Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation. | CJ

Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation.

Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation.


உங்களுக்குத் தெரியுமா? குண்டலினி சக்தியாற்றலும் யோக சாதனையும் உண்மை விளக்கம். 

    
        குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், பல்லாண்டு காலமாக, கடின முறைகளால் சிக்கி இருந்த, குண்டலினி யோகத்தை, தான் கற்றுத் தேர்ந்து, உண்மை உணர்ந்து, அதை விஞ்ஞானத்தோடு உதாரணங்களால், விளக்கி, புரியவைக்கும் வழியில், திருத்தி அமைத்தார், எளியமுறை குண்டலினி யோகமாக, இல்லறத்தை விட்டு விலகிடாமல், பருவம் வந்த அனைவருமே, ஆண், பெண் பேதமின்றி கற்று, நான் யார்? என்ற கேள்விக்கான பதிலைப் பெற்று, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தை பெற வழிவகை செய்தவர். குண்டலினி சக்தியாற்றல் குறித்தும், யோகசாதனை குறித்தும் சொல்லும் விளக்கம், இதோ, 

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல், கீழ்நோக்கி போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.  

  மனிதன் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம்.  

  இந்த உயிர்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும். 

  ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும்.  

  இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும். 

        இந்த குண்டலினி உயர்த்துதல், தேர்ந்த குருவின் வழியாக, தீட்சையாக மட்டுமே பெற வேண்டியது அவசியம். சுயமாகவோ, தானாகவோ, அனுபவம் இல்லாதோரிடமோ, குறுக்குவழியிலோ, மந்திட உச்சாடன பூஜை வழியாகவோ செய்துவிடக்கூடாது. இதைக்குறித்த விளக்கம் அறிய, இந்த காணொளி தொகுப்பு உங்களுக்கு உதவலாம்.

-

குண்டலினி உயர்த்துதலும் ஆபத்து காரணிகளும் - Kundalini Raising and Risk Factors

https://www.youtube.com/playlist?list=PLQQJZk6S322lsF-zw6W4w-dLqJeJx2pyb

வாழ்க வளமுடன்.

-

மூலவடிவம்: அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.

-