CJ for You: asset

asset

Showing posts with label asset. Show all posts
Showing posts with label asset. Show all posts

I expect a lot of everything. When will I get it all?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் எல்லாமே நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். அது எல்லாமே எனக்கு எப்போது கிடைக்கும்?!


பதில்:

இந்த இயற்கையானது, அதன் மாபெரும் சக்தியானது, உங்களுக்குத் தேவையானதை நிச்சயமாக வழங்கும். அது உண்மை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், நீங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் தராது, கிடைக்காது. ஆனால், நீங்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. நிச்சயமாக நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்களுக்கு அதை பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கிறதா? என்று இந்த இயற்கையாற்றல் சோதனை செய்யும். அதன் வழியாக உங்களுக்கு என்ன தேவையோ, அதைமட்டுமே வழங்கத் தயாராகும்!

எனக்கு Law of Attraction, அது, இது, என்று எல்லாமே தெரியும்ங்க, எப்படியும் நான் கேட்டுப் பெறுவேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றுதானே சொல்லுவீர்கள். சரி, ஆனால் நான் உங்கள் ஆசையை நம்பிக்கை இழக்கச்செய்யவில்லை. ஆனால் புரிந்துகொள்ளுங்கள். எதன் வழியாக நீங்கள் எதிர்பார்த்தாலும் கூட , உங்களுக்கு எது தேவையோ அதுதான், வழங்கப்படுமேயன்றி  வேறெதும் கிடைக்காது! வேதாத்திரியம் வழியாக நீங்கள் கற்றுக்கொண்ட, தனா ஆகர்ஷ்ண சங்கல்பம் செய்தாலும் கூட, நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் கிடைக்காது. உடனே இதெல்லாம் பொய்யா? ஏமாற்றுவேலையா? என்று எதிர்கேள்வி கேட்டுவிடக்கூடாது.

உங்களுக்கென்று வழங்கப்படுவது தாமதமானால், நீங்கள் கேட்டு வாங்குவது தவறில்லையே?! அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எதிர்பார்ப்பே வேண்டாம், அது ஏமாற்றத்தைத்தான் தரும் என்று உறுதிபட சொல்லுகிறார். தேவை என்பது வேறு, விருப்பம் என்பது வேறு, எதிர்பார்த்தல் என்பது வேறு, வேண்டும் என்பது வேறு. இப்படி நான்கு வகையாக சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தனியாக சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நீங்களே கொஞ்சம் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.

இந்த எதிர்பார்ப்பு ஏன் வருகிறது? தேவை என்பதை மீறி நினைக்கும் பொழுதுதான் வருகிறது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவையோ அதை மீறி ஏன் எதிர்பார்ப்பு என்றால், அதற்கு மிக எளிய காரணம், நீங்கள் வேறு யாரையோ உங்களோடு ஒப்பிடுகிறீர்கள். அந்த யாரோ போல உயரவேண்டும், அவரை  விடவும் மேலாக உயரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் உங்களுடை தேவை என்பதை விட்டு விலகி, இவ்வளவு என்றோ, நிறைய நிறைய என்றோ எதிர்பார்க்கத் துவங்கிவிடுகிறீர்கள்.

இந்த ஏதிர்பார்ப்பதிலேயே நீங்கள் மனதை செலுத்தினால், மனதின் மகத்தான சக்தி வீணாகிவிடும். இருப்பதையும் இழக்கும்படியான வாழ்க்கை சிதறிவிடும். உங்கள் தேவைகள்கூட பறிபோகலாம். இதிலிருந்து விலக, அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து, உண்மையாகவே எனக்கு என்ன தேவை? என்று பட்டியலிட்டு அதை கேளுங்கள். கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.

-

How to fix the deficit in materialistic life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?

அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை.  அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம். 

ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.

இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.

அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!

வாழ்க வளமுடன்.

Isn't it true that if you join yoga, you will lose money making?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?


பதில்:

உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை  நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.

உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும். 

‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.

யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!

வாழ்க வளமுடன்.