CJ for You: worship

worship

Showing posts with label worship. Show all posts
Showing posts with label worship. Show all posts

Oh God, don't you have any mercy? Part 01


 இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா?!

கடவுளே இல்லை என்ற மாற்றுக்கருத்து கொண்டவர்கள், இந்த கட்டுரையையும், எழுதுபவனையும் கூட புறம் தள்ளி விடலாம். அவர்களுக்கு இந்த விளக்கம் அவசியமற்றது. ஒரு வார்த்தைக்காக, ‘இறைவனே’ என்று எழுதினால் கூட, ஆண்பாலாக சொல்லுகிறாய், இதை எதற்கு நான் படிக்கவேண்டும் என்று தூர தள்ளும் ‘அதி மேதாவிகளுக்கும்’ இக்கட்டுரை தேவையில்லை.  அப்படியானால் யார் படிக்கலாம்? இறை என்பது என்ன? என்ற தேடுதலும், அதன் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்களும், யோகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களும் வருக, நீங்கள் தொடரலாம்.

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறீர்களா? இல்லவே இல்லை என்று மறுத்தால், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தகூடும். எனவே பிறர் அறியாமல், ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஏன்? இப்படியான வார்த்தையை, இறையை நோக்கி, வானத்தை நோக்கி, ‘என்மேல் இரக்கமே இல்லையா?’ என்று கேட்க ஆரம்பிக்கிறோம்? கவனிக்கலாமா?

காலம் காலமாக, வழிவழியாக இறை என்ற தெய்வீக தன்மையை, நாம் அறிந்திருக்கிறோம். அறிந்து என்பதை விட தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம். நம்முடைய தாய் தந்தை வழியாக, தாத்தா பாட்டி வழியாக நிச்சயமாக வந்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில், ஒவ்வொரு குடும்பத்திலும் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, இந்த இறை நம்பிக்கை அவசியமற்று போய்விட்டது. அதனால் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற மாற்றத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஒரு குடும்பத்தின் பரம்பரை உறுப்பினர்கள் வழியாக, பக்தியும், வழிபாடும், அதில் ஒழுங்கும், ஒழுக்கமும் குழந்தை பருவத்தில் இருந்தே கிடைக்கிறது. பக்தி தேவையா? என்று கேட்டால், வேதாத்திரி மகரிஷி ‘அவசியம்’ என்றுதான் சொல்லுகிறார். காரணம், குழந்தையை அதன் இயற்கை தன்மையோடு பொருந்தி வளர்வதற்கும், சமூகத்தின் நன்மைக்கும், உயர்வுக்குமான வழக்க பழக்கங்களை பெற்று, தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்காத விழிப்புணர்விக்கும் ‘பக்தி’ அவசியமே என்று சொல்லுகிறார். ஆனால், அங்கே இன்னொரு தொடர் விளக்கத்தை தருவதை மறந்துவிடக்கூடாது.

எதுவரை பக்தி அவசியம்? இறை என்பது என்ன? என்ற கேள்வி எழும்வரை அவசியமானது. இந்த இறை என்பது என்ன என்று தேடவேண்டுமானால், யோகத்திற்கு வந்துவிட வேண்டும். ஆனால், நம்முடைய வாழ்நாள் முழுவதும் நமக்கு பழக்க தோசத்தில், பக்தியே போதுமானதாக இருந்துவிடுகிறது. யோகத்திற்கு வருவதற்கு நிறைய முட்டுக்கடைகள், தடைகள், தடுமாற்றம், யோசனைகள் உண்டாகிவிடுகிறது. எளியமுறை குண்டலினி யோகம் இருப்பதையும் மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாத்திரியர்கள் அப்படியல்ல. தானாக யோகத்தில் ஆர்வம் கொண்டு பயணிப்போரும் அப்படியல்ல.

என்றாலும் கூட, பக்தி என்ற பழக்கதோசம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடவில்லை என்பது தான் உண்மை. என்னய்யா, இப்படி சொல்லுகிறாயே? என்று நீங்கள் கேட்கலாம். மறுக்கலாம். ஆனால் உண்மையாகவே சொல்லுகிறேன். இன்னும் பக்தியின் மயக்கம் நமக்கு, நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதில் ஆரம்பகால வேதாத்திரி மகரிஷியும் சிக்கித்தான் இருந்தார். ஆனால், பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் வழியாக, அந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உண்மை தெளிந்தார் என்பதை ‘ஞானக்களஞ்சியம்’ கவிதைகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.

‘சரிய்யா, இப்போ அதுல என்ன பிரச்சனை? அதைச்சொல்லு’ என்கிறீர்களா? எழுகின்ற பிரச்சனைக்கே நாம் தான் காரணம் என்கிறேன் நான். ஆனால் நாம் அதை நம்பத் தயாராகாமல், இறை மேல் பழியைப் போட்டு. ‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’ என்று இங்கேதான் ஆரம்பிக்கிறோம். சரியா? உண்மைதானே?

‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’

என்று நம்மிடமிருந்து ஒரு கதறல், புலம்பல், வேதனை வந்தால் என்ன அர்த்தம்? அதில் இருக்கும் உண்மை என்ன? விளக்கம் என்ன? என்று அறியலாமா? அடுத்த பதிவில் அறியலாமே!



Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடு அவசியம் தானா? அது எப்படி இருக்கவேண்டும்? வேதாத்திரி மகரிஷி அதுகுறித்து சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.


இறைவழிபாடு என்பது மனிதனுக்கு அவசியம். அதை புறம்தள்ளுவதும், விட்டுவிலகுவதும், அவசியமில்லை என்று கருதுவதும் அவனுடைய அறியாமை. அது தன்முனைப்புக்கும் வழிவகுக்கும். அவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றும். பிறப்பின் நோக்கமும், கடமையையும் அறிந்துகொள்ளும் வழியில் இருந்து தள்ளிவைக்கும். ஆனால், பெரும்பாலோர் இதை ஏற்கவும் மாட்டார்கள். இறையும், இறைவழிபாடும் தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவர்கள் கண்ணோட்டம்.

