CJ for You: initiation

initiation

Showing posts with label initiation. Show all posts
Showing posts with label initiation. Show all posts

Pancha Bhootha Navagraha Penance has never been heard of. Will all this new penance help? And they say that everyone can do this? Do you know that penance has its own rule? If everyone could do it, it would be just a ritual.


பஞ்ச பூத நவக்கிரக தவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்படியெல்லாம் புதிது புதிதான தவம் எல்லாம் உதவுமா? மேலும் இதை எல்லோரும் செய்யலாம் என்றும் சொல்லுகிறார்களே? தவம் என்றால் அதற்கென்று ஒரு விதி இருக்கிறது தெரியுமா? எல்லோரும் செய்யமுடியும் என்றால் அது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். சரிதானே? விளக்கம் தருக.

நீங்கள் வேதாத்திரியத்தில் இல்லை என்று கருத இடமிருக்கிறது. கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே, அல்லது உங்கள் வயதிற்கு மேலாகவே, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம், வேதாத்திரியத்தின் வழியாக அன்பர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தவமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அன்பர்களுக்கு உதவும் வகையில், முழுமையான பலன்களை பெறுவதற்கும், தன் மனதை பிரபஞ்ச அளவில் விரித்துப்பழகிடவும் இத்தவம் உதவுகிறது. இதன் எளிமை கருதியே, வேதாத்திரியத்தில் அல்லாத மற்றவர்களும் இத்தவத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ளோர் இந்த, பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றி பயன் பெறுகின்றனர். உங்களைப் போல கேள்வி கேட்போர் தவிர்த்து விடுகின்றனர்.

பொதுவாக, இறையை வணங்கு, உனக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து எல்லோருக்கும் பொருந்தும் தானே? இதற்கு ஏதேனும் தனிப்பட விதி இருக்கிறதா? இல்லையே. வணங்குபவரின் மனம் ஒன்றிப்போனால் போதுமானது.

நீங்கள் சொல்லும் விதி, குண்டலினி யோகம் என்ற தியானத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதில் எட்டுவிதமான படிநிலைகளும் உண்டு. அதில் தியானம் என்பது ஏழாவது நிலையாகும். ஆனால், பஞ்ச பூத நவக்கிரக தவம் மிக எளிமையானது. இதில் எந்தவித தடையோ, பிரச்சனையோ, குழப்பமோ ஏற்பட வழியும் இல்லை. குண்டலினி என்ற உயிராற்றல் எழுப்பும், தீட்சைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குருவின் வழிகாட்டுதல், இதை எப்படி செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி, பஞ்ச பூத நவக்கிரக தவம், வீட்டிலே இருந்தபடி செய்யவும் முடியும்.

நீங்கள் சொல்வதுபோல, சடங்கும் சாதாரணமானது அல்ல. விதிகளை உள்ளடக்கியதுதான் சடங்கு என்றும் மாறிவிடுகிறது. ஆனால், இது தவம். இதில் சடங்கு என்பது இல்லை. மனம் ஒன்றிச்செய்யும் தவம், சடங்குகளைவிட மேலானது என்பதை அறிவீர்களா? இப்போது உங்களுக்கான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கூடுதல் விபரம் அறிய, இந்த காணொளி உதவும்.

பஞ்சபூத நவக்கிரதவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றமுடியுமா? எப்படி? ஏன்? #Vethathiriya

வாழ்க வளமுடன்

Suddenly, one day, I took initiation and learned penance. But I couldn't keep up. My living situation is not good, there is no peaceful place. Shall we leave it at that? What other way? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒருநாள் திடீரென, தீட்சை எடுத்துக்கொண்டு, தவம் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை. என்னுடைய வாழ்க்கை சூழ்நிலை சரியில்லை, அமைதியான இடமும் இல்லை. அப்படியே விட்டுவிடலாமா? வேறு என்ன வழி? விளக்கம் தருக.

எல்லோருமே, தீடீரென ஒருநாள் தான், மாற்றத்தையும், உண்மையையும் உணர்ந்து, இனியாவது, வாழ்வில் திருத்தம் பெறவேண்டும் என்று, குருவை நாடி சரணடைகிறோம் என்பதுதான் உண்மை. நாம் தேர்ந்தெடுத்தது எதுவேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் குருவை நாடினால், அவரின் வழிகாட்டுதல் எந்தவகையிலும் நமக்கு துணை நிற்கும் என்பது உறுதி. 

நீங்கள் மனவளக்கலை அன்பர் என்றால், உங்களுக்கான அடிப்படை பயிற்சிகள் போதுமானது. அதை உங்கள் வாழ்நாள் முழுவதுமே கடைபிடிக்கும் வகையில்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். அந்த நிலையில் இருந்து நீங்களாகவே, உயர வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்கு அடுத்த பயிற்சிகளில் நீங்கள் இணைந்து, அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதி என்ற வகையில் உயரலாம். அது உங்கள் விருப்பம் மட்டுமே தவிர, கட்டாயம் இல்லை.

