CJ for You: imprints

imprints

Showing posts with label imprints. Show all posts
Showing posts with label imprints. Show all posts

French Beard and Spiritual Journey by Sugumarje


குறுந்தாடியும் ஆன்மீக பயணமும் - ஒரு அலசல்


Sugumarje - Image Created by AI based on prompt

        இந்த குறுந்தாடிக்கு பின்னால், நான் தான் இருக்கிறேன் எனினும், அதற்கென்று தனிக்கதை ஏதுமில்லை. இராயிரத்து மூன்றுவரை மீசை மட்டுமே பிரதானமாக (மூக்கின் கீழே) இருந்துவந்தது. பொதுவாகவே வாரத்தில் ஆறுநாள் தாடியும், மறுநாள் அதை (சுய) வழித்தலும் தொடர்ந்தது. எப்போதாவது மீசை ஓரம் ஒதுங்கிப்போக, முழுமையான வழித்தலும் நிகழ்ந்ததுண்டு. இராயிரத்து ஐந்துகளில் சிலமாதங்கள், மீசையும் இல்லாத நிலை நீடித்தது. எனினும், வாழ்க்கை தந்த அடியில், பாடம் நிறைய படித்ததால், அந்த அனுபவத்திற்குப் பின், மாற்றம் தேடி, இராயிரத்து ஏழில், சென்னையில் ஒருமாதம் தங்கி இருந்து சில வேலைகள் செய்யவேண்டி அமைந்தது. 

வேலைப்பளுவில், வழித்தலுக்கு நேரமும், ஆர்வமும் இன்றி தாடி, மீசையோடு ஆள் மாறி இருந்தேன். அப்போதுதான் இந்த குறுந்தாடி வைக்கலாமா? என்ற சிந்தனையும் வந்தது. அந்த குறுந்தாடிக்குறிய சில குணாதசியங்களையும் நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். அதனால் நம்பிக்கையும் வந்தது. உடனடியாகவே அது செயல்வடிவமும் பெற்று, என் அடையாளமாக மாறிக்கொண்டது.

விமர்சனங்களை கடந்த மனநிலையும், பக்குவம்பெற்ற அனுபவ நிலையும், நிறைத்துக்கொண்ட தகுதியும், ஒழுங்கும், நடவடிக்கைகளும் எனக்கு உறுதியை தந்தது. கேரிகேச்சர் ஓவியர் சுகுமார்ஜெ என்பதற்கான அடையாளமாகவும் மாறிவிட்டது.  இந்த வடிவ அமைப்பை, சுய வழித்தலில் கொண்டுவருதல் கடினம் என்றுதான் பலரும் சொல்லிக்கொண்டனர். சொல்லுகின்றனர். ஆனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை. ஒரே அளவில் நிறுத்துக் கொள்ளுதல் என்ற நிலை, இராயிரத்து பதினெட்டுகளில் மாறிவிட்டது. காரணம், அந்த காலத்தில், வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நெடும் பயணம், பல்வேறு பிரச்சனைகளை விளைவித்தது. 

வாழும் பொழுதே இறத்தல் என்பது போல, இருக்கும் சுமையெல்லாம் கழித்தல் (கர்ம வினை) அவ்வளவு சுலபமா என்ன? இன்றுவரை வாழ்வியலில் சில கடினம் தொடர்கிறது. என் நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. 'by Spiritually I am a winner and loser in Matirialistic' எனினும், ஒவ்வொரு நாளையும், இறையாற்றல் எனக்கு கொடுக்கும் கொடையாக, நிறைவாக, புரிந்து கடந்து போகிற மனபக்குவம் எனக்கு கிடைத்துவிட்டதால், இயல்பாக ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன். படகில் பயணிக்கிறேன். படகின் துடுப்பை நான் இயக்குவதில்லை. இலக்கின்றியும் நான் பயணிக்கவில்லை என்பதையும் தெளிவு செய்கிறேன். என் இலக்கு நிறைவுற்றது. நீண்ட நேரம் குளத்தில் குளித்தபிறகு, சும்மா மிதக்கலாமே என்று தோன்றுமல்லவா? அது தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதை என் அனுபவமாக கொண்டாலும், அதுகுறித்து விளக்கிட எனக்கு ஆர்வமில்லை. அதை எத்தனையோ குருமார்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய ‘Vethathiriya Sky Lead' என்ற Youtube-லும் கூட மூன்று மாதங்களாக ஏதும் பதிவிடவில்லை. போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் சில பதிவுகள் அன்பர்களுக்காக இனிமேல் வரும். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, மறுபடியும் சில மாற்றங்கள் குறுந்தாடியில் நிகழ்கிறது. தேடல் முடிந்துவிட்டாலும், வாழ்க்கை தொடர்கிறது அல்லவா? அந்த வாழ்விற்காக. இதன் காரணமாகவே, இங்கேயும் தொடர்கிறேன்.

