CJ for You: saint

saint

Showing posts with label saint. Show all posts
Showing posts with label saint. Show all posts

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

How the yogi can understand the simply human problems and life struggles?


மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


பதில்:

இதே கேள்வியை, இப்போது மட்டுமல்ல, எக்காலத்திலும் வாழும் மக்கள், அவர்களை வாழ்விலும், தரத்திலும், பிறவியிலும் உயர்த்த வழிகள் சொல்லும் உயர்ந்த யோகிகளை, ஞானிகளை, மகான்களை பார்த்து அப்படித்தான் கேட்கிறார்கள். இனிவரும் காலங்களில் வெகு சிலர் மட்டும் கேட்பார்கள். ஏனென்றால், இப்போது உலக அளவில் நல்ல ஆன்மீக முன்னேற்றம் வளர்ந்து பரவியுள்ளது என்பதே உண்மை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷியிடமும், இதேபோலான கேள்வியை, வெளிநாடுகளிலும், நம் இந்தியநாட்டின் நகரங்களிலும் அவரின் ஆன்மிக சொற்பொழிவும், மனவளக்கலை பயிற்சியும் அளிக்கும் காலங்களில், அவரிடமே நேரடியாக கேட்டிருக்கிறார்கள். 1986 ம் ஆண்டுகள் வரையிலும், அவர் ஆறு மாதங்கள் உலகநாடுகளில் ஆங்கில மொழிவழியான பயிற்சிகளும், டெல்லி,  மும்பை போன்ற இந்திய நகரங்களிலும் பயிற்சியை வழங்கிவந்தார். அதன்பிறகுதான் நிலையாக, ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் இருந்தே தன் பயிற்சிகளை வழங்கிவந்தார்.

‘ஒரு யோகியாக, எல்லாவற்றையும் விடுத்து, தனித்து வாழ்கின்ற ஒருவருக்கு, எங்களுடைய கஷ்டங்களெல்லாம் எப்படி தெரியும் என்றுதான் அன்பர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள். நான் ஒன்றும் நேரடியாகவே யோகியாக பிறக்கவில்லையே. உங்களைப்போலவே நானும் பிறந்து வாழ்ந்து, வாழும் பொழுதே குடும்ப கஷ்டங்களை அனுபவித்து, கல்வி படிக்க முயன்று முடியாமல், வேலை பழகி, இரவும் பகலும் உழைத்து, என்னளவில் பணம் சம்பாதித்து, இறை என்பது என்ன? ஏன் இந்த கஷ்டம்? என்ற கேள்விக்கு விடைதேடி அலைந்து, திரிந்து, யோகம் கற்றுக்கொண்டேன். ஒருவேலை பார்த்தால் போதாது என்று, கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வேலை பார்த்து சம்பாத்தியம் பெற்றேன். பார்க்கும் வேலையிலும் கிடைத்த மனம் ஒவ்வாத பிரச்சனைகளை சமாளித்தேன். சொந்தமாகவும், குழுவாகவும் தொழில் துவங்கி நடத்திய அனுபவமும் கண்டேன், அதில் நல்ல உயர்வும், தீடீர் நஷ்டமும் கூட உண்டுதான். இதற்கிடையில் திருமணமும் செய்துகொண்டேன். அதுவும் ஒன்றல்ல இரண்டு. அதில் கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சனைகள், வருத்தம், கவலை, மகிழ்ச்சி எல்லாம் உண்டு. வறுமையும், செழிப்பும், வேலையும், வேலையின்மையும், உழைப்பும், அதற்கேற்ற உயர்வும், உதவியும், ஏமாற்றமும், தாழ்வும், பழிவாங்கப்படுதலும் இப்படியாக எல்லாமும் நானும் அனுபவித்திருக்கிறேன்’ என்றுதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னுடைய பேச்சிலும், எழுத்திலும், கவிதைகளிலும் இத்தகைய குறிப்பை அவர் பதிவும் செய்திருக்கிறார்.

