CJ for You: yogam

yogam

Showing posts with label yogam. Show all posts
Showing posts with label yogam. Show all posts

How do you want to live in this World? Upgrade of the human enlightenment!


நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இந்த உலகில், மனிதன் தனித்த ஒருவன் அல்ல. குடும்பம், உறவுகள், சமூகம் என்ற உறவுகளை அடிப்படையாக கொண்டுதான் பிறக்கிறான். ஒருவன், தன்னை அனாதையாக கருதவும் முடியாது. ஏனென்றால், அவனுக்கு, இந்த சமூகம் உதவிகளை தானாகவே, விரும்பி செய்யும் என்பது உண்மை. அதுபோலவே, தன்னை அனாதையாக கருதியவனும், இந்த சமூகத்திற்கு உதவவேண்டிய வகையிலும் இருப்பான். இந்நிலையில், ஒரு மனிதனின் வாழ்வு அமைந்துவிடுகிறது. எனக்கு யாரும் தேவையில்லை. எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நானும் யாருக்கும் உதவ தயாரில்லை. என்பதாக தனக்குள்ளாக வட்டம் போட்டுக்கொண்டு வாழ்வது, பொருத்தமற்றது ஆகும். அது மனித பிறவிக்கே இழுக்கு என்று கருதலாம். அதுபோல, அப்படி வாழ்வது, இயற்கைக்கும் விரோதமானது. மனிதன் என்பவன், இதமான மனதைக் கொண்டவன், மன+இதன் என்பதுதான், மனிதன் என்றாகிவிட்டது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். 

இப்போதுள்ள வாழ்க்கைமுறை, ஒரு தனி மனிதனை, எல்லாவகையிலும், இந்த உலகம் பிணைத்திருக்கிறது. அதாவது விட்டு விலகிடாத அளவுக்கு இணைத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதை உலகம் சுருங்கி விட்டது என்று, சமூக ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். மேலும் கைபேசி என்ற, தகவல் தொடர்பு சாதனம், உலகவே ஒரு சமூகம் என்ற மாயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த மாயம், சிலவேளைகளில் நிஜமாகவும் வந்து நிற்கிறது. இது விஞ்ஞானத்தின் கட்டாயமும், வளர்ச்சியும் என்பதாகவே அமைந்துவிட்டது. இதிலிருந்து, சராசரி மனிதனும் தப்பிக்கமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுது, இந்த உலகம், ஒன்றாக, ஒரே சமுகம் என்ற நிலைபாடுக்கு வந்துவிட்டதை, நாம் நம்பித்தான் ஆகவேண்டும். என்றாலும் கூட, எங்கோ ஏற்படும் மாற்றம், உடனடியாக, நமக்கும் நேர்ந்துவிடுவதையும், அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், தடுமாற்றமே ஏற்படுகிறது. ஏனென்றால், மனிதன், தன்னையும், சமூகத்தையும் பார்க்கிற பார்வை, நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஏற்பான ஒன்று, எல்லோருக்கும் ஏற்பாக இருப்பதும் இல்லை. ஆனால், திடீரென்று, அவருக்கு நிகழ்ந்தது, எனக்கும் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிவிடுவதை காணலாம். நாமும் கூட சில நேரங்களில், சில நிகழ்வுகளில் அப்படி நினைப்பதுண்டு, விரும்புவதும் உண்டு.

இந்த நிலைகளை எல்லாமே, வாழ்ந்து அனுபவம் கண்ட முன்னோர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவ ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மக்களின் வாழ்வியலுக்கு, ஒரு நடைமுறை அமைத்து தந்திருக்கிறார்கள். அதனோடு, தன்னையும், மெய்ப்பொருளையும் உணர்ந்த ஞானிகள், ஒரு தனிமனிதனை, இப்படி வாழ்க என்று அறிவுறுத்துகிறார்கள். அதையே இயற்கைக்கும், தனக்கும், குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வாக கருதுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியும், ‘தனிமனிதனின் அமைதியே, உலக அமைதிக்கு வழியாகும் ’ என்று சொல்லுகிறார்.

