Home » Posts filed under the God
Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct?
February 05, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா, இன்றைய காலத்தில், பக்தி என்பது காலாவதி ஆகிவிட்டதே? இது எங்கே போய் முடியுமோ? என்று கவலையாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பக்தி இல்லாமலேயே வளர்கிறார்களே? இது சரிதானா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது? விளக்கம் தருக.
இந்த கேள்வி, எந்த காலகட்டத்திலும் உருவாக் கூடிய கேள்விதான். பொதுவாக மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதுபோல, இவ்வுலகில் மக்களின் வாழும் முறை, அனுபோகம், அனுபவம் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும். நேற்றையபோல இன்று இருப்பதும் இல்லயே! அப்டேட் என்று சொல்லக்கூடிய, இருக்கும் நிலைக்கு தகுதி உயர்த்திக் கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை. நாமும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமே என்றாலும் கூட, தனியாக சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதற்குப் பதிலாக, நாம், நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை செயல்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆம், நம்மை எப்படி, நம்முடைய பெற்றோர்கள், வழிப்படுத்தினார்களோ, அதுபோல நாம், நம்முடைய வாரீசுகளை, வழிப்படுத்திட வேண்டும்.
இந்த உலகில் பெரும்பான்யோரும், பெரியோர்களும், பெற்றோர்களும். குழந்தைகளை வழிப்படுத்திட தவறுகின்றனர். தனக்குத் தெரிந்ததை, குழந்தைகளும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றனர். இப்படியான நிலை கூடாது. எந்தெந்த வயதில் எதை அறிந்துகொள்ள வேண்டுமோ. அவ்வப்பொழுது அறிந்துகொண்டால் போதாதா?
பக்தி என்பது உண்மையாகவே காலாவதி ஆகிவிட்டது என்று தோற்றமளிக்கிறது. ஆனால், தன்னாலும், மற்றவர்களாலும் எதுவுமே முடியாது என்ற நிலை வரும்பொழுது, கைகள் தானாக குவிந்து, ‘கடவுளே’ ‘இறைவா’ என்று வணங்குவதை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் கூட அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆனால், நமக்கு உண்மைகளை உதாசீனம் செய்துதானே பழக்கம்?
நாம் ஏதேனும் விளக்கம் சொன்னால், ‘அப்படியானால், கடவுளை, இறைவனை காட்டு’ என்று நம்மிடம் வம்புக்கு வருவார்கள். விஞ்ஞானம் சொல்லுகிற, ஒரு அணுவைக்கூட உன் கண்ணால், பார்க்கமுடியாதே? விஞ்ஞானிகளும், இன்னமும் அணுவை முழுமையாக பிரித்து பார்த்திடவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? அணுவிலும் அணுவாய், வெட்டவெளியாக இருப்பதை எப்படி காண்பாய்? உண்மையாகவே, அதை நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்! ஆனால், அதை நம்பவும் மறுக்கிறாய்! சரிதானே?
இந்த நிலையில்தான், நாம், நம்மளவில், திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு. இதை வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய கவிதையிலும் சொல்லுகிறார்.
உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும்
உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக
பருவமடைந்தோர்கட்கு பதினெட்டாண்டின் மேல்
பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும்
அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார்
அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய
கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான
கறை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும்.
குழந்தைகளை நல்வழிபடுத்த, வருங்காலத்தில் சிறப்பாக வாழ, எது நல்லது தரும்? என்பதை புரிந்து கொண்டு சிறக்கவும், முன்னேறவும், பக்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். இங்கே உருவ வழிபாடு கொஞ்சகாலத்திற்கு அவசியம். தானாக சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத்தேடி பயணிக்கும் விருப்பமும் வந்துவிட்டால், குறைந்தபட்சமாக பதினெட்டு வயது எனலாம். இந்த வயதில் அவர்களை பக்தி கடந்த யோகத்தில், பயணிக்கச் சொல்லி வழிகாட்டலாம். எனவே, சமுகம் குறித்த அக்கறை இருந்தாலும்கூட, நாமும் அந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதால், நம்மளவில் மாற்றம் செயல்படுத்தினால் போதுமானது ஆகும். அதுவே மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
வாழ்க வளமுடன்.
