CJ for You: modern world

modern world

Showing posts with label modern world. Show all posts
Showing posts with label modern world. Show all posts

Why can't you find time for exercise? How can this be changed? Give an explanation.


உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்கிட முடியாமல் இருப்பது ஏன்? எப்படி இதை மாற்றிக் கொள்ளலாம்? விளக்கம் தருக.


பெரும்பாலான அன்பர்களும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய ஆர்வமும், அதன் பலனை அடைவதற்கு ஆசையும் இருக்கிறது. ஆனால் நேரமின்றி தவிக்கிறார்கள். இவர்கள் எந்த வயது? என்று எடுத்துக்கொண்டால், முப்பது முதல் ஐம்பது வயதுக்குள்ளானவர்களாக இருப்பார்கள். இதில் ஆண்களும் பெண்களும் உண்டு.

முக்கியமாக, தங்கள் சூழ்நிலையில் சிக்கி இருப்பார்கள். வேறாக சொன்னால், அந்த சூழ்நிலையின் மீது பழி போடுவார்கள் எனலாம். இருக்கும் தேவைகளை நிறைவேற்ற பரபரப்பாக இருப்பார்கள். ஏதேனும் செய்தால் நல்லது என்றே இயங்குவார்கள். ஆனால், உடல்மீது அக்கறை இருக்காது. காரணம். தங்களை தாங்களே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? என்று கேட்டு, அதில் அதீத நம்பிக்கையும் கொள்வார்கள். கூடுதலாக, இவர்களின் மனம் அவர்களை விட பரபரப்பாக இருக்கும். சும்மா இருக்கவும் விடாது.

இதனால், எதைச் செய்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அடுத்து ஒன்றையும் செய்யலாமே? என்று கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு நேர சாப்பாட்டைக்கூட, திருப்தியாக, மன நிறைவாக ருசித்து, ரசித்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் பிறர் கேட்டால், ‘அருமை’ என்று சொல்லி விடுவார்கள். நான் எப்படியெல்லாம் அனுபவத்தேன் தெரியுமா? என்று கதையளப்பார்கள். அவ்வளவும் வார்த்தையாக மட்டுமே வரும், மனப்பூர்வமான அனுபவமாக இருக்காது.

இப்படித்தான் இவர்களின் ஒவ்வொருநாளும், கடந்து போய்க்கொண்டே இருக்கும். எல்லாம் தெரியும் என்ற நிலையிலும், எனக்கு இதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலும் நாட்களை கடத்துவார்கள். புதிதாக கற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அவற்றில் எது தனக்கு உகந்தது? தேவையானது? என்று பிரித்தறியாமல், தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல், குழப்பத்தோடு கைவிட்டு விடுவார்கள். ஆனால் தன்னை பெருமையாக வெளிப்படுத்திட தயங்கமாட்டார்கள்.

இந்த நிலைகளுக்கு மொத்தமான காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லை. அவர்களின் செயலுக்கும், இயக்கத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் மேலாக, பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இதை, ஒரு உதாரணமாக சொல்லுவது என்றால், சென்னை கடற்கரை முதல், தாம்பரம் வரை மின்சார ரெயில் வண்டி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒருவழியில் போகவும், இன்னொரு வழியில் வரவும் இருக்கிறது. இதில் நீங்கள் பயனிக்கும் பொழுது, எங்கே ஏறி, எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டவராக இருக்கவேண்டும். இந்த மின்சார ரெயில், கடற்கரையும் போகும், தாம்பரமும் போகும் என்பதால், நீங்களும் இங்கே அங்கே போய்க்கொண்டே இருக்கமுடியாது. எங்கே இருந்து ஏறி பயணிக்கிறீர்கள்? எங்கே பயணத்தை முடித்து இறங்க வேண்டும் என்று முடிவு செய்திட வேண்டியது முக்கியம்.

