CJ for You: ego

ego

Showing posts with label ego. Show all posts
Showing posts with label ego. Show all posts

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?


தன்முனைப்பு என்பதுதான் நம்மை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்முனைப்பு கூடாது என்றுதானே சொல்லுகிறார்கள். நான் நன்றாக இருக்கவேண்டும், வளரவேண்டும், உயரவேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்? விளக்கம் தருக.

தமிழில் தன்முனைப்பு என்ற வார்த்தை, ஏதோ குறிப்பிட்ட காலங்களில் உட்புகுந்தது போல தோன்றுகிறது. சில வார்த்தைகளை, ஆங்கிலத்தில் இருந்து மொழி (முழி) பெயர்க்கும் பொழுது இப்படியான தமிழ் வார்த்தைகள் வந்துவிடுவதுண்டு. இந்த தன்முனைப்பை, motivation என்று கூட சொல்லுகிறார்கள். ஆனால் பொதுவான சமமான வார்த்தை Ego என்பதாகும்.

எனக்குத்தெரிந்தவரை, தன்முனைப்பு என்ற வார்த்தை, பழந்தமிழில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நல்ல தமிழறிஞர் யாரேனும் இருந்தால், என் சந்தேகம் தீர்க்கலாம். ஆனால், தன்முனைப்பு என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்களோ, அதற்குச் சமமான வார்த்தைகள் இப்படியாக இருக்கிறது. அவை, அகங்காரம்,. தான் என்ற எண்ணம்; செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். செருக்கு, இறுமாப்பு, முனைப்பு ஆகும்.

தான், தனது என்று வாழும் பொழுது, தான் என்ற அதிகார பற்றிலும், தனது என்ற பொருள்பற்றிலும் மனிதன் சிக்கிவிடுகிறான். இதைத்தான் தன்முனைப்பு என்று சொல்லுகிறார்கள்.  தான் என்றும், தனது என்றும் வாழ்வதில் சிக்கலில்லை, ஆனால் தான் மட்டுமே, தனது மட்டுமே என்று குறுகிக் கொள்வதுதான் சிக்கலாகிறது. அதனால்தான், தன்முனைப்பு கூடாது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த குறுகிய மனப்பான்மை அறியமுடிவதில்லை. அதனால்தான், மனிதனுக்கு மனிதனே துன்பம் செய்விக்கிறான். தன்னைப்போலவே இன்னொருவரும் மனிதரே என்று அவன் நினைப்பதில்லை.

மிருகங்களிலும், பறவைகளிலும் இந்த தொல்லை இல்லை. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை பழிவாங்குமா? கீழாக நினைக்குமா? அதன் வாழ்நிலையை சிதைக்குமா? இதைப்போல, ஒரு புலி இன்னொரு புலியை, ஒரு யானை இன்னொரு யானையை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவேளை இவைகளுக்கு ஐந்தறிவு என்பதால், இப்படி இருக்கின்றதோ? நமக்கெல்லாம் ஆறறிவு ஆகிற்றே?

தன்முனைப்பு பெரும்பாலும் சுயநலம் கொண்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு தேவையானது வேண்டும், நான் விரும்பியது வேண்டும். எனக்கானது வேண்டும் என்ற வகையில், தன்னளவில் வாழும்பொழுது, அவன் மனித தன்மையையே இழந்தவனாகிறான். இயற்கையின் இயல்பை கெடுக்கவும் செய்கிறான். ஆனால் அதை அவன் அறிவதும் இல்லை. எனவே நீங்கள் தன்முனைப்பு என்ற வார்த்தைக்கான உண்மையை அறிதல் அவசியமாகும்.

இந்த காணொளி கூடுதலாக சில விளக்கங்களை தரலாம்.

தன்முனைப்பு, சுயமரியாதை புரிந்துகொள்வது எப்படி? தவிர்க்க என்ன செய்யலாம்?

வாழ்க வளமுடன்


Why human need to understand himself in the earth lifetime?


வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

உலகில் பிறந்து வாழ்கின்ற மனிதர்களாகிய நாம், நீண்ட நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து பழகியிருக்கிறோம். இப்படியே இருக்கிற வரையிலே மனிதனானவன் மனிதத்தன்மையையோ தெய்வத்தன்மையையோ அடைய முடியாது. அதற்கு மனம் அமைதி நிலைக்கு வரவேண்டும், சிந்தனை உயர வேண்டும் நுன்மை பெற வேண்டும் உண்மை உணர்வு வேண்டும். 

அப்பொழுதுதான் மனிதன் மனிதனாக வாழவும் மகிழ்ச்சி, இன்பம் இவையெல்லாம் கிட்டுகின்ற நிலைமையும் உண்டாகும்.  இந்தக் குறிக்கோள் கொண்டே மனதிற்கு முதலிலே ஒரு பயிற்சியைக் கொடுக்கிறோம். குண்டலினியோகம் கற்று உயிர் (Life force) மேல் மனம் செலுத்துகிறோம்.  ஜீவகாந்த சக்தி (Bio-Magnetism) புலன்கள் மூலமாகவோ எண்ணத்தின் மூலமாகவோ தான் ஜீவகாந்த சக்தி செலவாகிற இடம், அது குழாய் போல  அந்தக் குழாய் அதிகமாகத் திறந்திருந்தால் தானே ஜீவகாந்த சக்தி அதிகம் செலவாகும்.  அந்தக் குழாயின் அடைப்பானைத் திருப்பி நீங்கள் மீண்டும் உயிர்மேலே மனத்தை வைக்கிறீர்கள். எங்கே charge ஆகிறதோ அங்கேயே கொண்டு வந்து விடுகிறோம், அதுதான் தவம் (Energy Meditation).

மனவளக்கலை மன்றங்களில் குண்டலினியோகப் பயிற்சியில், உயிர்ச்சக்தியை மேலே எழுப்பி மனதால் அதைப் பற்றித் தியானம் செய்யும்போது மன அலை நீளம் நுணுகி அமைதிக்கு வரும்.  அமைதியினால் மன உறுதி ஏற்படும்.  அறிவு கூர்மை ஏற்படும். அனாவசியமாக மனோ சக்தி செலவாகாது. எப்போதும் சிந்தனையாற்றல் பெருகிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுத்துச் செயல் செய்வதற்கு நமது மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.

எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இன்னும்.. நான் யார்? உடலா? உயிரா? மனமா? இந்த உடல், உயிர், அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான அகத்தாய்வுப் பயிற்சியை அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது மனவளக்கலை மன்றம். 

இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.  நாமாக மனதைப் பளுவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இலேசாக ஆக்கிக் கொள்கிறோம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். 

தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகள் செய்ததனால் உடலில் நோய்கள் உண்டாயின. இன்னும் சில நோய்களும் உணடாகலாம். அதனால் வரப்போகிற நோய்களைத் தடுக்கவும் வந்த நோய்களைப் போக்கிக் கொள்ளவும் எளியமுறையில் சில உடற்பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவைகளைச் சரிப்படுத்தி உடலுக்கும, உயிருக்கும் நட்பைச் சரியாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் நலமாக இருக்கும். உடல் நலமும் வேண்டும் மனவளமும் வேண்டும். எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோக பயிற்சி முறையானது (Simplified Kundalini Yoga - SKY) மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதை திடப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்.

The truth and answer, who raising the question 'where is the God?'


கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

'கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான்.  ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.   வேறுவேறாக இல்லை,  இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான்.'  

'ஆனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக,  இச்சையின் காரணமாக,  பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது.'  

'இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.'  

'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா?  எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.'

'பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ,  அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும்.  ஆகவே,  ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால்,  இறைவனைக் காணலாம்.'

'ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால்,  அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக்  கொண்டு தான் இருப்போம்.  அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.'  

'ஆனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால்,  ஒரு பளுவும் இல்லை.  ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும்.  அங்கே இறைவன் இருப்பான்.'

'ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்படுத்தப்பட்டால் நிறைமனம்.'

'மனிதன் தன்முனைப்பு அறுத்தாலே போதும்; அவன் 

        இறைநிலை என்கின்ற பெரிய ஆற்றலோடு தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்.'

        'தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று - இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது.'

-

இந்த கவிகள் கூடுதலாக விளக்கங்களை தரும்.

'ஓர்மை நிலைப்பயிற்சி'

நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள் 

   அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே, 

ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது

   நின்ற நிலையே அது.  நீயறி., நினைவை நிறுத்தி.

(ஞானக்களஞ்சியம் கவி: 1486)


'நிறை நிலையில் அமைதி'

எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம் 

   இரவு பகல், சிறிது பெரிது,  ஆண்பெண், கீழ் மேல்,

நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,

   நட்டம்லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;

வல்லமையும் அதன்முழுமை நிலையாய் உள்ள 

   வரைகடந்த மெய்ப்பொருளாம்., அகத்துணர்ந்தால் 

அல்லலற்று அறிவு விழித்தும், விரிந்தும், 

   அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.

(ஞானக்களஞ்சியம் கவி: 661)

-

'வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!'

When every living being is happy in his own life, why is there so much suffering for human beings?


ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?

பதில்:

வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவின் ஆரம்பத்திலும் மக்களின் வாழ்வு நிலை குறித்த தன்னுடைய கவலை தெரிவித்துவிட்டுத்தான், அதற்கான மாற்றுவழியை அறியத்தரும் யோகம் குறித்து பேச ஆரம்பிப்பார். இந்த உலகில் ஓரரறிவு முதல் ஐயறிவு வரையிலான எல்லா ஜீவன்களும் நிறைவாக வாழ்கின்றன. அதனதன் இயல்பில், அந்த வாழ்வில் இன்பம் திளைத்து வாழ்கின்ற என்பதே உண்மை. அவைகளுக்கும் பிறப்பு, வாழ்வு, பசி, தாகம், வலி, துன்பம், நோய், இறப்பு உண்டுதான். எனினும் அவைகள் தன்னளவில் இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று, அளவோடு, முறையாக வாழ்கின்றன.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடும்பொழுது, ‘ஒழுக்கம் என்பதை உருவாக்கிக்கொள்ளாத, இத்தகைய ஜீவன்கள், இயற்கையை மீறிடாமல், இயல்பாக வாழ்ந்து வருகின்றன. ஆனால், வாழ்வதற்காகவே, ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட மனிதனோ, ஒழுக்கத்தையும், இந்த இயற்கையையும் மீறிட தயங்குவதில்லை’ என்று சொல்லுகிறார்.

மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த துன்பங்கள்? என்ற கேள்வியை முன்வைத்தால், வேதாத்திரி மகரிஷியின் மேற்கூறிய வார்த்தைகளிலேயே பதில் கிடைத்துவிடும். மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவின் உச்சத்தில், சிந்தனை உயர்வை பெற்றவன். தன்னையும், இந்த பிரபஞ்சத்தையும், மூலமான இறையாற்றலையும் கூட உணரத்தக்கவன். ஆனால் அந்தவகையில் அறிவை செலுத்தாமல், குறுகிய நிலையில், முடக்கிக் கொள்கிறான். ஒரு பிரமாண்டமான சக்தியை ஒரு குவளையிலும், பானையிலும் அடக்கிவைத்தால் எப்படி பொருந்தும்? அதுதான் அவனுக்கே அது துன்பமாகிறது எனலாம்.

மனிதன் மட்டுமே தன்னிலை மறந்து, தான் என்ற தன்முனைப்பில் செயலாற்றுகிறான். அவனுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்திலுமே இந்த தன்முனைப்பு முதன்மை என்றால் மிகையில்லை. இதனால், அத்தகைய மனிதன், தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். அதன்வழியில் தான் வாழும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் துன்பம் விளைவிக்கிறான். மேலும் இயற்கையின் நீதியாக எல்லாவற்றிலும், அளவும் முறையும் இருக்கிறது.