பொதுவாகவே, நீங்கள் சொல்லுவது போல, சிலர் தொடர்ந்து செய்வதில்லை. ஏதோ வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்றுதான் போகிறது. காரணம், நீங்கள் சொன்ன அதே வாழ்க்கை சூழ்நிலைதான். இந்த பொருள்முதல்வாத உலகில், எல்லோருக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் உறங்கி எழுவதற்கு கூட போதாமல் இருக்கிறதுதானே? வேறுவழியும் இல்லை.

ஆனால், இந்த உழைப்புக்கும், ஓட்டத்திற்கும் நம்முடைய உடல், மனம், உயிர் ஈடு கொடுக்க வேண்டுமே? அது முக்கியமாயிற்றே? அதற்கு வழி என்ன? அதற்குத்தான் இருக்கிறது வேதாத்திரிய மனவளக்கலை. அதனால், ஏதேனும் ஒரு வகையில் அரைமணியோ, ஒருமணியோ நேரம் ஒதுக்கி, பயிற்சி மற்றும் தவம் செய்ய முறைப்படுத்திக் கொள்ளவேண்டும். அது மிக மிக அவசியம். எனவே இன்றே திட்டமிடுங்கள்.

இந்த காணொளியும் உங்களுக்கு உதவக்கூடும்.

தீட்சை எடுத்துக்கொண்ட பிறகும் தவம் செய்யாமல் தவிர்க்கலாமா? #vethathiriyayoga #meditation #thavam

வாழ்க வளமுடன்.

-

What happening between ourselves and our mind when we practice the meditation?


தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.

ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம்  செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள். 

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.  அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம்.  ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.

ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். 

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why often noted yoga only is the best way? Any other way not truly work?


எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


பதில்:

யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.

இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான்  உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.

ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.

வாழ்க வளமுடன்

-

Shall we get initiation, guidance on self realization from you as a Master?


உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.

பதில்:

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல்,  பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!

எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை  விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.

தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய வாட்சாப் http://wa.me/91944273450 என்ற கைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கலாம்.  வேதாத்திரிய கேள்வி பதில் வாட்சாப் குழு ’ https://chat.whatsapp.com/H9g30UE1iWf2H7aAeM1qHc ' உள்ளது, அதிலும் உங்களைக்குறித்த, விபரங்கள் சொல்லிவிட்டு பிறகு உங்கள் சந்தேகம் கேட்கலாம். நிச்சயமாக உங்கள் அறிமுகம் தேவை. அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை, தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.

சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாழ்க வளமுடன்
-

Why my experience in dhyan is simple instead of awesome of others experience?


தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?

பதில்:

இதுபோலவே நிறைய அன்பர்கள் என்னிடம் சொல்லியதுண்டு. அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகிறேன். வாருங்கள் அலசுவோம். முதலில், தியானம் என்பது குறித்த உண்மையை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளகூடாது. அதாவது நீங்களாகவே ஒரு நூலை வாசித்து, யாராவது குருவின் வாழ்க்கை வரலாறை படித்து அதுபோன்ற தியானம் அனுபவம் பெறலாம் என்று நினைத்து, தியானம் இயற்றக்கூடாது. முறையாக குருவிடம் தீட்சை வழியாக கற்றுக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழியாகும்.

உங்கள் குரு உங்களுக்கு எவ்வகையில் உபதேசமும், தியான முறையும் சொல்லித்தருகிறாரோ, அதன் வழியேதான் தியானம் செய்யவேண்டும். எந்தவகையிலும் நீங்களாகவே அதில் மாற்றம் கொண்டுவரக்கூடாது.  அதுபோலவே ஒரு தியானம் செய்வதற்கான நேரம் முக்கியமானது. அதை நீடிக்கவும், குறைக்கவும் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் தானாகவே தியானத்தில் ஆழ்ந்து நீடிக்குமானால் அதில் எந்த தவறும் இல்லை. அப்படி ஆழ்ந்து நீடித்தல், பல ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தில்தான் கிடைக்கும் என்பதால் அந்த பயமும் இப்போதில்லை.

தியானம் கற்றுக்கொள்ளும் அன்பர்கள், தங்களின் வயது, அனுபவம், வாழ்க்கை முறை, ஏற்கனவே பக்தியில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, முற்றிலும் புதிய அனுபவம் என்ற வகையில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் இருக்கும் என்பதால். ஒரு தியானம் எல்லோருக்குமே ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு வகுப்பில் உங்களோடு உள்ள அன்பர்களின் தியான அனுபங்களையும், ஏற்கனவே அனுபவம் மிக்க அன்பர்களின் தியான அனுபவங்களையும், உங்களுடைய தியான அனுபவங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது நல்லதல்ல. 