உலகில் பிறந்துவாழும் நாம் ஒவ்வொருவருக்கும், அந்த தேடலும், கடமையும் இருக்கிறது. ஆனால், நாம் நம்மை அதில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இறையாற்றலை செயல்படு, செய்துகொடு, வரமாக கொடு, வழிநடத்து, துணை இரு, சாட்சியாக இரு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யோகம், ஆன்மீகம், பொருளாதாரம், வாழ்க்கை, உறவுகள், பிறவிக்கடமை, கர்ம வினை, இறை, தெய்வம், கடவுள், இயற்கை, கோள்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம், மெய்ஞானம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்னோடு உரையாடலாம். 

#vethathiriya #vethathiriyaskylead #sugumarje #caricaturist #caricatureartist #youtube #facebook #instagram #vethathiri #maharishi #manavalakalai #skyyoga 


How do the planets tell the record of human sins and karma? Isn't that unbelievable? Do we humans have anything to do with the planets? Sounds like a myth, isn't it? Aren't these planets, planets, stars and horoscopes paralyzing a living person?


ஐயா, கிரகங்கள் எப்படி மனிதனின் பாவப்பதிவுகளை, கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறது? அது நம்பமுடிவதாக இல்லையே? மனிதனாகிய நமக்கும் கிரகங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? ஏதோ கட்டுக்கதை போல இருக்கிறதே? வாழும் மனிதனை முடக்குவது போலத்தானே இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரம், ஜாதகம் என்பதெல்லாம் இருக்கிறது? சரிதானே?

உங்களைப்பொறுத்தவரை அது சரி என்றே வைத்துக்கொள்க. ஆனால், அது பொய் என்றால், நீங்கள் ஆராய்ந்தீர்களா? விஞ்ஞான அறிவோடு, மற்றவர்களோடு கலந்து, சில வானியல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிட ஆய்வாளர்கள் இவர்கள் தரும் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவு கண்டீர்களா? நீங்களே ஏன் ஜோதிடம் படித்து அதன் உண்மைதன்மையை அறிய முயற்சிக்க கூடாது? அட அது பொய்தான் என்று நிரூபணம் செய்வதற்காக படிக்கலாமே?

உங்கள் விஞ்ஞானத்தின், வானியல் ஆராய்ச்சியாளர், Brain Cox என்பவர், மனிதன், நட்சத்திரங்களில் இருந்து வந்தவன் என்கிறாரே? அது சரியா? மனிதனின் மூலம், நட்சத்திரங்களிடம் உள்ளது என்றும் அவர் சொல்லுகிறாரே? அது குறித்தாவது சிந்தனை செய்தீர்களா?

வழக்கமாகவும், ஏற்கனவே சொன்னது போலவும், இங்கே ஒன்றை சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வது ஒரு பூமியில். இந்த பூமி ஒரு கிரகம் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா? இது வான்வெளியில், சூரிய குடும்பத்தில் உள்ளது என்பது தெரியுமா? மிதந்து சுழன்று, உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அன்றுவந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா! அது உண்மைதானே? நீங்களும் நானும் பார்க்கும் நிலா என்ற சந்திரன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது அல்லவா? நமக்குப்பிறகும் அது நிற்கும். அது தன்னுடைய ஒளியை, ஆற்றலை, அலைகளை பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கும். பாதிப்புக்களை தந்துகொண்டுதான் இருக்கும். அதை இந்த பூமியும், மனிதர்களும், உயிர்களும், பொருட்களும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கும் அல்லவா? இல்லை என்று மறுப்பீர்களா? உங்களுக்கு தெரியவில்லை என்பதால், இல்லை என்று மறுப்பது சரியாகுமா?

