CJ for You

Artist life in the world


ஒரு தொழில்முறை ஓவியனாக என்னை நிறுத்திக்கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த சிறப்பான முன்னேற்ற நிலை. பல ஆண்டுக்காலமாக, பொழுதுபோக்காக சிலரின் அன்புக்காகவும் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தவன் நான். கேரிகேச்சர்லைவ்ஸ் என்று ஒரு சுயநிறுவனம் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் குறிப்பில், அவர்களுக்கு பிடித்த அளவில், அவர்களின் முகம், பாவம் மாறாமல் வரைந்து தந்துகொண்டிருக்கிற இந்தகாலம், கிட்டதட்ட 17 ஆண்டுக்கால பயணம்.


கடந்த வாரத்தில் என் உறவினர் இல்லத்தில், ஒரு பெரியவரை சந்தித்தேன். நல்ல மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் பணியாற்றியவர், தற்போது பணி ஓய்வில், தான் கட்டிய 5 வீடுகளின் வாடகை வசூல்தான் இப்போதைய அவரின் பணி. என்னைவிட இருபத்தியாறு வயது கூடியவர். தன் மகளும், மகனும் வெளிநாட்டில் இருக்கிறார் என்ற பெருமையுடையவர். அன்றுதான் அவரை நேரில் பார்த்தேன். இதற்குமுன்பே அவரின் “மேற்கூறிய” தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தன.
“வணக்கம் நல்லாயிருக்கீங்களா?”
“நான் நல்லாயிருக்கேன். என்ன வேலைல இருக்கீங்க?”
“நான் ஓவியரா இருக்கேன். இதோ இந்த மாதிரியான ஓவியங்கள்தான் பாருங்க” என்று என் கைபேசி திரையை காட்டினேன்.
“அது சரி, வேறே வேலைல எதும் இல்லையா?”
“--------”
“இதுல என்னத்த கிடைச்சிட போகுது? வாழ்க்கை நல்லபடியா போகுதா?”
நான் உணர்ச்சிவசப்படாமல் “அதெல்லாம் போகுது போகுது” என்றேன்.
“போனா சரிதான்”
இனி பேசி பயனில்லை என்றபடி, நான் வாசலுக்கு வந்து நின்றுகொண்டேன். அந்த பெருசு வெளியேறினபிறகுதான் உள்ளே செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு ஓவியனைப்பற்றிய மதிப்பீடு இவ்வளவுதான். அடப்பாவிகளா. மனிதகுலத்தின் முதல் மலர்ச்சியே ஓவியம்தானடா? அதையே இப்படி செல்லாக்காசாக நினைத்துவிட்டீர்களேடா? கொஞ்சம் மனவேதனைதான். ஆனாலும் “நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது, தம்பி போவீங்களா” என்று கைப்பிள்ளையாக கடந்துவந்த பாதையில் அமைதியானேன்.

காலச்சுழற்சி பின்னோக்கி ஓடியது.
“வீட்டில இருக்கிற நேரமெல்லாம், வரைஞ்சிகிட்டே இருக்கான்பா”
“அப்படியா, அப்ப இவன் தேறமாட்டான்” சொன்னவர் சில ஓவியங்களை வரைந்து வீட்டில் மாட்டியிருக்கிறார். ஆனால் வேறு தொழில் செய்துகொண்டிருந்தார்.

“சுகு, நீ என்ன இவனைமாதிரி வரைஞ்சிகிட்டே இருப்பியாம். ஓவியன் வரையறவன் விளங்கமாட்டான்பா” நண்பனின் அம்மா சொன்னார்.

என் வீட்டில், என் தாயும், தந்தையும், சகோதரிகளும், சகோதரனும் ஓவியத்தின் பொருட்டு ஒரு குறையும், குற்றச்சாட்டும்  வைத்ததில்லை. நான் பல நேரங்களில், இத்தகைய, அவர்களின், என் ஓவியம் குறித்தான ஏற்றுக்கொள்ளல் தன்மை குறித்து வியந்திருக்கிறேன்.

சமீபமாக ஓவியம், ஓவியன் குறித்த சமூக நிலை, கீழிறிங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட படுத்துவிட்டது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுவது, சமுக அன்பர்கள் கேட்டுக்கொண்டதறு இணங்க வரையும், பழங்கால முறையில் வரைவதும், நவீன முறையில் கணிணி துணை கொண்டு  வரைவதுமான ஓவியங்கள் மட்டுமே.

தனக்கு தெரிந்ததை, தன் அனுபத்தை, தன் எழுச்சியை வரைந்து, காட்சிப்படுத்தி, அதற்கென்று காத்திருக்கும் அன்பர்களுக்கு விற்பனை செய்யும், ஓவியகலைஞர்களின் போக்கு தனி. அத்தகைய ஓவிய வட்டத்திற்குள் நான் நுழைந்ததில்லை. இனி நுழையப்போவதும் இல்லை.

என்பாதையும், பயணமும் தனியானது. தனி ஒருவன், ஓவியனாக முகமறியா அன்பருக்கு, அவர் கேட்டுக்கொண்டபடி வரைந்து, அதற்கான விலையில் பணம் பெறுவது என்ற அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறி, தொழிலாக செய்துகொண்ருக்கும் ஓவியர் என்ற வரிசையில் நான் நின்றிருப்பது எனக்கு பெருமையே.
“நீ மட்டும் எப்படி இந்த நிலைக்கு வரமுடிந்தது? ஏன் என்னால் முடியவில்லை?”
“இந்த முறையில்மட்டுமே, வாழக்கை உங்களால் ஓட்ட முடிகிறதா? எப்படி?”
“எனக்கும் இந்த வழியை காட்டிகொடுங்களேன்”
புன்னகை மட்டுமே என்பதிலாக இருந்திருக்கிறது.

