CJ for You: forefathers

forefathers

Showing posts with label forefathers. Show all posts
Showing posts with label forefathers. Show all posts

What is so special about Thai Amavasya and Aadi Amavasya? Are all new moons the same? Why do our people say something miraculous? Will you explain the truth?


தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் அப்படி என்ன சிறப்பு? எல்லா அமாவாசையும் ஒன்றுதானே? நம் மக்கள் எதற்கெடுத்தாலும் ஏதேனும் அதிசயமாக சொல்லிக்கொள்வது ஏன்? உண்மை விளக்குவீர்களா?

இப்படி அடிக்கடி, வருடத்திற்கு இருமுறை சொன்னாலாவது நீங்கள் ஆன்மீகத்திற்குள் வருவீர்களா? என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உண்மையாக வழிபாடு யாருக்கு வேண்டும் தெரியுமா? பக்தி, யோகம், இவைகளை பொதுவாக சொல்லும் ஆன்மீகம் ஆகியவற்றில், முற்றிலும் ஈடுபாடு இன்றி, எதிர்புறமாக, பொருளியல் உலகில் ஓடுபவர்களுக்குத்தான் தேவை. இதென்னய்யா? பொருளியல் உலகை விட்டுவிட்டா ஆன்மீகத்திற்கு வரமுடியும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

எல்லா நேரங்களிலும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? பிறந்தது முதல், வாழ்நாளின் முடிவுக்காலம் வரை பொருள் அவசியமே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. தேவையை நிறைசெய்யும் வகையில், அன்றாடம் அதற்கென நேரத்தை செலவழித்துவிட்டு, நமக்காக, நம் உடலுக்காக, மனதிற்காக, உயிருக்காக, நம்முடைய முன்னோர்களுக்காக, வரக்கூடிய சந்ததியினருக்காகவும், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கித் தரலாம் அல்லவா? அதற்கும் வழியில்லை என்றால் எப்படி?

இந்த உலகிற்கு நாம் எதற்கு வந்தோம்? என்ற ஒரு கேள்விக்கான் சிந்தனையே இல்லாமல், ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைவோம் என்பது மட்டுமேதான் நம் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? என்று என்றைக்காவது, உங்களுக்குள்ளாக கேட்டதுண்டா? நிஜமாகவே அப்படி ஒன்று இருக்கிறதா? ஆம் இருக்கிறது. ஒன்றல்ல மூன்று. அதென்னாய்யா அந்த மூன்று?

உங்கள் பிறவியின் நோக்கமும், பிறவியின் கடமையும் நிறைவேற்றிக் கொள்ளுதல், மெய்ப்பொருள் உண்மையை அறிதல் ஆகிய மூன்று ஆகும். ‘ஏங்க, இதெலாம் ஆகிற வேலையா? இதை தெரிந்து கொள்வது அவசியமா என்ன? எல்லோருமா தெரிஞ்சிகிட்டு போய் சேர்ந்தாங்க? அப்படி தெரிஞ்சிகிட்டு என்னதான்யா ஆகப்போக்குது? இதைச்சொல்லி உங்களுக்கு ஏதேனும் காரியம் ஆகனுமோ? என்கிட்ட அவ்வளவு பணமும் இல்லையே.’ என்று மறுபடி நீங்கள் சொல்லுவீர்கள் தானே?!

எனக்கு என் முன்னோர்கள் சொல்லிச்சென்ற வழிமுறைகளை, நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். அவர்கள் என்னிடம் ஏதும் எதிர்பார்க்கவில்லை, நானும் உங்களிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை, இது ஒரு உண்மையை, வழி வழியாக கடத்துதல். எரியும் அகல் விளக்கு கொண்டு, நெருப்பு அணைந்திடாமல், இன்னொடு அகல்விளக்கை ஒளியேற்றி வைப்பது போலவே ஆகும். ஆனால் நீங்களோ ‘எனக்கு ஒளியும் வேண்டாம். அதுவும் வேண்டாம்’ என்றால், எனக்கொன்றும் குறையில்லை. அது உங்கள் விருப்பமே!

தை அமாவாசை என்பது, புத்துயிர் பெற்ற சூரியனின் நகர்வைக் கொண்டும், அந்த சூரியனோடு கலக்கும் சந்திரனையும் கருத்தில் கொண்டு, வணங்கிக் கொள்வதாகும்.

