CJ for You: money

money

Showing posts with label money. Show all posts
Showing posts with label money. Show all posts

I am suffering from debt. But yoga has nothing to do with money, has nothing to do with it, even if it is opposite, can there be any explanation through you? I am asking this question in anticipation. It doesn't matter if some others make fun of me. Tell me the way to get rid of debt.


வாழ்க வளமுடன் ஐயா. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஆனால் யோகத்திற்கும் பணத்திற்கும் தொடர்பில்லை, சம்பந்தமில்லை, எதிர் எதிரானது என்றாலும், உங்கள் வழியாக ஏதேனும் விளக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே இந்த கேள்வியை கேட்கிறேன். வேறு சிலர் என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. கடன் தொல்லை தீர வழி சொல்லுங்கள்.

உங்கள் கேள்வியில் எந்த தவறுமே இல்லை. யோகத்திற்கு எதிரானது இந்த உலக இன்ப வாழ்வும், அதுதொடர்பான பணமும், பொருளும் என்ற கருத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார் வாழ்ந்தாலும், பணமும், பொருளும் அவசியமானது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்.

ஒரு ஞானியும், மகானும் கூட பணமும் பொருளும் இல்லாமல் வாழமுடியாது. அவர்கள் மக்களை அருள் துறையில் உயர்த்திட பாடுபடுவார்கள். மற்றவர்கள், அதாவது பொருள் துறையில் இருப்பவர்கள், அந்த ஞானிகளை, மகான்களை ஏற்று பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் காலத்தில், அதற்கு பணம், பொருள் ஈட்ட முடியாது. எனினும் அதன் தேவை இல்லாமல் இருக்கமுடியுமா? அந்த தேவையை, அக்குழந்தையின் பெற்றோரும், சமூகமும் ஏற்கும் அல்லவா? அதுபோலவே, வயதான நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. உண்மைதானே?

இந்நிலையில், யோகம் இதற்கெல்லாம் எதிரானது என்று நினைத்துக் கொள்வது, அறியாமை ஆகும். எல்லாவற்றையும் விட்டு விட்டு யோகத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அடுத்த வேளை பசியாற என்ன வழி? யோசித்தீர்களா? அப்படி ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா’என்று யார் உங்களை அழைத்தார்கள்? எனவே, யோகம், உலகில் வாழ்வுக்கு எதிரானது அல்ல. உண்மையாகவே பொருந்தி, உங்கள் உலக வாழ்வை, அனுபவமாக்கி உயர்த்தக்கூடியதே ஆகும்.

கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. அது அளவில் சிறிதாக, பெரிதாக இருக்கலாம் என்பதுதான் உண்மை. பல்வேறு சூழ்நிலைகளில், திட்டமிடாத பல வேலைகள், செயல்கள் வழியாக இழப்பு நேரிடலாம். இயற்கை சீரழிவு வழியாகவும் நாம் பாதிக்கப்படலாம். கோவிட்19 தொற்று போல இருக்கலாம். எனினும் கடனை தீர்த்திட வழிதேடி பயணிக்க வேண்டும். அது எப்படி என்பதை குருமகான் வேதாத்திரி மகரிஷியே விளக்கமும் தருகிறார்.

உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி, தான் வாழும் காலத்தில், பெரும் தொழில் அதிபர். பல்வேறு மக்களுக்கு வேலை கொடுத்து, நிர்வாகம் செய்தவர். அவருக்கும் கடன் தொல்லைகள் இருந்தது. அந்த அனுபவத்தை, தன் வாழ்க்கைப்பயணம் எனும் நூலிலும் தருகிறார். அவருக்கு நேர்ந்திட்ட அந்த சூழ்நிலை, நிச்சயமாக நாம் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அதை நான் இங்கே விளக்கவில்லை. அதை அவருடைய நூலில், அவருடைய கருத்தாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான, தன்னம்பிக்கை கூடும். வேதாத்திரி மகரிஷியின் அனுபவ கருத்தை  இதோ, இந்த காணொளி, உங்களுக்கான விளக்கமாக அளிக்கும்.

உங்களை வருத்தும் கடன் பிரச்சனை தீர வேதாத்திரி மகரிஷி சொன்ன வழிமுறை! How to solve the credit and loan

வாழ்க வளமுடன்.

-

Is exercise necessary even in harmony with nature? Is normal life enough? What is your explanation for this?


இயற்கையோடு ஒத்து வாழக்கூடிய நிலையிலும், உடற்பயிற்சி அவசியம்தானா? இயல்பான வாழ்க்கை போதுமே? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?


