CJ for You: fake

fake

Showing posts with label fake. Show all posts
Showing posts with label fake. Show all posts

In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer?


உங்களுடைய இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? இதெல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலை அல்லவா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா?


வேதாத்திரிய அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விளக்கம் அளிக்கவே எமது வேதாத்திரியா சேவை வழங்கப்படுகிறது. எனினும், உங்களைபோன்றோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவ்வப்பொழுது பொதுவான தலைப்புக்களில் பதிவும், விளக்கமும் தருவது உண்டு. எனினும் யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை.

யோகத்திற்கு தன்னை இணைத்துகொள்ள ஒரு மனிதன்  வரவேண்டுமானால், ஒரு மாங்காய், இயல்பாக மாம்பழமாக பழுப்பதைப் போல நிகழவேண்டும். கால்சியம் கார்பைட் (Calcium carbide) இரசாயனத்தை  மாங்காய்களோடு கலந்து, இயற்கைக்கு மாறாக பழுக்கவைப்பதில் பிரயோஜனம் இல்லை. எனினும் விளக்கிச் சொல்லுவதிலும், புரியவைப்பதிலும் தவறில்லை. முடிவு உங்கள் வசமே என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் பிறந்த இவ்வுலகில், ஏதேனும் கடமை, நோக்கம், காரணம் இருக்கிறதா? என்று சிந்தித்திருக்கிறீர்களா? உங்களோடு பிறந்தவர்கள் வாழ்வதுபோலவே, இதற்கு முன்னே வாழ்ந்தது போலவும், பல்வேறு வகையில் வாழ்ந்து, எல்லாம் அனுபவித்து, இவ்வுலகைவிட்டு நீங்கினால் போதுமானதா? அப்படியானால் ஏன்? எதற்காக? சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், இறை தூதர்களும் தோன்றினார்கள்? அவர்களுக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல, வேறு வேலை ஏதும் இல்லையோ?

இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? என்று கேட்பது, உங்களின் அறியாமையையும், இந்த உலகில் எந்த வகையில் நீங்கள் சிக்கி இருக்கிறீர்கள் என்பதையுமே, எடுத்துக் காட்டுகிறது.

நீங்கள் இன்னமும் அந்தக்கால, வாழ்க்கையை விட்டு ஓடும், யோகத்திலேயே நின்றுவிட்டீர்கள். யோகம் குறித்த உண்மையை நீங்கள் அறியவில்லை, மேலும் உண்மையை மறுக்கிறீர்கள். யோகம் உங்கள் பிறப்பின் ரகசியத்தை அறியும் வழி. இயற்கையோடு உங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி. நான் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பி பதில் தேடும் பாடம். மனித பிறவியின் நோக்கமும், கடமையும் அறிவதற்கான, தீர்ப்பதற்கான செயல்முறை. மேலும் கடவுள் என்றால்,  கட உள், கடந்து உள்ளே போய் கவனி என்பதுதான் அர்த்தமாகும். யாரையாவது சுட்டிக்காட்டி, இதுதான் கடவுள் என்று காட்டுவதல்ல. அது எங்களைப்போன்ற யோகியர்களின் வேலையும் அல்ல.

இப்போது, கேள்வியின் முக்கிய நிலைக்கு வரலாமா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா? தருகிறேன். இதோ, இந்த பதிவின் வழியாக, உண்மை விளக்கத்தை அறிந்து கொள்க.

உங்களுக்கு பணம், பொருள், செல்வ வளம் பிரபஞ்ச இயற்கையாற்றல் தருமா? முழு பதிவு!

வாழ்க வளமுடன்.

-


What is the answer to those who say that the practice of yoga is a deception, a survival for a yogi?


யோக பயிற்சி என்பது ஏமாற்றுவேலை, யோகிக்கான பிழைப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் என்ன?



இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்லாம். ஒரு உண்மை விளக்க தத்துவ நிகழ்ச்சிக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் ஒரு இளைஞன், வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கிறான்.

‘சுவாமிஜி, உங்கள் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டேன். மகிழ்ந்தேன். உண்மைகளும் தெரிந்தன. இந்நிலையில், நான் உங்களைப்போல ஆகவேண்டும். அதற்கு என்னவழி?’

‘நல்லது, அது கடினமில்லை. இங்கே வழங்கப்படும் பயிற்சிகளில் இணைந்து, கற்றுக்கொள்க. அப்பயிற்சிகளே உன்னை, என்னளவிற்கு உயர்த்தித்தரும்.’

‘ஓ, அதற்கெல்லாம் விருப்பமில்லை. எளிமையாக உங்களைப்போல ஆகவேண்டும், அதுதான் என் நோக்கம்’

இளைஞனின் கருத்தை புரிந்துகொண்ட பின் ‘சரி, அப்படியானால், உடனடியாக ஒரு துணிக்கடைக்குச் சென்று, இதுபோல வெள்ளை குர்தா, வேஷ்டி, மஞ்சள் துண்டு வாங்கிக்கொள். அணிந்து தயாராகலாம். ஆனால் இதுபோல தாடி வளர, குறைந்தது மூன்று மாதம் ஆகுமே?’

‘ஆமா, ஆனாலும்...’

‘உனக்கு என்ன விருப்பமோ அதை நீயே செய்துகொள், ஒத்துவரவில்லை விட்டுவிடு’ என்று வேதாத்திரி பதிலளிக்கிறார்.

இப்படியாக, உண்மையை அறிந்து உணராமல், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், வெளி தோற்றத்தில் தன்னை, யோகியாக காட்டும் நபர் எப்போதுமே உண்டுதான். உண்மையான யோகிக்கு கிடைக்கும் மரியாதையை, தானும் பெற விரும்பி, இப்படி வேடமிட்டுக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் மக்களிடம், பணமும் பொருளும் பெற்று, தன்னை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் நிகழ, இப்படியான போலியான யோகிகளைதான் மக்களும் நம்புகிறார்கள் என்பதும் உண்மை. ஒரு யோகி, தன்னுடைய தோற்றத்தில், இப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது ஒரு நடைமுறை பழக்கமே அன்றி, கட்டாயமில்லை.