இறைவழிபாடு என்பது ஆதி மனிதனின் உள்ளுணர்வு ஆகும். தன்னைவிடவும் வலிமையானது, தன்னிலும் பிரமாண்டமானது, தன்னையே காப்பது என்ற, தான் அறிந்த உண்மையின், வியப்பின், மரியாதையின் உச்சமே ‘இறைவழிபாடாக’ வாழ்வியலில் கலந்தது. மேலும் அந்த இறைவழிபாடுதான், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது,

நான் யார்? என்று ஆராய்வதின் வழியில் நமக்கு கிடைக்கும் விடை, தனக்கும், இந்த இறைக்கும் உள்ள தொடர்புதான். எனினும் அது எளிமையானதல்ல. குண்டலினி யோகம் வழியாக, மனதை அறிந்து, மனதின் மூலமாக உயிரை அறிந்து, உயிருக்குள் அறிவாக இருந்து இயங்கும், இறையை அறிந்து உணரவேண்டியது அவசியம். இதற்கு கால நீடிப்பு ஆகலாம், என்றாலும் மனிதன் வாழ்நாளுக்குள் அறியமுடியும். அதுவரை நமக்கு இறைவழிபாடு தேவை. அது மனதிற்கான ஒரு பயிற்சியும் கூட. குழந்தைகளுக்கு பக்தி வழியாகவும், பெரியவர்களுக்கு யோகம் வழியாகவும் இந்த இறைவழிபாடு பயன்பாட்டில் நம்மிடையே கலந்திருக்கிறது.

உங்கள் கேள்விக்கான பதிலை, எளியவகையில், வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இதோ இந்த காணொளி வழியாக அறியலாம்.

இறைவழிபாடு எப்படி இருக்கவேண்டும்? How should worship be performed? by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-

Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct?


வாழ்க வளமுடன் ஐயா,  இன்றைய காலத்தில், பக்தி என்பது காலாவதி ஆகிவிட்டதே? இது எங்கே போய் முடியுமோ? என்று கவலையாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பக்தி இல்லாமலேயே வளர்கிறார்களே? இது சரிதானா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது? விளக்கம் தருக.


இந்த கேள்வி, எந்த காலகட்டத்திலும் உருவாக் கூடிய கேள்விதான். பொதுவாக மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதுபோல, இவ்வுலகில் மக்களின் வாழும் முறை, அனுபோகம், அனுபவம் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும். நேற்றையபோல இன்று இருப்பதும் இல்லயே! அப்டேட் என்று சொல்லக்கூடிய, இருக்கும் நிலைக்கு தகுதி உயர்த்திக் கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த மாற்றங்கள் குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை. நாமும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமே என்றாலும் கூட, தனியாக சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதற்குப் பதிலாக, நாம், நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை செயல்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆம், நம்மை எப்படி, நம்முடைய பெற்றோர்கள், வழிப்படுத்தினார்களோ, அதுபோல நாம், நம்முடைய வாரீசுகளை, வழிப்படுத்திட வேண்டும். 

இந்த உலகில் பெரும்பான்யோரும், பெரியோர்களும், பெற்றோர்களும். குழந்தைகளை வழிப்படுத்திட தவறுகின்றனர். தனக்குத் தெரிந்ததை, குழந்தைகளும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றனர். இப்படியான நிலை கூடாது. எந்தெந்த வயதில் எதை அறிந்துகொள்ள வேண்டுமோ. அவ்வப்பொழுது அறிந்துகொண்டால் போதாதா?

பக்தி என்பது உண்மையாகவே காலாவதி ஆகிவிட்டது என்று தோற்றமளிக்கிறது. ஆனால், தன்னாலும், மற்றவர்களாலும் எதுவுமே முடியாது என்ற நிலை வரும்பொழுது, கைகள் தானாக குவிந்து, ‘கடவுளே’ ‘இறைவா’ என்று வணங்குவதை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் கூட அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆனால், நமக்கு உண்மைகளை உதாசீனம் செய்துதானே பழக்கம்?

நாம் ஏதேனும் விளக்கம் சொன்னால், ‘அப்படியானால், கடவுளை, இறைவனை காட்டு’ என்று நம்மிடம் வம்புக்கு வருவார்கள். விஞ்ஞானம் சொல்லுகிற, ஒரு அணுவைக்கூட உன் கண்ணால், பார்க்கமுடியாதே? விஞ்ஞானிகளும், இன்னமும் அணுவை முழுமையாக பிரித்து பார்த்திடவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? அணுவிலும் அணுவாய், வெட்டவெளியாக இருப்பதை எப்படி காண்பாய்? உண்மையாகவே, அதை நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்! ஆனால், அதை நம்பவும் மறுக்கிறாய்! சரிதானே? 

இந்த நிலையில்தான், நாம், நம்மளவில், திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு. இதை வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய கவிதையிலும் சொல்லுகிறார்.


உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும் 

   உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக 

பருவமடைந்தோர்கட்கு பதினெட்டாண்டின் மேல் 

   பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும் 

அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார் 

   அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய 

கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான 

   கறை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும். 


குழந்தைகளை நல்வழிபடுத்த, வருங்காலத்தில் சிறப்பாக வாழ, எது நல்லது தரும்? என்பதை புரிந்து கொண்டு சிறக்கவும், முன்னேறவும், பக்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். இங்கே உருவ வழிபாடு கொஞ்சகாலத்திற்கு அவசியம். தானாக சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத்தேடி பயணிக்கும் விருப்பமும் வந்துவிட்டால், குறைந்தபட்சமாக பதினெட்டு வயது எனலாம். இந்த வயதில் அவர்களை பக்தி கடந்த யோகத்தில், பயணிக்கச் சொல்லி வழிகாட்டலாம். எனவே, சமுகம் குறித்த அக்கறை இருந்தாலும்கூட, நாமும் அந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதால், நம்மளவில் மாற்றம் செயல்படுத்தினால் போதுமானது ஆகும். அதுவே மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.

வாழ்க வளமுடன்.

-

What is God really? How to know or realize? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.


இறை என்ற வார்த்தையிலேயே ஓர் உண்மை இருக்கிறது எனலாம். தமிழ் மொழியின் சிறப்பு, அந்த வார்த்தையிலேயே அதனுடைய இயல்பும் இருப்பது ஆகும். இறை, என்பது எங்கும் நிறைந்து இருக்கும் ஒன்றை குறிப்பதாகும். இதை இறைந்து இருக்கிறது என்றும் சொல்லமுடியும். உதாரணமாக, உங்களிடம் உள்ள ஒரு கண்ணாடி பொருளை கீழே போட்டால் உடைந்து சிதறும் அல்லவா? கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துகள்களாகவும் அவை இருக்கலாம். அவை எல்லாம் இறைந்து கிடக்கிறது எனலாம். தெரியாது ஆனால், காலை வைத்தால், ரத்தம் வரும் அளவிற்கு பாதத்தை பதம் பார்க்கும்தானே?

இந்த இயற்கையோடு, நாம் காணும் பொருட்களோடு, உயிர்களோடு, இந்த பிரபஞ்சத்தோடு ‘இறைந்து இருக்கும்’ ஒரு பேராற்றலையே ‘இறை’ என்று முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதையே நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய பேராற்றலை, குறிப்பாக உணர்த்தும் வகையில்தான்,  பக்தியாகவும் மலர்ந்தது. அதை ஏற்போரும் உண்டு, மறுப்போரும் உண்டு. அது அவரவர்கள் நிலைபாடும், உண்மை அறியாமையுமே ஆகும். ஆனால் இறைந்து கிடப்பது உண்மை என்பதை யாராகிலும் மறுக்கமுடியுமா? இதை மேலும், குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தைகளின் வழியாகவே அறியலாம். இந்த காணொளி காண்க.

