CJ for You: lose

lose

Showing posts with label lose. Show all posts
Showing posts with label lose. Show all posts

How to fix the deficit in materialistic life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?

அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை.  அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம். 

ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.

இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.

அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!

வாழ்க வளமுடன்.

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.