இதுப்போலவே, ஒருநாளில் நான் இந்த இந்த வேலைகளை, கடமைகளை செய்வேன், என்று முன்னதாக திட்டமிட்டு, உடற்பயிற்சிக்கு அரை நேரமோ, ஒரு மணி நேரமோ ஒதுக்கி, அந்த நேரத்தில், உங்கள் நிலைமையை, மன வேகத்தை, பரபரப்பை மாற்றி அமைக்க வேண்டும். வேறெதும் குறிக்கிடாத கவனமும், விழிப்பும் வேண்டும். நிச்சயமாக நேரம் இல்லை என்றால், உங்கள் தூக்கத்தை விடுத்து, முன்னதாக அந்த அரை மணி, ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு செலவழிக்கலாம். ‘ஐயோ, என் தூக்கம் போய்விடுமே என்றால், உடலே போய்விடுமே?’அதை கவனத்திக் கொள்க.

இப்படி விளக்கம் பெற்றும் என்னால் முடியாது, முடியவில்லை என்றால், உங்களிடம் மிகப்பெரிய குறை இருக்கிறது எனலாம். அதுதான் நேர மேலான்மை. ஒரு நாளை, நேரத்தை, சூழலை எப்படி, உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்பது, உங்களுக்குத் தெரியவில்லை. உடனடியாக அதை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் உடல்நலனில் நீங்களே அக்கறை செலுத்தவில்லை என்றால், எப்படியாகும்? இழப்பு வேறு யாருக்கு? இன்றே, இச்சிந்தனையை தொடங்குக. உடல்நலம் பெற்று சிறப்பாக வாழ்க.

வாழ்க வளமுடன்.

-

Is exercise necessary even in harmony with nature? Is normal life enough? What is your explanation for this?


இயற்கையோடு ஒத்து வாழக்கூடிய நிலையிலும், உடற்பயிற்சி அவசியம்தானா? இயல்பான வாழ்க்கை போதுமே? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?


நீங்கள் சொல்வது சரிதான். இயற்கையோடு ஒத்த தன்மையில், வாழக்கூடிய நிலையில், அன்றாட வேலைகள், கடமைகள் செய்துவந்தால், உடற்பயிற்சி அவசியம்தானா? என்று கேட்பது சரிதான். அதுபோலவே இயல்பான வாழ்க்கையில் முறையில் வாழ்ந்தாலும் போதுமானதுதான். ஆனால், உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். நிஜமாகவே நான், இயற்கையோடு ஒத்த தன்மையில் வாழ்கிறேனா? என்னுடைய அன்றாட வேலைகள், கடமைகள் உடலுக்கும், உடலுறுப்புக்களுக்கும் பலன் அளிக்கிறதா?

மேற்கண்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் என்ன? அதை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே இன்றைய உலகில், மிகச்சிலரே அத்தகைய உடல் உழைப்பையும், வேலையையும், கடமையையும் கொண்டிருக்கின்றனர். தினசரியாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளையும், வருமானத்தையும் ஈட்டக்கூடிய மனிதராக அவர் இருப்பார். சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரைப்போல நாம் உழைக்கவும் முடியாது. இவரைப்போல நாம் சாப்பிடவும் முடியாது என்று சொல்லுவார்கள். நிஜம் தானே?

பெரும்பாலோர் வாழ்க்கையில், அதிகாலை எழுந்து காஃபி, தேனீர் என்று ஆரம்பித்து, கைபேசியில், வரவேற்பறை தொலைகாட்சியில், செய்திகளையும், ராசி பலன்களையும் பார்த்துக்கொண்டே நகர்கிறது. நேரமிருந்தால், காரில், பைக்கில் நடைபாதை அமைந்த பூங்காவிற்கு சென்று, நடந்துவிட்டு மீண்டும் இல்லம் வந்துவிட்டு, ஏதோ அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, அலுவலகம், தொழில்கூடம் கிளம்பிவிடுகிறார்கள், வியாபாரம் தொடர்பான சந்திப்புக்கும் போய்விடுகிறார்கள். அவ்வளவுதான். இதிலேயே மாலை, இரவு வரை கடந்துவிடும்.

இதற்கிடையில் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து அலுவலை கவனித்தல், வெளியே வெயில், மழை, காற்று பொருட்படுத்தாத அலைச்சல், செயற்கை குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேர வேலைகள், கணிணி, கைபேசி, தொலைகாட்சி வழியாக நேரம் செலவழிப்பு, அது பொழுதுபோக்காகவும் இருக்கும், அலுவல் காரணமாகவும் இருக்கும். மதிய நேர உணவு தள்ளிப்போகும், இரவுக்கு பசி இல்லாத வகையில், மாலையில் வடை, காஃபி, தேனீர் என்றும் ஜங் ஃபுட் என்ற உணவுவகைகளும் பட்டியலில் இருக்கும். இந்த வகையில், உடலுக்கும், உடல் உறுப்புக்களுக்கும் ஏதேனும் இயக்கம், அசைவு, அமைந்துள்ளதா?

