CJ for You: planets

planets

Showing posts with label planets. Show all posts
Showing posts with label planets. Show all posts

Do we need these planets and stars when we try to know God in the form of meditation and penance in yoga? So Astrology and horoscopes are not necessary. Our yogic journey is beyond all that. Vedathri Maharshi would have risen accordingly. If that is the case, is your karmic astrological analysis wrong? What is your response to this?


வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் தவம் என்ற வகையில், இறைவனை அறியமுயற்சிக்கும், நமக்கு இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அவசியமா? ஜோதிடம், ஜாதகம் என்பதும் தேவையில்லை தானே? அதையெல்லாம் கடந்த ஒரு நிலையில்தான் நம்முடைய யோக பயணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியும் அதன்படிதானே உயர்ந்திருப்பார். அப்படி இருக்கும்பொழுது, உங்கள் கர்ம வினை ஜோதிட ஆய்வு தவறுதானே? இதற்கு உங்கள் பதில் என்ன?




உண்மை அறியாத நிலையில் இருந்து பார்த்தால், உங்கள் கேள்வி, மிகச்சரியான பார்வையாகவே தோன்றும். ஒருகாலத்தில், அதாவது நானும் என்னுடைய பருவ வயதில், வேதாத்திரிய தீட்சை பெற்ற காலங்களில், இப்படியாக நினைத்தது உண்டு. வேதாத்திரியத்தில் நுழைவதற்கு முன்பாகவே, ஜோதிடம் குறித்த அனுபவத்தையும், எப்படி பலன் அறிவது என்பதையும் கற்றுக்கொண்டிருந்தேன் என்பதும் உண்மை.

அதனால், நீங்கள் சொல்லுவது போலவே, நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள், மொத்தமான இந்த பிரபஞ்சம் என்ற எல்லை கடந்து, வெட்டவெளி என்ற இறைத்தன்மையை அறிந்து கொண்டிருக்கிறோமே?! இனி இந்த கிரகங்கள், ஜோதிடம், ஜாதகம் நம்பனுமா? என்று சிந்தித்திருக்கிறேன். அதுகுறித்து பேசியும் இருக்கிறேன். என்னுடைய மூத்த, மனவளக்கலை அன்பர் ஒருவரோடும் கலந்து பேசியிருக்கிறேன். அப்போதே அவர், ‘அப்படி இல்லை’என்று மறுதலித்தார். அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால், தொடர்ந்த என் ஆராய்ச்சியில், வேதாத்திரி மகரிஷின் பிரபஞ்ப பரிணாமும், உயிரின பரிணாமும் தலைப்பிலான, தத்துவ விளக்கத்தைக் கேட்டு, எனக்குள் அதை உணர்ந்தபொழுது, உண்மை அறிந்தேன். அதன்வழியே கிடைத்த விளக்கத்தை, என்பார்வையில் சுருக்கமாக தருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் தருவது கடினமே. எனென்றால், இதை பாடமாக தந்தால் கூட, அவ்வளவு எளிதில் புரியாது. எனினும் முயற்சிக்கிறேன்.

நீங்களும், நானும், தீடீரென்று வந்துவிடவில்லை. மாயாஜாலம் போல, யாரோ உருவாக்கி, இவ்வுலகில் விட்டுவிடவும் இல்லை. வெட்டவெளி என்ற இறைதன்மையில் இருந்து, பரமாணு உருவாகி, அது கூடி விண் என்ற பஞ்சபூத முதல் தோற்றமாகி, அதன்வழியே, மற்ற நான்கு தோற்றமாகி, கூடிக்கலந்து பிரிந்து, தோற்றங்களாக பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்களாகி, அதிலே ஒரு பூமியாகி வந்து நின்றது. இதுவரை நடந்த பிரபஞ்ச பரிணாமம் கடந்து, அந்த பூமியில் உயிரின பரிணாமம் நிகழ்ந்து, அந்த வழியில் ஆறாம் அறிவுநிறைந்த மனிதனாக நாம் மலர்ந்தோம்.

இத்தனை வரிசைகளை விட்டுவிட்டு, புறவழிச் சாலை (ByBass) வழியாக, நேரடியாக இறைநிலை அடைய வழியில்லை. மனிதனும், கோள்களும் அடிப்படையில் அணுக்களே. எனில், கோள்களின் அதிர்வுகள், மனிதனை வந்தடையும் என்ற உண்மையும் இருக்கிறதே?! மேலும் மனிதனின் ஆயுள் அற்பம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் வாழ்வது, புவி என்ற சூரியனை சுற்றிவரும் மூன்றாவது கோளில் தானே? புவிக்கு துணையாக சந்திரன் என்ற கோளும் உண்டு. மூலமான சூரியனும் உண்டு. சூரியன் சந்திரன் ஒளியலைகளும் நம்மை வந்தடைகிறதே? இதை கணக்கில் கொண்டு கணிக்கும், ஜோதிடம் பொய்யாகுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரம், கோள்களின் நிலை அறிவதே ஜாதகம். அதுஒரு குறிப்பேடு. அதை மறுக்கமுடியாது. விதைக்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் போலவே நமக்குள் சில ரகசியங்கள் உண்டு. அதை விளக்கிடும் ஒரு முயற்சியே ஜோதிடக்கலை. உண்மை திரிந்து போனது காலத்தின் கோலம்.

எனவே ஜோதிடம், ஜாதகம், என்பது தொடங்கி, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லாம் உண்மையும், சரியானதும் ஆகும். வேதாத்திரி மகரிஷி ஜோதிடத்தை மறுக்கவில்லை. அதை மற்றவர்களின் பார்வைபோல, ஆதரிக்கவும் இல்லை. ஆனால், உண்மையை விளக்கி இருக்கிறார். அதனால்தான், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்பதையும் நமக்கு வடிவமைத்தார். அந்த வழியில்தான், நானும், ஜோதிடம் வழியாக கர்ம வினை அறியும் ஆய்வையும் நடத்தி வருகிறேன். அதன் வழியாக பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மேலும் நேரடியான உண்மைகளை, உங்களுக்கு தரவேண்டும் என்ற ஆர்வத்தால், வேதாத்திரி மகரிஷியே விளக்கும் உண்மைகளை காணொளியாக தருகிறேன். உண்மை அறிந்து கொள்ளுங்கள்.

வேதாத்திரிய வானியலும் சோதிடமும் - Cosmology and Astrology by Vethathiriya ( 3 Videos on this Playlist)
வாழ்க வளமுடன்.
-

How do the planets tell the record of human sins and karma? Isn't that unbelievable? Do we humans have anything to do with the planets? Sounds like a myth, isn't it? Aren't these planets, planets, stars and horoscopes paralyzing a living person?


ஐயா, கிரகங்கள் எப்படி மனிதனின் பாவப்பதிவுகளை, கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறது? அது நம்பமுடிவதாக இல்லையே? மனிதனாகிய நமக்கும் கிரகங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? ஏதோ கட்டுக்கதை போல இருக்கிறதே? வாழும் மனிதனை முடக்குவது போலத்தானே இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரம், ஜாதகம் என்பதெல்லாம் இருக்கிறது? சரிதானே?

உங்களைப்பொறுத்தவரை அது சரி என்றே வைத்துக்கொள்க. ஆனால், அது பொய் என்றால், நீங்கள் ஆராய்ந்தீர்களா? விஞ்ஞான அறிவோடு, மற்றவர்களோடு கலந்து, சில வானியல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிட ஆய்வாளர்கள் இவர்கள் தரும் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவு கண்டீர்களா? நீங்களே ஏன் ஜோதிடம் படித்து அதன் உண்மைதன்மையை அறிய முயற்சிக்க கூடாது? அட அது பொய்தான் என்று நிரூபணம் செய்வதற்காக படிக்கலாமே?

உங்கள் விஞ்ஞானத்தின், வானியல் ஆராய்ச்சியாளர், Brain Cox என்பவர், மனிதன், நட்சத்திரங்களில் இருந்து வந்தவன் என்கிறாரே? அது சரியா? மனிதனின் மூலம், நட்சத்திரங்களிடம் உள்ளது என்றும் அவர் சொல்லுகிறாரே? அது குறித்தாவது சிந்தனை செய்தீர்களா?

வழக்கமாகவும், ஏற்கனவே சொன்னது போலவும், இங்கே ஒன்றை சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வது ஒரு பூமியில். இந்த பூமி ஒரு கிரகம் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா? இது வான்வெளியில், சூரிய குடும்பத்தில் உள்ளது என்பது தெரியுமா? மிதந்து சுழன்று, உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அன்றுவந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா! அது உண்மைதானே? நீங்களும் நானும் பார்க்கும் நிலா என்ற சந்திரன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது அல்லவா? நமக்குப்பிறகும் அது நிற்கும். அது தன்னுடைய ஒளியை, ஆற்றலை, அலைகளை பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கும். பாதிப்புக்களை தந்துகொண்டுதான் இருக்கும். அதை இந்த பூமியும், மனிதர்களும், உயிர்களும், பொருட்களும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கும் அல்லவா? இல்லை என்று மறுப்பீர்களா? உங்களுக்கு தெரியவில்லை என்பதால், இல்லை என்று மறுப்பது சரியாகுமா?

ஜோதிடம் ஒரு வழிகாட்டி. அப்படியாக புரிந்து கொள்ளாமல், அதை நம்பி முடங்கிக் கொள்வதுதான் முட்டாள்தனம். ஆனால், எனக்குப்பிடிக்காது என்று அதை அறியாமல், புரியாமல் ஒதுக்கித்தள்ளுவது அதைவிட கீழானதுதான். வேப்பங்காய் கசக்கும் பிடிக்காது என்றால், அதை நீங்கள் மருந்தாகவும் உட்கொள்ள முடியாது அல்லவா?

எனவே, இப்பொது உங்களுக்கு தேவை, புரிந்துகொள்வது முக்கியம். அதை உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள். அதில் ஏமாற்றம் வந்தால், பிறகு உங்கள் நிலைபாட்டை தொடரலாம். அது உங்கள் விருப்பம். இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரலாம்.

உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா? #astrology

வாழ்க வளமுடன்.

-

If planets and planets really affect us, then everyone in the country should be the same. How will the planets affect each human being? It's funny. But will you explain?


உண்மையிலேயே கிரகங்கள், கோள்கள் நம்மை பாதிக்கிறது என்றால், நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரிதானே இருக்கவேண்டும். நல்லவனுக்கு ஒருமாதிரியும், கெட்டவனுக்கு ஒருமாதிரியும் தானே நடக்கிறது? இன்னும் சொல்லபோனால், கெட்டவனுக்குத்தான் நல்ல காலமாகவும் இருக்கிறது. இதற்கும் கிரகங்கள் என்ன செய்கிறது? ஒவ்வொரு மனிதனுக்கும் அது எப்படி பாதிப்பை தரும்? வேடிக்கைதான். எனினும் விளக்குவீர்களா?

