CJ for You: zodiac chart horoscope

zodiac chart horoscope

Showing posts with label zodiac chart horoscope. Show all posts
Showing posts with label zodiac chart horoscope. Show all posts

They say there is a planetary dosha in my horoscope. As a remedy for this, they say that a puja should be performed, which will cost so much money. I don't have that much money. While there is hope in that, is there any simple solution?


வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய ஜாதத்தில் கிரக தோஷம் இருப்பதாக சொல்லுகிறார்கள். இதற்கு பரிகாரமாக, பூஜை செய்யவேண்டும், அதற்கு இவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணமும் இல்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், ஏதேனும் எளிய தீர்வு இருக்கிறதா? இருந்தால் எனக்கு சொல்லுவீர்களா?

கிரக தோஷம் என்பது, நாம் பிறந்த பொழுது இருக்கிற கிரக நிலைகளின் அடிப்படையில் அமையும் நிலைகளாகும். இது என்றும் மாறாதது. எனினும் பரிகாரம் செய்வதால், நம்முடைய உடலும், மனமும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் பக்குவதை பெற்றுவிடும். பொதுவாக, நம்முடைய உடலில் ஒவ்வாத பிரச்சனையும், நோய்க்கான அறிகுறியும் வந்தால், மருந்து எடுத்துக் கொள்கிறோம். ஒருபக்கம் நோயை தீர்க்கவில்லை என்றாலும், அந்த நோய் தாக்கத்தை, தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அளிக்கிறது அல்லவா, அதுபோல பரிகாரமும் செயல்படும்.

பரிகாரமே இல்லை என்பதுதான் உண்மையான கருத்து. ஆனால், இதை வியாபாரமாக செய்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஜாதகத்தின் வழியாக, பரிகாரம் வேண்டுவோருக்கு நன்மைகள் செய்துதரும், உண்மையான ஜோதிடர்களும் இருக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடவும், அங்கே சில பூஜைகளை செய்யவும் உதவுவார்கள். சிலருக்கு, காசி, ராமேஸ்வரம் என்றும் போய்வர சொல்லுவார்கள். நதி, கடல் நீர் நிலைகளிலும் பூஜை செய்ய வழிகாட்டுவார்கள். இவை எல்லாமே, நமக்கு ஓரளவில் திருப்தி அளிக்கும். மன உறுதியை தந்து, பரிகாரமாக செயல்பட்டு, வழக்கமான நம் வேலைகளை பார்த்திட உதவும்.

இத்தகைய பரிகாரம், உண்மையிலேயே நம்முடைய நேரத்தையும், பணத்தையும் எடுத்துகொள்ளும் என்பதுதான் நிஜம். ஆனால் இது வியாபாரமாக செய்யும் ஏமாற்றுவேலை அல்ல. அந்த அளவில் திருப்தி பெற்றுக் கொள்ளலாம்.

எனினும், பக்தி கடந்த, பக்தியின் உண்மை நிலையாகிய, யோகத்தில், நாமே நமக்கான பரிகாரத்தை செய்துகொள்ள முடியும். நம்முடைய கர்ம வினைகளையும், அதன் பாவப்பதிவுகளையும் நாம் போக்கிக் கொள்ளமுடியும். இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தியானம், தவம் செய்து தீர்க்கலாம். வேறு ஏதேனும் பெரும் செலவு இதில் இல்லை. மேலும் இருக்கும் இடத்திலேயே செய்துகொள்ளலாம். வேதாத்திரிய மனவளக்கலையில் வழங்கப்படும், பஞ்ச பூத நவக்கிரக தவம், மிகச்சிறந்த தேர்வு ஆகும்.

இதை யார்வேண்டுமானாலும் இயற்றலாம் என்பது அதன் மற்றொரு சிறப்பு. தனிப்பட்ட தீட்சை அவசியமில்லை. வயது வித்தியாசமும் இல்லை. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறியலாம். கூடுதலாக, பஞ்ச பூத நவக்கிரக தவம் காணொளியும் உள்ளது.

இந்த தவம் எப்படி செய்வது? அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கண்கள் மூடி இறைவணக்கம் செய்வது போன்று பாவனை செய்யலாம். கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து, மடியில் வைத்துக்கொள்ளலாம். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும் வேண்டும். சுகாசனம் என்ற நிலை போதும், அதாவது சம்மணம் இட்டு உட்கார்வது போல.