ஏங்க ஐயா? அதற்காக, முதலாவதாக சொன்னது போல, எல்லோரும் கஷ்டப்பட்டா உழைக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. அதற்கும் விளக்கம் தருகிறேன். நம்முடைய வாழ்க்கை, அதன் தரம் ஒவ்வொரு நாளும் உயர்கிறது. நாமும் நிறைய கற்றுக்கொண்டு, நம்மையும், நம் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்கிறோம். அது கட்டாயமும், அவசியமும் ஆகும். அதில், நம் குடும்பத்தாரையும் கவனித்துக் கொள்கிறோம். ஆனால், உங்கள் உடலையும், உடலுறுப்பையும் கவனித்துக் கொள்கிறீர்களா? அங்கேதான் சிக்கலை, நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

இதனால்தான், நம்மையே மறந்து, அன்றாடம் வாழ்க்கை, அப்படியே ஒரே தன்மையிலேயே நகர்ந்துவிடுகிறது. தீடீரென்று ஏதேனும் உடல்நலம் பாதிக்கபடும் பொழுதுதான், அடடா, ஏதோ தவறு செய்து விட்டோமோ? என்று நமக்குள்ளாக தோன்றுகிறது. மேலும் பணம் இருந்தால், அதற்கான கட்டணத்தைக் கொடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவரிடமும் நட்போடு பழகி, சரிசெய்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால், அது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லையே? பொருள் இழப்பும் உண்டாகும், உடல் உறுப்பு செயல்பாடும் பாதிக்கும், வாழ்க்கையும் பாதிக்கும், அதற்கு மேலாகவும் நிகழும் அல்லவா?

இப்போது இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன? இயற்கைக்கு முரணாகவேதான் நாம் வாழ்கிறோம். இல்லையென்றால் அப்படியான சூழல்தான் இங்கே இருக்கிறது என்ற தெளிவுக்கு வந்துவிட்டு, இதிலிருந்து என்னையும், என் உடலையும், உடல் உறுப்புக்களையும் காத்துக்கொள்ள வழி என்ன? என்று தனக்குள்ளாக கேட்டு, ஆராய்ந்து, என்ன செய்தால் நம்மை காத்துக்கொள்ளலாம்? என்றும் சிந்தித்து, ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்தலாம். அது எந்த ஒரு பயிற்சியாகவும் இருக்கலாம். என்றாலும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சிறந்த ஒரு தீர்வாகும்.

இன்னும் நான் இங்கே விளக்கமாக, இந்த சிக்கலை விளக்கலாம். ஆனால், நீங்கள் அந்த சிக்கலில் இருப்பதால், இதைவிடவும் தெளிவாக தெரிந்து கொள்ளவும் முடியும். நான் உங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்த சிந்தனைக்குள் அழைத்து வந்துவிட்டேன். என்வேலை அவ்வளவுதான், இனி நீங்களே இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும். சரிதானே?

வாழ்க வளமுடன்

-

If you are a child, you can always be happy? Is that correct?


குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?


பதில்: 

பொதுவாக அப்படிச் சொல்லிக்கொள்வது உலகவழக்கமே ஆகும். உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது சந்தோஷமாக இருந்தீர்களா? அப்படியாக உணர்ந்தீர்களா? என்று  கேட்டுக்கொள்ளுங்கள். என்ன பதில் சொல்லுவீர்கள்? அந்த வயதில் அப்படியாக எதும் தோன்றாது. ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இன்ப நுகர்வு மட்டுமே தலைதூக்கி இருக்கும். அதுவே உங்களுக்கென்று விபரம் வரும்வரையிலும் தொடர்ந்திருக்கும். பெற்றோரின் நிலை அறியாமல், அது எனக்கு வேண்டும். அப்போதான் நான் நன்றாக இருப்பேன் என்று கருத்தில் அடம்பிடித்த காலம் இருந்திருக்கும்.  பெற்றோரும், தன் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக, தாங்கள் வருந்தினாலும் கூட, பிள்ளை நன்றாக, சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்.