-
What is God really? How to know or realize? Give an explanation.
January 14, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.
almighty / enlightenment / ever-increasing / everlasting / five elements / infinitesimal / living beings / Nature / objects / omnipotent / omnipresent / supreme power / the God / universe / worship
What is the meaning of அ and உ in the spiritual by Tamil? Truth Explanation
October 23, 2024 Sugumarje
அ நாவும் உ நாவும் சொல்லுவதென்ன? இதை எப்படி ஆன்மீகத்தில் நுழைந்தது? உண்மை விளக்கம்.
தமிழ் மொழிக்கென்று பலதரப்ப சிறப்பியல்புகள் அக்காலம் முதலாகவே உண்டு. தமிழில் இருந்து பிரிந்த மொழி பேசும், ஆய்வாளர்களும், தமிழை சிறப்பித்து போற்றுவதை நாம் காண்கிறோம். சங்க கால இலக்கியங்கள் தமிழிலே கிடைப்பதும், அதை இன்றும் கூட அந்த வடிவத்திலேயே படித்து, விளங்கிக் கொள்வதும் மிக சிறப்பானது ஆகும். தமிழ் மொழியின் காலம், அதன் எழுத்துக்களில் சொல்லப்படுவதுபோல, சந்திர சூரியர் இருக்கும் வரை, என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதியானது.
மனித வாழ்வியலுக்கு தமிழின் பங்கு அளப்பரியது. மெய்யியல் எனப்படும் இறையறிதலுக்கும், இயற்கை உணர்தலுக்கும், பக்தி வழியிலான வழிபாடுகளுக்கும் தமிழ் என்றும் உயர்வு என்பதில் ஐயமில்லை. தற்கான விஞ்ஞான உண்மைகளுக்கு, சமமான நிறைய உண்மைகள் இருந்தபொழுதும், அவை எல்லாம், பக்தி இலக்கியங்கள் என்று, நாம் தான் ஒதுக்கி வைத்திருக்கோம் என்று சிலர் சொல்லுவதையும் மறுப்பதற்கில்லை. சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் தமிழில் பெரும் பங்கை வழங்கினர். அதுபோலவே சைவ, வைணவ என்று பிரிந்திருந்தாலும், தமிழில் இறை உண்மையையும், விளக்கங்களையும் தருவதில் குறைஏதும் வைக்கவில்லை.
அப்படியாக, மெய்யியலில், மெய்ப்பொருள் இறை விளக்கத்தில் வந்து, கலந்து, சராசரி மக்களின் வாழ்வியலில் நின்றதுதான், இந்த அ நாவும் உ நாவும். அ என்பது அருவம் என்ற மாயமான ஒன்றை சொல்லும் குறிப்பாகும். உ என்பது உருவம் என்ற உணர்தல் வகையில் தரப்படும் குறிப்பாகும். அது ஏன் உணர்தலாக? என்றால், அதற்கு வடிவம் இல்லை என்பது விளக்கமாகிறது. இந்த அருவம், உருவம் என்பது எப்படி அர்த்தமாகிறது என்றால், ஒன்றுமில்லாதது, ஒன்றானது என்று சொல்லப்படுகிறது. அருவமே வெட்டவெளியாக, பாழ் ஆக குறிப்பிடப்படுகிறது. ஆதியாக இருந்தது பகவன் என்றாகி முதலாகவும் ஆனது என்ற திருவள்ளுவரை இங்கே நினைவு கூறலாம். விஞ்ஞானத்தில் மேட்டர் என்ற ஒன்றுமில்லாது, எனர்ஜி என்று ஆற்றலாக சொல்லப்படுவது போல. விஞ்ஞானத்திலும், இந்த மேட்டர், எனர்ஜி பிரிக்கமுடியாது என்கிறார்கள். அதுபோலவே அருவமும், உருவமும் பிரிக்கமுடியாது.
இந்த உண்மையை, மெய்ப்பொருள் உண்மையை, குறிப்பாக அறிந்துணரும்படி, அ, உ என்று சொன்னதுபோக, அதை மேலும் குறிப்பாக 8, 2 என்றும் குறிப்பிட்டனர். அதாவது தமிழ் எண்களாக. இப்போது அவை, தமிழ் எண்கள் வழக்கொழிந்து போய்விட்டது. உலகில் எல்லோரும் அரேபிய எண்களைத்தான், பயன்படுத்துகிறோம். எனினும் 0 என்பது இந்தியாவின் பங்கு என்று நிலைத்துவிட்டது.
