CJ for You: escape

escape

Showing posts with label escape. Show all posts
Showing posts with label escape. Show all posts

How can altered my interests in fun and entertainment to the yoga?


பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வம் இல்லை. ஆர்வமின்றி இருப்பது ஏன்? மேலும், பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வமின்றி இருப்பது ஏன்? பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?

பதில்:

உங்களைப் போலவே எல்லோருமே அதை கடந்துவந்தவர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்க. இதில் உங்களுக்கு வருத்தம் தேவையில்லை. ஆனால், பொழுதுபோக்கிலே மட்டுமே நின்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இதற்கு காரணம் நம்முடைய பெற்றோர், வீடு, உறவினர், நண்பர்கள், சமூகம், உலகம் இப்படி எல்லாமுமே காரணமாக இருக்கலாம். பிறப்பின் உண்மையும், வாழ்வின் நோக்கமும் அறியாத எல்லா மனிதர்களுமே காரணம். அவர்களுக்கு தெரியாது என்பதல்ல, தெரிந்தாலும் அதில் ஆரவமற்று விலகி, வழக்கமான உலக நடப்புக்களில் இயங்குவதுதான். அதைப்பார்க்கும் நமக்கும்கூட அதேபோலான நடவடிக்கையும் ஆர்வமும் தானே வரும்? சரிதானே?!

ஒரு பொழுதுபோக்கு என்றால், நமக்கு ஆர்வம் எழுகிறது. நம் வேலைகள் எது இருந்தாலும் தள்ளிவைத்துவிடுகிறோம் அல்லவா? பசி இருந்தால் கூட பரவாயில்லை என்று பொழுதுபோக்கை கவனிப்போம். இதற்கு அடிப்படை காரணம், நமக்குள் இருக்கும் நிகழ்காலத்தின் மேல் இருக்கும் பயம், அதனோடு வருங்காலத்தை நினைத்தும் பயம் என்பதுதான். ஆனால், யாராவது இதை ஏற்றுக்கொண்டும் ஆமாம் என்று சொல்லிவிடுவார்களா? இல்லவே இல்லை. இப்படி ஒரு கண்ணோட்டமே இருக்காது.

பொழுதுபோக்கில் என்ன இருக்கிறது? அதில் எதேனும் அறிவு வளர்ச்சிக்கு இடமிருக்கிறதா? வாழ்க்கைக்கும், வாழ்வைக்கடந்த உண்மைக்கும் வழி இருக்கிறதா? அதுவும் இல்லவே இல்லை. உங்களுக்கு தெரிந்ததை, உங்கள் மனதில் படிந்ததை, உங்களுக்கு விருப்பமானதை, யாரோ ஒருவர், சில குழுவினர்கள், உங்களுடைய மனதிலிருந்து அதை தோண்டி எடுக்கிறார்கள். உங்கள் உணர்வோடு தொடர்புடையதால் உங்களுக்கும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று இருக்கும் இந்த பிரச்சனை, தொந்தரவு, சிக்கல் இப்படி எல்லாவற்றிலிருந்தும் ‘விடுதலை’ கிடைத்துவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே உங்களை அப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள். பொழுதுபோக்கினால், இருக்கின்ற உங்கள் பிரச்சனை துளியும் மாறிவிடுவதில்லை, அகன்று விடுவதில்லை, குறைந்தும் விடுவதில்லை. உண்மையாக சொல்லப்போனால், முன்பைவிட அது ஓர் நாளில் அதிகமாகிறது.

