CJ for You: கடவுள்

கடவுள்

Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Why need to call that one is the God, Almighty, Supreme Power, and Divine?


இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?


பதில்:

இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற வார்த்தைகள் தரும் உண்மையை நீங்கள் இன்னும் அறியவில்லை. அறிந்துகொள்ளவும் மறுக்கிறீர்கள். ஒன்றும் தவறில்லை. இந்த வார்த்தை மற்றும் உண்மையில் உங்கள் அனுபவம் அப்படி இருக்கிறது. மேலும் நீண்டகாலமாக சில கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதோடு உங்கள் பார்வையில், பொய்கள் தான் கண்ணில் பட்டிருக்கிறது. அதனாலும் கூட நீங்கள் இந்த கருத்தில் இருக்கலாம். வேறு யாரெனும் ஒரு வழிகாட்டியின் அறிவுரையாலும் அப்படியாக கருத்தில் நின்றிருக்கலாம். உங்களைப்பொறுத்தவரை அப்படி சொல்வது அவசியமில்லைதான்.

இதற்கு விளக்கமாக, குரு மகான் வேதாத்திரி சொன்ன உண்மைகளையே இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு பொருளை நாம் தூக்குவது என்றால், நம்மால் எவ்வளவு தூக்கமுடியுமோ அவ்வளவு எடை கொண்ட பொருளைதான் தூக்க முடியும். காய்கறி அங்காடியில் உள்ள ஒரு மனிதர், தன் முதுகில் கிட்டதட்ட 50 கிலோ முதல் 100 கிலோ வரை தூக்கமுடியும். அதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். அதற்குமேல் என்றால் யாராலும் முடியாது. உங்களால் முடியும் என்றால் முயற்சிப்பதில் தவறில்லை. இப்போது ஓர் உண்மை நமக்கு தெரியவரும். தூக்கும் பொருளைவிட நாம் வலுவாக இருந்தால்தான், அந்த பொருளை தூக்கமுடியும். ஒரு மேஜைமேல் பத்து மூட்டைகளை அடுக்கினால் மேஜை உடைந்து நொறுங்கிவிடும் அல்லவா?

இப்போது உங்களுக்கு ஒரு காட்சி தருகிறேன். இந்த பூமி எவ்வளவு வலு உடையது என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனையோ கோடி டன் எடை இருக்கலாம். அத்தகைய பூமியை தாங்கிக் கொண்டிருப்பது யார்? உடனே இதற்கு இயற்கை என்று நீங்கள் பதில் தருவீர்கள். ஆம் இயற்கைதான், தன்னிலே இந்த பூமியை மிதக்கவிட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைக்குத்தான் மதிப்பு கொடுத்து, வார்த்தைகளாலும் மதிப்பு கொடுத்து, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்று பலவிதமான் பெயர்களில் அழைக்கிறோம். அந்த வார்த்தை இருக்கின்ற மதிப்பை உணராதவர்களுக்கு, அது மிக சாதாரணமான ஒலியாகவும், வார்த்தையாகவும் தான் தெரியும்.

நம்முடைய வாழ்வில் இன்று ஜனநாயகம் வந்துவிட்டதால், எந்த நாட்டு மக்களும் (ஒரு சிலர் தவிர) அவர்கள் நாட்டின் ஜனாதிபதியையும் மதிப்பதில்லை, பிரதமரையும் மதிப்பதில்லை. ஆனால் அந்தக்காலத்தில் அரசன், அரசி என்றால் பெரும் மதிப்பு கொண்டிருப்பார்கள். இப்போதும் சிலர் தங்களை அரச பரம்பரை என்று சொல்லிக் கொள்வதை கவனிக்கலாம். அதில் அவர்களுக்கு பெருமை கிடைத்துவிடுகிறது. அந்தவகையில், அரசன், அரசி என்று நேரில் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அந்த மதிப்பை நாம் வழங்குவோம் இல்லையா?! (ஒரு கற்பனையாக அந்தக்காலத்தில் நீங்கள் வாழ்வதாக நினைத்துப்பாருங்கள்).

