CJ for You: shanti thavam

shanti thavam

Showing posts with label shanti thavam. Show all posts
Showing posts with label shanti thavam. Show all posts

I have been without sleep for many days or it's not enough. Will penance help in this?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பல நாட்களாக தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். தூங்கினாலும் அது போதுமானதாக இல்லை. இதற்கு தவம் உதவுமா?


பதில்:

உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் தூக்கத்தைக் கெடுக்கும் எந்த வேலையையும், செயலையும் செய்யக்கூடாது, முடிந்தளவு தவிர்க்கவேண்டும். தற்போதைய காலத்தில், கைபேசி பயன்பாடு தவிர்க்கமுடியாது எனினும், இரவில் அதை பார்க்கமாட்டேன் என்று உறுதி செய்து கொள்க. யாரேனும் அழைத்தால் பேசலாமே தவிர, அதில் தேவையில்லாத கவனம் செலுத்தக்கூடாது. இரவில் தொலைகாட்சி, சினிமா பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். 

முக்கியமாக இரவு உணவு வயிற்றுக்கு எந்த கெடுதியும் செய்யாததாக அமைத்துக்கொள்ள வேண்டும். இன்றோ பலருக்கு, பலவித மாசாலாக்கள் கலந்த, அசைவ உணவுகள்தான் இரவு உணவாக உள்ளது. அதிலும் நேரடியாக வெளிநாட்டு தயாரிப்பு கொண்டதாகவும் இருக்கிறது. அவை நம் உடலுக்கு அதிக வெப்பத்தை தரக்கூடியவையாக இருக்கலாம். மேலும் இரவில் காஃபி, தேனீர், பால் அருந்துவது கூட தூக்கத்தை கெடுக்கும் என்பதை அறிந்துகொள்க.

ஒவ்வொருநாளும், இரவு பத்து மணிக்குள் படுக்கைக்குச் செல்லவும், தூங்கப் பழகவும் முயற்சிக்க வேண்டும். இதன் வழியாக, நீங்கள் என்னென்ன தவறுகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு, திருத்தம் கொள்ளவேண்டும்.

இரவில் உங்கள் படுக்கையறையில் அதிக வெளிச்சம் இல்லாததாகவும், அதிக சப்தம் இல்லாததாகவும் அமைத்துக் கொள்க. நல்ல காற்றோட்டம் வந்துபோவதாகவும் அமையவேண்டும். குளிரூட்டபட்ட வசதி இருந்தால் கூட அது சில நேரம் தூக்கத்தை கெடுக்கலாம். மேலும் படுக்கை அறையிலும், படுக்கையிலும் ஏதேனும் வேலை செய்வதை தவிருங்கள். இந்த அறையை நான் தூங்குவதற்காக மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதி கொள்க.

இதெல்லாம் செய்தும் தூக்கம் வரவில்லை என்றால், சாந்தி தவம் உதவிடும். மிக சுருக்கமாக, ஐந்து நிமிட சாந்தி தவம் கூட போதுமானதே. சாந்தி தவம் செய்தால், மனம் அமைதி அடைகிறது, உடல் சீராகி தளர்வை சரி செய்து கொள்கிறது. உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. முக்கியமாக, தூங்குவதற்கு முன்பாக, உங்கள் பரபரப்பை குறைத்து, சிந்தனைகளை முழுமை செய்து கொள்ள வேண்டும். இரவே நாளைய வேலைகள் குறித்து திட்டமோ, கவலைகளோ யோசிக்க கூடாது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு, தூங்கப்பழக  வேண்டும். நல்லதூக்கம் இருந்தால், காலையில் உற்சாகத்தோடு எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும்தானே?!

வாழ்க வளமுடன்.

How shanti meditation works? is it okay to store the kundalini there?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் மறுபடி கொண்டு செல்வது நல்லதா? அப்படியானால் சாந்தி தவம் எப்படி வேலைசெய்கிறது?


பதில்:

நல்ல புரிதலுக்கான கேள்வி இது. நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்டால் உங்களுக்கு, குருவால் தீட்சை தரப்படும். சில யோக அமைப்புக்களில் குண்டலினி தீட்சை என்பது பெயரளவில்தான் இருக்கிறது. நீங்களாகவே உயர்த்திக்கொள்ளவோ, தானாகவே எழும்படி செய்யவோதான் பயிற்சி தரப்படுகிறது. இதற்கு கொஞ்சம் காலமும், முயற்சியும் ஆகலாம். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், மனவளக்கலை மிக எளிமையான யோகமுறை ஆகும். உயர்ந்த குருவால், பயிற்சி பெற்ற ஆசிரியரால், தொட்டுத்தரும் தீட்சை மூலமாக, குண்டலினி சக்தி, ஆக்கினை சக்கர மையத்திற்கு உயர்த்தப்படுகிறது. உடனடியாக நாம் அதை உணர்ந்து, தவம் இயற்றவும் முடியும்.