ஆடி அமாவாசை என்பது, இதுவரை நமக்கு புத்துயிர் தந்த சூரியன், தன்னை புதுப்பிக்க நகர்வதை வாழ்த்துவதும், அதனோடு கலந்து நிற்கும் சந்தினையும் கருத்தில் கொண்டு வணங்கிக் கொள்வதாகும்.

இந்த வழிபாட்டின் உண்மை, அமாவாசை என்பது புனிதம் தரும் நாள், அந்தநாளில், சூரியனும், சந்திரனும் இணைந்த வகையிலான ஆற்றல் பூமிக்கு வருகிறது. அந்த ஆற்றல், நம்முடைய பிறப்பின் நோக்கத்தையும், கடமையையும் எளிமையாக்கும். மெய்ப்பொருள் உண்மையை உணர்வதற்கான வழிகளை உண்டாக்கும். நம் முன்னோர்களுக்கு செய்யும் வணக்கமும், வழிபாடும் நம் வாழ்வை வளமாக்கும்.

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக தந்திருக்கிறேன். மேலும் உண்மை அறிவதென்றால், காத்திருங்கள். அடுத்த பதிவுலும் தொடரலாம்.

வாழ்க வளமுடன்.

-

Why the Tamil Month Margazhi is special with ritual and celebration? Please Explain this one!


மார்கழி மாதம் என்பது ஏன் அதிக மதிப்பாக இருக்கிறது? அதனை பீடை மாதம் என்றும் சொல்லுகிறார்களே? விளக்கம் தருக.


        ஒவ்வொரு ஆண்டும், சூரியனின் நகர்வை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த பிரபஞ்சம் முழுவதுமாக நிரம்பி இருக்கின்ற நட்சத்திரகூட்டங்களிடம் இருந்து, ஆற்றலை வாங்கி, ஒருங்கிணைத்து பூமிக்கு, தனியாக இந்த சூரியனே அனுப்பிக் கொண்டும் இருக்கிறது எனலாம். பொதுவாகவே சூரியன் நகர்கிறது என்றுதான் நாம் சொல்லுகிறோம். ஆனால், உண்மையாகவும், விஞ்ஞான ரீதியாகவும், பூமிதான் தன்னுடைய சூரியனை சுற்றும் பாதையில், நகர்கிறது. நாம் நிலையாக பூமியில் இருப்பதால், நாம் காண்பது எல்லாமே நகர்வதாக எண்ணிக்கொண்டு, அதையே வழக்கத்தில் வைத்துக் கொள்கிறோம்.

மார்கழி மாதம் என்பது தஷிணாயனம் என்ற சூரிய நகர்வின் இறுதி மாதமாகும். இறை கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வகையில், நம் இந்திய நாட்டில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக என்றும் சொல்லமுடியும். என்றாலும், உலக அளவில் இந்த மார்கழி மாதம், டிசம்பர் என்ற ஆங்கில மாதமாகவும், சீனாவில் டிராகன் மாதமாகவும் சிறப்பாகிறது. அந்த வகையில், கிறித்துவ, முஸ்லீம், பௌத்த, போன்ற வழிபாடு கொண்டவர்களுக்கும் ‘டிசம்பர்’ இறை வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இதை அந்தந்த மக்களும் அறிவார்கள். ஏனென்றால் இது, பன்னெடுங்காலமாக முன்னோர்களால், குடும்ப அமைப்பில் தொடர்ப்பட்டு வந்திருக்கிறது.

இந்த மார்கழி மாதம், மிகச்சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், இந்த பிரபஞ்சத்தை இயக்கும், காக்கும் மூல ஆற்றலின், பேராற்றலின், தெய்வீக்த்தின் வெளிப்பாடு, இந்த பிரபஞ்சத்திலேயே அமைந்ததாக இருக்கிறது. இதை முன்னோர்கள் உணர்ந்தார்கள். அவர்களே, இதன் முக்கியத்துவத்தை அறிந்து, மனிதன் என்பவனின் முழுமையை உணரவும், இயற்கையோடு கலந்து நின்று வாழவும் பழகிட, அந்த ஆற்றல் உதவும் என்பதை சொல்லி, இந்த மார்கழி மாதத்தில், மனதை, அந்த தெய்வீகத்தன்மையோடு இணைத்துப்பழகிட வழிபாடு மாதமாக அமைத்தார்கள். இதை தனியாக, எழுத்தாலும், வெற்று வார்த்தைகளாலும் புரியவைத்திட முடியாது. வழிபாடுகளை விடவும், தவம் இதற்கு நிச்சயமாக உதவிடும்.