ஜோதிடம் ஒரு வழிகாட்டி. அப்படியாக புரிந்து கொள்ளாமல், அதை நம்பி முடங்கிக் கொள்வதுதான் முட்டாள்தனம். ஆனால், எனக்குப்பிடிக்காது என்று அதை அறியாமல், புரியாமல் ஒதுக்கித்தள்ளுவது அதைவிட கீழானதுதான். வேப்பங்காய் கசக்கும் பிடிக்காது என்றால், அதை நீங்கள் மருந்தாகவும் உட்கொள்ள முடியாது அல்லவா?

எனவே, இப்பொது உங்களுக்கு தேவை, புரிந்துகொள்வது முக்கியம். அதை உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள். அதில் ஏமாற்றம் வந்தால், பிறகு உங்கள் நிலைபாட்டை தொடரலாம். அது உங்கள் விருப்பம். இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரலாம்.

உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா? #astrology

வாழ்க வளமுடன்.

-

Why my horoscope and star not gift to me the spiritual enlightenment? Do you explain it?


என்னுடைய ஜாதகத்தின் வழியாக என்னுடைய பிறவியில் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்றும், அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யோகத்தில் இறையுணர்வு பெற வழியில்லை என்று சொல்லுகிறார்கள். உங்கள் கருத்தும் ஆலோசனையும் என்ன?


அப்படி சொன்னவர்கள், அதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து சொல்லி இருக்கலாமே? ஏன் அதைச் சொல்லவில்லை. குறை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அந்த குறையை தீர்க்க இந்தந்த வழிமுறைகளில் செயல்பட்டு தீர்த்து, பிறவிப்பயனாகிய, பிறவிக்கடனாகிய உண்மையை உணர்ந்து, இறையுணர்வு பெறலாம் என்று விளக்கி இருக்கலாமே? ஆனால் அதை அவர் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால் அவரும் யோகத்தில் இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் அவர் இருந்து, அந்த அனுபவங்களையும் பெற்றிருந்தால், மிக எளிதாக, உங்களுக்கும் வழியை காட்டி இருக்கலாம் என்பது உண்மையே.

பிறந்த எல்லா மனிதர்களுக்கும், இறையுணர்வு என்ற உண்மையறிதலும், நான் யார்? என்று தன்னையறிதலும் உள்முகமாக, வேட்கையாக அமைந்திருக்கிறது. அப்படியா? என்று கேட்பவர்களுக்கு, உங்கள் பிறப்பின் காரணமே அதுதான், என்றுதான் பதில் தரவேண்டியதாக இருக்கிறது. ஆம், ஆனால் பிறந்த பிறகு, வளரும் சூழ்நிலைகள் காரணமாக, அதை, அந்த நோக்கத்தை விட்டுவிட்டு, உலக வாழ்கையில், ஆழ்ந்து நம்மை மறந்துவிடுகிறோம்.

ஏனடா இப்படி மாறிவிட்டாய்? என்று நம்மை, இந்த இறையாற்றலே கேட்டு, எப்போதடா நீ என்பக்கமாக திரும்புவாய்? திசை நோக்கி நகர்வாய்? என்று கேட்கிறது. இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தரவில்லை என்றால், நமக்கு சில பிரச்சனைகளை, நம்முடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் வழியாகவும், மற்றவர்கள் மூலமாகவும் உண்டாக்குகிறது. இந்த பிரச்சனைகளின் வழியாகவாவது, இவன் திருந்துவானா? என்று நமக்கு பாடம் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் நாம்தான், அடுத்த வகுப்பிற்கு கடந்து செல்ல விருப்பமில்லாமல், அதே வகுப்பிலேயே கிடந்து உழல்கிறோமே? அதுதானே நமக்கும் பிடித்திருக்கிறது! இல்லையா?!

இந்த சூழலில், நாம் ஜாதகம் உதவுமா? என்று நினைக்கிறோம். அதன்வழியாக தீர்வு உண்டாகுமா? என்று ஆய்வு செய்யும் பொழுது, அது வேறுமாதிரியான கோணத்தில், வாழ்க்கையை திசை திருப்புகிறது என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் அனுபவம், ஆய்வு முடிவுகள் அப்படியானது. அவர்களை குறை சொல்லி ஒன்றுமில்லை.