பெரும்பாலான யோகிகள், காவியும், பச்சையும், ஆரஞ்சு, மஞ்சள் துண்டு, தாடி, மீசை, ஜடாமுடி என்று இருப்பார்கள். கையில் நுகத்தடியும், கமண்டலமும் கூட உண்டு. புலித்தோல், நம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், அது இல்லை. ஆனால், வேதாத்திரி மகரிஷி இதற்கு மாறாக, வெள்ளை குர்தா, பஞ்சகட்சம் வேஷ்டி,  காவி துண்டு என்றுதான் அமைத்துக் கொண்டார். தாடி மீசை இயல்பாக அமைத்து கொண்டார். தான் உணர்ந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் வழியாகவும் தெளிவு செய்தார். விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டினார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின், வான் காந்த தன்னிறைவுக்குப் பிறகு, சில யோகிகள் வேடத்தை ஏற்றுக்கொண்டுதான் வலம் வருகிறார்கள். அவர்களையும், சுவாமிஜி என்றுதான் வேதாத்திரிய அன்பர்களும், மக்களும் அழைக்கிறார்கள். இவர்கள் உண்மையா? போலியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வேதாத்திரி மகரிஷி, சுவாமிஜி என்பதை விட, ஐயா என்று அழைப்பதை விரும்பினார் என்பதும் உண்மை. தன்னை அருட்தந்தை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொண்டார். விருப்பு வெறுப்பு ஏதுமில்லாத அரவணைப்பும், திருத்துதலும், கண்டிப்பும், பாதுகாப்பும், உயர்வு தருவதும் தந்தையின் பண்புகள் தானே!

இந்த போலியான யோகிகளை மக்கள் ஏற்பது, பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இன்றும், இப்போதும் உண்டுதான். எனினும், தன் காலத்திலேயே, மக்களின் அறிவு வளர்ச்சி மாறிவருகிறது. யோகிகளை அடையாளம் காண்பதில், மக்கள் நிலை இப்படி மாறியுள்ளது என்று அவரே விளக்க்குகிறார். ‘அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.'

‘யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.’

‘தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது. இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.’என்பதாக,  அருட்தந்தை வேதாத்திரி மகரிசி தெளிவு செய்கிறார்.

ஆனால், மக்களின் சுய சிந்தனையும், ஆராய்ச்சியும் அற்ற நிலையில், தோற்றத்திற்கு மதிப்புதந்து ஏமாறும் போக்கு மாறவில்லை என்பது உண்மையே. ஒரு பைத்தியக்காரரைக்கூட சித்தர் என்று சொல்லும் கூட்டமும், மதிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அதுபோல, காவியும், தாடியும், ஜாடாமுடியும் இருந்தாலே, இவர் யோகி என்று மதித்து, கைகட்டி, காலில் விழும் கூட்டமும் நம்மிடையே உண்டு. இதற்கு வழி, காலமும், அதுதரும் அனுபவமும் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

-

Why today spiritual world is crowed by Masters?


மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா? 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா?


பதில்: 

ஒருவகையில், இப்போதைய சூழல், நீங்கள் சொல்வதைபோலத்தான் இருக்கிறது. ஒருவகையிலி இது நல்லதுதான். அந்த அளவிற்கு, நம் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நம்பிக்கை அளிக்கக்கூடிய அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் தேவை சராசரி மக்களுக்கு உதவவும் கூடும் என்பது உண்மைதானே? இதில் சிக்கல் என்னவென்றால், எது சரியானது? என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.

பொதுவாகவே, நாம் விளம்பரங்களால் கவரப்படுவோம். விளக்கின் நெருப்பை, ஒளியென்று கருதி தேடிச்செல்லும் விட்டில் பூச்சிகள் போலவே. அதில் தப்பி வரவும் பெரும் முயற்சி தேவைப்படும். என்னுடைய அனுபவத்தில், ஒரு அன்பர் சொன்னதை அப்படியே தருகிறேன். அந்த அன்பர், தன்னுடைய பள்ளிக் காலங்கங்களியே, கடவுள், தெய்வம், இறைவன் என்பதில் நல்ல தெளிவான விளக்கம் பெற்றிருக்கிறார். கோவிலுக்கும், ஆலயங்களுக்கும் சென்று, வழிபட்டு கேட்டால் மட்டும் எதுவும் கிடைத்துவிடாது என்ற கருத்தில், உண்மையாக இருந்திருக்கிறார். அதை பிறரிடம் சொல்லியும் இருக்கிறார். ஆனால், இறை என்ற ஒன்று இருக்கிறது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதை நம்புகிறார். பகுத்தறிவு வாதம் என்று சொல்லி, இல்லவே இல்லை என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இறையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த வேண்டுதல், வழிபாடு, கொண்டாட்டம், திருவிழா இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அவசியமில்லை என்பது அவரின் சொந்தக் கருத்து.

இந்த நிலையில், விவேகானந்தர், அவரின் குரு ராமகிருஷ்ணர், சாரதாதேவி அம்மையார் இப்படி பலரின் யோக வாழ்வையும் படித்தும், சொல்லக்கேட்டும் அறிந்துகொள்கிறார். இந்த வரிசையில், பல யோகிகளையும், மகான்களையும் அறிகிறார். நம்முடைய குரு வேதாத்திரி மகரிஷியையும் கூட. ஆனால் உடனடியாக ஏற்கவில்லை. பத்தோடு பதினொன்றான போலிச்சாமியாரா? என்று ஆராய்கிறார். சிலரிடம் கேட்டும் தெரிந்து கொள்கிறார். வேதாத்திரி மகரிஷி எழுதிய நூல்களையும் வாசிக்கிறார். நல்ல ஆராய்ச்சி முடிவுக்குப் பிறகுதான், சரி அவரின் அமைப்புக்கு போய்தான் பார்க்கலாமே? என்று ஒருநாள், மனவளக்கலை வகுப்புக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையின், அடிப்படையில்தான், அங்கே உறுப்பினராக, அதுவும் உடனடியாக சேர்ந்து உயர்ந்திருக்கிறார்.