இந்நிலையில், ஒரு மனிதன் எப்படி வாழலாம்? எப்படி வாழவேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பாகும். இதை யாரிடமாவது கேட்டால், என்ன பதில் சொல்லுவார்? நமக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய பதில், ‘நான் நன்றாக வாழவேண்டும். இன்பமாக வாழவேண்டும். நோய் நொடி இல்லாமல், எல்லாம் அனுபவத்தி வாழவேண்டும். நீண்ட ஆயுட்காலமும் வேண்டும், சுகபோகமாக, உலகில் மதிப்பாகவும் வாழவேண்டும்’ என்று தன்னலம் கருத்தாக சொல்லுவார். இந்த பதில் எபோதும் பொதுவானது. இன்னும் சிலர், ‘தானும் நன்றாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன்’ என்ற வார்த்தையை, இணைத்துக் கொள்வார்கள்.  கூடுதலாக‘நானும், என்குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்’என்று சொல்லுவார்கள்.

முரண்பாடானவர்கள் ‘மற்றவர்கள விட, நான் நன்றாக வாழவேண்டும்’ என்று சொல்வார்கள். அதையே வாழ்வில் கடைபிடிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனுடைய இந்த எண்ணங்கள்தான், அவனின் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறது. ஒரு குறிபிட்ட வட்டத்திற்குள் நீங்கள், ‘சுயநலமாக, எனக்கு மட்டும்’ என்று எதையாவது நினைத்தால், அது உங்கள் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுகிறது என்பது உறுதி. அது இயற்கையின், நீதிக்கு எதிரானது என்பதை மறவாதீர்கள். ஒரு சுவறில் எறிந்த பந்து, திரும்ப உங்களிடமே வருவதுபோல, உங்களை தாக்கும். இதை பெரும்பாலோர் தன் வாழ்நாளிலேயே, உணர்ந்திருப்பார்கள்.

ஒரு மனிதன், எப்படி வாழவேண்டும் என்பதையே, இன்றைய யோககல்வி முறைகள் போதிக்கின்றன. இதை பக்திவழியிலான கதைகள், ஓர் அளவில் தடுமாறுகின்றன. காரணம் என்னவென்றால், அக்கால மனிதர்களின், அறிவுநிலை, வாழ்க்கைமுறை, செயல்பாடுகள், தகவல் தொடர்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நிலையில் இருந்தது. இன்றோ உலக மக்கள் அனைவருமே, தன் அறிவிலும், வாழ்விலும் மிக உயர்ந்திருக்கிறார்கள். பக்தி என்ன உண்டோ, அதில் அடிப்படை மாறாமல், எடுத்துக்கொண்டு, கூடுதலாக யோகம் என்ற மெய்ப்பொருளும், இயற்கையோடு தன்னையும் அறியும் பயிற்சி (Upgrade of the human enlightenment) தேவைப்படுகிறது.  இதை அறிவறிந்தோர் உணர்வார்கள். அவர்கள் தன் வாழ்விலும் அதை கடைபிடிக்கிறார்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறார். உங்களுக்குள்ளாகவும், ‘நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’என்ற இந்த கேள்விக்கு, ஆராய்ச்சியை தொடங்குங்கள், உண்மை அறியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

What is the old method to fix the meditation energy stagnation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவம் அந்தக்காலத்தில் இல்லை என்றால், வேறெப்படி சமாளித்தார்கள்?


பதில்:

உண்மைதான். வேதாத்திரி மகரிஷியின் காலத்திற்கு முன்பே, சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம், யாரோலோ எங்கேயோ உருவாக்கம் பெற்று உலகில் நடைமுறையில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பரலாக்கப்படவில்லை. இதனால், வழக்கமான, கடினமான, பிரச்சனைகள் மிகுந்த தவமுறைகள்தான் அங்காங்கே செயல்முறையில் இருந்தன. அதனால், தவம் இயற்றிடும் யோகியர்கள் பலவழிகளில் துன்பமே அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்தை நமக்கு வழங்கிய வேதாத்திரி மகரிஷி அவர்களுமே, தன்னுடைய தவ ஆற்றலின் தேக்கத்தால் அவதியுற்றார் என்று நீங்கள் அறிவீர்களா? அந்த தவ ஆற்றலின் தேக்கப்பிரச்சனைகள் குறித்து அவரே அனுபவமும் பெற்றிருக்கிறார். அதை தன்னுடைய உரைகளிலும், என் வாழ்க்கை கதை நூலிலும், ஞானக்களஞ்சிய கவிகளிலும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்கள் அந்த பிரச்சனைகளுக்கு வழிதெரியாமல் திண்டாடி, பிறகுதான் அதை வழிப்படுத்திக்கொள்ள அவருக்கு வழிபிறந்தது. அது எப்படி? எங்கு என்பதை, நம் ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் பதிவாக தந்திருக்கிறேன். நீங்கள் என்னுடைய குரல்வழியாக உண்மையை அறிந்துகொள்ளலாம்.

