CJ for You: wisdom

wisdom

Showing posts with label wisdom. Show all posts
Showing posts with label wisdom. Show all posts

Did you know Vethathiri Maharshi's explanation of natural consciousness and knowledge what is that the base of Almighty?


இயற்கை உணர்வும், அறிவும், அதன் மூலமான இறை என்பது குறித்தும் வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் எப்படிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?

        இயற்கை உணர்வும், அறிவும் உலகில் வாழும், எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. அது இயற்கையின் கொடையாகவும் அமைந்துள்ளது. வாழும் அந்த வாழ்நாள் முழுவதும், அந்த உணர்வையும், அறிவும் பயன்படுத்திக் கொள்கிறது. நாமும் பயன்படுத்துகிறோம். அதுபோலவே புதிதாக, தன் அனுபவத்தால், மனிதனைத் தவிர மற்ற ஜீவன்கள், கற்றுக் கொள்கிறது.  ஆனால் மனிதனோ தன் ஆறாம் அறிவால், சிந்தித்து தன்னை மேம்படுத்தியும் கொள்கிறான். இதை வேதாத்திரி மகரிஷி எப்படி விளக்குகிறார்? 

உலகில் வாழ்கின்ற காலத்தில், இயற்கை உணர்வானது எல்லா ஜீவராசிகளிடமும் இயல்பாக அமைந்துள்ளது. பிறந்த குழந்தை தன் தாய் மார்பில் கிடத்திக் கொண்டால் பாலை உறிஞ்சிக் குடிக்கக்கூடிய சக்தி பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது. பிறந்த மீன் குஞ்சு அடுத்த கணமே நீந்தத் தொடங்கி விடுகிறது. இதெல்லாம் இயல்பாக வருகிறது. அதற்கு 'Instinct' என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இந்த 'Instinct' என்பதற்கு மேலே 'Intelligence' அறிவுக் கூர்மை உண்டாகிறது.

ஒரு பொருளைத் தொட்டால் சுடுகிறது அல்லது ஓரிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பாதுகாப்பாக ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது. இதுதான் 'Intelligence' என்பது. ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டு நாம் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் முயற்சியே அது.

இந்த “Intelligence” வந்த பிறகு தான் “அறிவு”, 'Knowledge' வந்தது. தன்னுடைய அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழத் தொடங்குவது 'Intelligence'. அதற்கு மேலாகப் பலருடைய அனுபவத்தைத் தன்னுடைய வாழ்வில் கூட்டிக் கொண்டு விரிந்த ஒரு நிலையோடு அறிவை இணைத்துக் கொள்கின்றபோது அதை 'அறிவு' 'Knowledge' என்று சொல்லலாம்.

இந்த 'Collective Knowledge' வந்த பிறகு தான் ஒவ்வொரு பொருளோடும் ஊடுருவி, ஊடுருவி நோக்கவும் தன்னையும் உற்று நோக்கிப் பார்க்கிறபோது தான் 'Intuition' உண்டாகிறது, அதில் இருந்து தான் எல்லாம் வல்ல இறையருள் சிறுகச் சிறுக உயர்ந்து இவனுக்கு வேண்டியது எல்லாம் உள்ளுணர்வில் கிடைக்கின்றன. இது உங்களுக்கு இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. என்றவகையில், பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

Is Blackhole as a Dark matter in the DNA? What is result of the bio-chemical research?


கருந்துளை எனும் கருப்பொருள், உயிர்களின் மரபணுக்களிலும் உள்ளதா? உயிர் வள விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது?

Source from Hashem Al-Ghaili
  

        நாம் வாழும் காலத்தில், விஞ்ஞானம் என்ற Science (அறிவு இயல் அல்ல, விண் அறிவு அல்லது விண் ஞானம் என்பதுதான் சரியானது), பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்திய நாட்டின் ஆதாரமாக, திகழும் மெய்யியலுக்கு காட்சி வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது எனலாம். சிலர் இந்தியாவை, அவர்கள் வணிக ரீதியாக அணுகி, இங்குள்ள பல உண்மை தத்துவங்களை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுவார்கள். அதில் எதோ சில வகையில், உண்மை இருக்கலாம். மதிப்பு வாய்ந்தது என்று எதையேனும் நினைத்தால், எனக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்வது, மனிதனின் இயல்பு. மேலும், அது நம்மிடம் இருக்கும் பொழுது, அவற்றை மதிப்பில்லாததாக வைத்துக் கொண்டதும், நம்முடைய தவறுதானே?