ஒரு ஒலிபெருக்கி வழியாக, இந்த கானொளியை ஒலிக்கச்செய்து, அதன் வார்த்தைகளை கேட்டு, வேறெந்த கற்பனையும் எழுப்பிக் கொள்ளாமல், வெளியே என்ன நடக்கிறது? என்று சிந்திக்காமல் இருந்தால் போதுமானது. அரைமணி நேரத்திற்குள் தவம் முடிந்துவிடும். இப்படியாக தினமும் காலையும், மாலையும் செய்துவரலாம். இதுவே மிகப்பெரிய பரிகாரமாக வாழ்வில் செயல்படுவதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு கணக்கு ஏதும் இல்லை. தினமும் இதை செய்வதால், எண்ணற்ற நன்மைகளை பெற, உங்களை தகுதியாக்கிக் கொள்கிறீர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

உங்கள் ஜாதகம் வழியாக பரிகாரம் என்னவென்று தேடுகிறீர்களா? உண்மை விளக்கம் அறிக! Human Astrology Planets

பஞ்சபூத நவக்கிர தவம் நடத்தும் வேதாத்திரி மகரிஷி / Panchabhutha Navagraha Thavam Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

How do the planets tell the record of human sins and karma? Isn't that unbelievable? Do we humans have anything to do with the planets? Sounds like a myth, isn't it? Aren't these planets, planets, stars and horoscopes paralyzing a living person?


ஐயா, கிரகங்கள் எப்படி மனிதனின் பாவப்பதிவுகளை, கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறது? அது நம்பமுடிவதாக இல்லையே? மனிதனாகிய நமக்கும் கிரகங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? ஏதோ கட்டுக்கதை போல இருக்கிறதே? வாழும் மனிதனை முடக்குவது போலத்தானே இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரம், ஜாதகம் என்பதெல்லாம் இருக்கிறது? சரிதானே?

உங்களைப்பொறுத்தவரை அது சரி என்றே வைத்துக்கொள்க. ஆனால், அது பொய் என்றால், நீங்கள் ஆராய்ந்தீர்களா? விஞ்ஞான அறிவோடு, மற்றவர்களோடு கலந்து, சில வானியல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிட ஆய்வாளர்கள் இவர்கள் தரும் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவு கண்டீர்களா? நீங்களே ஏன் ஜோதிடம் படித்து அதன் உண்மைதன்மையை அறிய முயற்சிக்க கூடாது? அட அது பொய்தான் என்று நிரூபணம் செய்வதற்காக படிக்கலாமே?

உங்கள் விஞ்ஞானத்தின், வானியல் ஆராய்ச்சியாளர், Brain Cox என்பவர், மனிதன், நட்சத்திரங்களில் இருந்து வந்தவன் என்கிறாரே? அது சரியா? மனிதனின் மூலம், நட்சத்திரங்களிடம் உள்ளது என்றும் அவர் சொல்லுகிறாரே? அது குறித்தாவது சிந்தனை செய்தீர்களா?

வழக்கமாகவும், ஏற்கனவே சொன்னது போலவும், இங்கே ஒன்றை சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வது ஒரு பூமியில். இந்த பூமி ஒரு கிரகம் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா? இது வான்வெளியில், சூரிய குடும்பத்தில் உள்ளது என்பது தெரியுமா? மிதந்து சுழன்று, உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அன்றுவந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா! அது உண்மைதானே? நீங்களும் நானும் பார்க்கும் நிலா என்ற சந்திரன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது அல்லவா? நமக்குப்பிறகும் அது நிற்கும். அது தன்னுடைய ஒளியை, ஆற்றலை, அலைகளை பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கும். பாதிப்புக்களை தந்துகொண்டுதான் இருக்கும். அதை இந்த பூமியும், மனிதர்களும், உயிர்களும், பொருட்களும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கும் அல்லவா? இல்லை என்று மறுப்பீர்களா? உங்களுக்கு தெரியவில்லை என்பதால், இல்லை என்று மறுப்பது சரியாகுமா?

ஜோதிடம் ஒரு வழிகாட்டி. அப்படியாக புரிந்து கொள்ளாமல், அதை நம்பி முடங்கிக் கொள்வதுதான் முட்டாள்தனம். ஆனால், எனக்குப்பிடிக்காது என்று அதை அறியாமல், புரியாமல் ஒதுக்கித்தள்ளுவது அதைவிட கீழானதுதான். வேப்பங்காய் கசக்கும் பிடிக்காது என்றால், அதை நீங்கள் மருந்தாகவும் உட்கொள்ள முடியாது அல்லவா?

எனவே, இப்பொது உங்களுக்கு தேவை, புரிந்துகொள்வது முக்கியம். அதை உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள். அதில் ஏமாற்றம் வந்தால், பிறகு உங்கள் நிலைபாட்டை தொடரலாம். அது உங்கள் விருப்பம். இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரலாம்.

உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா? #astrology

வாழ்க வளமுடன்.

