CJ for You: sorrow

sorrow

Showing posts with label sorrow. Show all posts
Showing posts with label sorrow. Show all posts

What is the truth of, Human athma contaminated is cause for life problems said by Vedanties?


மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?

பதில்:

உலகில் வாழும் ஜீவன்களின் பரிணாமத்தில், ஆறாவது அறிவின் உயர்வில் வந்தவனே மனிதனாகிய நாமும் நம்முடைய சக உதிரர்களும். உதிரம் என்றால் இரத்தம், சக உதிரம் என்றால் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான இரத்தம் என்ற உயர் கருத்தாக அமைகிறது. ஆறாவது அறிவில் பரிணமித்தாலும்கூட அதில் உண்மை விளக்கத்தை பெறததால், மனிதனுடைய வாழ்க்கை புதிராக இருக்கிறது. மேலும் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாவே காரணம் என்ற வேதாந்த கருத்து உண்மைதான். 

இந்த களங்கம் என்பதை குறை அறிவு, விளக்கமற்ற நிலை, மறதி, விலகி நிற்றல் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதை நிவர்த்தி செய்தால், வாழ்கின்ற வாழ்வின் உண்மை புரிந்துவிடும். மனிதனுக்கு மனிதனே செய்யும் தீங்கு எழாது. தனிமனிதனும் அமைதி அடைவான், உலகமும் அமைதிபெறும். ஓர் உலகம் என்ற ‘உலக சமாதானமும்’ கிடைத்துவிடும்.

உண்மையாகவே ‘இந்த மனித சமுதாயம், வாழ வழி தெரியாமல் திகைத்து சிக்கல் ஏற்றது’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். உங்களுக்கே தெரியும் உண்மை அதுதான். ஆனால் நாம் மறந்துவிட்டு, எதோ வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்று வாழ்நாட்களை கடத்தி வருகிறோம் அல்லவா? எல்லோருக்கும் பிறப்பு என்று உண்டு, அதுவும் சமகால நாட்களான ஒன்பதுமாதம், குறை பிரவசம் தனியானது. எல்லோருக்கும் பசிவந்தால் அதை உணவால் சரிசெய்தல். வலி, நோய் தொந்தரவு இவற்றை மருந்தால் குணமாக்குதல். உழைப்பு, சோர்வு, தூக்கம், விழிப்பு என்பதுவும் பொது. சுவாசிக்கும் காற்று, வெப்பம், மழை நீர் ஆகியனவும் இயற்கை வழங்கிய பொதுவானது. உடல், அதனோடுகூடிய உயிர், அதில் எல்லாம் உணர்வாக பெற்று அறிந்து உணர்ந்து வாழ மனம் ஆகியனமும் பொதுவானது. வாழ்க்கையும் பொதுவானது, அதில் மரணமும் பொதுவானது. ஆனால் இந்த பொதுத்தன்மை எல்லா மனிதர்களிடமும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. ஏழைக்கும், நடுத்தரவாதிக்கும், செல்வந்தருக்கும் வேறுபாடாக அல்லவா இருக்கிறது? அதனால்தானே சிக்கலும் கூட எழுகிறது?

நாடகத்தில் வேஷம் கலைத்தால், சராசரி மனிதனாகிவிடுவது போல, இதிலிருந்து மனிதன் எப்போது மாறி, உண்மையை உணர்வது? அதற்காகத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘தனிமனித விடுதலைதான்’ இந்த உண்மையை உணரத்தரும் என்கிறார். மேலும் மனிதன் யோகத்தில் இணைந்துதான் உண்மையை பெறமுடியும் என்றும் சொல்லுகிறார். 

வேதாந்த கருத்துக்கள் உண்மையானதுதான். அது உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு மனிதனை உயர்த்தவல்லது. யோகம் அந்த உண்மையை மனிதனுக்கு, அறிந்ததை, புரிந்ததை உணரவைப்பதாகும்.
வாழ்க வளமுடன்
-

Why getting wrong result and difficulties as almost in every action in my life?


என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?

பதில்:

பெரும்பாலான அன்பர்களின் கருத்தாகவே இதை எடுத்துக் கொள்ளமுடியும். சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லிக்கொள்ளாமல் தனக்குள் புலம்பித் தவிப்பார்கள். சிலர்,  என் தலைவிதியே என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நாம் எதைச் செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறதா? அது உண்மைதானா? பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ‘முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுதான் அது. உங்களுடைய எந்த ஒரு செயலிலும், அதனுடைய தொடக்கம் சரியாக அமையவில்லை, மனம் ஒப்பவில்லை, குழப்பத்தோடு தொடங்குகிறது என்றால், அந்த செயலும், அதனுடைய விளைவும் நிச்சயமாக பிரச்சனைக்குரியதாகவோ, துன்பம் தருவதாகவோதான் அமையும் என்பது உறுதி. இயற்கையின் எந்த ஒரு செயலிலும், அதன் விளைவிலும் ஒற்றுமை, நேர்மை, ஒழுங்கு, காலம் என்பது அடங்கியிருக்கிறது. இதில் எல்லாவற்றிலுமே ‘துன்பம்’ எழுவதில்லை. ஆனால் நாம்தான் துன்பம் மட்டுமே எழுகிறது என்று புலம்பித்தவிக்கிறோம்.