இதைவிட வேறென்ன வாழ்க்கை குறித்த அனுபவம் வேண்டும்? சொல்லப்போனால் நம்மையும் விட கொடுமையான வாழ்க்கை அனுபமாக அல்லவா இருக்கிறது? நாம் ஏதோ பராவாயில்லையே என்றுதான் நமக்குத் தோன்றும். பொதுவாக சொல்லுவார்கள் அல்லவா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்று, அதுபோல பார்ப்பதற்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அக்கரைக்குச் சென்றால்தான் அங்கேயும் இதேபோல வறட்சியும் உண்டுதான் என்று தெரியவரும்.  எப்போதும், யாரும், எவரும் எடுத்த எடுப்பிலேயே நீதி போதனை செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனமே அவர்களை தண்டித்துவிடும் என்பது இயற்கை நீதி. வாழ்ந்து கெட்ட மனிதர் என்றொரு சொற்றொடரும் நாம் அறிவோம். அப்படியான வாழ்க்கை அனுபவத்தை பெற்றவர்தான் நமக்கு வழிகாட்டவும் முடியும். இப்படிப்போகாதே, பாதையில் முட்கள் இருக்கிறது என்று யாராவது போதனை செய்தால், நீ உன் வேலையைப்பார், எல்லாம் எனக்குத் தெரியும் நீ சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த முட்பாதையில் கால்வைத்து நடப்பீர்களா? ஆனால் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்கள் பயணிக்கிறார்கள்.

ஆனால், உண்மையான ஞானியும், யோகியும், மகானும் ‘நான் சொல்லுவதை கடைபிடியுங்கள்’ என்று கட்டாயப்படுத்தவே மாட்டார்கள்.

வாழ்க வளமுடன்

-

Suppression for Yoga in ancient times


விந்துவை அடக்குதல் சாத்தியமானதா?


அந்தக்கால வாசியோக முறைகள் வழியாக யோகத்தில் இணைந்துகொண்ட அனைவரும், பிரம்மச்சார்யம் என்ற இளமைநோன்பு ஏற்று, வீடு, சுற்றம், ஊர், உலகம், ஆசாபாசம் விலக்கி, தனியே காடுஏகி, விந்துவை அடக்கியே, குண்டலினியை மூலாதாரத்திலிருந்து, பயிற்சிகளால் உயர்த்தி ஏற்றினர் ஓவ்வொரு ஆதாரமாக ஆக்கினை வரை! இதற்கு பன்னிரண்டு ஆண்டுக்காலம் ஆகிற்று. அப்படியானால்?

ஆம் அவர்கள் இல்லறவாழ்வை விட்டு விலகி, பாலுறவையும் தவிர்த்துத்தான் பன்னிரண்டு ஆண்டுக்காலம்...

எதனால் அப்படி செய்தார்கள்? அப்படி என்ன தேவையும் அவசியமும்? என்ற கேள்விகளுக்கு இந்த வேதாத்திரி யோகா, வகுப்பறை காணொளி உங்களுக்கு உதவிடும். இணைப்பு கீழே இருக்கிறது. காண்க!

அத்தகைய முன்னோர்களை, சித்தர்களை, ஞானிகளை, மகான்களை போற்றி வணங்குவோம். அவர்கள் பெற்ற அனுபவமே, நமக்கு குருமகான் வேதாத்திரி மகரிசியின் எளியமுறை குண்டலினி யோகம் ஆகிற்று!

இறையாற்றலே, எளிமையாக்கி தந்ததுபோன்ற அதிசயம் தானே?! வாழ்க வளமுடன்!

-
-

Is it true to say that there is a purpose in the birth of man?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு நோக்கம், மனிதனின் பிறப்பில்  இருப்பதாக சொல்லுவது உண்மையா?


பதில்:

இந்த கேள்விக்கான பதிலை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையிலேயே புரிந்துகொள்ள முடியும் என்பதே உண்மை. நான் தனியாக விளக்கிச் சொல்வதற்கு தேவையே இல்லை என்று நினைக்கிறேன். உங்களைப்போலவே எல்லோருமே இந்த சந்தேகத்தில்தான் இருந்திருப்பார்கள். நாளடைவில், தங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அது தொடர்பான துன்பம், இன்பம், குறை, நிறை இப்படி பலவகைகளில் அனுபவம் பெறும்பொழுது, நம்முடைய வாழ்வில், இப்படியான சராசரி வாழ்வையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்ற கேள்வி பிறந்துவிடும்.