இறை என்பது உண்மையில் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

வாழ்க வளமுடன்

Pongal is the festival of Tamils. There are some who call it the New Year. What's so special about it? Has Vethathiri Maharshi said anything? Explain


வாழ்க வளமுடன் ஐயா. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை. இதையே புத்தாண்டு என்று சொல்வோரும் உண்டு. இதில் என்ன சிறப்பு? வேதாத்திரி மகரிஷி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.

பொங்கல் தமிழர்களின் பாரம்பரியமான பண்டு ஈகை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மகிழ்ச்சி நம்மோடு பொங்கிட வேண்டும் என்ற கருத்தில், இயற்கையையும், சூரியனையும், நிலத்தையும், அதற்கு துணையாக இருக்கும் காளை மாடுகளையும் மதிப்பு செய்து, வணங்கி மகிழ்ந்து, சக்கரைப்பொங்கல் படையலிட்டு வழிபடும் நாள் இதுவே. மேலும், தங்களைடைய சந்தோசங்களையும், தன்னிடமிருக்கும் பொருளையும், பிறருக்கு தந்து மகிழ்ந்து, அவர்கள் தருவதை பெற்று மகிழும் பண்டு ஈகை என்ற பண்டிகையாகவும் இருக்கிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. எனினும் தற்போது சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

காரணம், அன்றைய காலம் போல, விவசாயம், விளைபொருட்கள் விளைவிக்கும் தொழில், வேலை என்பதில் இருந்து மனிதர்களாகிய நாம் விலகிவந்து, வெவ்வேறு தொழில்களில் வளர்ந்து விட்டோம். மேலும் அதில் புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டுவந்து, இயந்திரங்களே அதை செய்திடும் அளவிற்கு மாற்றமும் செய்துவிட்டோம். நாம் அந்த நுட்பங்களை கவனிக்கும், முறைப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் வேலைகளை மட்டும் செய்து வருகிறோம். அதனால், பாரம்பரியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போகிறது. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை. இவ்வுலக நடைமுறையில் பயணிப்பதுதான் நமக்கும் நல்லது. எதிர் திசையில் பயணிப்பது, நம்மை மட்டுப்படுத்திவிடும் அல்லவா?

பொங்கள் திருநாளை, தை முதல் நாளாக சொல்லுவதில், பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் நிலையில், நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. இதைக்குறித்து குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் எதும் சொன்னதில்லை. எனினும், மெய்ப்பொருள் உண்மையை, இந்த பொங்கல் திருநாளில், வாழ்த்தாக ஒரு கவிதை வழியாக சொல்லி இருக்கிறார். அதில் இருக்கும் உண்மையை, இந்த காணொளி பதிவு வழியாக அறியலாம். இதோ அதற்கான இணைப்பு.

வேதாத்திரி மகரிஷி பொங்கல் வாழ்த்து மதிவிருந்து கவிதை - Pongal Greeting Poems by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

-


Why the Tamil Month Margazhi is special with ritual and celebration? Please Explain this one!


மார்கழி மாதம் என்பது ஏன் அதிக மதிப்பாக இருக்கிறது? அதனை பீடை மாதம் என்றும் சொல்லுகிறார்களே? விளக்கம் தருக.


        ஒவ்வொரு ஆண்டும், சூரியனின் நகர்வை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த பிரபஞ்சம் முழுவதுமாக நிரம்பி இருக்கின்ற நட்சத்திரகூட்டங்களிடம் இருந்து, ஆற்றலை வாங்கி, ஒருங்கிணைத்து பூமிக்கு, தனியாக இந்த சூரியனே அனுப்பிக் கொண்டும் இருக்கிறது எனலாம். பொதுவாகவே சூரியன் நகர்கிறது என்றுதான் நாம் சொல்லுகிறோம். ஆனால், உண்மையாகவும், விஞ்ஞான ரீதியாகவும், பூமிதான் தன்னுடைய சூரியனை சுற்றும் பாதையில், நகர்கிறது. நாம் நிலையாக பூமியில் இருப்பதால், நாம் காண்பது எல்லாமே நகர்வதாக எண்ணிக்கொண்டு, அதையே வழக்கத்தில் வைத்துக் கொள்கிறோம்.

மார்கழி மாதம் என்பது தஷிணாயனம் என்ற சூரிய நகர்வின் இறுதி மாதமாகும். இறை கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வகையில், நம் இந்திய நாட்டில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக என்றும் சொல்லமுடியும். என்றாலும், உலக அளவில் இந்த மார்கழி மாதம், டிசம்பர் என்ற ஆங்கில மாதமாகவும், சீனாவில் டிராகன் மாதமாகவும் சிறப்பாகிறது. அந்த வகையில், கிறித்துவ, முஸ்லீம், பௌத்த, போன்ற வழிபாடு கொண்டவர்களுக்கும் ‘டிசம்பர்’ இறை வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இதை அந்தந்த மக்களும் அறிவார்கள். ஏனென்றால் இது, பன்னெடுங்காலமாக முன்னோர்களால், குடும்ப அமைப்பில் தொடர்ப்பட்டு வந்திருக்கிறது.

இந்த மார்கழி மாதம், மிகச்சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், இந்த பிரபஞ்சத்தை இயக்கும், காக்கும் மூல ஆற்றலின், பேராற்றலின், தெய்வீக்த்தின் வெளிப்பாடு, இந்த பிரபஞ்சத்திலேயே அமைந்ததாக இருக்கிறது. இதை முன்னோர்கள் உணர்ந்தார்கள். அவர்களே, இதன் முக்கியத்துவத்தை அறிந்து, மனிதன் என்பவனின் முழுமையை உணரவும், இயற்கையோடு கலந்து நின்று வாழவும் பழகிட, அந்த ஆற்றல் உதவும் என்பதை சொல்லி, இந்த மார்கழி மாதத்தில், மனதை, அந்த தெய்வீகத்தன்மையோடு இணைத்துப்பழகிட வழிபாடு மாதமாக அமைத்தார்கள். இதை தனியாக, எழுத்தாலும், வெற்று வார்த்தைகளாலும் புரியவைத்திட முடியாது. வழிபாடுகளை விடவும், தவம் இதற்கு நிச்சயமாக உதவிடும்.