நீங்கள் சொல்வது சரிதான். இயற்கையோடு ஒத்த தன்மையில், வாழக்கூடிய நிலையில், அன்றாட வேலைகள், கடமைகள் செய்துவந்தால், உடற்பயிற்சி அவசியம்தானா? என்று கேட்பது சரிதான். அதுபோலவே இயல்பான வாழ்க்கையில் முறையில் வாழ்ந்தாலும் போதுமானதுதான். ஆனால், உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். நிஜமாகவே நான், இயற்கையோடு ஒத்த தன்மையில் வாழ்கிறேனா? என்னுடைய அன்றாட வேலைகள், கடமைகள் உடலுக்கும், உடலுறுப்புக்களுக்கும் பலன் அளிக்கிறதா?

மேற்கண்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் என்ன? அதை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே இன்றைய உலகில், மிகச்சிலரே அத்தகைய உடல் உழைப்பையும், வேலையையும், கடமையையும் கொண்டிருக்கின்றனர். தினசரியாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளையும், வருமானத்தையும் ஈட்டக்கூடிய மனிதராக அவர் இருப்பார். சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரைப்போல நாம் உழைக்கவும் முடியாது. இவரைப்போல நாம் சாப்பிடவும் முடியாது என்று சொல்லுவார்கள். நிஜம் தானே?

பெரும்பாலோர் வாழ்க்கையில், அதிகாலை எழுந்து காஃபி, தேனீர் என்று ஆரம்பித்து, கைபேசியில், வரவேற்பறை தொலைகாட்சியில், செய்திகளையும், ராசி பலன்களையும் பார்த்துக்கொண்டே நகர்கிறது. நேரமிருந்தால், காரில், பைக்கில் நடைபாதை அமைந்த பூங்காவிற்கு சென்று, நடந்துவிட்டு மீண்டும் இல்லம் வந்துவிட்டு, ஏதோ அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, அலுவலகம், தொழில்கூடம் கிளம்பிவிடுகிறார்கள், வியாபாரம் தொடர்பான சந்திப்புக்கும் போய்விடுகிறார்கள். அவ்வளவுதான். இதிலேயே மாலை, இரவு வரை கடந்துவிடும்.

இதற்கிடையில் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து அலுவலை கவனித்தல், வெளியே வெயில், மழை, காற்று பொருட்படுத்தாத அலைச்சல், செயற்கை குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேர வேலைகள், கணிணி, கைபேசி, தொலைகாட்சி வழியாக நேரம் செலவழிப்பு, அது பொழுதுபோக்காகவும் இருக்கும், அலுவல் காரணமாகவும் இருக்கும். மதிய நேர உணவு தள்ளிப்போகும், இரவுக்கு பசி இல்லாத வகையில், மாலையில் வடை, காஃபி, தேனீர் என்றும் ஜங் ஃபுட் என்ற உணவுவகைகளும் பட்டியலில் இருக்கும். இந்த வகையில், உடலுக்கும், உடல் உறுப்புக்களுக்கும் ஏதேனும் இயக்கம், அசைவு, அமைந்துள்ளதா?

ஏங்க ஐயா? அதற்காக, முதலாவதாக சொன்னது போல, எல்லோரும் கஷ்டப்பட்டா உழைக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. அதற்கும் விளக்கம் தருகிறேன். நம்முடைய வாழ்க்கை, அதன் தரம் ஒவ்வொரு நாளும் உயர்கிறது. நாமும் நிறைய கற்றுக்கொண்டு, நம்மையும், நம் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்கிறோம். அது கட்டாயமும், அவசியமும் ஆகும். அதில், நம் குடும்பத்தாரையும் கவனித்துக் கொள்கிறோம். ஆனால், உங்கள் உடலையும், உடலுறுப்பையும் கவனித்துக் கொள்கிறீர்களா? அங்கேதான் சிக்கலை, நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

இதனால்தான், நம்மையே மறந்து, அன்றாடம் வாழ்க்கை, அப்படியே ஒரே தன்மையிலேயே நகர்ந்துவிடுகிறது. தீடீரென்று ஏதேனும் உடல்நலம் பாதிக்கபடும் பொழுதுதான், அடடா, ஏதோ தவறு செய்து விட்டோமோ? என்று நமக்குள்ளாக தோன்றுகிறது. மேலும் பணம் இருந்தால், அதற்கான கட்டணத்தைக் கொடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவரிடமும் நட்போடு பழகி, சரிசெய்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால், அது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லையே? பொருள் இழப்பும் உண்டாகும், உடல் உறுப்பு செயல்பாடும் பாதிக்கும், வாழ்க்கையும் பாதிக்கும், அதற்கு மேலாகவும் நிகழும் அல்லவா?