ஆனால், எப்படி ஒரு மனிதனுக்கு, தன்னளவில், அறிவு பல நிலைகளில் இருக்கிறதோ, அதுபோல, பிரபஞ்ச அறிவு என்ற ஒன்று நிலைபெற்றிருக்கிறது. எங்கே? இந்த பிரபஞ்சத்தில்! இந்த பிரபஞ்ச அறிவு, மனித உயிர்களின் அறிவை, தன்னோடு இணைத்துக் கொள்கிறது.  இதனால்தான், ‘நான் நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய்’ என்றும், ‘நான் இதைத்தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், நீ செய்துவிட்டாய்’, என்றும், ‘இதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது, அதை நீ நிறைவேற்றி விட்டாய்’ என்றும் அதிசயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அதனால், இங்கிருந்து, திருடித்தான், அதை இன்னொருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நுணுகி ஆராய்ந்து கொண்டே இருந்தால், சிந்தித்துக்கொண்டே இருந்தால், பிரபஞ்ச அறிவானது, அதற்கான விளக்கத்தை, தூண்டுதலை கொடுத்துக் கொண்டே இருக்கும். மிகச் சரியாக, அதைபற்றிக் கொண்டு உயர்ந்தால், நம் கேள்விக்கான பதிலை, சந்தேகத்துக்கான விளக்கத்தை பெறமுடியும் என்பது உறுதியே. இதெல்லாம் நம்புறமாதிரியாய்யா இருக்கு?! என்று கேள்வி எழுப்புவோருக்கு, இதில் எந்த புனைவும், மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எல்லாம் பொய், கட்டுக்கதை, ஏமாற்றுவித்தை என்போருக்கு, தனியே எந்த விளக்கமும் இல்லை.

இனி, இன்றைய, விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு விளக்கத்தை இங்கே காண்போம். விஞ்ஞானம், மெய்யியலை விரும்புவதும், அணுகுவதும் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே, கருத்துக்கு நிகரான காட்சி, உருவம், வடிவம்  வேண்டும். அப்போதுதான் நம்பும். மெய்யியலை பொய்யியல் என்றுதான் நம்மில் பெரும்பாலோரும் சொல்லுகிறோம் அல்லவா? இந்த விஞ்ஞானம், தனக்கு புரியாத இரண்டு உண்மைகளை, விளக்க முயற்சித்து, தோற்றுக்கொண்டே இருக்கிறது, அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு விருப்பமில்லை, தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்கிறது, இன்னும் நகரும். சரி, அது என்னாய்யா அந்த இரண்டு? அது பொருள் மற்றும் ஆற்றல் (Matter and Power). இரண்டும் இருக்கிறது. ஆனால் அதன் மூலம் நாம் அறியோம் என்று கைவிரிக்கிறது. இன்றைய பதிவு, அந்த விஞ்ஞானம், கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்சிக்கிறது. காண்போம்.

உயிரியல் கருப்பொருள் (Dark Matter) - ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக் குறியீட்டிலும் இருண்ட பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எந்த அளவுகளில் என்றால், நமது முழு மரபணுவிலும், புரதங்களுக்கான டிஎன்ஏ குறியீடுகளில் 1 முதல் 2% மட்டுமே நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 98% மரபணு எதற்கும் குறியிடாது, இடமாக மட்டும் இருக்கிறது. இதை வெறுமை (Emptiness) என்று சொல்லுவார்கள். நான் அறிந்த, அன்பர் ஒருவர், இடமாக இருக்கிறது (Spaceness) என்கிறார்.