அது மீறப்பட்டால், அந்த விளைவு உடனடியாகவோ, தாமதமாகவோ, நீண்டகாலம் கழித்தோ நிச்சயமாக உண்டாகிறது. அந்த விளைவுகளின் தாக்கமே துன்பமாக அவனுடைய வாழ்வில் வந்துவிடுகிறது. காலத்தால் நிலைத்தும் விடுகிறது.

இதிலிருந்து மீண்டுவரவேண்டும், துன்பமில்லாத வாழ்க்கையை பெறவேண்டும், இன்பமாக வாழவேண்டும், நிறைவாக இருக்கவேண்டும் என்றால், முதலில் செய்த தவறுகளை திருத்தி அமைக்க வேண்டும். அதற்கு அல்லது தவிர்த்து நல்லது செய்யவேண்டும். அதற்கான வழி, யோகமே ஆகும். குருவின் துணையோடுதான் அத்தகைய மாற்றம் நிகழும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்
-

What is the meaning of Layman?


‘பாமரன்’ என்றால் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ‘பாமரன்’ என்றால் என்ன?

பதில்:
பாமரம் என்பதுதான் பாமரன் ஆனது. பாய் + மரம் = பாமரம். காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது பாய்மரம். அதுபோல் குறிக்கோள் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் ‘பாமரன்’ ஆவான். அறிவின் வழியில் செல்லாதவன்; அறிவற்றவன் என்று பொருள்.

மேலும் விளக்கமாக,
இத்தகைய பாமரன், வாழ்வில் நோக்கம் ஏதுமின்றி, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வதற்கு தயாராவான். அவன் தன் விருப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் செயல்கள் செய்துவருவான். அந்த செயலின் விளைவில், தனக்கு நன்மை கிடப்பதாக கருதினாலும் கூட, தனக்கும், பிறருக்கும், இந்த இயற்கைக்கும் பொருந்தாத விளைவை காலத்தால் உருவாக்கிக் கொள்கிறான்.

அதுவே பின்னாளில் அவனுக்கு கர்மா என்ற வினைப்பதிவாக வெளிவந்து, இன்னும் துன்பத்திலும் சிக்கலிலும் வருந்த வைத்துவிடும்!

இந்த பாமரன், ஏற்கனவே தன்னுடைய கர்ம வினைப்பதிவுகளின் தாக்கத்தால்தான், குறிக்கோள் இல்லாத, மனம்போன போக்கில் செல்ல தயாராகின்றான் என்பதை எளிதில் நாம் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் விளக்கம் பெறாத பாமரன், விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். இதனால் அவனுடைய பிறவியும் வீணாகப் போய்விட வாய்ப்புள்ளது. 

அவனின் வழியாக வரும் வாரீசுகளும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்ற வகையிலும் இது தொடரும். என்றாலும் கூட ஏதேனும் ஒருவழியில், இறையாற்றல் ஒரு பாடத்தை நடத்தி திசை திருப்பும் என்பது உறுதி. அந்த பாடத்தை ஏற்று, வாழ்க்கையில் திருத்தம் அமைத்துக்கொண்டால், பாமரன் என்ற நிலையில் இருந்து விலகி, நன்மையை நோக்கியும், பிறவி உண்மையையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். இல்லையே திசையற்ற, நோக்கமற்ற வாழ்க்கைபயணம் நீண்டகாலம் தொடரவே செய்யும்.
வாழ்க வளமுடன்.

What is your reply someone corner you on your past post?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் ஜோதிடர் என்றால் அதை பார்க்க வேண்டியதுதானே? எதற்காக வேதாத்திரியத்தை அதனோடு இணைக்கிறீர்கள்? மகரிஷி ஜாதகம் குறித்து தனியாக சொல்லியிருக்கிறாரா? இல்லையே, அதற்குத்தான் நவக்கிரக தவம் இருக்கிறதே? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்த அன்பருக்கு உங்கள் பதில் என்ன?


