CJ for You: level of

level of

Showing posts with label level of. Show all posts
Showing posts with label level of. Show all posts

Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?


முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


பதில்: 

இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.

இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால்,  அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.

ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?

இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே,  ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.

வாழ்க வளமுடன்.

-

What is the easy way to understand the Vethathiriyam, if we feel as difficult?


வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


பதில்:

பொதுவாகவே கல்வி என்ற நிலையில் உள்ள எந்த உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். அவற்றை அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது அவை முழுமையாக புரிந்துவிடும் என்பதே உண்மையாகும். எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும். அவரின் வயது, அனுபவம், கல்வி அறிவு, ஏற்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை அளவில் மாற்றம் பெற்றே இருக்கும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது, இன்னொருவருக்கு கடினமாக இருக்கும். இதனோடு ஆராய்ச்சிப் பார்வை, ஒத்துப்பார்த்தல், அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற தன்மைகளும் மாறுதலாகவே இருக்கும். எழும் சந்தேகங்களும், அதற்குறிய கேள்விகளும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.

        இதற்கெல்லாம் காரணம், அவர்களின் வயதும், அவர்களின் வாழ்க்கை சூழலும், ஏற்புத்திறனும், வாழ்வில் அவர்கள் கண்ட குடும்ப, சமூக, உலக வழக்க பழக்கங்களுமே ஆகும். எந்த வகையிலும் யாரையும் இங்கே குறை சொல்லுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாகவே, என்னுடைய எல்லாவகையான பதிவுகளிலும், ‘நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா?’ என்று முட்டாள்தனமாக கேட்பதே இல்லை. அது கேட்போரை கீழாக நினைத்து கேட்கக்கூடிய மனோநிலை என்பதை சில ‘விற்பனர்கள்’ புரிந்து கொள்வதில்லை. தன்னைமட்டுமே மேலாக நினைத்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நிலையில் இருப்பதுண்டு. ஒருவேளை ‘எனக்கு சுத்தமாக புரியவில்லை ஐயா’ என்று ஒருவர் எழுந்து கேட்டால், அந்த விற்பனரின் நிலை என்ன? மறுபடி முதலில் இருந்து பாடம் நடத்துவாரா? தனியாக கவனம் வைத்து பாடம் தருவாரா?

        வேதாத்திரியம் மிக எளிமையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேதாத்திரியத்தின் உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமானதும் அல்ல. வேதாத்திரியத்தை தந்த, வேதாத்திரி மகரிஷி ‘பாமர மக்களின் தத்துவஞானி’ என்றுதான் போற்றப்படுகிறார். அவரின் எழுத்துக்களும், கட்டுரைகளும், கவிகளும், பேச்சுக்களுமே சான்றாக இருக்கின்றது. அதை எடுத்துச் சொல்லுபவரும் அத்தகைய உண்மையை, தானாக புரிந்து கொண்ட பிறகு சொன்னால்தான், அது மற்றவர்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்கும். தனக்கே புரியாத ஒன்றை, பிறருக்கு பாடமாக, கல்வியாக தரமுடியுமா? எனவே இங்கே, ஒரு குறிப்பிட்ட உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புதிய ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர் நன்கு புரிந்து கொண்ட தன்மையில், அனுபவமானவராக இருக்கவேண்டியதும் அவசியம்.

        உங்களைப்போல, ஒரு தனிமனிதராகவே ஒவ்வொருவரும் இருப்பார். அவரவர்களுக்கு ஏற்றவகையில், தனித்தனி கவனம் கொண்டு உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும்  தரமுடியும் என்பதும் உண்மையே. பொதுவெளியிலும், கல்வி, பாட மையங்களிலும் அதை தரும் பொழுது, ஒரு பொதுவான நிலையில்தான் வழங்கமுடியும். அது எல்லோருடைய அறிவிற்கும் போய்ச்சேரும்படி ‘எளிமையாக’ இருக்கவேண்டியதும் அவசியமாகும். அனுபவமிக்க ஆசிரியர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதும் உண்மையே. படித்ததை பேசுவதற்கும், உணர்ந்ததை பேசுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

        உங்களுக்கு இங்கே வழங்கப்படும் வழி, தீர்வு என்ன? என்றால் வேதாத்திரிய தத்துவத்தை மட்டுமல்ல, வேறு எந்த தத்துவமாக இருந்தாலும், அந்த வகுப்பில் உங்களுக்கு புரியவேண்டும் என்று நினைக்காதீர்கள். கல்வி பாடங்களை, விளக்கங்களை கேட்கும்பொழுது, குறிப்பு எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. உங்கள் சிறப்பான மூளையையும் காதுகளையும் மட்டுமே நம்புவது தவறு. சிந்தனைக் கவனம் சிதறிவிட்டால், அந்த விளக்கங்கள் உங்களின் இன்னொரு காதுவழியாக வெளியே ஓடுவிடும். அன்றைய பாடங்களை அன்றைக்கே, தனியாக அமர்ந்து, உங்கள் குறிப்புக்களோடு ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து பாருங்கள், எளிதாக புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

        கேள்வி நேரத்திலேயே, உங்கள் குறிப்பின் வழியாக, உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதை, சந்தேகத்தை கேள்வியாக கேட்டு பதில் பெற மறவாதீர்கள். ‘உங்களுக்கு புரிகிறதா?’ என்று ஆசிரியர் கேட்டால் ‘எனக்கு புரியவில்லை ஐயா’என்று உடனடியாக சொல்லிவிடுங்கள். பிறகு அந்த ஆசிரியரே உங்களுக்கு ஏற்றபடியாக தன்னை மாற்றுக்கொள்வார் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-