ஆனால் உண்மை, வெட்ட வெளிச்சமாக, தெளிவாகவே இருக்கிறது. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோமா? மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. கண்டு கேட்டு உண்மை அறிக.


இணைப்பு: 

இறையுணர்வு பெறுவதற்கு பிறந்த நட்சத்திரம் உதவுமா? Birth Star Helps to Enlightenment

Part 01

Part 02

Part 03

வாழ்க வளமுடன்.


Please let me know the Vethathiriya simplified exercise within simple words!


எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?

பதில்:

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் சிறப்பை மிக எளிமையாக, சுருக்கமாக சொல்லமுடியுமே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆரம்ப காலம் முதலாகவே, எளியமுறை உடற்பயிற்சியில் அவ்வப்பொழுது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டே வந்தார். ஆண்பாலருக்கு மட்டுமல்லாமல், பெண்பாலருக்கும் உண்டான பொருத்தங்கள், விளைவுகள், சங்கடங்கள், பலன்கள் இவற்றை ஆராய்ந்து திருத்தங்களும் செய்து வந்தார். அதை மறுபயிற்சியில் திருத்தங்களோடு சொல்லியும் வந்தார். அறிவும், அனுபவமும் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவ ஆலோசகர்களையும் கலந்தாலோசித்தும், அவர்கள் சொன்ன கருத்துக்களையும் ஏற்று, திருத்தம் அமைத்துக் கொண்டபிறகுதான், முழுமையான இப்போது இருக்கும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்தபயிற்சியில், அதை வடிவமைத்த வேதாத்திரி மகரிஷியே எளிய விளக்கங்களை மட்டுமே தந்து நிறுத்திக்கொண்டார். கேட்பவர்களையும், பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களையும், பயிற்சி கற்றுக்கொண்டவர்களையும், கற்றுக்கொண்டு இருப்பவர்களையும் குழப்பவில்லை. ஆனால் இன்று அதற்கு மாறான போக்கு வந்துவிட்டது, விபரம், நுணுக்கம், அற்புதம், அது இது என்று பல்வேறு வகையான, பல்லாயிரக்கணக்கான தகவல்கள் ‘வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில்’ கிடைக்கிறது. காலத்தின் மாற்றம் என்பதில் ஐயமில்லை. எனவே ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

இதனால்தான், உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மிக எளிமையாக, சுருக்கமாக இங்கே உண்மைகளை தருகிறேன். உலகில் இப்போதும் நாம் செய்துவருகின்ற எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் நம்முடைய உடல் இயக்கத்தை சரி செய்கிறது. இதில் வயதுக்கு ஏற்றமாதிரியான பயிற்சிகளும் உண்டுதான். சில உடற்பயிற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் எலும்புகள், தசைகள் இயக்கங்களை மறு சீரமைப்பும் செய்கிறது. வலி ஏற்படுத்தினாலும், நாளைடைவில் தானாக சரி செய்யும். உடலுக்கு போதுமான இரத்த ஓட்டத்தையும் காற்று சுழற்சியையும் தடையற்று இயக்குகிறது, உடல்வெப்பம் இயல்பாகிறது. என்றாலும் கூட, சில அசைவுகள் முரண்பாடானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இத்தகைய பயிற்சிகளில், கவனம் செலுத்தி வந்த குருமகான் வேதாத்திரி மகரிஷி, அதை முழுவதுமாக சீராக்க நினைத்து ஆராய்ந்தார். ஓவ்வொரு நாட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம். அவர்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் உடல், மனம் தொடர்பான வேலைகள், பயிற்சிகளை கேட்டுத்தெரிந்து கொண்டார். அதை பயிற்சியாக இணைத்தும்கொண்டார். அதனால், வேறெந்த உடற்பயிற்சிகளுக்கும் மேலாக வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உடலுறுப்புக்களின் இயக்கத்தை சீரமைத்து வலு ஊட்டுகிறது.