பொதுவான கேள்வி என்றாலும், விளக்கம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் கேள்வியில், தெளிவான புரிதல் இல்லை. கிரகங்கள் கோள்கள் குறித்த விளக்கமும் இல்லை. வாழ்கின்ற மனிதர்கள் குறித்த விளக்கமும் இல்லை. காலம் குறித்த தெளிவும் இல்லை. எல்லாவற்றிலும் கிடைத்த அரைகுறை அறிவை, அனுபவத்தில் ஒன்றாக்கி, குழப்பமாக இந்த கேள்வி கேட்கிறீர்கள். எனினும் இதற்கான பதில் இருக்கிறது.

முதலில், நீங்களும் நானும் வாழ்கின்ற, இந்த பூமி ஒரு கிரகம் தான் நினைவிருக்கிறதா? இல்லையா? இந்த பூமி, சந்திரனை தன்னோடு இணைத்துக் கொண்டு சுற்றுவதை நீங்கள் அறீவீர்களா? நம்முடைய (?!) பூமி சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக, 9 கோடி மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது. பூமிக்கு முன்பாக இரண்டு கோள்களும், பூமிக்கு அடுத்தாக மூன்று கோள்களும், ராகு கேது எனும் நிழல் கோள்களும் இருக்கின்றன. யுரேனெஸ், நெப்டியூன், புளூட்டோவும் உண்டு. ஆனால் இவை, ஜாதக அறிவியலில் இல்லை. என்ன ஜாதக அறிவியலா? ஆம்.

ஒரு விதை முளைக்க, மண்ணும், தண்ணீரும் போதும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை. அதை விதைக்க ஒரு காலம் வேண்டும். அது வளரவும், முழுமை பெறவும், நல்ல விளைச்சலை தந்து, பூ, காய், கனி, விதை என்று வழங்கிடவும் காலம் வேண்டும். காலம் என்பது எதனால் ஏற்படுகிறது? கோள்களின் சுழற்சியால் தானே? நீங்கள் பூமியில் நிலையாக இருப்பதால், எதுவும் சுற்றவில்லை என்று நினைத்துக் கொள்வீர்களோ? பூமி தன்னையும் சுற்றுகிறது, இந்த சூரியனையும் சுற்றுகிறது. நிலவு, பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலே சுற்றிக்கொண்டிருக்கிறது.

வேறு எங்கும் போகவேண்டாம். அமாவாசையிலும், பௌர்ணமியிலும் உங்களுக்குள் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையா? இல்லை என்றுதான் ஆணித்தரமாக சொல்லுவீர்கள் என்று எனக்குத் தெரியும். சரி எது ஏனென்ய்யா கடல்நீர், கரைதாண்டி பொங்குவதும், கரை கடந்து உள்வாங்குவதும் நிகழ்கிறது? நீங்கள் யாராவது ஆள்வைத்து இதை செய்கிறீர்களா? இல்லைதானே? பெருங்கடல் இந்த பாதிப்புக்கு உள்ளாகுமானால், மனிதன் 73% நீரை தனக்குள்ளே வைத்திருக்கிறானே? அவனுக்கு பாதிப்பு ஏற்படாதா? நிச்சயமாக நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் மட்டும் அற்புத பிறவி ஆகிற்றே?!

இப்படியாக, விளக்கிக் கொண்டே போகலாம். நாம் வாழும் இந்த பூமி, பேரண்டத்தைப் பொறுத்தவரை, மிக மிக சிறியது. அதில் வாழும் நாம் எங்கனம்? ஜூம் அவுட் செய்தால், இந்த பால்வெளி மண்டலமே சிறியது. பல கோடி நட்சத்திர மண்டலங்கள், அவை கணக்கில் அடங்கா. இன்னமும் விஞ்ஞானம், சூரியகுடும்பத்தைத் தாண்டி செல்லவே இல்லை. விஞ்ஞானத்திற்கு எட்டாததை எல்லாமே பொய் என்பது உங்கள் வாதம். ஆனால் அதில் உண்மை இருக்கிறது என்பதுதான் மெய்ஞானத்தின் வாதம். எனினும் மெய்ஞானம் கட்டாயப்படுத்துவதில்லை. புரியவில்லை என்றால் விட்டுவிடு என்றுதான் சொல்லுகிறது. இந்த காணொளி, ஏதேனும் வகையில் சில உண்மைகளை விளக்கும் என்று நம்புகிறேன்.

கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் நம்மை நிச்சயமாகவே பாதிப்புக்குள்ளாக்குகிறதா?

வாழ்க வளமுடன்

-

Karma is a lie, horoscope and astrology are false. In this case, is it correct to find karma through the horoscope?


ஐயா, கர்மா என்பதே பொய், ஜாதகம், ஜோதிடம் என்பதும் பொய். அப்படி இருக்கையில், ஜாதகம் வழியாக கர்மாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்புவது சரியா? எதற்கு இந்த ஏமாற்று வேலை?


நீங்கள் யாராக இருந்தாலும் சரிதான். என்னை ஆழம்பார்ப்பது மட்டுமில்லாமல், கர்மாவையும், கிரங்களையும், இயற்கையையும், மனித பிறப்பின் ரகசியத்தையும் ஆழம்பார்க்க நினைக்கிறீர்கள். நல்லதுதான், உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். அதில் உங்களுக்கு இருக்கிற அறியாமையை விலக்கிட, உண்
மை விளக்கம் தர முயற்சிக்கிறேன். ஆம், ஒன்றை குறை சொல்லுவது என்றால், அதில் இருக்கிற உண்மையும் தெரியவேண்டும், பொய்யும் தெரியவேண்டும் அல்லவா? ஆனால் உங்களுக்கு அதில் இருக்கிற பொய்யை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். 

நீங்கள் பிறந்து வாழும் இந்த பூமியாவது ஒரு கிரகம் என்பதை, அறிவீர்களா? இல்லையா? ஒவ்வொரு நாளும் இந்த பூமி, தன்னைச் சுற்றிக்கொண்டே, சூரியனை சுற்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள் தானே? இரவும் பகலும், பருவகாலங்களும் ஆண்டுமாறாமல், வந்துகொண்டே இருப்பதை புரிந்து கொண்டீர்களா? இன்றைய மார்கழி, தை அல்லது டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியஒளி குறைந்து, குளிர்காலம் நிறைந்திருப்பது தெரியும் தானே? அதுபோலவே சித்திரை, வைகாசி அல்லது ஏப்ரல், மே மாதங்களில் சூரியஒளி அதிகரித்து வெப்பம் அதிகமாவதும் தெரியும் தானே? இவற்றிற்கு காரணம் சூரியனிடம் இருந்து வரும் வெப்ப அலைகள் தானே? இல்லை என்று மறுப்பீர்களா?

ஒவ்வொருநாளும் குளிர் வெப்பம் இருந்தாலும், சாராசரியாக ஒரு குளுமையை, பொருத்தமான வெப்பத்தை தரும் சந்திரன் என்ற நிலாவை நீங்கள் அறிவீர்கள் தானே? அது ஒரு நாள் ஒளிதராமல், தன்னில் இருளைக் கொண்டிருந்தாலும், இந்த பூமிக்கு தகுந்த வெப்ப நிலையை தந்து, நம்மையும் மற்ற உயிர்களையும் காக்கும் அலைகள் எங்கிருந்து வருகின்ற என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறீர்களா?

இதையெல்லாம் ஏன் நீங்கள் ஏற்கவேண்டும்? இதையும் மறுத்து ஒதுக்கிட வேண்டியதுதானே? ஜோதிடம் என்பது நிஜம். அதை விவரித்து சொல்லுவதில்தான் மாற்றுக்கருத்தும், குழப்பமும், பொய்யும் கலந்திருக்கின்றன எனலாம். எப்போதுமே, எதிராளிடமும், அன்பர்களிடமும், மாணவர்களிடமும் ‘புரிகிறதா?’ என்று நான் கேட்பதே இல்லை. எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் அறிவு, நிச்சயமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதனால், அதை புரிகிறதா? என்று நான் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. அது கேட்பவரை கேவலப்படுத்தும் கேள்வி என்பதை நான் அறிவேன்.

அடுத்து கர்மா என்பதற்கு வரலாமா? ஒரு செயலுக்கு, ஆற்றலுக்கு எதிர்விளைவு உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆமாம். உங்களுக்கு பிடித்த ‘அறிவியல்’ விஞ்ஞானி நியூட்டன் சொல்லி இருக்கிறார். ஆனால் நீ ஒரு செயலை செய்தால், அதற்கு எதிர்விளைவாக, உனக்குள் கர்மா என்ற வினையாக பதிவாகிறது என்று முன்னோர்கள் சொன்னால் அது ‘பொய்’ ஆகிவிடுகிறது அல்லவா?

நல்லது செய்தால் ஏதும் குறையில்லை, ஆனால் தனக்கும், பிறருக்கும், இயற்கைக்கும் தீங்கிழைத்தால், அது கர்மா என்ற வினைப்பதிவாக, பாவப்பதிவாக, நமக்குள் பதிவாகிறது. அதை திருத்தும்வரை அது, நம்முடைய செயல்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. இத்தகைய தொகுப்பு, பரம்பரை பரம்பரையாக, கருவழியாகவே நமக்கு தொடர்ந்து வருகிறது. அந்த உண்மையை கண்டு அறிவதுதான் இந்த ‘ஜோதிட ஆய்வு’ ஆகும். 

ஒரு மனிதனின் பிறப்பில், இந்த கர்மா என்ற வினை முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இருக்கும். உங்களிடமிருந்து வெளிப்படும். அது உங்கள் உடல், மனம், உயிரை, பாதிக்கும். உங்களைச் சார்ந்தோர் வழியாக எதிரொலிக்கும். இந்த விளக்கங்களை மேலும் அறிய, இந்த காணொளி பதிவை காணலாம். 

உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா?

வாழ்க வளமுடன்.

-

Can we receive within ourselves the cosmic energy energy? What is the way out? Does meditation and penance help with that? Give an explanation.


பிரபஞ்ச ஆற்றல் சக்தி என்பதை நாம் நமக்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி என்ன? தியானம் தவம் அதற்கு உதவுகிறதா? விளக்கம் தருக.