குழந்தைத்தனத்தில் இருந்த ஒரு உணர்வு, சந்தோஷமாக ‘இப்பொழுது’ உங்களுக்குத் தெரிகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்த வயதிலும், உலகில், உங்கள் வாழ்க்கை சூழலில், தொழிலில், வேலைகளில், வியாபாரங்களில் பலவிதமான தொல்லைகளை பெற்று, கவலைகொண்டு, துன்பப்பட்டு வருந்தும் இந்த வேளையில்தான், அந்தக்கால குழந்தை சந்தோஷம் ஞாபகம் வருகிறது அல்லவா? அதுதான் உண்மை. 

ஒரு பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குழந்தையிடம், நன்கு பேசத்தெரிந்த  3 வயது முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் (சிறுவர், சிறுமியர்) கேளுங்கள்.

‘இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?’

‘அப்படின்னு யார் சொன்னா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அதற்குப்பிற்கு என்ன சொல்லுவார்கள் என்பதை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். இப்போதைய, எல்லா குழந்தைகளும் கையில், கைபேசியோடு திரியும் இந்தக்காலத்தில், அவர்களும் பெரியமனிதர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா?

அப்படியானால், அக்குழந்தைகளுக்கு சந்தோஷம் இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. சரி, வளர்ந்து பெரியவர்களான நமக்கு சந்தோஷம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. ஆனால் நாம் அதை தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாகவா என்கிறீர்களா? ஆம், சந்தோஷம் எங்குமே போய்விடவில்லை. நாம்தான் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் எங்குமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்.

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனதோடு, அன்றாட வாழ்க்கைச்சூழலில் அந்த மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் பெறக்கூடிய நிலையில், நாம் இல்லை. பரபரப்பான நிலையில் ஓவ்வொரு நொடியையும் கடந்துவிடுகிறோம்.

இதை எப்படி சரிசெய்யலாம்? இதற்கு துரியதவம் போதுமானது. நாள்தோறும் தவறாமல், அதிகாலையில் துரியதவம் இயற்றி அன்றைய நாளை துவக்குங்கள். மனமும் எண்ணங்களும் பூரிப்பான அந்த நிலையை, உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை தேடவேண்டாம், அது அங்கேயே இருப்பதை உணரலாம். குழந்தைப் பருவத்திற்கு போகமுடியாததற்கு வருந்தப்படவும் தேவையில்லை.

‘இந்தக்காலத்திலே அப்படி இருந்திடவும் முடியாதுங்க, ஏன்னா, பொழைப்பு கெட்டுறும்ங்க’ என்கிறீர்களா? சரி அது உங்கள் நிலைதானே, தொடர்க!

வாழ்க வளமுடன்.

-

How can altered my interests in fun and entertainment to the yoga?


பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வம் இல்லை. ஆர்வமின்றி இருப்பது ஏன்? மேலும், பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வமின்றி இருப்பது ஏன்? பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?

பதில்:

உங்களைப் போலவே எல்லோருமே அதை கடந்துவந்தவர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்க. இதில் உங்களுக்கு வருத்தம் தேவையில்லை. ஆனால், பொழுதுபோக்கிலே மட்டுமே நின்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இதற்கு காரணம் நம்முடைய பெற்றோர், வீடு, உறவினர், நண்பர்கள், சமூகம், உலகம் இப்படி எல்லாமுமே காரணமாக இருக்கலாம். பிறப்பின் உண்மையும், வாழ்வின் நோக்கமும் அறியாத எல்லா மனிதர்களுமே காரணம். அவர்களுக்கு தெரியாது என்பதல்ல, தெரிந்தாலும் அதில் ஆரவமற்று விலகி, வழக்கமான உலக நடப்புக்களில் இயங்குவதுதான். அதைப்பார்க்கும் நமக்கும்கூட அதேபோலான நடவடிக்கையும் ஆர்வமும் தானே வரும்? சரிதானே?!

