CJ for You: death

death

Showing posts with label death. Show all posts
Showing posts with label death. Show all posts

Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.



இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.

ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’

‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’

‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக,  உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’

‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப,  மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.

இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.

இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்.

What is the meaning of Genetic Center in the Vethathiriya Yoga?


வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.


பதில்:

கருமையம் என்ற பொருளும், அதன் உண்மையும், வேதாத்திரியத்தின் சிறப்பு ஆகும். கருமையம் நம்முடைய பொக்கிஷம் என்கிறார், வேதாத்திரி மகரிஷி. இந்த பிரபஞ்சத்தில் எப்பொருளுக்கும், கருமையம் உண்டு எனினும், உயிரின பரிணாமத்தின் வழியாக அமைந்த கருமையம், தனிச்சிறப்பு  பெற்றிருக்கிறது. இந்த கருமையமும், ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக உண்டு என்பதை மறவாதீர்.

        ஒரு மனிதனின், வாழும் காலத்தில் எப்படி அதன் செயல்பாடு இருக்கிறதோ, அதே தன்மையில் எப்போதும் இருக்கும். அதாவது தன்னுடைய பதிவுகளில் இருப்பதை, வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் என்று அர்த்தமாகிறது. இது எவ்வளவு காலம் என்றால், கருமையத்தின் களங்கள் தீர்க்கப்படும்வரை எனலாம். இந்த களங்கம் என்பதுதான், கர்ம வினைப்பதிவுகள் என்றாகின்றன.

வாழும் ஒருமனிதன், இறந்து போனால், எல்லாம் முடிந்தது என்பதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ‘வாழ்ந்து மறைந்த அந்த மனிதனின் கருமையமும், அதன் பதிவுகளும் அழிவதில்லை’ என்கிறார். மேலும், அவரின் விளக்கத்தின் வழியாக அறிவோம்.

கருமையம் (Genetic Center) மிக வியப்பான செயல்களை ஆற்றிக் கொண்டிருப்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் உணர்ந்து கொள்ளலாம். கருமையம் என்பது காந்த அலைத் திணிவு. நுண்ணிய ஜீவ இனங்களிலிருந்து அவை பரிணாமத்தால் உயர்ந்து மனிதனாகும் வரையில் கருமையம் தனது செயலை நிறுத்துவதில்லை; தன்மைகளை இழப்பதும் இல்லை.

உடல் காலத்தால் மாறிக்கொண்டு இருக்கும். அதை உடலுக்கு இறப்பு என்று சொல்கிறோம். ஆனால், அதிலடங்கியிருந்த உயிர்த்துகளோ, பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிர்த்துகளோடு கலந்து விடும். உடலை விட்டு வெளியேறிய இந்தக் காந்த அலைக்கு அதன் இயக்க நியதியினாலும், இதுவரையில் இணைத்துக் கொண்ட தன்மையினாலேயும் ஒரு சிறப்பு நிலை உருவாகிவிடுகிறது.

வான் காந்தத்தில் (Universal Magnetism) மிதக்கும் இத்தகையக் கருமையமானது அதன் சிறப்புக்கு ஏற்பச் செயல்படக்கூடிய, விளைவுகளைத் தரக்கூடிய பொருத்தமான ஜீவ இனத்தோடு இணைந்து விடும்.

அது முதற்கொண்டு கருமையம் இணைத்துக் கொண்ட ஜீவனுடைய ஆன்மா, அந்த இணைப்பினாலான சிறப்புக்களையும் பெற்றுவிடும். இவ்வாறு வாழும்போதே சந்ததிகள் மூலம் பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருவதும், உடலை விட்ட பின்னர்கூடத் தனது தகுதிக்கேற்ற ஒரு கருமையத்தோடு இணைந்து கொள்வதும், சாதாரண மன நிலையிலுள்ள மனிதனால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது.

எனினும் இறையாற்றலால் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வியத்தகு கருமையம், பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தையும் அடக்கமாகப் பெற்ற ஒரு இயற்கை நியதியாகும்.

தன்னிலை விளக்கமானாலும் சரி, இறைநிலை விளக்கமானாலும் சரி, இக்காந்தக் "கருமையத்தை" உணர்ந்து கொள்ளாத முன்னம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது, என்பதாக, விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Please explain about the Death and the Eternal after the death?


மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

அன்பரின் கேள்வி: 

சுவாமிஜி! மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உலகில் உயிர் வாழும், மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கும், மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போதுதான் அது வாழ்வு. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையே மரணம் எனப்படும். மரணம் இல்லையென்று கூறமுடியாது.

        உயிரின் இயக்கத்தால்தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையென்றால் உடலிலுள்ள அணுக்கள் தொடர் இயக்கம் சிதைந்து விடும்.

        கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து உயிர்த்துகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன்னுடைய இயக்கத்தை நடத்திக் கொள்ளத் தொடங்கிவிடும்.

        உதாரணமாக இதற்கு ஒரு கம்பெனியைச் சொல்லலாம். நீதிமன்றத்தின் உத்தரவால் ஒரு கம்பெனியானது உலாவீனம் (Liquidate) செய்யப்படுகிறது. என்று வைத்துக் கொள்வோம்.

        அக்கம்பெனியானது அதன் பெயரில் இறந்துவிட்டது என்றாலும், அதிலுள்ள நிர்வாகிகள், பங்குதாரர்கள், வேலையில் இருந்தவர்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.

        கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள். ஆனால் தனித்தியங்குகின்றார்கள்.

            அதேபோல் உடலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து இயங்குகின்றன. அவ்வளவே. அத்தகு தனித்தனியான இயக்கங்களுக்கு மரணம் என்பதில்லை.

        அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.

        இந்த உண்மையை, மனவளக்கலை எனும் எளிய குண்டலினி யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுண்மை விளக்கம் பெற்று, மரணமில்லா பெருவாழ்வு என்ற தத்துவ உண்மையையும் அறியலாம்.

வாழ்க வளமுடன்!

-



I am grieving the death of a pet I loved What to do?


பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?


பதில்:

ஒருவகையில் வார்த்தைகளால் ஆறுதல் செய்யமுடியாத இழப்பீடுதான். என்றாலும் உங்கள் உங்கள் கேள்விலேயே ‘பாசம்’ என்றொரு வார்த்தையிலேயே பதில் இருக்கிறது. ஆமாம். உறவு, நட்பு என்பதைக் கடந்து பாசம் என்று வரும்பொழுது, அதிகமான பிணைப்பு உருவாகிவிடுகிறது. இதை கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லமுடியும். அதில் ஒரு எதிர்பார்ப்பும் வந்துவிடும். ஆனால் செல்லப்பிராணிகள் அதன் அளவில்தான் இருக்குமே தவிர மனிதனுக்குண்டான, எதிர்பார்ப்பு இருப்பதில்லை.

இன்றைய உலகில், செல்லப்பிராணிகள் அன்பாக இருக்கின்றன என்ற கருத்து நிலவுவது, அன்றைய நாட்களிலும் இருந்து வந்ததுதான். மனிதனோடு பழக்ககூடிய பிராணிகள் தன்னளவில், தன்னுடைய அடிப்படை குணத்தை கொஞ்சமாவது குறைத்துக்கொள்கின்றன எனலாம். வேறெந்த காட்டு விலங்கினங்களையும் நாம் பழக்கிட முடியாது, செல்லப்பிராணியாக வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கான தீர்வாக, அதிலிருந்து கடந்து வருவதுதான் நல்லது. இறப்பு என்பது எல்லா ஜீவன்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கையில் அதற்கு நாம் தயார்செய்து கொள்வதுதான் சிறந்தது. உங்களால் முடிந்தளவு, வாழ்த்துக்களால் அதை சரிசெய்யுங்கள். இறந்த துன்பத்தையும், இழப்பையும் அடிக்கடி நினைப்பதைவிடவும், அந்த செல்லப்பிராணியோடு, நீங்கள் மகிழ்வாக இருந்த தருணங்களை நினைத்துப்பாருங்கள். அதையே மனதிற்குள் ஓடவிடுங்கள். அப்படி நீங்கள் பழகிவிட்டால், துக்கம் உங்களிடமிருந்து தானாகவே விலகிவிடும்.

