CJ for You: mind waves

mind waves

Showing posts with label mind waves. Show all posts
Showing posts with label mind waves. Show all posts

Why does the mind often confuse me. No matter what you do, the mind refuses to budge. Shall we leave it as it is and go back to normal? Is it possible to separate the mind?


என்னுடைய மனம் ஏன் என்னை அடிக்கடி குழப்புகிறது. என்ன செய்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, வழக்கமான செயலை செய்து கொள்ளலாமா? மனதை பிரித்து வாழ முடியுமா? மனம் என்பதை ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை? 


மனமும் மனிதனும் இணைபிரியாத கூட்டணி ஆகும். எந்த வகையிலும் பிரிக்கமுடியாது. விலகி நிற்கவும் முடியாது. ஏதோ ஒரு சில நொடி மனம் இல்லாதது போலவும், பிரிந்து நிற்பது போலவும் தோன்றலாம். ஆனால் அது மாயை. மனதை விட்டு விலகி நின்று வாழ முயற்சிப்பது என்ற செயல் கேலியானது. மனம் இன்றி மனிதனே இல்லை என்ற நிலையில், இது எப்படி நிகழும்? விலகினாலும் அது உங்களோடுதான் இருக்கும். மனம் இல்லை என்றால், அவன் ஒரு ஜடப்பொருளாகி விடுவான். அதாவது உயிரற்ற தன்மைக்கு போய்விடுவான் என்பதுதான் உண்மை.

இங்கே, நான் மனதை வென்றுவிட்டேன். மனதை தள்ளி வைத்துவிட்டேன், என் வழக்கமான வேலைகளை உற்சாகமாக கவனிக்கிறேன். எனக்கு எந்த தடையும் இல்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கென்று பயிற்சிகளும்கூட கிடைக்கிறது. நல்லதுதான். அப்படியான மாற்றம் பெற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், அந்த நிலையில் அவர்கள், எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் அதே நிலைமையில் தொடர்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி மனதை தள்ளி வைத்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. உண்மையாக இது மிகப்பெரிய ஏமாற்றுவித்தை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எனினும், ஏதேனும் ஒருவகையில் மனம் குறித்த விளக்கம், உங்களுக்கு கிடைத்தால் சரிதான். நல்லதும் கெட்டதும் அனுபவபட்டால்தானே தெரியும்? அதனால் நான் வரவேற்கிறேன்.

மனதை புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு, அதன் இயக்கத்தோடு கலந்து, அதன் உண்மையை, அந்த மனதிற்கே புரியவைத்துவிட்டால் மட்டுமே, அது தானாக தன்னை முழுமை செய்துகொள்ளும். அப்போது அது உங்களோடு கைகோர்க்கும். இதற்கு தியானம் என்ற தவம், அகத்தாய்வு எனும் தற்சோதனை மிக முக்கியமாகும். 

மேலும் மனம் குறித்த உண்மைகள் அறிய, இந்த காணொளி உதவிடும்.


மனம் என்பது உங்களுக்கு இத்தனை அவசியமா? உண்மை விளக்கம் - Importance of the Mind

வாழ்க வளமுடன்.

-

Can we understand the someone's mind after experienced in Meditation?


தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?

பதில்:

மிகுந்த ஆராய்ச்சி மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாம் இந்த உலகில் பிறந்தபொழுது நமக்கு மனம் இல்லை. ஏன் இல்லை? என்றால், மனம் என்பது அப்பொழுதுமுதல் கட்டப்பட்டு வருகிறது என்று அர்த்தமாகிறது. ஏனென்றால் மனம் என்பது பொருள் வடிவம் கொண்டதல்ல. அது அலைவடிவானது. அந்த அலைகள் மனமாக ஒரு மாற்றத்தை அமைத்துக்கொள்வதற்கு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் தெளிவுபடுத்துகிறார்.
ஒரு மனிதருடைய, குழந்தைப்பருவமான அந்த மூன்று வயது முதல், அவனுடைய / அவளுடைய வாழும் காலம்வரை மனம் என்பது இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒருபோதும் அது இல்லாமல் போவதில்லை. தூக்கத்தில் கொஞ்சம் அமைதி அடைகிறது. கண்விழித்த உடனே மறுபடி எப்போதும்போலவே இயங்கவும் ஆரம்பிக்கிறது. இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. மனம் என்பது தனியாக இல்லை. மனம்தான் மனிதன், மனிதன் தான் மனம் என்றும் சொல்லலாம். மனம்+இதன்=மனிதன் என்றுதான் நாம் அறிகிறோம்.