பிரபஞ்சம் ஆற்றல் சக்தி, என்றுமே எப்போதுமே குறைவுபடமால் இருக்கக்கூடியது ஆகும். நாம் காணும், காணமுடியாத தொலைவில் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய அனைத்தும், தனக்குள்ளிருந்து, ஆற்றல் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. எப்படி நமக்கு, காலையில் சூரியனின் ஒளியும், இரவில் சந்திரனின் ஒளியும் நமக்கு துணையாகி, உதவுகிறதோ, அதுபோலவே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியும் துணையாகிறது, உதவுகிறது எனலாம்.

இந்த உண்மையை, உங்கள் பிறந்த நேர ஜாதக குறிப்பின் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும். ஜாதகம் என்பது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆனால், ஜாதகம் என்று சொன்னதுமே, எனக்கு எதுவுமே நல்லது நடக்கவே இல்லையே? என்றுதான் சொல்லுவார்கள். அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதை தேர்ந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லுவார். நாம் இங்கே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியை மட்டும் கவனிப்போம்.


நாம் வாழ்கின்ற இந்த பூமியும் கூட, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பூமிக்கு அருகிலும், தூரமாகவும், வெகு தொலைவிலும் பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றின் ஆற்றலும் சக்தியும் பூமியையும் வந்தடைகின்றன. கூடவே, நம் பூமியின் அண்டை வீட்டார்களான, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களின் ஆற்றல் சக்தியும் இணைந்துதான் கிடைக்கின்றன. இதனினும் மேலாக, ராகு கேது என்ற நிழலான, ஆற்றல் சக்தியும் கிடைக்கின்றன. ராகு கேது என்பதை, நாம் தனித்து பார்க்கவும் முடியாது. ஆனால், அவற்றின் ஆற்றல் சக்தி அபரிதமானது என்பது, பொதுவாகவே உங்களுக்கு தெரியும் அல்லவா?

இந்த பிரபஞ்ச ஆற்றல், ஓவ்வொரு, கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தாலும்கூட, தனித்தன்மைகளை பெற்றிருந்தாலும் கூட, எல்லாமே அதன் அதன் அளவில், ஒன்றாகவே கலந்துதான் வருகின்றன. எங்கெங்கே, எந்தெந்த பொருளில், உயிரில் மோதுகிறதோ, அந்த அளவில் தூண்டுதலை உண்டாக்குகின்றன. அவை நம்மை பொறுத்தவரையில், நன்மை தருவதாக இருக்கலாம். தீமை தருவதாகவும் இருக்கலாம். அது நம்முடைய குணாதசியம் என்ற அடைப்படை நிலையை பொறுத்தது ஆகும். அப்படியானால், இந்த அடிப்படை நிலையை மாற்றிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கு தியானம் என்ற தவம் உதவுகிறது.

நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இத்தகைய, பிரபஞ்சம் ஆற்றல் சக்தி அன்றாடம், நொடிக்கு நொடி கிடைக்கிறது. அதை நாம் தனியாக உணர்ந்து கொள்வதற்கும் வழி இல்லாத நிலையில்தான், நம்முடைய சராசரி வாழ்க்கை நகர்கிறது. தியானத்தின் வழியாக, தவத்தின் வழியாக, மன ஓர்மை பெற்றவர்கள் மட்டுமே, இதை அனுபவ பூர்வமாக உணரமுடியும். அதுவரை அப்படியெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துத்தான் பேசுவோம்.

மேலும் நம்முடிய வாழ்வின் அடிப்படைக்குக்கூட, இந்த பிரபஞ்சம் ஆற்றல் சக்தி உறுதுணையாக இருக்கிறது என்பதை, சித்தர்களும், அவர்வழி வந்தவர்களும், வேதாத்திரி மகரிஷி அவர்களும் உண்மை விளக்குகிறார்கள். பிரபஞ்சம் ஆற்றல் சக்தி இருக்கிறது, அது நமக்கு கிடைக்கிறது. நமக்குள்ளாக ஊடுறுவி நிறைகிறது. நம்மைக்கடந்தும் செல்கிறது என்பது உண்மையே!

வாழ்க வளமுடன்.

-


Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

Do planets affect an individual's living environment? Changing? What is the truth?


கிரகங்கள் தனி மனிதனின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கிறதா? மாற்றுகிறதா? உண்மை என்ன?


இதை ஒரு நீண்ட, விளக்கத்தின் வழியாகவே காணலாம். இல்லையேல், உங்களுக்கு, சரியான புரிதல் கிடைக்காது என்பது உறுதி. நாம் வாழும் இந்த புவியும் ஒரு கிரகம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் முக்கியமாக, நாம் நிலத்தில் நிலையாக வாழ்வதாகவே ஒரு கற்பனையில் இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? நாம் பிறந்தது முதல், வாழ்க்கையின் முடிவுவரை, நாம் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். எங்கே? இந்த பிரபஞ்சத்தில், நாம் அறியமுடியாத ஏதோ ஒரு இலக்கு நோக்கியே. இதை எப்படி அறியலாம்? மிக எளிமையாக, சூரியன் கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதும் போதுமானது. உண்மையிலேயே, சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதா? என்று கேட்டால், ஆம் என்பது உங்கள் பதிலா? அப்படியானால் நீங்கள், மாய உலகில் இருக்கிறீர்கள்.

உண்மை என்ன? நாம் வாழ்கின்ற பூமிதான், வடக்கு தெற்கை அச்சாக கொண்டு, மேற்கிலிருந்து கிழக்காக, தனக்குத்தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. கூடுதலாக சூரியனோடு இணைந்து, சூரியனை அச்சாக கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. இந்த உண்மையை நன்கு விளக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.

நாம் வாழும் பூமியோடு, கூடுதலாக பூமியை சுற்றும் சந்திரனையும் அறிந்து கொள்க. மேலும் சூரிய குடும்பத்தில் பூமி, மூன்றாவது கிரகம். நாம் வாழும் இந்த பூமியோடு, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களும் இணைந்து சுற்றி வருகின்றன. சனிக்கு அடுத்தும் நெப்டியூன், புளூட்டோ இரண்டு கிர்கங்கள் இருந்தாலும், அதனுடைய தூரம் காரணமாகவும், பலமில்லாத அலைகள் கொண்டிருப்பதால், இந்திய ஜோதிடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில், ‘இல்லை அவை கண்டுபிடிக்கபடவில்லை, பிறகுதான் அதை விஞ்ஞானம் கண்டுபிடித்தது’ என்று ஒருவர் சொன்னால், அது அவரின் அறியாமை. சாதாரண கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நட்சத்திரங்களை எப்படி இணைத்தார்கள்? அப்படியானால் அதெல்லாம் பொய்யா? அல்லது அப்போதே விஞ்ஞானம் இந்த, நட்சத்திரங்களை கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னதா? இதற்கு உங்கள் விடை என்ன?

இப்போது, உங்கள் கேள்வியின், பதிலுக்கு வருவோம். இப்படி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கும் கிரகங்கள், தன்னிலிருந்து அலைகளை வீசிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாம் நிலையாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும், சூரியனும், தன் குடும்பத்தை எடுத்துகொண்டு, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்தான் நட்சத்திரங்களின் அலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நட்சத்திரங்களும் கிரகங்கள்தான். வெகுதூரத்தில் இருப்பதால், அதை நட்சத்திரங்கள் என்கிறோம்.

இந்த அலைகள் எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்து, அதன் தூரம், அருகாமை என்கிற வகையில், பூமியை வந்தடைகிறது. பூமியும் ஓரளவில் பாதிப்படைகிறது எனினும், அதை நாம் உணர்வதில்லை. ஆனால் பூமியில் வாழும் நமக்கு, அந்த அலைகள், தனித்தனியாக, ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஏன்? மனிதன் முதற்கொண்டு எல்லா உயிரினமும், எல்லா பொருட்களும், அணுக்களால் ஆனவையே. காணும் பொருட்களெல்லாம் அணுக்களின் கூட்டு, காண்கின்ற நாமும் அணுக்களின் கூட்டுத்தான். இதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?

இதில், மனிதனுக்கு எப்படி, தனியான பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்துகின்றன? என்று சிந்தித்தால், உயிரின பரிணாமம் என்ற முதல் நிலைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். Evaolution என்று சொல்லப்படும் ஒன்றன் பின் ஒன்றான, சங்கிலித்தொடரான பரிணாமத்தில், உடலின், உடலுக்குள்ளாக அந்தந்த உறுப்புக்களின், உயிரின், மனதின் உருவாக்கத்தில், தனித்தனியான கிரகங்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது. இதை ஜோதிடத்தின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும். நாம் பிறக்கும் பொழுது, ஆங்காங்கே இருக்கக்கூடிய கிரகங்கள், ஒரு பதிவை தருகின்றன. அதை நாம், நம்முடைய ஜாதகமாக எழுதிக்கொள்கிறோம். அன்றிலிருந்து, நமக்கு ஏற்படும் தூண்டுதல்களில், நம் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த தூண்டுதலை புரிந்து, அறிந்து அதற்கு விளக்கமான பாதையில், நாம் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், உங்கள் வாழ்க்கைச் சூழல் மாற வாய்ப்புள்ளது. அதுபோல பாதிக்கப்படவும் செய்யும். மாறுதல் கொள்ளவும் செய்யும். உங்கள் ஜாதகம், உங்களுக்கான கையேடு என்பதை மட்டும் நினைவில் கொள்க. ஆனால் அது உங்கள் தலையெழுத்து என்று நம்பி விடாத விழிப்புணர்வு தேவை.

வாழ்க வளமுடன்.

-


Explain the Maharishi's note about astrology, horoscope and benefits!


சோதிடம், ஜாதகம், கிரகங்கள், அவற்றின் நிலையும், பயன்களும் குறித்து வேதாத்திரி மகரிஷி எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்? அது குறித்த விளக்கம் தருவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! சோதிடம், ஜாதகம், கிரகங்கள், அவற்றின் நிலையும், பயன்களும் குறித்து வேதாத்திரி மகரிஷி எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்? அது குறித்த விளக்கம் தருவீர்களா?


பதில்:

வேதாத்திரிய யோகத்தில், இந்த ஜோதிடம், ஜாதகம், அவற்றின் விளக்கம், உண்மைகள் இவற்றிற்கு எல்லாம் இடமில்லை என்று நிறைய அன்பர்கள் கருதுகிறார்கள். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இது குறித்து நிறைய விளக்கங்களை, தன்னுடைய பெரும்பாலான உரைகளிலும், கட்டுரைகளிலும் தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நேரடியாக, தனியாக சொல்லவில்லையே தவிர, பல உண்மைகளை நமக்கு சொல்லி விளக்கம் அளித்துள்ளார். சில கேள்வி பதில் நேரங்களிலும், அன்பர்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

முக்கியமாக, நம் வேதாத்திரியத்தில், பஞ்ச பூத நவக்கிரக தவம் உள்ளதே? அதை நாம் மறக்கலாகுமா? இந்த தவத்தின் உண்மையிலேயே, உங்கள் கேள்விக்கான பதில் உள்ளே அடங்கி இருக்கிறது என்று சொல்லிவிடலாமே?