உண்மையிலேயே யோகத்திற்கு வர, பொழுதுபோக்கிற்கு எதிரான மனநிலை தேவை. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்று கேள்வி கேட்டு அதில் பயணிப்பதின் முடிவாக யோகத்திற்குள் நுழையலாம். ஆனால் நாம் அதற்கு எதிர் திசையில் அல்லவா போய்க்கொண்டு இருக்கிறோம்?! யோகத்தில் எப்படி ஆர்வம் வரும்? யோகமே தேவையில்லை என்றுதானே போய்க்கொண்டு இருக்கிறார்கள்?! யோகத்தில் நுழைவதற்கும், வருவதற்கும் ஆர்வம் தேவையில்லை. இருக்கும் சூழ்நிலைகளில் மட்டுமல்ல, இனி வரக்கூடிய எந்த விதமான சூழ்நிலைகளிலும் நீங்கள் பாதிக்கப்படாமல், உயர்ந்த நோக்கம் கண்டு முன்னேறி, வாழ்வின் உண்மையும், பிறப்பின் நோக்கமும், மனிதனாக பிறந்ததின் உன்னதமும் அறியலாம்.

இப்போது இருக்கும் இந்த பொழுதுபோக்கான நிலையில் இருந்து விட்டுவிட விருப்பமில்லை என்றாலும், விலகிட முடியவில்லை என்றாலும் கவலையில்லை. நீங்களே ஒர்நாளில், அடுத்து என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு, காலம் உங்களை நகர்த்தி வைக்கும். அதுவரை காத்திருக்கலாம், பொழுதுபோக்கில் மூழ்கி இருக்கலாம். தவறில்லை. ஓடும் குதிரைக்கு சாட்டையடி தேவையில்லை. ஓடாத குதிரைக்கு தேவை என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதன் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படலாம். 

வாழ்க வளமுடன்
-

Why I have some of depression on my life, guide me?


மனதில்  விரக்தி , வேதனை , எதிலும் பற்றற்ற தன்மை, உண்பதில் ஆர்வமின்மை, நல்ல ஆடைகள் அணிவதில் விருப்பமின்மை , எந்த உறவினரிடமும் நடிப்புக்காக கூட பேச பிடிக்கவில்லை.. இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது ஐயா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனதில்  விரக்தி , வேதனை , எதிலும் பற்றற்ற தன்மை, உண்பதில் ஆர்வமின்மை, நல்ல ஆடைகள் அணிவதில் விருப்பமின்மை , எந்த உறவினரிடமும் நடிப்புக்காக கூட பேச பிடிக்கவில்லை.. இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது ஐயா?


பதில்:

வேதாத்திரிய யோகத்தில் பயணிக்கும் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லலாமா? ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் பழமையான யோகமுறையில் பயணிப்பதாக உங்களை நினைத்துக் கொண்டு வருகிறீர்களா? என்றும் தெரியவில்லையே?! எனினும் இதற்கான காரணங்களை விளக்கமாக பார்க்கலாம்.

யோகம் என்பது நல்வாழ்க்கைக்கான வழியாகும். அதை அறநெறி என்று சொல்லி வைத்தார்கள். யோகம் எல்லோராலும் கற்று தெளிவு பெறுவது கடினம் என்ற அக்கால சூழலில் அதை, நல் வாழ்க்கை விளக்கமாகச் சொல்லி, வழக்கப்படுத்தினார்கள். அதை நம் குடும்பத்திலே கூட பழக்கமாகி இருப்பதை காணமுடியும். வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பது முதல், வயதான ஒருவரை, நட்போடு வருபவரை நோக்கி கைகூப்பி வணங்குதல் வரை, அதிலிருக்கிற பொதுவான தன்மை ‘பிறரை மதித்தல் ஆகும்’. எல்லாமே இறையின் அங்கம் என்ற உண்மைப்பொருளின் விளக்கத்தில் ஒருவருக்கு உதவுவதும், வணங்குவதும்கூட இறைக்கே என்பதான நிலை, ஞானிகளால், மகான்களால், யோகிகளால், சித்தர்களால் வழங்கப்பட்டது.