இந்த பெரிய அளவிலான, காலி இடமான, மரபணு குறியீடு, டிஎன்ஏவின் டார்க் மேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உயிரியல் இருண்ட பொருளில், குறியீட்டு அல்லாத டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பகுதிகள் அடங்கும். இந்த DNA வரிசைகளின் சரியான செயல்பாடு அல்லது அவை ஏன் நமது மரபணுவில் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. 

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த, இந்த குறியீட்டு அல்லாத டிஎன்ஏ உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அருகிலுள்ள மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன? மற்றும் எந்த வகையான உயிரணுக்களில் இது பாதிக்கிறது? என்பது ஆய்வில் இருக்கிறது.

இந்த இருண்ட பொருளில், ஆயிரக்கணக்கான புரோட்டீன் அல்லாத குறியீட்டு மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவற்றின் செயல்பாடுகள் அல்லது நோய் தாக்கத்தில், அவற்றின் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதர்கள், எலிகள் மற்றும் கோழிகள் போன்ற பல்வேறு உயிரினங்களில், இந்த இருண்ட பொருளின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உருவாகி வருகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மரபணு வரிசைகள் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறியிடப்படாத பகுதியிலிருந்து, இந்த நான்கு மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் நீக்கியபோது, ​​ எலிகளின் மூளையில் அசாதாரணங்களை அவர்கள் கண்டறிந்தனர், டிஎன்ஏவின் இந்த குறியீட்டு அல்லாத, டார்க் மேட்டர் பிரிவில் உள்ள பிறழ்வுகள், அல்சைமர் போன்ற மூளை நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இன்னொரு ஆராய்ச்சியின் முடிவாக, நமது இரைப்பைக் குழாயில் காணப்படும் சுமார் 40% முதல் 50% வரையிலான மரபணு தகவல்கள், எந்த விலங்கு, தாவரம், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது மனிதர்களுக்கு முன்னர் வகைப்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட எந்த வகையான உயிரினங்களுடனும் பொருந்தவில்லை என்று அறியப்படுகிறது.

அன்பர்களே, இந்த ஆராய்ச்சியின் மூலக்கட்டுரை உதவி, Hashem Al-Ghaili. இணையத்தில் கிடைப்பதால், நீங்களும் நேரடியாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி விளக்கங்கள், நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைதானே?

வாழ்க வளமுடன்.

-


If everything has already been provided, is it okay to ask for it?


எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?


கேள்வி

        ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.

        பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?


பதில்

பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.

‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே. 

எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது. 

மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.

இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.

அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’

வாழ்க வளமுடன்.

-

How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-  


How to understand the realization, what got it from the yoga and meditation?


யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?


பதில்:

உலகில் பிறந்து வாழும் ஒரு மனிதனுடைய நோக்கமும், பிறவிக் கடமையும், இந்த தன்னை அறிதல்தான். அதுவன்றி இந்த மனிதப்பிறப்பு முழுமை அடைவதில்லை. அதற்கு யோகமே சிறந்த வழியாகும். யோகத்தில் இணைவது மட்டுமல்லாமல், தியானமும், அதில் ஆர்வம், முயற்சி, ஈடுபாடு, பயிற்சி, ஆராய்ச்சி, தெளிவு என்றவகையில் செயல்பட்டு முடிவாக தன்னிலை விளக்கம் பெறலாம். 

இந்த தன்னிலை விளக்கத்தில், நமக்கு கிடைப்பதென்ன? அறியலாமா? இப்போது, நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா?  என்று கேட்டுக்கொண்டால், இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. 

எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே "நான்" என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் "நான்" என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்றுவரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. 

சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது. 

ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே "நான்" எனப்படுவது. ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்ப பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. 

ஆகவே "நான்" பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவ பரிணாம சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்ப பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்ப பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே "நான்" என்பதாகும். 

அரூப நிலையில் ஏகனாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே "நான்" என்பதாகும்.

தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் என்ற தலைப்பிலான, ஞானக்களஞ்சிய கவிதை வழியாக, விளக்கும் உண்மையையும் அறிவோம்.