உங்களுக்குத்தெரியுமா? பெரும்பாலான செல்லப்பிராணிகள், மனிதர்களுக்கு எதிரான உயிர்ச்சுழலைக் கொண்டுள்ளன. அதனால் நம்முடைய யோக பயணத்தில், அவைகளின் நெருக்கும் ஒருதடையை ஏற்படுத்தும். முடிந்தளவு அவைகளிடம் இருந்து விலகி இருத்தல் நல்லதுதான். இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வை நீங்கள் கடந்து நின்று, இனி உங்களை மாற்றிக்கொண்டு, யோகத்தின் வழியில் பயணியுங்கள். மனதில் அமைதி நிலவிட மாற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-

What is lifeforce? Why it is separated? Can we protected?


உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


பதில்:

எளிமையாக கேள்வி கேட்டுவிட்டீர்கள், அதில் எவ்வளவு ஆழ்ந்த இயற்கை உண்மைகள், ரகசியங்கள் அடங்கியுள்ளன என்பதை அறிவீர்களா? இத்தகைய உயிர் குறித்த எல்லா உண்மைகளையும் சித்தர்கள் அறிந்து உணர்ந்து முழுமையும் அடைந்தார்கள். சித்து என்று அழைக்கப்படும் உயிரை அறிந்ததால்தான் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். விளக்கிட கடினமே என்றாலும் கூட, இந்த பதிவில் முடிந்தளவு எளிமையாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். எல்லோருக்குமே பயன்படும் வகையில் உதவும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்த்தி வணங்குவோம். குப்பையாக குழப்பிக் கிடந்த உண்மைகளை அழகாக, சிதையாமல் எடுத்து, அழக்குகளை நீக்கி மிக தெளிவாக, எளிமையும் செய்து, மாற்றுக்கருத்துக்கு இடம் தராமல், விளக்கித்தந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உயிர் என்று அழைக்கப்படும் ஆகாஷ் துகள்கள், பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலையாகும். கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையிலும், கருத்துக்கும் மிக எளிதில் சிக்கிடாத நுண்ணியது இந்த உயிர்த்துகள்கள். இதை தமிழில், வேதாத்திரியத்தில் விண் என்றும் சொல்லுகிறோம். மனிதர்களாகிய, நம்முடைய உடல் மண் என்ற பஞ்சபூத தன்மை கொண்டது, அதனூடாக, நீராக இரத்தம், வெப்பமாக உடல் சூடு, காற்றாக மூச்சுக்காற்று ஆகிய நான்கு பஞ்சபூதங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஐந்தாவதாக, முதல் நிலை பஞ்சபூதமான உயிர் இணைந்தால், நாம் இந்த புவியில் உயிரோடு, உணர்வோடு வாழ்கிறோம் என்று அர்த்தமாகிறது.

இந்த உயிர் மிக மிக நுண்ணியதும், லேசானதும் ஆகும். எனவே இது இயற்கையின் சக்தியால் நீண்டகாலம் ஒரே இடத்தில் தங்கிட வாய்ப்பில்லை. ஆசான் திருவள்ளுவர், மிகத்தெளிவாக தன்னுடைய குறள் வழியாக இதை சொல்லுகிறார்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (நிலையாமை, குறள் 334)

உயிரானது, ஒவ்வொருநாளும் இந்த உடலைவிட்டு நகர்ந்து போய்க்கொண்டேதான் இருக்கிறது. ஒருநாள் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் இணைப்பை வாளால் அறுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்வாக பெற்று அறிந்து கொள்ளுங்கள். என்று குறளில் சொல்லுகிறார்.

இதன்படி காலத்தால், இயற்கையாகவே உயிர் உடலைவிட்டு நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒருநாளில் முழுதாக போய்விடுகிறது. அன்றைக்கு ஒருநபர் இறந்துவிடுகிறார் என்று புரிந்துகொள்கிறோம். இதில், இந்த இயற்கைக்கு முன்பாக, அதன் விதிக்கு முன்பாக நாம் ஒன்றுமே இல்லை. அதனால் அதன்போக்கில் நிகழும் ஒன்றை தடுக்கவும் வழியில்லை. ஆனால் இது ஏன் நிகழ்கிறது? இந்த பிறப்பும் இறப்பும் எதனால்? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், யோகம் அதற்கான பதிலை தரும். வாழ்கின்ற நாளுக்குள் அதை அறியவும் முயற்சிக்கலாம் என்பதும் உறுதி.