இங்கே இரண்டு முக்கிய குறிப்புக்களை காணலாம். 1) நாமாக ஏதேனும் விளைவை நினைத்துக்கொண்டு, நம்முடைய செயலை செய்வது. 2) இதைச் செய்தல் இன்னதுதான் விளையும் என்ற எதிர்பார்ப்போடு செய்வது ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எப்படி ஒரு செயலை செய்வதற்கு ஆயத்தமாகிறீர்கள்? என்பதில்தான் உங்களுக்கான பதில் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை நீங்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பாகவும், சிந்தனை செய்துகொள்ளுங்கள். ‘இந்த இரண்டும் என்னிடம் இல்லை’ என்ற தெளிவான நிலையில் செயலை செய்ய தயாராகுங்கள்.

அடுத்ததாக, எப்போதும் ஒரு செயலை அனுபவமாக செய்யுங்கள். அனுபவம் இல்லை என்றால், அந்த செயலை செய்துவிட்டு, அதையே அனுபவமாக பெறுங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விளக்கம் பெற்று, தெளிவாக, கவனமாக, சிறப்பாக அடுத்தபடி செய்யுங்கள். இந்த இடத்தில் அந்த விளைவு தவறாக, துன்பமாக இருக்குமானல், அதை உடனடியாக திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தும் அதேபோல செய்யாதீர்கள்.

எந்த ஒரு செயல் செய்தாலும், உங்கள் உடல், மனம் விழிப்புணர்வோடும், ஒன்றுக்கொண்டு தொடர்புடையதாகவும் செய்யுங்கள். ஏனோதானோ என்று செய்யாதீர்கள். அசால்ட் என்று சொல்லப்படும் நிலையிலும் அச்செயலை செய்யாதீர்கள். மேற்கண்ட விளக்கங்களை நீங்கள் தெளிவு செய்துகொண்டால், ‘என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?’ என்று கேட்பதற்கு இடமிருக்காது.

வாழ்க வளமுடன்
-

When every living being is happy in his own life, why is there so much suffering for human beings?


ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?

பதில்:

வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவின் ஆரம்பத்திலும் மக்களின் வாழ்வு நிலை குறித்த தன்னுடைய கவலை தெரிவித்துவிட்டுத்தான், அதற்கான மாற்றுவழியை அறியத்தரும் யோகம் குறித்து பேச ஆரம்பிப்பார். இந்த உலகில் ஓரரறிவு முதல் ஐயறிவு வரையிலான எல்லா ஜீவன்களும் நிறைவாக வாழ்கின்றன. அதனதன் இயல்பில், அந்த வாழ்வில் இன்பம் திளைத்து வாழ்கின்ற என்பதே உண்மை. அவைகளுக்கும் பிறப்பு, வாழ்வு, பசி, தாகம், வலி, துன்பம், நோய், இறப்பு உண்டுதான். எனினும் அவைகள் தன்னளவில் இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று, அளவோடு, முறையாக வாழ்கின்றன.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடும்பொழுது, ‘ஒழுக்கம் என்பதை உருவாக்கிக்கொள்ளாத, இத்தகைய ஜீவன்கள், இயற்கையை மீறிடாமல், இயல்பாக வாழ்ந்து வருகின்றன. ஆனால், வாழ்வதற்காகவே, ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட மனிதனோ, ஒழுக்கத்தையும், இந்த இயற்கையையும் மீறிட தயங்குவதில்லை’ என்று சொல்லுகிறார்.

மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த துன்பங்கள்? என்ற கேள்வியை முன்வைத்தால், வேதாத்திரி மகரிஷியின் மேற்கூறிய வார்த்தைகளிலேயே பதில் கிடைத்துவிடும். மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவின் உச்சத்தில், சிந்தனை உயர்வை பெற்றவன். தன்னையும், இந்த பிரபஞ்சத்தையும், மூலமான இறையாற்றலையும் கூட உணரத்தக்கவன். ஆனால் அந்தவகையில் அறிவை செலுத்தாமல், குறுகிய நிலையில், முடக்கிக் கொள்கிறான். ஒரு பிரமாண்டமான சக்தியை ஒரு குவளையிலும், பானையிலும் அடக்கிவைத்தால் எப்படி பொருந்தும்? அதுதான் அவனுக்கே அது துன்பமாகிறது எனலாம்.

மனிதன் மட்டுமே தன்னிலை மறந்து, தான் என்ற தன்முனைப்பில் செயலாற்றுகிறான். அவனுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்திலுமே இந்த தன்முனைப்பு முதன்மை என்றால் மிகையில்லை. இதனால், அத்தகைய மனிதன், தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். அதன்வழியில் தான் வாழும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் துன்பம் விளைவிக்கிறான். மேலும் இயற்கையின் நீதியாக எல்லாவற்றிலும், அளவும் முறையும் இருக்கிறது.

அது மீறப்பட்டால், அந்த விளைவு உடனடியாகவோ, தாமதமாகவோ, நீண்டகாலம் கழித்தோ நிச்சயமாக உண்டாகிறது. அந்த விளைவுகளின் தாக்கமே துன்பமாக அவனுடைய வாழ்வில் வந்துவிடுகிறது. காலத்தால் நிலைத்தும் விடுகிறது.

