Home » Posts filed under clearence
If repentance is the basis of yoga, then there is no need for yoga at all?
December 05, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொதுவாக பார்த்தால் திருந்தி வாழ்வதுதான் யோகத்தின் அடிப்படி என்றால், யோகம் தேவையே இல்லையே?!
பதில்:
நீங்கள் மிக நன்றாக, ஆனால் குறுக்குவழியில் யோசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஒரு வகையில் நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் திருந்தி வாழ்வது என்பது சும்மா கிடைத்துவிடாது, திருத்தி வாழவும் முயற்சிக்க வேண்டுமே?! இந்த திருந்தி, திருத்தி என்ற இரண்டுக்கும் உள்ள அர்தத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள். திருந்தி என்பது இருப்பதை அப்படியே வைத்துக்கொண்டு திருத்தமாக வாழ்வது என்று தெரியவரும், ஆனால் திருத்தி என்பது இருப்பதை அடியோடு மாற்றியமைத்து முற்றிலும் புதிதாக வாழ்வது என்று தெரியவரும். இப்போது உங்களுக்கே தெரியும் எது சிறந்தது என்று? சரிதானா?
இப்போது உங்கள் வீட்டில் பழைய, அந்தக்கால பித்தளை பாத்திரங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம் பெரும்பாலும் எவர்சில்வர் என்பதுதான் பயன்பாடாக இருக்கிறது. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன. எனினும் ஓர் உதாரணத்திற்காக இங்கே காணலாம். பழைய பாத்திரங்கள் அளவில் பெரியதாகவும், வடிவமற்றும் இருக்கலாம். பயன்படுத்தாமல் போய் வீட்டில் பரணில் மூட்டை போட்டு கட்டிவைத்திருப்பார்கள். அவற்றை இன்று எடுத்துப்பார்த்தால் அழுக்காக, கருப்படைந்து இருக்கும் என்பது உண்மை.
அவற்றை கொஞ்சம், சமையலுக்கு பயன்படும் புளியை கரைத்த நீரில் கழுவினால், அந்த பித்தளை பாத்திரங்கள் அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும். இப்போதைய பயன்பாட்டிற்கு வரலாம். ஆனால் யாராது தூக்கி இறக்கி வைக்க முடியுமா? கடினம். இப்போது இந்த பித்தளையை இழக்க மனமில்லை. ஆனால் பயன்பாடு கடினமாக இருக்கிறது என்றால், அதை ஏதேனும் நிறுவனத்தில் கொடுத்து உருக்கி, உங்களுக்கு தேவையான பாத்திரமாக, தெய்வ உருவங்களாக, கலைப் பொருட்களாக மாற்றி அமைத்து, உங்கள் வரவேற்ரையில் வைத்து பாராட்டு பெறலாம் அல்லவா?
இந்த உருக்கி மாற்றி புதிதாக உருவாக்குதல் தான் யோகத்தில் நமக்கு நிகழ்கிறது. அதுதான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூலம் அறிய, நான் யார்? என்று பதிலைப் பெற, இயற்கையை அறிந்துகொள்ள, மெய்ப்பொருள் உண்மையை அறியவும் தேவையாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் யோகம் ஏன் தேவைப்படுகிறது? ஏனென்றால் உங்களின் பரம்பரையில் இதுவரை யாருமே செய்யாத, விரும்பாத, வாய்ப்பு கிடைக்காத, தவறவிட்ட ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்தக் களங்கள் நீக்கிட வேண்டாமா?!
வாழ்க வளமுடன்.
-
After does good, had more problems, so Karma is fake?
August 04, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?
பதில்:
உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும்.
முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி?
அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.
எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.
வாழ்க வளமுடன்.
Why should I carry someone's karma? Want to solve?
March 26, 2023 Sugumarje
யாருடைய கர்மாவையோ நான் எதற்காக தூக்கி சுமக்கவேண்டும்? தீர்க்கவும் வேண்டும்?
வேதாத்திரியத்தில் ஆழ்ந்து விட்டால் தானாக தெரியக்கூடிய உண்மைகள், வெளிப்பார்வைக்கு பொருத்தமாக இருப்பதில்லை, புரிவதும் இல்லை. முன்னோர்கள் என்னுடைய முன்பிறவி, என்குழந்தைகள் என்னுடைய பிற்பிறவி என்பது, கர்மா என்ற வினைப்பதிவுகளின் அடிப்படையில் சொல்லுவது மட்டுமே. ஒருவர் முன்னாலும் பிறப்பதில்லை, பிற்பாடும் பிறப்பதில்லை. வாழ்வது ஒருமுறை, இறப்பதும் ஒருமுறையே.
ஆனால் கர்மா என்ற வினைப்பதிவு அப்படியல்ல. ஒரு சட்டையில் ஒட்டிய தூசி போல. யார் அதற்கு உரிமையாளரோ அவர் துடைக்கவேண்டும். அல்லது யார் அதை உரிமை கொண்டாடுகிறார்களோ அவர் துடைக்கவேண்டும். இந்த சட்டைதான் நம் உடல், சட்டையின் தூசி கர்மா. யாருமே தனியா வானத்திலிருந்து குதித்து பிறப்பதில்லையே! தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்றால், தாத்தாவின் கர்மா பேரனுக்கு வராமல் போகுமா? வேண்டாம் என்றாலும் இறைநிலை விடாது. (இறையே இல்லை என்றால் இயற்கை என புரிந்துகொள்க)
மேலும், மனிதனின் பிறப்பு ‘நான் யார்?’ என்று அறியவே மலர்ந்தது. அதற்கு தடையாக இருப்பது கர்மா என்ற வினைப்பதிவுகள். அந்த தடையை, ஒருவர் அதை தீர்க்காதவரை, மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி இப்படியே, ‘இந்தா, தீர்க்கப்படாத இந்த கர்மாவை தீர்’ என்று ஒவ்வொரு பிறவியிலும், இறை அல்லது இயற்கை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
எவருடைய கர்மாவோ எனக்கெதற்கு? நான் ஏன் சுமக்கவேண்டும்? தீர்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அது நம் மூளையின் அறிவு சார்ந்தது. ஆனால் கர்மா கருமையம் சார்ந்தது, மூளை மண்ணோடு மண்ணாகலாம், சாம்பலும் ஆகலாம். கருமையம் அப்படியே நகர்ந்து விடும், ஆண், பெண் வித்தின் வழியாக!
நீங்கள் மனம் விரும்பி வைத்திருக்கும் பொருளில், கறை இருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவீர்களா?
கர்மா எனக்கில்லை என்று சொல்லுவதாக இருந்தால், ஏன் உங்கள் நடவடிக்கைகள், உங்களின் முன்னோர்கள் மாதிரி, தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி இருக்கின்றன? உங்கள் சொந்த வழக்க பழக்கங்களை ஏன் நீங்கள் செயல்படுத்துவதில்லை?! கற்றுக் கொள்ளவில்லையா?! கற்றது பதியவில்லையா? செயல்படுத்த முடியவில்லையா?!
இன்னமும் யோசிக்கலாம், ஆராயலாம்! வாழ்க வளமுடன்.


.jpg)