வானில் மிதந்து, உருண்டுகொண்டு, சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கும், இந்த பூமியில் வாழும் நமக்கு, நம் பூமியைச்  சுற்றும் சந்திரனாலும், பூமியின் அண்டை கிரகங்களான, புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் என்ற குரு, சனி ஆகிய கிரங்களோடு, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய எல்லா கிரகங்களையும் நாம், இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் வழியாக உணர்ந்தறிந்து நன்மையை பெறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?

வேதாத்திரியத்தில், அலை இயக்கம் என்ற ஒரு பாடம் உண்டு. சுத்தவெளியின் தன்னிறுக்க சூழந்தழுத்தும் ஆற்றல் நிலையில் இருந்து, தானே மடிந்து, நொறுங்கி வந்த பரமாணு முதலாகவே, அலை இயக்கம் தொடங்கி வந்துகொண்டே இருக்கிறது. சுத்தவெளியின் தன்மையில் தனக்குள்ளாக, இருந்த அதிர்வுகள் அலைவடிவமானதே, இந்த பரமாணு வழியாக என்ற உண்மையும் நாம் மறக்கலாகாது. இந்த அலைகள், இன்னொன்றில் ஏற்படுத்தும் தாக்கமும், அதிலிருந்து ஏற்படும் விளைவும், மாற்றமும் இயல்பானது. இதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகிறது.

இந்த தாக்கம், விளைவு, மாற்றம் ஆகியவையே சோதிட கணக்குகளின் அடிப்படையாக உள்ளது. இதில் ஓவ்வொருவரின் ஆராய்ச்சி, அனுபவம் ஆகியனவும் கலந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகள் வந்து, குழப்பங்களை ஏற்படுத்துகிறது எனினும் அடிப்படை என்றும் மாறாதது தானே?

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஜோதிடம், ஜாதகம் என்பதை விடவும், கோள்கள் குறித்தும், அதன் அலை இயக்கம், தூண்டுதல், விளைவு, மாற்றம் ஆகியன குறித்து அதிக விரிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். அந்த விளக்கங்களை, ஒரே கட்டுரையாக நாம், இங்கே காணமுடியாது எனினும், அவ்வப்பொழுது நான் தந்துகொண்டே இருக்கிறேன். மேலும், நிச்சயமாக மகரிஷியின் அந்த உண்மை விளக்கங்கள், உறுதியாக ஜோதிட, ஜாதக விளக்கங்களுக்கும் உதவுகிறது என்பதே உண்மையாகும்.

வாழ்க வளமுடன்.

-

How the astrology advice will helps to clear the Karma? Do you continue this astrology service?


ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?


பதில்: 

சோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் பொய் என்பதுதான் பெரும்பாலோர் முடிவு. வாழ்கின்ற உயிரனங்கள், மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல, ஒரு புல் முளைப்பதற்கு முன்பே, பல கோடி ஆண்டுகளாக, தன் காந்த அலைகளை, பூமியின் கூட்டு கிரகங்களும், சுற்றியுள்ள நட்சத்திரங்களும் பூமிக்கு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை நாம், மறந்துவிடக்கூடாது. எந்த ஒரு தாவர விதையை, மண்ணில் விதைத்தாலும், அது பருவத்தால்தான், முளைவிட்டு வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக்குலுங்கி, காய்களையும், பழங்களையும் தருகிறது. இந்த பருவம் என்பது எப்படி வருகிறது? பூமியின் சுழற்சியினாலும், பூமியின் நகர்வினாலும், சூரியன் முதலான கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தாக்கம் இல்லாமல் வருகிறதா?

நமக்கு தெரியவில்லை, அறியவில்லை, அது குறித்த தெளிவில்லை, ஆராய்ச்சியும் இல்லை என்றால், உடனே இல்லை என்று மறுத்துவிடுவதுதான், சராசரி மக்களின் குணம். இதற்கு அவர்கள் சான்று தருவது, நவீன விஞ்ஞானம். உண்மையிலேயே அவர்கள் நம்பும் நவீன விஞ்ஞானம் கூட, அடிக்கடி தன் கொள்கைகளை, மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மக்கள் விடாப்பிடியாக ‘மறுப்பிலேயே’ இருக்கிறார்கள். இருக்கட்டும், நாம் மட்டுமாவது, உண்மையை நோக்கி நகர்வோம். அதில் தெளிவு பெறுவோம்.

கடந்த வருடங்களில், ‘ஜாதகத்தில் அறியவரும் கர்ம வினைகள், எத்தகையது?’என்ற ஆராய்சிக்காக சில அன்பர்களின், ஜாதக குறிப்புக்களை பெற்று ஆராய்ந்து, விளக்கம் பெற்று, அதை அவர்களிடம் சொல்லி, அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும், வேதாத்திரியத்தின் வழியில் விளக்கினேன். எல்லா அன்பர்களும், அதை எற்றுக் கொண்டதும் நிகழ்ந்தது.

இந்த கர்ம வினைப்பதிவுகள், சஞ்சித கர்மா என்ற பழவினையாகவும், பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினையாகவும், ஓவ்வொரு மனிதருடைய ‘கருமையத்தில்’ பதிவாக உள்ளது. இத்தகைய கர்ம வினைப்பதிவுகள், துளியும் மாறாது அப்படியே ஒரு மனிதனிடத்தில் இருந்து, அவனுடைய பரம்பரைக்கு கடத்தப்படுகிறது. இயற்கையின் ‘வினை விளைவு நீதி’ அற்புதமாக இதை நடத்திக்கொண்டிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், அவர்களின் கர்ம வினைப்பதிவுகளே, குணாதசியமாகவும் அமைகிறது. குழந்தையாக பிறந்த நாளில், அக்குழந்தையின் பிறந்த நேரம் கொண்டு, ஜாதமாக கணித்துக்கொண்டால், அதில் நிச்சயமாக கர்ம வினைப்பதிவுகளை, கிரகங்கள் சொல்லுகின்றன.

பொதுவாக, இங்கே ஒரு அன்பரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்வதில்லை. என்னுடைய ஆராய்ச்சியும், விளக்கமும், கர்ம வினைப்பதிவுகள், கருவழியாக எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இந்த கர்ம வினைகளில் என்னுடைய வாழ்வின் நிலை என்ன? என்ன செய்தால், இப்போது, இந்த பிறவியில், இந்த வாழ்வில் கர்ம வினைகளை போக்கலாம்? என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியும் விளக்கமும் ஆகும். வேதாத்திரிய யோகத்தின் வழியாகவும், ஒரு மனிதனின் பிறப்பே, கர்ம வினையினாலும், அதை தீர்க்கவே பிறந்தோம் என்பதையும் அறிகிறோம். ஆனால், வாழும் பொழுது ‘வேதாத்திரி மகரிஷியே சொன்னது போல, என்னை மறந்தேன், எந்தன் வினை மறந்தேன்’ என்பதாக வாழ்ந்து முடிக்கிறோம்.

இதனால், நம்முடைய வாழ்வில், நாம் மட்டுமல்ல, நம் குழந்தைகளும், வாரீசுகளும், பரம்பரையினருமே பாதிக்கப்படுகிறார்கள்.  இப்பிறவியில் நாம் கர்ம வினைக்கடலை தீர்க்க, தவமும் அறமும் தேவை என்று, சித்தர் பெருமகான், திருமூலர் சொன்னது போல, நாம் தவம் வழியாகவும், அறவாழ்க்கை வழியாகவும், வேதாத்திரியத்தின் துணையோடு, கர்ம வினைப்பதிவுகளை தீர்க்கலாம். நிறைய அன்பர்கள், அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் வந்தார்கள். இப்போது நீங்கள் கேள்வியாகவும் கேட்டுவிட்டீர்கள். நல்லது. இன்று முதல் தொடர்ந்து, இந்த சேவை அளிக்கலாம் என்றும் விரும்ப்பம் கொண்டுள்ளேன்.

நீங்களும், உங்கள் ஜாதகம் வழியாக, வேறெந்த கேள்விகளும் இல்லாமல், கர்ம வினைப்பதிவுகளின் நிலையும், அதை தீர்த்து தெளிவான நிலைபெறவும் விரும்பினால், என்னுடைய வாட்சாப் எண்ணுக்கு, உங்கள் ஜோதிட குறிப்பை எனக்கு அனுப்பி ஆலோசனை பெறலாம். மேலும் ஜோதிடம் இல்லாதோரும், தனிப்பட்ட விபரங்கள் தந்து ஆலோசனை பெறலாம். முக்கியமாக எல்லா அன்பர்களும் 1) பெயர் 2) பிறந்த தேதி / மாதம் / வருடம் 3) பிறந்த நேரம் 4) பிறந்த ஊர் 5) இப்பொழுது வசிக்கும் ஊர் 5) யோகத்தில் ஈடுபாடு 6) வேதாத்திரியத்தில் இருந்தால் அதன் விபரம் 7) திருமணம் ஆனவர் / ஆகாதவர் 8) குழந்தை விபரங்கள் ஆகியன குறித்து அனுப்பவேண்டியது முக்கியம். இதற்கான நன்கொடை நேரடியாக கேட்டு அறிந்து கொள்ளலாம்!

        இந்த ஆய்வுகளின் முடிவில், உங்களின் குணாதசியம் முதற்கொண்டு, நீங்கள் எந்தெந்த வகையில், கர்ம வினைகளால் சூழப்பட்டு இருக்கிறீர்கள்? அதனுடைய தாக்கம் என்ன? எவ்வகையில் பாதிக்கப்படுகிறீர்கள்? எப்படி செயல் திருத்தம் பெறலாம்? என்னென்ன வழிமுறைகள்? வேதாத்திரியத்தின் துணையோடு எப்படி கர்ம வினைகளை தீர்க்கலாம்? அதற்கான தவமும், வழிமுறைகளும் என்ன? என்று தெளிவான விளக்கம் அதில் இருக்கும்.