குறிப்பாக, இந்த மார்கழி மாதம், சூரியனுக்கு இழந்த சக்தியை முழுமையாக தருகிறது. பிரம்ம முஹூர்த்தம் என்பதற்கு பொருத்தமான நிலை இதுவே. கடலில் முத்து குளிப்பது போல் என்று சொல்லுகிறார்கள். அந்த சக்தியை நாமும் பெற்றுக்கொள்ள தயார் செய்து கொள்கிறோம். எனினும், இதெல்லாம் கதைக்கு ஆகாது என்று வழக்கமான மாதமாக, ஜஸ்ட் கட்ந்து செல்வதும் நம் இயல்புதானே? அது சரி யாருக்கு வேண்டுமோ, அவர்கள் பெற்றுக்கொண்டு விடுகிறார்கள். வரிசையை விட்டு விலகி நிற்பவர்களுக்கு எப்படி எல்லாம் கிடைக்கும்?

சோதிட ரீதியாக, மூலம், பூராடம், உத்திராடம் என்ற நட்சத்திர கூட்டங்களின் ஆற்றல் வீடான, தனுசு ராசிதான், மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திர கட்டத்தில், ஒன்பதாம் வீடு என்றும் சொல்லுவார்கள். இதை பீடை மாதம் என்று சொல்லுவது, மொழி வழக்கில் தவறானது. பீடுடைய மாதம் என்பதுதான், பீடை ஆகிவிட்டது. பீடு என்றால், உயர்ந்த, மேன்மையான, பெரும்போக்கான என்ற அர்த்தங்களை தருவதாகும். சஷ்டி என்பது சட்டி ஆனது போலவே, பீடு என்பது பீடை ஆகிவிட்டது.

பகவத்கீதையில், இறையே தன்னை, மார்கழி மாதமாக அமைந்திருப்பதாக சொல்லிக் கொள்வதுண்டு. இந்த முப்பது நாட்கள், மேலோர்களின் ஒரு அதிகாலைப் பொழுது என்றும் சொல்லுவார்கள். இந்த நாட்களில், விஞ்ஞான ரீதியாகவும், நிறைய சக்தி பூமிக்கு கிடைப்பதாகவும், காற்றில் ஓஸோன் எனும் தன்மை கூடுவதாகவும் சொல்லுகிறார்கள். அதனால்தான் மார்கழி மாத, அதிகாலை நடைப்பயணம் கூட மிக சிறப்பு என்கிறார்கள்.

யோகத்தில் பயணிக்கும் அன்பர்களுக்கு, இந்த மார்கழி மிக சிறப்பாக துணை நிற்கும். ஆழ்நிலை தவம் தியானம் செய்வதற்கும், மனம் விரிந்து நின்று ஆராய்ச்சி செய்வதற்கும், மனதின் களங்கங்களை நீக்கிட அகத்தாய்வு செய்வதற்கும், மௌனம் என்ற நிலையில், அமைதியாக தன்னை ஆராய்ச்சி செய்வதற்கும், இயற்கையை அதன் தன்மையில் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. விரும்பும் அன்பர்கள், அவரவர் அளவிலே, இந்த மார்கழி மாதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

மற்றவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை, நாளை என்பது மற்றொரு நாளே என்பதுபோல கடந்துவிடலாம்.

வாழ்க வளமுடன்.

-

How do you want to live in this World? Upgrade of the human enlightenment!


நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இந்த உலகில், மனிதன் தனித்த ஒருவன் அல்ல. குடும்பம், உறவுகள், சமூகம் என்ற உறவுகளை அடிப்படையாக கொண்டுதான் பிறக்கிறான். ஒருவன், தன்னை அனாதையாக கருதவும் முடியாது. ஏனென்றால், அவனுக்கு, இந்த சமூகம் உதவிகளை தானாகவே, விரும்பி செய்யும் என்பது உண்மை. அதுபோலவே, தன்னை அனாதையாக கருதியவனும், இந்த சமூகத்திற்கு உதவவேண்டிய வகையிலும் இருப்பான். இந்நிலையில், ஒரு மனிதனின் வாழ்வு அமைந்துவிடுகிறது. எனக்கு யாரும் தேவையில்லை. எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நானும் யாருக்கும் உதவ தயாரில்லை. என்பதாக தனக்குள்ளாக வட்டம் போட்டுக்கொண்டு வாழ்வது, பொருத்தமற்றது ஆகும். அது மனித பிறவிக்கே இழுக்கு என்று கருதலாம். அதுபோல, அப்படி வாழ்வது, இயற்கைக்கும் விரோதமானது. மனிதன் என்பவன், இதமான மனதைக் கொண்டவன், மன+இதன் என்பதுதான், மனிதன் என்றாகிவிட்டது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். 