ஆசான் திருவள்ளுவர், தன் குறள்வழியாக தருகின்ற இன்னொரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (நிலையாமை, குறள் 340)

உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? என்ற விளக்கத்தை - மு. வரதராஜன் அவர்கள் தருகின்றார்.

உயிர் குறித்த உண்மைகளை எடுத்துரைத்த ஆசான் திருவள்ளுவரையும், ஔவையார், சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள், யோகியர்கள், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களையும் மீண்டும் வாழ்த்தி நினைவு கூர்வோம்.

வாழ்க வளமுடன்.

-

Can I foreknow or guess our death? Any Idea?


நம்முடைய இறப்பை, மரணத்தை நான் முன்கூட்டியே அறிவதற்கு முடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய இறப்பை, மரணத்தை நான் முன்கூட்டியே அறிவதற்கு முடியுமா?


பதில்:

நம்முடைய இறப்பை, மரணத்தை  முன்கூட்டியே அறிவதற்கு முடிந்தால், அப்படி தெரிந்து கொண்டால், அது ஒருவகையில் நல்லதுதான். அந்த இறப்பு, மரணம் வருவதற்கு முன்பாக நன்றாக அனுபவித்து வாழ்ந்து விடலாம். அந்த வாழ்நாளுக்குள்ளாக என்னென்ன தேவையோ அதை பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். வாழ்நாளுக்குப் பிறகு நம் குடும்பத்திற்கு, வாழ்க்கத்துணை, குழந்தைகள் நலம் விரும்பி செய்ய வேண்டியதையும் முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். 

மேலும் நமக்கு என்னென்ன விருப்பமோ அதை பெற்றுவிடலாம். என்னென்னெ ஊர், இடம் பார்க்கவேண்டுமோ அதையெல்லாம் பார்த்து திருப்தி அடையலாம். கொடுக்க வேண்டியதை கொடுத்துவிடலாம். பெறவேண்டியதை பெற்றும் கொள்ளலாம். வரிசையாக பட்டியலிட்டு, எல்லாவற்றையும் முடித்துவிட்ட திருப்தியில் இறப்பை, மரணத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராகலாம் தானே?! சரியா?

இதனோடு, இதெல்லாம் அப்படியே விட்டுவிட்டு போகப்போகிறோமே? என்ற கவலை எழாமல் இருக்குமா? முதலில் நம்முடைய கைபேசி, வங்கி கடன் வரவு அட்டைகள், அதன் உட்கடவுட்சொல், வங்கியில் இருக்கும் பணம், பங்கு வர்த்தகத்தின் செயல்பாட்டில் பணம், கார், பைக், விருப்பமான பொருட்கள் எல்லாவற்றையுமே இழந்துவிடுவோம், இனி யாருக்கோ போய்விடுமே என்ற பயமும் வருத்தமும் எழாமல் இருக்குமா? இறப்பை மரணத்தை ஏற்றுக்கொள்ளதான் விருப்பம் எழுமா? இல்லைதானே! இன்று ஒருநாள் விட்டுவிடு, இன்னும் ஒருவாரம் விட்டுவிடு, ஒருமாதம் விட்டுவிடு, ஒருவருடம் மட்டும்  விட்டுவிடு என்று நாம் கேட்பதற்கும் வழியில்லை.

உங்களுடைய சோதிடம் வழியாக, மாரகாதிபதி சனி பகவான், அதன் இருப்பிடம், சுழற்சி, மாரகஸ்தானம் என்ற வகையில் கூட யூகிக்கலாமே தவிர, உண்மையும் உறுதியும் சொல்ல முடிவதில்லை. நோய்தாக்கம் முற்றி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தாலும்கூட, மருத்துவார்களால் இருப்பு, இறப்பு உறுதி செய்ய முடிவதில்லை. ஒரு நாள் தாங்காது என்று சொன்னால், பலவருடம் நின்று வாழ்வார். நாளைக்கே வீடு திரும்பலாம் என்றால் அவர் உலகைவிட்டே திரும்பிவிடுவார். இதெல்லாம் நம் குடும்பத்திலும் நிகழ்கிறது. வாழ்கின்ற சமூகத்தில் சம்பவங்களாகவும் நாம் அறிகிறோம் அல்லவா?