அ என்பது தமிழ் எண்களில் 2 என்றும், உ என்பது தமிழ் எண்களில் 8 என்றும் எழுதப்படுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, குறிப்பிடும் பொழுது, ‘எட்டும் ரெண்டும் அறியா மூடருக்கு, எதைச் சொன்னாலும் விளங்கிவிடுவதில்லை’ என்ற சொல்வழக்கு இருந்தது என்கிறார். அந்த அளவிற்கு இது, சாராரி மக்களின் பேச்சு வழக்கிலும் கலந்துதான் இருந்திருக்கிறது. இன்றோ அப்படியில்லை.
இன்றும் கூட சில வயதான, அக்கால வாழ்வியலில் இருந்து மாறாத பெரியவர்கள். ஏதேனும் காகிதத்தில் எழுதும் பொழுது, உ என்று எழுதி தொடங்குவதை காணலாம். சிறுவயதில் நானும், இது என்ன உ? என்று கேட்டிருக்கிறேன். ‘இது பிள்ளையார் சுழி, இப்படி எழுதுவது, கடவுள் வணக்கம் போல’ என்று பதில் தருவார்கள். தமிழ் எழுத்தில் ஆரம்பம் என்றால், அ அல்லவா எழுதவேண்டும், இது என்ன உ? என்று அப்போதே குழம்பியதும் உண்டு. மனவளக்கலையில் இணைந்துகொண்ட பிறகுதான் உண்மை தெரியவந்தது. உ என்பது உருவம். இந்த உருவம், அருவத்தில் இருந்து ஆரம்பித்தது. ஐம்பூத தோற்றங்களால் மலர்ந்தது என்பதும் உண்மையாகிறது. இந்த ஐம்பூத தன்மையின் வெளிப்பாடாகவே, பிள்ளையார் (ஐந்து கரம்) என்றும் நின்றது உண்மைதானே? அருவம், உருவாமாகி, ஐம்பூதங்களாக மாறியது, பிரபஞ்சமாக, சூரியனாக, பூமியாக, சந்திரனாக, இயற்கையாக, தோற்றங்களாக, புல், செடி, மரமாக, ஜீவனாக, மனிதனாக எழுந்து நின்ற எழுச்சியும், பரிணாமமும் இங்கே காட்சியாக நிற்கிறது அல்லவா?
இதுதான் அந்த அ நாவும் உ நாவும் உணர்த்தும் உண்மைகளாகும். இவ்வளவு எளிமையாக, விளக்கமாக, அறிந்து, உணர்தலாக இருந்த வாழ்க்கை, திசை மாறி, எங்கெங்கோ சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறது எனினும், அவ்வப்பொழுது, இதுதான் உன்பாதை என்று இழுத்து வந்து நிறுத்தும் உண்மைகள்தான், நம்மை காக்கிறது.
வாழ்க வளமுடன்.
-
8 and 2 / almighty / consciousness / evolution / five elements / science and spiritual / static state / tamil / the God / transformation / vettaveli / அ / அருவம் / உ / உருவம்
Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi
October 18, 2024 Sugumarje
கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?
கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?
பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.
பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.
இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.
மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.
கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.
இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.
எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.
ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.
மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.
விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.
இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.
கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!
கட - உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக்
கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!
கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.
கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.
மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
வாழ்க வளமுடன்.
-
absolute space / almighty / believe / creation / divine / explanation / idol / kadavul / spiritual and bhakti / stories / the God / transformation / truth / vettaveli / worship
What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?
October 02, 2024 Sugumarje
கடவுள், அவதாரம், பக்தி, வழிபாடு, சடங்குகள், விழாக்கள் ஆகியன தற்கால மக்களிடம் எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவீர்களா?
இந்த கேள்விக்கான பதிலை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிகத்தெளிவான பதிலும் தந்து, அதற்கான தீர்வும் தந்திருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே படிப்போம். இதோ,
வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார், ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள், அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில், பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு, சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது, சிரமமாக இருக்கிறது.
அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும், இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும், ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும், அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.
கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது, குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும், ஒரு வடிவத்தையும் குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு, அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.
இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர், தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால், அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான், வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது, ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை, அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை வாழ்க்கை, எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?
வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.
மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன், ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது.
இந்த நிலைமை நீடிக்க விட்டால் தனி மனிதன், குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும்.
ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே, அறியாமையினால் போட்டுக் கொண்ட, இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’என்று விளக்கிச்சொல்லி, அறிவுறுத்துகிறார்.
இதை நீங்கள் மேலோட்டமாக படித்து நகராமல், மறுபடி மறுபடி படித்து, அதன் வழியாக சிந்தனையில் ஆழ்ந்து, யோசிக்கும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மை, உள்ளது உள்ளபடியே புரிந்திடும் என்பது உறுதி. இத்தகைய உண்மை விளக்கம், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று நம் குருவோடு இணைந்து, நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.
-
almighty / bhakti / divine / enlightenment / gnani / human / impact / kadavul / keep distance / level of knowledge / life / lifestyle / mind / misinformation / not clear / realization / siddhar / the God / understand / worship
Why is it important to give importance to exercise? Why point it out so often?
September 27, 2024 Sugumarje
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன? அடிக்கடி அதையே சுட்டிக்காட்டுதல் ஏன்?
உண்மையாகவே இரண்டுவிதமான காரணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டையுமே நீங்கள் அறிந்தீர்களா? என்பதும் இந்த கேள்வி வழியாக தெரியவும் இல்லை. அதனால்தான் அடிக்கடி, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், அதையே சுட்டிக்காட்டுதலும் நிகழ்கிறது. அப்படியாவது நீங்கள், இந்த உண்மையை புரிந்துகொள்ள மாட்டீர்களா? என்ற உள்நோக்கம் தான் காரணம்.
அக்கால கிராமங்களில், அதிகாலை ஏதேனும் சாப்பிடும் பொழுது, ஒருவர் கேட்பார், ‘என்னய்யா, பல்லை விளக்காம சாப்புடுறே?’ இந்த கேள்விக்கு மற்றொருவர், ‘அடப்போப்பா, ஆடு, மாடெல்லாம் பல்லா விளக்குது?’ என்று பதில் சொல்லுவார். இதை நீங்களும் கேட்டிருக்கலாம். ஆனால், ஆடு, மாடுகளின் பல்லுயிர் பெருக்கம் வேறு. மனிதனுடைய பல்லுயிர் பெருக்கம் வேறு. அதனால், மனிதன் தன்னைச்சார்ந்த சூழலில், தூய்மையாக இல்லாவிட்டால், பலவிதமான நோய் தாக்கங்களுக்கு ஆளாகிவிடுவான். இது இயல்பானதாகும்.
மேலும் மனிதபிறப்பில் ஓர் இயற்கை உன்னதமும், முழுமையும் இருக்கிறது. அது உள்ளடங்கி இருக்கிறது. சாதாரணமாக, அதை மனிதனே அறிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு யோகம் தேவைப்படுகிறது. குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு மனிதன் தானாக, இந்த உண்மையை நோக்கி நகர்வது, அவனுக்குள் நிகழ்வதில்லை. மாறாக ஏதோ ஒரு, பரம்பரை வழியான தாக்கத்தில், யாரோ ஒரு சிலருக்கு நிகழ்கிறது என்பதுதான் உண்மை.