-

வாட்சப் தொடர்புக்கு: https://wa.me/9442783450

நன்கொடை சேவை மட்டுமே,  நன்கொடை வழங்க: 9442783450@UPI

-

அன்பர்களுக்கான ஜாதகம் வழியான கர்ம வினைப்பதிவுகள் குறித்த விளக்கமும், ஆராய்ச்சி முடிவும், தீர்ப்பதற்கான வழிமுறைகளும் இரண்டு வாரத்திற்குள்ளாக, PDF கோப்பாக, வாட்சப் வழியாகவே அனுப்பி வைக்கப்படும். விருப்பமுள்ள அன்பர்கள், இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

What is the meaning of twin seven worlds?


பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும்  ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நாம் வசிக்கும் பூமியில் இருந்து சூரியனை நோக்கிய வரிசையில் பூமி, சந்திரன், சுக்கிரன், புதன், சூரியன், ராகு, கேது ஆகிய ஏழு கோள்களின் வரிசை அமையும். இதை மேலேழுலகம் என்றார்கள் முன்னோர்கள்.

பூமியிலிருந்து மறுபக்கம் நோக்கினால் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்சியூன், புளூட்டோ ஆகிய ஆறு கோள்களும் உள்ளன. அதற்கப்பால் சுத்தவெளிதான் உள்ளது என்றெண்ணிய முன்னோர்கள் ஏழாவதாக உள்ளதைப் பாழ்தளம் (பேச்சு வழக்கில் இன்று பாதாளம்) என்றனர். இதைக் கீழேழுலகம் என்றார்கள், இன்றைய விஞ்ஞானக் கூற்றுப்படியும் இவைதான் காணமுடிகிறதே தவிர வேறு மேலேழு, கீழேலுலகங்கள் இல்லை.

மக்களுக்கு மெய்ப்பொருள் உண்மைகளை சொல்லும் வழியில் சில கதைகளை சொல்லிவைத்தார்கள். அந்த கதைகள் பின்னாளில் பலராலும் கட்டுக்கதைகளாகி, நம்முன்னால் வளர்ந்தும், பெருகியும், உண்மையை மறைத்துக்கொண்டும் நிற்கிறது. எதுவென்றாலும் அதில் இருக்கிற உண்மையை ஆராய்ந்து பார்க்கும் விழிப்புணர்வு அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.

Why human need food? can we avoid? any science truth on it?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் சுவாமிஜி, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

மனிதன் இப்பூவுலகின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது.  தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது.  எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Compressive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்துவிடுகிறது.

        உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. 

பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன.  பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown Up) விசிறியடிக்கபடுகின்றன.  அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn  out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன.  இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித  உடலில் உள்ள தசை,  நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்து கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

        அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான  புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துப் கொண்டிருக்கின்றன.  இதனால் உடலின் இழப்பானது சரிகட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம்.  நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம்.  ஒரு முழுநாள் நீரைத் தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம்.  அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம்வரை உடலின் எடை குறைந்திருக்கும்.  இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும் சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிபிழைத்துக் கொண்டேயிருக்கிறான்.  இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்றே பெயர் வந்தது.

வாழ்க வையகம்    வாழ்க வளமுடன்.

-

Can the horoscope of children born at the same time be the same?


குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான கேள்விதான். நீங்கள் பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கலாமே. நீங்கள் இப்பொழுது அம்மாவின் கருவறையில் இருக்கிறீர்கள். குழந்தைப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்து தகுந்த நேரத்திற்கு மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஐந்து தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரே சமயத்தில் உதவ மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதிகாலை 3. 40 க்கு, உங்களோடு சேர்ந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இத்தனை குழந்தை பிறப்பை, அங்கேயே ஆறு சோதிடர்களை வைத்து ஜாதகமும் எழுதிவிடலாமா? சரி. குழந்தைபிறப்பின் நேரத்தை மருத்துவர்கள் சொன்னபடி குறித்து ஜாதகம் கணித்தாயிற்று.

இப்பொழுது ஏறக்குறைய எல்லா ஜாதகமும் ஒரே மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  என்றாலும், ஜாதகம் அதன் நுணுக்கத்தில், கணிதத்தில் நுண்ணிய மாறுதலாகவே அமைதிருப்பதையும் நாம் அறியமுடியும். இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஒரே பெயர் வைக்கப்போவதில்லை. தனிப்பட்ட விருப்பமான பெயர்தான் வைப்பார்கள். கணித்த ஜாதகம் ஒன்றாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுவதில்லை, கொட்டாவி விடுவதில்லை, தானாக சிரிப்பதில்லை. ஒரு குழந்தை காலையில் தூங்கும், இரவில் அழும், சில குழந்தை இரவில் தூங்கும், வெளிச்சம் வந்தால் அழுதுகொண்டே இருக்கும். ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும், ஒரு குழந்தை அதை அறவே மறுக்கும். ஒரு குழந்தை தாயின் அணைப்பை விரும்பும், மறு குழந்தை தூக்கினாலே அழும். இப்படி பலவித மாறுபாடுகள் அங்கேயே வெளிப்படுவிடுகின்றன அல்லவா?

ஜாதகமும், அதன் கிரநிலைகளும் ஒன்றாக இருக்கட்டும். அந்தந்த கிரக நிலைகளின் அலைவீச்சு ஒன்றாகவே இருந்தாலும், அதை பெறுவது, ஏற்பது, விலக்குவது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை. மேலும் அந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை இப்படித்தான் வளரும் என்று சொல்லவும் முடியாது. அப்படி எந்த ஜோதிடரும் சொல்லவும் மாட்டார். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைகாட்சி டிஷ், உங்களின் ஒரே ஒரு 49 இன்ஞ் ஸ்மார்ட் டிவி வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பது போலவே, இந்த குழந்தைகள் மாறிக்கொண்டுதான் வளரும் என்பது உண்மை. ஒரே மரத்தின் விதைகளை நீங்கள் விதைத்தாலும், வளர்ந்து அதுதரும் அதன் கனிகள் ஒரே சுவையாக இருப்பதில்லை.

அப்படியானால் ஜாதகம்? அது ஒரு குறிப்பு, கையேடு. அதைக்கொண்டு அந்தக் குழந்தைகளின் அடிப்படை அறிந்து மாற்றத்தை விரும்பி செயல்பட்டு வாழ்வில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். பார்வைக்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆராய்ந்து பலன் தரும் பொழுது அது மாறுதலை தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொடு தனித்தனியான குழந்தைக்கும் பதினாறு வகையான மாற்றங்கள் உண்டு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்று மாறினாலும் ஒரே மாதிரி இருக்கபோவதில்லை. அதனால் ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் கணித்தாலும், நகர்ந்துகொண்டே இருக்கக்கூடிய இந்த வானியல் நிகழ்வு, நுண்ணிய மாற்றதை கொண்டிருக்கும். அது அந்த ஜாதகத்திலும் இடம்பெறும் என்பதுதான் உண்மை.

        குழந்தையின் அடிப்படை குணாதசியம், கர்மா, செயல்பாடு, மனநிலை, பரம்பரை, வழக்கம், பழக்கம், இப்படியாக எண்ணற்ற விசயங்கள், குழந்தைக்கு குழந்தை மாறுபாடுபெறும் அல்லவா? அதுபோல அந்த ஜாதகமும் தன்னுள்ளே ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும். அதை நல்ல தேர்ந்த, அனுபவம் உள்ள ஜோதிடர் நிச்சயமாக கண்டடைவார்.

வாழ்க வளமுடன்
-

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பரிகாரமாக, நவக்கிரக தவம் செய்யலாமா?


பதில்:

ஒரு சோதிட குறிப்பில், குழந்தை பிறந்த நேரம் என்பதைக் கொண்டு, வானில் எந்தெந்த கிரங்கங்கள் எங்கிருந்து தன்னுடைய காந்த அலையை வீசுகிறது என்பதைத்தான் நாம் ஜாதகம் என்று சொல்லுகிறோம். பெரும்பாலான ஜாதகங்களில், மிகச்சரியான நேரம் என்பது குறைவுதான். மேலும் வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டுவகையான பஞ்சாங்க உதவியும் கூட பிறந்த குழந்தையின் லக்கனம், பிறந்த நட்சத்திர பாதம் ஆகியவற்றையும், வக்கிர, நகர்ந்த கிரகங்களின் இருப்பிடத்தை மாற்றிவிடும். என்றாலும் கூட கிரகங்களின் காந்த அலை வீச்சு என்பது உறுதியானதுதான்.

ஒரு ஜாதக கணிப்பில், ஆராய்ச்சியில் ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சனை தீரவும், வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து தீர்க்கவும் நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஒரு ஆறுதலான வார்த்தைகள் தந்து உதவுவது போல. பெரும்பாலானவை அனுபவித்து தீர்ப்பது என்பதாகவே இருக்கும். ஆனாலும் வாழும் மனிதனுக்கு இயற்கை கொஞ்சம் கருணை காட்டத்தான் செய்கிறது. அதனால் மனம் உடைந்து கலங்கவேண்டிய அவசியமில்லை

இங்கே பரிகாரம் என்பது, மன நிறைவு, மனதுக்கு ஆறுதல் என்பதுதானே தவிர வேறெதும் இல்லை. இந்த பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கும் பல்லாயிர சோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதும் இப்போதைய நிலைதான். அதை நாம் குறைசொல்ல முடியாது எனினும் அவர்களிடம் சிக்காமல் விலகி இருக்கவேண்டும். கோவிலுக்கு போவது, பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது, தானம் செய்வது, யாகம் வளர்ப்பது என்று எத்தனையோ செய்தாலும் கூட இருப்பதும், வரப்போவதும் ஜாதகத்தில் மாறிவிடுவதில்லை. ஆனால் இதையெல்லாம் செய்தால் ஏற்படும் மன மாற்றம் நமக்கு உள்முகமாக நம்பிக்கையைத் தரும்.

ஆனால், வேதாத்திரியத்தின் வழியாக பயணிக்கின்ற ஒருவர், இந்த பரிகாரம் என்பதற்கு, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்தால், வழக்கமான பரிகாரதிற்கு மாற்றா? என்று கேட்டால் அது இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமாக பஞ்ச பூத நவக்கிரக தவம்  எந்த பரிகாரத்திற்கும் உதவுவதில்லை. என்றாலும் கூட, ஒவ்வொரு கிரத்தின், கோளின் மீதும் நம்முடைய மனதை நிறுத்தி, தவமாக செய்துவருகையில், அந்த கிரகம், கோளின் காந்த அலைவீச்சின் தாக்கத்தை, சமன் செய்துகொள்ளும் வகையில் மனம் மாறுகிறது என்பது உண்மையே! அந்த வகையில், வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் நிலைக்கு மனம் உறுதிபடுகிறது என்றும் சொல்லலாம். இது பரிகாரம் அல்ல எனினும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். 