நீடூழி வாழ்க என்று பிறரை, மனம் விரும்பி வாழ்த்திடும், தன்னையறிந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் கூட இந்த உண்மையை அறிந்து கொண்டது இல்லையே. ஆனால் உடனே நீங்கள் மறுதலிப்பீர்கள். ‘உங்களுக்கு தெரியாது, இப்படி இந்த நாளில், இந்த நட்சத்திரத்தில், இந்த நேரத்தில், இன்ன இடத்தில், இந்த நோயால் நான் மரணிப்பேன் என்று சொன்ன சித்தர்களும், ஞானியர்களும் உண்டுதான். இன்னமும் இருக்கிறார்கள், நேற்று கூட ஒருவர் அப்படி சொன்னார் தெரியுமா?’ என்று சொல்லுவீர்கள். அப்படியானால் அந்த வித்தையை நீங்களும் கற்றுக் கொள்ளலாமே? இங்கே மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக,  நேரத்தை வீண் செய்யாமல் அவர்களை தேடிப்போய், அந்த வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். எனக்கும்கூட சொல்லிக் கொடுங்களேன். 

ஒரு மனிதனின் பிறப்பையும், இறப்பையும் இயற்கையானது என்றுமே ரகசியமாக வைத்திருக்கிறது என்பதால், நாம் முன்கூட்டியே அறிவதற்கு முடியாது, அதற்கு வழியும் இல்லை. ஆனால் நிச்சயமாக, பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு உண்மையானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதுபோல, ‘ஓவ்வொருவரும் திருப்பிப் போகும் பயணச்சீட்டோடுதான் வந்திருக்கிறோம். என்ன? அதில் தேதி குறிப்பிடப்படவில்லை’

என்றாலும் நமக்கு தெரியும் தானே? ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்கிறார்கள். அவ்வளவு முடியாவிட்டாலும், உயிரோடு இருக்கும் ஆண்டுகளில், அதை மனதில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்வதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்கவேண்டும். நீங்கள் பக்தியில் இருந்தாலும் சரி, யோகத்தில் இருந்தாலும் சரி. அதில் நீங்கள் பிறப்பின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்து அறிவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது அவசியமானதும் கூட. 

நிலையாமை என்ற தலைப்பில், ஆசான் திருவள்ளுவர் சொல்லும் குறள் ( எண்-339) கவனியுங்கள். 

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

வாழ்க வளமுடன்.

-

If we are died after spirit separated. so are we sprit?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் நம்மை விட்டு பிரிந்ததும் இறந்துவிடுகிறோம் என்றால், நாம் உயிரா? 


பதில்:

சிந்தனைக்குரிய கேள்விதான், வாழ்த்துகிறேன். முக்கியமாக நீங்கள் உடல் அல்ல என்ற உண்மையை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது நல்லது. நீங்கள் சொல்லுவது போல உயிர் நம்மைவிட்டுப் பிரிந்தால் நாம் இறந்துவிடுகிறோம். ஆனால் இந்த புரிதலில் தவறும் உள்ளது. உயிர் நம்மைவிட்டு என்று சொல்லும் பொழுதே, உயிரோடு நாம் என்று வாழ்வதையும் அறிந்துகொள்ளத்தானே வேண்டும். அதாவது உயிர், நாம் என்று இரண்டாக உள்ளது அல்லவா? அப்படியானால் நாம் தனியாக இருக்கிறோம்தானே?!

இங்கே இன்னும் தெளிவாக அறிய, உடல், உயிர், மனம், நாம் என்று நான்காக கலந்து இருக்கும் உண்மைதான் உள்ளது. இந்த உடல் நாம் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டீட்கள். இந்த உயிர் நாம் இல்லை என்ற உண்மையும் இப்போது விளக்கம் கிடைத்திருக்கும். அப்படியானால் மனம் என்பது நாமா? அல்லது அந்த நாம் என்பது யார்? என்று அறிந்துகொள்ள வேண்டும். 