இப்போது இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன? இயற்கைக்கு முரணாகவேதான் நாம் வாழ்கிறோம். இல்லையென்றால் அப்படியான சூழல்தான் இங்கே இருக்கிறது என்ற தெளிவுக்கு வந்துவிட்டு, இதிலிருந்து என்னையும், என் உடலையும், உடல் உறுப்புக்களையும் காத்துக்கொள்ள வழி என்ன? என்று தனக்குள்ளாக கேட்டு, ஆராய்ந்து, என்ன செய்தால் நம்மை காத்துக்கொள்ளலாம்? என்றும் சிந்தித்து, ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்தலாம். அது எந்த ஒரு பயிற்சியாகவும் இருக்கலாம். என்றாலும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சிறந்த ஒரு தீர்வாகும்.

இன்னும் நான் இங்கே விளக்கமாக, இந்த சிக்கலை விளக்கலாம். ஆனால், நீங்கள் அந்த சிக்கலில் இருப்பதால், இதைவிடவும் தெளிவாக தெரிந்து கொள்ளவும் முடியும். நான் உங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்த சிந்தனைக்குள் அழைத்து வந்துவிட்டேன். என்வேலை அவ்வளவுதான், இனி நீங்களே இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும். சரிதானே?

வாழ்க வளமுடன்

-

Is health important to a man? Is mental resourcefulness important? Explain this dilemma.


ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? இந்த குழப்பமான நிலையையை விளக்குக.


இந்த கேள்விக்கு பதில் தரும் முன்பாக, கேள்வி கேட்டவரின் சூழல், வாழும் நிலை, தகுதி, இப்போதிருக்கும் வாய்ப்பு, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு என்ற அளவுகளைக் கொண்டு சொல்லவேண்டியதாக இருக்கிறது. 

நீங்கள் உலகவாழ்வில், ஒரு நல்ல உயர்வான நிலைக்கு, பொருள் செல்வாக்கோடு நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மன வளம் முக்கியம். அந்த மன வளத்தினால், உடலை நலமாக்கி, இந்த பொருள்முதல்வாத உலகில் வென்று உயரலாம். மனம் சோர்வாகவும், குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இயங்குமானால், அது உங்கள் உடலை, உடலுறுப்புக்களை கெடுக்கும். வேலை, வியாபாரம், தொழில் என்று எதனையும் செய்யவிடாது. முயற்சியில் தோல்வியை தரும். விளைவு, நட்டமாகும். இதனால் மனம் உற்சாகமாக இருக்க என்ன வேண்டும்? என்ற நோக்கத்தில் மன வளம் முக்கியம். இதற்கு யோகம் உதவுமா? நிச்சயமாக உதவும். ஆனால், யோகம் வாழ்க்கை இன்பத்தையும், பொருளாதாரத்தையும், இல்லறத்தையும் சிதைக்கிறது என்றுதானே, பெரும்பாலோர் நினைக்கிறார்கள்? சரிதானே?!

இரண்டாவது வகை மனிதராக பார்த்தால், ஏதோ ஓரளவில் நிலையான பொருள் கிடைக்கிறது. அன்றாட வாழ்வு நகர்கிறது என்ற நிலையில் இருக்கும் மனிதரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பொருளில் நிறைவு பெற்று, இருப்பது போதும் என்ற அளவில், அன்றாட வரவில், கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மற்றதை சேவையாக உலகுக்கு திருப்பித்தரும் மனிதர்களையும், இங்கே இணைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இப்போது, உடல் நலம்தான் முக்கியம். ஏனென்றால், இதுநாள் வரை, அந்த உடலைக்கொண்டு, பலவிதங்களில் தூக்கம் கெட்டு, உடல் பலம் கெட்டு, தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திருப்பார்கள். உடலில் பலவித நோய்கள் தலைதூக்கி நிற்கும். சில உடல் உறுப்புக்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலர் ஏதேனும் அறுவைசிகிச்சையும் செய்திருப்பார்கள். உணவே மருந்து என்பதற்கு பதிலாக, மருந்தே உணவாக சாப்பிடம் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் இவர்கள், உடலை காத்திட வேண்டும், உடல் நலமே இவர்களுக்கு முக்கியம். பிறகு அதன் வழியாக மன நலன் காக்கப்பெறலாம்.