உடலில் ஒவ்வொரு உறுப்புக்களிலும், சதை, தசை, எலும்பு ஆகியவற்றின் இயக்கங்களிலும், அவற்றின் மூலக்கூறு, செல் அமைப்புகளிலும் நாம் செய்கின்ற செயல்கள், இயக்குகின்ற இயக்கங்கள் பதிவுகளாகிவிடுகின்றன. தேவைக்கேற்றபடி தானாகவோ, விரும்பும் பொழுதோ, சூழ்நிலையாகவோ அவை மறுபடி செயலாக மலர்கின்றன. அப்படியாக, இதுவரை நாம் செய்துவந்த செயல்களின் வழி

பதிந்த தேவையற்ற முரண்பாடான உடலியக்க பதிவுகள் சீராக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விடவும் முக்கியமாக, இயற்கையோடு ஒன்றிணைந்து உடல், மனம், உயிர் ஒத்துழைப்பாக இயங்க வழி தருகிறது!

வாழ்க வளமுடன்
-

Why I have a problems even nothing do not mistake and helping to others in life?


என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?


பதில்:

உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?

கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள்.  அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!

வாழ்க வளமுடன்

-

Why do some people degrade other human beings and live with competition and jealousy?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிலர் தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் வாழ்வது ஏன்?


பதில்:

தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் நடத்திக்கொள்வதற்கு காரணம், சிலர் தங்களையும், பிறரையும் சம அளவில் கருதாததே ஆகும், மனிதன் என்பவன் மன இதனானவன் என்ற உண்மையை அவர்கள் உணர்வில்லை. மேலும் அத்தகைய மனிதர்களின் பரம்பரையில் வாழ்ந்தவர்களும், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் அதற்கு மிக மதிப்பளித்தும் வாழ்ந்து வந்திருப்பார்கள். அதுவே இப்போது வாழும் தலைமுறையினருக்கும் தொடர்கிறது எனலாம்.

மேலும் பரிணாமத்தின் வழியாக, விலங்கின பதிவுகளின் தாக்கமும் அதிக செயல்பாட்டில் இருக்கும் என்று சொல்லாம். அதாவது அவர்களின் கருமையம் களங்கத்தோடு இருக்கிறது. அதை திருத்திடவும், திருத்தி அமைக்கவும் வாய்ப்பில்லாமல் போகிறது. பல பிறவிகளின் வழியாக அந்த சுமையையும் கூட்டிக்கொண்டே போகிறார்கள். இதன் வழியாக, அவர்களுக்கு இயற்கை சில பாடங்களை கொடுத்து திருத்தம் செய்கிறது எனினும், அதை அவர்கள் ஏற்று நடப்பது இல்லை. இந்த களங்கத்தின் வழியாக, அவர்களின் உடல்நலம், மன நலம் பாதிக்கும், பிறவித்தொடர் நோய்களும், துன்பங்களும் இருக்கும் என்பதே உண்மை. யோகத்தில் இணைந்து தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் இரண்டொழுக்க பண்பாடும் கொண்ட வாழ்வாகவும் வாழவேண்டியதும் அவசியமாகும்.

இத்தகைய மனிதர்களிடம் சிக்கிக் கொண்டவர்களின் துயரம் சொல்லில் அடங்காது எனினும், இவர்களோடு இணைப்பில் உள்ளவர்கள், தனியே, தன் திறமையக்கொண்டு வாழ பழகுதல் வேண்டும், இவர்களை சாராத வகையில், வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நல்லதுதானே. அவர் நம்மை சக மனிதனாக மதிக்காவிட்டாலும் கூட இவர்கள் திருத்தம் பெற நாம் வாழ்த்தலாம். அது நமக்கு நன்மையே தரும்.

வாழ்க வளமுடன்

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன். 

Athma Goes to


 ஆத்மா எங்கே போகிறது?


ந்த கேள்வி குறித்து சிலர் கேட்டிருந்ததமையால், அதுகுறித்தும் சில உண்மைகளை அறியத்தருகிறேன். கடந்த பதிவுகளின் வழியாக, ஆத்மா என்பது குறித்து தொடர்ச்சியாக பார்த்திருப்பதால், இந்த பதிவும் சுலபமாக புரிந்துவிடும் என்று நம்புகிறேன். ஆத்மா என்பது நமது பிம்பம் என்று உதாரணமாக வைத்துக் கொள்வோம் எனில் நம்முடைய எண்ணங்கள், விருப்பம், வெறுப்பு, செயல்கள், கவலை, கோபம் இப்படி எல்லாமும் ஆத்மாவிலும் இருக்கும். ஆத்மா என்பது சுத்தமானது என்ற பொது கருத்துக்கு வந்துவிடக்கூடாது. நாம் எப்போதோ செய்த தவறுகளைக்கூட, நாம் மறந்திருந்தாலும் கூட, தானாகவே செயலுக்கு வந்து நம்மை ஆட்கொண்டுவிடும் தன்மை கொண்டது நம் ஆத்மா. எனவே உங்களினின் 100% முழுமையான பிரதி ஆனால் உங்களையும் இயக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


சரி, நல்ல ஆத்மா இல்லையா? கிடையாதா?