இந்த நிலையில், நீங்கள் எப்படி வாழ்வது? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால், அதற்கு விடை, உங்கள் சூழலும், அதற்கேற்ப கிடைக்கும் வாய்ப்புக்களும், நீங்கள் தேர்ந்தெடுப்பதும்தான் மூலமாக அமைகிறது. மேலும், ஒரு நாட்டின் சட்ட திட்ட, ஒழுக்க, பழக்க முறைகளும் துணையாக அமைந்துவிடுகிறது. இதற்கு உட்பட்டு, நீங்கள் வாழ்க்கையை, எப்படி வேண்டுமானாலும் வாழமுடியும். அது உங்கள் உரிமையாகி விடுகிறது. அன்றாடம் உழைத்து, சலித்து, களைத்து, நன்றாக தூங்கி, எழுந்து வாழலாம். எதுவுமே செய்யாமல் சோம்பேறியாகவும் வாழலாம். இன்பங்களை மட்டுமே தேடி, திளைத்து, அனுபவித்து வாழலாம். இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றின் வரிசையில் வருவதுதான், எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் வாழ்வதும் ஆகும். தவறு செய்வதும், வருந்துவது, துணைக்கும், பாதுகாப்புக்கும் கடவுளை வேண்டுவதும், பரிகாரங்கள் செய்வதும், வழிபாடு செய்வதும் நிகழும்.இருப்பதை அனுபவித்து, இயற்கையோடு முட்டி மோதி, விளைவுகளை ஏற்று, எப்படியாவது வாழ்வது இந்த வகையாகும்.
இது இப்படி இருக்க, வழக்கமான கடமைகளை செய்துகொண்டே, இயற்கைக்கும், பிற மனிதர்களுக்கும் எந்த தீங்கும் நேராமல், முரண்படாமல், நிறைவான, மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், தனக்குள், மனிதனாக பிறந்திருக்கும் நான் யார்? ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? எனக்கு மூலமாக இருப்பது என்ன? நான் உடலா? மனமா? உயிரா? ஆத்மாவா? வேறொன்றா? என்ற சிந்தனை எழுந்தால், அது உண்மையை தேடும் வாழ்க்கை முறை ஆகும். கடவுள் என்பது என்ன? தெய்வீகம் என்பது என்ன? ஏன் வணங்குகிறோம்? என்ற கேள்வியும் அவனுக்குள் எழும். அதற்கு விடைகானவும் முயற்சிப்பான். உண்மையில், மனிதனுக்கு பிறப்பின் கடமையும், நோக்கமும் இருக்கிறது. ஆனால் அவன் அதை மறந்துதான் வாழ்கிறான். அந்த உண்மையை, குரு தான் தூண்டி விடுகிறார்.
இந்த இரண்டு வாழ்க்கை முறையில், எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். அது உங்கள் பரம்பரையாலும், குடும்பத்தாலும், சூழ்நிலையாலும், பிறராலும் நிகழும். முதல் நிலையில் உடற்பயிற்சி விருப்பமில்லை. அது அவசியமும் இல்லை. இரண்டாவது நிலையில், அது முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கு இந்த உடல் தேவைப்படுகிறது. ஆன்மா இயக்க ஆற்றலாகவும், உடல் ஆன்மாவுக்குக் கருவியாகவும் இருப்பது விழிப்பு நிலையில் தெளிவாகும். உண்மை உணர்வாகும்.’ என்று சொல்லுகிறார்.
வாழ்க வளமுடன்
-
Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?
June 19, 2024 Sugumarje
முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?
பதில்:
இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.
இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால், அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.
ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?
இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே, ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.
உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.
வாழ்க வளமுடன்.
-
Please explain the Realization of the Consciousness by all ways?
May 15, 2024 Sugumarje
இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.
almighty / awakening / consciousness / details / divine / enlightenment / explain / guide / kundalini / meditation / mind / notes / peace / realization / secret / the God / truth / yoga
The truth and answer, who raising the question 'where is the God?'
May 01, 2024 Sugumarje
கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
'கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான். ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வேறுவேறாக இல்லை, இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான்.'
'ஆனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக, இச்சையின் காரணமாக, பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது.'
'இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.'
'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா? எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.'
'பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ, அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும். ஆகவே, ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால், இறைவனைக் காணலாம்.'
'ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால், அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக் கொண்டு தான் இருப்போம். அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.'
'ஆனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால், ஒரு பளுவும் இல்லை. ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும். அங்கே இறைவன் இருப்பான்.'
'ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்படுத்தப்பட்டால் நிறைமனம்.'
'மனிதன் தன்முனைப்பு அறுத்தாலே போதும்; அவன்
இறைநிலை என்கின்ற பெரிய ஆற்றலோடு தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்.'
'தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று - இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது.'
-
இந்த கவிகள் கூடுதலாக விளக்கங்களை தரும்.
'ஓர்மை நிலைப்பயிற்சி'
நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள்
அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே,
ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது
நின்ற நிலையே அது. நீயறி., நினைவை நிறுத்தி.