பதில்:

ஆம், கடந்த என்னுடை சோதிட ஆராய்ச்சி பதிவில் அப்படியான பின்னூட்ட கேள்வி வந்தது. கேள்வி கேட்ட அந்த அன்பர், பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் என்பதும் அறிந்து கொண்டேன். மேலும் அவர் பக்தி மார்க்கத்தில் செல்லுபவராகவும் இருக்கிறார். ஒரு வேகமான, தன்முனைப்பான நபர் என்பதும் தெரியவருகிறது. சரி இப்பொழுது கேள்விக்கு வரலாம்.

இந்த அன்பர், வேதாத்திரியத்தில் இருக்கிறாரா? வந்து விலகிவிட்டாரா? தொடர்கிறாரா? என்பது தெரியவே இல்லை. இதுவரை நம்முடைய வேதாத்திரிய யோகா காணொளி தளத்தில் என்னென்ன பதிவுகள் கண்டார்? விளங்கிக் கொண்டார்? கருத்து விளக்கம் தருபவர் யார்? அவர் பின்னணி என்ன? இதுவரை அவர் குறித்து புரிந்து கொண்டது என்ன? இந்த சேவை ஏற்கனவே கொடுத்திருக்கிறாரா? எத்தனை ஆண்டுகளாக இந்த காணொளி தளத்தை நடத்திவருகிறார்? என்றெல்லாம் அவர் தெரிந்து கொண்டாரா என்பதும் அறியமுடியவில்லை. இதற்கு முன்பாக அந்த பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் பின்னூட்டம் இட்டதாகவும் அறியமுடியவில்லை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி, கிரகங்கள் கோள்கள் என்பன குறித்து நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். அவைகளின் காந்த அலை இயக்கம், கோள்களின் அன்மை, சேய்மை தூரம், அவற்றின் இரசாயன இயக்க, மன இயக்க தூண்டுதல் என்றும் விளக்கி இருக்கிறார். ஜாதகம் எப்படி கணிக்கிறார்கள், அதில் இருக்கிற உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லியுள்ளார். அதில் போலியான கருத்துக்கள் உள்ளதை சொல்லியும் தெளிவுபடுத்தியுள்ளார். பஞ்சபூத நவக்கிர தவ தத்துவ விளக்கம் கேட்டோர் சில உண்மைகளை அறியமுடியும்.

முக்கியமாக, என் 18 வயதிலேயே வேதாத்திரிய தீட்சை பெற்று 21 வயதில் அருள்நிதி பட்டத்தை வேதாத்திரி மகரிஷியின் கைகளால் பெற்றுக்கொண்டவன். அதற்குப் பிறகு ஆர்வத்தின் வழியாக, ஜோதிடம் பட்டய வகுப்பில் கற்றுத்தேர்ந்தவன். ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை. மேலும் என்னுடைய இந்த சோதிட ஆராய்ச்சி, வருங்காலம் குறித்த தகவல்களை தருவதல்ல. ஏற்கனவே இருக்கிற, கர்மா என்ற வினைப்பதிவுகள் குறித்தான ஒரு ஆய்வு. அதை எப்படி வேதாத்திரிய வழியில், தவமும் தற்சோதனை அகத்தாய்வும் கொண்டு தீர்க்கலாம்? என்ற ஒரு விளக்கமே ஆகும். இதை நான் சும்மா பிறருக்கு தரமுடியுமா? அதற்காக சேவை கட்டணம் சொன்னேன். அதையும் கிண்டலடித்து விட்டார்கள். இவர்கள் விரித்திருக்கின்ற கைகளில் எவ்வளவு சும்மா கொடுத்தாலும் பத்தாது என்று என் நண்பர் சொல்லுவார். அது உண்மையே!