முக்கியமாக, உலகில் வாழ்கின்ற நாம் எந்த வகையிலும், வாழும் உலகையும், நம்மோடு வாழும் குடும்பத்தாரையும், சக மனிதர்களையும், உலகத்தாரையும் விலக்கிவிட்டு வாழ முடியாது. அவர்களோடு விரோதம் கொள்ளவும் வழியில்லை. எப்படியாயினும் ஏதேனும் வழியில், யாரோ ஒருவரின் அன்பும், கருணையும், உதவியும், பகிர்வும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவரின் முகம்கூட அறியாத நிலையிலும் நமக்கு கிடைக்கிறது. உங்களையும், உங்களுக்கான பொருட்கள் ஆகியனவற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கிவிடும். 

முக்கியமாக மனதில் விரக்தி, வேதனை, குழப்பம், எதிலும் பற்றதன்மை என்றால் மனம் அந்த அளவிற்கு பாதிப்பாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இது கர்ம வினைப்பதிவுகளின் தாக்கமாக இருக்கலாம். இந்த வாழ்க்கைச் சூழலும், அதில் நமக்கு கிடைத்த விளைவுகளும் காரணமாகலாம். நீங்கள் செய்ததின் வழியாக கிடைத்திருக்கலாம், உங்களுக்கான வாழ்க்கை அமைப்பும் அப்படியாக இருக்கலாம். அதில் நீங்கள் தவத்தால், தியானத்தால் தெளிவு பெறவேண்டியது அவசியம்.

உண்பதில் ஆர்வமின்மை என்பது, உடலுக்கான பிரச்சனையை காட்டுகிறது. உணவின்றி உடலுக்கு ஆற்றல் ஏது? ஒருநாளைக்கு நிச்சயமாக இருவேளை உணவு தேவை. அதில் நீங்கள் கவனமின்றி இருந்தால் உடல், மனம், உயிர் மூன்றுமே பாதிக்கப்படும். நல்ல ஆடைகள் என்ற நிலை தேவையின்றி எளிமை போதுமானது. நமக்காகத்தான் உடையே தவிர மற்றவர்களின் கவனத்தை கவர்வதற்காக இல்லையே?! மனதிற்கு பிடிக்காத, விருப்பமில்லாத, உறவினர்களை தாராளமாக தவிர்க்கலாம். அது உங்கள் உயர்வுக்கு நல்லதும் கூட. ஆனால் யாருமே எனக்கு தேவையில்லை என்ற நிலை, உங்கள் வாழ்க்கையை கெடுத்துவிடும். எனவே சொந்தம், நட்பு இவைகளில் கவனம் அவசியம்.

முடிவாக. நீங்கள் வேதாத்திரியத்தின் வழியில், துரியதவம் இயற்றி, அகத்தாய்வு எனும் தற்சோதனையை ஒருவாரம் தொடருங்கள். ஒவ்வொரு விளக்கத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி பதிவு செய்து, மறுவாரம் ஆராய்ச்சி செய்து, களையவேண்டியவற்றை அப்பொழுதே அகற்றுங்கள். மனம் தெளிவு பெறும். வாழ்க்கை நிறைவாகும்.

வாழ்க வளமுடன்

-

How we can avoid and escape the fake Godman in this modern world?


இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?

பதில்:
நல்லதாக, எல்லோருக்கும் பயன்படும் ஒரு பதிலுக்கான கேள்விதான். இந்த கேள்வியில் நீங்கள் அறியாமலேயே, இத்தகைய நபர்களின் நோக்கத்தையும் சொல்லிவிட்டீர்கள். போலியான இறைத் தத்துவ விற்பனர்கள் என்று. இந்த விற்பனர்களின் நோக்கம் உங்களிடமிருந்து எதைதோ, அவர்களுக்கு சாதகாமான ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இது இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல, ஞானியர்களுக்கும், யோகியர்களும், மகான்களுக்கும் கிடைத்த மரியாதையை பெறுவதற்கு தாங்களும் முயற்சிசெய்தும் மக்களை ஏமாற்றியவர்கள் அந்தக்காலத்திலும் உண்டுதான். இப்படியான போலிகளிடம் ஏமாற்றம் அடைந்து உங்களிடமிருந்தோ, மற்ற மனிதர்களிடமிருந்தோ பணம் போனால் கூட பரவாயில்லை, மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மனம் போனால்? அது சிதைந்து விடுமே?!

இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது, உண்மையான இறைத்தத்துவம் வழங்கும் இறையுணர்ந்தவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் உண்டு. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். இந்த இறைத் தத்துவத்தை, மற்றவர்களுக்கு வார்த்தைகளால் செயல்படுத்த, விளக்கிச் சொல்ல முடியாதவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மற்றும் இன்னும் பலர், இதை மக்களிடம் எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் ஆர்வம் கொண்டு பயிற்சி திட்டமாகவும் வழங்குகிறார்கள், வேதாத்திரியம் அப்படியான பயிற்சி முறைதானே!

அப்படியான பயிற்சிக்கும், கற்றுக்கொள்ளலுக்கும் ஒரு இணைப்பு பாலமாக, பொறுப்புணர்ந்து செயல்படவும், கைவிடாது தொடரவும், உறுதி கொள்ளவும், கட்டணம் செலுத்தும்படியான நிலை இருக்கிறது.

இலவசம், கட்டமில்லா நிலை, சேவை என்றால் உங்கள் மனமே அந்த, தத்துவத்தை, இறையுண்மையை, விளக்கத்தை, ஒழுங்கமைப்பை, உறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் செய்துவிடும்.

சும்மா கொடுத்த மருந்து வேலை செய்யுமா? என்று ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இந்தவித, தற்போதைய உலக இயல்பை, அந்த போலியான விற்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அப்படி போலியானவர்களாக காண்பது ஒரு நோய். அப்படி இருக்கக்கூடாது. அந்த நபர், விற்பனர் என்ன சொல்லுகிறார்? அனுபவம் பெற்றவரா? இதுவரை அவரின் பதிவுகள் எப்படி இருக்கின்றன? அவரின் வாழ்க்கைமுறை என்ன? எப்படி நேரில் பழகிக் கொள்கிறார்? ஒரு உண்மையை விளக்கத்தை எப்படி புரியவைக்கிறார்? கதையளக்கிறாரா? எளிமையாக சொல்லுகிறாரா? நேரத்தை கடத்துகிறாரா? குழப்புகிறாரா? இதையும் செய், அதையும் செய் என்று ஓட்டுகிறாரா? எல்லாவற்றை விட்டுவிடு என்கிறாரா? சொந்த அனுபவத்தை சொல்லுகிறாரா? யாரோ சொன்னதை சொல்லுகிறாரா? கதையாக கலவையாக கலந்தடிக்கிறாரா? தீர்மானமாக இதுதான் என்று உறுதியாக சொல்லுகிறாரா? என்று பலவாறாக கேள்விகள் கேட்டு அதற்கு பதிலை பெற்றபிறகுதான், அவரின் தன்மை தெரியவரும். அதுவரையிலும் அவரை போலி என்றுகூட சொல்லாதிருங்கள்!

ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த விற்பனரை புரிந்து கொள்வதற்காகவே, உங்களுடைய காலம் கொஞ்சம் வீணாகும் என்பதுதான். ஆனால் வேறுவழியில்லை. ஒருவேளை அவர் சிறப்பானவராக இருந்தால் அது உங்களுக்கு உதவும் கூடுமே?! இனி உங்கள் முடிவுதான்!
வாழ்க வளமுடன்.
-

Are you missing yourself into the forest?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகையே மாற்றி அமைக்கும் அறிவியல் உச்சமான காலத்தில் கூட கடவுளை அறிதல் என்பது வேடிக்கை என்கிறார்களே?!