'உன்னையோ கடவுளையோ அறிய வென்றால், 

   ஒருகுறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து 

தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும் 

   தனிக்கருணை வடிவான குரு வடைந்தால், 

அன்னை வயிற்றடைந்து உருவாய் உடலாய் வந்த 

   ஆதி கருவைப் புருவத்திடை உணர்த்தப் 

பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க, உந்தன் 

   பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்.'

(ஞானக்களஞ்சியம் கவி: 1460)


வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

The best way and solution for the perfect and complete life!


உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?


பதில்:

ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?

ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?

மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?

உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும். 

மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Is there such a thing as fate? Is it true that wisdom can conquer fate?


விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?


பதில்: 

இதற்கு முன்பாகவும், பலவிதமாக இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் எனினும். மீண்டும் சொல்லுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இங்கே குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களின் கவிதையின் கருத்தாக, எனக்கு கிடைத்த உண்மையைக் கொண்டு விளக்குகிறேன்.

        விதி என்பது இயற்கையின் நியதி ஆகும். நியதி என்பது என்ன? அடிப்படையாக இருப்பது என்று அர்த்தமாகிறது, அப்படியானால் விதி இருக்கிறதா? என்றால் அது நிச்சயமாக இருக்கிறது என்பது ‘அடித்துச் சொல்லக்கூடிய்’ உண்மைதான். ஆனால் அதைபின்பற்றி ‘தலையெழுத்து’ ஒன்று இருக்கிறது. அதன்படிதான் நீ வாழ்வாய் என்றால், நம்பாதீர்கள். விதி உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் தலையெழுத்து என்பது இல்லவே இல்லை.

இந்த விதி எங்கே தொடங்குகிறது? என்று ஒரு கேள்வி எழுந்தால், அது, பஞ்ச பூதத்தின் முதல் பரிணாமத்திலேயே உருவாகிவிட்டதாக, மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். பரமாணுக்களின் கூட்டாக விண் என்ற ஆகாஷ் உருவான பொழுதே, அதனூடாக விதி என்பது அமைந்திருக்கிறது என்கிறார். அந்த விண் மிகமிக விரைவான சுழற்சி கொண்டது. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையில் இருப்பதும் ஆகும். அதனைத் தொடர்ந்த அடுத்த பரிணாமான காற்றையும் நாம் காணமுடிவதில்லை. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத விண் என்ற ஆகாஷ் தான், ஜீவன்களிலும், மனிதரிடத்திலும் ‘உயிர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறது. அதன் உள்ளடக்கமாக தோற்றம், இருப்பு, கலைதல் என்ற மூன்று கட்டமாக விதியை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அது அதனுடைய இயற்கை தன்மையாகவும் உள்ளது. இங்கே விதி என்பதை பார்த்தோம்.

அந்த விதியை கொண்டிருக்கும் உயிர், தன்னுள்ளே, அதன் மையப்புள்ளியிலே அறிவாக, உணரும் ஆற்றலை பெற்றிருக்கிறது அல்லவா? அதுவே மதி என்றும் மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார். (உங்களுக்குப் புரிகிறதா? என்று நான் கேட்கவே மாட்டேன். புரிகிறதா என்று கேட்பவன் விளக்கத்தெரியாத முட்டாள்) இதை இன்னும் விளக்கமாக, எப்படியாக புரிந்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கலாமா? தனக்குள் விதி என்ற இன்று இருப்பதால், அந்த விண் என்ற ஆகாஷ் துகள் நின்றுவிடவில்லை, அழிந்துவிடவில்லை.தனக்குள் அமைந்திருக்கும் அந்த விதியை மீறி, அதனூடாக இருக்கும் மதியின் வழியாக, தன் வாழ்நாளின் தன்மை கருதி, திட்டமிட்டு, அதற்குள்ளாக, தன் காலத்திற்குள்ளாக, பலகோடி துகள்களோடு கூடி, அணுக்களாகவும், தன்னைப்போன்ற பல உயிர்த்துகளோடும் கூடியே,  மூலக்கூறுகளாகவும், தோற்றங்களாகவும், பொருட்களாகவும், ஜீவன்களாகவும், மனிதராகவும் வந்து நிற்கிறதே? அது விதியைக்கடந்த மதியின் செயல் அல்லவா? அதை நாம் ‘பஞ்சபூத நிலையிலேயே’ புரிந்துகொள்ள வேண்டும் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு உணர்த்துகிறார்.