இதுபோன்றதான உயர்ந்த மதிப்புத்தான், இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற சொல்லிலும் அடங்கி இருக்கிறது. எனினும் உங்களுக்கு என்ன விருப்பம் இருக்கிறதோ அப்படி அழைக்கலாம். யாரும் உங்களை குறை சொல்லப்போவதில்லை. என்றாலும் உணர்வால் நீங்களே உங்களையறியாமல் அப்படி சொல்லும் காலமும் வரலாம்!

வாழ்க வளமுடன்.

-

How vethathiriyam make understand the God to us?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கடவுளை வேதாத்திரியம் எப்படி காண்கிறது என்று விளக்குவீர்களா?

பதில்:
வழக்கமாக நாம் இங்கே குறிப்பிடுவதுண்டு, கட+உள் என்ற செயல்குறிப்புத்தான் கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது. இதைச் சொல்லும்பொழுதே அந்த கடவுள் எப்படி காண்பது என்பதும், எதுவாக இருக்கும் என்ற ஊகமும் கிடைத்துவிடுகிறதுதானே?!
கடவுள் தனியாக இல்லை, நமக்குள்ளாக இருக்கிறதோ? என்ற ஐயப்பாடு எழுந்தால்கூட போதுமானதுதான்.

ஆனால் பெரும்பாலோர் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? அப்படியெல்லாம் இல்லை, உயர்ந்த பெரிய கோவில்களிலும், வழிபாடு தளங்களிலும், மலை உச்சிகளில் உள்ள வழிபாட்டு நிலைகளிலும் தான் இருக்கிறது என்பார்கள். தவறில்லை. அவரவர் எப்படி அந்தந்த வயதில், கடவுள் என்ற நிலையை புரிந்து வைத்திருக்கிறார்களோ அதன்படி அவர்கள் அதை புரிந்துகொண்டு, வழிபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதையே பக்தி மார்க்கம் என்று நாம் அழைக்கிறோம். அதாவது சராசரி மனிதருக்கான இறையுணர்தல் பாதை என்றும் சொல்லலாம்.

ஆனால் யோகத்தில் உள்ளவர்கள், பக்தியை கடந்து, அதன் உண்மை என்ன? என்று அறிந்துகொள்ள ஆர்வமும், முயற்சியும், உந்துதலையும் பெற்றவர்கள், தகுந்த குருவை நாடி, அவர் வழியாக குண்டலினி எனும் உயிராற்றல் திணிவு சக்தியை எழுப்பிக்கொண்டு, தவம் இயற்றி உண்மையான இறையை, கடவுளை காண்கிறார்கள்.

வேதாத்திரியம் என்பது, எளியமுறை குண்டலினி யோகமாகும். உலகில் இருக்கும் பலவித யோகங்களின் அடிப்படையில் உள்ள சிரமங்களை எல்லாம் நீக்கி, குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலக மக்களுக்காக வழங்கியதாகும். வேதாத்திரியத்தில் கடந்து உள்ளே சென்றால், இறையை நாம், நமக்குள்ளாக ‘அறிவாக’ காண்கிறோம். அறிவு என்பது இங்கே உயர்ந்த மெய்யறிவு என்று பொருளாகும். வெறுமனே சும்மா, படிப்பினாலும், அனுபவத்தாலும், இயற்கையாகவும் பெறும் மூளை செயல்பாட்டு அறிவு அல்ல. இது உணர்வால் நாம் பெறும் உண்மை அறிவு ஆகும்.

இந்த அறிவு, விவேகம் என்றும் வழங்கப்படும். இந்த விவேகம், வேகம் என்ற ஆற்றலோடு, பிரபஞ்சத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வேகம், விவேகம் என்பதையே ‘சித்தர்கள் வெட்டவெளி’ என்று குறிப்பிட்டார்கள். 
வேதாத்திரியத்தின் வழியாக ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த உண்மையை நீங்களும் உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

Are you missing yourself into the forest?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகையே மாற்றி அமைக்கும் அறிவியல் உச்சமான காலத்தில் கூட கடவுளை அறிதல் என்பது வேடிக்கை என்கிறார்களே?!