தியானத்தில் மனம் நிகழ்த்தும் மாயாஜாலம் யாராலும் புரிந்துகொள்ளவும் முடியாது. நீங்கள் உங்கள் வழியிலே செய்யும் தியானத்தில் என்ன நிகழ்கிறதோ? அதில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, குருவோடும், ஆசிரியர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களின் சக அன்பர்களோடு பகிரலாம். ஆனால் ஒப்பீடு தேவையில்லை. முக்கியமாக, மற்ற அன்பர்களின் தியான அனுபவங்களை எல்லாம் கேட்டு, அதை உங்களுடைய மனதில் ஏற்றிக்கொண்டு, எனக்கும் அதுபோல நிகழுமா? என்ற கேள்வியோடும், எனக்கும் அதுபோலவே நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரின் அனுபவம் அவருக்கு. உங்கள் அனுபவம் உங்களுக்கு என்பதுதான் உண்மையானது. இதில் எந்த ஒப்பீடும் உதவாது.

உங்கள் யோகபயணத்தில், நீங்கள் இயற்றுகின்ற தியானத்தில், உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களே மிகச் சிறந்தது என்பது உணர்ந்துகொள்ளுங்கள். அதையே சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள். உங்கள் யோகத்தில் சிறப்பான நிலையை அடையலாம்.

வாழ்க வளமுடன்
-

What is truth of fulfil lean yoga, service and teaching to others?


யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்த பிறகுதான் கிடைக்கும் என்பது சரியானதுதானா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான் என்பது சரியானதுதானா?

பதில்:

இந்த கேள்வியை சிறந்ததாக கருதுகிறேன். இந்த உலகத்தில், பக்தியை கடந்த, அதன் உண்மையான ‘நான் யார்?’ என்ற கேள்வியை துணைகொண்டு உண்மை அறிய, அதை ஆராய்ச்சி செய்ய, வேதாத்திரியம் போல பலதரப்பட்ட யோக வழிமுறைகளும், யோகம் அல்லாத உண்மையும், விடுதலையும் பெறும் அமைப்புக்களும், பக்தியோடு கூடிய ஆன்மீக நிலையங்களும் இருகின்றன. அதேபோல, சித்தர்களின் வழியிலான யோகமுறைகளும் இன்னமும் தொடர்கிறது என்பது உண்மை.

உங்களுக்கு விருப்பமான ஓர் வழியை, நம்பிக்கையான ஓர் வழியை, ஆராய்ந்து தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. வேதாத்திரியம் என்னுடைய வழி என்பதால், நான் உங்களை ‘கட்டாயப்படுத்த முடியாது’. அதே வேளையில், இன்னொன்றை குறை சொல்லவும் முடியாது. ஆனால் ஓவ்வொரு யோக முறைகளுக்கான உண்மை, நோக்கம், பயிற்சி, இவையெல்லாம் ஆராய்ந்து உண்மை சொல்வதில் தவறில்லை. அது நிச்சயமாக எது சரியானது? என்ற உங்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

வேதாத்திரியத்தின் பாடத்திட்டம், அந்ததந்த பயிற்சிகளின் வழியாக, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஆசிரியர் நிலை அடையலாம். பிறருக்கு தீட்சை வழங்குதலும், குறிப்பிட்ட பாடங்கள் நடத்துவதற்கும் அனுமதி தரப்படுகிறது. ஆசிரியர் பயிற்சியின் மேல் நிலையில், குறிப்பிட்ட தவ மையம் மட்டுமில்லாமல், எந்த தவமையத்திற்கும் சென்று பயிற்சியும் பாடமும் நடத்த தகுதி கிடைத்துவிடுகிறது. இத்தகைய எளிமை வேறெந்த யோக மையத்தில் இருப்பதில்லை என்றே கருத இடமிருக்கிறது.

இப்படியாக, எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான், யோகத்தில் நிறைவு வருமா? என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் இன்னொரு முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது. நீங்கள், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கு கற்றுத்தரும் முன்பாக, அதில் நீங்கள் ஆழ்ந்த உண்மையை, தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை உதாரணமாக சொல்லுவதென்றால். முப்பத்தி மூன்று வயதில் முழுவதுமாக தன்னை யோகத்தில் இணைத்துக்கொண்ட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான், தன் அனுபவத்தை கவிகளாகவும், கட்டுரைகளாகவும், திட்டமாகவும், பாடங்களாகவும் வெளிப்படுத்தினார். அதுவரையிலும் தான் அறிந்து கொண்டதை, ஆராய்ச்சி, ஆராய்ச்சி எனவே காலத்தை செலவு செய்தார். இதில் அவரின் கண்ணும் பாதிக்கப்பட்டது, உடலும் பாதிக்கப்பட்டது என்று அவரே தன்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வார்த்தையாக சொல்லுகிறார்.

