CJ for You: the guru

the guru

Showing posts with label the guru. Show all posts
Showing posts with label the guru. Show all posts

I am sad that there is no one to comfort me. Who will give me a shoulder?


என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?


பதில்:

உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நாம் பிறந்து வளர்ந்து வரும் பருவ காலத்தில், எதைபற்றியும், எதுகுறித்தும் கவலைப்படாது வாழ்ந்த காலம் உண்டு. ஆனால், குடும்பத்தில் சூழல்காரணமாக, நமக்கு கிடைத்த வாய்ப்புக்கள் வழியாக, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, வெளியில் சொல்லமுடியாத துயரம் நம்மை ஆழ்த்திவிடும். உண்மையில் அதை விட்டு விலகிட முடியாத அளவில் சிக்கி இருப்போம். ஏதோ ஒருவகையில், மற்றவர்கள் என்னால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணமும் அதில் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் மேலும்மேலும் சிக்கல் நிறைந்து, என்னசெய்வது என்று புரியாமல் காலம் கடத்திவருவோம்.

அத்தகைய காலகட்டத்தில், நாம் தனிமனிதனாக அல்லாமல், நமக்கென்று ஒரு குடும்பம், நம்மை எதிர்பார்த்து சில உறுப்பினர்களும் இருப்பார்கள். இதற்கிடையில் நமக்கு ஆறுதல் சொல்லவோ, ஏதேனும் உதவி செய்தோ, நல்லவார்த்தைகள் சொல்லி ஊக்கப்படுத்தவோ, நம்முடைய பெற்றோர்களும் இருக்கமாட்டார்கள். ஆம் அவர்கள் வயதாகி, முடியாத சூழலில் இருக்கலாம். காலத்தில் நிறைவாகியும் போயிருக்கலாம். நம்மோடு இருப்பவர்களும், நமக்கான எந்த உதவியும், ஆறுதலும் தரமுடியாத சூழலில் இருக்கலாம். அவர்களை சொல்லியும் குறையில்லை. அவர்களுக்கும் நம்மைப்போலவே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்தானே?

இப்போதைய இந்த சூழலில், நமக்கு உதவி எதுவும் கூட தேவையில்லை. ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட யாருமில்லையே என்பதுதான் மிகப்பெரும் பிரச்சனை. ஆனால் ஓவ்வொருவருமே, அவரவர் உலகில் தனித்து, ஒரு எல்லையோடு வாழ்ந்து வருவதால், யாரையும் யாரும் தன்னிடத்தில் அண்ட விடுவதில்லை. ‘நீ உன் எல்லைக்குள் இரு, நானும் என் எல்லைக்குள்தான் இருப்பேன்’ என்று சொல்லிவிடுவார்கள். இதையும் நாம் குறை சொல்லமுடியாது. ஒருகாலத்தில் நாம் இப்படித்தானே சொல்லிக்கொண்டிருந்தோம் இல்லையா? நிச்சயமாக இல்லை என்று மறுக்கமுடியாதுதானே?!

அப்படியானால், என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்? என்று நீங்கள் கேட்டதற்கு வழி என்ன? யோகத்தின் வழியாக நம்மை உயர்த்த விரும்பும், குரு தான் நமக்கு உதவக்கூடியவர். நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை. ‘அருட்தந்தை’ என்று அழைப்பதில் இருக்கக்கூடிய அர்த்தமும், உண்மையும் அதுதான். ஒரு தந்தைக்குத்தான், வாழ்வியல் குறித்த முழு அனுபவம் இருக்கும். தாய் நம்மை, உள்முகமாக, மனப்பூர்வமாக ஆறுதல் தரக்கூடியவள்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், வாழ்கின்ற வாழ்க்கையில் பெறக்கூடிய துன்பங்களுக்கு தகுந்த ஆறுதல் தந்து நம்மை தேற்றக்கூடியவர் ‘தந்தை’ மட்டுமே.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை, ‘அருட்தந்தை’ என்ற நிலையில் ஏற்க தயாராகுங்கள். அவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் பெறுங்கள். ‘நான் இருக்கிறேன்’ என்றுதான் அவர் நம்மிடம் சொல்லியிருக்கிறார். சூட்சுமமாக, வான்காந்த வெளியில் கலந்திருக்கிறார். உங்களுக்கு ஆறுதல் தர, உங்கள் குருவை விட வேறு யார் வேண்டும்? இனி கவலையும், துன்பமும் எதற்கு? மிகச்சிறந்த வடிகாலாக, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி இருக்கிறார்.