மனதைக் கொண்டுதான் உலகில் வாழ்கிறோம், இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம் அல்லவா? அத்தகைய மனதின் துணைகொண்டுதான், நாம் யார் என்று அறிந்திட வேண்டும். இந்தக் கேள்விதான் ‘நான் யார்?’ என்று விசாரணையை உருவாக்குவதாக, பகவான் ரமணமகரிஷியும் சொல்லுகிறார். அவர்தான் இந்த கேள்வியை நமக்குள் விதைத்தவர் எனலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, அந்த கேள்வியை நோக்கியே பயணிக்கிறோம். முதலில் மனதை மனதால் அறிய தவம் இயற்றுகிறோம். பிறகு மனதை உயிரில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அடுத்ததாக, உயிருக்குள் அறிவாக இருக்கும் நிலையில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அதற்குப்பிறகுதான் பேராற்றலோடும், பேரறறிவோடும் துரியாதீத தவத்தில் விரிகிறோம். அந்த நிலையில்தான் உங்களுக்கான விடை கிடைக்கும். அதை நாம் வார்த்தையால் இங்கே விளக்கிடுவது கடினம்! தொடர்ந்து தவத்தில் நிலைத்து உண்மையை உணர்வாகப்பெற வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

Stay with alert in unavoidable circumstances near the dead bodies


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் ஒருவருடைய இறப்பு நிகழ்வில் ஒருநாள் முழுவதும் இருக்கவேண்டி இருந்தது, மறுநாள் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, தலைபாரம், உடல்வலி, காய்ச்சல் போல இருக்கிறது. இதை எப்படி சரி செய்யலாம்?


பதில்:

நீங்கள், மனவளக்கலையில் தவம் கற்ற அன்பர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் அங்கே உங்களுக்குச் சொல்லப்பட்ட வழிமுறைகளை மறந்துவிட்டீர்கள் என்பதும் தெரிகிறது. உங்களுக்கு, மனவளக்கலை ஆசிரியர்கள், சாந்தி தவம் இயற்றும் பாடம் தந்திருப்பார்கள். அதற்கு முன்னதாக, இந்த சாந்தி தவம் என்பதின் மகிமை என்ன? அது ஏன் செய்யவேண்டும்? எப்பொழுது எல்லாம், சாந்திதவத்தின் வழியாக, மூலாதர நினைவை செலுத்திப் பழவேண்டும் என்ற விளக்கத்தையும் உங்களுக்கு நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.

யோகசாதனையில் இருக்கிற எல்லா அன்பர்களுக்கும் ‘சாந்தி தவம்’ முக்கியமானது. அற்புதமானது என்றால் மிகையில்லை. அதிலும், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், மனவளக்கலையில், அடிப்படை பயிற்சியிலேயே ‘சாந்தி தவம்’ கற்றுத்தரப்படுகிறது.

சாந்திதவம், யோகசாதனையில் ஏற்படுகின்ற தடைகளை அகற்றுகிறது. விரிவான விளக்கத்தை, வேறு கட்டுரையில் காணலாம். சில அடிப்படைகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்வோம். யோகத்தின் வழியாக தவ ஆற்றலின் அளவு சில நேரம் மீறும். அப்போழுது வழக்கமான தவங்களை செய்யக்கூடாது. எனவே அந்த நேரங்களில் ‘சாந்தி தவம்’ மட்டும் செய்துவந்தால் தவ ஆற்றல், உடல் ஆற்றலாக மாறி நன்மை அளிக்கும்.

மேலும், மூலாதரத்தில் நினைவை செலுத்தும் ஆற்றலும் நமக்கு கிடைத்துவிடும்.

மனிதனின் குண்டலினி சக்தி எனும் ஆற்றலை, உயர்த்துவது எவ்வளவு நன்மையோ, அதுபோல பாதுகாப்பதும் நன்மையே! உங்களை சுற்றி இருக்கும் சூழல் கூட உங்கள், சக்தியை பறித்துவிடும். ஒரு இறந்த மனிதரின் உடலைச் சுற்றி ஒரு சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. யோகத்தில் இணையாத, யோகம் கற்றுக்கொள்ளாத சாதரண மனிதர்கள், இறந்த மனிதரின் உடலின் அருகில் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் யோகமும், தவமும் செய்யும் அன்பர், மூலாதார நினைவோடு அங்கே இருக்கவேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால், அன்பருடைய சக்தி வீணாக பறிக்கப்படும். இது இயற்கையாக நிகழ்வது. எனவே நீங்கள், இனிமேலாவது சாந்தி தவம் நன்கு கற்று, மூலாதர நினைவை செலுத்துவதை பழக வேண்டும்.