எனவே நீங்களும் அத்தகைய, ஆராய்ச்சியில் இறங்கி, உண்மையை அறிந்து, அந்த தெளிவினில் பிறருக்கு தீட்சையும், பாடமும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். என்றாலும்கூட அதை  நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

What is the kind of knowing through yoga extremely needed?


இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


பதில்: 

ஏதோ மிக சலிப்பாக கேட்பதுபோல தோன்றுகிறது. வாழும் இந்த வாழ்க்கையில், யோகத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவம் அப்படி ஆகிவிட்டதுதான் என்னசெய்ய? இந்த பொருள்முதல்வாத உலகில், பணத்தையும், வசதி வாய்ப்புக்களையும், வேலைவாய்ப்புக்களையும் தேடுவதற்கே நேரம் போதவில்லையே, இதற்கிடையில் யோகம் வேறா? என்ற சிந்தனையில்தான் இந்தக்கேள்வி பிறக்கிறது. தவறில்லை இது இயல்புதான்!

ஆனால், இந்த உலகில் பிறந்து வாழ்ந்து வெறுமனே மறைந்து போவது ஏன்? எதற்காக பிறந்தோம்? எதற்காக இப்படி வாழ்கிறோம்? வாழும் பொழுது இன்பமும் துன்பமும் ஏன்? துன்பம் நீக்கி வாழ வழி என்ன? நம்முடைய மூலம் என்ன? அது என்ன ஆறாவது அறிவு? எதற்கு பயனாகிறது? இந்த இயற்கை என்பது என்ன? இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், இந்த உலகை விட்டு நீங்கிவிடுவது சரிதானா?

வாழ்நாள் எல்லாம் தன்னை வருத்திக்கொண்டு, உழைத்து வருமானம் ஈட்டியதும், வாழ்க்கைக்கான பொருளை சேர்த்ததும், வீடு, வாசல், தோட்டம், தொறவு என்று பிரமாண்டம் காட்டியதும், பகட்டாக ஆடையணிந்து, நகை அலங்காரம் கூட செய்து, மிடுக்காக வாழ்ந்ததுமான இப்படி எல்லாவற்றையும் நொடியில் விட்டுவிட்டு போவதின் அர்த்தம் என்ன? இப்படி விட்டுவிட்டு போவதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?! என்றெல்லாம் சிந்தனையும், ஆராய்ச்சியும் செய்வதே இல்லையே?!

இதற்கெல்லாம் விடைதேடியே யோகத்திற்கு வருகிறோம். குருவின் துணையோடு பயணிக்கிறோம். இதெல்லாம் தெரிந்துதான் ஆகவேண்டுமா? அப்படி தெரிந்து கொண்டு என்னதான் ஆகப்போகிறது? என்பதுதானே உங்கள் கேள்வி? அப்படி உங்களுக்குத் தோன்றினால் விட்டுவிடலாம். இந்த பிறவியை எப்படி நீங்கள், இப்பொழுது வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்து கடந்து செல்லுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை!

உள்ளுணர்வாக உங்களுக்கு தோன்றாத வரையில், நீங்கள் யோகத்திற்கு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி வரவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு தேவையில்லை. Just like that, என்றபடி இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து முடியுங்கள். அதிலே நீங்கள் திருப்தி அடையுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

Upadesh Mantra from the Guru!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குருவால் கிடைத்த உபதேச மந்திரம்  சொன்னால் இறையுண்மை அறியமுடியுமா?.


பதில்:

இந்த உலகில், இறையுண்மை எனும் மெய்ப்பொருள் உண்மை அறிய, பக்தி வழி, வேதாந்த வழி மற்றும் யோகவழி உண்டு. பக்தியைக்கூட வேதாந்தமாக சொல்லுவோரும் உண்டு. இந்த வேதாந்தம், யோகம் இரண்டுமே ஒரே நோக்கம் கொண்டது. ஆனால் பாதைகள் வேறு ஆகும். இரண்டு பாதைகளுமே குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும், அது பயணாளியின் நம்பிக்கை, ஆர்வம், முயற்சி, செயல்பாடு, ஆராய்ச்சி, அர்பணிப்பு என்ற வகை நிர்ணயம் செய்யமுடியும். ஒரு மனிதரால் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ? அதை ஏற்று பயணிக்கலாம். எதை விரும்புகிறாரோ அதை விரும்பியும் பெற்று பயணிக்கலாம். எது சரியானது என்று தீர்மானிக்கிறாரோ அதன்படி அவ்வழியே செல்லலாம். அந்த வகையில் குறை நிறை என்றெல்லாம் சொல்லமுடிவதில்லை. என்றாலும் கூட வேதாந்தம் என்பது அருகில் கொண்டுபோய் நிறுத்தும் என்றுதான் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதை அடைவது என்பது யோகத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் உலகில் மாற்றுக்கருத்துகள் உண்டு!