விண் / ஆகாஷ் / உயிர் ஆகிய இத்துகளே, விதியை மதியால் வென்று வெற்றிபெறும் பொழுது, அந்த உயிரைக்கொண்டே உலகில் வாழும் நாம், நம்மை விதியின் கீழ், குறைபட்டுக் கொள்ளலாமா? கவியின் கருத்து வழியாக, சொன்ன இத்தகைய விளக்கம் உங்களுக்கு, உண்மையை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

-

வாழ்க வளமுடன்.

-

Please explain simply the Mukti and Gnana in spirituality?


முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?


பதில்:

எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை (the source of all the forces) அறிவால் அறிந்து வாழ்வில் அமைதி பெறுவதே அறிவில் தெளிவு பெறுவதே முக்தி எனப்படும்.  

விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல் வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் விளக்க வழி வாழ்வே ஞான நெறியாகும்.

வாழ்வில் மனம் தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான்.  உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம் உயிர் மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருக்கின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருள்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் மனவளக்கலையினை அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. 

மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை யோகம் என்றும் ஆராய்ந்த பின் கண்ட விளக்க வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை ஞானம் என்றும் வழங்குகிறோம்  

வாழ்க வளமுடன்.

-

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Why someone reject the truthful and experienced advice?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம் வாழ்க்கையின் ஊடாக, நாம் அறிந்துகொள்ளும் நல்லதைக் கூட பிறருக்கு சொல்லமுடிவதில்லையே? அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லையே? ஏன்?


பதில்:

நல்ல சிந்தனைமிக்க கேள்விதான், அந்த அளவிற்கு நீங்கள் மாற்றம் பெற்றிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த உலகில் நல்லது, சரியானது, அறம் என்பது இதுதான் என்று, இதுவரையில் எத்தனையோ சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், தத்துவாதிகளும், மனிதவாழ்வின் முன்னேற்ற சிந்தனாவாதிகளும், சமூக படைப்பாளிகளும் சொல்லாதது அல்ல. உலகம் முழுவதும், எல்லைகளற்று, ஓவ்வொடு சமூகத்தோடும் இந்த அறம் சார்ந்த, ஒழுக்க பழக்க அறிவுரைகள் மக்களிடையே கலந்துதான் இருக்கிறது. என்றாலும் கூட, எத்தனை மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்று திருந்த்தம் பெற்று வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், இனியும் வாழ்வார்கள் என்று கணக்கெடுத்தால் மிக சொற்பமே மிஞ்சும்!

இதற்கு காரணம் என்ன? அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு எனும் நிலையில், அடுத்தவர் சொல்வதை ஏற்று திருத்தம் பெறும் மனநிலைக்கு மனிதர்கள் வருவதில்லை. ‘இதெல்லாம் உங்களுக்கு சரியாகவருமய்யா, எனக்கு அதெல்லாம் சரிப்படாது’ என்ற சொல்லியே அதை தவிர்த்துவிடுவார்கள். நீங்கள் சொன்னதுபோலவே, உங்கள் வாழ்வின் ஊடாக, வந்த அனுபவத்தின் வாயிலாகத்தானே, நீங்கள் எது நல்லது? என்று தெரிந்துகொண்டீர்கள். அதுபோலவே, பிறமனிதர்களும், தங்கள் வாழ்வின் ஊடாக, பற்பல அனுவங்களுக்குப் பிறகுதான் அதை ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் மனித இயல்பு என்று ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள். வருமுன் காப்பது என்றால், அது மருத்துவத்திற்கு மட்டும்தானா?, மனித வாழ்க்கைக்கு இல்லையா?

மகான் திருவள்ளுவர், 

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும். (குறள் 0535)

என்று குறிப்பிடுகின்றார். இதன்படி, வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான், என்பதாக மு. வரதராசன் அவர்கள் விளக்கம் தருகிறார்.

