார்த்தை சொல்லும் உண்மை இங்கே மாறிவிட்டதே? இதை குரு மகான் வேதாத்திரி மகரிஷி உணர்ந்துதான், வேதாத்திரியம் தனிப்பாதையில் நடைபோட வழி வகுத்தார். உண்மையை, உள்ளது உள்ளபடி உணர்ந்தால்தான், விளக்கமும், நிறைவும் கிடைக்கும் என்றுதான் தன் வேதாத்திரிய பயிற்சிகளையும் வடிவமைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Please explain the Realization of the Consciousness by all ways?


இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

அன்பும் கருணையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமானால் இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.  சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதல்ல என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.  ஆனால் பருவம் வந்த பின் புற வழிபாட்டிலிருந்து அக வழிபாடு தொடங்க வேண்டும்.  அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவ சாதனை அவசியம் வேண்டும். 

அப்போது தான் மனம் ஒரு சமநிலையிலே இருக்கவும் உயர் நிலையிலே அறிவு இயக்கவும் முடியும்.  இங்கே தான் மனம் அமைதி பெரும்.  எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. 

அதனை எந்தப் பொருளிலும் எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லைகட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையை பெற முடியாது. பொருளில் இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.   அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில் இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டுவிட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும். 

மேலும் பரநிலையுணர்வும் அதில் அடங்கி இணைந்து நிலைபெறும் பேறும் கிடைக்காத போது அறிவு தான்-தனது, என்னும் தன்முனைப்பில் உணர்ச்சிவயமாகி புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும்.  தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்புநிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து நிறைவும் அமைதியும் பெறும்.

    பக்தி என்ற நிலையிலே நாம் இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து கொண்டாலும், யோகம் என்ற நிலையில்தான், முழுமையாக உணர்ந்து கொள்கிறோம் என்பதே இங்கே விளக்கமாகிறது.

வாழ்க வளமுடன்.
-

What happening between ourselves and our mind when we practice the meditation?


தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.

ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம்  செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள். 

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.  அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம்.  ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.

ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். 

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்

Is it perfect the explaining the spiritual truth through with the modern science?


இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது வேதாத்திரியம் இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடுதான் அன்பர்களுக்கு, பயிற்சியோடும் விளக்கிவருகிறது என்பதை யாவரும் அறிவார்கள்

உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளியமுறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனிதகுலத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது. அருட்பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல [பிரபஞ்ச]மாக விளங்குகிறது. 

இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் (Repulsive Force) ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் (Attractive Force) ஆற்றலும் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தகளமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.

இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision & Regularity) எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும் முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால்தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும். பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, உடல் உள்ளப் பயிற்சி முறையே எளியமுறைக் குண்டலினி யோகமாகும்.

இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமுமாகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன்பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள். உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்குபடுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள்.

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க வளமுடன்.

Since everything is against nature, how can it be considered good?


மனிதன் யோகத்தில் இருந்தாலும் கூட, செய்வது எல்லாமே இயற்கையை எதிர்த்துத்தான் என்றே அமைகிறது என்பதால் அதை எப்படி நல்லதாக நினைத்துக்கொள்ள முடியும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனித மனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே? விளக்க வேண்டுகிறேன்?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா? என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் பஞ்சபூதங்களையும் ஒரு குறிப்பட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அத்தகையவர்கள் இறங்குவார்களா? என்பதை ஒருவர் மிக நுணுகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனவளக்கலையில் தேர்ந்த அன்பர் ஒர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்ததாக எவ்வாறு நம்புவது? என்று தான் சொல்வீர்கள்.

என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துப்போவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப்போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், தூரம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம்: மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும்? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும் அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறருக்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.

நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்கிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்தை உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்தும் போகலாம். இதனால் மருத்துவருக்கு வலுவில்லை என்று கொள்ளமுடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.

மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ, சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும், இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்.

வாழ்க வளமுடன்

-