ஒரு உபதேச மந்திரம் என்பது ஒரு குருவால், பக்தி வழியிலும் கிடைக்கலாம். வேதாந்த வழியிலும் கிடைக்கலாம். இந்த உபதேச மந்திரம் குருவால், அந்த புதிய, ஆரம்ப சாதகருக்கு, சீடருக்கு தனியாக, ரகசியமாக, பிறருக்குத் தெரியாமல், அறியாமல், காதுவழியாக சொல்லப்படுவது ஆகும். இந்த உபதேச மந்திரத்தை மனதிற்குள்ளாகவே சொல்லுவதும் உண்டு. தவ நிலையில் அமர்ந்து ஒலிக்குறிப்பாக சொல்லுவதும் உண்டு. இந்த வழியை, பதஞ்சலி முனிவர் தன்னுடைய அஷ்டாங்க யோகத்தில் ‘பிரத்தியகாரா’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி உபதேச மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தால் மனம் லயப்பட்டு, ‘தாரணா’ என்ற நிலைக்கு உயரும். தன் வழியாக ‘தியானம்’ கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு!

எனவே உங்களுக்கு அப்படியான ஒரு உபதேச மந்திரம் கிடைத்தால், தாராளமாக உள்வாங்கி சொல்லிவரலாம். எத்தனை முறை, எவ்வளவு காலம் என்ற கணக்குகள் இதில் அடங்காது. உங்கள் மனம் அதில் லயிக்கும் காலம் வரை சொல்லிக்கொண்டே வரலாம். அந்த நிலையின் ஏதோ ஒருநாள் இறையுண்மையை நீங்கள் உணரலாம்.

திருவண்ணாமலையில், வாழ்ந்து வந்து வாழ்ந்து, முக்தியடைந்த, யோகி ராம் சுரத்குமார் அவர்கள், தன்னுடைய குருவான சுவாமி பப்பா ராம்தாஸ் என்பவரிடம் இருந்து, உபதேச மந்திரம் கிடைக்கப்பெற்றார். அதுதான் பின்னாளில் அவர் சொன்ன,

‘ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்! ஓம்!’ என்பதாகும்!

வாழ்க வளமுடன்.

Someone told to me, the vasiyoga is the best way. Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று என்னிடம் சொல்லுகின்றனர். அது சரிதானா?


பதில்:

சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று அவர்கள் சொல்லுவதில் தவறில்லை. ஆனால், இப்போது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாயிற்றே. ஏற்கனவே வாசியோகத்தின் வழியாக, குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து மேலேற்றி, ஆக்கினைக்கு கொண்டுவந்து நிறுத்திப் பழகியவர் மட்டுமே, அதை பிறருக்கு சொல்லமுடியும். இந்தப்பயிற்சியில் ஏகப்பட்ட தடைகள் வரலாம். உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் வரக்கூடும். எல்லோருக்குமே முதல் முயற்சியிலேயே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி எழுந்துவிடுவதும் இல்லையே. முதலில் இதற்கான நுட்பத்தை சொற்களால் விளங்கிக் கொள்வதே கடினம்.

சரி, இன்னமும் இந்த வாசியோகம் முறையில்தான், குண்டலினி சக்தியை ஏற்றிக்கொள்ள வேண்டுமா? வேறு ஏதேனும் வழிகளே இல்லையா? கிடையாதா? கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாதா? அப்படி பயன்படுத்தினால் என்னதான் சிக்கல்?

சித்தர்கள் காலத்தில், கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட அதே வாசியோகம் தான் இன்னமும் இருக்கிறது என்று எப்படி நம்புவீர்கள்? அதுப்போலவே அந்தக்கால கடின சாதனைகளை இப்போதும் நாம் செய்யத்தான் முடியுமா? அதற்கான உடல் வலுவும், மன வலுவும் கூட இருக்கிறதா? 

ஆனால், இயற்கையும், அந்த தெய்வீகமுமே, சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, ஏற்கனவே தன்னிலை அறிந்து, மெய்ப்பொருள் அறிந்த ஒருவர், தன்னுடைய தவ ஆற்றல் சக்தியினாலேயே, மற்றறொருவருடைய குண்டலினி சக்தியை தொட்டு எழுப்பி, உடனடியாக, ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற விளக்கம் வந்துவிட்டதே?! குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் ஆண்டுக்காலத்திற்கு முன்னேலாயே நடைமுறையில் இருந்திருக்கிறது.  ஆனால் பரவலாக்கப்படவில்லை. ஆனால், வேதாத்திரி மகரிசி தானும் பெற்று, விளங்கிக் கொண்டு, தன்னுடைய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ வழியான ‘மனவளக்கலை’ மூலம் உலகில் உள்ள எல்லோருக்கும் கற்றுத்தந்து இன்னமும், அந்த தொட்டு எழுப்பி உயர்த்தும் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், இன்னமும் பழமையே சிறப்பு என்று தன்னை வருத்திக்கொள்வதில் பலன் என்ன? காலம்தான் வீணாகும் அல்லவா? ஆனால் உங்கள் விருப்பம்போல தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அதையாரும் தடுப்பதற்கில்லை!