ஒருசிலர் தானாகவே அதற்கான பதிலை கண்டுபிடித்து அதற்கான வழியில் செல்ல தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் பக்தி, வேதாந்தம், ஆன்மீகவாதிகள், மகான்கள், ஞானிகள் தருகின்ற விளக்கங்களின் வழியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். சிலர் தன்னுடைய வாழ்வில் கிடைக்கக்கூடிய விளக்கத்திற்காக, யோகத்தில் தன்னை இணைத்துக் கொள்வார்கள்.

ஆனாலும் பெரும்பாலோர், நம்முடைய பிறப்பில் எது இருந்தால் என்ன? இப்போது வாழ்வோம், அதெல்லாம் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து, வழக்கமான வாழ்வையே வாழ்ந்து அனுபவிக்க தயாராகிவிடுவார்கள். நான் பிறந்தே தப்பு, நான் பிறந்த நேரம் சரியில்லை, என் ஜாதகம் பிரச்சனை, கிரகக்கோளாறு, போன பிறவியில் நான் செய்த பாவம், தெய்வத்திற்கு என்மீது இரக்கமே இல்லை, கடவுளே இல்லை, எல்லாம் பொய், வாழ்க்கையும் பொய் என்பதாக அப்படி இப்படி என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களை வேறொன்றும் செய்யவேண்டாம், அவர்கள் தேர்ந்தெடுத்தது அது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?

நீங்கள் இந்த கேள்வி கேட்டதே ஒரு நல்ல நகர்வு என்று சொல்லலாம். அதற்காக உங்களை பாராட்டுகிறேன்.

மேலும் தெளிவான விளக்கம் பெற, இந்த காணொளியில் கேட்டு அறியலாம். உண்மைகளை அறிய குரல்வழி விளக்கம் போதுமானது என்பதால், குரல்பதிவாக தந்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னதான் யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


பதில்:

பக்தி என்பது நிச்சயமாக வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு சிலருக்கு, பக்தியும், கடவுளும், வழிபாடும் அவசியம் இல்லை என்று முடிவுக்கு வரலாம். அவ்வாறே வாழ்ந்தும் வரலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் ஒரு சராசரி மனிதருக்கு பக்தி அவசியமே! முக்கியமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது, இந்த உலகுக்கான நல்ல பழக்க வழக்கங்களை, அக்குடும்பத்தின் பக்தி வழியில்தான் பெற்று வளர்ந்து வருகிறது. மிகச்சில குடும்பங்களில் அந்த பக்தியும் இல்லாது போவதும் உண்டு. அதாவது, பெற்றோருக்கு பக்தி இல்லை என்றால் அது குழந்தைக்கும் இல்லை என்றே வளர்ந்து வரும். இப்படியான குழந்தைகள் தான் பக்தியும் இல்லை, கடவுளும் இல்லை, வழிபாடும் தேவையில்லை என்ற நிலையில் வளர்ந்து நம்மோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

யோகத்திற்கு அடைப்படையே பக்தி தான். அந்த நோக்கத்தில்தான், அந்நாளில் முன்னோர்கள், பக்தியில் மக்கள் தங்களை உயர்த்திக்கொண்டால், யோகமும் எளிதாகும் என்று வழிபாடு முறைகளை அமைத்தார்கள். ஆனால் அது இந்நாளில் உண்மை சிதைந்துவிட்டது.

யோகத்தில் இணைகின்ற யாருமே, பக்தியை விட்டு விலகவேண்டியதில்லை. மாறாக அந்த பக்தியில் இருக்கிற உண்மை என்ன? என்பதை புரிந்துகொண்டால் போதும். இதுவரை எதை வணங்கினோம்? எதற்காக வணங்கினோம்? அது அந்த இறை என்பதும், கடவுள் என்பதும் என்ன? என்ற உண்மைகளை விளங்கிக் கொண்டால் போதுமானது. விளங்கிக் கொண்ட உண்மையின் வழியாக நீங்கள் பயணித்தால் போதுமேதவிர, பக்தியை தவிர்க்கவோ, விட்டு விலகிடவோ தேவையில்லை.

எனவே, பக்தியையும் யோகத்தையும் குழப்பிக்கொள்ளாமல். பக்தியில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தானாக மாற்றத்தை உருவாக்கித் தந்திடும்! 

வாழ்க வளமுடன்.

Why is difficult as following the Vethathiriyam? Only easy to Maharishi.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தை கடைபிடிக்க கடினமாக இருக்கிறது. மகரிஷி தனியாள் என்பதால் அவருக்கு சுலபம் தானே?!