சாந்தி தவம் தொடர்ந்து செய்துவாருங்கள், உடல் நலம் பெறும், அதுபோல, வாரத்தில் ஒரு நாள் சாந்திதவம், வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக செய்யவேண்டியதும் அவசியம். 

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Day after Woe


இனிமேல் என் நண்பரின் தாயாரிடம்,  பேசுவதற்கும், என் தோல்வி வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் இனி இயலாது. தன் மகனின் கூட்டாளியாக இருந்தாலும், தன் மகன்களில் ஒருவனாக பொதுவாக நடத்தி, கண்டித்து, அறிவுரை சொல்லி, ஆலோசனை கேட்டு தன் சோகங்களைகளை இறக்கிவைத்தும் வந்தவர் ஒரு புதன்கிழமை தன் உடலை விடுத்துப்போனார்.  
கடந்த வாரத்தில் நிகழ்ந்த இந்த சோகத்தை ஆற்றுப்படுத்த மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்கு மூன்று நாள்முன்புதான் ஒரு திருமண நிச்சயத்திற்கு சென்றவன், உடல் நலமில்லாதிருந்த அவரை பார்த்து பேசிவிட்டு வந்தேன். அவர் இனி இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேல் என் வீட்டில் இருந்ததை விட என் நண்பரின் வீட்டில்தான் என் ஓய்வு நேரங்களை கழித்திருக்கிறேன். சில நாட்களில் அங்கெயே தங்கி மறுநாள் கூட என் இல்லம் சென்றிருக்கிறேன். என் பெற்றோரைத்தவிர, இவர்களையும் என் அம்மா, அப்பா என்றேதான் அழைத்துவருகிறேன். என் நண்பரின் இல்லம் அது என்று எனக்குத்தான் எண்ணம் ஓடுமே தவிர நண்பரோ, அவரின் பெற்றோரோ எந்த வித்தியாசமும் செய்துகொள்வதில்லை. அந்த வீடு எப்போதும் நண்பர்களால் சூழப்பட வீடு. கேலிக்கும், விளையாட்டுக்கும், பரபரப்புக்கும் என்றுமே குறையிருந்ததில்லை.

“எங்கே இவன்?” என்று யாராவது என்னை என் வீட்டாரிடம் கேட்டால்,
“அவன்” வீட்டுக்கு போயிருப்பான் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சுட்டிக்காட்டக்கூடிய நிலையில் என் நடவடிக்கை இருந்துவந்திருக்கிறது...

வாழ்வில் பொருள் தேடலும், சமூக கடமைகளும் ஓவ்வொருவராக தூக்கியடிக்க, நண்பர்கள் திசைக்கொன்றாக சிதறிப்போயினர். நானும் கூடவே! அந்த இல்லம் நீண்டகாலம் அமைதியாக இருந்தது. நண்பரின் தாயாரும், தகப்பனாருமாக இருவர்மட்டுமே இருந்தனர். விருந்தும், சில விழாக்காலங்களும் தன் பிள்ளைகளோ, அவர்களின் நண்பர்களோ வந்துபோகும் இடமாக மாறியிருந்தது. கால சுழற்ச்சியில் வயோதிகமும்வர தமக்குத்தாமே உதவியாக வாழ்ந்துவந்தனர்...

