CJ for You: joyful

joyful

Showing posts with label joyful. Show all posts
Showing posts with label joyful. Show all posts

When every living being is happy in his own life, why is there so much suffering for human beings?


ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?

பதில்:

வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவின் ஆரம்பத்திலும் மக்களின் வாழ்வு நிலை குறித்த தன்னுடைய கவலை தெரிவித்துவிட்டுத்தான், அதற்கான மாற்றுவழியை அறியத்தரும் யோகம் குறித்து பேச ஆரம்பிப்பார். இந்த உலகில் ஓரரறிவு முதல் ஐயறிவு வரையிலான எல்லா ஜீவன்களும் நிறைவாக வாழ்கின்றன. அதனதன் இயல்பில், அந்த வாழ்வில் இன்பம் திளைத்து வாழ்கின்ற என்பதே உண்மை. அவைகளுக்கும் பிறப்பு, வாழ்வு, பசி, தாகம், வலி, துன்பம், நோய், இறப்பு உண்டுதான். எனினும் அவைகள் தன்னளவில் இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று, அளவோடு, முறையாக வாழ்கின்றன.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடும்பொழுது, ‘ஒழுக்கம் என்பதை உருவாக்கிக்கொள்ளாத, இத்தகைய ஜீவன்கள், இயற்கையை மீறிடாமல், இயல்பாக வாழ்ந்து வருகின்றன. ஆனால், வாழ்வதற்காகவே, ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட மனிதனோ, ஒழுக்கத்தையும், இந்த இயற்கையையும் மீறிட தயங்குவதில்லை’ என்று சொல்லுகிறார்.

மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த துன்பங்கள்? என்ற கேள்வியை முன்வைத்தால், வேதாத்திரி மகரிஷியின் மேற்கூறிய வார்த்தைகளிலேயே பதில் கிடைத்துவிடும். மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவின் உச்சத்தில், சிந்தனை உயர்வை பெற்றவன். தன்னையும், இந்த பிரபஞ்சத்தையும், மூலமான இறையாற்றலையும் கூட உணரத்தக்கவன். ஆனால் அந்தவகையில் அறிவை செலுத்தாமல், குறுகிய நிலையில், முடக்கிக் கொள்கிறான். ஒரு பிரமாண்டமான சக்தியை ஒரு குவளையிலும், பானையிலும் அடக்கிவைத்தால் எப்படி பொருந்தும்? அதுதான் அவனுக்கே அது துன்பமாகிறது எனலாம்.

மனிதன் மட்டுமே தன்னிலை மறந்து, தான் என்ற தன்முனைப்பில் செயலாற்றுகிறான். அவனுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்திலுமே இந்த தன்முனைப்பு முதன்மை என்றால் மிகையில்லை. இதனால், அத்தகைய மனிதன், தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். அதன்வழியில் தான் வாழும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் துன்பம் விளைவிக்கிறான். மேலும் இயற்கையின் நீதியாக எல்லாவற்றிலும், அளவும் முறையும் இருக்கிறது.

அது மீறப்பட்டால், அந்த விளைவு உடனடியாகவோ, தாமதமாகவோ, நீண்டகாலம் கழித்தோ நிச்சயமாக உண்டாகிறது. அந்த விளைவுகளின் தாக்கமே துன்பமாக அவனுடைய வாழ்வில் வந்துவிடுகிறது. காலத்தால் நிலைத்தும் விடுகிறது.

இதிலிருந்து மீண்டுவரவேண்டும், துன்பமில்லாத வாழ்க்கையை பெறவேண்டும், இன்பமாக வாழவேண்டும், நிறைவாக இருக்கவேண்டும் என்றால், முதலில் செய்த தவறுகளை திருத்தி அமைக்க வேண்டும். அதற்கு அல்லது தவிர்த்து நல்லது செய்யவேண்டும். அதற்கான வழி, யோகமே ஆகும். குருவின் துணையோடுதான் அத்தகைய மாற்றம் நிகழும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்
-

Why are there so few teachings for life these days?


இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?

பதில்:
இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதாக ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது? என்று எதிர் கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? பொதுவாகவே அறிவுரையும், ஆலோசனையும் மிக எளிது என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதை சொல்லுபவர்களே கடைபிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே!

ஆனால் மனித வாழ்க்கைக்கான தத்துவங்களும், உண்மைகளும், வழிமுறையாக தந்த போதனைகளும், தன்னையும், இயற்கையையும் உணர்ந்தறிந்த ஞானிகளால், மகான்களால், மேதைகளால் வழங்கப்பட்டது, இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டும் வருகிறது, அவர்கள் வழி நடக்கும் உயர்ந்தோர்களாலும், ஆசான்களாலும். நம் தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற கிட்டதட்ட ஆறாயிரம் ஆண்டுகளாகவே, வாழ்க்கை நெறிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

அவற்றையெல்லாம் தொகுத்தளித்த ‘தொல்காப்பியம்’ எனும் நூல் மூன்றாயிரம் ஆண்டுக்கால நிறைவை பெற்றிருக்கிறது. இவை எல்லாம், மன வாழ்வியலை இயற்கைக்கு ஒத்த தன்மையோடும், மதித்து வாழும் நிலையையும், மக்களோடு மக்களாக தானும் எப்படி வாழ்ந்து இன்பமே கண்டு நிறைவடையலாம் என்றும் வழி சொல்லுகிறது. தொல்காப்பியம் என்பது பல ஞானிகளில் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பு என்றும் சொல்லுகிறார்கள். சித்தர்கள் வழங்கிய பல குறிப்புக்கள், மனித வாழ்க்கையை ஒழுங்கு செய்வது மட்டுமல்லாமல், மனிதனின் மூலமான உண்மையை அறியவும் வழி தருகிறது. அதை ஏற்கமுடியாதவர்களுக்கு பக்தி என்ற வழிமுறையையும் கொடுக்கிறது.