குறிப்பாக, இந்த மார்கழி மாதம், சூரியனுக்கு இழந்த சக்தியை முழுமையாக தருகிறது. பிரம்ம முஹூர்த்தம் என்பதற்கு பொருத்தமான நிலை இதுவே. கடலில் முத்து குளிப்பது போல் என்று சொல்லுகிறார்கள். அந்த சக்தியை நாமும் பெற்றுக்கொள்ள தயார் செய்து கொள்கிறோம். எனினும், இதெல்லாம் கதைக்கு ஆகாது என்று வழக்கமான மாதமாக, ஜஸ்ட் கட்ந்து செல்வதும் நம் இயல்புதானே? அது சரி யாருக்கு வேண்டுமோ, அவர்கள் பெற்றுக்கொண்டு விடுகிறார்கள். வரிசையை விட்டு விலகி நிற்பவர்களுக்கு எப்படி எல்லாம் கிடைக்கும்?

சோதிட ரீதியாக, மூலம், பூராடம், உத்திராடம் என்ற நட்சத்திர கூட்டங்களின் ஆற்றல் வீடான, தனுசு ராசிதான், மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திர கட்டத்தில், ஒன்பதாம் வீடு என்றும் சொல்லுவார்கள். இதை பீடை மாதம் என்று சொல்லுவது, மொழி வழக்கில் தவறானது. பீடுடைய மாதம் என்பதுதான், பீடை ஆகிவிட்டது. பீடு என்றால், உயர்ந்த, மேன்மையான, பெரும்போக்கான என்ற அர்த்தங்களை தருவதாகும். சஷ்டி என்பது சட்டி ஆனது போலவே, பீடு என்பது பீடை ஆகிவிட்டது.

பகவத்கீதையில், இறையே தன்னை, மார்கழி மாதமாக அமைந்திருப்பதாக சொல்லிக் கொள்வதுண்டு. இந்த முப்பது நாட்கள், மேலோர்களின் ஒரு அதிகாலைப் பொழுது என்றும் சொல்லுவார்கள். இந்த நாட்களில், விஞ்ஞான ரீதியாகவும், நிறைய சக்தி பூமிக்கு கிடைப்பதாகவும், காற்றில் ஓஸோன் எனும் தன்மை கூடுவதாகவும் சொல்லுகிறார்கள். அதனால்தான் மார்கழி மாத, அதிகாலை நடைப்பயணம் கூட மிக சிறப்பு என்கிறார்கள்.

யோகத்தில் பயணிக்கும் அன்பர்களுக்கு, இந்த மார்கழி மிக சிறப்பாக துணை நிற்கும். ஆழ்நிலை தவம் தியானம் செய்வதற்கும், மனம் விரிந்து நின்று ஆராய்ச்சி செய்வதற்கும், மனதின் களங்கங்களை நீக்கிட அகத்தாய்வு செய்வதற்கும், மௌனம் என்ற நிலையில், அமைதியாக தன்னை ஆராய்ச்சி செய்வதற்கும், இயற்கையை அதன் தன்மையில் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. விரும்பும் அன்பர்கள், அவரவர் அளவிலே, இந்த மார்கழி மாதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

மற்றவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை, நாளை என்பது மற்றொரு நாளே என்பதுபோல கடந்துவிடலாம்.

வாழ்க வளமுடன்.

-

Do you know the truth meaning of the KADAVUL? Explanation by Vethathiri Maharishi


கட உள் செயல்பாடு கடவுள் வழிபாடான கதை உங்களுக்குத் தெரியுமா?


கடவுள் அவதாரம் என்பது உண்மைதானா? என்று கேட்டால், அதற்குச் சான்றாக, பழமையான நூல்களையும், குறிப்புக்களையும் காட்டுவார்கள். பலநூறு ஆண்டுகளாகவும் கருத்தும் விளக்கமும் நம்மோடு கலந்துவிட்டது. அதனால், ஒரு சந்தேகத்தில் கூட, இப்படியான கேள்வியை கேட்டுவிட முடிவதில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கு இதுதான் சான்று என்ற நிலையில், இது வெற்று நம்பிக்கை என்று, நீங்கள் விட்டுவிட முடியுமா? கடவுளும் இல்லை, அவதாரமும் இல்லை எல்லாம் ஏமாற்றுவேலை என்று விலகி நின்று வாழ்ந்திட முடியுமா? அது கண்ணிருந்தும் பாழும் கிணற்றில் விழுந்த கதை ஆகிவிடும். உங்களுக்கு இருக்கும் ஆறாம் அறிவின் தேவை, இங்குதான் பயனாகிறது. கடவுள் என்று சொல்லுகிறார்களே? அது என்ன? உண்மைதானா? வேறுதான் கடவுள் என்று சொல்லப்படுகிறது என்று சிந்தித்து ஆராய முயற்சிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யாமல், முற்றாக மறுத்து ஒதுக்கிட முடியுமா?

பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி சொல்லுவதையும் இங்கே கவனிக்கலம். ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை.’ எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே, நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது.

பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது.

இதற்கு மாறாக, சிந்திக்க முடியாத, முயற்சிக்காத அவர்களுக்கு உதவும் வகையில், உதாரணமாக சொல்லப்பட்ட பக்தி வழிமுறையில், அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது.

மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், சராசரி மக்களுக்கும், பாமர மனிதனுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

அப்படியானால், கடவுள் பக்தியும், சிலை வழிபாடும் தேவைதானா? என்று கேள்வியை கேட்டுக் கொண்டால், அதற்கான பதில், சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும்.

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது.

எனினும், இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்? வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும்.

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான்.

விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்க விட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். என்ற வகையில் மிகத்தெளிவாக, வேதாத்திரி மகரிஷி எடுத்துரைக்கிறார்.

இதை கடவுள் என்ற கவிதை வழியாகவும் தருகிறார்.

கட - உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,

   கருத்தறியான் ஊன்றிஇதைக் காணவில்லை!

கட -  உள் என்ற ஆக்கினையின் குறிப்பைமாற்றி,

   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;

கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டிக் 

   கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு!

கட- உள்! என்று மனிதன்ஓரு குறிப்புத் தந்தான்.

   கடவுள் எங்கே? என்றுபலர் தேடுகின்றார்.

மேலும், ‘ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’ என்று அழைத்து, உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?


கடவுள், அவதாரம், பக்தி, வழிபாடு, சடங்குகள், விழாக்கள் ஆகியன தற்கால மக்களிடம் எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவீர்களா?


இந்த கேள்விக்கான பதிலை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிகத்தெளிவான பதிலும் தந்து, அதற்கான தீர்வும் தந்திருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே படிப்போம். இதோ,

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார், ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள், அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில், பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு, சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது, சிரமமாக இருக்கிறது.

அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும், இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும், ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும், அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது, குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும், ஒரு வடிவத்தையும் குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு, அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். 