அப்படியான அந்த மனம், மூன்று வயதில் வளர்ச்சி அடைந்தபிறகு, புத்தம் புதிதாக இருக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுமானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  வளர்ச்சி அடைந்த மனம், நமக்குள்ளாக கருமையத்தில் இருக்கிற பதிவுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவுகள் நம்முடைய, பரம்பரை வழியாக, வித்து மூலமாக, எங்கும் தடையில்லாமல் வந்துகொண்டே இருக்கிறது. உங்கள் மூலமாக, உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துக்கொண்டு போகும் என்பது உறுதியானது. இவ்வளவு ரகசியங்கள், உங்களுக்குள்ளாகவே, உங்கள் மனதிற்குள்ளாகவே இருக்கும் பொழுது, அதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், அடுத்தவருடைய மனதை அறிந்து கொள்ள விரும்புவது நியாயமா? சிந்தித்துப்பாருங்கள்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்’ (குறள் 706)

என்ற ஆசான் திருவள்ளுவரின் திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?

இந்தக்குறள் சொல்லும் வழியாக, அடுத்தவருடைய முகத்தைப்பார்த்தாலே, அவருடைய மனம் எப்படிப்பட்டது? அவருடைய மனதிற்குள்ளாக என்ன இருக்கிறது? என்பதை நாம் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியும். அப்படியிருக்கும்பொழுது, தியானத்தில் ஆழ்ந்து, பலகாலம் முயன்று அதன் வழியாக பிறருடைய மனதை அறிய முயற்சிப்பது வேண்டாத வேலைதானே?!

தன்னையறிந்த, மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், யோகிகளும் கூட பிறருடைய மனதை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டதில்லை. அது மிகப்பெரிய சுமையாகிவிடும். உங்களுடைய கர்மா என்ற வினைப்பதிவே கட்டுக்கடங்காமல் இருக்கும் பொழுது, மற்றவர்களுடை கர்மா என்ற வினைப்பதிவையும் நீங்களே பகிர்ந்துகொள்ள நினைக்கிறீர்களா? அது அவசியம்தானா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
-

Why I can't understand my mind itself? Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனதை என்னாலேயே ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? உதவுங்கள்!


பதில்:

உங்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை விடவும், இதுவரையில் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். உதராணமாக சொல்லுவதென்றால், ஒரு இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். அது புத்தம் புதிது. அதற்கென்று ஒரு அமைப்பு, இயக்கம், வேகம் உண்டு. அது அந்த தயாரிப்பு நிறுவனமே தெளிவுபடுத்திவிடும். அதற்கென்று தனி கையேடு நூலும் தந்து விளக்கம் தந்துவிடும். ஆனால் நாம் படிக்கிறோமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. நான் காசு கொடுத்து வாங்கிய வாகனம், என்சொல்படிதான் கேட்க வேண்டும் என்பது சரியாகுமா? அந்த வாகனத்துக்குத் தகுந்தபடி நாம் கற்று நம்மை மாற்றிக்கொள்ளுதல் சரியாகுமா?

உங்கள் மனம் உங்களுடையதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை எப்படி இதுநாள் வரை பயன்படுத்தி வந்தீர்கள் என்பதுதான் சந்தேகமும் பிரச்சனையும். ஆனால் அற்புதமாக, வேதாத்திரிய யோகத்தில் இணைந்துவிட்டீர்கள் அல்லவா? அதுவே மிகப்பெரிய விளக்கம் தந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனவே கொஞ்சம் தாமதமாகவே மனதை புரிந்துகொள்ள முயற்சித்தாலும் கூட தவறில்லை. இதுவரை மனம் பலதரப்பட்ட கணக்கீடுகளை தன்வயப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் பல ஜென்ம வாசனையை மனம் புதைத்து வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவையும் உடனடியாக மாற்றவும், அவ்வளவு நுண்ணிய / பிரமாண்டமான மனதை புரிந்துகொள்வதும் உடனடியாக சாத்தியமானதா என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