(ஞானக்களஞ்சியம் கவி: 1486)
'நிறை நிலையில் அமைதி'
எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண்பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,
நட்டம்லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;
வல்லமையும் அதன்முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம்., அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும், விரிந்தும்,
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 661)
-
'வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!'
answer / clearance / desire / distance / ego / imprint / karma / kundalini / maharishi / mind / question / the God / thoughts / truth / vethathiri / where / yoga
Please explain Dvaita, Advaita, Vishishtadvaita philosophies?
April 23, 2024 Sugumarje
துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
சுவாமிஜி, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப் பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்து செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (Essence) தானே?
அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.
மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்தச் செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.
இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், “த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் “அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம், “ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று “மாறுபடுகிறது” என்பதை த்வைதம், “எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.
வாழ்க வளமுடன்.
advaita / almighty / divine / Dvaita / explain / inner search / marga / philosophy / prayer / process / surrender / the God / understand / vedanta / Vishishtadvaita / yoga
If we worship at home pooja, the grace will be same as like a temple level?
April 18, 2024 Sugumarje
வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?
பதில்:
பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?
வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.
கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும். வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.
இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.
வாழ்க வளமுடன்
-
Who offer the solution for our life sufferings? man, god or nature?
January 19, 2024 Sugumarje
வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
Method of realize the Divine by the words
October 27, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?
பதில்:
பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.
ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.
அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!
இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?
‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.
அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும்.
வாழ்க வளமுடன்.
When my turn come to me from the god, divine and supreme almighty?
October 18, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நான் வேண்டியது, வேண்டுவது எனக்கு தெய்வீகம், மெய்ப்பொருள், கடவுள், இறையாற்றல் எப்போது வழங்கும்?
பதில்:
குரு மகான் வேதாத்திரி மகரிஷி இதற்கு நல்ல பதில் தந்துவிட்டார் எனினும், அதை அன்பர்கள் புரிந்துகொள்வதில் தயக்கமும், ஏமாற்றமும் அடைகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். ‘இறையாற்றல் நமக்குத் தேவையான எல்லாம் தந்துவிட்டுத்தான் நம்மை பரிணாமத்தில் உச்சத்தில் அமைத்திருக்கிறது’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். மேலும் நாம் குழந்தையாக இருக்கும்பொழுது, நம் பசியாற்றிட தாய்ப்பாலையும், கவனமாக போற்றி பாதுகாப்பளிக்க தாயையும், அவருக்கு துணையாகவும், குழந்தைக்கு துணையாக தந்தையையும் தந்திருக்கிறது அல்லவா?! பெற்றோர்களாகிய அவர்களே நம்மை வளர்த்து ஆளாக்கிடவும், சமூகத்தில் ஒருவராக அமைக்கவும் உதவுகிறார்கள். மூன்று வயதிற்குப்பிறகுதானே நமக்கே நாம் யார் என்பதும் தெரிகிறது?! உண்மைதானே?
சரி, இப்போழுது உங்கள் கேள்விக்கு வருவோம். வேண்டியது, வேண்டுவது என்றால் என்னென்ன என்று ஒரு பட்டியல் இட்டால் அதில் என்னென்ன இருக்கும்? என்று எழுதிப்பாருங்கள். எல்லாமே இயற்கைக்கும், இறைக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
முதலில் வேண்டியது என்று எடுத்துக்கொண்டால், அது எப்போது வேண்டினீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வேண்டுதல் நிறைவேறிட, அதற்கென்று ஒரு காலம் வரவேண்டுமே?! சென்னையில் இருந்து டெல்லிக்குக்குப் போக பயண நேரம் (விமானத்தில்) மூன்று மணி நேரம் ஆகும். இல்லை நான் ஒருமணி நேரத்தில் அங்கே இருக்கவேண்டும், நினைத்த உடனே அங்கே இருக்கவேண்டும் என்று நாம் சொல்லிவிட முடியுமா? அது சாத்தியமா? இங்கே விமானம், அதன் செயல்பாடு, விமானி, அவரின் அனுபவம், கால சூழல், வான்வெளி போக்குவரத்து தெளிவு, கட்டுப்பாட்டு அறை தொடர்பு, உங்கள் நேரம், காலம், சூழ்நிலை, தேவை... அப்படி இப்படி என்று எத்தனை இருக்கிறது? இதெல்லாம் சரியாக இருந்தால்தானே பயணம் அந்த மூன்று மணி நேரம் அமையும்? இதற்கு நாம் ஒத்துழைக்கத்தான் வேண்டும், காத்திருக்கத்தான் வேண்டும் அல்லவா?