எனவே, உங்களுக்கு அனுபவமானதைப் போலவே, அவர்களும் அனுபத்தை பெற அனுமதியுங்கள், நீங்கள் முன்கூட்டியே, உங்கள் அனுபவத்தால் சொல்வதை, அவர்கள் ஏற்பது இல்லையே என்று வருந்தாதீர்கள். அதற்கு பதிலாக, குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல, அவர்களை தினமும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி மகிழுங்கள். அந்த வழியில் அவராக மாற்றம் பெற்றிட வாழ்த்து உதவிடும்.

வாழ்க வளமுடன்.

Is mantra and meditation true or fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்ற கருத்தை எப்படி எதிர்கொள்வது?!


பதில்:

இந்த உலகில் வழிவழியாக மனிதனின் அறிவு, இயற்கையாற்றலால் அனுபவமாகி விரிந்துகொண்டே இருக்கிறது. அறிவில் தெளிவும் வந்துகொண்டே உள்ளது. அப்படியாக ஓவ்வொரு மனிதருக்கும் ஏற்கனவே இருந்த நம்பிக்கையும், புதிய கருத்தும், கொள்கையும், அதன் வழி நடத்தலும் வந்துகொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. மனித இனத்தின் வரலாறு அப்படியானது. ஆனால் குறிப்பிட்ட இன்னார்தான் இதை கொண்டுவந்தார் என்று நாம் முடிவு செய்வது சரியாகாது. மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையும், அளவில் பெரிதோ சிறிதோ கணக்கே இல்லை. அதில் கலந்துதான் உள்ளது. 

திருவள்ளுவர் மகான் சொன்னது போல, எண்ணினாலே, நினைத்தாலே போதுமானது, அந்த அறிவு நம்மோடும் கலந்துவிடும். இதனால் வாய்ச்சொல்லாகவோ, எழுத்தாகவோதான் பிறருக்கு பகிர்ந்து, அவர் அறிவில் மாற்றம் தரவேண்டும் என்பது பொய்யாகிவிடுகிறது. 

பிரச்சனை என்னவென்றால், தான் கருதியதை, தன்னுடைய புரிதலை, தன்னுடைய நம்பிக்கையை, வெளி உலகில், பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளும் பொழுது, இப்படி நாம் சிக்கிக் கொள்வது உண்டு. அதாவது நம்முடைய நம்பிக்கையை, இன்னொரு மனிதரின் வார்த்தைகள் சிதறடிக்கும், குழப்பும், சிந்திக்கச் செய்யும், விட்டுவிலவிடவும் உதவும். அப்படியாகவே, மந்திரமும், தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும் மனிதர்கள் நம்மிடையே உண்டு.

முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, அவரவர்களுக்கு அவரவர் கருத்தை சொல்ல இந்த உலகில் இடமுண்டு என்பதை மறவாதீர். அவர் யாராக இருந்தாலும், எதிரியாக, நண்பராக இருந்தாலும் அதை நீங்களோ, நானோ மறுத்துபேச வழியில்லை. அப்படி அவர் பேசினால் அதை அந்த இடத்தில் நாம் மறுப்பதாக இருந்தால், அதற்கான ஆதார செய்திகளை சொல்ல வேண்டும். நிரூபிக்கவும் வேண்டும். அது எப்போதும் இயலாதது. எந்நேரமும் ஆதாரங்களை கைகளில் வைத்திருக்க முடியுமா? எனவே அந்த நேரத்தில் கேட்டு நாம் விலகிவிட வேண்டியதுதான்.

வாழ்க வளமுடன் என்ற வார்த்தையே ஒரு மந்திரம் ஆகும். அதை சொன்னால் வருகின்ற பலன்கள் அளப்பறியது. ஆனால் யாரும் நம்பத்தான் தயாரில்லை. ஒரு மனிதரின் பெயரைச் சொன்னால், அவர் திரும்பிப் பார்க்கிறார்தானே? ஏன் திரும்பவேண்டும்? அந்த பெயருக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. அதுபோலவே மந்திரத்திற்கும், அதன் தேவதா சக்திக்கும், நம் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது. அதை நிரூபணமும் செய்திருக்கிறார்கள். ஒலி அதிர்வுகள் ஏற்படுத்துகின்ற மாற்றம் அது. பிரபஞ்சத்தில் எங்கோ நிகழ்கின்ற, ஈர்ப்பு அலைகளை, இங்கே அறிந்து CERN - European Organization for Nuclear Research விஞ்ஞானிகள் மகிழ்வதும் நாம் அறிந்ததே! 