பதில்:

அப்படி சொல்லுபவர்கள் இப்போது மட்டுமா சொல்லுகிறார்கள்? அந்தக்காலம் முதலாகவே அப்படியான வார்த்தைகள் நிலையாக இருக்கின்றன. என்ன ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கட உள் என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் மட்டும் அவர்களுக்கு புரிந்தபாடில்லை. அதுகுறித்த சிந்தனைக்கும் அவர்கள் வருவதே இல்லை.

கடவுள் என்பது, எதையோ யாரையோ குறிக்கும் பெயர் சொல் இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்படும் Noun அல்ல. அது வினைச்சொல். ஆங்கிலத்தில் சொல்லப்படும் Verb ஆகும். கடந்து உள்ளே செல்க என்ற வார்த்தையின் சுருக்கமே கடவுள். எங்கே கடந்து உள்ளே செல்வது? என்று கேள்வி எழுப்பினால், பதிலாக வருவது, உனக்குள்ளாக! எப்படி நாம் நமக்குள்ளாக செல்லமுடியும் என்றால்? மனதால் செல்லமுடியும். ஆகவே மனதைக்கொண்டு, நமக்குள் கடந்து உள்ளே சென்றால், உண்மை அறியலாம். ஆகவே உண்மையை அறிவதுதான் கடவுள் என்று சொல்லப்பட்டதே தவிர கடவுளை அறிய கடவுள் தேவையில்லை. சரிதானே?!

அந்த உண்மையை பல்வேறு வார்த்தைகளிலும் குறிப்பிடுவது உலகில் உண்மை அறிந்தோர்களின் வழக்கம். சித்தர்கள் சுத்தவெளி என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் இறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் The God, Supreme Power, Divine, Almighty என்று சொல்லுகிறார்கள். இப்படி உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொடு சமூகமும் தங்களுக்குரிய உண்மையை, ஓவ்வொரு பெயரில் அழைத்து வணங்குகிறார்கள். இதில் இப்படியான கேள்வியை கேட்பவர்கள் எதை விளக்க முயற்சிக்கிறார்கள்? உலக மக்கள் வணங்குவதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் புரியவில்லை. அது குறித்து அவர்களிடம்தான் உண்மையை கேட்க வேண்டும். ஆனாலும் எப்படியாவது விளக்கம் கொடுப்பார்கள்தானே?! 

சரி, கடந்து உள்ளே இருக்கிற உண்மையை ஏன் அறியவேண்டும்? என்றும் ஒரு கேள்வி எழும் அல்லவா? உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டீர்கள் என்று உதாரணம் கொள்ளலாம். வீட்டுக்கு அருகே காடா? காட்டையே அழிச்சிட்டாங்க, எப்படிங்க இருக்கும்? என்று கேட்கக்கூடாது. அது அடர்ந்தகாடு, உள்ளே சென்றால் நிச்சயமாக பாதை மறந்துவிடக்கூடிய அபாயம் கொண்டது. அப்படியான காட்டுக்குள் உங்களை அறியாமல் சென்று மாட்டிக்கொண்டீர்கள். இப்போது நீங்கள் உங்கள் வீடு எங்கே, எப்படி போகவேண்டும் என்று சிந்திப்பீர்கள் தானே? அல்லது இந்தக்காடே எனக்கு போதுமானது, இங்கே நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன் என்று முடிவு செய்து அங்கேயே தங்கிவிடுவீர்களா?

உங்கள் வீடு எது என்று தேடுவதுதானே உண்மை?! அதைத்தான் நாம் கடந்து உள்ளே சென்று தேடுகிறோம். அவர்களுக்கு அந்த அடர்ந்தகாட்டை விட்டு வர விருப்பமில்லை, ஆர்வமில்லை, முயற்சியும் இல்லை. நம்மையும் தடுக்க முயற்சிக்கிறார்களே?! சரி, அவர்களை அப்படியே விட்டுவிட்டு நாம் மட்டுமாவது ‘வீடுபேறு’ என்ற சித்தர்கள் சொன்ன வீட்டை அடைவோமே!