இப்போதுள்ள வாழ்க்கைமுறை, ஒரு தனி மனிதனை, எல்லாவகையிலும், இந்த உலகம் பிணைத்திருக்கிறது. அதாவது விட்டு விலகிடாத அளவுக்கு இணைத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதை உலகம் சுருங்கி விட்டது என்று, சமூக ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். மேலும் கைபேசி என்ற, தகவல் தொடர்பு சாதனம், உலகவே ஒரு சமூகம் என்ற மாயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த மாயம், சிலவேளைகளில் நிஜமாகவும் வந்து நிற்கிறது. இது விஞ்ஞானத்தின் கட்டாயமும், வளர்ச்சியும் என்பதாகவே அமைந்துவிட்டது. இதிலிருந்து, சராசரி மனிதனும் தப்பிக்கமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுது, இந்த உலகம், ஒன்றாக, ஒரே சமுகம் என்ற நிலைபாடுக்கு வந்துவிட்டதை, நாம் நம்பித்தான் ஆகவேண்டும். என்றாலும் கூட, எங்கோ ஏற்படும் மாற்றம், உடனடியாக, நமக்கும் நேர்ந்துவிடுவதையும், அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், தடுமாற்றமே ஏற்படுகிறது. ஏனென்றால், மனிதன், தன்னையும், சமூகத்தையும் பார்க்கிற பார்வை, நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஏற்பான ஒன்று, எல்லோருக்கும் ஏற்பாக இருப்பதும் இல்லை. ஆனால், திடீரென்று, அவருக்கு நிகழ்ந்தது, எனக்கும் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிவிடுவதை காணலாம். நாமும் கூட சில நேரங்களில், சில நிகழ்வுகளில் அப்படி நினைப்பதுண்டு, விரும்புவதும் உண்டு.

இந்த நிலைகளை எல்லாமே, வாழ்ந்து அனுபவம் கண்ட முன்னோர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவ ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மக்களின் வாழ்வியலுக்கு, ஒரு நடைமுறை அமைத்து தந்திருக்கிறார்கள். அதனோடு, தன்னையும், மெய்ப்பொருளையும் உணர்ந்த ஞானிகள், ஒரு தனிமனிதனை, இப்படி வாழ்க என்று அறிவுறுத்துகிறார்கள். அதையே இயற்கைக்கும், தனக்கும், குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வாக கருதுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியும், ‘தனிமனிதனின் அமைதியே, உலக அமைதிக்கு வழியாகும் ’ என்று சொல்லுகிறார்.

இந்நிலையில், ஒரு மனிதன் எப்படி வாழலாம்? எப்படி வாழவேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பாகும். இதை யாரிடமாவது கேட்டால், என்ன பதில் சொல்லுவார்? நமக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய பதில், ‘நான் நன்றாக வாழவேண்டும். இன்பமாக வாழவேண்டும். நோய் நொடி இல்லாமல், எல்லாம் அனுபவத்தி வாழவேண்டும். நீண்ட ஆயுட்காலமும் வேண்டும், சுகபோகமாக, உலகில் மதிப்பாகவும் வாழவேண்டும்’ என்று தன்னலம் கருத்தாக சொல்லுவார். இந்த பதில் எபோதும் பொதுவானது. இன்னும் சிலர், ‘தானும் நன்றாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன்’ என்ற வார்த்தையை, இணைத்துக் கொள்வார்கள்.  கூடுதலாக‘நானும், என்குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்’என்று சொல்லுவார்கள்.