மூன்றாவது வகை மனிதர், உலக வாழ்க்கையில் இருந்தாலும், உள்முகமாகவே, தன்னைக்குறித்த ஒரு தேடுதலைக் கொண்டிருப்பார். ஒருவகையில் அது, அவருடைய முன்னோர்களின் விருப்பமாகவும், அதை நிறைவேற்றிட பிறந்தவராகவும் இருப்பார். இவருக்கு, நேரடியான யோகம் தேவை. அப்படியானால் பொருள் பணம் அவசியமில்லையா? என்ற கேள்வி எழும்தானே? இவர், இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்படுபவராக இருப்பார். வேண்டுதலும் எதிர்பார்த்தலும் இருக்காது. இருந்தாலும் அமைதி, இல்லையென்றாலும் அமைதி என்ற நிலையில் இருப்பார். உங்களில் கூட அப்படியாக சிலர் இருக்கலாம். இந்த மனிதர் யோகத்தில் உயர, உடல் நலமும் வேண்டும், மன வளமும் வேண்டும். ஆனால், முதன்மையாக, உடல் நலம் சீர் செய்துவிட்டால், அடுத்து மன வளம் நோக்கி தானாக நகர்ந்துவிடுவார்.

இப்படியாக, ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? என்ற கேள்விக்கான விடையை கண்டுவிட முடியும். இதை நீங்கள் மிகச்சரியாக எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதன்படி நீங்கள், பயிற்சியை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

-


Why the social norms is never changes based on rich, poor and middle classes?


பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?


பதில்:

ஏதோ பொருளாதார நிபுணருக்கு அனுப்பிவைக்க வேண்டிய கேள்வியை என்னிடம் அனுப்பிவிட்டீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அவர்கள் மிக தெளிவான, துல்லியமான, உலகியல் நிலைப்படியும், தற்கால சூழ்நிலைப்படியும் புள்ளிவிபரங்களோடு கூடிய விரிவான பதிலை அவர்கள்தான் தரமுடியும். என்னளவில் பார்வைகளும் அனுபவங்களும் மாறும் என்பதே உண்மை. மேலும் யோகத்தில் ஆழ்ந்து அதில் பயணிப்பவர் பார்வை ஆழ்ந்து செல்லக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்தை சொல்லும் பொழுது, எதிர்தரப்பு எதிர்பாராத பதிலாக அமையும், அதனால் இவரிடம் போய் ஏனடா இதைக்கேட்டோம் என்று வருந்துமளவுக்கு, முகத்தினை திருப்பிக்கொள்ளும் அளவுக்கு, வேறொடு பிரச்சனை எழுமளவுக்கு இருக்கும். ஏதோ முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

பணக்காரன், ஏழை, நடுத்தரவர்க்கள் என்பதெல்லாம் விதி அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பணக்கார வீட்டில், பணக்காரனுக்கு மகனாக / மகளாக பிறந்ததால் மட்டுமே அவர் பணக்காரர் இல்லை. அவரின் வாழும் முறைதான் அந்த தகுதியை நிர்ணயிக்கிறது. ஒரு பணக்காரர் தீடீரென்று பணம், பொருள், சொத்து இழந்தும் விடுகிறார் அல்லவா? அதுபோலவே ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், அந்த சூழலை மாற்றிட உயர்ந்த படிப்பு படிக்க முயற்சிக்கலாம், அடிப்படை கல்வி போதுமென வேலைக்கு செல்லலாம். படிப்பே தேவையில்லை என்று திறமையை வைத்தும் உழைத்து முன்னேறலாம் அல்லவா? அடுத்ததாக, நடுத்தர வர்க்கமும் ஒரே வேலை, தொழில், பரம்பரை நிலை என்பதெல்லாம் மாற்றி, என்ன செய்தால், எப்படி செய்தால், உயரலாம், முன்னேறலாம், மேம்பாடு காணலாம் என்று சிந்தித்து, ஆராய்ந்து தகுந்த காலத்தில் நல்ல நிலையை அடையலாம் அல்லவா?

இப்படியான நிலை இருக்கும் பொழுது பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லுவது முறையாகாது. அவரவர் அளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், வெளியில் தெரியாது. நீங்கள் ஒரு பணக்காரனாக இருந்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. ஏழையும், நடுத்தரவர்க்கமும் தான் இப்படியான புலம்பலிலும், சிக்கலிலும் இருக்கிறார்கள். பணக்கார்களை நீங்கள் நுணுகி பார்க்கவேண்டும். அவர்களிடம் பொதுவாகவே, அநாவசிய செலவு என்று இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அளவு வைத்துக்கொள்வார்கள். திட்டமிடுவார்கள். லாபமும், வருமானமும் வருமா? என்று சிந்தித்துத்தான் ஒன்றை தொடங்குவார்கள். இழப்பை சிறிதளவும் ஏற்க மாட்டார்கள். தானமாக கொடுத்தாலும் அதில் ஓர் அளவும் கணக்கும் இருக்கும். இத்தகைய குணங்கள் ஏழையிடமும், நடுத்தரவர்கத்திடமும் உண்டா?