ஆர்வமும், முயற்சியும், ஏற்கனவே பக்தியில் ஈடுபாடு உள்ளோர்க்கும், ஆக்கினையில் தவம் இயற்றிவர, மூன்று நாட்களுக்குள் நல்ல ஆற்றல் பெருகிவரக் காணலாம். ஆனாலும் ஒருவாரம் ஆக்கினையில் இருப்பது நல்லதே. தவ ஆற்றல் ஆக்கினையில் பெருகிவிட்டால், ஆரம்பகாலத்தில், அதாவது தவம் புதிதாக கற்றுக்கொண்ட நிலையில் உள்ளவர்களுக்கு, தலைவலி, தலைபாரம், உடல் சோர்வு வரும். இது இயல்பு. அந்தநிலையில், அவர்களுக்கு உண்டாகிய தவ ஆற்றலை, குறைக்கவேண்டும். அதற்காகவே, சாந்தி தவம் என்ற முறை இருக்கிறது. மிக நீண்டகாலமாக இத்தவம் இல்லை. ஆனால், சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, மகரிஷியின் காலத்தில், நடைமுறைக்கு வந்துவிட்டது.

சாந்தி தவம் என்பது, ஆக்கினையில் நின்றிருக்கும் குண்டலினி சக்தியை, மீண்டும் மூலாதார சக்கர மையத்திற்கு கொண்டு வருவதாகும். இது வாரம் ஒருநாளில், வெள்ளிக்கிழமையில் செய்வதுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இங்கேதான் உங்கள் சந்தேகம் எழுகிறது. எழுப்பிய, உயர்த்திய குண்டலினி சக்தியை, மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டுவந்தால் என்ன ஆகும்? 

அதீத தவ ஆற்றலை, சக்தியை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தன்மை அங்கேதான் கிடைக்கிறது. அதனால்தான் குண்டலினியின் இடத்தை மாற்றி அமைக்கிறோம். எனவே இது நல்லதுதான். மேலும் முக்கியமாக, ஒருவரது வாழ்வில், ஒருமுறை எழுப்பி, உயர்த்தப்பட்ட குண்டலினி மீண்டும் அடங்கிவிடாது. எப்போதும் தவம் பழகப்பழக, தானாக எழுந்து உயர்ந்து, தவ நிலைகளில் நம்மோடு, நம் விருப்பத்திற்கு துணை நிற்கும் என்பதே உண்மை ஆகும்.

வாழ்க வளமுடன்.

How to understand and perform the Shanti Thavam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி அந்த சாந்தி தவம் செய்வது? இதுவரை எனக்கு முழுமையாகவில்லை ஏன்?


பதில்:

சாந்தி தவம் என்பது அற்புதமான, சித்தர்களின் கொடை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார். தவத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல, உடல் அந்த தவ ஆற்றலை தாங்கமுடியாமல் பல்வேறு வேதனை வெளிப்படுத்தும். இதனால் உடல், மனம், உயிரும் பாதிப்படையும். இதை சீர் செய்து, திருத்தம் பெறுவதற்காக உண்டான தவமே, சாந்தி தவம். இதை இறங்குபடி தவம் என்றும் சொல்லுவார்கள்.

யோகத்தில் தவம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பக்தி வழியில் அதீதமாக இருப்போருக்கும் கூட இந்த சாந்தி தவம் உதவுகிறது என்பது உண்மை. அப்படி பக்தி வழியில், பாதிப்படைந்தோர்க்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இத்தவத்தை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார்.

யோகத்தில் உயர்வு மட்டும் இல்லை, அவ்வப்பொழுது அதீத தவ ஆற்றலை, உடல் ஏற்றுக்கொள்ளவும் பழக்கவேண்டும். குண்டலினி சக்தியை, ஆக்கினையில் இருந்து, மூலாதரம் கொண்டுவந்து நிறுத்துவதே சாந்தி தவம் ஆகும். ஆரம்ப தவசாதகர்கள், வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை கட்டாயமாக சாந்திதவம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த தவம் செய்வது மிக எளிதே, சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, முதுகுதண்டு நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். மூலாதாரம் என்ற சக்கரத்தை, ஆதாரத்தை மட்டும் நினைத்து தவம் இயற்ற வேண்டும். வேறு எந்த சக்கரத்தையும் நினைவில் கொண்டுவரக் கூடாது. மனம் அந்த மூலாதரம் என்ற இடத்தில் நிலைத்து நிற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். காலை 10 நிமிடம், மாலை 10 நிமிடம் செய்தால் போதுமானது.