முரண்பாடானவர்கள் ‘மற்றவர்கள விட, நான் நன்றாக வாழவேண்டும்’ என்று சொல்வார்கள். அதையே வாழ்வில் கடைபிடிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனுடைய இந்த எண்ணங்கள்தான், அவனின் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறது. ஒரு குறிபிட்ட வட்டத்திற்குள் நீங்கள், ‘சுயநலமாக, எனக்கு மட்டும்’ என்று எதையாவது நினைத்தால், அது உங்கள் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுகிறது என்பது உறுதி. அது இயற்கையின், நீதிக்கு எதிரானது என்பதை மறவாதீர்கள். ஒரு சுவறில் எறிந்த பந்து, திரும்ப உங்களிடமே வருவதுபோல, உங்களை தாக்கும். இதை பெரும்பாலோர் தன் வாழ்நாளிலேயே, உணர்ந்திருப்பார்கள்.

ஒரு மனிதன், எப்படி வாழவேண்டும் என்பதையே, இன்றைய யோககல்வி முறைகள் போதிக்கின்றன. இதை பக்திவழியிலான கதைகள், ஓர் அளவில் தடுமாறுகின்றன. காரணம் என்னவென்றால், அக்கால மனிதர்களின், அறிவுநிலை, வாழ்க்கைமுறை, செயல்பாடுகள், தகவல் தொடர்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நிலையில் இருந்தது. இன்றோ உலக மக்கள் அனைவருமே, தன் அறிவிலும், வாழ்விலும் மிக உயர்ந்திருக்கிறார்கள். பக்தி என்ன உண்டோ, அதில் அடிப்படை மாறாமல், எடுத்துக்கொண்டு, கூடுதலாக யோகம் என்ற மெய்ப்பொருளும், இயற்கையோடு தன்னையும் அறியும் பயிற்சி (Upgrade of the human enlightenment) தேவைப்படுகிறது.  இதை அறிவறிந்தோர் உணர்வார்கள். அவர்கள் தன் வாழ்விலும் அதை கடைபிடிக்கிறார்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறார். உங்களுக்குள்ளாகவும், ‘நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’என்ற இந்த கேள்விக்கு, ஆராய்ச்சியை தொடங்குங்கள், உண்மை அறியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why need to search good one in life always? Sometimes it is not available also!


வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


பதில்:

உங்களுக்கு ஒர் உண்மை தெரியுமா? இந்த வாழ்க்கை நாம் உருவாக்கிக் கொண்டதல்ல. ஏற்கனவே நம் பெற்றோரும், முன்னோர்களும், தலைமுறையினரும் உருவாக்கி, பாதை போட்டுத்தந்த வழியிலே நாம் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை.  இன்று நீங்கள் பயணிக்கும் பாதையில், இன்னும் சிலவழிகளை, உங்கள் பயணத்தின் பொழுது, நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கிற அதேவேளையில், உருவாக்குகிறீர்கள். அந்தவழியில் பயணிக்க உங்கள் குழந்தைகள், உங்களுக்கு வேண்டியோர் பயணிப்பார்கள். உங்கள் நண்பர்கள்கூட பயணிக்க தயாராவர்கள்.

இப்படியான பாதைகளும், வழித்தடங்களும் எண்ணற்றவை. ஒரு மரத்தின் கிளைகள் போல இல்லாமல், அதன் வேராக எங்கும் படர்ந்து விரிந்து சென்று, ஏதேனும் ஓரிடத்தில் அவை இணைந்து பிண்ணி பிணைந்துகொள்ளவும் செய்யலாம். விடுத்து இன்னொன்றாக பிரிந்தும் விரியலாம். அது அதனதன் தன்மையையை பொறுத்தது.

இந்த பாதைகளை பொறுத்தவரை எது நல்லபாதை? எது கெட்டபாதை? எது அவசியமற்றது? எது தவிர்க்கவேண்டியது? எது பிரச்சனைக்குறியது? எது மிகச்சிறந்தது? என்பதெல்லாம், அந்த வழியில் பயணித்து சிக்கி பாடம் கற்றோர், இந்த சமூகத்திற்கு, உலகுக்கு விபரத்தை தந்திருக்கிறார்கள். அதுதான் அறவழி என்றும் சொல்லுகிறார்கள். மனித வாழ்வின் நோக்கத்தை சிறப்பாக்கும் என்றும் வாழ்க்கையில், நல்ல வழக்க பழக்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அறவழியில் பயணிப்போர், மேலும் பல உண்மைகளை அறிந்து, உணர்ந்து அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு தந்து செல்கிறார்கள்.