இன்றைக்கு இருக்கு, நாளை என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்றுதான் ஏழையும், நடுத்தரவர்க்கமும் இருக்கும். தன்னிடம் இருப்பதை வாறி இறைக்கும் மனநிலையோடுதான் இருப்பார்கள். அது நல்ல உயர்ந்த நிலைதான் ஆனால், நீங்கள் தன்னளவில் ஏன் கஷ்டத்தை ஏற்கவேண்டும்? அப்படியான அவசியம் என்ன? அவரெல்லாம் உழைக்காமலேயே சம்பாதிக்கிறான், நான் இப்படியாக அவதிப்பட வேண்டியுள்ளது என்று மற்றவரை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்? இது உதாரணங்களே! இதுபோல இன்னும் நிறை பேசிக்கொண்டே. எழுதிக்கொண்டே போகலாம்.

ஏழைகளும், நடுத்தரவர்க்கமும் உழைக்கத் தயாரானவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மற்றவர்களுக்கு உதவும் மனநிலையும், பிறருக்காக வருந்தும் மனநிலையும் பெற்றவர்கள். ஆனால் தன்னளவில் தன்னை உயர்த்திட ஏனோ தயங்குகிறார்கள். அதை மாற்றி வாழ்வில், தொழிலில், வேலையில், வியாபாரத்தில், உழைப்பில் வெற்றி பெற்று, பொருளும் செல்வமும் பெறவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஐயா, என்னளவில் எனக்குத் தெரிந்த கருத்தைத்தான் முன்வைத்திருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. நான் தீர்வு தந்தாக என்னிடம் வாளை சுழற்றவேண்டாம். வாள் சண்டைக்கு நான் தயாரில்லை. கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விலகிக் கொள்ளுங்கள். தவறு இருக்குமானால் நானே திருத்திக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

வாழ்க வளமுடன்

-

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?


பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?

பதில்:

அந்தக்காலம் முதல், இப்போது இருக்கின்ற, நவீன அணு விஞ்ஞான காலம் வரையிலும், மனிதர்களின் வாழ்வில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று பொருள்முதல்வாத உலகில் வாழ்கிறோம். ஒவ்வோரு மனிதரும், இன்னொரு மனிதனோடு ஏதேனும் ஓர் வகையில் இணைந்துதான் வாழ்கிறான். ஒருவருக்கொருவர் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னளவில் வாழ்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களோடு வாழ்பவருக்கும் பணம் முக்கியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் ஒருவர் என்ற நிலைமாறி, எல்லோருமே பணம் சம்பாதிக்கவேண்டிய சூழலும் இன்று பெருகிவிட்டதை மறுக்கமுடியாது. 

தன்னியல்பாக, தற்சார்பாக வாழ்ந்தாலும்கூட பிறருக்கு உதவுதல், சமூகத்திற்கு உதவுதல், அதன்வழியாக தானும் பயன்பெறுதல் என்றுதான் வாழ்வும் முடியும். பண்டம் மாற்று என்று, பணமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் இனி வழியில்லை. பணம் என்ற ஒன்றை தேடுதலின் வழியாகவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனின் கல்வியும், படிப்பும், பயிற்சியும், படிப்பறியாதோர்க்கு அனுபவமும், பழக்கமும், உடல்வலிவும் அவரவருக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு பிரதானமாக இருக்கிறது.

தன் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்ற ஓவ்வொருவருக்கும் பணம் தேவை. குழந்தைகளும், உடல் உழைப்பை தர இயலாத வயதானவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருதரப்பினருக்கும், யாரேனும் சிலர் உதவி செய்துதான் காக்கவேண்டும்.

இந்த வகையில், நீங்கள் சொன்னதுப்போலவே, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் என்பதும் குறிப்பிடவேண்டியதாகும். இதில் யோகத்தின் வழியே வாழ்வது என்றால், இந்த சிந்தனை எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த சம்பாத்தியத்தை, பணத்தை, அதன் பயனை விட்டுவிடவேண்டுமோ? என்று கேட்பதுபோல இருக்கிறது!