இதிலிருந்து மீண்டுவரவேண்டும், துன்பமில்லாத வாழ்க்கையை பெறவேண்டும், இன்பமாக வாழவேண்டும், நிறைவாக இருக்கவேண்டும் என்றால், முதலில் செய்த தவறுகளை திருத்தி அமைக்க வேண்டும். அதற்கு அல்லது தவிர்த்து நல்லது செய்யவேண்டும். அதற்கான வழி, யோகமே ஆகும். குருவின் துணையோடுதான் அத்தகைய மாற்றம் நிகழும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்
-

Why I have a problems even nothing do not mistake and helping to others in life?


என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?


பதில்:

உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?

கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள்.  அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!

வாழ்க வளமுடன்

-

Who offer the solution for our life sufferings? man, god or nature?


வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?

பதில்:
நல்ல சிந்தனைக்குறிய கேள்விதான். வாழ்க்கை என்பது சிக்கலானது இல்லை. மனிதர்கள் வாழும் காலத்தில் அவர்கள், அவர்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்டே சிக்கல். அது அந்த மனிதர்களுடைய வாழ்நாளெல்லாம் தொடர்வதால், வாழ்க்கை சிக்கலானதாக தெரிகிறது என்பதுதான் உண்மை. உலகில் ஐந்தறிவு ஜீவராசிகளில் சிக்கல் உண்டா? உண்டு அவை, இயற்கை சிக்கலாக இருக்கும், அதை சமப்படுத்தி, அதை வென்று வாழக்கூடிய தன்மை அவைகளுக்கு உண்டு. இதை Survival of the Fittest என்று சொல்லுவார்கள். தமிழில் மிக கேவலமாக ‘வலியது வாழும்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது உண்மையில்லை. ‘தகுதியுள்ளது வாழும்’ என்பதுதான் சரியான அர்த்தமாகும். நாமும் அவ்வாறேதான்.

ஒரு மனிதரை சந்தித்து, அவர் யாராக வேண்டுமானலும் இருக்கட்டும், எத்தகைய பின்புலம் உள்ளவராகவும் இருக்கட்டும், என்ற நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் கேட்பதற்காக ‘நன்றாக இருக்கிறேன்’ என்று மறுமொழி தருவார். பெரும்பாலும் முகம் அறியாத நபர்களிடம், தங்களைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் நாம் அப்படியே நகர்ந்துவிடாமல், ‘ஏதேனும் பிரச்சனை உள்ளதா? நான் உதவலாமா?’ என்று கேட்டால் கூட ‘தேவையில்லை’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தங்களிடம் உள்ள குறையை சொல்லுவதற்கும், பகிர்ந்து ஆலோசனை கேட்பதற்கும், உதவியாகவும் யாரையாவது எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில், எல்லோருக்குமே வாழ்க்கை சிக்கல் உள்ளது என்று அறியலாம். ஆனால அவரவர் அளவில் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

பெரும்பாலான மனிதர்களின் முதல்நிலை சிக்கல், பணமும், வருமானமும் தான் என்பதை உறுதியாக சொல்லலாம். பணம், வருமானம் இருப்பவருக்கு, அதை செலவு செய்வதிலும், பற்றாக்குறையிலும் சிக்கல். பணமும் வருமானமும் இல்லாதவருக்கு அன்றாட செலவுகளுக்கே சிக்கல். இந்த இரண்டுக்குப் பிறகுதான் மற்ற எல்லா சிக்கல்களையும் வரிசைப்படுத்த முடியும்.

இத்தகைய சிக்கல்கள் தானாக வந்ததா? சிந்தித்துப்பாருங்கள். கொஞ்சம் முன்னோக்கி பார்த்தால், எங்கோ, ஏதோ ஓர் இடத்தில் நம்முடைய எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் கலந்திருக்கும். நம்முடைய செயல்பாடும், திட்டமும், உழைப்பும், சரிசெய்தலும் தடுமாறி இருக்கும். நடப்பது நடக்கட்டும் என்று இருந்தால் கூட காலத்தில் அதுவும் சிக்கலாகிவிடும் தானே?! எனவே எப்படிப் பார்த்தாலும், ஒரு சிக்கல் எழுகிறது, எழுந்திருக்கிறது என்றால், அது நம்மால்தான் வந்திருக்கிறது என்று சொல்லலாம். நம்மைச் சார்ந்தவர்களால் கூட நமக்கு வரும். அங்கே நாம் தப்பிக்கவும் வழியில்லை. ஏனென்றால், குடும்பம், உறவு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், நண்பர்கள் என்றில்லாமல் தனித்து வாழ்ந்திடவும் வழியில்லையே. 

இங்கே நம்முடைய முன்னோக்கிய பார்வையும், எதிர்கால திட்டமிடுதலும் நிச்சயம் தேவைப்படும். இயற்கையில் சிக்கல் எழுகிறதா? என்றால் ஆம், ஆனால் அது அதன் போக்கில்தான் நிகழ்கிறது. ஒரு பழமொழி சொல்லுவதுபோல, ‘உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது’ என்பதாக. கிராமங்களில் இதற்கு பதிலும் சொல்லுவார்கள், ‘இது ரெண்டையும் கலந்து பண்டமாக செய்து விற்கலாம்ல’ என்பார்கள். எனவே இயற்கை நமக்கு எந்த ஒரு சிக்கலையும், தனி நபருக்காக உருவாக்குவதில்லை. இயற்கையோடு வாழ்ந்தாக வேண்டிய நாம்தான் அதில் சிக்கிக் கொள்கிறோம்.