இப்படியான தெளிவான பார்வை, ஒவ்வொரு அன்பருக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். இவர் சொன்னார், அவர் சொன்னார், இவர் இணைந்துவிட்டார், அவர் இணைந்துவிட்டார் என்று நாமும் சிக்கிக் கொள்ள அவசியமும் இல்லை. உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லுகிறது? என்பதை நிதானித்து பிறகு முடிவு செய்யுங்கள். ஆன்மீகம் சொல்லுகிறேன் பேர்வழி என்று, இந்த வழவழா குளகுளா என்று கிராமங்களில் சொல்லிவார்களே அதுபோல, வழுக்கி தப்பிக்கிற ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளாத தெளிவு வேண்டும். உங்கள் முடிவே சரியானது.

ஒரு கேள்விக்கும், விளக்கத்திற்கும், மூன்று நிமிடத்திற்கு மேல், விசயத்திற்கு வராமல், எதை எதையோ மேற்கோள் காட்டிக்கொண்டே இருந்தால், நீங்கள் அந்த இடத்தில் இருப்பதில் அர்த்தமே இல்லை. இந்த நூலில் அப்படி இருக்கிறது, அந்த நூலில் அப்படி இருக்கிறது, இவர் அப்படி சொல்லியிருக்கிறார், அவர் இப்படி சொல்லி இருக்கிறார். என்று இழுத்துக்கொண்டே போகிற ஆசாமிகளின் கைகளில், நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவர் பிடித்தாலும் கையை எடுத்து விலக்கி விட்டு ஓடி வந்துவிடுங்கள். அவர் அனுபவத்தில் இருந்து, உங்களுக்கான பதிலும், விளக்கமும் தருகிறாரா? என்பது மிக முக்கியமானது. போலியான முகமுடியை போட்டுக்கொண்டு, உங்களை அணுகும் ஆசாமிகளை, இனம் கண்டு கொள்வதில் கவனமாக இருங்கள். அதுபோலவே, எப்போதுபார்த்தாலும் தன் குருவின் புகழ்பாடும் ஆசாமிகளும் பிரச்சனைக்குரியவர்களே! இவர்கள் சொந்தக்கருத்துக்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். உங்களையும் தருவதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.

ஆனாலும், இன்றைய மக்களுக்கு புதிது புதிதாக ஏதேனும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்ற காரணத்தால், புதியது சிறப்பானது என்ற மயக்கம் வந்துவிட்டது. அந்த மயக்கம் அவர்களின் அனுபவத்தாலே விளக்கமாகும். நீங்கள் சிக்கிக் கொள்ளாமல், முன்னதாகவே ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். எனினும், இத்தகைய ஆன்மீக வளர்ச்சியை நான், மனதார பாராட்டுகிறேன். விரும்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-


How imaginary thoughts affected the family and individual?


பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண் ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண், ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?


பதில்:

காதல் காட்சிகளாகிய  படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும்.  காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள். 

அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ  காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும்.  பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்;  நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள்.  

காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக உயர்வாக ஒழுங்காக அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது.   

ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ?   படக்காட்சிக் கவர்ச்சியிலும்  மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் இயற்கையான காதல் நிறைவான இன்பத்தை அளிக்க முடியும்?

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

What is the meaning of twin seven worlds?


பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும்  ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நாம் வசிக்கும் பூமியில் இருந்து சூரியனை நோக்கிய வரிசையில் பூமி, சந்திரன், சுக்கிரன், புதன், சூரியன், ராகு, கேது ஆகிய ஏழு கோள்களின் வரிசை அமையும். இதை மேலேழுலகம் என்றார்கள் முன்னோர்கள்.

பூமியிலிருந்து மறுபக்கம் நோக்கினால் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்சியூன், புளூட்டோ ஆகிய ஆறு கோள்களும் உள்ளன. அதற்கப்பால் சுத்தவெளிதான் உள்ளது என்றெண்ணிய முன்னோர்கள் ஏழாவதாக உள்ளதைப் பாழ்தளம் (பேச்சு வழக்கில் இன்று பாதாளம்) என்றனர். இதைக் கீழேழுலகம் என்றார்கள், இன்றைய விஞ்ஞானக் கூற்றுப்படியும் இவைதான் காணமுடிகிறதே தவிர வேறு மேலேழு, கீழேலுலகங்கள் இல்லை.

மக்களுக்கு மெய்ப்பொருள் உண்மைகளை சொல்லும் வழியில் சில கதைகளை சொல்லிவைத்தார்கள். அந்த கதைகள் பின்னாளில் பலராலும் கட்டுக்கதைகளாகி, நம்முன்னால் வளர்ந்தும், பெருகியும், உண்மையை மறைத்துக்கொண்டும் நிற்கிறது. எதுவென்றாலும் அதில் இருக்கிற உண்மையை ஆராய்ந்து பார்க்கும் விழிப்புணர்வு அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.

How we can identify the true Yogi, Mahan and Gnani?


ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?

பதில்:

வாழும் உலகில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை, தன்னையுணர்ந்த யோகிகள், மகான்கள், ஞானிகள் ஏராளம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம், அவரவர்களுடைய தோற்றங்களையும் மாற்றிவிடும் என்பது உண்மை. கற்காலம் என்ற நிலையை எடுத்துக்கொண்டால், எல்லா மனிதனுமே ஆடையின்றி திரிந்தகாலம் உண்டுதானே? ஆனால் ஐந்தறிவு விலங்கினத்திற்கும், ஆறறிவான தனக்கும் உள்ள வித்தியாசத்தையும், உயர்வையும் அறிந்தபிறகு தன்னை, மனிதன் ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டான். அவரவர்களுக்கு அந்தந்த சூழ்நிலைகள் கொண்டும், செய்கின்ற வேலைகள் கொண்டும், ஆடைகளும் தோற்றங்களும் அமைந்துவிட்டன. காலங்காலமாக அவை மாற்றம் பெற்றுக்கொண்டே வருகின்றன.

எப்படிப்பார்த்தாலும், ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆனால் அவர்களுக்குள்ளாகவே இப்படி இருக்கவேண்டும் என்ற இயல்பான தன்மை உருவாகிவிடும். எந்தவகையிலும், அது உலகை, மக்களை பயமுறுத்துவதாகவே, தனிதன்மை வாய்ந்ததாகவோ, ஏமாற்றுவதாகவோ இருக்காது என்பதே உண்மையாகும்.