ஆனால், மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும்பொழுது, அது உண்மையா என்று நமக்குத் தெரியும்தானே? ஒருவேளை உங்களுக்கே அந்த சந்தேகம் இருந்தால், இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, ஆராய்ந்து உண்மை அறியவேண்டும். அதுதான் முக்கியம். இப்படி அவர் சொல்லிவிட்டாரே என்று நீங்கள் வருந்துவதும், அவரை திருத்த முயற்சிப்பதும் வேண்டாம், அது தேவையும் இல்லை. உங்களுக்கு அதன் உண்மை தெரியுமே? பிறகென்ன? அவருக்கு அதில் கிடைத்த அனுபவம் அப்படி இருக்கலாம் அல்லது அதில் இறங்கி உண்மை தெரியாமலேயே அப்படி சொல்லலாம் தானே?! எனவே உண்மை உங்கள்பக்கமாக இருக்கையில், நீங்கள் நிறைவாக, அமைதியாக தொடரலாம்!

வாழ்க வளமுடன்.

What is Gnana in Tamil? How to get it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஞானம் என்பது என்ன? அதை எப்படி பெறுவது?


பதில்:

ஞானம் பெறுதல் எப்படி என்றால், முதலில் உங்களுக்கு என்ன தேவை? எது எனக்கு வேண்டும்? எதில் நான் உயர்வடைய வேண்டும்? என்ற நோக்கமும், சிந்தனையும் வேண்டும். அதை நோக்கியே உங்கள் கவனம் இருக்கவேண்டும். மனம் ஒருமுகம் என்று கூட சொல்லலாம். அத்தகைய ஞானம் என்பதை குண்டலினி யோகத்தின் வழியாக பெறுவது ஒருவகை. வேறு சில வாழ்க்கைக்கு, அறிவுக்கு, வளர்ச்சிக்கு உதவம் கலைகள், பயிற்சிகள் வழியாகவும் பெறலாம் என்பதே உண்மை.

ஞானம் அடைந்தால் மோட்சம், முக்தி, அப்படி இப்படி என்ற கதைதான் இங்கே உலவுகிறது. ஞானம் ஒரு தனித்துவமான, சக்தியை வழங்குகின்ற, சக்தியை பெற்றுக்கொள்கின்ற நிலை அல்ல என்பதை முதலில் தெளிவு செய்து கொள்க. ஞானம் என்பது உங்கள் அனுபவத்தில், வளர்ச்சியில், ஆராய்ச்சியில், காலத்தால் பெறக்கூடிய ஒரு நிலைதான். அந்த நிலையை அடைந்தவர்களை, அதாவது ஞானத்தில் நிலை பெற்றவர்களை, ஞானி என்று அழைக்கின்றோம் அல்லது அழைக்கப்படுகிறார்கள்.

ஞானம் என்றால், உண்மையை அறிந்த நிலை என்று அர்த்தமாகும். இறைஞானம் என்றால், இறை என்ற உண்மையை அறிந்துகொண்ட நிலை என்று பொருளாகிறது. கேள்விஞானம் என்றால் கூட, கேள்விகளாக சிந்தித்து, உண்மையை அறியக்கூடிய தன்மை அல்லது நிலை என்று பொருளாகும். ஞானம் என்பது, அக்காலம் முதல் இக்காலம் வரை, உணமை அறியாதோரால் கட்டமைக்கப்படும் அதிசயமானது ஒன்றல்ல. 

முக்கியமாக, வெற்று வார்த்தைகளால் விளங்கிக் கொள்வது ஞானம் அல்ல. மனப்பூர்வமாக, மனமே மலர்ந்து, விரிந்து, இறையுண்மையில் திளைத்த நிலையில் உங்களுக்கு கிடைப்பதுதான் ஞானம். ஒருவேளை உங்களுக்கு வார்த்தையில் கிடைத்தாலும், அந்த உண்மை தன்மை நோக்கி நகர்ந்து அதை உணரவேண்டும். 