பதில்:

இப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தவிதமான கேள்வியை, குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் மூலமாக எதிர்கொண்டுள்ளார். அதை அவரே சொல்லியும் உள்ளார் என்பதுதான் சிறப்பு. ஒரு தத்துவ விளக்கம், வெளிநாட்டில் நடத்திக்கொண்டிருந்த பொழுது ஒருவர், உங்கள் கேள்வி போலவே கேட்டுள்ளார்.

‘சுவாமிஜி, நீங்கள் ஒரு துறவி. அதனால் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது உங்களுக்கு சுலபமானது. ஆனால் நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்கு மிக கடினம், முடியாததும் கூட’ என்று கேட்கிறார்.

‘நான் துறவி என்று சொல்லவில்லையே, நீங்கள் நினைப்பதுபோல் நான் துறவியும் அல்ல. நானும் உங்களைப்போல இல்லறத்தில் வாழ்ந்து நிறைவு கண்டு, பிறகு யோகத்தில் என்னை இணைத்துக்கொண்டு பயணிக்கிறேன். மேலும் ஒன்று அல்ல இரண்டு மனைவிகள்’ என்று மகரிஷி பதில் தந்திருக்கிறார்.

இப்போது கேள்வி கேட்டவர் எப்படியான வியப்புக்கு உள்ளாவார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? மேலும் நான் விளக்கமாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

சரி, நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறலாமா? நீங்கள் வேதாத்திரியத்தை இதற்கு மேலும் தொடரவேண்டாம். சற்று நிறுத்தி வைத்துவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய, என் வாழ்க்கை விளக்கம் என்ற தலைப்பிலான நூலை வாங்கி படியுங்கள். முழுவதும் படித்து முடித்துவிட்டு, இரண்டு மூன்று நாள் சிந்தனை செய்யுங்கள். இந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியமும், நான் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளும் தேவைதானா? இதை தொடரலாமா? விட்டுவிடலாமா? வேறு என்ன செய்யலாம்? என்று கேள்விகள் கேட்டு அதற்குறிய பதிலை தேடுங்கள். என்னிடமோ, வேறு யாரிடமோ ஆலோசனை கேட்காதீர்கள். உங்களுக்குள்ளாக என்ன பதில் விளக்கம் வருகிறதோ அதை கடைபிடியுங்கள். முடிவு எதுவாக இருந்தாலும் அது ‘உங்களுக்கு நல்லதே’ ஆகும்!

வாழ்க வளமுடன்.

Why I can't understand the truth of Yoga? Please Explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் உண்மையை ஏன் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கமுடியுமா?


பதில்:

அந்த அளவிற்கு யோகத்திற்கான விளக்கம், மனிதர்களால் குழப்பமுற்று இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணம். நீங்கள் சாதாரணமாக யாரிடமாவது போய்

‘ஐயா, நான் யோகத்தில் இணைந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியுமா?’ என்று கேட்டுப்பாருங்கள்.

‘அதெல்லாம் காலம் போன கடைசியிலே போய்க்கலாம், இப்போ உன் பொழைப்பை பாருப்பா’ என்று பதிலளிப்பார்கள். இன்னும் கூடுதலாக,

‘உனக்குலாம் இன்னும் வயசு இருக்கு, நல்லா அனுபவிச்சுட்டு போ. நல்ல வயசுலயே ஏன் சாமியாரா போகனும்னு சொல்ற. அதுக்கெல்லாம் தனியா பிறப்புன்னு ஒன்னு அமையனும், அப்போ பாத்துக்கலாம் போ’ என்றும் சொல்லுவார்கள்.

ஏன் இந்த பிறப்பை அதற்காக, உபயோகப்படுத்திக்கொள்ள முடியாதா? ஏற்கனவே தாய் தந்தையால் முடியாத நிலையில்தானே, என்னுடைய பிறப்பும் நிழந்திருக்கிறது. அவர்களுக்காகவும், என் மூதாதையருக்காகவும், நான் என் வாழ்நாளில் யோகத்தில் இணையக்கூடாதா? இதற்குமேலும் விளக்கமறியாமல், என் பிள்ளைகளையும் பெற்று, அவர்களையும் இப்படி வாழ்விட்டு, இந்த உலகில் சராசரி இன்பதுன்பங்களில் வாழ்ந்துதான் சாகவேண்டுமா? இப்படியே என் பரம்பரை போய்க்கொண்டே இருந்தால் என்றைக்கு, கர்மா என்ற வினைப்பதிவை தூய்மை செய்து, நான் யார்? என்று தன்னையறிந்து உண்மை விளக்கம் பெற்று, பிறவிக்கடனை தீர்ப்பது? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