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர், தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால், அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான், வழிபடுகிற பொருளையும் காண்கிறார்.  இத்தகைய வழிபாடானது, ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை, அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை வாழ்க்கை, எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?

வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். 

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன், ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. 

இந்த நிலைமை நீடிக்க விட்டால் தனி மனிதன், குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். 

ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே, அறியாமையினால் போட்டுக் கொண்ட, இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’என்று விளக்கிச்சொல்லி, அறிவுறுத்துகிறார்.

இதை நீங்கள் மேலோட்டமாக படித்து நகராமல், மறுபடி மறுபடி படித்து, அதன் வழியாக சிந்தனையில் ஆழ்ந்து, யோசிக்கும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மை, உள்ளது உள்ளபடியே புரிந்திடும் என்பது உறுதி. இத்தகைய உண்மை விளக்கம், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று நம் குருவோடு இணைந்து, நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?


முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


பதில்: 

இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.

இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால்,  அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.

ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?

இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே,  ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.

வாழ்க வளமுடன்.

-

How to understand the Almighty worship between just human and after realization


சராசரி மனிதனின் இறைவழிபாடும், இறையுணர்வு பெற்ற மனிதனின் இறைவழிபாடும் ஒன்றானதுதானா? எப்படி விளங்கிக் கொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சராசரி மனிதனின் இறைவழிபாடும், இறையுணர்வு பெற்ற மனிதனின் இறைவழிபாடும் ஒன்றானதுதானா? எப்படி விளங்கிக் கொள்வது?


பதில்:

இந்த கேள்விக்கான விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே தருகிறார். அதையே உங்களுக்கு தந்துவிடுகிறேன். முன்னதாக, சராசரி மனிதன், தன்னளவில் இறைவழிபாடு செய்கிறார். அது உண்மை, விளக்கமற்று மறைந்திருக்கிறது. யோகத்தின் வழியாக, தன் முயற்சியினாலும், ஆர்வத்தினாலும்,  பக்தி என்ற வழிபாடு கடந்து, இறையுணர்வு அடைந்தவரின் வழிபாடு, உண்மை உணர்ந்த வழிபாடாக இருக்கும். அந்த வழிபாட்டின் உண்மையை, இதோ அறிவோம்.

ஒருவர் இறையுணர்வு பெற்று விடுகிறார். அவர் பெறும் விளக்கம் என்ன? பேரியக்க மண்டலம் முழுவதும் காணப்படும் காட்சிகள் விண் எனும் நுண்துகள்களும், இறைவெளியும்தான். இந்த இரண்டு தத்துவங்களின் கூட்டு இயக்கம்தான் அனைத்துத் தோற்றங்களும். ஒவ்வொரு தோற்றத்திலும் விண், வெளி இவற்றின் விகித அளவுதான் வேறுபடும். இந்த இரண்டில் வெளியேதான் இறைநிலையாக, பூரணப் பொருளாக, தெய்வமாக உணருகிறார். எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. ஒவ்வொரு விண் எனும் பரம அணுவைச் சுற்றிலும் இருப்பது இறைவெளியே. 

விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக் காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது.

இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும் உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.

இவ்வாறு இறைநிலையானது [தெய்வம்] தனது காந்தமென்ற ஆற்றலால் உடலைச் சீராக நடத்தும் போது எனது புலன் உணர் ஆர்வத்திலெழும் செயல்களாகிய உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோ, தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. 

அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் செயல்களை அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே வாழ வேண்டும் என்ற விளக்கமும், அதற்கேற்ற செயல்களும்தான் இறைவழிபாடு.

எனது உடல், உள்ளம் இவற்றில் இறையாற்றல் அதன் அருட்செயலை ஆற்றுவது போல், எல்லா மனிதரிடத்திலும் செயல் புரிகின்றது. சீவனின் உடலில் மாத்திரமன்று, எல்லாச் சடப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து நான் செயல்புரிய வேண்டும் என்ற இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே உண்மையான வழிபாடாகும்.

என்பதாக, விளக்கமளிக்கிறார். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்

-


Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!


வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


பதில்:

வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.

உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.

சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. ஒரு அடி, 12 இன்ச் அளவிற்குள்ளான விக்ரகங்களை வைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு மேல் என்றால், அதற்கான ஆகம விதிகளை கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்திகிறார்கள். எனவே, இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.

மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.

    பூஜை அறையை, அதுவேண்டும், இதுவேண்டும் என்று வேண்டுதல் அறையாக மாற்றாமல், இறைக்கு நன்றி செலுத்தும் விதமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழியிலே, பூஜை அறையில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும், இல்லத்திலும் தெய்வீகம் கமழும்.

ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.

பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.

வாழ்க வளமுடன்

-

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Why some of Vethathiriyans continues their temple worships?


வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?

பதில்:
இந்த கேள்வியில், உங்கள் ஆதங்கம் தெரிகிறது. நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும், உங்களுக்கு உண்மை தெரியுமா? இந்த கோவில், ஆலய வழிபாடுகளின் உண்மையை அறியவதற்குத்தான், வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், கோவிலும், ஆலயமும், அவர்களின் அந்த் வழிபாடும்தான் இந்த அளவுக்கு உயர்த்தியது அல்லவா? உங்களை உயர்த்திய ஏணியை உடனே எட்டி உதைத்து தள்ளிவிடுவீர்களா? அது நியாயம் ஆகுமா? அந்த ஏணியையும், அதன் படிகளையும் நினைத்துப்பார்ப்பது தவறாகுமா?

வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றவர்கள், உடனடியாக அந்த வழக்கத்தையும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டுமா? ஏன்? மற்றவர்களின் பார்வைக்காக ‘சும்மா’ வந்து போவதாகவும் இருக்கலாம் அல்லவா? அது மற்றவர்களுக்கு உண்மையான ஊக்கம் தருவதாக அமையலாமே? அங்கே வருபவர்களிடம் அந்த உண்மையை சொல்லுவதற்காகவும் இருக்கலாம்தானே? 

வேதாத்திரியமோ, குரு மகான் வேதாத்திரி மகரிஷியோ, பிரம்மஞானம் கற்ற பிறகு, மற்ற எல்லா வழக்க பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்று, எப்போதாவது சொல்லப்படுகிறதா? சொல்லி இருக்கிறாரா? உண்மையாகவே, அவர் ‘யோகத்தில் உண்மை அறிந்தவர்கள் கோவிலுக்கு போகலாமா என்ற ஒர் கேள்வி எழுகிறது, என்னைக்கேட்டால், அவர்கள் கோவிலுக்கு போவதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் போகலாம் என்றுதான் சொல்லுவேன்’ என்றும் பதில் அளித்திருக்கிறார். ஏன்? கோவில் வழிபாட்டின் உண்மை அறிந்த பிறகு, அந்த பழைய வழிபாடு அவரிடம் இல்லை, மேலும் அங்கே வரும் மற்றவர்களுக்கு அவர், உண்மை விளக்கமும், ஊக்கமும் தரமுடியுமே!