முக்கியமாக, பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் நபர், அது போன்ற கருத்து பின்னூட்டம் போடுகின்ற பலர், பகல் வானில் நட்சத்திரங்கள் இல்லை என்று வாதிடுகிறார்கள். இருக்கிறது ஐயா, அது சூரியனின் ஒளியில் மறைந்திருக்கிறது என்று நான் சொன்னால், அவர்கள் ‘அப்போ நான் என்ன குருடா? என் கண்ணால் பார்ப்பது பொய்யா? நான் நிஜமாக பார்ப்பதை சொல்லுகிறேனே?! அதை நீ ஏற்காமல், நீ சொன்னால் மட்டும் நான் ஏற்றுக்கொள்வேனா? அவ்வளோ பெரிய முட்டாளா நான்?’ என்று எதிர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளை புரியவைப்பது?! யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த கேள்வி பதிலுக்குக் கூட, ‘நான் அப்படியெல்லாம் இல்லை, நீதான் குழப்புகிறாய்’ என்றும் பின்னூட்டம் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்க வளமுடன்.

How do we deal with those who deny and oppose whatever they say?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்விலும், தொழில், வியாபார ரீதியிலும், சில நட்பு வட்டங்களிலும் எது சொன்னாலும் மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்களை எப்படி சமாளிப்பது?


பதில்:

மிக நல்ல கேள்வி, சமீப காலமாகவே நானும் கூட இதை அனுபவித்து இருக்கிறேன். இங்கே இணைய தளத்திலும் அப்படியான அனுபவங்கள் உண்டு. அதுவும் இந்த, வேதாத்திரிய சானல், (இப்பொழுது வேதாத்திரிய யோகா) ஆரம்பித்த பிறகு நிறைய நபர்கள், மறுத்தும், எதிர்த்தும் பேசுகிறார்கள், அதாவது பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்களை சமாளிப்பது ஒரு பெரும் கலைதான்.

பொதுவாகவே, இப்போதைய தலைமுறைக்கு ஒன்று அல்லது இரண்டு முந்தைய தலைமுறை என்று வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சொல்லுவதென்றால் 20 வயது முதல் 39 வயதுக்குள்ளான நபர்கள் என்று சொல்லலாம். இதில் பால் பேதம் இல்லவே இல்லை. இவர்கள்தான், எதை யார் சொன்னாலும், உடனே ‘உனக்கு ரொம்பத் தெரியுமோ? அதெல்லாம் அப்படியில்லை, என்னமோ தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது! இதைப்பற்றி ‘இவர்’ என்ன சொல்லுறார் தெரியுமா?’ என்று விலாவரியாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

சொல்லுவது யார்? அவரின் அனுபவம் என்ன? எதன் அடிப்படையில் சொல்லுகிறார்? எதற்காக சொல்லுகிறார்? யாருக்காக சொல்லுகிறார்? இதன் விளைவு யாருக்கு எப்படி இருக்கும்? நன்மைதானா? என்னதான் முடிவாக சொல்ல வருகிறார்?  என்றெல்லாம் நிறுத்தி நிதானமாக ஆராய்வதில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை, உதாரணமாக காட்டி, ‘நீ இதானே சொல்லுகிறாய்? இதற்கு மேலும் இதைத்தான் சொல்லுவாய்!’ என்று முடிவு செய்துவிடுவார்கள்.

இப்படி வாதிடுபவர்களிடம் நாம் ஒன்றும் பேசுவதற்கில்லை. அப்படியா? சரி இனி நான் திருத்திக் கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நகர்ந்து விடுவது நல்லது. ஏனென்றால், மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்கள், தன்முனைப்புக்கான நல்ல உதாரணப்புருஷர்கள். இவர்களோடு மல்லுகட்டுவது உங்களுக்கு கடினம். ஏனென்றால் நாம் பொதுவாக, யோகத்தில் இணைந்து அதன் வழியாக பயணிக்கிறோம். நாம் எதை விளக்க முயற்சித்தாலும் அது வேறுவிதமாகவே திரும்பும். நாம் சொல்லுவதை வைத்தே நம்மை மடக்கவே நினைப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்களின் தன்முனைப்பில், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆம் நீ வெற்றியாளன் தான் என்று நீங்கள் அவரை உறுதி செய்துவிட்டு நகர்ந்து விடுங்கள். கூடவே வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியும் விடுங்கள். அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்.