பிறந்தால் துன்பமும் இன்பமும் இருக்கும் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. துன்பம் என்பது இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேதாத்திரி மகரிஷியும், துன்பம் என்பது தனியாக இல்லை, இன்பத்தின் அளவு மீறும்பொழுது, ஏற்படும் பொருத்தமில்லாத உணர்ச்சி தான் துன்பம் என்று விளக்கமாக சொல்லுகிறார்.

எனவே யோகம் என்பது, நாம் வாழும் முறையை, வாழ்க்கையை, இன்பத்தை முறைப்படுத்திக்கொண்டு, அறநெறியோடு வாழ்கின்ற வழிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இந்தக்காலத்தில், அந்தக்கால சாமியார்களை உதாரணமாகச் சொல்லி, யோகத்தில் இணையாமல் இருப்பதும் முறையில்லை. யோகத்தில் இருந்தாலும் கூட, வழக்கமான உலக கடமைகளில் தவறாது, உழைத்து, பொருளீட்டி வாழ்வதில் தவறு ஒன்றுமில்லை. (இந்தக்கருத்துக்கு பலநூறு எதிர் பின்னூட்டங்கள் வரலாம்)

ஊருக்கும், உலகுக்கும் பாரமாக, மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதற்கு பதிலாக, தானாக உழைத்து பொருள் சம்பாதித்து, ஏழைக்கும், பொருளீட்ட முடியாதோர்க்கும், இப்படி பேசுபவர்களிடம்கூட கொடுத்து உதவி வாழலாமே!

எனவே யோகம் என்றால் வாழும் நெறியை கற்றுக்கொள்வதுதானே தவிர வேறு அர்த்தம் ஏதுமில்லை என்று அவர்களிடம் நீங்களே சொல்லி விளக்குங்கள்!

வாழ்க வளமுடன்.

How the thinking of the Guru in mind will helps?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குருவின் நினைவு எந்த அளவுக்கு நம்மை உயர்த்திடும் என்று விளக்குவீர்களா?!


பதில்: 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 

தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே!

என்று திருமந்திரம் தந்த, மகான் திருமூலர் குறிப்பிடுகின்றார். தனக்கு யோக தீட்சை தந்த குருவை மட்டுமின்றி, எந்த ஒரு குருவையும் நாம் நினைத்து உயரலாம். அதை இங்கே வரிசைப்படுத்தி சொல்வதிலேயே நமக்கு புரிந்துவிடும். ஒரு குருவை பார்ப்பதும், அவர் அருகில் இருப்பதும் ஒருவகை. குருவின் பெயரையே மந்திரமாக, வாழ்த்தாக சொல்லி மகிழ்வது ஒருவகை. குருவின் சொற்பொழிவை, வார்த்தைகளை கேட்டு உணர்வது ஒருவகை. குருவையே நினைவில் நிறுத்தி, அவரை மனக்கண்ணால் கண்டு மகிழ்வதும், சிந்திப்பதும் உயர்வான வகை என்று திருமூலர் தன் கவியில் விளக்குகிறார்.

மனம் எப்போதும், ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டே இருக்கக்கூடியது. அது தானாகவும் நிகழும், நாமே விரும்பியும் சிலவற்றை பற்றிக் கொள்வோம். அந்த வகையில்,  குருவை நாம் நினைத்து சிந்தித்தால், நிச்சயமான உயர்வு உண்டு என்பதே உண்மை ஆகும்!

வாழ்க வளமுடன்.

Family lifestyle is obstructs to the yoga?


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?


பதில்:

இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?

யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.

ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.

தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.

வாழ்க வளமுடன்.

Why we need to worship ancestors and is it a nonsense?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

Rameshwaram, Tamilnadu, India / image by Dinamalar


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முன்னோர்களை நினைப்பதும், அவர்களை  வணங்குவதும், வேண்டிக்கொள்வதும், இறந்துபோன அவர்கள் நற்கதி அடையவும் வேண்டிக்கொள்வது அவசியம் தானா? நவீன அறிவியல் உலகில் வாழும் நமக்கு, அது ஒரு முட்டாள்தனம் இல்லையா?