எனவே, உங்கள் மனதை, உங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என்று வருந்தவேண்டாம். இனியாவது புரிந்துகொள்ள முயற்சிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள். மனதில் எழும் எண்ணங்களில் கவனமும், விழிப்பும் கொள்க. ஆக்கினை தவமும், துரிய தவமும் நன்கு தொடர்ந்து செய்துவருக. மேலும் அகத்தாய்வு எனும் தற்சோதனையை தினமும் ஒரு மணி நேரம் செய்துவாருங்கள்.  மூன்று மாதத்திற்குள்ளாக, நீங்கள் உங்கள் மனதை ஓரளவிற்காவது புரிந்துகொள்ளமுடியும். இன்றே பயிற்சியாக தொடங்கிவிடுங்களேன்!

வாழ்க வளமுடன்.

Why does this mind make me suffer this? How to calm it down?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த மனம் ஏன் என்னை இந்த படாதபாடுபடுத்துகிறது? அதை எப்படி அமைதிபடுத்துவது?


பதில்:

மிக நல்லதுதான், ஒருவகையில் மனம் என்பதை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே?! சரி இந்த மனம் என்பது என்ன? நாம் வேறு மனம் வேறா? என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருமே அப்படித்தான் சொல்லி, விளக்கமும் கொடுத்து, அதை அடக்கு, விலக்கு, ஆளுமை செய் என்றெல்லாம் அறிவுரை சொல்லுகிறார்கள். ஆனால் முடிகிறதா?

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனிதனும், மனமும் ஒன்றே என்று சொல்லுகிறார். எப்படி? மனம் இதனானவன் மனிதன். மனதையும், மனிதனையும் பிரித்திட முடியாது என்கிறார். ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் அனுபவங்களைக் கொண்டும், பிறர் நமக்கு தருகின்ற, தகவல்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞான முடிவுகள் கொண்டும் அப்படி பிரித்து நினைத்துக் கொண்டு, புதிய ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கிறோம். மனம் நம்மோடு பிறந்தது, நம்மோடு பிரிவது, நம்மோடு வாழ்வதும் கூட. எனவே மனதை அடக்க நினைக்காது, அறியவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.

மனம், நம்முடைய உடலெங்கும் ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய, உயிராற்றலின் படர்க்கை ஆற்றல் என்ற உண்மையையும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மனம் என்பது அலை இயக்கமும் கூட. இதை தற்கால விஞ்ஞானிகள் பதிவு செய்தும் காட்டுகிறார்கள். மேலும் மனம் என்பதை, மூளையின் அலை இயக்க செயல்பாடு என்றும் விளக்கம் தருகிறார்கள். அதுஒருபக்கம் இருக்கட்டும். நீங்களும், மனமும் ஒன்றே என்பதை முதலில் புரிந்துகொள்க.

இங்கே ஏன் படாதபாடுபடுத்துகிறது என்று கேட்டீர்கள் அல்லவா? அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. தனக்குள்ளாக ஏற்கனவே பதிவாக வைத்திருக்கும், கர்மா என்ற வினைப்பதிவுகளின் தாக்கமே ஆகும். அது அவ்வப்பொழுது நம்முடைய எண்ணம், சொல்,செயலால் வெளிவருகிறது. சூழ்நிலை தாக்கம் இருந்தால், தானாகவும் வெளிவரும். அது எப்படி நமக்குள் இருக்கிறது என்றால், வழிவழியாக, பரம்பரையாக, நம் முன்னோர்கள் வழியாக, நம் பெற்றோருக்கு வந்து, பெற்றோரிடம் இருந்து நமக்கும் வந்துவிட்டது. இதை நாம் புரிந்து சரிசெய்துகொள்ளவும், தீர்க்கவும் வேண்டும். இல்லையேல் இது, நம் வழியாக, நம்முடைய குழந்தைகளுக்கும் தொடரும். இதுதான் இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

மனதை அமைதிப்படுத்த, அந்த மனதையே ஆராயவேண்டும், அந்த ஆராய்ச்சியில் இறங்கிட யோகத்திற்கு வரவேண்டும். தகுந்த குருவால், அவரின் வழிகாட்டலுடன் நாம் அமைதியும், முழுமையும் அடையலாம். வாழ்நாளை மகிழ்ச்சிக்குறியதாக மாற்றலாம்! அந்த மாற்றத்தை பெற உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.