தொடர்ந்து பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவரும் பொழுது, மனதின் சக்தியும், கிரகங்கள், கோள்களின் சக்தியும் கலப்புறுகிறது. அதன்வழியாக நாம் நன்மையே பெறலாம், பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக வந்துவிடும். நம்முடைய கடந்த கால நிலையை மாற்றிட முடியாது எனினும், வரப்போகிற நிலைமையை சரி செய்துவிடக்கூடிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் மட்டும், வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஒருவர் மட்டுமல்லாது, யார்வேண்டுமானாலும், தீட்சை பெற்றுக்கொள்ளாத எந்த ஒருநபரும் செய்து அதற்கான பலனைப் பெறலாம் என்பதுதான் இத்தவத்தின் சிறப்பாகும்! 

வாழ்க வளமுடன்.

Why astrologers mostly failed on the foretelling?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?


பதில்:

அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால்,  அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.

இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.

சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.

இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை  தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ  நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!

முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்.

What is your reply someone corner you on your past post?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் ஜோதிடர் என்றால் அதை பார்க்க வேண்டியதுதானே? எதற்காக வேதாத்திரியத்தை அதனோடு இணைக்கிறீர்கள்? மகரிஷி ஜாதகம் குறித்து தனியாக சொல்லியிருக்கிறாரா? இல்லையே, அதற்குத்தான் நவக்கிரக தவம் இருக்கிறதே? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்த அன்பருக்கு உங்கள் பதில் என்ன?


பதில்:

ஆம், கடந்த என்னுடை சோதிட ஆராய்ச்சி பதிவில் அப்படியான பின்னூட்ட கேள்வி வந்தது. கேள்வி கேட்ட அந்த அன்பர், பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் என்பதும் அறிந்து கொண்டேன். மேலும் அவர் பக்தி மார்க்கத்தில் செல்லுபவராகவும் இருக்கிறார். ஒரு வேகமான, தன்முனைப்பான நபர் என்பதும் தெரியவருகிறது. சரி இப்பொழுது கேள்விக்கு வரலாம்.

இந்த அன்பர், வேதாத்திரியத்தில் இருக்கிறாரா? வந்து விலகிவிட்டாரா? தொடர்கிறாரா? என்பது தெரியவே இல்லை. இதுவரை நம்முடைய வேதாத்திரிய யோகா காணொளி தளத்தில் என்னென்ன பதிவுகள் கண்டார்? விளங்கிக் கொண்டார்? கருத்து விளக்கம் தருபவர் யார்? அவர் பின்னணி என்ன? இதுவரை அவர் குறித்து புரிந்து கொண்டது என்ன? இந்த சேவை ஏற்கனவே கொடுத்திருக்கிறாரா? எத்தனை ஆண்டுகளாக இந்த காணொளி தளத்தை நடத்திவருகிறார்? என்றெல்லாம் அவர் தெரிந்து கொண்டாரா என்பதும் அறியமுடியவில்லை. இதற்கு முன்பாக அந்த பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் பின்னூட்டம் இட்டதாகவும் அறியமுடியவில்லை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி, கிரகங்கள் கோள்கள் என்பன குறித்து நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். அவைகளின் காந்த அலை இயக்கம், கோள்களின் அன்மை, சேய்மை தூரம், அவற்றின் இரசாயன இயக்க, மன இயக்க தூண்டுதல் என்றும் விளக்கி இருக்கிறார். ஜாதகம் எப்படி கணிக்கிறார்கள், அதில் இருக்கிற உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லியுள்ளார். அதில் போலியான கருத்துக்கள் உள்ளதை சொல்லியும் தெளிவுபடுத்தியுள்ளார். பஞ்சபூத நவக்கிர தவ தத்துவ விளக்கம் கேட்டோர் சில உண்மைகளை அறியமுடியும்.

முக்கியமாக, என் 18 வயதிலேயே வேதாத்திரிய தீட்சை பெற்று 21 வயதில் அருள்நிதி பட்டத்தை வேதாத்திரி மகரிஷியின் கைகளால் பெற்றுக்கொண்டவன். அதற்குப் பிறகு ஆர்வத்தின் வழியாக, ஜோதிடம் பட்டய வகுப்பில் கற்றுத்தேர்ந்தவன். ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை. மேலும் என்னுடைய இந்த சோதிட ஆராய்ச்சி, வருங்காலம் குறித்த தகவல்களை தருவதல்ல. ஏற்கனவே இருக்கிற, கர்மா என்ற வினைப்பதிவுகள் குறித்தான ஒரு ஆய்வு. அதை எப்படி வேதாத்திரிய வழியில், தவமும் தற்சோதனை அகத்தாய்வும் கொண்டு தீர்க்கலாம்? என்ற ஒரு விளக்கமே ஆகும். இதை நான் சும்மா பிறருக்கு தரமுடியுமா? அதற்காக சேவை கட்டணம் சொன்னேன். அதையும் கிண்டலடித்து விட்டார்கள். இவர்கள் விரித்திருக்கின்ற கைகளில் எவ்வளவு சும்மா கொடுத்தாலும் பத்தாது என்று என் நண்பர் சொல்லுவார். அது உண்மையே!

முக்கியமாக, பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் நபர், அது போன்ற கருத்து பின்னூட்டம் போடுகின்ற பலர், பகல் வானில் நட்சத்திரங்கள் இல்லை என்று வாதிடுகிறார்கள். இருக்கிறது ஐயா, அது சூரியனின் ஒளியில் மறைந்திருக்கிறது என்று நான் சொன்னால், அவர்கள் ‘அப்போ நான் என்ன குருடா? என் கண்ணால் பார்ப்பது பொய்யா? நான் நிஜமாக பார்ப்பதை சொல்லுகிறேனே?! அதை நீ ஏற்காமல், நீ சொன்னால் மட்டும் நான் ஏற்றுக்கொள்வேனா? அவ்வளோ பெரிய முட்டாளா நான்?’ என்று எதிர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளை புரியவைப்பது?! யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த கேள்வி பதிலுக்குக் கூட, ‘நான் அப்படியெல்லாம் இல்லை, நீதான் குழப்புகிறாய்’ என்றும் பின்னூட்டம் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Do all the planets rotate in a circle?



 
வானியல் நிகழ்வு!

அன்பர்களே, ஒரு வானியல் நிகழ்வு குறித்த உண்மையை நாம் தெரிந்து கொள்வோம். வேதாத்திரிய அன்பர்களாகிய நமக்கு இந்த உண்மை அககாட்சியாக பதிவாகும் என்பது உறுதி. சராசரி வானியல் ஆர்வமுள்ள அன்பர்களுக்கும் இந்த விளக்கக்கட்டுரை உதவும்.


சூரியக்குடும்பம்

நம்முடைய உலகியல் வாழ்வில் நமக்கு, பெற்றோரும், குழந்தைகளாக நாமும், நமக்கும் திருமணம் ஆகிவிட்டால், குழந்தைகள் பிறப்பதும், அவர்கள் நம் பெற்றோருக்கு பேரப்பிள்ளைகள் ஆகிவிடுவதும் ஒரு குடும்ப அமைப்பு. அதுபோலவே இந்த சூரியன், தாத்தாகவோ, கொள்ளுத்தாத்தாவாகவோ இருக்க. அதன் காந்த ஈர்ப்பு அலைகளுக்குள் சிக்கிய கோள்கள், சூரியனை மையமாகக் கொண்டு, தனக்குத்தானே சுற்றிக் கொண்டும், சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். இந்த கிரகங்க கூட்டங்கள் சூரியன் தலைமையில், சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுவதையும் நாம் அறிவோம்.


காந்த அலையின் தூரம்?!

எவ்வளவு தூரம் இந்த சூரியனின் காந்த அலை வீச்சு உள்ளது என்று ஆராய்ந்தால், சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தைப் போல் 30 மடங்கு தூரத்தில் இருக்கும் நெப்டியூன் வரை உள்ளது என்கிறார்கள். அதற்கு அடுத்து கோள்கள் இல்லை அதனால், அந்த வீச்சு அளவு சரியானது தானா? என்பதற்கும் விளக்கமில்லை. எனவே இந்த காந்த அலைவீச்சுக்கு உட்பட்ட எந்த கோளும் சூரியனைத்தான் மையமாக்கொண்டு சுழன்றாக வேண்டும் என்பது அதன் தலையெழுத்து! (கிரகத்துக்கே தலையெழுத்தோ?)


கடைசிக்கோள் புளூட்டோ?!

ஐயா, அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நாங்கள், சர்வதேச வானியல் ஒன்றியம்(?!) (IAU)புளூட்டோவை ஆராய்ந்து ‘குள்ளக்கிரகம்’ என்று சொல்லி தகுதி நீக்கம் செய்துவிட்டோம். எனவே கடைசிக் கோள் புளூட்டோ அல்ல என்கிறார்கள்.


வட்டமும் நீள்வட்டமும்

சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை நாம் அறிவதில்லை. விஞ்ஞானிகள், சூரியனின் மேல் ஏற்படும் கரும்புள்ளிகளைக் கொண்டும், அதன் நெருப்பு அலைகளைக் கொண்டும் கண்டு கொண்டார்கள். சூரியனை மையமாகக் கொண்டு, புதன், சுக்கிரன், நாம் வாழும் புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த சுற்று வட்டமாக சுற்றுகிறது என்றுதான் பெரும்பாலோனோர் கருதுகிறார்கள். அதைத்தான் நம்புகிறார்கள். கொஞ்சம் விஞ்ஞானம் அறிந்தோர், அது வட்டம் இல்லைய்யா, நீள் வட்டமாக சுற்றி வருகிறது என்பார்கள். 

விஞ்ஞானிகள் இதையும் மறுக்கிறார்கள். நீள்வட்டம்தான் ஆனால் ஒரே மாதிரியான நீள் வட்டமல்ல. அது சாய்ந்து சாய்ந்து நிகழும் என்கிறார்கள். இதை இன்னொரு விதமாக சொன்னால், நாம் சமையலறையில் ஆப்பம் ஊற்றினால், மாவு ஊற்றிய கையோடு, ஆப்பச்சட்டியை கையால் எடுத்து, அப்படியும் இப்படியும் சுழற்றி விடுவோம் அல்லவா? அதுபோல இந்த கோள்கள் / கிரகங்கள் சூரியனை சுற்றிவருகின்றன என்று விளக்கம் அளிக்கிறார்கள் வானியல் விஞ்ஞானிகள்.

உண்மையை சொல்லப்போனால், அவர்கள் சொன்னதை அவர்களே மறுத்து மறுத்து, புதிதுபுதிதாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.