நீங்கள் கேட்ட கேள்வியில்,  தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா? என்பதில், மனிதன், கடவுள், இயற்கை இம்மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் அறியலாம். எப்படியென்றால், மனிதன் கடந்து உள்ளே பயணித்து தன்னை அறிந்தால் இயற்கையின் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்ற விளக்கமாகும். அப்படியானால் முடிவாக என்ன சொல்லமுடியும் என்றால், மனிதன் இயற்கையிலிருந்து விடுபட்டவன் இல்லை.

ஆனால் அவன் தனித்திருப்பதாக கருதுகிறான். இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. அது செயல் விளைவு தத்துவமாக செயல்படுகிறது. இன்னது செய்தால் இன்னது விளையும் என்பது பொதுவிதி. இது யாருக்காகவும், எதனாலும் மாறாது, குழையாது. சிதறாது. இதை புரிந்து கொண்டால், மனிதன் உருவாகிக்கொண்ட சிக்கல்களுக்கு தீர்வு மனிதனாலேயேதான் பெறமுடியும். மனிதன் தனக்குத்தானே தீர்வு தரவும் முடியும், பிறருக்கும் தீர்வு தரமுடியும். அதுபோலவே உங்களுக்கு நீங்களும் தீர்வு கொண்டுவரலாம், பிறரும் உங்களுக்கு தீர்வு தந்துவிடமுடியும். இதை சாத்தியப்படுத்துவது யார்? நீங்களேதான்.

வாழ்க வளமுடன்.
-

Why no end to the suffering that is occurring of living?


வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?


பதில்:

ஓவ்வொருவரும் வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவு உண்டு, தீர்வும் உண்டு. அதன்வழியாக இன்பமாக வாழ்ந்து வாழ்வை கொண்டாடும் வாய்ப்பும் உண்டுதான். எப்படி என்பதை காணலாம்.

ஒரு துன்பம் என்பது எப்படி வருகிறது? என்று ஆராய்ந்தால் அதற்கு நிறைய வழிகள் இருப்பதை நாம் கண்டறிய முடியும். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. ஒரு துன்பம் நமக்கு வந்த உடனே, வருந்தி மனம் உடைந்து போவதைத்தான் செய்கிறோமே தவிர ஆராய்ச்சிக்கு இடம் அளிப்பதில்லை. துன்பத்தால் ஏற்படும் வலியும், வருத்தமும், சினமும், கோபமும், வஞ்சமும், பழி வாங்கிடும் குணமும் வருகிறதே தவிர, ஏன்? எதனால்? எதற்காக? இப்படி நடந்தது என்று கேட்டுக்கொள்வதே இல்லை. உண்மைதானே? இனிமேலாவது அதற்கு நாம் பழகிக் கொள்வோம்.

பொதுவாக துன்பத்திற்கு காரணம், ஏழ்மை என்று கருதுவது பெரும்பாலான மக்களின் கருத்தாகும். அப்படியானால், பணவசதி, பொருள் நிறைவு பெற்றோர்க்கு துன்பம் எழுவதே இல்லையா? என்று கேட்டால், அவர்களுக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் உண்டு என்று அடுக்குவார்கள். எனவே நீங்களே இதுதான் காரணம் என்று உங்கள் முடிவுக்கு வருவதில் பலனில்லை.

துன்பங்களுக்கு மூலமாக இருக்கின்ற, இருக்கக்கூடிய காரணங்களை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு, இனிமேல் அப்படியான செயலை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். இதற்கிடையில் கர்மா, அது இது என்று இப்போது குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இனி செய்கின்ற செயலை, திருத்தமாக, நிறைவாக, முறையாக செய்யுங்கள். அதுவே போதுமானது. வந்த துன்பம் தீர்க்க, என்ன வழி? என்று சிந்திக்க முயற்சித்தால் நிச்சயமாக தீர்வு கிடைத்திடும். எனவே வெறுமனே வருந்துவதால் பலனில்லை. மேலும், உங்களுடைய ஒரு செயலால், நீங்களும் வருத்தப்படக்கூடாது, மற்றவர்களும் வருத்தப்படக்கூடாது. அந்த விழிப்புணர்வில் செய்யுங்கள். அதுபோலவே, யார் துன்பத்தில் இருந்தாலும், அவரின் மீது அக்கறை கொண்டு அவருக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்துவாருங்கள். உங்கள் துன்பமும் வேறு யாரோ ஒருவரால், தக்க சமயத்தில் தீர்ப்பதற்கான வழிகள் உண்டாகிவிடும். இது இயற்கையின் செயல்விளைவு தத்துவமாகும்.

இனிமேலும் துன்பத்திற்கு வழியே இல்லையா? முடிவே இல்லையா? வருந்தவேண்டாம். விழிப்புணர்வு பெறுக!

வாழ்க வளமுடன்.

-

How to deal with cheaters in our everyday life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முதுகில் குத்துபவர்களையும், காலைவாரி விடுபவர்களையும் எப்படி சமாளிப்பது?