அந்தக்கால சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள் ஜடாமுடி என்ற, முடிச்சுமுடிச்சான முடிகள், என்றுமே வாறப்படாத, எண்ணை காணாத தலைமுடி, உயர்த்திக்கட்டிய முடி, அதில் உத்திராட்சம், விரிந்த தலைமுடி என்ற நிலையில் இருந்தார்கள். உடை என்று எடுத்துக்கொண்டால், கோமணம், சிறிய துண்டு, காவி உடை, எப்போதும் ஒரே ஆடை, அழுக்கடைந்த கிழிந்த ஆடை, தலைப்பாகை, உடலை போர்த்திய துணி என்றெல்லாம் உண்டு. இப்போதும் சிலர் அப்படி தோற்றமளிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அந்தக்காலத்தில், ஆடையில்லா நிர்வாணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போதும் சில சமணர்கள் அப்படி இருப்பதை காணமுடிகிறது.

அதுபோலவே, படர்ந்து நீண்ட தாடி, அழுக்கான தோற்றம், பாமரன், ஏழை, பிச்சைக்காரர போன்ற தோற்றத்திலும் இருப்பதுண்டு. ஆனால் இத்தகைய வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு, இவர் தன்னை அறிந்தவர்தான், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தவர்தான் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. பொதுவாகவே சராசரி மக்கள் மத்தியில், இப்படியான தோற்றங்களுக்கு மதிப்பு உண்டு. சிலவேளைகளில், மனநலம் குன்றிய மனிதர்களைக்கூட சித்தர், யோகி, மகான், ஞானி என்று நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். ஒரு பேசமுடியாதவர், தன்னிலை மறந்தவர், பித்துப்பிடித்த நிலையில் இருப்போரையும் போற்றுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்தான், இறைநிலை உணர்ந்தவர் என்றும் நம்புகிறார்கள். இந்த உலகை, பிரபஞ்சத்தை, இயற்கை, மெய்பொருளான உண்மையையும், தன்னையும் அறிந்த ஒருவர், பைத்தியக்காரனாக இருப்பாரா?

என்றைக்கு உலகில், தன் வயிற்றுப்பாட்டுக்கும், மக்களின் ஆதரவைப் பெறவும் ஏமாற்றலாம் என்று சிலர் நினைத்தார்களோ? அன்றைக்கே இதில் போலி உருவாகிவிட்டது. பெரும்பாலும் போலிச்சாமியார், பேசுவது புரியாது. ஏதேனும் பழைமையான நூலை வாசித்து அதில் உள்ளதை அப்படியே சொல்லுவார், அடிக்கடி தன்னை மறைப்பார், மௌன விரதம் என்று பேசா நோன்பு இருந்து, கேள்விகளை தவிர்ப்பார். பூஜை, யாகம் என்று அடிக்கடி மக்கள் சந்திப்பை தூரவைப்பார். அருகில் தன் நம்பிக்கையானவர்களை தவிர வேறு யாரையும் அண்டவிடமாட்டார். இன்னும் நிறைய சொல்லலாம் எனினும், அவர்களை குற்றம் காண்பதும், குறைகாண்பதும் நமது வேலையல்லவே?!

வெறுமையான தோற்றத்திலும், ஆடை அலங்காரத்திலும், தாடி மீசை முடி அமைப்புக்களிலும், சின்னங்களிலும், உருவங்களிலும் ஏமாறாதீர்கள். நேரடியாக, கேள்வி கேளுங்கள். அவராகவே எதையும் மேற்கோள் காட்டாமல், உணர்ந்ததை எளிமையாக, புரியும்படி சொல்லி விளக்குகிறாரா? என்று ஆராயுங்கள். வெறுமனே ஆலோசனை சொல்லுகிறாரா? என்பதையும் அறியுங்கள். பொதுவாகவே யாரையும் சந்தேகக்கண்கொண்டு பார்த்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பழகிக்கொள்வதே நல்லது. சராசரி மக்களில் சிலர், ‘வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக சொல்லுவார்கள். நாம் அப்படியாக இருக்கவேண்டாமே!

வாழ்க வளமுடன்
-

How we can manage who telling always all spiritual persons are fake?


ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு பதில் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு பதில் என்ன?


பதில்:

இதேபோலான கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் தந்திருக்கிறேன் என்றாலும், அவர்கள் அடிக்கடி குறை சொல்லுவதுபோலவே, நாமும் நிறை சொல்லுவது நல்லதுதான். அப்போதாவது அவர்கள் உண்மையை புரிந்துகொள்வார்களா? என்ற ஒரு விருப்பம் தான். ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு, அடிப்படையாக ஒரு கருத்தும், நம்பிக்கையும் இருக்கும். அதிலிருந்து அவர்கள் விலகவே மாட்டார்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வெளிப்பாடை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நினைப்பு இருக்கும். தங்களைத்தவிர மற்ற எல்லோருமே அறிவிலும், செயலிலும், அனுபவத்திலும் குறையுள்ளவர்கள். அவர்களை திருத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். இத்தகைய மனிதர்கூட்டத்தை, சமுதாயத்தை, உலகை திருத்திட வேண்டும் என்று செயல்படுவார்கள்.

ஒருவகையில் இப்படி சொல்லுபவர்கள் பரிதாபமான நிலையில் வாழ்வார்கள் என்று கருதலாம். தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாத ஏழ்மையிலும், எதிலும் சார்பற்ற நிலையிலும் இருப்பார்கள். பொருள்முதல்வாத உலகுக்கு எதிராகவும் இருப்பார்கள். இதனால் பணம்படைத்தவன், பணம் சம்பாதிப்பவன், தொழிலதிபர்கள் ஆகிய எல்லோருமே ‘ஏமாற்றுக்கார்கள்’ என்று கருதுவார். அந்த வரிசையில் இந்த ‘ஆன்மீகவாதிகளையும்’ இணைத்துக்கொள்வார். இங்கே குறிப்பிடுவது எல்லாம் பொதுவான கருத்துக்கள்தானே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்ற விளக்கத்தையும் தந்துவிடுகிறேன். தவறாக கருதிக்கொண்டால், நான் பொறுப்பல்ல.