உயரும் சுழல்படிக்கட்டு!

Spiral என்ற உயரும் சுழல் என்ற வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு வீட்டில் மாடிப்படி நீண்டு வைக்க இடமில்லை என்றால். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டமாகவே படிகள் அமைத்து, அப்படியே அந்த படிகளை மேலே உயர்த்திக்கொண்டே போவதுதான் ‘Spiral என்ற உயரும் சுழல்படிக்கட்டு’ ஆகும். அதுபோன்றே இந்த கோள்கள் / கிரகங்கள் சுழன்றுகொண்டே, சூரியனை பின் தொடர்கின்றன என்றால் மிகையில்லை.



இந்த உண்மையை ஆராய்ந்த வானியல் விஞ்ஞானிகள், அதை ஒரு காட்சி வடிவமாக உருவாக்கி நமக்கு அறியத்தருகிறார்கள். இதோ நீங்களும் கண்டு இந்த வானியல் உண்மை விளக்கம் அறிந்து கொள்ளுங்கள்.

காணொளி



-

Thanks to images and vides, copyrighted to original owner, here we used educational purpose only!

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Can those who have joined yoga look at the horoscope?


யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா?


ஜோதிட பலன்கள்

பெரும்பாலான சோதிடர்களின் சேவை மிகச் சிறப்பாக நிகழ்கிறது. அக்காலத்தைவிட இணையம் வழியாக, யாரும், எங்கேயிருந்தும் அவர்களுக்கான ஜோதிடவழியான ஆலோசனைகளை கேட்டுக் கொள்கிறார்கள். அதற்கான கட்டணத்தையும் தவறாது செலுத்துகிறார்கள். பரிகாரம் என்ற வகையில் பணம் கொடுக்கிறார்கள் அல்லது அவரவர்களாகவே ஏதேனும் கோவிலுக்குச்சென்று தீர்த்துக் கொள்கிறார்கள். 

ஜோதிடர்களை, எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால், அவர்களின் ஜோதிட அறிவு விசாலமாகிக் கொண்டேதான் இருக்கும். மேலும் அவர்கள் சிந்தனை அடிக்கடி, பிரபஞ்சத்தில் நிலைத்து இருக்கும் என்பதும் உண்மை. சில அரைகுறை, ஆர்வக்கோளாறு சோதிடர்கள் உண்டுதான். அவர்களிடம் நாம்தான் கவனமாக இருக்கவேண்டுமே தவிர, மொத்த ஜோதிடர்களையும் எடை போட்டுவிடக் கூடாது.

ஜோதிட ஆய்வு பெரும் கடல், முழுமையான வரையறைக்குள் இன்னமும் சிக்கவில்லை. அதனால் ஒருவர் சொன்னதுதான் சரியானது என்ற முடிவுக்கு வரமுடியாது. அதில் மாற்றுக்கருத்து நிறைய உண்டு என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜாதகம் என்பது என்ன? ஏன் எழுதப்படுகிறது?

ஒரு உயிரின் ஜென்மம் புதிதாக துவங்குகிறது. அந்த ஜென்மம் எந்தெந்த குறிப்புக்களை தாங்கியிருக்கிறது? எதற்காக வந்திருக்கிறது? என்ன செய்தது? என்ன செய்யப்போகிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு விபரக்குறிப்பு அது. 

எதைசொன்னாலும் எசப்பாட்டு பாடுபவர்கள் கேட்பார்கள். ‘ஏன் எழுதாம போய்ட்டா, அவனோ/அவளோ பூமியிலே வாழமுடியாதோ?’

‘ஒரு பொருள் வாங்கினால், அந்த பொருளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்ற விபரக்குறிப்பு உள்ளது, அதை ஏன் அப்பொருளோடு தருகிறார்கள்? தேவையில்லைதானே? உங்களுக்குத்தான் நிறைய பகுத்து பார்க்கும் அறிவு இருக்கிறதே?’

இதற்கு ‘அதுவேறு இதுவேறு’ என்று பதிலளிப்பார்கள்.

ஜாதகம் எழுதப்படாதவர் வாழ்க்கை?!

தனக்கு ஜாதகம் எழுதப்படவில்லை, தனக்கு தான் பிறந்த குறிப்பு விபரங்கள் எதுவுமே இல்லை என்றால், மனம் போன போக்கான வாழ்க்கைதான் அமையும். ஒவ்வொரு நாளும் பாடமும், பரிச்சையும் அதற்கான விடையும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கற்றுத் தெளிய வேண்டியதுதான் மிச்சம். ஜாதக குறிப்பு எழுதப்பட்டிருந்தால், தன்னுடைய குணாதசியம் கூட அக்கட்டங்கள் வழியாகவும், நிற்கும் கோள்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாமே?! உங்களுக்கு தேவையில்லையா அவை? நான் எப்படி இருந்தால் எனக்கென்ன, என்று அடுத்தவரிடம் உங்களால் பழகிட முடியுமா? அவர் உங்களை ஏற்பாரா? இதுபோல எத்தனையோ முன் விளக்கங்களை, ஜாதக கட்டம் சொல்லுகிறதே? அதெல்லாம் எப்படி?

ஜாதகப்படி ஏதும் நிகழ்வதில்லை, பின் எதற்காக?

ஒரு குறிப்பாக இருக்கிற விபரங்களை, அறிந்து கொள்வதற்காக மட்டுமே ஜாதகத்தை உபயோகம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைபாடு. அதாவது ஒரு ஜாதகத்தில் விதி என்ற ஒன்று இல்லை. ஆனால் மதியால் செயல்பட ஊக்கம் தருகிறது என்பதை நீங்கள் மறுப்பீர்களா?!

சிவப்பு எரிந்தால் நிற்க வேண்டும் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமே? பிறகு ஏன் அதற்குப்பிறகும் போகத் துடிக்கிறீர்கள்? ஜாதகம் என்பது சாலை சந்திப்பில் இருக்கும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு போன்றவை. எப்போது நிற்கலாம், போகலாம், காத்திருக்கலாம், தயாராகலாம் என்று தெரிந்து கொள்வது தவறில்லையே?!

இதெல்லாம் நான் ஏற்கமாட்டேன், நம்பமாட்டேன்!

சரி ஆளைவிடுங்கள். நாம் உங்கள் ஜாதகத்தை கேட்கவில்லை, பார்க்கவும் தயாரில்லை. ஏனென்றால் நீங்கள் ஏற்கமாட்டீர்கள், நம்ப மாட்டீர்கள் என்பது உங்கள் பிறப்பிலேயே இருக்கிறதே!

ஏன் இந்த கேள்வி?

யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா? இதுதான் இந்த கட்டுரையின் முதன்மை கேள்வி. கேட்பது யார் தெரியுமா? யோகத்திலும் இணையாமல், ஜாதகத்தையும் நம்பாமல் இருக்கும் கூட்டத்தினர்தான். இவர்களுக்கு எல்லாமே மிதமிஞ்சிய கற்பனையிலும், யோசனையிலும், ஆராய்சிலும் மிதப்பார்கள். சப்பைகட்டாக, பகுத்தறிவு, விஞ்ஞான, தத்துவ கருத்துக்களை காட்டுவார்கள். அறிவில்லாதவன் செய்கிற வேலை என்று ஒதுக்கித் தள்ளுவார்கள். வழியை மறித்து அடுத்தவரையும் போகவிட மாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஓர் திருப்தி.

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஒரு செய்தியை சொல்லுகிறேன். உங்களிடம் எகப்பட்ட சட்டைகள் அடுக்கப்பட்டிருக்கலாம்.  அதில் எந்த வண்ணம் தோய்த்த சட்டையை தேர்ந்தெடுத்து உடுத்துவீர்களோ அதை, அந்த நேரத்தில் அலைவீசிக் கொண்டிருக்கும், கோள் தீர்மானிக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது?

இதற்கு என்ன காரணம்?

நீங்கள் தான் ஜோதிடம் பொய் என்று சொல்லுபவர்கள் ஆகிற்றே?! பிறகு எதற்கைய்யா சொல்ல வேண்டும்? ஆளைவிடுங்களய்யா!

ஆயிரம், பல்லாயிரம்!

நான் இந்த ஜோதிட ஆலோசனையை, ரூபாய் 2500/- என்பதாக மட்டும் நன்கொடையாக செலுத்த கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமான ஆய்வுகளோடு, அதை முழுதாக படித்து முடித்த பிறகு,  7 கேள்விகளையும் கேளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அடிப்படை முதல்,
உங்கள் உடல் நலம்,
கர்ம வினைகள்,
யோகத்தில் உங்கள் நிலை மற்றும் முன்னேற்றம்,
தொழில், வேலை,
பண வரவுகள்,
வாழ்க்கை வளம்
ஆகிய உண்மைகளையும் தருகிறேன். 

அடிப்படையான இவை போதும், மேலும் பரிகாரம் என்று ஏதுமில்லை, அது தேவையும் இல்லை. பரிகாரம் என்பது ஒரு ஏமாற்று என்றால் நீங்கள் நம்புவீர்களா என்பதும் எனக்குத் தெரியாது. யோகத்தில் இருக்கும் ஒருவருக்கு பரிகாரம் என்பது அவசியமில்லை. அவரின் யோகவாழ்வே அதை தீர்த்துவிடும் எனவே குழப்பமும் இல்லை. இதற்காக பல்லாயிரம் செலவு செய்யவும் தேவையில்லை.

சேவை ஆரம்பமாகிவிட்டது!

ஆம், கடந்த மே மாதம் 15 தேதி முதலாகவே, இந்த ஜோதிட ஆலோசனை சேவை ஆரம்பமாகிவிட்டது. ஒரு ஆய்வுக்கு 7 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க நேரலாம். உங்கள் ஜாதகம் அதற்குள்ளாக வந்து நிற்க, உடனடியாக wa.me/+919442783450 என்ற வாட்சாப் வழியாக அனுப்பலாம். நன்கொடை செலுத்திய விபரத்தையும் இணைத்து அனுப்புக.

மின்னஞ்சலில் அனுப்புவதாக இருந்தால்: checkmyhoroscope@gmail.com

நன்கொடை செலுத்த இணையம் வழி: 9442783450@UPI

நன்கொடை செலுத்தாத, ஜாதக குறிப்பு, எந்த ஒரு ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

நன்றி!


அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!