-

If you do Navagraha penance, how is it beneficial? Does the horoscope have anything to do with it? Will this penance serve as a form of atonement? What is the truth? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, நவக்கிரக தவம் செய்தால், அது எப்படி நன்மை தருகிறது? ஜாதகத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த தவம் ஒருவகையில் பரிகாரமாக செயல்படுமா? உண்மை என்ன? விளக்குக.

மனிதனின் பிறப்பு, அவனுடைய வாழ்வின் நோக்கம், அதிலிருக்கும் கடமை இப்படி எதுவுமே அறிந்துகொள்ளாது, பிறந்தோம் வாழ்ந்தோம் போகப்போகிறோம் என்று வாழும் மனித கூட்டம் ஒருபுறம். இறைவனாவது, இயற்கையாவது, கிரகங்களாவது, ஜாதகமாவது ஒன்றாவது, எல்லாமே நம்ம கையில்தான் என்று, தனித்து எல்லாம் அனுபவித்து வாழும் கூட்டம் ஒருபுறம். இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அடுத்தவரின் வளம் பறித்து தான்மட்டுமே வாழும் கூட்டம் இன்னொருபுறம். இப்படியாக பல்வேறு மனிதக்கூட்டம், நம்மோடுதான் வாழ்ந்து வருகிறது.

இந்த கூட்டங்களோடு, மனிதவாழ்வை உயர்த்திட விரும்பிய, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் அறிவுரை நாடிச் சென்று, தன்னையும், தன் வழியாக வரும் வாரீசுகளையும் நல்வழிப்படுத்த நினைப்பவர்கள் பலர். இந்த உலகம் இவர்களால்தான், இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. உண்மையை மறுப்பது என்பது வேறு, எது உண்மை என்று அறிந்து கடைபிடிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்குமான வித்தியாசம் அறியாதவர்களின் வாழ்க்கைதான், இவ்வுலகில் ஏனோதானோ என்று இருக்கிறது. உண்மை என்னவென்றால், அது குறையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் அந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடவும் வாய்ப்பின்றி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

இந்த நிலையில், இப்படியான கேள்வியும், அதை அறிய விரும்பும் ஆர்வமும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மனித உயிர்கள் மட்டுமல்ல, இந்த உலகில், நாம் காணும் எல்லா பொருட்களும், உயிர்களும் உருவாகவும், இயங்கிடவும் ஒரு பேராற்றல் துணையாக இருக்கிறது. அதைத்தான் நாம் இறையாற்றல், மெய்ப்பொருள் என்று உயர்வாக சொல்லி வணங்குகிறோம். அந்த ஆற்றல், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்கள், சூரியன்கள், கோள்கள் இவற்றோடும் கலக்கிறது. பலவேறு தன்மைகள் கொண்ட அந்த ஆற்றல், நாம் வாழும் பூமியை வந்தடைகிறது. அதை நாம் பன்னிரெண்டு ராசிகளாக அமைத்திருக்கிறோம். அந்த ராசிகளை கடக்கும் கோள்களைக் கொண்டு, அதன் தன்மையை, நமக்கு கிடைக்கும் பாதிப்புக்களை, நன்மைகளை அறிந்து கொள்கிறோம். இது அடிப்படை தாக்கம் அல்ல எனினும் நமக்குள்ளாக தூண்டுதல் நிச்சயமாக இருக்கிறது. அதை ஜோதிட கலை வழியாக கணிக்கிறோம்.

இங்கே பரிகாரம் என்றால் அது நம்மை திடப்படுத்திக் கொள்வதுதானே தவிர தப்பிப்பது அல்ல. ஆனால், இவ்வுலகில் பரிகாரம் பலவகைகளில், பொய்யும் புரட்டும் கலந்து ஏமாற்றம் அளிக்கிறது எனலாம். இந்நிலையில்தான், வேதாத்திரிய பஞ்ச பூத நவக்கிரக தவம், பரிகார தவமாக அமைந்துவிடுகிறது. இங்கே நாம், நம்முடைய ஜாதகத்தை நினைப்பதில்லை. நேரடியாக அந்தந்த கிரகங்களை நினைத்து தவம் இருக்கிறோம். அதன் ஆற்றலோடு கலக்கிறோம். நன்மை செய்ய வேண்டுகிறோம். அதனால் இது பரிகாரமாகவே மாறிவிடுகிறது. மனம் ஒன்றி நின்று தவம் செய்வதைத்தவிர, இங்கே எந்தவித செலவும் இல்லை.

இந்த காணொளி வழியாக, இன்னும் சில உண்மைகளை அறிந்து கொள்க!

நவக்கிரக தவம் செய்வதில் ஏற்படும் நன்மைகள் உண்மையா? எவ்வாறு இத்தவம் உதவுகிறது?!

வாழ்க வளமுடன்.

-