வாழ்க வளமுடன்.

How do we live with those who do not believe in God?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களோடு நாம் வாழ்வது எப்படி? உதாரணமாக என் வாழ்க்கைத் துணைக்கு ‘கடவுள் இல்லை’தான்.


பதில்: 

உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய நிலைதான் இது. உண்மையிலேயே, தெய்வம் உண்டா? இல்லையா? என்ற கேள்வியின் மூலமாக நிரூபணம் கேட்பவர்களுக்கு எந்த பதிலும் நாம் தந்து நிரூபித்துவிட முடியாது. அது நமக்கு தேவையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அந்த ‘தெய்வீகத்திற்கே’ தேவையில்லாதது.

தெய்வீகத்தை விளக்க வந்த பக்தி, உண்மை இழந்து, வேறுபாதை நோக்கி நகர்ந்து விட்டதால், பெரும்பாலான மக்கள் அதில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உண்மையே. நம்பிக்கை இழப்பு என்பதால் இருந்த, இருக்கிற உண்மை மறைந்துவிடுமா என்ன?!

எல்லாமே அறிவியல் / விஞ்ஞானம் என்ற கருத்துக்களில் மூழ்கிப் போனவர்களின் கருத்து, தெய்வம் என்பது பொய், கடவுள் என்பது இல்லை என்பதுதான். இருக்கட்டும். அது அவர்களின் கருத்துரிமை. அதை நாம் தடுக்கவோ, மாற்றி அமைக்கவோ முடியாதுதான். இவர்களுக்கு குருமகான் வேதாத்திரி மகரிஷி கொடுத்த பதிலையே நாமும் தரலாம். 

‘நாம் சாப்பிடுகிறோம். பலவித உணவுப் பொருட்களை சமைத்தோ, அப்படியேவோ உண்கிறோம். உணவு வயிற்றில் என்ன ஆகிறது? செரிமானம் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழு தாதுக்களாகவும் மாறுகிறது. இதை யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? உங்களுக்கு யாரேனும் செய்கிறார்களா? இந்த சமூகமோ, அரசாங்கமோ செய்கிறதா?’

‘இல்லை, இது இயற்கை என்று பதில் சொல்வீர்கள். அந்த இயற்கையை, அந்த ஆற்றலை நாம் தெய்வீகம், தெய்வம் என்று சொல்லுகிறோம். அந்த தெய்வீகத்தை வணங்குகிறோம். அதை அறிவதற்கு கடந்து உள்ளே போகவேண்டும் என்பதால் கடவுள் என்று வினைக்குறிப்பாக சொன்னது, கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது.'

‘எல்லாம் விஞ்ஞானம் என்று சொல்லும் நீங்கள், உலகில் தேர்ந்த பல அனுபவம் வாய்ந்த, விஞ்ஞானிகளிடம், இரண்டு இட்லியை கொடுத்து, இதை ரசம், ரத்தமாக்கித் தாருங்கள் என்று சொல்லுங்களேன்’ என்று கேட்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

தன்னை விட பெரிய, மகத்தான, உண்மையான, முழுமையான பேராற்றலையும், பேரறறிவையும், தெய்வம் என்று சொல்லுவதும், மதிப்பதும், வணங்குவதும், நம்பிக்கையோடும் இருப்பதில் என்ன தவறு?! ஆனால் பக்தி வழியில் ஏற்பட்ட குழப்பங்களுக்காக முழுமையாக கைவிட்டு விடுவது, நம்மைக்குறித்து அறியும் ‘நான் யார்?’ என்ற பயணத்தை தடுக்கும். நம் பிறவிக்கடனான கர்ம வினை தீர்த்தலை மட்டுப்படுத்தும்.

எனினும், அவர்வர்கள், அவர்களின் பாதையில் செல்ல விட்டுவிடுங்கள். என்றாவது ஒருநாள், உண்மை உணர்ந்தால் ‘தெய்வீகத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். காலம் அவர்களுக்கு பதில் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.