ஒரு பொழுதுபோக்கு என்றால், நமக்கு ஆர்வம் எழுகிறது. நம் வேலைகள் எது இருந்தாலும் தள்ளிவைத்துவிடுகிறோம் அல்லவா? பசி இருந்தால் கூட பரவாயில்லை என்று பொழுதுபோக்கை கவனிப்போம். இதற்கு அடிப்படை காரணம், நமக்குள் இருக்கும் நிகழ்காலத்தின் மேல் இருக்கும் பயம், அதனோடு வருங்காலத்தை நினைத்தும் பயம் என்பதுதான். ஆனால், யாராவது இதை ஏற்றுக்கொண்டும் ஆமாம் என்று சொல்லிவிடுவார்களா? இல்லவே இல்லை. இப்படி ஒரு கண்ணோட்டமே இருக்காது.

பொழுதுபோக்கில் என்ன இருக்கிறது? அதில் எதேனும் அறிவு வளர்ச்சிக்கு இடமிருக்கிறதா? வாழ்க்கைக்கும், வாழ்வைக்கடந்த உண்மைக்கும் வழி இருக்கிறதா? அதுவும் இல்லவே இல்லை. உங்களுக்கு தெரிந்ததை, உங்கள் மனதில் படிந்ததை, உங்களுக்கு விருப்பமானதை, யாரோ ஒருவர், சில குழுவினர்கள், உங்களுடைய மனதிலிருந்து அதை தோண்டி எடுக்கிறார்கள். உங்கள் உணர்வோடு தொடர்புடையதால் உங்களுக்கும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று இருக்கும் இந்த பிரச்சனை, தொந்தரவு, சிக்கல் இப்படி எல்லாவற்றிலிருந்தும் ‘விடுதலை’ கிடைத்துவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே உங்களை அப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள். பொழுதுபோக்கினால், இருக்கின்ற உங்கள் பிரச்சனை துளியும் மாறிவிடுவதில்லை, அகன்று விடுவதில்லை, குறைந்தும் விடுவதில்லை. உண்மையாக சொல்லப்போனால், முன்பைவிட அது ஓர் நாளில் அதிகமாகிறது.

உண்மையிலேயே யோகத்திற்கு வர, பொழுதுபோக்கிற்கு எதிரான மனநிலை தேவை. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்று கேள்வி கேட்டு அதில் பயணிப்பதின் முடிவாக யோகத்திற்குள் நுழையலாம். ஆனால் நாம் அதற்கு எதிர் திசையில் அல்லவா போய்க்கொண்டு இருக்கிறோம்?! யோகத்தில் எப்படி ஆர்வம் வரும்? யோகமே தேவையில்லை என்றுதானே போய்க்கொண்டு இருக்கிறார்கள்?! யோகத்தில் நுழைவதற்கும், வருவதற்கும் ஆர்வம் தேவையில்லை. இருக்கும் சூழ்நிலைகளில் மட்டுமல்ல, இனி வரக்கூடிய எந்த விதமான சூழ்நிலைகளிலும் நீங்கள் பாதிக்கப்படாமல், உயர்ந்த நோக்கம் கண்டு முன்னேறி, வாழ்வின் உண்மையும், பிறப்பின் நோக்கமும், மனிதனாக பிறந்ததின் உன்னதமும் அறியலாம்.

இப்போது இருக்கும் இந்த பொழுதுபோக்கான நிலையில் இருந்து விட்டுவிட விருப்பமில்லை என்றாலும், விலகிட முடியவில்லை என்றாலும் கவலையில்லை. நீங்களே ஒர்நாளில், அடுத்து என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு, காலம் உங்களை நகர்த்தி வைக்கும். அதுவரை காத்திருக்கலாம், பொழுதுபோக்கில் மூழ்கி இருக்கலாம். தவறில்லை. ஓடும் குதிரைக்கு சாட்டையடி தேவையில்லை. ஓடாத குதிரைக்கு தேவை என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதன் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படலாம். 

வாழ்க வளமுடன்
-

Why most people says as a secret in yoga, almost it is simplified?


யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?


