CJ for You: mind images

mind images

Showing posts with label mind images. Show all posts
Showing posts with label mind images. Show all posts

Thoughts are always running through me. I couldn't control it. Is this good? Bad?


ஐயா, எப்போதும் எனக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது நல்லதா? கெட்டதா? எப்படி இதை சரிசெய்து கொள்வது?


எண்ணம் என்பது இயற்கையானது. இயல்பானது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால் உயிர்ப்பானது. ஆம். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற கருத்தே அதில் பொதிந்து இருக்கிறது. அதனால்தான், தடையில்லா நீரூற்றுபோல, அலை அலையாக எழும் கடல்போல, எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாகவே, அது அதன் இயல்பில் தானாகவும் வரும். நீங்கள் உணரும், பார்க்கும், கேட்கும் நிகழ்ச்சிகள் வழியாகவும் வரும். மற்றவர்கள் தூண்டுதலாலும் வரும். நீங்களாகவே எதேனும் நினைத்தாலும் வரும்.

எண்ணம் என்பது, நம் மனதோடும், மூளையோடும் தொடர்பு ஏற்படுத்தி, காட்சியாக தருவது மட்டுமில்லாமல், உங்களுக்கு செயல் ஊக்கத்தையும் தந்துவிடும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, நாம் இயல்பாக வாழவும் முடியும். இல்லையேல், நொடிக்கு நொடி நம்முடைய செயல்களில், நடவடிக்கைகளில் பதட்டமும், தடுமாற்றமும் வந்துவிடும். சிலர், ‘தனக்குள்ளாக, யாரோ இருந்து கட்டளை இடுகிறார்கள்’ என்று கூட சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு எண்ணம் ஆட்சி செய்யக்கூடியதுதான்.

இந்த எண்ணம், அதன் செயலாக்கம், அதனுடைய மூலம், எந்த நவீன விஞ்ஞானத்தாலும், விஞ்ஞான கருவிகளாலும் விளக்கமாக அறியமுடியவில்லை. ஆனால் அதன் செயல் அளவைகளை, அளக்கின்ற கருவிகள் இருக்கின்றன. ஒரு மனிதன் தனக்குள்ளாக, எண்ணங்களின் அதிர்வோடு இருக்கிறானா? அமைதியாக இருக்கிறானா? என்று மன அலைச்சுழல் கருவி வழியாக அறியமுடியும். எனினும் கூட, ஆல்ஃபா, தீட்டா என்ற நிலை மட்டுமே அறியமுடியும் என்று சொல்லுகிறார்கள். டெல்டா என்ற நிலையை அறிய முடியவில்லை. ஏனென்றால் அது ஒன்றும் அற்றதாக, ஜீரோவும் அதற்கு கீழேயும் என்று முடிவு செய்கிறது. ஆனால் யோகத்தின் வழியாக, தவம் கற்ற ஒருவர், அந்த டெல்டா அலையிலும் நிலைக்க முடியும், உணரவும் முடியும். அதுவேதான் மெய்ப்பொருள் உண்மையையும் அறியும் நிலையாகும்.

எனவே, எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன என்றால், அது அதனுடைய இயல்பு. அதை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் ஒழுங்கு செய்யலாம். நாம் விழிப்பாக, அதை கவனிக்கும் பொழுது, இது தேவை, தேவையில்லை, இது நல்லது, இது வேண்டாம் என்று முடிவு செய்யவும் முடியும். எண்ணமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக திகழ்வதை நாம் மறக்கக்கூடாது. எண்ணம் எழுமிடமோ, உள்ளம் எனும் சிறு புள்ளி, விரிந்திடும் இடமோ, அகண்டாகாரம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். அதன் பெருமை உணர்ந்து, நல்ல எண்ணங்களை நமக்குள் விதைக்கவும் வேண்டும். அவற்றையே அறுவடை செய்யவும் வேண்டும்.

இந்த காணொளி உங்களுக்கு மேலும் சில விளக்கங்களை தரலாம்.

வாழ்க வளமுடன்.


Why does this mind make me suffer this? How to calm it down?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த மனம் ஏன் என்னை இந்த படாதபாடுபடுத்துகிறது? அதை எப்படி அமைதிபடுத்துவது?


பதில்:

மிக நல்லதுதான், ஒருவகையில் மனம் என்பதை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே?! சரி இந்த மனம் என்பது என்ன? நாம் வேறு மனம் வேறா? என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருமே அப்படித்தான் சொல்லி, விளக்கமும் கொடுத்து, அதை அடக்கு, விலக்கு, ஆளுமை செய் என்றெல்லாம் அறிவுரை சொல்லுகிறார்கள். ஆனால் முடிகிறதா?

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனிதனும், மனமும் ஒன்றே என்று சொல்லுகிறார். எப்படி? மனம் இதனானவன் மனிதன். மனதையும், மனிதனையும் பிரித்திட முடியாது என்கிறார். ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் அனுபவங்களைக் கொண்டும், பிறர் நமக்கு தருகின்ற, தகவல்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞான முடிவுகள் கொண்டும் அப்படி பிரித்து நினைத்துக் கொண்டு, புதிய ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கிறோம். மனம் நம்மோடு பிறந்தது, நம்மோடு பிரிவது, நம்மோடு வாழ்வதும் கூட. எனவே மனதை அடக்க நினைக்காது, அறியவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.

மனம், நம்முடைய உடலெங்கும் ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய, உயிராற்றலின் படர்க்கை ஆற்றல் என்ற உண்மையையும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மனம் என்பது அலை இயக்கமும் கூட. இதை தற்கால விஞ்ஞானிகள் பதிவு செய்தும் காட்டுகிறார்கள். மேலும் மனம் என்பதை, மூளையின் அலை இயக்க செயல்பாடு என்றும் விளக்கம் தருகிறார்கள். அதுஒருபக்கம் இருக்கட்டும். நீங்களும், மனமும் ஒன்றே என்பதை முதலில் புரிந்துகொள்க.

இங்கே ஏன் படாதபாடுபடுத்துகிறது என்று கேட்டீர்கள் அல்லவா? அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. தனக்குள்ளாக ஏற்கனவே பதிவாக வைத்திருக்கும், கர்மா என்ற வினைப்பதிவுகளின் தாக்கமே ஆகும். அது அவ்வப்பொழுது நம்முடைய எண்ணம், சொல்,செயலால் வெளிவருகிறது. சூழ்நிலை தாக்கம் இருந்தால், தானாகவும் வெளிவரும். அது எப்படி நமக்குள் இருக்கிறது என்றால், வழிவழியாக, பரம்பரையாக, நம் முன்னோர்கள் வழியாக, நம் பெற்றோருக்கு வந்து, பெற்றோரிடம் இருந்து நமக்கும் வந்துவிட்டது. இதை நாம் புரிந்து சரிசெய்துகொள்ளவும், தீர்க்கவும் வேண்டும். இல்லையேல் இது, நம் வழியாக, நம்முடைய குழந்தைகளுக்கும் தொடரும். இதுதான் இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

மனதை அமைதிப்படுத்த, அந்த மனதையே ஆராயவேண்டும், அந்த ஆராய்ச்சியில் இறங்கிட யோகத்திற்கு வரவேண்டும். தகுந்த குருவால், அவரின் வழிகாட்டலுடன் நாம் அமைதியும், முழுமையும் அடையலாம். வாழ்நாளை மகிழ்ச்சிக்குறியதாக மாற்றலாம்! அந்த மாற்றத்தை பெற உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.