-

இதோ அதற்கான சுட்டி(Link): https://youtu.be/hvSv2YuMhyg?feature=shared

-

வாழ்க வளமுடன்.
-

உலகம் பார்ப்பதற்கு முன்பாகமவே, உங்களுக்கு மட்டுமே முதலில் காணக் கிடைக்கும் பதிவுகள் பெறலாம், . உறுப்பினராக இணைந்துகொள்க.

Join this Channel - Only you can get posts that are available to see first, before the world sees it. 

https://www.youtube.com/channel/UCKov60ULoBQ76KIiUXhLL-A/join

-


Please let me know the rules for a Yogam who one follows!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?


பதில்: 

நிச்சயமாக இருக்கிறது. ஆனால் இப்போது நம்மிடையே இருக்கும் அறிவிலிகள் சொல்லுவது போன்ற சட்ட திட்டங்கள், வரைமுறைகள் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் இணைவதற்கே பல ஆண்டுக்காலம் ஆகும் என்பது நடைமுறையில் இருந்தது. அதுவும் குருவின் ஆசி என்ற கடைக்கண் பார்வையும் வேண்டும் என்பார்கள். பிறந்தபொழுதே யோகத்தில் சிறக்க அமைப்பு இருந்தாலும்கூட உடனடியாக இணைய வாய்ப்பில்லை. 

காலமாற்றத்தில், அஷ்டாங்க யோக சூத்திரத்தை, பதஞ்சலி முனிவர் வகுத்துவைத்தார். ஒரு குருவை அணுகி யோகத்தில் இணைந்து உயர்வது போலவே, தானக்குதானாகவும் இந்த அஷ்டாங்க யோக சூத்திரத்தை கடைபிடித்தால், யோகத்தில் உயரலாம் என்பது உண்மையாகிற்று. எனினும் கூட, தீட்சை என்ற குண்டலினி உயர்த்துதல் என்பதை, யாருமே தானாக கற்றிட முடியாது. அப்படி தானாக கற்றிட பல முறைகள் உண்டு என்றாலும் கூட, உயர்ந்த குண்டலினி பலவித உடல், மன, உயிர், வாழ்க்கை பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தவிர்க்கமுடியாதது. இதனால் நிச்சயமாக குரு வேண்டும்.

இந்த பதஞ்சலி முனிவரின், அஷ்டாங்க யோக சூத்திரத்தை கவனித்தால், அதில் அடிப்படையான சில பாடங்களும் வழிமுறைகளும் இருப்பதை காணலாம். இயமம் என்ற தன்னை திருத்திக் கொள்ளும் சட்டமும், நியமம் என்ற யோகத்திற்காக தான் ஏற்றுக்கொள்ளும் சட்டமும் கடைபிடிப்பது அவசியமாகிறது. அதற்கான பிறகுதான் ஆசனம் என்ற உடற்பயிற்சியை கற்று உடலை, மனதை வளமும், திடமும் செய்துகொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது.

இதை நீங்கள் கவனித்தால், இயமம், நியமம் இந்த இரண்டிலேயே முழுமையாக, அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு யோகி, யோகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டு, அதன்படி வாழவும் தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறார். அப்படியான நிலை இருக்கும் பொழுது, பொதுவாழ்வில் இருக்கின்ற அறிவிலிகள் அப்படி, இப்படி என்று இல்லாத சட்டங்களை சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்னென்ன என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இங்கே அதைச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே யோகத்தில் ஒருவர் இணைந்துவிட்டால் அதற்கான சட்டம் இருக்கிறது. இதுவழிவழியாக தொடரப்பட்டும் வருகிறது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்.