என்றாலும், குறுமதியார்கள் மக்களை, அவர்களின் மனதை குழப்பி, பாதை தடுமாறச்செய்து, அதில் தனக்கான பொருளையும், புகழையும் பெறத்துடிக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த பாதையில் நின்று, நல்வழியில் செல்லும் மக்களை தடுத்து திசைமாறச் செய்கிறார்கள். இதனால் பெரும்பாலோர் சிக்கி திணறுகிறார்கள். இப்படியான பாதையில்தான் நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என்று கருத இடமிருக்கிறது. அதனால்தான், வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்.

ஒரு வீட்டின் சமையலையில், உணவு சமைப்பதிற்கு தேவையான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருளை தேடாமல் எடுத்து பயன்படுத்துபவர் உங்கள் தாயாராகவோ, வாழ்க்கை துணைவராகவோ, நீங்களாகவோ இருக்கலாம். இன்னொருவரை அழைத்து வந்து, ‘அந்த வெள்ளை சக்கரையை எடு’ என்றால் அவர், உப்பை எடுத்துத்தரக்கூடும் அல்லவா? அதற்கு வாய்ப்பில்லை என்றால், எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருப்பார். இன்னொரு உதாரணமாக, வெள்ளை சர்க்கரை மட்டுமே இருக்கிற இடத்தில், உப்பையும், மாவையும், ரவையையும், வெள்ளை சோப்புத்தூளையும், இன்னும் சில ரசாயன உப்புக்களையும் நிரப்பி வைத்தால், அனுபவப்பட்ட நீங்களே கொஞ்சம் குழம்பித்தான் போவீர்கள் அல்லவா? இத்தகைய குழப்பும் வேலையைத்தான் ‘இன்றைய சமூகத்தில்’ சில குறுமதியார்கள், உண்மைக்கு புறம்பாக  செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இதை அடையாளம் காணுங்கள், எது உண்மை என்பதை கண்டடைய பழகுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுப்போல, ‘அல்லதை விடுத்தால் நல்லது அங்கேயே இருப்பதை அறியலாம்’.

வாழ்க வளமுடன்

-

Why I have a problems even nothing do not mistake and helping to others in life?


என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?


பதில்:

உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?

கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள்.  அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!

வாழ்க வளமுடன்

-

What is the reply for someone not accept the Mahalaya Amavasya and all truths?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த நவீன அணுயுக அறிவியல் முன்னேற்ற காலங்களிலும் மஹாளய அமாவாசை, கிரகணம் அது இது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? 


பதில்:

நான் என்னுடைய பதிலாக சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே இருக்கிற உண்மைகளை பதிலாக இங்கே அறியத்தருவதுதான் என்னுடைய வேலை. நான் புதிதாக ஆராய்ந்து பார்த்து சொல்லும்படி எதுவுமே இல்லை. எல்லாவற்றிற்கும் முறையான விளக்கங்களை தந்து, மிச்சம் வைக்காமல் முடித்துவிட்டார்கள். வேண்டுமானால், உங்களிடம் அப்படி சலித்துக் கொண்டார் அல்லவா? அவர் பரிசோதனை செய்து பார்த்து, உண்மை விளக்கம் பெறட்டுமே?!

இப்படி சலித்துக் கொண்டவர்களுக்கு, முதலில் சொல்லவேண்டியது Science என்றால் அறிவியல் (அறிவு+இயல்) அல்ல. விஞ்ஞானம் (விண்+ஞானம்) தான். Science என்பதை அறிவியல் என்று தவறாக மொழியாக்கம் செய்துவிட்டார்கள் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார்.  அந்த நபர், உங்கள் நண்பரா என்பது எனக்குத்தெரியாது. இதை படிப்பாரா என்பதும் எனக்கு தெரியாது. எனினும், அவரைப்பொறுத்தவரை...