ஞானிகளும், மகான்களும் கூட கோவில் கும்பாபிஷேகம் நாளிலும், யாகம் வளர்க்கும் நாளிலும் அங்கே தங்கி இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதன் காரணம் என்ன? தாங்கள் உணர்ந்த உண்மையை அங்கே வெளிப்படுத்துகிறார்கள். அங்கே இருக்கும் ஆற்றலில் தன்பங்கையும் அளிக்கிறார்கள். ஆனால் இது மறைமுகமாகவே நிகழும், எவரும் அறியமாட்டார்.

உண்மையில் கோவில், ஆலய வழிபாட்டின் உள்ளார்ந்த கருத்தை அறியாமல்தான் இந்த கேள்வியே பிறந்திருக்கிறது என்று தோன்றவும் இடமுள்ளது, கோவில் ஆலயத்தில், கடவுளை கருத்தாக பார்ப்பவர்தான் பக்தர். பிரம்மஞானம் உணர்ந்தவர் பார்க்கும் பார்வை வேறு என்பது நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, இனிவரும் காலங்களில், நீங்கள் மற்றவர்கள்மேல் அக்கறை கொண்டு, வருந்துவதை, கவலைப்படுவதை, பதட்டப்படுவதை, திருத்தவேண்டும் என்பதை விட்டுவிடுங்கள். அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் உங்களுக்காக, உங்கள் வழியில் ஆராய்ந்து உயருங்கள், மற்றவர்களை குறித்த எண்ணமெல்லாம் உங்களுக்கு, உங்கள் முன்னேற்றத்தில் தடை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

        மேலும், பிரம்மஞானம் என்ற உண்மையில் எல்லாமே இறை என்ற முழுமை உணர்வு வந்துவிடுவதால் அங்கே விழிப்பு நிலையும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் கேள்விக்கு பதில் மட்டுமல்ல, கேள்வியின் குறைகளை வெளிப்படுத்தி உங்களுக்கான விளக்கம் தருவதுமே இந்தப்பதிவாகும். 

வாழ்க வளமுடன்
-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

Why India has that yoga, karma, worship to the divine etc.?


இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


பதில்:

முகம் மலர்ந்த சிரிப்போடு இந்த கேள்வியை வரவேற்கிறேன். நல்ல கேள்விதான். ஆனால் இதில் மிகப்பெரிய பிழை இருப்பதை அறியாமலேயே நீங்கள் கேட்டுவிட்டீர்கள். தவறில்லை. நாம் உண்மை என்ன என்று அலசி ஆராய்ந்துவிடலாமே?

இப்போது நாம் ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு போய்விடலாமா? நார்வே (Norway) என்ற நாட்டை தேர்ந்தெடுத்து  ஓஸ்லோ என்ற நகரத்திற்கு (Oslo) பயணித்துவிடலாம். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் இருந்து கிட்டதட்ட 7700km தூரம் இருக்கிறது. விமானத்தில் செல்ல 13Hr நேரம் ஆகலாம். பயணச்சீட்டிற்கு 60k ஆகலாம். நாம் எண்ணித்தின் வழியாக செல்வதால் ஒரு செலவும் இல்லை. இன்றைய நாளில் அங்கே, கால நிலை, குறைபனி -2 என்று சொல்லுகிறார்கள் (March 13'2024). அங்கே வாழ்கின்ற மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்? அங்கே காற்று இருக்கிறது. தினமும் ஒரு நாளில், நாம் காண்பதுபோலவே சூரியனின் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெப்பமில்லை. சந்திரன் ஒளிர்கிறது. காலையும் உண்டு, இரவும் உண்டு. அங்கே வாழும் மக்களுக்கு உடலும் உண்டு, குடலும் உண்டு, மனமும் உண்டு. பசி எடுக்கும் சாப்பிடுவார்கள். மனமிருப்பதால், வாழ்க்கையின் இன்பம் துன்பம், மகிழ்ச்சி வருத்தம், கவலை, சினம் வந்துகொண்டுதான் இருக்கும். காதலும் உண்டு, காமமும் உண்டு, திருமணமும், இணைந்த குடும்ப வாழ்க்கையும் உண்டு, அதில் பிரச்சனைகளும், சண்டைகளும் உண்டு, பிரிவும் உண்டு, 

தங்கள் வாழ்க்கையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் திட்டமிட்டு உழைப்பார்கள், பணமும் பொருளும் சம்பாதிப்பார்கள். உழைப்பின் மிகுதியால் சோர்வும், அசதியும், தூக்கமும் வரலாம். குளிரை தாங்கமுடியாமல், சூடாகவும், சூட்டை ஏற்படுத்தி தாங்கிக்கொள்ள, அவர்கள் புகைக்கலாம், மதுபானங்கள் குடிக்கலாம். காய்கறிகள் சாப்பிடலாம். மாமிசம் மட்டுமே முழுநேர சாப்பாடாகவும் இருக்கலாம். அது அந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம். அதன்வழியே இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம், பிரச்சனைகளும், நோய்களும், பெரும் செலவும் வரலாம்தானே? குணப்படுத்தலாம், அதுமுடியாமல் இறக்கவும் நேரலாம்.

ஆக அங்கேயும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. சிலருக்கு இறை வழிபாடு இருக்கலாம். யாருக்குமே நம்பிக்கையின்றி அதில் ஏமாற்றமும் இருக்கலாம்.  எனினும் தெய்வீகம் என்ற மெய்ப்பொருள் அதன் இயல்பில் மாறிக்கொள்வதில்லை. அவர்களும் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறார்கள். வேறெரு கோளிலோ, கிரகத்திலோ இல்லை. அவர்களுக்கும், காலநிலை, பருவமாற்றம் எல்லாமும் உண்டு.

அவர்கள் எதைச்செய்தாலும் நல்லவிளைவுகள் மட்டுமே வருமா? விளைவறிந்து தான் எதையுமே செய்வார்களா? உணர்ச்சியும், சிந்தனையும், நோக்கமும் எப்போதும் நேர்மையாக தெளிவாக இருக்குமா? சினம், கோபம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பார்களா? தங்களுக்குள் தாக்கிக் கொள்ளாமல், மரியாதையாக நடந்துகொள்வார்களா? எப்போதும் அன்போடும், நட்போடும், கருணையோடும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா? இப்படியாக எத்தனையோ கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? 