ஆன்மீகவாதிகள் என்ன செய்கிறார்கள்? மக்களின் அறியாமையை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுவது சரிதான். இந்த மனிதப்பிறவியின் உண்மையை விளக்குகிறார்கள், வாழ்வின் நோக்கத்தை அறியத்தருகிறார்கள். ‘வாழும் பொழுதே, இத்தகைய மாற்றங்களை செய்து, விளக்கம் பெறுக. ஏற்கனவே கோடானகோடி மக்கள் அறியாமல் இறந்துவிட்டார்கள். நீயும் அப்படி செய்துவிடாதே’ என்று அறிவுறுத்துகிறார்கள். இது தவறானதா? என்றாலும்கூட, ஆன்மீகவாதிகளுக்கு கிடைத்த, சமூகத்தின் உயர்ந்த மதிப்பையும், மரியாதையையும், அவர்களிடமிருந்து நன்மையும் பெற, ஏமாற்று ஆன்மீகவாதிகளும் முயன்றார்கள், முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. வெறுமனே அடையாளம் காட்டும் ஆடைகளும், மத ரீதியிலான சின்னங்களும் அணிந்துகொண்டு, நீண்ட தாடியும், முடியும் வளர்த்துக்கொண்டு, தனக்குப்பின்னால் சில நபர்களை சீடர்களாக வைத்துக்கொண்டு, யாருக்கும் புரியாமல் பேசுபவர்களையும், மௌனவிரதமாக ஆசீர்வாதம் மட்டுமே செய்பவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உண்மைத்தேடும் ‘சராசரி மக்கள்’ ஆராய்ந்து பார்த்து அல்லவா இவர்களை நாட வேண்டும்? தானாகவே போய் உண்மையறியாது சிக்கிக் கொண்டால், பொருள், பணத்தை இழந்தால், அது யாருடைய தவறு?

ஒரு உண்மையை சொல்லட்டுமா? சாரசரி மக்களை திருத்த வேண்டும் என்ற கட்டாயம், எந்த ஒரு ஆன்மீக ஞானிக்கும், மகானும், யோகிக்கும் கிடையாது. எண்ணற்றவர்கள் இந்த உலகை கண்டும் காணாமல், தன்னளவில் வாழ்ந்துவருவதை நாம் அறிவோம். ஆனால், இயற்கையும், இறையாற்றலும் அவர்களை சும்மா விடுவதில்லை. 'மக்களுக்கு உதவுக' என்று அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கும். அந்தநிலையில்தான் அவர்கள், தன்னுடைய கருத்துக்களை, போதனைகளை, பயிற்சிகளை தருகிறார்கள். நிச்சயமாக, உண்மையான ஞானிகளும், மகான்களும், யோகிகளும் யாரையும், எவரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்பது நிச்சயம்.

அப்படியிருக்கின்ற நிலையில், போலியான ஆன்மீகவாதிகளிடம் சிக்கிக்கொள்பவர்களை என்ன சொல்லுவது? யாரோ ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால், மொத்தமாக எல்லாருமே ‘ஏமாற்றுப்பேர்வழிகள்’என்று முடிவுகட்டிவிடுவது சோகம். இழப்பு ஏற்படுவது ஆன்மீகவாதிகளுக்கு அல்ல, சராசரி மக்களுக்கும், அப்படியாக உண்மையறியாது ஒதுக்கிவிடுபவர்களுக்கும்தான்.

முக்கியமாக, இப்படி ஆன்மீகவாதிகளை குறை சொல்லுபவர்கள், அவர்களவில் ஏமாந்திருப்பார்கள், மற்றவர்கள் சொன்னதை ஏற்று கருத்தாக சொல்லுவார்கள். ஆனால் உண்மை ஆன்மீகவாதிகளின் வழியாக, நன்மை பெற்றவர்களின் கருத்துக்களை அறிந்தார்களா? என்பது ஐயமே. அவை குறித்த உண்மைகளையும், விளக்கங்களையும் அறிந்திருந்தால், தங்களின் கருத்தை தானாகவே மாற்றிக்கொண்டிருப்பார்கள் தானே? 

எப்போதுமே, உங்களுக்கு அருகில் இருக்கும், ஆன்மீகவாதி யாராக இருந்தாலும், அவரின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்யுங்கள். அவரோடு கலந்துரையாடுங்கள். DEBATE என்று சொல்லக்கூடிய நேருக்கு நேரான கருத்துப்பரிமாற்றம் செய்து உண்மை அறிய முயற்சியுங்கள். அதில் அவர் தோல்வி கண்டால், ‘இவர் ஏமாற்று ஆன்மீகவாதி’ என்று உங்களைச்சுற்றி அல்ல, இந்த ஊரிலும், நாட்டிலும் மட்டுமல்ல, உலகெங்குமே பரப்புரை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்

-



How to counter the general notion that devotion and spirituality deceive people?


பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


பதில்:

உண்மையிலேயே பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோலவே பொதுத்தன்மையான கருத்தாக மக்களிடம் பரவியும் உள்ளது. இன்னமும் கூடுதலாக, மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களின் பணத்தையும் பறிக்கிறது என்று சொல்லுகிறார்கள். எப்படி? அதிகவட்டிக்கும், மறைமுகமான இருமடங்கு லாபத்திற்கும், ஏதெனும் ஒரு போலியான நிதி நிறுவனத்தை நம்பி, பெரும் முதலீடு செய்து மக்கள் ஏமாந்து நிற்பதை விட அதிகமாகவா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பக்தியும் ஆன்மீகமும் ஏதோ ஒரு மதத்தில் மட்டுமே, ஏமாற்றுவதாகவும், பணத்தை பிடுங்குவதாகவும் பிரச்சாரம் நிறைந்துவிட்டது சோகமானதே. இதனாலேயே பக்தியும் இல்லை, ஆன்மிகமும் இல்லை, கடவுளும் இல்லை (அதாவது குறிப்பிட்ட வகையிலான மதத்தில் மட்டுமே) என்று சொல்லி வளர்ந்தும் வளர்த்தும் வருகிறார்கள். ஆனால் நாம் எந்த மதத்தையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் குறையாக பார்க்கவில்லை, அது குறித்து தனியாக அடையாளம் காட்டப்படுவதும் இல்லை. நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் விளக்கங்களை தரவேண்டியது உள்ளதே?!