யோகம் என்பது என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்க. யோகம் என்பது, மனிதனின் மூலம் எது? என்று அறிந்து தன்னை நெறிப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி முறைதான். இதை எல்லாவற்றையும் விட்டுவிடுதல் எங்கே வந்தது? மேலும் யோகமும், துறவும் என்று முடிச்சிட்டுக்கொள்வது இன்னொரு பிரச்சனை. யோகம் என்பது பொருளாதார வாழ்க்கைக்கு எதிரானது என்ற நம்பிக்கையும், துறவு என்பது எல்லா சுகங்களையும், குடும்பத்தையும், விட்டுவிட்டு கையேந்தும் நிலைக்கு மாறிக்கொள்வது என்ற ரீதியில்தான் மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே உண்மைக்கு புறம்பான தகவல்கள். மக்களிடம் அப்படி இன்னும் நிலைத்துவிட்டது.

யோகம் என்பது பயிற்சிமுறை என்பதுபோல, துறவு என்பது அளவிலும், முறையும் வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழி ஆகும்.  இந்த இரண்டு உண்மைகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் வேறுயார், தவறாக சொன்னாலும், அவர்களையும் திருத்துங்கள். 

இப்படியாக, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது என்கிறபோது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன? மன நிறைவாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறதா? பணம் இல்லாதவரும் ஒரு பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். பலகோடி சொத்துக்கு அதிபதி என்றவரும் பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். இருவருக்கும் உடல் வலி, நோய், பசி, தூக்கம், உறக்கம் ஆகிய இவற்றில் எப்படி இருக்கிறார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியுமே? அன்றாடம் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் அளவே இல்லை எனலாம். வெளிப்பார்வைக்கு ஏழைக்கும், பணக்காரருக்கும் நிறைவாகவோ, குறைவாகவோ இருப்பதாக தோனலாம். ஆனால் அவர்கள் அளவில், ஏகப்பட்ட பிரச்சனை தாக்கம் இருப்பதை மறுக்கமுடியாது. அதை அவர்கள் மட்டுமே அறிவார், நமக்குத் தெரியாது, சிலர் நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள்.

அத்தகைய வாழ்வில் நிம்மதி என்ற ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்யவல்லது, யோகம் மட்டுமே என்பதை மறுக்கமுடியாது. யோகம் இல்லாமல் வாழ்வதில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அற்புதமான ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள். யோகம் என்பதை அறிவதற்காக இன்னொரு பிறப்பும் நிகழப்போவதில்லை என்பதை அறிவீர்கள்தானே?

உங்களை, உங்கள் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யோகத்தால் உருவாகும். இல்லையேல் கைநழுவிப் போகும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்
-

Needing of money is only the reason of barrier on yoga journey, correct?


பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!

பதில்:

நாம் வாழ்கின்ற இந்த உலகவாழ்க்கையில், பணத்தேவை என்பது மிக அவசியமானதே. மேலும் ‘மனிதர்களுக்கு மட்டுமான வாழ்வில்’ என்றுதான் வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியோ மனிதன் இந்த பணம் என்கின்ற அமைப்பிற்குள் சிக்கிவிட்டான். மனிதன் மட்டுமல்ல மனிதமும் சிக்கிவிட்டது. பொருள்முதல்வாத உலகம் எங்கும் நிரம்பிவிட்டது. மனிதர்கள் எல்லோரும் உழைத்து வருமானம் ஈட்டி, பொருள் பெற்று வாழ்தல் அவசியம் என்பதும், அதன்வழியாக மனிதர்களின் தரமும் நிர்ணயிக்கப்படுவதும் நிலைத்துவிட்டது. அதில் நாமும் வெற்றி பெறவேண்டியது அவசியமே.

பணத்தேவையை பூர்த்தி செய்யாமல், நாம் இந்த உலகில் வாழ்வும் முடியாது.
சில அடிப்படை விசயங்களை பெறவும் பணம் அவசியமாகிறது. முக்கியமாக, ஒரு மனிதன் சும்மா, வெறுமனே இருக்கக்கூடாது. அவன் உழைக்கவேண்டும், தன்னுடைய உழைப்பை, உலகுக்கு, சமூகத்திற்கு, பிறமனிதர்களுக்கு தரவேண்டும், அதற்கு அந்த மனிதன் சன்மானம், வெகுமதி பெற்றுக்கொள்ளலாம் என்பது உலம் ஏற்றுக்கொண்ட ஒரு நியதி. குழந்தைகளும், வயோதிகர்களும் மட்டுமே விதிவிலக்கு. சிலவேளைகளில் அவர்களும் சிக்கிக் கொண்டு துன்புறுகின்றனர். துன்புறுத்தவும்படுகின்றனர்.