What is the part of yoga in earing money for life? is it there or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு  என்ன? அப்படி உள்ளதா இல்லையா?


பதில்:

உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!

பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!

இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!

யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

வாழ்க வளமுடன்.

-

I want to attain mukti through bhakti marga. Is that wrong?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழியாக இறையிடம் முக்தி அடைவதையே நான் விரும்புகிறேன். அது தவறா?


பதில்:

உலகில் பிறப்பெடுத்த மனிதனின் நோக்கமே, இறையுணர்வு பெற்று முக்தி என்ற வீடுபேறு நிலை அடைவதே ஆகும்! எனவே உங்கள் நோக்கம், விருப்பம் தவறில்லை. என்றாலும் அங்கே இறை என்ற உண்மையை அறிந்து உணர்ந்து கொள்வதில் தடை இருக்கிறதே? அதற்காக மறுபடி பிறந்திடமுடியுமா என்ன? அதையும் வாழும் நாளிலேயே, இந்தப்பிறவியிலேயே முடித்துக்கொண்டால் நல்லது தானே?!

இந்த வீடுபேறு என்பது சித்தர்களின் வழியாகும். அத்தகைய வீடுபேறு, யோகத்தின் வழியாக தவமும் அறமும் கொண்ட வாழ்வில் கிடைக்கும் என்பதே உறுதியானது. முக்தி, மோட்சம் என்று சொல்லப்படுவதெல்லாம், வேதாந்தத்தின் அடிப்படையிலும், பக்தி வழியிலும் அறியப்படுவதாகும். என்றாலும் வேதாந்தம் மற்றும் பக்தி இரண்டுமே, உங்களை இறைக்கு மிக அருகில் கொண்டு செல்லுகிறது என்றுதான் குறிப்பிடப்படுகிறது. முழுவதுமாக மெய்பொருளான இறையை உணர்ந்து அறிந்துகொள்வதற்கு, யோகம் தான் உதவுகிறது என்பதையும் இங்கே தெளிவு செய்ய வேண்டியதாக உள்ளது.

உங்களுக்கு பக்தி வழிதான் சிறப்பு என்று உணர்ந்தால், தாராளமாக அதை தொடரலாம். யாரும் தடை சொல்லப்போவதில்லை. இங்கே கூட உங்களுக்கு விளக்கம்தான் சொல்லப்படுகிறதே தவிர குறையோ, தடையோ ஏதும் சொல்லுவதற்கில்லை. மேலும் மனித மனம், பல தலைமுறைகளாக பக்திவழியில் ஆழ்ந்துவிட்டது. முக்கியமாக, பக்தியில் சொல்லப்பட்ட உண்மைகள் எல்லாமே, திரிந்து விலகிவிட்டது. வெறும் கதைகளும், சடங்குகளும் அருகிவிட்டன. பக்தியில் எழும் சந்தேகங்களை தீர்க்கவும் ஆட்களில்லை. ஏதேனும் கேட்டாலும், வழிபாடு செய்க சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வார்த்தைகள்தான் கிடைக்கின்றன என்பது உண்மைதானே?! இந்த பக்தி வழிபாடுகளிலும், சடங்குகளிலும், நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் சில ஏமாற்றங்களை கண்டவர்கள் ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் அளவிற்கும் போய்விட்டனர். 

மேலும் மனிதமனம், கடந்து உள்ளே செல்வதற்கு பதிலாக கடவுளை பல்வேறு உருவநிலைகளாக உருவகம் கொண்டு பதிந்து கொண்டுவிட்டது. அவ்வளவையும் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் மனதிற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் உங்கள் பக்தி வழியாக இறையிடம் முக்தி அடைவதை தொடருங்கள். அதோடு எது உண்மை இறை என்பதையும் ஆராயுங்கள்!

வாழ்க வளமுடன்.

Why we need to worship ancestors and is it a nonsense?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

Rameshwaram, Tamilnadu, India / image by Dinamalar


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முன்னோர்களை நினைப்பதும், அவர்களை  வணங்குவதும், வேண்டிக்கொள்வதும், இறந்துபோன அவர்கள் நற்கதி அடையவும் வேண்டிக்கொள்வது அவசியம் தானா? நவீன அறிவியல் உலகில் வாழும் நமக்கு, அது ஒரு முட்டாள்தனம் இல்லையா?