பதில்:

யோகத்தின் பாதையில் செல்லுகிறவர்களுக்கும் இப்படியான சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். ஏனென்றால் ஏதேனும் ஒருவகையில், நாம் உலகில்போக்கில் போகத்தானே வேண்டியுள்ளது. அந்த வகையில், நாம் என்றோ செய்த ஒரு தவறு, அதாவது நமக்கு சரியாக இருந்து பிறருக்கு அதில் விளைந்த துன்பம் என்றும் புரிந்துகொள்ளலாம். நான் அப்படி எதுவுமே செய்யவில்லையே என்று நீங்கள் சொன்னாலும் கூட, உங்கள் தாய், தந்தையரோ, அவர்களுக்கு முன்னோர்களோ செய்திருக்கலாம். அது உங்கள் வழியாக தீர்க்கவும் இப்படியாக நிகழலாம். இதுவெல்லாம் காலத்தின் கணக்கு என்பதால் நாம் ஏதும் முன்கூட்டி அறியவோ, தீர்க்கவோ முடியாது. அதை ஏற்று அனுபவித்தே தீர்க்க முடியும்!

முக்கியமாக இந்த புரிதல் வந்துவிட்டால், நாம் எந்தவகையிலும் நம்மை வருத்திக் கொள்ளாமல், இந்த அளவில் என்னுடைய வினைப்பயன் ஒன்று கழிந்துவிடுகிறது, என்ற நினைவில் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி அதை கடந்துவிடலாம். நடந்ததை எண்ணியும், இப்படியாகிவிட்டதே என்ற மன வருத்தமும் ஏற்படுத்த தேவையில்லை. அந்த நபர்களை நினைத்து திட்டவோ, சாபமிடவோ, பழிவாங்கிடவோ தேவையும் இல்லை. நல்ல புரிதல் உங்களுக்கு வந்துவிட்டால் அவர்களை வாழ்த்திடவும் செய்யலாம்.

உங்கள் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம், இனிமேலும் நிகழாத விழிப்புணர்வோடு நீங்கள் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், உடனடியா தொடர்புடைய அந்த நபரிடம், விளக்கம் சொல்லி, மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு அவரால் வேறெதும் துன்பம் நிகழாமல் செய்துவிடலாம். குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல ‘விளைவறிந்த விழிப்புநிலை’ என்ற அளவில் உங்கள் கடமைகளை, வேலைகளை, தொழிலை,  வியாபாரத்தை செய்துவாருங்கள். நன்மை அடைக!

வாழ்க வளமுடன்.

-

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.

How i can fix my confidence, depression, sorrow, problems in my daily life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் ஓவ்வொருநாளும் சோகம், கவலை, பிரச்சனை சூழும் பொழுது, மனம் அமைதி கெடுகிறது. தன்னம்பிக்கையும் இல்லாதுபோகிறது எப்படி சரி செய்யலாம்?


பதில்:

சராசரி மனித வாழ்வில் அப்படி நிகழ நிறைய வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கி வைத்திருக்கிறோம். மேலும் புதிதாக உருவாக்கியும் கொள்கிறோம். காரணம் என்னவென்றால், மனம் என்பது என்ன? அதன் மகத்துவம் என்ன? என்பதெல்லாம் அறியாத காரணத்தால்தான். யாரிடமாவது மனம் என்றால் என்ன? என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? மனம் என்பது எண்ணங்களின் வெளிப்பாடு. அது இங்கிக்கொண்டே இருக்கும் என்று சில வரிகளில் முடித்துவிடுவார்கள். நவீன கால விஞ்ஞானமும் மனம் என்பதை இன்னமும் முழுமையாக சொல்லிவிடவில்லை. ஆனால் உலகில் மனநல மருத்துவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னதுபோல ‘எல்லோரும் மனநலன் பாதிக்கப்பட்டவர்தான், ஆனால் வெளியே தெரிவதில்லை’ என்பது உண்மையோ என்று கருதவும் இடமாகிவிட்டது.

உங்கள் மனதை முதலில் புரிந்துகொள்வதுதான் முதல்படி. அதற்கு சாதாரணமான பயிற்சி உதவாது. மனதை பழக்கப்படுத்தும் எதுவும், மனதால்தான் செய்கிறோம் என்றாலும் அது அதன் போக்கில் உடனடியாக மாற்றம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு காட்டு யானையை, ஒரே நாளில் அல்லது சில நாட்களில் நம் போக்கிற்கு கொண்டவர முடியுமா?

அதேபோல மனதை விட்டுவிட்டும் நாம் வாழமுடியாது, அதை வேறெங்கோ வைத்துவிட்டும் வாழமுடியாது. நாம் அந்த மனதோடு இணையவேண்டும். மனதின் அலைநீளங்களில், அதன் இயக்கத்தில் கவனம் வைக்கவேண்டும். அதற்கு, யோகம்தான் சிறந்தவழி. எனக்கு அதெல்லாம் சரிப்படாது. யோகத்திற்கும் வரமாட்டேன் என்றால், உங்களுக்கான வழி ஏதுமில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

யோகத்தில் இணைந்தால், தவம், தியானம் வழியாக மனதை ஆராய்கிறோம். மனம் என்றால் என்ன என்பதை, அங்கே புரிந்துகொள்கிறோம். அதன்வழியாக திருத்தம் பெற்று, மனதை எப்படி கையாளவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு, நாமும் நம் தவறுகளில் திருத்திக்கொண்டு, இயல்பாக வாழ முயற்சிக்க பழகினால், உங்களுடைய சராசரி வாழ்வில், அளவுமுறையோடு செயல்பட்டு, துன்பம், கவலை, குழப்பம், சோகம் சூழாத வாழ்க்கையை வாழமுடியும். தன்னம்பிக்கையோடு வாழமுடியும், அதை மற்றவர்களுக்கு தரவும் முடியும். எது இன்பம் என்பதை புரிந்து அதை அனுபவிக்கவும் முடியும்.