பதில்:

மனித வாழ்வு குறித்து, எந்த சிந்தனையும் அக்கறையும், ஆராய்ச்சியும் இல்லாத நிலையில் வாழக்கூடிய மனிதனுக்கு தோன்றக்கூடிய கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மனிதன், இயற்கையின் முழுமையாக, பரிணாமத்தின் வழியாக வந்தவன். திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரோ தீடீரென்று உருவாக்கி உலவ விடவும் இல்லை. ஏதுமற்ற ஒன்றாக இருந்து, கருவாகி, பெண்ணுக்குள், கருப்பையில் உருவாகி, வளர்ந்து, முழுமைபெற்று, அவள் பிரசவித்து, வளர்த்து ஆளாக்கி, மூன்று வயதிற்கு பிறகுதான், தான் யார்? என்ற நிலைக்கே ஒரு குழந்தை நிலைத்து வருகிறது. அதன்பிறகு, நான் என்ற தன்முனைப்பில் ஊறித்திழைக்கிறது.

அந்த குழந்தைக்கு, இதற்கு முன் எங்கிந்தோம் என்று நினைவில் இல்லை. அக்குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, உலக இன்பங்களெல்லாம் அனுபவித்து, வயோதிகமடைந்து இறந்தும் போகிறது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. அதை பிறருக்கு சொல்லவும் வழியில்லை. வாழும் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் தெரிந்து கொள்வதில்லை. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறக்கிறோம் என்று மூன்றே நிலைபாடுகளில் தன் வாழ்வை சுருக்கிக்கொள்கிறோம். உண்மைதானே?

ஆனால், உண்மை அப்படியில்லையே! மனிதன் ‘நான் யார்?’ என்று கேட்டு விடையறியும் வரை அவனுக்கு/ அவளுக்கு பிறவிப்பயணம் தொடரும். தன்னையறிதலும், அதன் வழியாக தனக்கு மூலமான இறையாற்றலை உணர்வதும் கடமையாகிவிடுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானம் இதை ஏற்பதில்லை.

உண்மையாக, நவீன விஞ்ஞானம், தன்னையறிந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாக்கித்தந்த பாதைக்கு எதிர் திசையில் அழைத்துச்செல்கிறது என்று சொல்லலாமா என்றால், அதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் உண்மை நோக்கித்தான் செல்கிறது என்பது உண்மை, அந்த உண்மை எது என்பதை, தெரிந்துகொள்ளும் அதற்கு நிறைய இழப்பும், காலமும் ஆகலாம். அதுவரை இப்படியான கேள்விகள் வரும்.

நம் முன்னோர்கள் இன்றி நாம் இல்லை. இறந்துபோனவர்கள் குறித்த அக்கறையும், கவலையும் நமக்கு இல்லை எனினும், அவர்களின் நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் என்பது உண்மைதானே? அதுபோல அவர்களின் இனமறியாத ஏதோ நம்மிடம் தங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கலாமே? அதை ‘கர்மா என்ற வினைப்பதிவு’ என்று மனிதனின் வாழ்வை, முழுமையை நோக்கி திருப்பிட ஆர்வம் கொண்ட ஞானிகள் சொல்லுகிறார்கள். அதை தீர்க்கவும், போக்கிடவும் நமக்கு வாய்ப்பு உள்ளது. நாம் அதை தீர்க்காவிட்டால், நம் வழியாக, நம்முடைய குழந்தைக்கும் அது கடத்தப்படும் என்பது இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

அதனால்தான், முன்னோர்களை நினைப்பதும், அவர்களை வணங்குவதும், அவர்கள் நற்கதி அடைய வேண்டுவதும் தேவை என்ற கருத்தியல் உருவானது. ஒருவகையில் யோகத்தில் இணைய ஆர்வமில்லாதவர்களுக்கு உதவும் என்பதே உண்மை. எனினும் இது முட்டாள்தனம் என்று நினைத்தால், அது அவரவர் விருப்பமே. ஏனென்றால் வாழும் வாழ்க்கை என்பது அவரவர் உரிமை.

வாழ்க வளமுடன். 