சென்றமாதத்தில் நண்பரின் தாயார் உடல் நிலை மிக மோசமான நிலையிலிருக்க, உடனடியாக மருத்துவ உதவிகிடைக்காமல்  தாமதமாகி, தற்செயலாக வந்த நண்பர்கள் மூலமாகவும், உறவினர்கள் மூலமாகவும், தன் அபாய கட்டத்தை தாண்டி வீட்டிற்குவந்தவரை சென்ற ஞாயிறு அன்று இல்லத்தில் சந்தித்தேன். வயோதிகம் எப்படியெல்லாம் ஆளைமாற்றுகிறது என்று மனதிற்குள் திகிலடித்தவாறே, தொண்டையிலிருந்து வார்த்தைவராமல்  விக்கித்து எதோ பேசுகிறேன்.
“ஒன்னும் முடியலை, எதோ பரவாயில்லை. ஆனா, சாப்பிட்டது எல்லாம் வாயில் எடுத்துவிடுகிறது” என்றார் அம்மா.
அப்பாவோ, “என்னப்பா செய்யறது. பாரு எனக்கும் இப்படி இருக்கவேண்டியதா இருக்கு” என்றார். அப்பாவுக்கும்கூட கடந்த வருடத்தில் அறுவை சிகிச்சை வரை சென்று, தப்பித்திருப்பதையும் சொல்லியாகவேண்டும். இப்படி கேட்டதும் என்னால் அங்கே நீண்ட நேரம் இருக்கமுடியவில்லை. மனம் முழுவதும் வேதனையும், சோகமும் அப்பியது. அப்போதும் நாங்கள் மேல் சிகிச்சைக்காக ஆட்டோ முலமாக, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டுத்தான் என் இல்லம் திரும்பினேன்.

புதன்கிழமை காலை என் நண்பர் அழைக்கிறார். வழக்கான தொழில்நுட்ப தகவலுக்காகவோ, கருத்துபரிமாற்றத்துக்கோ என்றெண்ணி அவரிடம் பேசுகிறேன்...
ஒரே வார்த்தையாக “அம்மா இறந்துட்டாங்க” என்று சொல்லி நிசப்தம் செய்தார். கையிலிருந்த எல்லாவேலைகளையும் அப்படியே வைத்துவிட்டு, மதிய உணவையும் தவிர்த்து, என் அலுவலக நண்பர்களிடம் தகவலை சொல்லிவிட்டு பேருந்தில் பயணிக்கிறேன்.

பேருந்து முன்னொக்கிச்சென்ற அந்த இரு மணி நேரமும், என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச்சென்றன. வீடு சென்றடைகையில், ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அம்மா. அருகில் சோகமாக அப்பா அமர்ந்திருந்தார்.
சற்று நேரத்திற்கும் முன் இருந்தவரை, நான் “இரண்டு நாளுக்கு முன்தானே பார்த்து பேசிவிட்டுப்போனேன்” என்றும் முட்டாள்தனமாக பேசி கலங்கினேன்...

அடுத்தும் ஆகவேண்டிய வேலைகள் பிறரால் தயாராகின்றன. வாழ்வில் ஒரு இறப்பு, நம் கன்னத்தில் அறைந்துவிட்டு “போடா போ, ஆகவேண்டியது நிறைய இருக்கு” என்று முதுகில் தட்டியும் கொடுக்கும். அன்றைய நாளோடு இறந்த, அவருக்கான இந்த வாழ்வின் அடையாங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடுகிறது, இனி பிறரிடம் ஞாபகங்கள் மட்டுமே மிச்சமாயிருக்கும்.

வழக்கமான சடங்குகளுக்குப்பின் அம்மாவை அக்னிக்கு தின்னக்கொடுத்து வீடு திரும்புகிறோம். வீட்டில் விளக்கேற்றி வணங்கியபின் குளித்துவிட்டு, எல்லோருக்கும் உணவுபரிமாறுகிறார்கள். என்னையும் அழைக்கிறார்கள். நான் தவிர்க்கிறேன். தவிர்ப்பதைப்பார்த்து அப்பாவும் உண்ண அழைக்கிறார். அப்போதும் மறுக்கிறேன்.

“இந்த வீட்டில் அம்மா அல்லவா உணவுபறிமாரியாகவேண்டும்?!” எண்ணிக்கொண்டே, அப்பாவுக்குத்தெரியாமல் என் இன்னொரு நண்பரோடு பேருந்து நிலையம்வந்து என் இல்லம் திரும்புகிறேன்...

இனி என்ன?

“முடிந்தது. இதோ சூரியன் மேற்கே நகர்ந்து கொண்டிருக்கிறான். நம்மால் செய்யமுடிந்தது ஏதுமில்லை” ஜி.கே!