Horoscope research service for all



 எல்லோருக்குமான ஜோதிட / ஜாதக ஆலோசனை சேவை

வேண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு, ஜாதகம் வழியாக, கர்மா என்ற வினைப்பதிவு குறித்து சிலருக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த நிகழ்வு, ராகு கேது குறித்த, என் ஆராய்ச்சிக்காக நடத்தப்பட்டது. ஒருவாரம் மட்டும்தான் அதை செயல்படுத்தினேன். பிறகு அந்த சேவை நிறுத்திவிட்டேன். பல நாட்களாக மீண்டும் அதை செயல்படுத்துக என்று சில அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, வேதாத்திரிய சேவையை தரும் இந்த வேளையிலும், ஜாதக ஆலோசனையை தருவதற்கு முடிவு செய்துள்ளேன்.

இங்கே நாம் எதைப்பகிர்ந்து கொண்டாலும், அதற்கு எசப்பாட்டு பாடுவதற்கு நாலு அன்பர்கள் வந்துவிடுவார்கள். எதையுமே முழுதாக புரிந்து கொள்ளாமல், ஆராய்ந்து பார்க்காமல் உடனே எதையாவது மறுத்து பேச வேண்டும், தான் அறிவாளி என்று காட்டவேண்டும் என்று துடிப்பார்கள். ‘வேதாத்திரியத்தில் இருப்பவர்களுக்கு, ஜோதிடம், ஜாதகம் தேவையா?’ என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவதும், கேட்பதும் என்னவென்றால் ‘உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்களப்பா! துரியாதீத தவத்தில் ஏன் சந்திரன், சூரியன் என்று போகிறீர்கள்? டைரக்டா போக வேண்டியதுதானே?’ 

ஜாதக ஆலோசனை

நான் வழங்கும் இந்த சேவை, மற்ற ஜோதிட நிபுணர்கள் சொல்லும் நிலையிலிருந்து மாறுபடும். அதாவது அவர்கள் பரிபாசை பாடல்கள், ஆய்வு குறிப்புக்கள், பலவிதமான குறிப்பேடுகள், அனுபவம், பல ஜோதிட நூலகள் படிப்பறிவு, பல ஜாதக குறிப்பு ஆராய்ச்சி என்பதாக, இவற்றைக் கொண்டு பலன்களை, பரிகாரங்களை சொல்லுவார்கள்.

ஆனால், இங்கே நாம், வேதாத்திரியத்தில் இருப்பதால் அடிப்படையான, நேரிடையான விளக்கமும், அனுபவ குறிப்பும் கொண்டு சொல்லப்படும். காரணம் நமக்கு எது பஞ்சபௌதீக தோற்றங்களாக, நம் பிரபஞ்சத்தில், கிரகங்களாக, இயற்கையாக, பொருட்களாக, தனிமங்களாக, ஜீவன்களாக, மனித உயிர்களாக வந்திருக்கிறது என்ற உண்மை தெரியும். கிரகங்கள் என்ன தன்மையில் இருக்கிறது? எத்தகைய அலைகளை வீசுகிறது? எப்படி நமக்குள் பாதிப்பை, நன்மையை, சமநிலையை உருவாக்குகிறது? என்பதும் தெரியும். மேலும் குறிப்பாக, மனம் என்பது என்ன? அதன் தன்மை என்ன? எப்படி செயல்படுகிறது என்பதும் நாம் அறிவோம். முக்கியமாக, இருந்த இடத்திலிருந்தே, பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும் தெரியும். இதன்வழியாக, நம் பிறப்பு ஜாதக குறிப்பில் இருக்கும் உண்மையை இயல்பாக, தெளிவாக, வெட்டவெளிச்சமாக சொல்லிட முடியும்.

நமக்கு நாமே பரிகாரம்

குழப்பமில்லாத தானே தன்னால் தீர்த்துக்கொள்ளும் பரிகாரங்களும் தெரியும். கோவில் குளமென்று அலைய தேவையின்றி, தவத்தாலும், செயல்களாலும், திருத்தங்களாலும் நாம் அதை பரிகாரமாக தீர்க்கலாம். மேலும் நாம் கற்ற அகத்தாய்வும், தற்சோதனையும் உதவுமே! எனவே நமக்கு தெரியவேண்டியது என்ன? என் ஜாதகம் வழியாக, என் துன்பச் சிக்கலுக்கு தீர்வு தெரிகிறதா? என்பது மட்டுமே. அதைத்தான் இங்கே நான் வழங்கும் சேவை தருகிறது. இந்த இடத்தில் என்னுடைய நண்பரை (காலமாகிவிட்டார்), நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நானும் அவரும் பல ஆய்வு கட்டுரைகளை 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறோம். அவரும் பரிகாரத்தை, மற்ற சோதிட நிபுணர்கள் போல சொல்லாமல் ‘நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மூலமாக’ என்பார். 

வேதாத்திரி மகரிஷியின் கைரேகை

ஏதோ ஒரு நிகழ்வில், ஒருவர் மகரிஷியிடம், 

‘நான் உங்கள் கைரேகையை பார்க்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். மகரிஷியும் சிரித்துக்கொண்டே ‘சரி பாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். கைரேகைகளை ஆய்ந்து பார்த்துவிட்டு, விளக்கம் சொல்லிவிட்டு, 

‘ஐயா, ஐம்பத்திநான்கு ஆண்டுக்காலம் வாழ்வீர்கள்’ என்று சொன்னாராம். மகரிஷியோ ‘நான் வந்த வேலை இன்னும் முடியலையேய்யா? அது இன்னும் காலம் ஆகுமே? ஏதாவது இந்த ஐம்பத்திநான்கை நீடிக்கும் வழி இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த கைரேகை பார்த்தவர் ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, நீங்களேதான் எதாவது வழி தேடனும், இல்லைன்னா தெய்வத்துகிட்ட முறையிடனும்’ என்றாராம்.

நடந்தது என்ன? வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய 96 வயதில்தான் உடல், உதிர்த்து வான் காந்தத்தில் தன்னை நிறைத்துக் கொண்டார். தன்னுடைய 95 வயது நிறைவிலேயே ‘நான் வந்த வேலை முடிந்துவிட்டது, நான் போகிறேன், யாருக்கும் பாரமில்லாமல்’ என்று சொல்லிவிட்டார் என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

ஜாதக சேவைக்கு?!

இதன் வழியாக பெற்றப்படும் ஜோதிட, ஜாதக சேவைக்கு Rs. 2500/- (ஒரு நபர்/ ஒரு ஜாதக குறிப்பு) என்ற வகையில் செலுத்திட வேண்டும்.

கைபேசி App வழியாக செலுத்துக:

9442783450@UPI

வங்கி வழியாக செலுத்திட விபரம்:

AC Name: J.SUGUMARAN
SB Ac: 50100081694540
IFSC: HDFC0000058
Branch: THILLAINAGAR (Tiruchirappalli, Tamilnadu, INDIA)

பலன்கள் பெற

உங்கள் ஜாதகுறிப்பு அனுப்புக. அக்குறிப்பு உங்களுக்கு எழுதப்படவில்லை என்றால்,
1) பெயர்
2) தாய்/தந்தை பெயர்கள்
3) ஆண்/பெண்
4) பிறந்த தேதி/மாதம்/வருடம்
5) பிறந்த நேரம்
6) பிறந்த ஊர்/மாவட்டம்/நாடு
7) தற்பொழுது வசிக்கும் முகவரி
8) கைபேசி எண்
9) வாட்சாப் (WhatsApp)எண்
10) (ஆராய்ச்சி விளக்கம் பெற்றுக்கொண்ட பிறகு)ஏதேனும் 7 கேள்விகள்  ஆகிய முழு விபரங்களை அனுப்புக.

ஜாதக குறிப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்ப: checkmyhoroscope@gmail.com

ஜாதக குறிப்பு வாட்சாப் (WhatsApp) வழியாக அனுப்ப: wa.me/+919442783450

கூடுதலாக நீங்கள் நன்கொடை செலுத்திய விபரமும் தெரிவிக்க வேண்டும். நன்கொடை செலுத்தப்படாத ஜாதக குறிப்புக்கள், ஆலோசனைக்கும், ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அறிக.

விபரமான, விளக்கமான, ஆய்வு முடிவுகள், எழுத்து வடிவிலான PDF மின்னஞ்சல் வழியாக பெற, குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காத்திருக்கவும்.

இந்த சேவை சிறுது காலம் நீடிக்கும் என்பது உறுதி.

குறிப்பு: இந்த சேவை குறித்து, நேரடியாக கைபேசி அழைப்பு செய்வதை தவிர்க்கவும். வாட்சாப் (WhatsApp) மட்டும் தொடர்பு கொள்க!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Raghu and Kethu - Part 01


 ராகுவும் கேதுவும் - பகுதி 01


ராகுபோல கொடுப்பாரும் இல்லை, கேதுபோல கெடுப்பாடும் இல்லை என்று பொதுவாக சொல்லுவார்கள். எப்போதும் போலவே இந்தக்கட்டுரை சோதிட ரீதியிலானது அல்ல. உண்மை விளக்கத்தின் அடிப்படையில், ஆராய்ச்சிக்கான கட்டுரை. 

பெரும்பாலான சோதிட அறிவு, கற்றலின் சாரத்தை ஒட்டியும், அவற்றை உடனடியாக ஞாபகத்தில் கொண்டுவருவதைக் கொண்டும் அமைவன. இதில் ஆராய்ச்சி என்றால், ஏற்கனவே கற்றதை, வேறு சில கருத்துக்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது என்பதாகவே அமைகிறது. சில நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அமைகிறது. ஆனால் நேரடியாக அந்தந்த கிரகங்களின் தன்மையோடு, ஒத்துமையான அலைவரிசையோடு நின்று பெறப்படுவது இல்லை. ஆனால் அதற்கு சாத்தியம் உண்டு. யாரெனும் ஒரு சிலர் அப்படியான நிலையில், உண்மைகளை எடுத்துச் சொல்வதும் உண்டு. இந்தக்கட்டுரையில் உள்ள விளக்கங்கள், நேரடியாக கணக்குகள் அற்று, கிரகங்களின் தன்மையில் சொல்லப்படுவதாகும். எந்தஒரு மூல நூல், குறிப்பு இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டது இல்லை. 

ராகு, கேது ஆகிய கிரங்களின் உருவாக்கம், தோற்றம், அமைப்பு ஆகிய கதைகள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். பொதுவாகவே நம் நாட்டில் 100 க்கு 99 நபர்கள் ஜோதிடம் அறிந்தவர்கள் எனலாம். அதை ஆய்வு செய்து ஆலோசனை சொல்லுபவர்கள் கிட்டதட்ட 51 நபர்கள் எனலாம். இதன்காரணமாக நேரடியாக நாம் கட்டுரைக்கு சென்றுவிடலாமே!

ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் ஜாதகனுக்கு என்ன சொல்ல வருகிறது? பார்ப்போம்!

வாழ்க வளமுடன்!