நல்ல ஆத்மா இருக்கிறது, யோக சாதனை முலமாக, தவத்தின் வழியாக, தன் சஞ்சித, பிராரப்த, ஆகாமிய (மும்மலங்கள்) (இருவினை என்று சித்தர்கள் சொல்லுவர்) கர்மங்களை, வினைப்பதிவுகளை தன் வாழ்நாளிலேயே போக்கி, இறைநிலையில் முழுமை அடைந்தவரே நல்ல ஆத்மா. அப்படியானால் வினைப்பதிகளை போக்க நாம் வாழும் இந்த பிறவிக்காலமே போதுமானது ஆகும். நாம் இந்த உலகில் பிறப்பதின் காரணமே வினைப்பதிவுகளை, போக்கிக் கொள்வதற்குத்தானே! ஆனால் பிறந்தபிறகு நாம் அதை மறந்துவிடுகிறோம்.


எனக்கு வினைப்பதிகள் இல்லை

இறை மறுப்பாளர்களும், பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. யாரோ செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பாளியா? எனவே எனக்கு வினைப்பதிவுகள் இல்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஒரு மனிதனை யாரும், இரசாயன ஆராய்ச்சி கூடங்களில், “ஒரு பொம்மைகள் போல” உருவாக்குவதில்லை. தாயும், தந்தையும் இணைந்து உறவின் மூலமாக, கருவாகி வளர்ந்து வருகிறோம். எனவே, அவர்கள் இருவரின் வினைப்பதிவுகள் நம் சொத்தாகி விடுகிறதே? கூடவே நாம் வாழும் பொழுது நாமாக சேர்த்துக் கொண்ட வினைப்பதிவுகள் உண்டு. இந்த விதை, நல்ல மாங்கனிகளை கொடுத்த மரத்தின் விதை என்ற எதிர்பார்ப்போடுதானே விதைக்கிறோம். அப்படியென்றால், மாங்கனியின் தன்மை விதையில் உள்ளடக்கமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே நமக்குள் வினைப்பதிவுகள் உண்டு.


வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை

இந்த உலகில், நமக்கு எப்படி வாழப்பிடிக்குமோ அப்படியே வாழ்ந்து, நினைத்ததை சாதித்து, நேர்மையாகவோ, பக்திமார்க்கமாகவோ, இறைமறுப்புடனோ, பகுத்தறிவுடனோ, இயற்கையை மதித்தோ, அவமதித்தோ, பொய், சூது, களவு, கொலை, செய்தும்கூட, மத, இன, ஜாதி பேதம் காட்டி சக மனிதர்களை, இயற்கை வளம், சமூகம், அரசியல் எல்லாம் கெடுத்து, நான் சுத்தமானவன், என்னிடம் தவறே இல்லை என்று இப்படி சொல்லித்தான் வாழ்ந்து, ஒரு நாள் செத்தும்போகிறோம். வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை. நமக்கும் தெரியவில்லை. யாரும் சொன்னாலும் தெரிந்துகொள்வதில்லை. அதுகுறித்து ஆர்வம் கொண்டதும் இல்லை. நிதம் தேடிச்சோறு தின்று, கை நிறைய, அலமாரி நிறைய, தேவைக்கு மீறிய காசும், ஒருத்தருக்கும் கடனோ, அன்பளிப்போ கொடுக்காது சேர்த்து,  நோய்பட்டு, மருத்துவத்திற்கே செலவு செய்து, கிழடுதட்டிப்போய், முரட்டு கௌரவத்தோடு, இன்னும் வாழ முடியவில்லையே, சுகம் அனுபவிக்கவில்லையே, காசு சேர்க்கவில்லையே, இப்படி ஆகிவிட்டதே எனும் வருத்தத்தோடு, செத்துவிடுவோம். நம் உடல் மண்ணோடு மண்ணாகவோ, மாநகராட்சி மின் மயானத்தில் சாம்பலாகவோ மாறிவிடும். ஆனால் நம்முடைய வினைப்பதிவுகளும், அதை தாங்கி நிற்கக்கூடிய ஆத்மாவும் (நாம் தான்) அப்படியே இருக்கும். அதாவது நம் வினைப்பதிவுகள் தீர்ந்து நாம் முழுமை அடையும் வரை.