வாழ்க வளமுடன்.

-

Please let me know the rules for a Yogam who one follows!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?


பதில்: 

நிச்சயமாக இருக்கிறது. ஆனால் இப்போது நம்மிடையே இருக்கும் அறிவிலிகள் சொல்லுவது போன்ற சட்ட திட்டங்கள், வரைமுறைகள் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் இணைவதற்கே பல ஆண்டுக்காலம் ஆகும் என்பது நடைமுறையில் இருந்தது. அதுவும் குருவின் ஆசி என்ற கடைக்கண் பார்வையும் வேண்டும் என்பார்கள். பிறந்தபொழுதே யோகத்தில் சிறக்க அமைப்பு இருந்தாலும்கூட உடனடியாக இணைய வாய்ப்பில்லை. 

காலமாற்றத்தில், அஷ்டாங்க யோக சூத்திரத்தை, பதஞ்சலி முனிவர் வகுத்துவைத்தார். ஒரு குருவை அணுகி யோகத்தில் இணைந்து உயர்வது போலவே, தானக்குதானாகவும் இந்த அஷ்டாங்க யோக சூத்திரத்தை கடைபிடித்தால், யோகத்தில் உயரலாம் என்பது உண்மையாகிற்று. எனினும் கூட, தீட்சை என்ற குண்டலினி உயர்த்துதல் என்பதை, யாருமே தானாக கற்றிட முடியாது. அப்படி தானாக கற்றிட பல முறைகள் உண்டு என்றாலும் கூட, உயர்ந்த குண்டலினி பலவித உடல், மன, உயிர், வாழ்க்கை பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தவிர்க்கமுடியாதது. இதனால் நிச்சயமாக குரு வேண்டும்.

இந்த பதஞ்சலி முனிவரின், அஷ்டாங்க யோக சூத்திரத்தை கவனித்தால், அதில் அடிப்படையான சில பாடங்களும் வழிமுறைகளும் இருப்பதை காணலாம். இயமம் என்ற தன்னை திருத்திக் கொள்ளும் சட்டமும், நியமம் என்ற யோகத்திற்காக தான் ஏற்றுக்கொள்ளும் சட்டமும் கடைபிடிப்பது அவசியமாகிறது. அதற்கான பிறகுதான் ஆசனம் என்ற உடற்பயிற்சியை கற்று உடலை, மனதை வளமும், திடமும் செய்துகொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது.

இதை நீங்கள் கவனித்தால், இயமம், நியமம் இந்த இரண்டிலேயே முழுமையாக, அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு யோகி, யோகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டு, அதன்படி வாழவும் தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறார். அப்படியான நிலை இருக்கும் பொழுது, பொதுவாழ்வில் இருக்கின்ற அறிவிலிகள் அப்படி, இப்படி என்று இல்லாத சட்டங்களை சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்னென்ன என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இங்கே அதைச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே யோகத்தில் ஒருவர் இணைந்துவிட்டால் அதற்கான சட்டம் இருக்கிறது. இதுவழிவழியாக தொடரப்பட்டும் வருகிறது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்.

How the thinking of the Guru in mind will helps?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குருவின் நினைவு எந்த அளவுக்கு நம்மை உயர்த்திடும் என்று விளக்குவீர்களா?!


பதில்: 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 

தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே!

என்று திருமந்திரம் தந்த, மகான் திருமூலர் குறிப்பிடுகின்றார். தனக்கு யோக தீட்சை தந்த குருவை மட்டுமின்றி, எந்த ஒரு குருவையும் நாம் நினைத்து உயரலாம். அதை இங்கே வரிசைப்படுத்தி சொல்வதிலேயே நமக்கு புரிந்துவிடும். ஒரு குருவை பார்ப்பதும், அவர் அருகில் இருப்பதும் ஒருவகை. குருவின் பெயரையே மந்திரமாக, வாழ்த்தாக சொல்லி மகிழ்வது ஒருவகை. குருவின் சொற்பொழிவை, வார்த்தைகளை கேட்டு உணர்வது ஒருவகை. குருவையே நினைவில் நிறுத்தி, அவரை மனக்கண்ணால் கண்டு மகிழ்வதும், சிந்திப்பதும் உயர்வான வகை என்று திருமூலர் தன் கவியில் விளக்குகிறார்.

