CJ for You: male

male

Showing posts with label male. Show all posts
Showing posts with label male. Show all posts

Best solution for peaceful family by Shri Vethathiri Maharishi


கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன? 


பதில்:

திருமணம் என்பதை ஆயிரம் காலத்து பயிர் என்றுதான் சொல்லிவருகிறார்கள். அத்தனை தலைமுறை வாழ்வுக்கு அது நிலைத்திருக்கக் கூடியது என்ற அர்த்தமாகிறது. ஆண் பெண் ஆகிய இருவரும், எங்கெங்கோ பிறந்தை வளர்ந்து வாலிபத்தில், அவர்களாகவே காதல் வயப்பட்டும், தகுந்த பெரியோர்களின் வழிகாட்டால் மூலமும் திருமணம் வழியாக, இல்லற வாழ்வை துவக்குகின்றனர். ஆனால், பிரச்சனை, மனவருத்தம் என்பது இந்த இரண்டு நிலைகளிலும் இருக்கிறது. காதல் என்ற நிலையில், மனமொத்து இருந்தாலும்கூட, திருமணம் ஆனபிறகு பல்வேறு சிக்கல்களில் அவர்களுக்குள்ளாக  பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம்.

பெற்றோரின் தேடுதலிலும், பெரியோர்களின் ஆசியிலும், திருமண வாழ்வில் நுழைபவர்களும், ஆரம்பகாலத்தில் இயல்பான, நிறைவான, மகிழ்ச்சியான நிலையிலே வாழ்வை ஆரம்பித்தாலும், பின்னாளில் அவர்களுக்குள்ளாகவும் பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம். இரண்டிலுமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அந்தந்த சூழலுக்கும், பிரச்சனைக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்றபடி பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று உயர்ந்த குணங்களால் சரி செய்யமுடியும் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார். அவரும் இல்வாழ்க்கையில் வாழ்ந்து அனுபவித்தவர் தானே?

இந்த  பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும், குடும்பத்தில் இருக்கிற யார் செயல்படுத்த வேண்டும்? ஆணா, பெண்ணா? கணவனா? மனைவியா? என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ‘யாருக்கு அன்பு நிறைய இருக்கிறதோ அவர் அதை செயல்படுத்த வேண்டும்’ என்று பதில் தருகிறார். பொதுவாகவே, கணவன் மனைவி ஆகிய இருவருமே, புரிதலில் இருக்கக்கூடிய சிறிய, விளக்கமின்மைதான், பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதை இருவருமே அமைதியாக பேசி, திருத்தம் பெற்றுக்கொள்ளவும் வழி உண்டு. நல்ல வழிகாட்டல் இருந்தால், உடனடியாக தீர்வும் பெற முடியும். அந்தவகையில், வேதாத்திரி மகரிஷியின், வழிகாட்டுதலை இங்கே பகிர்கின்றேன்.

வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார்... 

உண்மையான நிலை என்னவென்றால் நாம் செய்த பாவம் புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால் நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத்தான் அதிகமான அளவு செயல்பட முடியும்.  விளைவு வரமுடியும்.  அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும்,  இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அவர்கள் மூலமாகத்தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும்.


ஆகவே இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான் என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர் உண்மையான தெய்வ நிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.

இப்போது இந்த சிந்தனையை, மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளாக ஓடவிடுங்கள். ஒருசில நாட்களில் உங்களுக்கான தெளிவில் நிறைவீர்கள். நீங்களே முன்வந்து, உங்களுக்குள்ளாக இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து, அமைதியும், நிறைவும் கொண்ட குடும்ப வாழ்க்கையை வாழ தயாராவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

-




How we get extreme feel in life bond and why called is as eroticism


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடலுறவின் பொழுது அதிக இன்பம் எழுவது ஏன்? ஆனாலும் அதை சிற்றின்பம் என்று சொல்லுவது ஏன்?


பதில்:

இந்தக்கேள்வி, எல்லோருக்கும் பயன்பெறும் பதிலை பெற்றுத்தரக்கூடிய கேள்வி, மனிதவாழ்வின் தொடக்கமே, பாலுறவில்தானே ஆரம்பிக்கிறது. ஆணும்  பெண்ணும் இணைந்துதான் ஒரு புதிய உயிரை உருவாக்ககூடிய தேவையை, இந்த இயற்கையும், தெய்வீகமும் ஏற்படுத்தி, பாதுகாத்து முழுமையாக்கியும் உள்ளது. இந்த பாலுறவு, அதன்வழியான புதிய உயிரனம் என்ற பண்பு, ஈர் அறிவு பரிணாமத்தில் தொடங்கிவிடுவதாக, விஞ்ஞான அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், தன்னுடைய பருவ வயதில் ஏற்படும் பாலுறவு ஆர்வம் இயல்பானதே, இயற்கையானதே அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாம் வாழும் உலகில், சமூக அமைப்பில், ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அளவுமுறை, வயது, வழிகள், சட்டம், விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியநாட்டில் பருவ வயது என்பது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என்றும் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆணுக்கு 14 வயதிலும், பெண்ணுக்கு 10 முதல் 14 வரையிலான காலத்தில் பருவ தூண்டலும், அதன் உயர்வும் கிடைத்துவிடுகிறது.