இவ்வளவு இருக்கும் பொழுது எப்படி அவர்கள், மனிதப்பிறவியின் நோக்கத்தில் இருந்தும், மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தில் இருந்தும் தப்பிவிடுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பார்வைக்கு ஒரு உண்மை தெரியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்று கருதிவிட முடியுமா? எங்கும் நிறைந்துள்ள, உலகையும், சந்திரனையும், சூரியனையும், அவைகளைப்போல பலதுமாக இருக்கும் கிரங்களையும், நட்சத்திரங்களையும், மண்டலங்களையும் மிதக்கவிட்டு, தாங்கிக்கொண்டிருக்கும் அந்த மெய்ப்பொருளை, கண்ணால் பார்க்கமுடியவில்லை என்பதால், இல்லை என்று சொல்லுவது பொருந்துமா?

இதுபோலவே, நாமும் பிறமக்களும் வாழும், இந்த பூமியில் இருக்கின்ற எந்த ஒரு வெளிநாட்டையும், மனிதர்களையும் சிந்தித்துப்பாருங்கள். உங்களால் முடிந்தால் கடல்கடந்து, வான்கடந்து சென்று, நேரிலே, நிஜமாக அவர்களோடு பேசி பழகி கேள்விகள் கேட்டு, உண்மையை அறியுங்களேன்.

மனிதனின் மூலம் என்ன? அவன் யார்? என்பதை தானாகவே அறியும் வழிதானே ‘கடவுள்’. அதை உலகில் பிறந்த ஆறாவது நிலை அறிவைக்கொண்ட மனிதன் அறியவேண்டும் என்பதுதானே அந்த பரிணாமத்தில் பொதிந்துள்ள உண்மை. அதை மறந்து, மறுத்து வாழ்ந்துவிட்டால், தப்பிப்பதாக அர்த்தமா?

அப்படித்தானே நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள், இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் இந்த முயற்சியை விட்டுவிடலாமா? இருக்கும் நவீன விஞ்ஞான அணுவியல் கருவிகளை அனுபவித்துக்கொண்டு, உண்டு, உறங்கி, எழுந்து, வாழ்ந்து மடிந்து போகலாமா? அப்படியானால், நமக்கும் நமக்கு கீழான உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பார்வையை மாற்றி, வெளிநாட்டு மக்களை, உள்நோக்கி அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உண்மை தானாகவே உங்களுக்கு புரியும். அவர்களும் விதிவிலக்கல்ல. உலகில் எந்த மனிதர்களுமே விதிவிலக்கல்ல. அவர்கள் உங்களைவிட, யோகம் குறித்த உண்மையை அறியாது இருக்கலாம் அல்லவா? உங்களால் முடிந்தால், அவர்களை, அவர்களின் மனதின் தரத்தை இன்னும் உயர்த்தலாமே? அப்படியொரு உயர்ந்த வேலையும், பொறுப்பும் சக மனிதாகிய உங்களுக்கும் இருக்கிறதே? யோகத்தில் உயர்ந்த பிறரைப்போல நீங்கள் உயரவேண்டும் என்று நினைப்பது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டலாமே? சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க வளமுடன்

-


Why no mind peace when we worship in temple too? What can be done?


மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


பதில்:

இந்தக்கேள்வியின் உள்நிலை அறியும் பொழுது, நீங்கள் வீட்டிலேயே தவம் செய்துவருகிறீர்களா? அதைவிட்டு விட்டீர்களா? என்று தெரியவில்லை.  என்றாலும், யோகத்தில் இணைந்து தவம் கற்றுக்கொண்ட ஒருவர், முற்றிலுமாக கோவிலுக்கு போவதை, அங்கே வழிபாடு செய்வது விட்டுவிட வேண்டியதில்லை. அதில் எந்த வித மாற்றுக்கருத்தும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னதுமில்லை. என்றாலும், அந்த வழிபாடுகளில் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறார். அதனால், யோகத்திற்கு வந்த பிறகு கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பமே. ஆனால் அதற்காக, கற்றுக்கொண்ட யோகத்தை விட்டுவிடவும் கூடாது. அதுதான் பிறப்பை மறுபடியும் சிக்கலாக்கிவிடும்.

உங்கள் கேள்வியின் வழியாக, இரண்டு விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. உங்களுக்கு வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை. இப்பொழுது இதற்கு காரணம், ஏற்கனவே உங்கள் மனம் அமைதியின்று தவிக்கிறது என்றுதான் கருதவேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கலாம். அது தினமும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது குடும்பத்தில் இருக்கலாம், குடும்ப நபர்களில் இருக்கலாம், உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கலாம், உங்களின் தொழில், வியாபாரம், வேலை இவற்றிலும் கூட சிக்கல் இருக்கலாம்.

எனவே முதலில், இந்த சிக்கல், மன குழப்பம் தருவது எது என்று ஆராயுங்கள். ஒருநாளை இதற்கென்று ஒதுக்கி, ஏதேனும் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், சிந்தனை செய்யுங்கள், முதலில் உங்கள் கைபேசி, மற்ற இதர உபயோகங்களை ஒருநாள் தவிர்த்துவிடுங்கள். வெறும் ஆளாக அமர்ந்து, யாரையும் அருகில் விடாமல் தனியாக, உங்கள் வீட்டிலே கூட அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான், வேதாத்திரியத்தில் ‘அகத்தாய்வு எனும் தற்சோதனை’ என்றும் சொல்லுகிறோம். உங்களுக்கு தவம் செய்ய வாய்ப்பிருந்தால், முதலில் துரிய தவம் செய்துவிட்டு பிறகு இந்த சிந்தனையை தொடருங்கள். நிச்சயமாக விடை கிடைக்கும்.

அந்த சிக்கல், அதன் தன்மை, யாரால் வந்தது?, எதனால் வந்தது? எப்படி தீர்க்கலாம்? யார் உதவுவார்கள்? எவ்வளவு காலம் ஆகும்? நீடித்தால் என்னாகும்? விலக்கிவைக்க முடியுமா? ஏற்று வாழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அந்த பதிலை எழுதியும் வையுங்கள். மறுபடி ஆராயுங்கள்.

மற்றபடி பிரச்சனையும், சிக்கலும், குறையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிற நிலையில், நீங்கள் வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்காது. கோவிலுக்கு சென்று வணங்கி, வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்காது. பிரச்சனை உங்கள் தவத்தில் இல்லை, கோவிலிலும் இல்லை. அது அந்த பிரச்சனை உங்களுடைய மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிந்தால் அந்த அமைதியை நீங்கள் அறிந்து அதை அனுபவிக்கலாம்.

வாழ்க வளமுடன்.

-

Why I can't give up the Bhakti worship?


பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


பதில்:

பக்தி வழிபாடுகளில் இருந்து விடுபடுங்கள் என்றும், அதை விட்டுவிட்டு மீண்டுவாருங்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? யார் அப்படியான அறிவுரையை கொடுத்தார்கள்? யார் அதுதான் சிறந்தது என்று வழிகாட்டினார்கள்? 