வேதாத்திரியத்தில் இணையாதவர்களுக்கு, அவரவர் அளவில் அவர்களுடைய குருவை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே குருவின் தோள் சாயுங்கள். ஆறுதல் பெறுங்கள். எல்லாம் கடந்து விட்டு விலகி, வாழ்வில் உயர்ந்து, மெய்யுணர்வு பெறுங்கள். வாழ்க்கையின், பிறப்பின் கடமையில் சிறந்து விளங்குங்கள். 

வாழ்க வளமுடன்

-

Should my Guru grace will be help to relieve from problems? Please let know me how?!


என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்:

வாழும் மனிதர்களாகிய நமக்கு, பிரச்சனைகள் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம்? என்பதில்தான் அது உண்மையிலேயே பிரச்சனையா? பிரச்சனையாக தோன்றுகிறதா? கடந்துவிடக் கூடியதா? என்பது நமக்குத் தெரியவரும். பெரும்பாலானவர்கள் அதை ஏற்று, அதில் சிக்கிக் கொள்வதுதான் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. சிலர் அந்த பிரச்சனையில் சிக்கி, அதை சரி செய்யமுடியாமல் தோற்றுப்போய், வாழ்க்கையில் இருந்து விலகி ஓடிவிடுவதும் உண்டுதான். அதுதான் மிகப்பெரும் சோகம்.

இந்நிலையில், குழந்தையாக இருந்தால், நல்லதுதான் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் இக்கால குழந்தைகளுக்கும் அன்றாட சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குரிய அளவில் அவை இருக்கின்றன என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடுவார்கள். அப்படியானால், பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாத வயது எது? யார் அவர்கள்? என்றால், மூன்று வயது நிரம்பிடாத குழந்தைகள் தான் எனலாம். ஏனென்றால், அக்குழந்தைகள் மூன்று வயதுவரையிலும், தன்னியல்புக்கு வருவதில்லை. என்றாலும் கூட சில குழந்தைகள் விதிவிலக்கு.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? என்று கேட்டால், அதற்கான பதில் நிச்சயமாக உதவிடும். உதவிக்கொண்டும் இருக்கிறது எனலாம். இதை நான் உறுதியாகவே சொல்லுகிறேன். அப்படியானால், அதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது உங்களின் இன்னொரு கேள்வி. இதோ அதற்கும் பதிலை காணலாம். குருவருளின் உதவியை நாடும் நீங்கள், ஆன்மீக சாதனையில் உங்களை இணைத்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குரு அவர்கள் உங்களுக்கு வழங்கிய, யோக பயிற்சிகளை அன்றாடம் செய்துவருவீர்கள் என்றும் நினைக்கிறேன். அதை தொடர்ந்து செய்துவாருங்கள். உங்கள் பயிற்சிகளில் மனம் லயித்து செய்வதை உறுதி செய்யுங்கள். வெறுமனே கண்மூடி நிமிடங்களை கடத்துவதை விட்டுவிடுங்கள்.

தவம் செய்ய அமரும்பொழுதே, உங்கள் மனம், உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலில் இருந்தும், அந்த நேரம் மட்டுமாவது விலகி நிற்கிறதா? அதிலேயே உழல்கின்றதா? அந்த பிரச்சனைகளையே எடுத்துக்காட்டிக் கொண்டே வருகிறதா? இதை எப்படி நான் தீர்ப்பேன் என்று எண்ணி வருந்துகிறதா? இந்த தவம் செய்து என்ன ஆகப்போகிறது என்று உங்களை திசை திருப்புகிறதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தால், தவம் இயற்றாமல், சிறிது நேரம் அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து மனதை இயல்பாக்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகன்று, வேறு இடத்திற்கு செல்லுங்கள். அடிக்கடி உங்களைச் சுற்றிலும் ‘நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’ என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இதன் வழியாக மனம் விடுபட்டு, இயல்பாக இருக்க வழி கிடைக்கும். அதன் பிறகு தவம் செய்யலாம்.
தவம் இயற்றும் பொழுது, குருவை நினைந்து போற்று மகிழுங்கள். அவரிடம் சரணாகதி அடையுங்கள். நீங்களாக எதும் கேட்காதீர்கள். நீங்களாக எதும் சொல்லியும் புலம்பாதீர்கள். அமைதியாக உள்முகமாக, குருவை நினைந்து வணங்குங்கள். தவமும் இயற்றுங்கள்.