பதில்:

அப்படி சொல்லுபவர்கள் இப்போது மட்டுமா சொல்லுகிறார்கள்? அந்தக்காலம் முதலாகவே அப்படியான வார்த்தைகள் நிலையாக இருக்கின்றன. என்ன ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கட உள் என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் மட்டும் அவர்களுக்கு புரிந்தபாடில்லை. அதுகுறித்த சிந்தனைக்கும் அவர்கள் வருவதே இல்லை.

கடவுள் என்பது, எதையோ யாரையோ குறிக்கும் பெயர் சொல் இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்படும் Noun அல்ல. அது வினைச்சொல். ஆங்கிலத்தில் சொல்லப்படும் Verb ஆகும். கடந்து உள்ளே செல்க என்ற வார்த்தையின் சுருக்கமே கடவுள். எங்கே கடந்து உள்ளே செல்வது? என்று கேள்வி எழுப்பினால், பதிலாக வருவது, உனக்குள்ளாக! எப்படி நாம் நமக்குள்ளாக செல்லமுடியும் என்றால்? மனதால் செல்லமுடியும். ஆகவே மனதைக்கொண்டு, நமக்குள் கடந்து உள்ளே சென்றால், உண்மை அறியலாம். ஆகவே உண்மையை அறிவதுதான் கடவுள் என்று சொல்லப்பட்டதே தவிர கடவுளை அறிய கடவுள் தேவையில்லை. சரிதானே?!

அந்த உண்மையை பல்வேறு வார்த்தைகளிலும் குறிப்பிடுவது உலகில் உண்மை அறிந்தோர்களின் வழக்கம். சித்தர்கள் சுத்தவெளி என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் இறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் The God, Supreme Power, Divine, Almighty என்று சொல்லுகிறார்கள். இப்படி உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொடு சமூகமும் தங்களுக்குரிய உண்மையை, ஓவ்வொரு பெயரில் அழைத்து வணங்குகிறார்கள். இதில் இப்படியான கேள்வியை கேட்பவர்கள் எதை விளக்க முயற்சிக்கிறார்கள்? உலக மக்கள் வணங்குவதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் புரியவில்லை. அது குறித்து அவர்களிடம்தான் உண்மையை கேட்க வேண்டும். ஆனாலும் எப்படியாவது விளக்கம் கொடுப்பார்கள்தானே?! 

சரி, கடந்து உள்ளே இருக்கிற உண்மையை ஏன் அறியவேண்டும்? என்றும் ஒரு கேள்வி எழும் அல்லவா? உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டீர்கள் என்று உதாரணம் கொள்ளலாம். வீட்டுக்கு அருகே காடா? காட்டையே அழிச்சிட்டாங்க, எப்படிங்க இருக்கும்? என்று கேட்கக்கூடாது. அது அடர்ந்தகாடு, உள்ளே சென்றால் நிச்சயமாக பாதை மறந்துவிடக்கூடிய அபாயம் கொண்டது. அப்படியான காட்டுக்குள் உங்களை அறியாமல் சென்று மாட்டிக்கொண்டீர்கள். இப்போது நீங்கள் உங்கள் வீடு எங்கே, எப்படி போகவேண்டும் என்று சிந்திப்பீர்கள் தானே? அல்லது இந்தக்காடே எனக்கு போதுமானது, இங்கே நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன் என்று முடிவு செய்து அங்கேயே தங்கிவிடுவீர்களா?

உங்கள் வீடு எது என்று தேடுவதுதானே உண்மை?! அதைத்தான் நாம் கடந்து உள்ளே சென்று தேடுகிறோம். அவர்களுக்கு அந்த அடர்ந்தகாட்டை விட்டு வர விருப்பமில்லை, ஆர்வமில்லை, முயற்சியும் இல்லை. நம்மையும் தடுக்க முயற்சிக்கிறார்களே?! சரி, அவர்களை அப்படியே விட்டுவிட்டு நாம் மட்டுமாவது ‘வீடுபேறு’ என்ற சித்தர்கள் சொன்ன வீட்டை அடைவோமே!

வாழ்க வளமுடன்.