உண்மையாக பக்தி வழிபாடுகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ள வேண்டியது குறித்து கவலைப்படாதீர்கள். பக்தியும் வழிபாடும் இருக்கட்டும். அதில் இருக்கின்ற உண்மை, சொல்லப்பட்ட உண்மை என்ன என்பதை தேடுங்கள். ஏன்? எதனால்? எதற்காக? என்ன பலன்? என்ன நன்மை? என்ற கேள்விகள் வழியாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கான விடை என்ன? என்பதை அந்த ஆராய்ச்சியின் முடிவாக கண்டுபிடியுங்கள். உங்கள் முடிவு என்ன? என்பதை வேறு யாருக்கும் சொல்லவும் வேண்டியதில்லை. சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, அது எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள். உங்களைபோல அவர்களும் ஏதோ ஒருநாள், நீங்கள் கண்டுபிடித்த அதே உண்மையை, தானாக ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டுமே!

பக்தி என்பது நிச்சயம் வேண்டும். அது இல்லாது ஒரு மனிதனுக்கு தனித்தன்மைகள், மனிதனுக்கே உரித்தான உயர்ந்த தன்மைகள் மலர்ச்சி பெறுவதில்லை. அறிவின் முழுமையை அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னை முழுதாக அறிந்துகொள்வதற்கு, அந்த வழியே செல்வதற்கு, தன்னை தகுதியாக மாற்றிக்கொள்ள சிறந்த வழிதான் பக்தி, ஆனால், அதில் நின்றுவிடாது, உண்மையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அப்படியாக முயற்சித்தால், யோகத்திற்கு நுழையமுடியும்.

யோகத்திற்கு நேரடியாக வரமுடியாத பாமர மக்களுக்காகவே, அவர்களுக்கு துணை செய்யவே, யோகத்தில் உயர்ந்த சித்தர்களால், ஞானிகளால், மகான்களால், குருமார்களால்தான் பக்தி கொண்டுவரப்பட்டது.

அதில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் அதை வேறுவழிகளில் திசை திருப்பிவிட்டது. இன்னும் அந்த திசையில்தான் போய்க்கொண்டும் இருக்கிறது. அதுகுறித்து நமக்கு கவலை ஏதுமில்லை. நாம் இங்கே விழிப்பாக, உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் போதுமானது. எனவே பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே என்று வருந்தாமல், உண்மையை ஆராய்ந்து அறிய தயாராகுங்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்.

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பரிகாரமாக, நவக்கிரக தவம் செய்யலாமா?


பதில்:

ஒரு சோதிட குறிப்பில், குழந்தை பிறந்த நேரம் என்பதைக் கொண்டு, வானில் எந்தெந்த கிரங்கங்கள் எங்கிருந்து தன்னுடைய காந்த அலையை வீசுகிறது என்பதைத்தான் நாம் ஜாதகம் என்று சொல்லுகிறோம். பெரும்பாலான ஜாதகங்களில், மிகச்சரியான நேரம் என்பது குறைவுதான். மேலும் வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டுவகையான பஞ்சாங்க உதவியும் கூட பிறந்த குழந்தையின் லக்கனம், பிறந்த நட்சத்திர பாதம் ஆகியவற்றையும், வக்கிர, நகர்ந்த கிரகங்களின் இருப்பிடத்தை மாற்றிவிடும். என்றாலும் கூட கிரகங்களின் காந்த அலை வீச்சு என்பது உறுதியானதுதான்.

ஒரு ஜாதக கணிப்பில், ஆராய்ச்சியில் ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சனை தீரவும், வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து தீர்க்கவும் நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஒரு ஆறுதலான வார்த்தைகள் தந்து உதவுவது போல. பெரும்பாலானவை அனுபவித்து தீர்ப்பது என்பதாகவே இருக்கும். ஆனாலும் வாழும் மனிதனுக்கு இயற்கை கொஞ்சம் கருணை காட்டத்தான் செய்கிறது. அதனால் மனம் உடைந்து கலங்கவேண்டிய அவசியமில்லை

இங்கே பரிகாரம் என்பது, மன நிறைவு, மனதுக்கு ஆறுதல் என்பதுதானே தவிர வேறெதும் இல்லை. இந்த பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கும் பல்லாயிர சோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதும் இப்போதைய நிலைதான். அதை நாம் குறைசொல்ல முடியாது எனினும் அவர்களிடம் சிக்காமல் விலகி இருக்கவேண்டும். கோவிலுக்கு போவது, பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது, தானம் செய்வது, யாகம் வளர்ப்பது என்று எத்தனையோ செய்தாலும் கூட இருப்பதும், வரப்போவதும் ஜாதகத்தில் மாறிவிடுவதில்லை. ஆனால் இதையெல்லாம் செய்தால் ஏற்படும் மன மாற்றம் நமக்கு உள்முகமாக நம்பிக்கையைத் தரும்.

ஆனால், வேதாத்திரியத்தின் வழியாக பயணிக்கின்ற ஒருவர், இந்த பரிகாரம் என்பதற்கு, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்தால், வழக்கமான பரிகாரதிற்கு மாற்றா? என்று கேட்டால் அது இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமாக பஞ்ச பூத நவக்கிரக தவம்  எந்த பரிகாரத்திற்கும் உதவுவதில்லை. என்றாலும் கூட, ஒவ்வொரு கிரத்தின், கோளின் மீதும் நம்முடைய மனதை நிறுத்தி, தவமாக செய்துவருகையில், அந்த கிரகம், கோளின் காந்த அலைவீச்சின் தாக்கத்தை, சமன் செய்துகொள்ளும் வகையில் மனம் மாறுகிறது என்பது உண்மையே! அந்த வகையில், வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் நிலைக்கு மனம் உறுதிபடுகிறது என்றும் சொல்லலாம். இது பரிகாரம் அல்ல எனினும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். 

தொடர்ந்து பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவரும் பொழுது, மனதின் சக்தியும், கிரகங்கள், கோள்களின் சக்தியும் கலப்புறுகிறது. அதன்வழியாக நாம் நன்மையே பெறலாம், பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக வந்துவிடும். நம்முடைய கடந்த கால நிலையை மாற்றிட முடியாது எனினும், வரப்போகிற நிலைமையை சரி செய்துவிடக்கூடிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் மட்டும், வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஒருவர் மட்டுமல்லாது, யார்வேண்டுமானாலும், தீட்சை பெற்றுக்கொள்ளாத எந்த ஒருநபரும் செய்து அதற்கான பலனைப் பெறலாம் என்பதுதான் இத்தவத்தின் சிறப்பாகும்! 

வாழ்க வளமுடன்.

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-