பக்தி என்பது, பிறந்தது முதல் பருவத்திற்கு வரும் வயதுவரை எல்லோருக்குமே அவசியம். அது இந்த இயற்கையை, தெய்வீகமாக கருதி அதற்கு மதிப்பு தந்து அதற்கு முரண்பாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவும், கட உள் என்ற தன்மைக்கு நம்மை தயார் செய்வதற்காகவுமே சித்தர்களாலும், அறிவார்ந்த முன்னோர்களாலும், ஞானிகளாலும் வழங்கப்பட்டது. பருவம் நிறைந்து விட்டால், அந்த பக்தியில் இருக்கும் உண்மையை ‘யோகத்தின் வழியே’ அறிந்துகொள்ளவும் வழிவகை செய்திருந்தார்கள். இதுதான் சிதைந்துபோய், வழிபாடாகவும், சடங்காகவும் உண்மையை மறைத்துக்கொண்டு நிற்கிறது. இந்த சிதைவை திருத்திட வழிகாணாமல், அதில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்ளாமல், மொத்தமுமே தவறு கருவது பெரும்பாலான மக்களின் அறியாமை தான்.

ஆன்மீகம் என்பது பக்தி என்பதிலிருந்து வேறுபட்டது. பக்தியிலிருந்து உண்மையை நோக்கி நகரும் பாதை என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை புரிந்துகொண்டால், யோகம் என்பது என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்கால ஆன்மீகம், பக்தியைத்தான் பிடித்துக்கொண்டு நகர்கிறது. ஆன்மீகமும் பக்தியும் ஒன்றுதான் என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இந்த பணத்தை பிடுங்குவதில் பக்தி, பல ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிவிட்டது. அது ஓரளவில் உண்மைதான். எனினும் அதை எளிதாக கண்டு விலக்கிவிடவும் முடியும். ஆனால் ஆன்மீகமும் பணத்தை பிடுங்குகிறது, பறிக்கிறது, ஏமாற்றுகிறது என்பது சோகம். உண்மையான ஆன்மீகம் எது என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் பயணித்து, உண்மையறிந்து ‘யோகத்திற்குள்’ நுழையவேண்டும். யோகமே உங்கள் பிறப்பின் ரகசியத்தையும், நோக்கத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் உங்களுக்கு அறியத்தரும்.

இதன்படி, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை கொண்டவர்களுக்கு, அதை ஆழ்ந்து பார்த்து, உண்மையை அறிந்து கொள்ளக்கூடிய வழியை சொல்லித்தந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

How we can avoid and escape the fake Godman in this modern world?


இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?

பதில்:
நல்லதாக, எல்லோருக்கும் பயன்படும் ஒரு பதிலுக்கான கேள்விதான். இந்த கேள்வியில் நீங்கள் அறியாமலேயே, இத்தகைய நபர்களின் நோக்கத்தையும் சொல்லிவிட்டீர்கள். போலியான இறைத் தத்துவ விற்பனர்கள் என்று. இந்த விற்பனர்களின் நோக்கம் உங்களிடமிருந்து எதைதோ, அவர்களுக்கு சாதகாமான ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இது இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல, ஞானியர்களுக்கும், யோகியர்களும், மகான்களுக்கும் கிடைத்த மரியாதையை பெறுவதற்கு தாங்களும் முயற்சிசெய்தும் மக்களை ஏமாற்றியவர்கள் அந்தக்காலத்திலும் உண்டுதான். இப்படியான போலிகளிடம் ஏமாற்றம் அடைந்து உங்களிடமிருந்தோ, மற்ற மனிதர்களிடமிருந்தோ பணம் போனால் கூட பரவாயில்லை, மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மனம் போனால்? அது சிதைந்து விடுமே?!

இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது, உண்மையான இறைத்தத்துவம் வழங்கும் இறையுணர்ந்தவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் உண்டு. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். இந்த இறைத் தத்துவத்தை, மற்றவர்களுக்கு வார்த்தைகளால் செயல்படுத்த, விளக்கிச் சொல்ல முடியாதவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மற்றும் இன்னும் பலர், இதை மக்களிடம் எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் ஆர்வம் கொண்டு பயிற்சி திட்டமாகவும் வழங்குகிறார்கள், வேதாத்திரியம் அப்படியான பயிற்சி முறைதானே!

அப்படியான பயிற்சிக்கும், கற்றுக்கொள்ளலுக்கும் ஒரு இணைப்பு பாலமாக, பொறுப்புணர்ந்து செயல்படவும், கைவிடாது தொடரவும், உறுதி கொள்ளவும், கட்டணம் செலுத்தும்படியான நிலை இருக்கிறது.

இலவசம், கட்டமில்லா நிலை, சேவை என்றால் உங்கள் மனமே அந்த, தத்துவத்தை, இறையுண்மையை, விளக்கத்தை, ஒழுங்கமைப்பை, உறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் செய்துவிடும்.

சும்மா கொடுத்த மருந்து வேலை செய்யுமா? என்று ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இந்தவித, தற்போதைய உலக இயல்பை, அந்த போலியான விற்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அப்படி போலியானவர்களாக காண்பது ஒரு நோய். அப்படி இருக்கக்கூடாது. அந்த நபர், விற்பனர் என்ன சொல்லுகிறார்? அனுபவம் பெற்றவரா? இதுவரை அவரின் பதிவுகள் எப்படி இருக்கின்றன? அவரின் வாழ்க்கைமுறை என்ன? எப்படி நேரில் பழகிக் கொள்கிறார்? ஒரு உண்மையை விளக்கத்தை எப்படி புரியவைக்கிறார்? கதையளக்கிறாரா? எளிமையாக சொல்லுகிறாரா? நேரத்தை கடத்துகிறாரா? குழப்புகிறாரா? இதையும் செய், அதையும் செய் என்று ஓட்டுகிறாரா? எல்லாவற்றை விட்டுவிடு என்கிறாரா? சொந்த அனுபவத்தை சொல்லுகிறாரா? யாரோ சொன்னதை சொல்லுகிறாரா? கதையாக கலவையாக கலந்தடிக்கிறாரா? தீர்மானமாக இதுதான் என்று உறுதியாக சொல்லுகிறாரா? என்று பலவாறாக கேள்விகள் கேட்டு அதற்கு பதிலை பெற்றபிறகுதான், அவரின் தன்மை தெரியவரும். அதுவரையிலும் அவரை போலி என்றுகூட சொல்லாதிருங்கள்!

ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த விற்பனரை புரிந்து கொள்வதற்காகவே, உங்களுடைய காலம் கொஞ்சம் வீணாகும் என்பதுதான். ஆனால் வேறுவழியில்லை. ஒருவேளை அவர் சிறப்பானவராக இருந்தால் அது உங்களுக்கு உதவும் கூடுமே?! இனி உங்கள் முடிவுதான்!
வாழ்க வளமுடன்.
-

How can fix fake people in the spiritual and yoga?


ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?

பதில்:
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், இந்தக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நிறைந்து இருக்கக் கூடியவர்கள்தான். நெல் விதைத்தால் நெல்லும் விளையும், புல்லும் விளையும், களையும் விளையும் என்று விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்குத் தெரியும். விளைச்சல் காலத்தின் முடிவில், களைகள் அவ்வப்பொழுது களைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. விவசாயிக்கு என்ன தேவையோ அதை அவன் எடுத்துக் கொள்கிறான். நெற்கதிரை அறுத்து, அடித்து, நெல்லை பிரித்து, தனித்து வைத்துக் கொள்கிறான். நெல்லில் இருந்து அரிசி நமக்கு உணவாகிறாது. நெல்லின் உதிரிகள் பறவைகளுக்கு உணவாகிறது. கதிர்கள் விலங்கினங்களுக்கு உணவாகிறது.

அதுபோலவே இந்த உலகில், மனிதன் வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வாழ்வில் தேவைகளும் நிறைய இருக்கின்றன. ஒரு தன் உடல்பலம், வலிமை, இவற்றைக்கொண்டு உழைக்கிறார், பலன் பெறுகிறார். சிலர் அதன் அறிவை பயன்படுத்தி, அதன் வழியாக நன்மை பெறுகிறார். இன்னும் சிலர், இவர்கள் செய்வதைப்போல செய்து, அவர்களைப்போல நடித்து, அவர்களைச் சார்ந்து, அவர்களை ஏமாற்றி பிழைக்க தயாராகிறார்.

நமக்கு என்ன தேவை என்றால், யார் உண்மையானவர்? என்று ஆராய்ந்து, பிறகு அந்த நட்பை, பலனை பெறுவதுதான் முக்கியம். சிலவேளை நடிப்பு, உண்மையை விட உயர்ந்ததாகவும் இருக்கும். அந்த ஏமாற்று வித்தையை நாம் அடையாளம் கண்டுகொள்ள பழகவேண்டும்.

இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டாலும், நாம் அவரை திருத்தவோ, தண்டணை வழங்கவோ, பெற்றுத்தரவோ அவசியமில்லை. நாம் அந்த நபரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டால் போதுமானது. திருத்தத்தை காலம் பார்த்துக்கொள்ளும் என்பதால் நாம் வருந்தவேண்டியதில்லை. நீங்கள் அவரிடம் சிக்கி வருந்தாமல் கவனமாக இருந்தால் போதுமே.

இப்படி ஒவ்வொருவரும், ஆன்மீகத்திலும், யோகத்திலும், போலியான நபர்களை, ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு விலகிவிடவேண்டும். அவர்களை அடையாளம் காண பழகிக் கொள்ளவேண்டும். நம்முடைய அறிவு அவர்கள் வசம் சிக்கிவிடக்கூடாது. உங்களிடம் இருக்கும் பெரும் பொருள், பெரும் பணம் சிக்கிவிடக்கூடாது.

ஆனால், உண்மையானவரையும் போலி என்று கருதிவிடாத, ஒதுக்கித் தள்ளிவிடாது, ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு வேண்டியதும் அவசியம்!
வாழ்க வளமுடன்.
-

Is there any the truth-realizer living today with us?


இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா?


பதில்:

இது என்ன விளையாட்டுத்தனமான கேள்வி?! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், சொல்லும்பொழுது, ‘இறைநிலை உணர்ந்தவர்கள், உலகெங்கிலும் உண்டு. ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்’என்கிறார். இதுதான் இந்த உலகில் எப்போதும் இருக்கின்ற நிலைமை. 

நமக்குத்தெரிந்து, சில மகான், ஞானி, உண்மையறிந்தோர் குறிப்பிட்ட தோற்றத்திலும் இருப்பார்கள். உதாரணமாக, என்றுமே ஒழுங்குசெய்யாத தாடி, மீசை, வாறப்படாத தலை, சிக்கல்பிடித்த தலைமுடி, அழுக்கான பழைய ஆடைகள் என்பதாக இருப்பார்கள். ஒரு சிலர் நம் பார்வைக்கு, புத்திசுவாதினம் அற்றவராகவும் இருப்பார்கள். பேசவும் மாட்டார்கள், அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக்கொண்டே நகர்வார்கள். சிலர் தன்னை சுதந்திரமாக வைத்துக்கொண்டு கிடைத்ததை, யாரேனும் தருவதை சாப்பிட்டு காலம் நகர்த்துவார்கள். அவர்கள் குறித்த உண்மை அறிந்தவர்கள் அவரையும் வணங்குவார்கள். இவர்களுக்கு கிடைக்கின்ற இந்த மதிப்பை அறிந்துதான், ‘போலிச்சாமியார்கள்’ உருவாகிறார்கள்.

தன்னுடைய யோக சாதனையில், தன்னையறிந்து, இறையுணர்ந்து, அதை மக்களுக்கும் சொல்லித்தந்து, அவர்களையும் உயர்த்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள்தான் குருவாக மலர்கிறார்கள். இவர்களைக்கூட போலி என்றே நீங்களும் மற்றவர்களும் நினைக்கத்தோன்றும். ஏனென்றால், பொதுவாகவே தன்னை அறிந்தவர்களுக்கும், இறையுணர்வு பெற்றவர்களுக்கும் எந்தஒரு அடையாளமும் இல்லை. அதை அவரவர் தன்னுடைய அறிவால்தான் அறிந்துகொள்ள முடியும். இங்கேதான் சிக்கல் உங்களுக்கும் மற்றவர்களுக்கும். உண்மை, பொய் என்பதை ஆராய்ந்துதான் கண்டுகொள்ள முடியும். வெளித்தோற்றத்தில் ஏமாறவும் கூடாது! அதே நிலையில் யாரையும் உதாசீனப்படுத்தவும் கூடாது. நீங்கள் உதாசீனம் செய்தவர் உண்மையான ஞானி, குரு என்ற நிலையில் இருக்கவும் முடியுமே?!