இந்த பணத்தேவை, தனிமனிதனுக்கும் அவசியம், குடும்பம் என்ற சமூக நிலையில் வாழ்பவருக்கும் அவசியம். கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால், தனித்தனி நபர்களும், இந்த பணத்தேவையை நிவர்த்தி செய்ய உழைக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்துதான் ‘யோகம்’ என்பதும் அவசியமாகிறது. ஆனால் பணத்தேவை யோகத்திற்கு தடையா? என்ற கேள்வியும், யோகத்திற்கு பணம் தடையா? என்பதும் அவசியமற்ற கேள்விகளாகும். எப்படி என்பதையும் பார்க்கலாம்.

சராசரியாக ஒரு குடும்பத்தின் தேவை, இன்றைய காலத்தில் இந்திய ரூபாய் 20000/- (இருபதாயிரம்) என்று வைத்துக் கொள்ளலாம். இந்த வருமானம் குறைவு, யோகத்தில் பயணிக்க முடியாது என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது பற்றாக்குறை என்றால், கூடுதலாக பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பொழுது இந்த தொகையை ரூபாய் 40000/- (நாற்பதாயிரம்) என்று வைத்துக்கொண்டால், யோகத்திற்கு தடையில்லைதானே? ஆனால் யோகத்திற்கு வந்துவிடுவார்களா? இல்லையே.

அப்படியானால், மாதத்திற்கு 80000/- (எண்பதாயிரம்) வருமானம் ஈட்டுபவர்கள் யோகத்தில் இணைந்திருக்கிறார்களா? அதுவும் இல்லையே. எவ்வளவு வருமானமும் ஈட்டினாலும்கூட குறைவு மனப்பான்மையில் அவர்கள் சிக்கியிருந்தால், யோகம் அவர்களுக்கு கசக்கும். எனவே, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்பதெல்லாம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல ‘சப்பைக்கட்டு’. நீங்களும் இந்த உண்மையை ஆராய்ந்து பார்த்து விளக்கம் பெறமுடியும். 

உங்களுடைய தேவை என்ன? குடும்பத்தின் தேவை என்ன? வருமானம் எந்தெந்த வகையில் ஈட்டமுடிகிறது? எவ்வளவு வருகிறது? அதன் செலவும், அளவும், முறையும் என்ன? வருங்கால தேவை என்ன? அதற்கான சேமிப்பு எவ்வளவு? என்பதெல்லாம் ஆராய்ந்து கணித்துப்பாருங்கள். யோகத்தில் நீங்கள் முழுமனதோடு இணைந்து பயணிக்கலாம் என்பதே முடிவாகும்!

வாழ்க வளமுடன்.
-

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

How to fix the deficit in materialistic life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?

அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை.  அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம். 

ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.

இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.

அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!

வாழ்க வளமுடன்.

Why are poverty and money unrelated to each other?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏழ்மையும் பணமும் ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது? எப்படி சரி செய்வது?!


பதில்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தனித்தனியான வாழ்வியலும், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும் வாழ்விலும் இருக்கிறது. அதுதான் இயற்கையானதும், இயல்பானதும் ஆகும். இதில் இரண்டாவது நிலையில் இருக்கும் கலந்து வாழ்தலில் பகிர்ந்து கொள்ளுதலும் உண்டு. கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லலாம். அது பொருளாக இருக்கவேண்டியதில்லை. அறிவாக, அனுபவமாக, முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இங்கே ஒருவருக்கு பொருளை, பணத்தை தரவேண்டும், பெறவேண்டும் என்று நினைப்பதுதான், அந்த ஒருவருக்கு ஏழ்மையை கொண்டுவந்து விடுகிறது! எப்படி?!

நான், என்னால் முடிந்தவரை இப்படித்தான் இருப்பேன். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான், என்னால் செய்யமுடிந்தது இதுதான். இதற்கு மேல் நீதான் உதவவேண்டும். எனவே உன்னிடமிருப்பதை எனக்குத் தா, என்று எதிர்பார்ப்பதுதான் ஏழ்மையை வரவழைக்கிறது.