பதில்:

பெரும்பாலன ஊடகவழியிலான தகவல்கள் இப்பொழுது இல்லை. உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கும் பத்திரிக்கை வழியிலான செய்திகளும், ஒரு கூட்டம் தனியாக உட்கார்ந்து திட்டமிட்டு பரப்பும் செய்திகளும், தலைப்புச் செய்திகளும், சுடச்சுட செய்திகளும் இப்போது இல்லை. இப்போது இல்லை என்றால், உங்களுக்கு படிக்கக் கிடைப்பதில்லை அவ்வளவுதான். ஆனால் காலம் மாறிவிட்டதால், கையடக்க மொபைல் ஃபோனில் காட்சியாக வருமளவிற்கு முன்னேறிவிட்டது. உலகில் விஞ்ஞானம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது ஆனால் மனிதன் இன்னமும் பழமையான மனநிலையில்தான் இருக்கிறான். மனவளம் இன்றி தவிக்கிறான். என்றாலும்கூட சாராசரி மனிதனைவிட சிலர் இன்னமும், ஓஷோ ரஜனீஸ் சொல்லுவது போல ‘பழைய கில்லாடிகளாக’ இருக்கிறார்கள். இந்த கில்லாடிகள், மனிதர்களின் மனங்களையும், மனிதர்களையும் பந்தாடுகிறார்கள். அந்த விளையாட்டில் யார்வேண்டுமானலும் சிக்கிவிடக்கூடும். நீங்களும் நானும் விதிவிலக்கல்ல.

ஒரு செய்தியை, விஷயத்தை, உண்மை சொல்லுவதற்கு, மிகையான அலங்காரம் தேவைப்படும் காலம் இது. ஏனென்றால், ஒரு செல்லும் வழியில் பல பொருட்கள், அவைகளை, உங்கள் காலை பற்றி இழுக்கும் பொறிகள் என்று கூட சொல்லலாம். அது தன்னுடைய பொறியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். தான் சொல்லும் விஷயத்தை, செய்தியை மட்டுமே மற்றவர்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகையான தன்முனைப்பின் நிலை என்றும் சொல்லமுடியும். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், ‘அப்படியெல்லாம் இல்லை, இந்த உண்மையை மக்கள் தவறவிடக்கூடாது’ என்றுதான் நாங்கள் விரும்புகிறேன் என்று பதில் தருவார்கள்.

நாம் வழங்குகின்ற வேதாத்திரிய சேனலில் கூட, ரகசியம் என்ற தலைப்பில் சில பதிவுகள் ‘மிக சமீபமாக’ தரப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த விருப்பமில்லை என்றாலும், ஒரு முயற்சியாக, சோதனையாக செய்யப்பட்டது.  ஆனால் நடந்தது என்ன தெரியுமா? உண்மையாகவே, ரகசியம் என்று தலைப்பிட்ட பதிவுகள் அதிக பார்வையை பெற்றன.

இதற்கு நாம் என்ன பதிலை தரமுடியும்? ரகசியம் என்ற வார்த்தையும், அதில் மறைந்திருக்கிற ஏதோ ஒன்றையும் மக்கள் விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகிவிடுகிறது அல்லவா? மக்களின் மனநிலை இப்படியாக மாறிவிட்டது. அதனால், யார்வேண்டுமானாலும், அவர்கள் யோகத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் ரகசியம் என்ற வார்த்தையை இணைத்து சொல்லுகிறார்கள். இவர்கள் மட்டுமா? அரைகுறையாக யோகம் குறித்து தெரிந்துகொண்டவரும், யாரோ சொல்லி புரிந்துகொண்டவரும், பழைமையான நூல்வழியாக படித்து அறிந்தவரும் கூட, யோகத்தில், ரகசியம், அப்படி, இப்படி என்று தலைப்பிட்டு, மக்களை கவர்வதை காணமுடிகிறது.

உதாரணமாக ஒன்றை சொல்லுவார்கள். மூடிய கைக்குள் என்ன இருக்கிறது? என்ற நிலைவரைதான் அது ரகசியம். அது உள்ளங்கை நெல்லிக்கனி என்று சொல்லிவிட்டால், ‘அவ்வளவுதானா?’என்று எல்லோரும் ஓடிப்போய் விடுவார்கள்.