How we get extreme feel in life bond and why called is as eroticism


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடலுறவின் பொழுது அதிக இன்பம் எழுவது ஏன்? ஆனாலும் அதை சிற்றின்பம் என்று சொல்லுவது ஏன்?


பதில்:

இந்தக்கேள்வி, எல்லோருக்கும் பயன்பெறும் பதிலை பெற்றுத்தரக்கூடிய கேள்வி, மனிதவாழ்வின் தொடக்கமே, பாலுறவில்தானே ஆரம்பிக்கிறது. ஆணும்  பெண்ணும் இணைந்துதான் ஒரு புதிய உயிரை உருவாக்ககூடிய தேவையை, இந்த இயற்கையும், தெய்வீகமும் ஏற்படுத்தி, பாதுகாத்து முழுமையாக்கியும் உள்ளது. இந்த பாலுறவு, அதன்வழியான புதிய உயிரனம் என்ற பண்பு, ஈர் அறிவு பரிணாமத்தில் தொடங்கிவிடுவதாக, விஞ்ஞான அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், தன்னுடைய பருவ வயதில் ஏற்படும் பாலுறவு ஆர்வம் இயல்பானதே, இயற்கையானதே அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாம் வாழும் உலகில், சமூக அமைப்பில், ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அளவுமுறை, வயது, வழிகள், சட்டம், விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியநாட்டில் பருவ வயது என்பது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என்றும் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆணுக்கு 14 வயதிலும், பெண்ணுக்கு 10 முதல் 14 வரையிலான காலத்தில் பருவ தூண்டலும், அதன் உயர்வும் கிடைத்துவிடுகிறது.

உண்மையாகவே இந்த 10 முதல் 14 வயதில், பாலுறவு குறித்த விளக்கமும், அதன் விளைவும், அதை சமாளிக்கக் கூடிய தகுதியும் இருக்குமா என்றால் இல்லை. அதனால், இக்கால கட்டத்தில் பெரியவர்கள் / பெறோர்களின் / அறிஞர்களின் உதவியும், அக்கறையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. இல்லையேல், பருவ வயது ஆணும் பெண்ணும் பாலுறவு இன்பத்தில் ஆழ்ந்து, அதன் தாக்கத்தில் தங்கள் வாழ்வையும், எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்ணுக்கு அந்த வயதில், குழந்தை உருவாகிவிடுமானால், அது மிகப்பெரும் சமுதாய கேடாக மாறிவிடும். அந்த வயதில் அவள் குழந்தையை பெற்றெடுக்கவும் வலிமையற்று இருப்பாள், வளர்க்கவும் முடியாது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, திருமணம் என்ற பந்தம் அமைத்து, இவளுக்கு இவன், இவனுக்கு இவள் என்று ஒப்புதலையும், சமூகம் ஏற்கும் நிலையையும், இவனின், இவளின் குழந்தை இது என்ற நிலைபாட்டையும் உருவாக்கிக் தருகின்றனர். இதனால்தான், பாலுறவை, தகுந்த வயதுவரை காத்திருந்து பெறவேண்டும் என்ற நிலையில்தான் அதை ‘சிற்றின்பம்’ என்று வாழ்வோர், அறிஞர்கள் சொல்லிவருகின்றனர், 

மேலும் யோகத்தில் இருப்பவர்களும் ‘சிற்றின்பம்’ என்று சொல்லுவது வழக்கம். அதற்கான காரணம், யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுணர்வு பெற்றால், அதுதான் பேரின்பம் என்ற கருத்தில், மற்றது எல்லாம் சிற்றின்பம், குறையுடைய, முழுமையடையாத, நிறைவைத்தராத இன்பம் என்று சொன்னார்கள்.

சரி, உடலுறவின் பொழுது ஏன் அதிக இன்பம் எழுகிறது? அல்லது அப்படித்தோன்றுகிறது? இதற்கான காரணம், நாம் உணர்கின்ற, பெறுகின்ற, அதீத இன்பத்தை, நம்முடைய உயிராற்றலின் மூலமாகவும், அதன் வழியாக வருகின்ற ஜீவகாந்தம் என்ற இயக்கத்தாலும் பெறுகின்றோம். பாலுறவில் இந்த ஜீவகாந்தம் தன் இழப்பில் கூடுதலாக செலவாகிறது என்பதும் உண்மை. அதனால் அந்த இழப்பை ஈடு செய்ய, உயிரில் ஏற்படும் மாற்றம், ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், அது நமக்கு அதீத இன்பமாகவும் தோன்றுகிறது. ஆனால் அது தொடருமானால், உயிரிழப்பும் நேரலாம். கவனம்.