அதுபோலவே நம் வேண்டுதலுக்கும், அது வேண்டியது, வேண்டுவது என்று இருந்தாலும் அதற்கென்ற காத்திருப்போடு இருக்க பழகவேண்டும். மேலும் நிச்சயமாக உங்களுக்கு எது வேண்டுமோ அதையே, அதைமட்டுமே வேண்டியும் பழகவேண்டும். அதுதான் உங்களுக்கு வழங்கப்படும். அதை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். இறையாற்றல், தெய்வீகம், கடவுள் என்றுமே வழங்குவதில் குறையே வைப்பதில்லை. நாம் வேண்டுவதில் இருக்கிற குறைகள்தான் நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
How the Thuriyatheetha meditation set as a highest ?
August 24, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தவத்தில் துரியாதீத தவம் உயர்வானது எப்படி? வேறுதவம் இல்லையா?!
பதில்:
பல ஆயிரமாண்டு கால, யோக வரலாற்றில், சஸ்ரதாரா என்ற ஆயிரத்தெட்டு இதழ் தாமரை பெயர் கொண்ட, தலை உச்சி நிலையான, துரியம் என்ற ஆதாரமைய தவமே உயர்நிலை தவம் என்று இருந்தது. ஏறக்குறைய இப்போதும் அப்படித்தான் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலான யோக மையங்களில், துரிய தவத்திற்கு மேல்நிலையாக எந்த தவமும் இல்லை. மனவளக்கலை வழியாக மட்டுமே, ஏற்கனவே உயர் நிலையாக இருந்த துரியத்திற்கும் அடுத்ததாக உச்ச நிலை தவமாக, துரியாதீதம் என்ற தவம் வழங்கப்படுகிறது! பெயரிலேயே, துரியம் அதீதம் என்ற பெயர் பெற்றுள்ளதையும் கவனியுங்கள்.
குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் இறையுணர்தல் வழியில், பல ஆண்டுகளாக, துரியதவம் இயற்றிவந்துள்ளார். எனினும் அவர் அதில் நிறைவடையாத தன்மையை உணர்ந்திருக்கிறார். துரியம் என்ற நிலைக்கு அப்பாலும் கூட மனம் விரிந்து நிற்பதையும், மேலும் மேலும் அதனிலும் விரிவதையும் கண்டு உணர்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார். இது குறித்து, தன்னோடு யோகத்தில் பயணித்த சிலரிடம் கேட்டு கலந்தாலோசித்த பொழுது, அவர்கள், துரியத்திற்கு மேல் எதுவுமில்லை என்றே மறுத்துள்ளனர்.
ஆனாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தொடர்ந்து, அந்த மனவிரிவை கவனித்து, முடிவான உண்மையில், பேராற்றலும் பேரறறிவுமான, சித்தர்கள் சொன்ன வெட்டவெளியில், சுத்தவெளியில் முழுமையடைவதை உணர்ந்தார். அதன்பிறகே மனம் தன் உண்மைநிலையை, அடித்தளமான நிலையையும் அடைந்ததை அறிந்துகொண்டார். மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து, அதை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் தர எண்ணியே, தவமாக வடிவமைத்தார். அந்த தவமே துரியாதீதம் ஆகும்.
எனவே துரியாதீதத்திற்கு உயர்வான தவம் என்ற நிலை பொருத்தமானதே ஆகும். இதற்கு நிகராக வேறெந்த தவநிலையையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.
வாழ்க வளமுடன்.
1008 / agna / center / chakra / consciousness / divine state / endocrine glands / expand / higher / highest / level / lotus / meditation / mind / other end of mind / sahasrathara / siddhar / the God / thuriya / thuriyatheetha
How do we live with those who do not believe in God?
