CJ for You: hidden

hidden

Showing posts with label hidden. Show all posts
Showing posts with label hidden. Show all posts

What is the Truth of Vethathirya Kayakalpa yoga and how it come to this form as exercise?


ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி என்பது சித்தர்களின் புதிரா? அதை எப்படி இப்போதுள்ள பயிற்சியாக மாற்றம் பெற்றது என்று விளக்குவீர்களா?

சிவ வாக்கியர் என்ற சித்தர் பெருமகான், அம்மை அப்பன் என்று தொடங்கும் ஒரு கவியில், இப்படியாக ஒரு கவி இருக்கிறது.

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே!

இந்த கவி, காயகல்ப பயிற்சி உண்மையை, தெளிவாக தெரியப்படுத்துகிறது. ஆனால், அதை நாம் முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறதா? இல்லை. ஆனால், தமிழ் படிக்கத்தெரிந்த அனைவரும், இதை படித்து ஏதோ புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த கவிதையின் கருத்துரை, விளக்கம் அறியமுடியாது. என்றாலும்கூட, நமக்கு புரிந்த அளவில் விளக்கம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதை தனியே விளக்க வேண்டியதில்லை எனினும், ஒர் உதாரணமாக பார்க்கலாமே? 

மூலமாம் என்றால், மூலாதாரம் என்று அறியமுடிகிறது. அந்த மூலாதாரத்தில் கோரப்புல் விளைகிறது. அதை அதிகாலை எழுந்து, நாலு கட்டு கட்டுமளவுக்கு அறுக்கலாம். அப்படி அறுத்துக் கொண்டே வந்தால், பாலன் போல, இளவயது சிறுவன் சிறுமி போல, வாழலாமாம். பரப்பிரம்மம் என்று முழுமுதற்ப் பொருளையும் அறிந்து அதைப்போலவும் ஆகலாமாம். ஆலம் என்ற விஷத்தை உண்ட சிவனின் அடிசேர்ந்த வகையிலும், சக்தியை சரணடைந்த வகையிலும் இது உண்மை என்று இந்த கவிதை விளக்குகிறது’ என்று நாம் சொல்லிவிடலாம். ஆனால் இதன்படி செய்தால் அது காயகல்பம் ஆகிவிடுமா?

மூலாதாரம் எங்கே? என்று அறியவேண்டும். அங்கே கோரைப்புல் எப்படி இருக்கிறது? என்பது அறியவேண்டும். இதற்கு முன்பாக கோரைப்புல் அங்கே எப்படி வந்தது என்பதையும் அறியவேண்டுமே? நாலுகட்டு அறுக்கவேண்டும் என்றால் எப்படி? எதனால் அறுக்கவேண்டும்? அறுத்து எங்கே வைக்கவேண்டும்? இப்படி கேள்வி கேள்வியாக பிறக்கும்தானே?

        இப்படியாக பல நூறு சித்தர்கள், இத்தகைய காயகல்பம் என்ற தத்துவத்தை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதன் அவசியம் அவர்களுக்கு, தங்கள் வாழ்நாளை மெய்பொருள் ஆராய்ச்சியில் செலவழிக்க அவசியமாகவும் இருந்ததுதானே!

இந்த சித்தர்கள் ஏனய்யா இப்படி குழப்புகிறார்கள்? என்று நமக்கு அங்கலாய்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால், இதுதான் சித்தர்களின் வழிமுறை. ரகசியம் காக்கும் குழூஊகுறி பாடல்கள் என்று சொல்லுவார்கள். மேலோட்டமாக ஒன்றும், உள்பொதிந்த அர்த்தத்தைக் கொண்டும் அதை வார்த்தைகளால் சொல்லுவதாகும். மேலும் முக்கிய காரணம், இந்த உண்மைகள், உண்மையை அறிந்து தேடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கவேண்டும் என்ற காரணமும் ஆகும்.

இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆராய்ந்தார், பல்லாண்டுகள் அதை தேடித்தேடி, உணர்ந்தறிந்து, ஒழுங்குபடுத்தி, தானே செய்து பார்த்து, திருத்தங்கள் ஏற்று முழுமை செய்தார். அதுதான் நமக்கு, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சியாக நமக்கு கிடைத்திருக்கிறது. இதைக் குறித்த விரிவான காணொளி பதிவை இங்கே காணலாம். உண்மை அறியலாம்.

வாழ்க வளமுடன்.

Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?


முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


பதில்: 

இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.

இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால்,  அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.

ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?

இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே,  ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.

வாழ்க வளமுடன்.

-

How to counter the general notion that devotion and spirituality deceive people?


பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


பதில்:

உண்மையிலேயே பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோலவே பொதுத்தன்மையான கருத்தாக மக்களிடம் பரவியும் உள்ளது. இன்னமும் கூடுதலாக, மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களின் பணத்தையும் பறிக்கிறது என்று சொல்லுகிறார்கள். எப்படி? அதிகவட்டிக்கும், மறைமுகமான இருமடங்கு லாபத்திற்கும், ஏதெனும் ஒரு போலியான நிதி நிறுவனத்தை நம்பி, பெரும் முதலீடு செய்து மக்கள் ஏமாந்து நிற்பதை விட அதிகமாகவா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பக்தியும் ஆன்மீகமும் ஏதோ ஒரு மதத்தில் மட்டுமே, ஏமாற்றுவதாகவும், பணத்தை பிடுங்குவதாகவும் பிரச்சாரம் நிறைந்துவிட்டது சோகமானதே. இதனாலேயே பக்தியும் இல்லை, ஆன்மிகமும் இல்லை, கடவுளும் இல்லை (அதாவது குறிப்பிட்ட வகையிலான மதத்தில் மட்டுமே) என்று சொல்லி வளர்ந்தும் வளர்த்தும் வருகிறார்கள். ஆனால் நாம் எந்த மதத்தையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் குறையாக பார்க்கவில்லை, அது குறித்து தனியாக அடையாளம் காட்டப்படுவதும் இல்லை. நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் விளக்கங்களை தரவேண்டியது உள்ளதே?!

பக்தி என்பது, பிறந்தது முதல் பருவத்திற்கு வரும் வயதுவரை எல்லோருக்குமே அவசியம். அது இந்த இயற்கையை, தெய்வீகமாக கருதி அதற்கு மதிப்பு தந்து அதற்கு முரண்பாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவும், கட உள் என்ற தன்மைக்கு நம்மை தயார் செய்வதற்காகவுமே சித்தர்களாலும், அறிவார்ந்த முன்னோர்களாலும், ஞானிகளாலும் வழங்கப்பட்டது. பருவம் நிறைந்து விட்டால், அந்த பக்தியில் இருக்கும் உண்மையை ‘யோகத்தின் வழியே’ அறிந்துகொள்ளவும் வழிவகை செய்திருந்தார்கள். இதுதான் சிதைந்துபோய், வழிபாடாகவும், சடங்காகவும் உண்மையை மறைத்துக்கொண்டு நிற்கிறது. இந்த சிதைவை திருத்திட வழிகாணாமல், அதில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்ளாமல், மொத்தமுமே தவறு கருவது பெரும்பாலான மக்களின் அறியாமை தான்.

ஆன்மீகம் என்பது பக்தி என்பதிலிருந்து வேறுபட்டது. பக்தியிலிருந்து உண்மையை நோக்கி நகரும் பாதை என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை புரிந்துகொண்டால், யோகம் என்பது என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்கால ஆன்மீகம், பக்தியைத்தான் பிடித்துக்கொண்டு நகர்கிறது. ஆன்மீகமும் பக்தியும் ஒன்றுதான் என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இந்த பணத்தை பிடுங்குவதில் பக்தி, பல ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிவிட்டது. அது ஓரளவில் உண்மைதான். எனினும் அதை எளிதாக கண்டு விலக்கிவிடவும் முடியும். ஆனால் ஆன்மீகமும் பணத்தை பிடுங்குகிறது, பறிக்கிறது, ஏமாற்றுகிறது என்பது சோகம். உண்மையான ஆன்மீகம் எது என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் பயணித்து, உண்மையறிந்து ‘யோகத்திற்குள்’ நுழையவேண்டும். யோகமே உங்கள் பிறப்பின் ரகசியத்தையும், நோக்கத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் உங்களுக்கு அறியத்தரும்.

இதன்படி, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை கொண்டவர்களுக்கு, அதை ஆழ்ந்து பார்த்து, உண்மையை அறிந்து கொள்ளக்கூடிய வழியை சொல்லித்தந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

Why I can't give up the Bhakti worship?


பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


பதில்:

பக்தி வழிபாடுகளில் இருந்து விடுபடுங்கள் என்றும், அதை விட்டுவிட்டு மீண்டுவாருங்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? யார் அப்படியான அறிவுரையை கொடுத்தார்கள்? யார் அதுதான் சிறந்தது என்று வழிகாட்டினார்கள்? 

உண்மையாக பக்தி வழிபாடுகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ள வேண்டியது குறித்து கவலைப்படாதீர்கள். பக்தியும் வழிபாடும் இருக்கட்டும். அதில் இருக்கின்ற உண்மை, சொல்லப்பட்ட உண்மை என்ன என்பதை தேடுங்கள். ஏன்? எதனால்? எதற்காக? என்ன பலன்? என்ன நன்மை? என்ற கேள்விகள் வழியாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கான விடை என்ன? என்பதை அந்த ஆராய்ச்சியின் முடிவாக கண்டுபிடியுங்கள். உங்கள் முடிவு என்ன? என்பதை வேறு யாருக்கும் சொல்லவும் வேண்டியதில்லை. சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, அது எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள். உங்களைபோல அவர்களும் ஏதோ ஒருநாள், நீங்கள் கண்டுபிடித்த அதே உண்மையை, தானாக ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டுமே!