Is the curse true? Explain how much impact it can have?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாபம் என்பது உண்மையா? அது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று விளக்குக?!


பதில்:

மன இதனாகிய மனிதர்கள், தங்களை இந்த இயற்கையோடு முரண்பட்டு, தனித்தும், தன்முனைப்போடும் செயல்படும் பொழுது தன்னுடைய இயல்பை மறந்துவிடுகிறான். அந்நிலையில் அவன் பாவத்தை செய்கிறான். இந்த பாவம் என்றால், அறமில்லாத செயல் என்பதைத்தவிர வேறு அர்த்தமோ, கற்பனைகளோ செய்துகொள்ளக்கூடாது. அது அடுத்தவருக்கு மட்டுமல்ல, தனக்குத்தானாகவும் செய்து சிக்கிக் கொள்கிறான். சாபம் என்ற நிலை, பொறாமையினாலும், வருத்ததினாலும் உண்டாவதாக சொல்லலாம்.

ஒரு மனிதர் உங்களை, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கினால், அந்த நேரத்தில் அதை தடுக்கமுடியாமல், ஏற்றுக்கொள்ளும் சூழலில், வருத்தம் மேலிட துன்பம் விளைவித்த அந்த நபருக்கு சாபம் தருவதாக சொல்லலாம். சினம், வஞ்சம் ஆகியற்றின் அடக்கப்பட்ட குணமே சாபமாகவும் வெளிப்படுகிறது. முக்கியமாக, துன்பம் நமக்கு வருகிறது என்றால் அதற்கான, காரணங்களை நாம் ஆராய்ந்து பழகி, உண்மை உணர்ந்து கொண்டால் தேவையின்றி, நாம் யாருக்கும் சாபம் தரவேண்டியதில்லை. அதுபோல நாமும் பிறருக்கு எச்செயல் செய்தாலும், அதில் நன்மை விளைவதை முக்கியமாக்கொண்டா செய்யவேண்டும். இதனால் பிறருக்கும், துன்பமோ, வருத்தமோ விளையாத நிலை உண்டாகும்.

மேலும் இந்த துன்பம், வருத்தம், சாபம் ஆகியன கருமையத்திலும் பதிந்து, கர்மா என்ற வினைப்பதிவுகளாகவும் மாற்றம் பெறும். இத்தகைய நிலையில் மாற்றம் பெறவேண்டும் என்றேதான், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இரண்டொழுக்க பண்பாடை உருவாக்கி தந்துள்ளார். எந்த வகையிலும், தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவிக்க மாட்டேன் என்ற உறுதியோடு தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அமைத்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த சாபம் என்ற நிலை, எங்கே எழுந்ததோ அந்த மனிதரையும், யாருக்கு தரப்பட்டதோ அவரையும் இணைத்தே பாதிப்பைப் தரக்கூடியது. மேலும், மனதோடும், நினைவோடும் தொடர்பு கொண்டது என்பதால் உடனடியாகவும் செயல்படக்கூடும். விளைவில் நன்மை தீமை என்பது, அவரவர் கர்ம வினைப்பதிவுகளின் சாரமாகவும் அமைந்துவிடும். எனவே நம்மை திருத்திக்கொண்டு, பிறரின் சூழல் அறிந்து, பொறுத்துக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மை, உதவி, சேவை என்ற வகையில் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், பிறரிடமிருந்தும் சாபம் எழுவதை தடுத்துக் கொள்ளலாம். சிந்தனையில் உயர்ந்து திருத்தம் கொள்க.

வாழ்க வளமுடன்.