August 21, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களோடு நாம் வாழ்வது எப்படி? உதாரணமாக என் வாழ்க்கைத் துணைக்கு ‘கடவுள் இல்லை’தான்.
பதில்:
உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய நிலைதான் இது. உண்மையிலேயே, தெய்வம் உண்டா? இல்லையா? என்ற கேள்வியின் மூலமாக நிரூபணம் கேட்பவர்களுக்கு எந்த பதிலும் நாம் தந்து நிரூபித்துவிட முடியாது. அது நமக்கு தேவையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அந்த ‘தெய்வீகத்திற்கே’ தேவையில்லாதது.
தெய்வீகத்தை விளக்க வந்த பக்தி, உண்மை இழந்து, வேறுபாதை நோக்கி நகர்ந்து விட்டதால், பெரும்பாலான மக்கள் அதில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உண்மையே. நம்பிக்கை இழப்பு என்பதால் இருந்த, இருக்கிற உண்மை மறைந்துவிடுமா என்ன?!
எல்லாமே அறிவியல் / விஞ்ஞானம் என்ற கருத்துக்களில் மூழ்கிப் போனவர்களின் கருத்து, தெய்வம் என்பது பொய், கடவுள் என்பது இல்லை என்பதுதான். இருக்கட்டும். அது அவர்களின் கருத்துரிமை. அதை நாம் தடுக்கவோ, மாற்றி அமைக்கவோ முடியாதுதான். இவர்களுக்கு குருமகான் வேதாத்திரி மகரிஷி கொடுத்த பதிலையே நாமும் தரலாம்.
‘நாம் சாப்பிடுகிறோம். பலவித உணவுப் பொருட்களை சமைத்தோ, அப்படியேவோ உண்கிறோம். உணவு வயிற்றில் என்ன ஆகிறது? செரிமானம் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழு தாதுக்களாகவும் மாறுகிறது. இதை யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? உங்களுக்கு யாரேனும் செய்கிறார்களா? இந்த சமூகமோ, அரசாங்கமோ செய்கிறதா?’
‘இல்லை, இது இயற்கை என்று பதில் சொல்வீர்கள். அந்த இயற்கையை, அந்த ஆற்றலை நாம் தெய்வீகம், தெய்வம் என்று சொல்லுகிறோம். அந்த தெய்வீகத்தை வணங்குகிறோம். அதை அறிவதற்கு கடந்து உள்ளே போகவேண்டும் என்பதால் கடவுள் என்று வினைக்குறிப்பாக சொன்னது, கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது.'
‘எல்லாம் விஞ்ஞானம் என்று சொல்லும் நீங்கள், உலகில் தேர்ந்த பல அனுபவம் வாய்ந்த, விஞ்ஞானிகளிடம், இரண்டு இட்லியை கொடுத்து, இதை ரசம், ரத்தமாக்கித் தாருங்கள் என்று சொல்லுங்களேன்’ என்று கேட்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
தன்னை விட பெரிய, மகத்தான, உண்மையான, முழுமையான பேராற்றலையும், பேரறறிவையும், தெய்வம் என்று சொல்லுவதும், மதிப்பதும், வணங்குவதும், நம்பிக்கையோடும் இருப்பதில் என்ன தவறு?! ஆனால் பக்தி வழியில் ஏற்பட்ட குழப்பங்களுக்காக முழுமையாக கைவிட்டு விடுவது, நம்மைக்குறித்து அறியும் ‘நான் யார்?’ என்ற பயணத்தை தடுக்கும். நம் பிறவிக்கடனான கர்ம வினை தீர்த்தலை மட்டுப்படுத்தும்.
எனினும், அவர்வர்கள், அவர்களின் பாதையில் செல்ல விட்டுவிடுங்கள். என்றாவது ஒருநாள், உண்மை உணர்ந்தால் ‘தெய்வீகத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். காலம் அவர்களுக்கு பதில் தந்துவிடும்.
வாழ்க வளமுடன்.
How long we need to yoga practice for answering on Who am I?
August 01, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?
பதில்:
இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.
ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.
பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.
almighty / answer / awakening / being with / divine / duty / enlightenment / imprints / introspection / karma / kundalini / maharishi / manavalakkalai / Nature / realisation / the God / vethathiri / Who am I / yoga


