பதில்:

மனித வாழ்வு குறித்து, எந்த சிந்தனையும் அக்கறையும், ஆராய்ச்சியும் இல்லாத நிலையில் வாழக்கூடிய மனிதனுக்கு தோன்றக்கூடிய கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மனிதன், இயற்கையின் முழுமையாக, பரிணாமத்தின் வழியாக வந்தவன். திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரோ தீடீரென்று உருவாக்கி உலவ விடவும் இல்லை. ஏதுமற்ற ஒன்றாக இருந்து, கருவாகி, பெண்ணுக்குள், கருப்பையில் உருவாகி, வளர்ந்து, முழுமைபெற்று, அவள் பிரசவித்து, வளர்த்து ஆளாக்கி, மூன்று வயதிற்கு பிறகுதான், தான் யார்? என்ற நிலைக்கே ஒரு குழந்தை நிலைத்து வருகிறது. அதன்பிறகு, நான் என்ற தன்முனைப்பில் ஊறித்திழைக்கிறது.

அந்த குழந்தைக்கு, இதற்கு முன் எங்கிந்தோம் என்று நினைவில் இல்லை. அக்குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, உலக இன்பங்களெல்லாம் அனுபவித்து, வயோதிகமடைந்து இறந்தும் போகிறது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. அதை பிறருக்கு சொல்லவும் வழியில்லை. வாழும் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் தெரிந்து கொள்வதில்லை. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறக்கிறோம் என்று மூன்றே நிலைபாடுகளில் தன் வாழ்வை சுருக்கிக்கொள்கிறோம். உண்மைதானே?

ஆனால், உண்மை அப்படியில்லையே! மனிதன் ‘நான் யார்?’ என்று கேட்டு விடையறியும் வரை அவனுக்கு/ அவளுக்கு பிறவிப்பயணம் தொடரும். தன்னையறிதலும், அதன் வழியாக தனக்கு மூலமான இறையாற்றலை உணர்வதும் கடமையாகிவிடுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானம் இதை ஏற்பதில்லை.

உண்மையாக, நவீன விஞ்ஞானம், தன்னையறிந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாக்கித்தந்த பாதைக்கு எதிர் திசையில் அழைத்துச்செல்கிறது என்று சொல்லலாமா என்றால், அதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் உண்மை நோக்கித்தான் செல்கிறது என்பது உண்மை, அந்த உண்மை எது என்பதை, தெரிந்துகொள்ளும் அதற்கு நிறைய இழப்பும், காலமும் ஆகலாம். அதுவரை இப்படியான கேள்விகள் வரும்.

நம் முன்னோர்கள் இன்றி நாம் இல்லை. இறந்துபோனவர்கள் குறித்த அக்கறையும், கவலையும் நமக்கு இல்லை எனினும், அவர்களின் நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் என்பது உண்மைதானே? அதுபோல அவர்களின் இனமறியாத ஏதோ நம்மிடம் தங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கலாமே? அதை ‘கர்மா என்ற வினைப்பதிவு’ என்று மனிதனின் வாழ்வை, முழுமையை நோக்கி திருப்பிட ஆர்வம் கொண்ட ஞானிகள் சொல்லுகிறார்கள். அதை தீர்க்கவும், போக்கிடவும் நமக்கு வாய்ப்பு உள்ளது. நாம் அதை தீர்க்காவிட்டால், நம் வழியாக, நம்முடைய குழந்தைக்கும் அது கடத்தப்படும் என்பது இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

அதனால்தான், முன்னோர்களை நினைப்பதும், அவர்களை வணங்குவதும், அவர்கள் நற்கதி அடைய வேண்டுவதும் தேவை என்ற கருத்தியல் உருவானது. ஒருவகையில் யோகத்தில் இணைய ஆர்வமில்லாதவர்களுக்கு உதவும் என்பதே உண்மை. எனினும் இது முட்டாள்தனம் என்று நினைத்தால், அது அவரவர் விருப்பமே. ஏனென்றால் வாழும் வாழ்க்கை என்பது அவரவர் உரிமை.

வாழ்க வளமுடன். 

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.