உண்மையாகவே இந்த 10 முதல் 14 வயதில், பாலுறவு குறித்த விளக்கமும், அதன் விளைவும், அதை சமாளிக்கக் கூடிய தகுதியும் இருக்குமா என்றால் இல்லை. அதனால், இக்கால கட்டத்தில் பெரியவர்கள் / பெறோர்களின் / அறிஞர்களின் உதவியும், அக்கறையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. இல்லையேல், பருவ வயது ஆணும் பெண்ணும் பாலுறவு இன்பத்தில் ஆழ்ந்து, அதன் தாக்கத்தில் தங்கள் வாழ்வையும், எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்ணுக்கு அந்த வயதில், குழந்தை உருவாகிவிடுமானால், அது மிகப்பெரும் சமுதாய கேடாக மாறிவிடும். அந்த வயதில் அவள் குழந்தையை பெற்றெடுக்கவும் வலிமையற்று இருப்பாள், வளர்க்கவும் முடியாது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, திருமணம் என்ற பந்தம் அமைத்து, இவளுக்கு இவன், இவனுக்கு இவள் என்று ஒப்புதலையும், சமூகம் ஏற்கும் நிலையையும், இவனின், இவளின் குழந்தை இது என்ற நிலைபாட்டையும் உருவாக்கிக் தருகின்றனர். இதனால்தான், பாலுறவை, தகுந்த வயதுவரை காத்திருந்து பெறவேண்டும் என்ற நிலையில்தான் அதை ‘சிற்றின்பம்’ என்று வாழ்வோர், அறிஞர்கள் சொல்லிவருகின்றனர், 

மேலும் யோகத்தில் இருப்பவர்களும் ‘சிற்றின்பம்’ என்று சொல்லுவது வழக்கம். அதற்கான காரணம், யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுணர்வு பெற்றால், அதுதான் பேரின்பம் என்ற கருத்தில், மற்றது எல்லாம் சிற்றின்பம், குறையுடைய, முழுமையடையாத, நிறைவைத்தராத இன்பம் என்று சொன்னார்கள்.

சரி, உடலுறவின் பொழுது ஏன் அதிக இன்பம் எழுகிறது? அல்லது அப்படித்தோன்றுகிறது? இதற்கான காரணம், நாம் உணர்கின்ற, பெறுகின்ற, அதீத இன்பத்தை, நம்முடைய உயிராற்றலின் மூலமாகவும், அதன் வழியாக வருகின்ற ஜீவகாந்தம் என்ற இயக்கத்தாலும் பெறுகின்றோம். பாலுறவில் இந்த ஜீவகாந்தம் தன் இழப்பில் கூடுதலாக செலவாகிறது என்பதும் உண்மை. அதனால் அந்த இழப்பை ஈடு செய்ய, உயிரில் ஏற்படும் மாற்றம், ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், அது நமக்கு அதீத இன்பமாகவும் தோன்றுகிறது. ஆனால் அது தொடருமானால், உயிரிழப்பும் நேரலாம். கவனம்.

வாழ்க வளமுடன்.


What is VithuNatham as Sanskrit? As woman have it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வித்துநாதம் என்றால் என்ன? அது பெண்களுக்கும் உண்டா?


பதில்:

நாம் இந்த உலகில் பிறப்பதற்கு காரணமே, வித்து நாதம் சேர்க்கைதானே?! வித்து என்பது ஆண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும், நாதம் என்பது பெண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும். ஆனால் பிரித்துச்சொல்லாமல், வித்துநாதம் என்றுதான் அக்காலம் முதல் சொல்லுவது வழக்கம். பெண்களுக்கும் உண்டா? என்று கேட்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு, காம இன்பத்தின் உச்சத்தில், ஆண்களுக்கு வெளிப்படுவது போலவே வெளிப்படுவது இல்லை. ஏனென்றால் பெண்களுக்கான பாலுறவு சக்தி என்ற நாதம், ஆண்களுக்கான பாலுறவு சக்தியான வித்து (விந்து) போல இல்லை என்பதே உண்மை. இதனால் வெளிப்பட்டாலும் கூட அதை நாம் தெரிந்துகொள்வதும் கடினமே. இதன் காரணமாக, பெண்களுக்கு இல்லை என்று கருதுவிடக்கூடாது.

பெரும்பாலும் அது ஏதும் நிறமற்ற நீர் போல, திரவம் போல வெளிப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

இந்த நாதமும், வித்துவும் கூடி, சக்திபெற்று, அதன்வழியாகவே கருமுட்டையை அடைந்து ஜீவனாக வளரும்படி இயற்கை வியத்தகு நிகழ்ச்சியை நடத்துகிறது. எனவே வித்து நாதம் என்பது, ஆண், பெண்ணுகான பாலுறவு சக்திதான் என்பதை அறிந்து கொள்க.

முக்கியமாக, இந்த வித்துநாதம், இயல்பாக திணிவு பெற்றால்தான், பாலுறவில் ஆர்வம் வரும். ஆனால் இக்காலத்தில், அப்படியல்லாது ஆர்வத்திலும், பழக்கத்திலும், விருப்பத்திலும் அதை வெளியேற்றி இன்பம் அடைவது என்று பருவ வயதினரும், இளம் வயதினரும் வாழ்கிறார்கள். வித்துநாதம் வீணாக வெளியேறினால் அது உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கும். எனவே அப்பழக்கத்தை, தகுந்த ஆலோசனையோடு மாற்றிடவேண்டியது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.