பக்தி என்பது நிச்சயம் வேண்டும். அது இல்லாது ஒரு மனிதனுக்கு தனித்தன்மைகள், மனிதனுக்கே உரித்தான உயர்ந்த தன்மைகள் மலர்ச்சி பெறுவதில்லை. அறிவின் முழுமையை அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னை முழுதாக அறிந்துகொள்வதற்கு, அந்த வழியே செல்வதற்கு, தன்னை தகுதியாக மாற்றிக்கொள்ள சிறந்த வழிதான் பக்தி, ஆனால், அதில் நின்றுவிடாது, உண்மையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அப்படியாக முயற்சித்தால், யோகத்திற்கு நுழையமுடியும்.

யோகத்திற்கு நேரடியாக வரமுடியாத பாமர மக்களுக்காகவே, அவர்களுக்கு துணை செய்யவே, யோகத்தில் உயர்ந்த சித்தர்களால், ஞானிகளால், மகான்களால், குருமார்களால்தான் பக்தி கொண்டுவரப்பட்டது.

அதில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் அதை வேறுவழிகளில் திசை திருப்பிவிட்டது. இன்னும் அந்த திசையில்தான் போய்க்கொண்டும் இருக்கிறது. அதுகுறித்து நமக்கு கவலை ஏதுமில்லை. நாம் இங்கே விழிப்பாக, உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் போதுமானது. எனவே பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே என்று வருந்தாமல், உண்மையை ஆராய்ந்து அறிய தயாராகுங்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்.

Get the Truth from the Bhakti


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்பதை ஏன் என்னால் ஏற்கமுடியவில்லை?


பதில்:

உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். உண்மையை விளக்கிக் கூறும் வாய்ப்பை இக்கேள்வி உருவாக்குகிறது. இனி பதிலை சிந்திப்போம்.

‘பக்தி என்பது சிறுபிள்ளைகட்கே' என்று ஒருகவிதையில் சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். உடனடியாக அந்த கவிதையை என்னால் இங்கே ஞாபகப்படுத்தவோ, குறிப்பிடவோ முடியவில்லை, கேள்வி கேட்ட நீங்களே குறிப்பிட்டால் நலம். பொதுவாக, கவிதை என்பது, கரும்புச்சாறு போல பெரிய நீண்ட கரும்பை, கசக்கிப் பிழிந்து உருவாக்கிய சாறு. அதை நீங்கள் கரும்பாக நினைக்க முடியுமா? அதுபோலவே ‘பக்தி என்பது சிறுபிள்ளைக்கானது அது ஒரு விளையாட்டுப் போல' என்றால் அதற்கான காரணமும், விளக்கமும் ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் அல்லவா? அதெப்படி இந்தமாதிரி சொல்லலாம் என்று நினைக்கலாமா?

சரி சிறுபிள்ளை விளையாட்டு என்பது என்ன? நீங்கள் அந்த சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியது இல்லையா? ஞாபகமும் இல்லையா? ஆனால் இப்போதுள்ள சிறுபிள்ளைகளுக்கு படிக்கவும், வீட்டுப்பாடம் செய்யவுமே நேரமில்லை. இன்னும் சொல்லப்போனால், சாப்பிடக் கூட நேரமில்லை என்று வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள் நம் பெற்றோர்களாலும், சமூகத்தாலும், உலகத்தாலும்.

உதாரணமாக பார்க்கலாமே, சிறுபிள்ளைகள், ஆண் பெண் என்ற பேதமற்று பழகி விளையாடுவார்கள். அப்படியான அனுபவம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வருத்தமே! அந்த விளையாட்டில் அம்மா, அப்பா, பிள்ளை, குடும்பம் என்ற விளையாட்டும் உண்டு. சாமியும், கோவிலும் கூட உண்டு. அப்படி அந்த குடும்பத்தில் அம்மா என்ற குழந்தை சமைக்கும், மற்றவர்கள் உண்டு மகிழ்வார்கள். அதாவது நெருப்பில்லாத சமையல், பொருளில்லாத சாப்பாடு. சிலவேளைகளில் அப்படி எதுவுமே இல்லாமல் நடிப்பார்கள் அவ்வளவுதான். இந்த சாப்பாடால் உங்கள் பசி ஆறுமா? இல்லை ஆனால் இது ஒரு அனுபவ விளையாட்டு. ஒரு பகிர்வு, அன்பு, நட்பு, பழக்கம் என்ற ரீதியில் அமைந்திருக்கும். உண்மையைப் போன்ற பொய். இதைத்தான் இப்போது மெய்நிகர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிறுபிள்ளை விளையாட்டு போலவேதான் நம்முடைய ‘பக்தி’ இருக்கிறது. அந்த பக்தியில் இருக்கின்ற, சொல்லப்பட்ட, மறைக்கப்பட்ட, மறைந்திருக்கிற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் பக்தியை கடந்து ‘யோகத்திற்கு’ வரவேண்டும். வந்தாகவேண்டும். 

இதைத்தான், இந்த விளக்கத்தைத்தான், கவிதையில் சுருக்கமாக ’பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இப்பொழுது உண்மை உங்களுக்கு விளக்கமாவிட்டதா?!

வாழ்க வளமுடன்.

குறிப்பு: இந்தப்பதிவில், பக்தியை குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் எண்ணினால் அது அறியாமையாகும்!