வாழ்க வளமுடன்.


Medicine that doesn't work?!


வேலை செய்யாத மருந்து?!



கேட்காமல் கொடுப்படும் எந்த மருந்தும் நன்கு பலன் அளிக்காது. இந்த வார்த்தையின் உண்மை என்னவென்றால், அந்த மருந்துக்கு மதிப்பிருக்காது, அதாவது நோயாளி, கேட்காமல் வைத்தியர் கொடுத்த மருந்து அல்லவா? அதனால் இது வேலை செய்வதில் சந்தேகம் கொண்டு, நோயாளி நம்பிக்கை இழப்பார். சில நேரம், வைத்தியரையே “ஆகாத” வைத்தியர் என்று நோயாளி நினைத்துவிடவும் வாய்ப்பு அதிகம்.

“ஐயோ என்னால், தாங்க முடியவில்லை. இந்த நோய் துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றவாறு நோயாளி நொந்து, வைத்திரியரிடம் மருந்து கேட்டிருந்தால், வைத்தியர் எந்த மருந்தை கொடுத்திருந்தாலும் கூட, நோயாளியின் நம்பிக்கையில் குணமாகிவிட சாத்தியம் உண்டு. 

இந்த உதாரணங்களைப்போலவே, நவீன கால உலகில், YouTubeல், வேதாத்திரிய சானல் வழியாக யோக, தவ, இறை உண்மைகளை விளக்கும் காணொளிகளை நாங்கள் தருவதும், அதை அன்பர்கள் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அன்பர்களின் ஆதரவு, வேதாத்திரிய சானலுக்கு உண்டு. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஆனால் உண்மைகள் மிகுதியாக போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.

அன்பர்களே, இந்தக்கதையை கேளுங்கள்.

ஒரு ஞானியைக் கண்டு, ஒருவன் ,

“எனக்கும் யோகத்தில் ஆர்வமாக இருக்கிறது. கற்றுக்கொடுங்கள்”

“அப்படியா நாளைக்காலை என் ஆசிரமத்திற்கு வா”

“இன்றைய நாளிலேயே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?” என்றான் ஆர்வத்தில்.

“நாளைதான் உனக்கு பரிட்சை, அதில் தேர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன்”

மறுநாள் அதிகாலை ஆசிரமம் சென்றுவிட்டான். ஞானி அப்பொழுதான் ஆற்றில் குளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

“என்னோடு வா”

இவனும், ஞானியோடு கூட நடந்து ஆற்றை வந்தடைந்தான். ஞானி அவனின் கை பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றுக்கு நடுவில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். திடீரென, அவனின் கழுத்தை பிடித்து அழுத்தி, தலை முழுதும் நீருக்குள் இருக்குமாறு அழுத்தப்பிடித்து அமுக்கினார். பதறிப்போய் அவன் தன்னை விடுவித்துக்கொள்ள போராடினான். ஞானி தன் கைகளை விலக்கி அவனை மேலே எழச்செய்தார். அவனோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.

“இப்போது உனக்கு என்ன தேவையாக இருந்தது?” என்று ஞானி கேட்டார்.

“மூச்சுக்காற்று”

“அதுபோல உனக்கு எப்போது யோகம் தேவைப்படுகிறதோ அப்போது என்னிடம் வா” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் உன்னை ஒப்புவிக்க உன் மனம் எப்பொழுது தயாராகிறதோ அதுவரை காத்திரு” என்றார்.

சீடனாக வந்தவனுக்கு, அப்பொழுதான் ஒரு ஞானியிடம், யோகம் கற்பதற்கான தகுதி என்ன என்பதை உணர்ந்தான்.

நாளை இன்னொரு உதாரண கதையோடு தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்!




Is the whole universe in astrology chart? Part 3


 முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?

மூன்றாம் பகுதி




copyright to dummies.com


copyright to people.com



copyright to blacktailsolarhomes





அன்பர்களே,

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PVN7GWG

-

Present by
Sugumarje