குண்டலினி யோகத்தின் வழியாக நாம் பெறுகின்ற ஞானம், இறை ஞானம் ஆகும். இதற்கு தகுந்த குருவின் வழிகாட்டல் வேண்டும், அவர்மூலமாக தீட்சையும், தவசாதனையும் பெற்று கற்றுத்தேரவேண்டும். நம்முடைய முயற்சி, பயிற்சி, ஆர்வம், ஆராய்ச்சி ஆகியவற்றின் வழியாக, ஞானம் பெறுதல் கைகூடும்.

வாழ்க வளமுடன்.


Why I have not perfect in my job and financially yet?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறமை இருந்தும் கூட என் வேலையும் நிறைவில்லை, பணம், சம்பாத்தியம் பொருளாதரமும் நிறைவில்லை. காரணம் என்ன?


பதில்:

உலக வாழ்வியலில் நாம் முன்னேற, கல்வி படிப்பும், திறமையும் மிக அவசியம். வெறும் படிப்பு மட்டுமோ. திறமை மட்டுமே கொண்டு முன்னேறுகின்ற காலம் இப்போது இல்லை என்பது உண்மை. ஆனாலும், தனித்திறமையாளர்களுக்கு மதிப்பும், அதற்கான முன்னேற்றமும் உலகில் ஏற்றுக் கொள்ளப்படுவதை நாம் காணலாம். அதுபோலவே தனித்தொழில், வியாபாரம், சேவை வழியான உழைப்பிற்கும் நன்மதிப்பு உண்டு, வளர்ச்சியும் உண்டு. இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால், உடனடியாக பொருளாதார உயர்வினை பெற முடியாது. எனவே பொறுமையாக காத்திருக்கவேண்டும் என்பதே உண்மை.

நீங்கள், உங்கள் திறமை மற்றும் படிப்பின் நிலை குறித்து ஆராய்ந்து அதற்கான, அரசு, தனியார் வேலைகளில் இணைந்துகொள்ளுங்கள். மிகுந்த போட்டி இருப்பதால், தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைத்திடும் என்பதும் உண்மையே. உங்களை முடக்கும், திசை மாற்றும், அடிமைப்படுத்தும், அவமானப்படுத்தும் வேலைகளில் என்றுமே உங்களை ஈடுபடுத்தாதீர்கள். வெறுமனே பணத்திற்காக அப்படி வேலை பார்க்காதீர்கள். அது உங்களை வளர்ச்சிப்பாதையில் செலுத்தாது.

தனியாக நீங்கள் பொருளாதார உயர்வு பெற விரும்பினால், மக்களுக்கு சேவையை கருத்திக் கொண்டு, அதன்படி வேலையை, வியாபாரத்தை, தொழிலை அமைத்துக்கொண்டால் மிகச்சிறப்பாக முன்னேறலாம். குறைந்தது மூன்று மாதங்கள் பொறுமையோடு செயல்வேகம் குறையாது உழைக்கவேண்டியது அவசியமாகும்.

இதை நீங்கள் நம்புவீர்களா என்பது தெரியாது. எனினும் விளக்கம் தர வேண்டியது, எங்கள் கடமை. உங்கள் எண்ணம், சொல், செயல் வழியாக, உங்களை அறியாமல், உங்கள் கர்மா என்ற வினைப்பதிவை விளைவாக்குகிறீர்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது எனலாம். இயற்கையின் வினைவிளைவு நீதியில் நீங்கள் தப்பிக்க முடியாது. எனவே உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் விழிப்புணர்வு கொண்டு, வரக்கூடிய விளைவை கவனித்து, தனக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடியதையே உங்கள் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை யோகமே தரும். யோகமில்லாமல், முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதில் நிலைக்கமுடியாது தடுமாற்றம் வரும். உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல நிறைசெல்வமும், உயர்புகழும் பெற வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன்.