CJ for You: action and result

action and result

Showing posts with label action and result. Show all posts
Showing posts with label action and result. Show all posts

Why I have not perfect in my job and financially yet?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறமை இருந்தும் கூட என் வேலையும் நிறைவில்லை, பணம், சம்பாத்தியம் பொருளாதரமும் நிறைவில்லை. காரணம் என்ன?


பதில்:

உலக வாழ்வியலில் நாம் முன்னேற, கல்வி படிப்பும், திறமையும் மிக அவசியம். வெறும் படிப்பு மட்டுமோ. திறமை மட்டுமே கொண்டு முன்னேறுகின்ற காலம் இப்போது இல்லை என்பது உண்மை. ஆனாலும், தனித்திறமையாளர்களுக்கு மதிப்பும், அதற்கான முன்னேற்றமும் உலகில் ஏற்றுக் கொள்ளப்படுவதை நாம் காணலாம். அதுபோலவே தனித்தொழில், வியாபாரம், சேவை வழியான உழைப்பிற்கும் நன்மதிப்பு உண்டு, வளர்ச்சியும் உண்டு. இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால், உடனடியாக பொருளாதார உயர்வினை பெற முடியாது. எனவே பொறுமையாக காத்திருக்கவேண்டும் என்பதே உண்மை.

நீங்கள், உங்கள் திறமை மற்றும் படிப்பின் நிலை குறித்து ஆராய்ந்து அதற்கான, அரசு, தனியார் வேலைகளில் இணைந்துகொள்ளுங்கள். மிகுந்த போட்டி இருப்பதால், தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைத்திடும் என்பதும் உண்மையே. உங்களை முடக்கும், திசை மாற்றும், அடிமைப்படுத்தும், அவமானப்படுத்தும் வேலைகளில் என்றுமே உங்களை ஈடுபடுத்தாதீர்கள். வெறுமனே பணத்திற்காக அப்படி வேலை பார்க்காதீர்கள். அது உங்களை வளர்ச்சிப்பாதையில் செலுத்தாது.

தனியாக நீங்கள் பொருளாதார உயர்வு பெற விரும்பினால், மக்களுக்கு சேவையை கருத்திக் கொண்டு, அதன்படி வேலையை, வியாபாரத்தை, தொழிலை அமைத்துக்கொண்டால் மிகச்சிறப்பாக முன்னேறலாம். குறைந்தது மூன்று மாதங்கள் பொறுமையோடு செயல்வேகம் குறையாது உழைக்கவேண்டியது அவசியமாகும்.

இதை நீங்கள் நம்புவீர்களா என்பது தெரியாது. எனினும் விளக்கம் தர வேண்டியது, எங்கள் கடமை. உங்கள் எண்ணம், சொல், செயல் வழியாக, உங்களை அறியாமல், உங்கள் கர்மா என்ற வினைப்பதிவை விளைவாக்குகிறீர்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது எனலாம். இயற்கையின் வினைவிளைவு நீதியில் நீங்கள் தப்பிக்க முடியாது. எனவே உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் விழிப்புணர்வு கொண்டு, வரக்கூடிய விளைவை கவனித்து, தனக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடியதையே உங்கள் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை யோகமே தரும். யோகமில்லாமல், முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதில் நிலைக்கமுடியாது தடுமாற்றம் வரும். உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல நிறைசெல்வமும், உயர்புகழும் பெற வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன்.

After does good, had more problems, so Karma is fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?


பதில்:

உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும். 

முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை  வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி? 

அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.

எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.

வாழ்க வளமுடன்.

Is it true that they say that we were born to solve karma?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?


பதில்:

கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்பதை விட, கர்வால்தான் பிறந்தோம் என்று சொல்லுவதே மிக பொருந்தமாக இருக்கும். இந்த கர்மா என்பதை புரிந்து கொள்வதில் பல குழப்பங்கள் இருந்துவருவதால், கரமா என்பதை வினப்பதிவுகள் என்றே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒரு வினை, அதன் விளைவு ஆகிய இரண்டும் சேர்ந்து பதிவாக மாறிவிடுகிறது. அதுவே வினைப்பதிவு, கர்மா என்று அழைப்படுகிறது!

இயற்கையோடு ஒட்டிவாழும் உயிரினங்களுக்கு, கர்மா என்ற வினைப்பதிவு எழுவதில்லை, பதிவாகவில்லை, மறுபடியும் எழுவதில்லை. உதாரணமாக ஐந்தறிவு விலங்கினங்கள் மற்றும் பறவைகள். ஆனால், ஆறறிவான மனிதன், அவனின் விரிந்த ஆற்றலாலும், இயற்கையின் ஒர் அங்கமாகவே பரிணாமத்தில் வந்ததால், அவன் எது செய்தாலும் அது வினையாக பதிவாகிறது. நல்லது என்றால் அது நல்ல பதிவையும், தீயது, ஏற்பில்லாதது என்றால் அதுவும் வினைப்பதிவாகவும், அதை சரி செய்யும் பொருட்டாக, திருத்தம் பெறும் வழியிலும் மறுபடி மலர்கின்றது. சரியாக புரிந்து கொண்டு, திருத்தாவிட்டால், மறுபடியும் எழும் மற்றொரு விளைவோடு கூடுதலாக பதிவாகிவிடும். 

ஒரு மனிதனால், தன் ஆயுட்காலத்தில் தீர்க்கமுடியாத, கர்மா என்ற வினைப்பதிவுகளை, கருத்தொடர் வழியாக அவர்களின் வாரிசுகளுக்கு கடத்தப்படுகிறது. இங்கே இறையாற்றலே செயல்படுகிறது. அப்படி கடத்துவதற்காகவே, பிள்ளைகள் பிறப்பும் நிகழ்கிறது எனலாம். எனவே பிறவின் நோக்கம், கர்மாவை தீர்க்க மட்டுமில்லாமல், ஏற்கனவே தீர்க்கப்படாத கர்மாவால்தான் அந்த பிறப்பே நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

இந்த கர்மா என்ற வினைப்பதிவு இருப்பதால்தான், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி சிறப்புத்தன்மையும் அமைகிறது எனலாம். ஓவ்வொருவருடைய செயல் ஒன்றாகவே இருந்தபொழுதும், விளைவு என்பதில் வேறுபட்டு அமைகிற உண்மையை எல்லோரும் அறிவார்கள். அந்த விளைவை தருவதில் ‘கர்மா என்ற வினைப்பதிவு’ முதன்மையாக அமைகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!