மனம் எப்போதும், ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டே இருக்கக்கூடியது. அது தானாகவும் நிகழும், நாமே விரும்பியும் சிலவற்றை பற்றிக் கொள்வோம். அந்த வகையில்,  குருவை நாம் நினைத்து சிந்தித்தால், நிச்சயமான உயர்வு உண்டு என்பதே உண்மை ஆகும்!

வாழ்க வளமுடன்.

Shall we learn kundalini yoga self from old notes or books?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பர் ஒருவர், சித்தர்களின் நூல்களை படித்தே குண்டலினி சக்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார். அது சரியா?


பதில்:

குரு இல்லாத வித்தை பாழ் என்று ஒரு பழமொழி உண்டு. அதை அந்த நண்பருக்கு சொல்லுங்கள். அந்தக்காலங்களில் வழிவழியாக குருகுலம் என்ற வகையில், குருவின் நேரடி பார்வையில்தான் யோகம் கற்றுத்தரப்பட்டது. யோகத்தில் விருப்பமில்லாதவர்களுக்கு, பக்தியும், வழிபாடுகளும் போதும் என்றும் சொல்லப்பட்டது. இன்றைக்கு அந்த குருகுலம் இல்லை. பக்தியும் வேறுமாதிரி திரிந்து விட்டது.

சித்தர்களின் நூல்களில் இலைமறைகாயாக யோக பயிற்சி முறைகள் சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதெல்லாம், பரிசோதனைக்கும், ஒப்பிட்டுப்பார்க்கவும் தான் உதவுமே தவிர, நேரடியாக இந்தமாதிரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அதாவது பயிற்சி முறைகளாக, படிப்படியாக சொல்லவில்லை. ஆனால் உண்மை இருக்கிறது அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யோகம், தகுந்த ஒரு குருவின் வழியாகவே பெறவேண்டும். தீட்சையும் அவர் கண்காணிப்பில்தான் பெறப்பட வேண்டும். இன்றுதான் காலம் மாறிவிட்டதே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை இருக்கிறதே? மேலும் அது தொட்டுத்தரும் தீட்சையாகவும் மலர்ந்துவிட்டது. அந்தக்காலம் மாதிரியான கடின முறைகளும் கிடையாதே!

மேலும், யோகத்தை கற்றுக்கொள்ள வேறு பல யோக மையங்களும் இங்கே உருவாகிவிட்டன. யாரும் எங்கு வேண்டுமானலும், யோகம் கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைக்கிறது. இனிமேலும், நூல்களை படித்து தானாகவே கற்றுக்கொள்வேன் என்பது அவசியமில்லை. இதனால், காலவிரயம் மட்டுமல்ல, அறிவுத் தடங்கலும் ஆகிவிடும்.

முக்கியமாக, தானாக பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் படித்து யோகம் கற்க ஆரம்பித்தால், அந்தக்காலம் மாதிரியே, குண்டலினி சக்தி பாதையில் தடை வந்தால் என்ன செய்வீர்கள்? எப்படி அதை போக்குவீர்கள்? மூலாதாரத்தில் இருந்து ஆக்கினை செலுத்துவதற்கு முயற்சிக்கையில், அதற்கு இடையிலான மற்ற ஆதாரங்களில் நின்றுவிட்டால், அது உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும்  சிக்கலை உருவாக்கிவிடுமே? வாழ்நாளையும் சிதைக்கும் அளவுக்கு மாறிவிடவும் கூடும். அவற்றை, அந்த தடைகளை நீக்கிடவும், பாதிப்பில்லாமல் மேல்நோக்கி நகர்த்தவும் அறிவாரா? இப்படி இன்னும் நிறைய பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால். அவரை, உங்கள் நண்பரை ஏதேனும், யோக மையங்களில் இணையச்சொல்லி அறிவுரை சொல்லுங்கள்!

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உடல் நலம் சீர்கெடும், நிற்க நடக்க முடியாமல் போகலாம், பேச்சில் குழப்பம், சிந்தனையில் பதட்டம், புத்தி தடுமாற்றம் பெறும், மன நலம் பாதிக்கும், பிற ஆவி, ஆன்மாக்களின் தொந்தரவும் வரும் என்பதை அவருக்கு தெளிவுபடுத்துக!

வாழ்க வளமுடன்.  

Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 02


 குருவை சரணடைவோம் - பாகம் 02


கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும்.  வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.


கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!

இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம். 


குருவை தேடும் காலம் எது?

ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள். 

கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.


நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை

அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும். 


அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!

எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. 

உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.

உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே.  வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம். 

வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 01


 குருவை சரணடைவோம் - பாகம் 01


உலகின் சிறப்பு என்ன?