தன்னை அறிந்தவர்கள், இறையுணர்வு பெற்றவர்கள், இதை அவர்களே சொல்லவும் மாட்டார்கள். ஒருவர் தன்னை, ‘இறையுணர்வு பெற்றவன்’என்று சொல்லுகிறார் என்றால், நீங்கள் உடனே ‘அப்படியானால், இன்று மழைபெய்யுமா? வெயிலடிக்குமா? எனக்கு லட்ச ரூபாய் பணம் கிடைக்குமா? என்னை உடனே பணக்காரனாக மாற்ற முடியுமா?’ என்று தானே கேட்பீர்கள். ஒருவேளை இதற்கான பதிலை போலிச்சாமியார் தரமுடியும், எதற்காக? உங்களிமிருந்து பணம், பொருள் பறிப்பதற்காக!

எனவே முடிவாக, இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அதை நீங்களேதான் தேடிக் கண்டு பிடிக்கவேண்டும். 

வாழ்க வளமுடன்.

-

Why there is scarcity always and no fulfillment in our earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில், பற்றாக்குறையாகவே, நிறைவே இல்லாமலேயே இருக்கிறதே ஏன்?


பதில்:

நம்முடைய பாரம்பரியமான இந்தியநாட்டில் இதற்கு நீண்டகாலமாலவே பதில் இருக்கிறது. இந்தியாவை இந்த உலக நாடுகள் ஆன்மீக நாடாகவும், ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும் நினைக்கின்றன. ஓவ்வொருவரும், இந்தியா வந்தால், ஏதேனும் ஒரு உண்மையான ஞானி, மகான், சாது, யோகி  தங்களுக்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் நாம்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை உதாசீனம் செய்து வந்திருக்கிறோம். இன்றும் உதாசீனம் செய்துவருகிறோம். அது என்ன பதில்?

உலகில் பிறந்த மனிதரின் நோக்கம், பொய்யான, நிலையில்லாத இந்த வாழ்க்கையில், தன்னுடைய உண்மையை தேடுவது ஆகும். ஆனால் இதைச்சொன்னால் ‘இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, இது ஏமாற்று வேலை’ என்று முடிவுகட்டிட ஒரு தலைவர் வருவார். அவரின் அரைகுறையான சொல்லைக்கேட்டு பின்னால் செல்ல பெரும்மக்களும் தயாராவார்கள். இது ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. யாருமே உண்மை எது? என்று ஆராய்ந்து பார்க்க தயாரில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமூகவாழ்வில், ஒருவர் தவறு செய்தால், அந்த சமூகமே குற்றவாளி என்று மொத்தமாக முடிவு கட்டிடத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆன்மீகத்தில் இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு மொத்தமான் ஆன்மீகமே பொய் என்றால் எப்படி?!

ஏன் ஆன்மீகத்தில் ஏமாற்றுபேர்வழிகள் உருவாகின்றனர்?! உலக வாழ்வில் தன்னையும் இயற்கையையும் உணர்ந்தவரையும், மெய்ப்பொருள் உண்மையை அறிந்தவரையும் நாம் ஞானி, மகான் என்று அழைக்கிறோம். அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம். கைகூப்பி வணங்கிடவும் செய்கிறோம் அல்லவே? இதைப்பார்க்கிற ஒரு ‘திருடனுக்கும்’ நாமும் இப்படி ஆகிவிடலாமே, மக்கள் என்னையும் வணங்கி, பொன்னும் பொருளும் தந்து காப்பார்களே! என்று நினைத்து ஒரு ஞானி, மகான் போல வேடம் தரித்துக் கொள்கிறான். இந்தமாதிரியான கபட வேடதாரிகள் தான் ஆன்மீகத்தை கெடுக்கிறார்கள். இவர்களால்தான் உண்மை சிதைகிறது!

உங்கள் வாழ்வில் பற்றாக்குறை இருப்பதும், நிறைவே இல்லாத மன நிலையும் இருக்கிறது என்றால், உங்களுடைய மனதின் தேடல் அது அல்ல! நீங்கள் தேடி அடைவதை அது விரும்புவதும் இல்லை. மனம் அதனுடைய இயல்பில், தன்னுடைய மூலத்தை அடைய விரும்புகிறது. ஆனால் அந்த மனதிற்கு உங்களிடம் கேட்கத்தெரியவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், இதுவா, அதுவா, என்று மனதை திருப்திப்படுத்த எல்லாவற்றையும் பெற முயற்சிக்கிறீர்கள். போராடுகிறீர்கள். மனமும் அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்தபிறகு மனம் ‘நான் கேட்டது இது இல்லையே?!’ என்று சொல்லிவிடுகிறது. இதுதான் தினமும் உங்களுக்கு நிழந்துகொண்டே இருக்கிறது. அப்படியானால் இதற்கு ஒரு தீர்வு என்ன? ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள். ‘உண்மையாக இந்த மனம் விரும்புவது என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கு விடை கண்டுபிடியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why astrologers mostly failed on the foretelling?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?


பதில்:

அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால்,  அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.

இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.

சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.

இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை  தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ  நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!

முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்.

Are you feared because someone has teased your face and by comment? Is that true?!


உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!

[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]


பதில்:

என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்

இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன். 

மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?

இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.

இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள்  முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!

எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.

சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!

மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!

இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது. 

சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!

நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன். 

உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும்,  என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.

Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன். 

After does good, had more problems, so Karma is fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?


பதில்:

உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும். 

முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை  வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி? 

அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.

எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.

வாழ்க வளமுடன்.