CJ for You: unbeliever

unbeliever

Showing posts with label unbeliever. Show all posts
Showing posts with label unbeliever. Show all posts

Why is it exalted as divine power? How does it relate to us? What is the need to respect it?


இறையாற்றல் என்று உயர்வாக சொல்லப்படுவது ஏன்? நம்மோடு எப்படி தொடர்புகொண்டதாகிறது? அதற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?


பொதுவாகவே, நாம் வாழும் காலத்தில், இறை என்பது குறித்த சந்தேகங்கள் நிறைய உண்டு. காரணம் பன்னெடுங்காலமாக, அதை நாம் ஆராயாமல், உண்மை அறியாமல், பக்தியில் மட்டுமே திளைத்து இருந்ததுதான். பக்தி என்பது, மெய்ப்பொருளை விளக்கும் சிறு முயற்சி, அடிப்படை தத்துவம் மட்டுமே. அந்த பக்தியின் வழியாக, இறை என்று சொல்லப்படுவது எது? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யோகத்தின் வழியாக உணர்வேண்டியது அவசியம்.

ஆனால், உண்மை அறிகிறேன், அறிந்துவிட்டேன் என்று, தான் சொல்லும் விளக்கங்களிலேயே, நிலைத்து நிற்கமுடியாது தடுமாறும் விஞ்ஞான அறிவின் துணை கொண்டு, இறை என்பதே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடும் நிலைதான் நம்மோடு இருக்கிறது. ஆனால் உண்மை நிலைத்து இருக்கிறது. உங்களுடைய  இந்த மூன்று கேள்விக்கும், பதிலாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி விளக்கம் தருகிறார் என்று பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களான பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது. 

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. 

  வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

மகரிஷியின் இத்தகைய விளக்கம், உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒன்றையும் நுணுகி, ஆராய்ந்து பார்க்கவே, மனிதனுக்கான, மனிதனுக்கு மட்டுமான ஆறாம் அறிவு அவனுக்கு கிடைத்திருக்கிறது. எந்த உண்மையையும், இயற்கையையும் அவன் ஒதுக்கித் தள்ளுகிறானோ, அந்த இயற்கையே அந்த ஆறாம் அறிவையும் அவனுக்கு வழங்கி இருக்கிறது. உண்மை விளக்கம் பெறவும், அறிவின் முழுமையை பெறவும், யோகமே துணையாகிறது.

வாழ்க வளமுடன்.

-

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

How do we live with those who do not believe in God?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களோடு நாம் வாழ்வது எப்படி? உதாரணமாக என் வாழ்க்கைத் துணைக்கு ‘கடவுள் இல்லை’தான்.


பதில்: 

உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய நிலைதான் இது. உண்மையிலேயே, தெய்வம் உண்டா? இல்லையா? என்ற கேள்வியின் மூலமாக நிரூபணம் கேட்பவர்களுக்கு எந்த பதிலும் நாம் தந்து நிரூபித்துவிட முடியாது. அது நமக்கு தேவையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அந்த ‘தெய்வீகத்திற்கே’ தேவையில்லாதது.

தெய்வீகத்தை விளக்க வந்த பக்தி, உண்மை இழந்து, வேறுபாதை நோக்கி நகர்ந்து விட்டதால், பெரும்பாலான மக்கள் அதில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உண்மையே. நம்பிக்கை இழப்பு என்பதால் இருந்த, இருக்கிற உண்மை மறைந்துவிடுமா என்ன?!

எல்லாமே அறிவியல் / விஞ்ஞானம் என்ற கருத்துக்களில் மூழ்கிப் போனவர்களின் கருத்து, தெய்வம் என்பது பொய், கடவுள் என்பது இல்லை என்பதுதான். இருக்கட்டும். அது அவர்களின் கருத்துரிமை. அதை நாம் தடுக்கவோ, மாற்றி அமைக்கவோ முடியாதுதான். இவர்களுக்கு குருமகான் வேதாத்திரி மகரிஷி கொடுத்த பதிலையே நாமும் தரலாம். 

‘நாம் சாப்பிடுகிறோம். பலவித உணவுப் பொருட்களை சமைத்தோ, அப்படியேவோ உண்கிறோம். உணவு வயிற்றில் என்ன ஆகிறது? செரிமானம் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழு தாதுக்களாகவும் மாறுகிறது. இதை யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? உங்களுக்கு யாரேனும் செய்கிறார்களா? இந்த சமூகமோ, அரசாங்கமோ செய்கிறதா?’

‘இல்லை, இது இயற்கை என்று பதில் சொல்வீர்கள். அந்த இயற்கையை, அந்த ஆற்றலை நாம் தெய்வீகம், தெய்வம் என்று சொல்லுகிறோம். அந்த தெய்வீகத்தை வணங்குகிறோம். அதை அறிவதற்கு கடந்து உள்ளே போகவேண்டும் என்பதால் கடவுள் என்று வினைக்குறிப்பாக சொன்னது, கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது.'

‘எல்லாம் விஞ்ஞானம் என்று சொல்லும் நீங்கள், உலகில் தேர்ந்த பல அனுபவம் வாய்ந்த, விஞ்ஞானிகளிடம், இரண்டு இட்லியை கொடுத்து, இதை ரசம், ரத்தமாக்கித் தாருங்கள் என்று சொல்லுங்களேன்’ என்று கேட்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

தன்னை விட பெரிய, மகத்தான, உண்மையான, முழுமையான பேராற்றலையும், பேரறறிவையும், தெய்வம் என்று சொல்லுவதும், மதிப்பதும், வணங்குவதும், நம்பிக்கையோடும் இருப்பதில் என்ன தவறு?! ஆனால் பக்தி வழியில் ஏற்பட்ட குழப்பங்களுக்காக முழுமையாக கைவிட்டு விடுவது, நம்மைக்குறித்து அறியும் ‘நான் யார்?’ என்ற பயணத்தை தடுக்கும். நம் பிறவிக்கடனான கர்ம வினை தீர்த்தலை மட்டுப்படுத்தும்.

எனினும், அவர்வர்கள், அவர்களின் பாதையில் செல்ல விட்டுவிடுங்கள். என்றாவது ஒருநாள், உண்மை உணர்ந்தால் ‘தெய்வீகத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். காலம் அவர்களுக்கு பதில் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.