CJ for You: grace

grace

Showing posts with label grace. Show all posts
Showing posts with label grace. Show all posts

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Should my Guru grace will be help to relieve from problems? Please let know me how?!


என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்:

வாழும் மனிதர்களாகிய நமக்கு, பிரச்சனைகள் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம்? என்பதில்தான் அது உண்மையிலேயே பிரச்சனையா? பிரச்சனையாக தோன்றுகிறதா? கடந்துவிடக் கூடியதா? என்பது நமக்குத் தெரியவரும். பெரும்பாலானவர்கள் அதை ஏற்று, அதில் சிக்கிக் கொள்வதுதான் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. சிலர் அந்த பிரச்சனையில் சிக்கி, அதை சரி செய்யமுடியாமல் தோற்றுப்போய், வாழ்க்கையில் இருந்து விலகி ஓடிவிடுவதும் உண்டுதான். அதுதான் மிகப்பெரும் சோகம்.

இந்நிலையில், குழந்தையாக இருந்தால், நல்லதுதான் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் இக்கால குழந்தைகளுக்கும் அன்றாட சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குரிய அளவில் அவை இருக்கின்றன என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடுவார்கள். அப்படியானால், பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாத வயது எது? யார் அவர்கள்? என்றால், மூன்று வயது நிரம்பிடாத குழந்தைகள் தான் எனலாம். ஏனென்றால், அக்குழந்தைகள் மூன்று வயதுவரையிலும், தன்னியல்புக்கு வருவதில்லை. என்றாலும் கூட சில குழந்தைகள் விதிவிலக்கு.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? என்று கேட்டால், அதற்கான பதில் நிச்சயமாக உதவிடும். உதவிக்கொண்டும் இருக்கிறது எனலாம். இதை நான் உறுதியாகவே சொல்லுகிறேன். அப்படியானால், அதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது உங்களின் இன்னொரு கேள்வி. இதோ அதற்கும் பதிலை காணலாம். குருவருளின் உதவியை நாடும் நீங்கள், ஆன்மீக சாதனையில் உங்களை இணைத்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குரு அவர்கள் உங்களுக்கு வழங்கிய, யோக பயிற்சிகளை அன்றாடம் செய்துவருவீர்கள் என்றும் நினைக்கிறேன். அதை தொடர்ந்து செய்துவாருங்கள். உங்கள் பயிற்சிகளில் மனம் லயித்து செய்வதை உறுதி செய்யுங்கள். வெறுமனே கண்மூடி நிமிடங்களை கடத்துவதை விட்டுவிடுங்கள்.

தவம் செய்ய அமரும்பொழுதே, உங்கள் மனம், உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலில் இருந்தும், அந்த நேரம் மட்டுமாவது விலகி நிற்கிறதா? அதிலேயே உழல்கின்றதா? அந்த பிரச்சனைகளையே எடுத்துக்காட்டிக் கொண்டே வருகிறதா? இதை எப்படி நான் தீர்ப்பேன் என்று எண்ணி வருந்துகிறதா? இந்த தவம் செய்து என்ன ஆகப்போகிறது என்று உங்களை திசை திருப்புகிறதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தால், தவம் இயற்றாமல், சிறிது நேரம் அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து மனதை இயல்பாக்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகன்று, வேறு இடத்திற்கு செல்லுங்கள். அடிக்கடி உங்களைச் சுற்றிலும் ‘நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’ என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இதன் வழியாக மனம் விடுபட்டு, இயல்பாக இருக்க வழி கிடைக்கும். அதன் பிறகு தவம் செய்யலாம்.
தவம் இயற்றும் பொழுது, குருவை நினைந்து போற்று மகிழுங்கள். அவரிடம் சரணாகதி அடையுங்கள். நீங்களாக எதும் கேட்காதீர்கள். நீங்களாக எதும் சொல்லியும் புலம்பாதீர்கள். அமைதியாக உள்முகமாக, குருவை நினைந்து வணங்குங்கள். தவமும் இயற்றுங்கள்.

தவமுடிவில், ‘அருட்பேராற்றலின் கருணையினால், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்’ என்பதை மனம் ஒன்றி சொல்லுங்கள். வெறும் வார்த்தையாக இல்லாமல், ஒப்பிப்பது போலவும் இல்லாமல், அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள். நாளடைவில், குருவருள் உங்களுக்கு உதவுவதை உணர்வாகவும் பெறலாம். மேலும் உங்களுக்கு ஆலோசனை தேவையென்றால், நேரடியாகவும் என்னை அணுகலாம்! நானும் உங்களை குருவோடு, இறையருளோடு இணைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-

Method of realize the Divine by the words


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?


பதில்: 

பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.

ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.

அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!

இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.

அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும். 

வாழ்க வளமுடன்.