வெள்ளிக்கிழமை பெரும்பாலும், எல்லா மனவளக்கலை அன்பர்களும் சாந்தி தவம் செய்வதால், நமக்கும் அத்தகைய நிலை கைவரப்பெறும். ஒரு நாள் உங்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தால், அதாவது தலைபாரம், உடல்வலி தொடர்ந்தால், மறுநாளும், சனிக்கிழமையும் கூட இந்த சாந்தி தவமே செய்துவரலாம், தவறொன்றும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Stay with alert in unavoidable circumstances near the dead bodies


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் ஒருவருடைய இறப்பு நிகழ்வில் ஒருநாள் முழுவதும் இருக்கவேண்டி இருந்தது, மறுநாள் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, தலைபாரம், உடல்வலி, காய்ச்சல் போல இருக்கிறது. இதை எப்படி சரி செய்யலாம்?


பதில்:

நீங்கள், மனவளக்கலையில் தவம் கற்ற அன்பர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் அங்கே உங்களுக்குச் சொல்லப்பட்ட வழிமுறைகளை மறந்துவிட்டீர்கள் என்பதும் தெரிகிறது. உங்களுக்கு, மனவளக்கலை ஆசிரியர்கள், சாந்தி தவம் இயற்றும் பாடம் தந்திருப்பார்கள். அதற்கு முன்னதாக, இந்த சாந்தி தவம் என்பதின் மகிமை என்ன? அது ஏன் செய்யவேண்டும்? எப்பொழுது எல்லாம், சாந்திதவத்தின் வழியாக, மூலாதர நினைவை செலுத்திப் பழவேண்டும் என்ற விளக்கத்தையும் உங்களுக்கு நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.

யோகசாதனையில் இருக்கிற எல்லா அன்பர்களுக்கும் ‘சாந்தி தவம்’ முக்கியமானது. அற்புதமானது என்றால் மிகையில்லை. அதிலும், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், மனவளக்கலையில், அடிப்படை பயிற்சியிலேயே ‘சாந்தி தவம்’ கற்றுத்தரப்படுகிறது.

சாந்திதவம், யோகசாதனையில் ஏற்படுகின்ற தடைகளை அகற்றுகிறது. விரிவான விளக்கத்தை, வேறு கட்டுரையில் காணலாம். சில அடிப்படைகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்வோம். யோகத்தின் வழியாக தவ ஆற்றலின் அளவு சில நேரம் மீறும். அப்போழுது வழக்கமான தவங்களை செய்யக்கூடாது. எனவே அந்த நேரங்களில் ‘சாந்தி தவம்’ மட்டும் செய்துவந்தால் தவ ஆற்றல், உடல் ஆற்றலாக மாறி நன்மை அளிக்கும்.

மேலும், மூலாதரத்தில் நினைவை செலுத்தும் ஆற்றலும் நமக்கு கிடைத்துவிடும்.

மனிதனின் குண்டலினி சக்தி எனும் ஆற்றலை, உயர்த்துவது எவ்வளவு நன்மையோ, அதுபோல பாதுகாப்பதும் நன்மையே! உங்களை சுற்றி இருக்கும் சூழல் கூட உங்கள், சக்தியை பறித்துவிடும். ஒரு இறந்த மனிதரின் உடலைச் சுற்றி ஒரு சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. யோகத்தில் இணையாத, யோகம் கற்றுக்கொள்ளாத சாதரண மனிதர்கள், இறந்த மனிதரின் உடலின் அருகில் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் யோகமும், தவமும் செய்யும் அன்பர், மூலாதார நினைவோடு அங்கே இருக்கவேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால், அன்பருடைய சக்தி வீணாக பறிக்கப்படும். இது இயற்கையாக நிகழ்வது. எனவே நீங்கள், இனிமேலாவது சாந்தி தவம் நன்கு கற்று, மூலாதர நினைவை செலுத்துவதை பழக வேண்டும்.

சாந்தி தவம் தொடர்ந்து செய்துவாருங்கள், உடல் நலம் பெறும், அதுபோல, வாரத்தில் ஒரு நாள் சாந்திதவம், வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக செய்யவேண்டியதும் அவசியம். 

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!