வாழ்க வளமுடன்.

-

Why most of saints distract our expectations on their meet?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

ஞானிகளிடம் இன்பமான வாழ்வைப்பற்றி பேசி, கேள்விகேட்டால், துன்பமாகவே கருதும்படி சொல்லுகிறார்களே? அதனாலேயே அவர்கள் மேல் வெறுப்பாகிறது!


பதில்:

உங்கள் மனநிலையின் கருத்தை அப்படியே சொன்னதற்கு நன்றி. இதற்கு தகுந்த பதில் உண்டு. ஞானிகளும் உங்களைப்போல பிறந்து வளர்ந்து, உலக இன்பங்களில் திளைத்தவர்தான். ஞானி என்றுமே தனியாக உருவாகி பிறந்து வருவதில்லை என்பதை அறிக. சொல்லப்போனால் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும், நீங்களும், இதற்கு முன் பிறந்தோரும் கூட அப்படியான தகுதி பெற்றவர்கள் தான். ஆனால் அதை நாம் உணர்ந்து, நம்மை திருத்தி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கு ஆர்வமும் கொள்ளவில்லை.

இந்த உலகில், எதோ பிறந்தோம், வளர்ந்தோம், இன்ப துன்பம் அனுபவித்தோம், வாழ்க்கைத்துணையை கண்டோம், கூடி வாழ்ந்தோம், பிள்ளைகளை பெற்றோம், வளர்த்து ஆளாக்கினோம், பேரப்பிள்ளைகளை கண்டோம், போய்ச்சேருவோம் என்று வாழ்வை முடித்து விடுகிறோம்.

இப்பொழுது ஞானியாக இருப்பவரும் அப்படியான வாழ்க்கைச்சூழலில் சிக்கியவர்தான். யாரோ ஒரு சிலர்தான், திருமண பந்தத்தில் சிக்காது, பிரம்மச்சாரியத்தில் நிலைக்கின்றார். அது அவரவர் விருப்பத்தில் தான் நிகழ்கிறது. மற்றோர் எல்லோரும், வாழ்கின்ற வாழ்க்கையில் இந்த இன்பம் போதவில்லை, துன்பம்தானே எங்கும் விளைகிறது? என்று சிந்தித்து, எது உண்மையான இன்பம் என்று தேடுகிறார்கள். வணங்கும் கடவுளை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. அனுபவி என்றுதான் சொல்லுகிறதாக தோன்றுகிறது. அதனால் அவர் குருவை தேடி சரணடைகிறார். கடவுள் என்பதை கட+உள் என்று புரிந்து கொள்கிறார். அந்த வழியில் தவம் செய்து, தற்சோதனையில் தன்னை திருத்தி, மனதை புலன்களில் இருந்து விடுவித்து, எது உண்மை இன்பம், இயற்கை என்பது என்ன? இறை என்பது என்ன? நான் யார்? என்று தன்னையறிகிறார். இறையுணர்வு பெறுகிறார். அதனால் அவர் ஞானி ஆகிறார்.

ஆகவே ஞானிகளுக்கு மட்டுமே எது உண்மை இன்பம், பேரின்பம், அமைதி, முழுமை என்பது தெரியும். அதை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறார். ஆனால் நாம்தான் அதை கேட்டுக்கொள்ளும் தன்மையில் இல்லை. இவரிடம் போனால், வாழ்வையே விடச்சொல்லுவார் என்று பயப்படுகிறார்கள், அவரை ஒதுக்கித்தள்ளுகிறார். உண்மையான தன் பிறவிக்கடனை, இப்பிறவியில் ஒதுக்கித்தள்ளுவது போலவெ! இந்த உண்மை தெரிந்த பிறகாவது, ஞானிகளின் சொல்லை கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். மாற்றம் உண்டாகும்!

வாழ்க வளமுடன்.

-

What benefit am I get from greeting the enemy?


எதிரியை வாழ்த்துவதால் எனக்கென்ன பலன் கிடைத்துவிடப்போகிறது?


கடந்த வாரத்தில் அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? என்ற கேள்வியோடு வாக்குகள் செலுத்த அன்பர்களை கேட்டுக்கொண்டோம். அதற்கு கிடைத்த வாக்கு விபரம் பாருங்கள்...

நிச்சயமாக காலத்தால் மாறிடும் சரியாகும் உண்மை 77% (அதிக வாக்கு)

என்று கிடைத்திருந்தாலும், இந்த வாக்கு ஏதோ ஒப்புக்கு கொடுத்துள்ளார்களோ என்று தோன்றுகிறது. அதாவது சும்மா போட்டுவைப்போம் என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். இதை எப்படி நாம் கண்டுபிடித்தோம் என்றால், இந்த வாக்குப்பதிவின் முடிவையும், அதற்கான விளக்கப்பதிவையும் 12% அன்பர்கள்தான் பார்த்து படித்திருக்கிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவருகிறது.

நீ என்னமோ சொல்லிக்கய்யா, நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள தயாரில்லை என்ற நிலைக்கு போய்விட்டார்களோ என்று கருதிட இடமிருக்கிறது.