தவமுடிவில், ‘அருட்பேராற்றலின் கருணையினால், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்’ என்பதை மனம் ஒன்றி சொல்லுங்கள். வெறும் வார்த்தையாக இல்லாமல், ஒப்பிப்பது போலவும் இல்லாமல், அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள். நாளடைவில், குருவருள் உங்களுக்கு உதவுவதை உணர்வாகவும் பெறலாம். மேலும் உங்களுக்கு ஆலோசனை தேவையென்றால், நேரடியாகவும் என்னை அணுகலாம்! நானும் உங்களை குருவோடு, இறையருளோடு இணைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-

What is truth of fulfil lean yoga, service and teaching to others?


யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்த பிறகுதான் கிடைக்கும் என்பது சரியானதுதானா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான் என்பது சரியானதுதானா?

பதில்:

இந்த கேள்வியை சிறந்ததாக கருதுகிறேன். இந்த உலகத்தில், பக்தியை கடந்த, அதன் உண்மையான ‘நான் யார்?’ என்ற கேள்வியை துணைகொண்டு உண்மை அறிய, அதை ஆராய்ச்சி செய்ய, வேதாத்திரியம் போல பலதரப்பட்ட யோக வழிமுறைகளும், யோகம் அல்லாத உண்மையும், விடுதலையும் பெறும் அமைப்புக்களும், பக்தியோடு கூடிய ஆன்மீக நிலையங்களும் இருகின்றன. அதேபோல, சித்தர்களின் வழியிலான யோகமுறைகளும் இன்னமும் தொடர்கிறது என்பது உண்மை.

உங்களுக்கு விருப்பமான ஓர் வழியை, நம்பிக்கையான ஓர் வழியை, ஆராய்ந்து தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. வேதாத்திரியம் என்னுடைய வழி என்பதால், நான் உங்களை ‘கட்டாயப்படுத்த முடியாது’. அதே வேளையில், இன்னொன்றை குறை சொல்லவும் முடியாது. ஆனால் ஓவ்வொரு யோக முறைகளுக்கான உண்மை, நோக்கம், பயிற்சி, இவையெல்லாம் ஆராய்ந்து உண்மை சொல்வதில் தவறில்லை. அது நிச்சயமாக எது சரியானது? என்ற உங்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

வேதாத்திரியத்தின் பாடத்திட்டம், அந்ததந்த பயிற்சிகளின் வழியாக, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஆசிரியர் நிலை அடையலாம். பிறருக்கு தீட்சை வழங்குதலும், குறிப்பிட்ட பாடங்கள் நடத்துவதற்கும் அனுமதி தரப்படுகிறது. ஆசிரியர் பயிற்சியின் மேல் நிலையில், குறிப்பிட்ட தவ மையம் மட்டுமில்லாமல், எந்த தவமையத்திற்கும் சென்று பயிற்சியும் பாடமும் நடத்த தகுதி கிடைத்துவிடுகிறது. இத்தகைய எளிமை வேறெந்த யோக மையத்தில் இருப்பதில்லை என்றே கருத இடமிருக்கிறது.

இப்படியாக, எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான், யோகத்தில் நிறைவு வருமா? என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் இன்னொரு முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது. நீங்கள், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கு கற்றுத்தரும் முன்பாக, அதில் நீங்கள் ஆழ்ந்த உண்மையை, தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை உதாரணமாக சொல்லுவதென்றால். முப்பத்தி மூன்று வயதில் முழுவதுமாக தன்னை யோகத்தில் இணைத்துக்கொண்ட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான், தன் அனுபவத்தை கவிகளாகவும், கட்டுரைகளாகவும், திட்டமாகவும், பாடங்களாகவும் வெளிப்படுத்தினார். அதுவரையிலும் தான் அறிந்து கொண்டதை, ஆராய்ச்சி, ஆராய்ச்சி எனவே காலத்தை செலவு செய்தார். இதில் அவரின் கண்ணும் பாதிக்கப்பட்டது, உடலும் பாதிக்கப்பட்டது என்று அவரே தன்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வார்த்தையாக சொல்லுகிறார்.

எனவே நீங்களும் அத்தகைய, ஆராய்ச்சியில் இறங்கி, உண்மையை அறிந்து, அந்த தெளிவினில் பிறருக்கு தீட்சையும், பாடமும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். என்றாலும்கூட அதை  நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-