எனவே, மாறவேண்டியது, மாற்றிக்கொள்ள வேண்டியது மக்களும், அவர்களின் மனநிலையும்தான். அதைவிடுத்து, ரகசியம், அப்படி, இப்படி என்று சொல்லி அழைப்பவர்களை குறைசொல்லி ஒரு பலனும் இல்லை. அவர்கள் போய்விட்டால், இன்னொரு கூட்டம் வந்து அழைக்கும். இது உலகில் பலகாலமாக இருந்துவருகின்றது. அழைப்பையும், செய்தியையும் ஆராய்ந்து பார்க்கின்ற பழக்கம், நமக்குத்தான் வரவேண்டும். அதுவரை இப்படி போலியான அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

நீங்கள் சொன்னதுபோலவே, யோகம் எளிமையாக்கப்பட்டு ‘வேதாத்திரியமாக’ வளர்ந்து நிற்கிறது. மிக எளிதாக பருவ வயதில் இருந்த கற்றுத்தேர்ந்தால், பிறவியின் நோக்கமும், நான் யார்? என்ற உண்மையும், தன்னையறிதலும், மெய்ப்பொருள் விளக்கமும் பெற்று, உலகில் நிறைவாக வாழலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, தனிமனித சுதந்திரமும், ஓர் உலக கூட்டாட்சியும், உலக சமாதானமும் கிடைக்க அதுவே சிறந்த வழியும் ஆகும். ஆனால் இத்தகைய தெளிவுக்குப் பிறகும், எண்ணற்ற கட்டுக்கதைகளை கோர்த்துவிட்டு, யோகத்தையும், அந்த யோகத்தில் இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவதும் வேதனைக்குறியதுதான். 

வாழ்க வளமுடன்

-

Please explain the Kundalini yoga makes problem or will fix the problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிரச்சனைகளை தீர்ப்பதற்க்கு யோகமா? அல்லது யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகி விடுமா?


பதில்:

நீங்கள் மிகவும் சாதுர்யமான கேள்வியை என்னிடம் கேட்பதாக நினைக்கிறேன். முதலில் யோகம் என்றால் என்ன? என்ற விளக்கத்திற்கு வந்துவிடுங்கள். அதுதான் சரியானது. யோகம் என்றால் வாழும் உலக வாழ்க்கையில் திருத்தங்களைப் பெற்று அறவழியில் வாழ்ந்து, இன்பத்தை மட்டுமே  அனுபவித்து மகிழ்ந்து சிறப்படையும் பயிற்சியாகும். அதில் தன்னையறிதலும், இறையுணர்தலும் இணைந்திருக்கிறதும் உண்மை!

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இருப்பது மட்டுமல்ல, எல்லோருடைய வாழ்க்கையிலும் அவரவர் அளவில் பிரச்சனைகள் இருக்கிறது. காரணம், அவர்கள் வாழ்க்கைமுறையில், இயற்கைக்கும், இயல்புக்கும் மாறான செயல்பாடுகளின் விளைவு. இயற்கையின் வினை விளைவு நீதி அறியாமை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் வழிவழியாக மனிதர்களின் கருமையம் களங்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இந்த உலகில் நேர்மையாக, உண்மையாக, நட்பாக இருந்தாலும் கூட, சந்தர்ப்பவசத்தால், சூழலால் தானாகவே பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்.

எனவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யோகம் உதவாது, ஆனால் உங்கள் பிரச்சனைகளின் மூலகாரணம் என்ன என்பதை அறிந்து, முற்றிலும் அதைபோக்கி, உங்கள் வாழ்வை சீரமைக்க யோகம் உதவிடும், அதன்வழியாக உங்களின் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்ற வழியும் உங்களுக்கு சிந்தனையில் உருவாகும். அதை திட்டமிட்டு சரி செய்து தீர்க்கலாம் என்பதே உண்மை.

யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகிவிடுமா? என்றும் கேட்கிறீர்கள். உலகில் நிறைய நபர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். மேலும் யோகத்திற்கு போகாதீர்கள், தேவையுமில்லை, அவசியமும் இல்லை என்று அவர்களை தடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையும், உங்கள் வாழ்வையும் சீரமைத்து, உலக அனுபவங்களில் அளவோடும் முறையும் வாழ்ந்து இன்பமும், நிறைவும், அமைதியும் பெறவேண்டும் என்றால், யோகம் அவசியம் வேண்டும். அப்படியில்லாது யோகத்தை விட்டுவிட்டால் வேறு வழியில்லை என்பதே உண்மையாகும். இனி முடிவு உங்கள் வசம்!

வாழ்க வளமுடன்.