ஏனென்றால். இந்த வாக்குப்பதிவு வழியாக நாம் அறிந்துகொண்டது, 12% அன்பர்கள் மட்டுமே எதிரியை அல்லது எதிரியாக செயல்படுபவரை வாழ்த்திடவும், வாழ்த்தின் வழியாக திருத்தவும், தன் வழியை சரி செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள். அந்த 12% அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஏறக்குறைய 88% அன்பர்கள், எதிரியை பழிவாங்கிட நினைக்கிறார்கள், அப்படி பழிவாங்கிட சந்தர்ப்பம் கிடைக்க காத்திருக்கிறார்கள், அதை வஞ்சமாக மனதிற்குள் போட்டுக் கொள்கிறார்கள். கூடுதலாக அதை ஒரு கர்மாவாகவும் பதிந்துவைத்து விடுகிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. 

ஆனால் அந்த 88% அன்பர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன சொல்லுவார்கள் என்றால், அவர்களை அப்படியே விட்டுவிட்டோம், ஒதுக்கி தள்ளிவிட்டோம் என்று மறுப்பு தெரிவிப்பார்கள்.

ஆனால் அந்த எதிரியால் நீங்கள் பாதிக்கப்பட்டது உண்மைதானே? அந்த காயம் மனதிற்குள் மறைந்தாலும் வடுவாக இருக்கிறதே? எப்போது நினைத்தாலும் அது கண்முன் நிகழ்கிறதுதானே? அப்போதைய சினமும், என்னால் எதும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தமும், இப்படி செய்துவிட்டாரே (னே) என்ற நிலைபாடும் அப்படியே காட்சியாக வருகிறது அல்லவா? அதை எப்படி போக்குவீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்கூட இது மாறுவதற்கு வழி உண்டா? சிந்தித்தீர்களா? வேறு என்னதான் செய்யப்போகிறீர்கள்?

அவரை அந்த எதிரியை, உங்களுக்கு துன்பம் தந்த எதிரியை அப்படியே விட்டுவிட்டோம் என்றால், நீங்கள் முன்னைவிட தெளிவாக, உங்கள் செயலில், கருத்தில் நிலைத்து, இயல்பாக அல்லவா இருக்கவேண்டும்? மேலும் வழக்கமான மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே? அப்படி இருக்கிறீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்களேன்.

ஒரு எதிரியை, உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் சந்தித்த எதிரியை வாழ்த்துவதால், நீங்கள் அந்த வருத்தத்தில் இருந்தும், பதிவில் இருந்தும் விலகுகிறீர்கள் என்பதே உண்மை. மேலும் அந்த எதிரியை வாழ்த்திக்கொண்டே இருப்பதால், அந்த எதிரி குறித்தான் எண்ணம் உங்களுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கவலையும் வராது, பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அதற்கான திட்டமும் உருவாகாது. ஆனால் அந்த வாழ்த்தினால் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா?

உங்களைச் சுற்றி உண்மையிலேயே ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தே என்றும் சொல்லலாம். ஏற்கனவே உங்களை துன்பத்திற்கு ஆளாக்கிய எதிரி, உங்கள் வாழ்த்தால் மறுபடி எதுவும் செய்யாத நிலைக்கு உங்களை மாற்றிக்கொள்கிறீர்கள். உங்கள் வாழ்த்தால் உங்களுக்கு தீங்கிழைத்த எதிரியின் மன நிலையும் மாற்றம் அடைகிறது என்பதே இங்கே முக்கியமானது. உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியதற்கு, அந்த எதிரியே மனவருத்தம் அடைவதும் நிகழும். காலத்தால் அவரே உங்களிடம் வந்து, மன்னிப்பு கேட்பதும் கூட நிகழ வாய்ப்புள்ளது. ஏனென்றால் இயற்கையின் விதி அத்தகையது.

இதை ஏன் நம்ப மறுக்குறீர்கள் என்று தெரியவில்லை. வாழ்த்தின் உண்மையை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வழிநடப்போருக்கு, வாழ்த்து பேருதவி அளிக்கும் என்பது அனுபவப்பூர்வமானது ஆகும்.

வாழ்க வளமுடன்.

-

இந்தபதிவின் மூலக்கட்டுரை இங்கே இருக்கிறது!

வேதாத்திரிய வாக்குப்பதிவு.

அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?

வாக்கின் முடிவும் - விளக்கமும்

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Keep mind calm, no need meditation. Is it correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது உதவுமா? அது உண்மையா?!


பதில்: 

தவம் தியானம் தேவையில்லை என்பது உதவிடாது. அது தவறான கருத்தே ஆகும். மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும் என்பது மட்டுமே சரி. அந்த மனம் எப்படி இயல்பாக இருக்கும்? இருக்கமுடியும்? காலம்காலமாக அது தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டேதானே இருக்கிறது! நாம் எப்பொழுதும் அதனோடுதான் கலந்து இருக்கிறோம். அந்த மனதின் வழியாகவே செயல்படுகிறோம். இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பங்களால் வருந்துகிறோம். திட்டமிடுகிறோம், தவறை திருத்த முயற்சிக்கிறோம் இப்படியாக எல்லாமே மனதின் வழியாகத்தானே நிகழ்கிறது. அப்படியான மனதை இயல்பாக வைக்க உதவும் ஒரு பயிற்சிதான் தவம் தியானம் ஆகும்.