இந்த உலகில், மூன்று பிரிவில் இருக்கும் மனிதர்கள்தான், பிற மனிதர்களின் உதவியைப் பெற தகுதியானவர்கள் என்று குருமகான் வேதாத்திரி மகரிஷியும் குறிப்பிடுகின்றார். யார் அவர்கள் என்றால், 1) வயதான பெரியோர்கள் 2) 14 வயதுக்குள்ளான குழந்தைகளும், சிறியவர்களும் 3) உடலில், மனதில் ஏதெனும் ஒருவகையில் பாதிப்படைந்தோர் ஆகியோர் மட்டுமே! (சிறப்புப் பெற்றவர்கள்)

ஆனால் உலகில் எல்லாமனிதர்களுமே ஒரு எதிர்பார்ப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஏழ்மை என்பது தலைவிதி அல்ல என்று எத்தனையோ ஞானிகளும், மகான்களும், அனுபவசாலிகளும் சொன்னாலும் அதை ஏற்பதில்லை. ஒருவர் பிறக்கும் பொழுதும், வளரும் பொழுதும் ஏழ்மையாக, ஏழையாக இருக்கலாம். ஆனால், தன்னால் உடல் உழைப்பையும், அறிவையும், அனுபவத்தையும் இந்த உலகோடு, உலகமக்களோடு, வாழும் சமுகத்தோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்றால், அந்த ஏழ்மையை, இதுவரை இருந்து வந்த ஏழ்மையை மாற்றிவிடலாமே? தனக்கும், தன்னை சார்ந்த சக மனிதர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையான, அவசியமான, துணையான ஒன்றை செய்து பயன்பெறலாமே?! அது சேவையாக, தொழிலாக, வியாபாரமாக, உதவியாகவும் இருக்கலாம். அதன்வழியாக பணமும் பொருளும் பெறலாம் தானே?!

ஏழ்மையும் பணமும் விரோதிகள் அல்ல, அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையூடாக மாற்றத்தை சிந்தித்து, அதை செயல்படுத்தி வாருங்கள். நீங்களும் வாழ்வில் உயர்வீர்கள். நலமும் பலமும் அடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

Can you explain how we get wealth through yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு பணமும் பொருளும் எப்போது கிடைக்கும் என்பதை யோகத்தில் அறிந்துகொள்ள முடியுமா?


பதில்: 

உங்களுக்கு பணமும் பொருளும் மட்டுமல்ல, எல்லா செல்வ வளங்களும் கிடைக்கவேண்டும் என்பதுதானே உண்மை. இந்த பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும்,  இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவையானது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. எப்போது கிடைக்கும் என்று தெரிந்து கொள்வது மட்டுமல்ல. நிறைவாக தொடர்ந்து கிடைப்பதையும் நாம் யோகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இது ஒன்றும் மாயாஜால வித்தை என்று நினைக்காதீர்கள். நிச்சயமாக நடக்கக்கூடியதுதான். அதை எப்படி என்று பார்க்கலாமா?!

இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! அதெப்படி யோகத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும்? என்று ஒரு கேள்வியை நீங்கள் இப்பொழுது முன்வைத்தால், யோகத்தின் வழியாக கிடைக்காது என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. அதாவது இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் இங்கே என்னிடம் கேட்ட கேள்வியே தப்பாகவும் மாறிவிடுகிறது அல்லவா?!

ஆனால், யோகத்தில் அறிந்துகொள்ள முடியும், பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும் கிடைக்க, அதற்கு துணையாக யோகமும் உதவி செய்யும் என்பது உண்மையே! அது குறித்த விளக்கத்தை, இங்கே ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் காணலாம்!

-

அதற்கான இணைப்புச்சுட்டி இதோ: பிரபஞ்ச இயற்கை ஆற்றல் உங்களுக்கு பணம் பொருள் செல்வவளம் தருமா?

-

வாழ்க வளமுடன்.

What is the part of yoga in earing money for life? is it there or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு  என்ன? அப்படி உள்ளதா இல்லையா?


பதில்:

உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!

பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!

இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!

யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

வாழ்க வளமுடன்.

-

Isn't it true that if you join yoga, you will lose money making?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?


பதில்:

உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை  நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.

உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும். 

‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.

யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!

வாழ்க வளமுடன்.

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.

Body isn't your servant - Part 3


 உடல் உன் வேலைக்காரனல்ல




வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



---------------

Photos thanks to: at infinity @atinfinity l National Cancer Institute @nci


You and Your Gifted Body


 நீங்களும் உங்களுக்கு பரிசாகக் கிடைத்த உடலும்!


வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு


-------------------

Image thanks to: krakenimages @krakenimages