ஆசான் திருவள்ளுவர் இராயிரம் ஆண்டுகள் முன்பாக, பல்வேறு தலைப்புக்களில் வாழ்க்கை நெறிமுறைகளை தருவதை நாம் சிறுவயது பள்ளிப்பாடங்களில் இருந்தே அறிவோம். எனவே வாழ்க்கைக்கான போதனைகள் நிறைய, நிறைய, நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை ஏற்று, புரிந்து, வாழ்வில் பயன்படுத்துகிறோமா? என்பதுதான் சந்தேகத்திற்குறியது.

நீங்கள் இந்தக்காலத்தில் என்று சொல்லுகிறீர்கள், ஏன் மனிதன் ஒவ்வொரு காலமும் மாறிவிடுகிறானா? இல்லையே? அவன் வாழ்க்கை முறையும், பொருள் வயப்பட்ட, உயயோகப்படுத்தும் கால நிலைகளும், விஞ்ஞான முன்னேற்றமும் தான் மாறிக்கொண்டே வருகின்றன. மனிதன் உடல், மனம், உயிர், கற்றறிவு, அனுபவ அறிவு, குடும்பம், உறவுகள், சமூகம், உலகம், சராசரி வாழ்நாள் காலம் என்பதில் எந்த மாற்றமும் வருவதில்லையே.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால், வாழ்க்கைக்கான போதனை என்றால், எப்படி பணமும் பொருளும் பெறவேண்டும்? மகிழ்ச்சியை நீடித்து அனுபவிக்க என்ன வழி? என்ன செய்தாலும், எதை சாப்பிட்டாலும் நோயில்லாமல் வாழ்வது எப்படி? என்ன செய்தாலும் குறையில்லாமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி? இன்னும் பலப்பல, என்பதாகத்தான் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பதுதான் நம் குறையே தவிர, போதனைகளில் எந்தக்குறையும் இல்லை. சிந்தித்துப்பாருங்கள்!

வாழ்க வளமுடன்.
-

Why do you have to look for pleasure in living?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வதில் ஏன் இன்பத்தை தேடவேண்டியது இருக்கிறது?!


பதில்:

இன்பம் என்பதை மகிழ்போகம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். ஆனால் போகம் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் சிதைந்துவிட்டது என்பது உண்மை. போகம் என்றால் ஆணும் பெண்ணும் கூடிக்கலத்தல் என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே மகிழ்போகம் என்று சொன்னாலும், அதைத்தான் அர்த்தம் கொள்வார்கள்.

சித்தர்கள் சொன்ன விளக்கத்தின் வழியாக, மகிழ்போகம் என்றால், மனிதன் தன்னுடைய புலன்களால் அனுபவிக்கின்ற, உணர்கின்ற இன்பத்தைத்தான் குறிப்பாக தருகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லும் பொழுது, ஐம்புலன்களை தாண்டி இந்த உலக இன்பங்கள் என்ன அனுபவித்துவிடப்போகிறோம்? எல்லாமே நம் புலன்களுக்குள்ளாக அடங்கிவிடுகிறது. ஆனால் தன்னை அறிந்துகொண்டால், அதுதான் நிலையான இன்பம், பேரின்பம் என்ற உண்மையும் நமக்கு விளங்குவிடும் என்கிறார்.

ஆனால் நாம் வாழ்வில் இன்பத்தை தேடுகிறோம் என்பது உண்மைதான். ஏனென்றால், நமக்கு எது இன்பம் என்பதை உணர்தலாக பெறவில்லை. அந்த இன்பம் எங்கே இருக்கிறது என்பதும் நமக்கு தெரியவில்லை. அதனால்தான் நாம் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். மேலும் அந்த இன்பத்தை பெற்றுவிட்டாலும் கூட, அதுதான் இன்பமா என்று தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் மிகையாக அனுபவித்து அல்லது குழப்ப நிலையில் அதை ஏற்று, அதன் வழியாகவே துன்பத்தையும் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மையாகும்.

இறையாற்றல், நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் இன்பத்தை வாரிவழங்குவது உண்மையே. எப்போது துன்பம் வந்தாலும்கூட அதை தாங்கும் அளவிற்கு, நமக்கு துணை நிற்பது கூட இறையாற்றல்தான் என்பதை நாம் அறிவதில்லை. சிந்தனையாற்றல் மிகுந்த நாம், எது இன்பம்? அந்த இன்பம் எங்கே இருக்கிறது? அதை எப்படி அளவு முறையோடு அனுபவிப்பது? என்பதை அறிந்துகொள்ளமுடியும், ஏற்று செயல்படுத்திடவும் முடியும். ஆனால் இந்த உலகில் நாம் அதற்கு இடம் கொடுக்காமல், தேடிக்கொண்டே காலத்தை வீண் செய்கிறோம். வேதாத்திரி மகரிசி, ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருப்பதை அறியலாம்’ என்றும் சொல்லுகிறார்! உங்கள் வசதி எப்படி?!

வாழ்க வளமுடன்.