வினைத் தீர்க்க வழி ஏது?

செத்தாகிவிட்டது. அமைதியாக இருந்தால் ஆத்மா, ஆர்ப்பாட்டமாய் இருந்தால் ஆவி. 

ஆட்டத்தில் அவுட் ஆனதுப்போல, வினைப்பதிவு தீர்க்க வந்த வாழ்வில், அதை தீர்க்காமலேயே வாழ்வு முடிந்துபோனது. இருந்த உடலும் இல்லை. ஆனால் வினைப்பதிவு சுமையால் “ஆத்மா” இயற்கையோடு ஒன்ற முடியாது. அது இயற்கையின் வினை விளைவு நீதியாகும். இப்போது உடல் வேண்டுமே? என்ன செய்வது?


இப்படி உடலுமில்லாத, குடலுமில்லாத ஆத்மாவுக்குத்தான், மகனோ, பேரனோ பணம் செலவு செய்து, விற்பனர்கள் மூலமாக பிண்டம் வைத்து, சாந்தி அளிக்கிறார்கள்.


இயற்கை, ஆத்மாவுக்கு உதவுகிறது

ஆனால் இங்கேதான் இயற்கையே, ஆத்ம சாந்தி அடைய, அந்த ஆத்மாவிற்கு உதவி செய்கிறது. அவ்வழியில் ஆத்மா, தனக்கு விருப்பமானவர்களோடு இணைகிறது. தன்னை பகிர்ந்து கொள்கிறது. தன்னுடைய வாழ்க்கை துணை, மகன், மகள், பேரன், பேத்தி இப்படியாக, அவர்கள் உயிரோடு தானுமாய் ஒட்டிக்கொள்கிறது. தான் பெற்ற வினைப்பதிவுகளை, இவர் மூலமாக தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைகிறது. அந்தோ பரிதாபம், இறந்துபோனவரின் வழக்கம், பழக்கம் தானே அவர் குடும்பத்தார்க்கும் இருக்கும்?! பிறகு எப்படி வினைப்பதிவுகளை தீர்ப்பார்கள்? பத்தோடு ஒன்றாகி, பதினொன்றாக வினைப்பதிவுகளின் சுமை இன்னும் ஏறிவிடும். பிறகு?! இப்படியே தொடர்கதைதான்.


இதன் பாதிப்பு என்ன? வினைப்பதிவு இருந்தால்தான் என்னவாம்?

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், வாகன விபத்துக்கள், கூடுதல் இறப்பு, நோய், மன நிம்மதியின்மை, வேலை, தொழில் கெடுதல் ஆகியன போல, ஓவ்வொன்றாக பெற்றுக்கொண்டே வாழ்ந்து, சாகவேண்டியதுதான்.


அப்படியானால் தீர்வு?!

ஆனால், இறந்தவருக்கு, பிண்டம் வைத்து சாந்தி அளிக்காமல், தன்னோடு அந்த ஆத்மா கலந்திருக்கிறது என்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையில் தன்னையும் திருத்தி, யோக சாதனைகளில் இணைந்து, தவம், தற்சோதனைகள் மூலம் வினைப்பதிவுகளை களைந்தால், தன் தகப்பனின் வினைப்பதிவு மட்டுமல்ல, இதுநாள் வரையில் தொடர்ந்திருந்த எல்லா வினைப்பதிவுகளும், தன் வினைப்பதிவுகளும் கலந்தே தீர்ந்துவிடும். அதோடு தான் மட்டுமல்லாது, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும்.


குரு மகான், வேதாத்திரி மகரிசி அவர்களின் வேதாத்திரியத்தின் வழி இக்கட்டுரை எழுதப்பட்டது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால், இந்த WhatsApp Group வழியாக கேட்கலாம். வாழ்க வளமுடன்.




வேதாத்திரிய இறையுணர்வு


----------------

Photo Thanks to: Miguel Bruna, @mbrunacr