1) கடவுள் இல்லை 2) தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கை 3) முன்னோர்கள் சொன்னது எல்லாமெ பொய் 4) வானியலை உள்ளடக்கிய ஜோதிடம் பொய் 5) ஜாதகமும் பொய் 6) அமாவாசை பௌர்ணமியும் பொய் 6) சந்திர சூரிய கிரகணமும் பொய் 7) ராகு கேது நிழல் கிரகமும் பொய் 8) உயிர் பொய் 9) ஆத்மா ஆன்மா பொய் 10) வழிபாடு பொய்... இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பிரபஞ்சம், பேராற்றல் மற்றும் பேரறறிவு கொண்ட ‘தெய்வீகத்தால்’ தன்மாற்றம் அடைந்ததாகும். தன்னை மிஞ்சிய, தனக்கு மேலான, கண்களால் காணாத, புலன்களால், கருவிகளால் அறியமுடியாத, மனதால் பகுத்துணர முடியாத, காலம், தூரம், பருமன், வேகம் இவற்றில் சிக்காத அந்த தெய்வீகத்தை ‘இறைவன், கடவுள், தெய்வம், மெய்ப்பொருள்’ என்று அழைத்து வணங்குவதில் என்ன தவறு? 

பயிற்சியின் வழியாக அந்த தெய்வீகத்தை உணர யோகமும், வாழும் வாழ்வில் சராசரி மனிதர்கள் அறிய பக்தியும், அறிவில் உயர்ந்தோர்கள் தான் கொண்டுவந்தனர். அதை சிலர் உண்மையை தடுத்து குழப்பம் செய்துவிட்டனர். அதை மாற்றிடாமல் மொத்தமாகவே தவறு, இல்லை என்றால் எப்படி?! 

ஒருவரிடம், உன்னுடைய 10 வது தலைமுறைக்கு குழந்தையே இல்லை என்று சொன்னால் அது உண்மையாகுமா? அது உண்மை என்றால், அந்த ஒருவர் இப்போது இருக்கமுடியுமா? இப்படித்தான் அறியாது எள்ளி நகையாடுகின்றனர். இதற்கு அவர்கள் அறிந்த அறிவியலின் (?!) துணைவேறு.

மனிதனின் பிறப்பு இறப்பும் சாராசரி சிந்தனையில் சிக்கிடாது. கேள்வி கேட்டவருடை அறிவியலும் கைவிரித்துத்தான் நிற்கிறது. பிறப்புக்கு முன்னம் என்ன இருந்தது? இறப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதும் அங்கே இல்லை. அதில் இருக்கின்ற உண்மையை, தன்னை அறிதலின் வழியாகவும், இறையுணர்வு பெற்றதன் வழியாகவும், சித்தர்கள், யோகியர்கள், மகான்கள், ஞானியர்கள் தந்த விளக்கம்தான் நாம் பெற்றிருக்கிற தகவல்கள். இதில் ஒன்றோடு ஒன்றாக சில தவறுகள் இணைக்கபட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதில் உள்ளதுதானே?

எப்போதுமே தனக்குத் தெரிந்ததை இடைச்சொருகலாக சொல்லுவது மனிதனின் பண்பு. அது காதுவழியாக கடத்தப்பட்டாலும், எழுத்தால் எழுதப்பட்டாலும் மாறிடவே செய்யும். ஏனென்றால் தன்னுடைய புரிதலும், அனுபவங்களும் அந்த உண்மையான வார்த்தைகளையும், அர்த்தங்களையும் மாற்றிவிடும். அப்படி உண்மையில் சில பொய்மை கலந்துவிட்டிருக்கிறது. இன்றும் கூட சமூக வலைத்தளங்கள் வழியாக எண்ணற்ற பொய்கள் மிதக்கின்றன. அவற்றில் எது உண்மை என்று அறிவதும் நம் கடமையல்லவா?

இவ்வளவு விளக்கங்களும், இதற்கு மேலும் சொல்லி அவரை திருத்திட முயற்சிப்பது நமக்கு வேண்டாத வேலை. எனவே அவரை அவர்போக்கில் விட்டுவிடுங்கள். நீங்கள் அவருக்கான ஒரு வாழ்த்தை சொல்லிவிட்டு, நீங்கள் உங்களுக்கான உண்மை அறிதலில் இருங்கள். அவர் வழியை அவரே தீர்மானித்து செல்வார். அனுபவங்களை பெறுவார்.

மஹாளய அமாவாசை குறித்த விளக்கத்திற்கு இந்த சிறிய காணொளி உதவும்.

இங்கே காண்க

வாழ்க வளமுடன்.

After does good, had more problems, so Karma is fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?


பதில்:

உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும். 

முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை  வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி? 

அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.

எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.

வாழ்க வளமுடன்.