இந்த உலகின் சிறப்பே, நேற்றிருந்தோர் இன்றில்லை என்பதே என்றார் அய்யன் திருவள்ளுவர். ஒரு மனிதனின் வாழ்க்கை, சாராசரியாக அறுபது ஆண்டுக்காலம் என்று வைத்துக்கொண்டால். அந்த ஆண்டுகளில் இறை உணர்வு பெற்று, உண்மை விளக்கத்தோடு பிறப்பின் கடமையை முடித்துவிட முடிகிறதா என்றால், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. ஒரு சிலருக்கே நிகழ்கிறது என்பதும் உண்மை.


வாழும்காலம் போதவில்லையே?!

பெரும்பாலான மனிதர்களுக்கு, தான் பிறந்த குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை தீர்க்கவே முழுகாலமும் செலவாகிறது. சிலருக்கு கல்வி கிடைப்பதில்லை, சிலருக்கு வேலை கிடைப்பதில்லை, வேலையும் தொழிலும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் கெட்ட நட்புக்கள், வழக்க பழக்கங்கள் இவற்றில் சிக்கி திசை மாறுதல் நடந்துவிடுகிறது. தன் தவறுகளால் சிக்கிக்கொள்ளுதல், தானாக, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைதல் உண்டு. சிலர், எதிர்கால பயம், குழப்பம் இவற்றால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கின்றனர். சிலருக்கு தீடீரென வரும் நோய் அவற்றால் முடக்கம் அல்லது நோய்தொற்று இவற்றாலும் வாழ்க்கை பாதிக்கிறது. இப்படியாக வாழ்க்கையை முழுமையாக வாழக்கூட வழியில்லை.

இத்தகைய சூழலில், பிறப்பின் கடமையாக, தன்னை அறிதல், இறை உணர்தலுக்கு ஏது வழி? என்றுதான் பொதுவாக தோன்றும். உண்மையாகவே, இத்தனை குழப்பங்கள் உங்களை சூழ்வதே இறையாற்றலின் விளைவால்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த புவியில் உங்களின் பிறப்பு நீங்கள் கேட்டு வாங்கவில்லையே? அது உண்மைதானே? அப்படியென்றால் உங்கள் பிறப்பின் உள் அர்த்தம், உண்மை என்னவாக இருக்கும்? 


உங்கள் பிறப்பின் ரகசியம்!

என்னையா இது? ஆண் பெண் சேர்ந்தால் ஒரு குழந்தை பிறக்காதா? என்று கேட்பீர்கள். எல்லா சேர்க்கையிலும் குழந்தை என்றால் இப்புவி தாங்காது. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம், வினைப்பயனே ஆகும். கர்மா என்று வடமொழியில் சொல்வார்களே அதுவே. அவ்வினைகளை தீர்க்க, புதிய அவதாரமாகவே ஒரு குழந்தை இந்தபுவியில் பிறக்கிறது. ஏன் தீர்க்க வேண்டும்? அப்போதுதான் உங்கள் பிறவி முழுமை அடையும். பிறப்பது யார் என்பதும் தெரியும். ஆதிகால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை தன் வாழ்க்கையை, திசைமாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கிறான், தன் இலக்கை எதுவென்று தீர்மானிக்காமல்.


வழிகாட்ட வந்தவர்கள்!

அந்த இலக்கை சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள் சொல்லிச்சென்றார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறையும் ஞானிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பக்தி மார்க்கம் வணிகமாகி, வாழ்க்கையை சிறப்பிக்காத நிலையிலும், அதை விட்டு விலகினால், இறையின் சாபம் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். யோகமார்க்கத்தை விட பக்தி மார்க்கம் எளிதாக இருக்கிறது. ஏதோ மனிதனால் ஆன, வழிபாடு, பூஜை, படையல், தேங்காய் உடைத்தல், பொங்கல் படைத்தல், அம்மாவாசைக்கு பிண்டம் வைத்தல் என்று சுலபமாக செய்யமுடிகிறது, இது போதாதா? இறைவனையும், முன்னோர்களையும் குளிர்விக்க! இதெல்லாம் இந்து மதத்தில் மட்டுமா என்ன? எல்லா மதங்களிலும் கடவுளை குளிர்வித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

 எத்தனையோ ஞானிகள் சொன்னாலும், வழி நடத்தினாலும்,  இவன் கேட்டபாடில்லை. நான் வாழப்பிறந்தேன், உண்ணப்பிறந்தேன், அனுபவிக்கப்பிறந்தேன் என்றே சொல்லிச்சொல்லி வாழ்க்கை சூழலில் சிக்கி சிதறடிக்கப்படுகிறார்கள். 

சரி கர்மா என்பது என்ன? அது என்ன தலைவிதியா அல்லது தலைஎழுத்தா? அடுத்த பதிவில் காண்போம். 

வாழ்க வளமுடன்.


Note: அடுத்த பதிவில் தொடர்கிறது