தீடீரென்று நீங்கள் முடிவு செய்து ‘மனமே சும்மா இரு’ என்று சொல்லிவிட்டால் சும்மா இருந்திடுமா? இனி இயல்பாக மனதை வைத்திருப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், மனம் அதன்படி நடந்திடுமா? உங்கள் கட்டளைக்கும், வார்த்தைக்கும், செயல்பாட்டுக்கும் அடிபணிவதாகவா உங்கள் மனம் இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் மனம் விரும்பும்படி நடக்கிறீர்களா? அல்லது மனம் உங்கள் விருப்பத்தின் படி நடக்கிறதா? என்று கேள்விகேட்டால் என்ன பதில் தருவீர்கள்? 

தவம் தியானம் வழியாக, நாம் நம்முடைய செயல்பாட்டை, சிந்தனைகளை, எண்ணங்களை ஒழுங்கு செய்து, புலன்களை கட்டுப்பாடாக வைத்திருந்து, மனதை கவனிக்கிறோம் என்பதே உண்மை. மனம் தன்னையே கவனிக்கிறது என்பது கூட இங்கே உண்மைதான். அப்படியாக, மனதிற்கு தரப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிதான் தவம் தியானம். எனவே அது இல்லாமல், மனதை வெறுமனே சும்மா இரு, இயல்பாக இரு என்று இருக்கவைத்தால் இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது பேசுவதற்கும், சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், செயல்பாட்டிற்கு வராது! இல்லை ஐயா, இதை உலகெங்கும் கடைபிடிக்கிறார்கள், அனுபவசாலிகள் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் தொடருங்கள், சிறிதளவு மாற்றம் பெறுவதற்குக் கூட பல ஆண்டுக்காலம் ஆகலாம். அத்தகைய வலிமை படைத்தது நம் மனம்! 

வாழ்க வளமுடன்.

Is the curse true? Explain how much impact it can have?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாபம் என்பது உண்மையா? அது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று விளக்குக?!


பதில்:

மன இதனாகிய மனிதர்கள், தங்களை இந்த இயற்கையோடு முரண்பட்டு, தனித்தும், தன்முனைப்போடும் செயல்படும் பொழுது தன்னுடைய இயல்பை மறந்துவிடுகிறான். அந்நிலையில் அவன் பாவத்தை செய்கிறான். இந்த பாவம் என்றால், அறமில்லாத செயல் என்பதைத்தவிர வேறு அர்த்தமோ, கற்பனைகளோ செய்துகொள்ளக்கூடாது. அது அடுத்தவருக்கு மட்டுமல்ல, தனக்குத்தானாகவும் செய்து சிக்கிக் கொள்கிறான். சாபம் என்ற நிலை, பொறாமையினாலும், வருத்ததினாலும் உண்டாவதாக சொல்லலாம்.

ஒரு மனிதர் உங்களை, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கினால், அந்த நேரத்தில் அதை தடுக்கமுடியாமல், ஏற்றுக்கொள்ளும் சூழலில், வருத்தம் மேலிட துன்பம் விளைவித்த அந்த நபருக்கு சாபம் தருவதாக சொல்லலாம். சினம், வஞ்சம் ஆகியற்றின் அடக்கப்பட்ட குணமே சாபமாகவும் வெளிப்படுகிறது. முக்கியமாக, துன்பம் நமக்கு வருகிறது என்றால் அதற்கான, காரணங்களை நாம் ஆராய்ந்து பழகி, உண்மை உணர்ந்து கொண்டால் தேவையின்றி, நாம் யாருக்கும் சாபம் தரவேண்டியதில்லை. அதுபோல நாமும் பிறருக்கு எச்செயல் செய்தாலும், அதில் நன்மை விளைவதை முக்கியமாக்கொண்டா செய்யவேண்டும். இதனால் பிறருக்கும், துன்பமோ, வருத்தமோ விளையாத நிலை உண்டாகும்.

மேலும் இந்த துன்பம், வருத்தம், சாபம் ஆகியன கருமையத்திலும் பதிந்து, கர்மா என்ற வினைப்பதிவுகளாகவும் மாற்றம் பெறும். இத்தகைய நிலையில் மாற்றம் பெறவேண்டும் என்றேதான், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இரண்டொழுக்க பண்பாடை உருவாக்கி தந்துள்ளார். எந்த வகையிலும், தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவிக்க மாட்டேன் என்ற உறுதியோடு தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அமைத்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த சாபம் என்ற நிலை, எங்கே எழுந்ததோ அந்த மனிதரையும், யாருக்கு தரப்பட்டதோ அவரையும் இணைத்தே பாதிப்பைப் தரக்கூடியது. மேலும், மனதோடும், நினைவோடும் தொடர்பு கொண்டது என்பதால் உடனடியாகவும் செயல்படக்கூடும். விளைவில் நன்மை தீமை என்பது, அவரவர் கர்ம வினைப்பதிவுகளின் சாரமாகவும் அமைந்துவிடும். எனவே நம்மை திருத்திக்கொண்டு, பிறரின் சூழல் அறிந்து, பொறுத்துக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மை, உதவி, சேவை என்ற வகையில் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், பிறரிடமிருந்தும் சாபம் எழுவதை தடுத்துக் கொள்ளலாம். சிந்தனையில் உயர்ந்து திருத்தம் கொள்க.

வாழ்க வளமுடன்.