சமீபமாக என்று ஆரம்பித்தேன் அல்லவா? அதை இன்னும் விளக்குகிறேன். கடந்த டிசம்பர் மாதம் முதல், தற்போது கடந்த பிப்ரவரி மாதம் வரையும் நான்பார்த்த எல்லா வாடிக்கையாளரும், எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். அதற்கு முன்பும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மூலம் வரும், சகஜமாக எடுத்துக்கொள்வேன். ஆனால் வேலைகொடுத்த அனைவருமே அப்படி செய்தபோது கொஞ்சம் கலங்கித்தான்போனேன்.

ஒரு ஓவியம் என்பது, படைத்தல், அதில் குறைகள் என்று கண்டுபிடிப்பவனும், அதை இப்படி திருத்திக்கொடு என்று கேட்பவனும் முட்டாள். கொஞ்சமும், ஓவியம் குறித்த எந்த அனுபவமும் இல்லாதவன் என்றும் நான் சொல்லுவேன். Critic என்று சொல்லபடுபவனும் முட்டாளே. இயற்கையை குறைகாண்பானா அவன்? குறை நிறைகள் தான் இயற்கை.

Quora வில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். என்றைக்கு ஒருவன் முதன் முதலில் ஓவியம் வரைந்தானோ அவன் ஓவியன். அதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்தான் Critic

ஒரு மனிதனின், ஒருபக்க காது வித்தியாசமிருக்கிறதே? நீ என்ன செய்தாய்? ஒட்டுபோட்டுக்கொண்டாயா?
ஒரு மனிதனின், ஒரு கண் சிறுத்திருக்கிறதே? இமைகளை விரிக்கச்சொல்லி மருத்துவம் பார்த்தாயா?
சிரித்தால் இதழ் ஒருப்பக்கம் கோணலாக போகிறதே, வாழ்வில் சிரிக்காமலேயேவா நாட்களை கடத்துகிறாய்?
நிறுத்து, நீ ஓவியன், காசுக்காக வரையும் ஓவியன், நீ கொடுப்பதை நான் காசு கொடுத்து பெற்றுக்கொள்ள நாங்களென்ன முட்டாளா? எங்களுக்குள்ளும் ஓவியன் இருக்கிறான் (?!) நான் எப்படி கேட்கிறேனோ அப்படி வரைந்துதருவதுதான் உன்வேலை.  படைப்பு கிடைப்பு என்று பினாத்துகிறாயே?!

எத்தனை அடி? எவ்வளவு அடி? யப்பா?

ஒரு கணிணி அல்லது கைபேசி விளையாட்டில், எதிரியை கொன்று குவிக்க, குவிக்க மீண்டும் மூண்டும் முளைத்தெழும் எதிரியைப்போலவே, ஒவ்வொரு முகமுடியை மாட்டிக்கொண்டு, அதே வாடிக்கையாளர் வந்து எனக்கு வேலை கொட்டுப்பதுபோலவே எனக்கு திகிலாக இருக்கும். இன்னுமா இது முடியலை என்று என் மனம், பழைய வேலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திடுக்கிடச்செய்யும்.

ஓவியத்தில் திருத்தமெல்லாம் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று பலதுறைகளைச் சார்ந்தோர் எனக்கு சொன்னபோதிலும், வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறுகிறோம், அதனால் அவர்களின் திருப்திக்காக சில திருத்தம் செய்வதில் தவறில்லை என்பது என் கருத்தாகவே இருந்தது. ஒரு ஒளிப்பட கருவி, (Camera) இருப்பதை எடுத்துக்காட்டும் என்ற அளவில் கூட, “ஒருஓவியனுக்கு” மதிப்பில்லாமல் போனது அதிசயமே.

இதில், இப்படியும் கேட்பார்கள். “எனக்கு Soft copy மட்டும் போதும்” இதை எங்கே, யாரிடம் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதன் பொருள் என்னவென்றால் “ நீபாட்டுக்கு உனக்கு தகுந்த விலையை சொல்லாதே, கொஞ்சம் சீப்பா விலை சொல்லு” (நான் என்னய்யா, வாழைப்பழ கடையா போட்டிருக்கேன்?) முழு ஓவியம், பெரிதாக வரையாமல், எப்படி சீப் சாப்ட் காப்பி கொடுக்கமுடியும்?!

திரைப்படத்தில், செந்தில், கவுண்டமணி கடத்தல் பேரம் பேசுவதுபோல, இப்படியான வாடிக்கையாளர்களுக்கு, எத்தகைய விலை சொன்னாலும், அது சீப் ஆகாது. இன்னும் குறை, அட்ஜஸ் பண்ணு. ரவுண்டப் பண்ணு... எல்லா மொழிகளிலும் கேட்பார்கள்.

திருத்தம், திருத்தம், திருத்தம் ?! மாற்றம் ஒன்றுதானே மாறாது :P போதுமடா சாமி என்றாகிவிட்டது.  எப்போதுமே, நாம் நம்முடைய வாழ்வில் சந்திக்கும் ஓவ்வொரு நபருக்கும் ஒரு தொடர்பு, விட்டகுறை தொட்டகுறை என்பது நிச்சயமாக இருக்கிறது. இருந்தாகவும் வேண்டும் என்பதுதான் இந்த இயற்கையின் விதி. தானாக வந்ததாகவும் இருக்கலாம். தானே சேர்த்ததாகவும் இருக்கலாம். இதன் மூலமாக, நம் வினைப்பதிவுகள் ஓவ்வொன்றாக கழிகின்றன. திருத்தம் பெறுகின்றன. அவர்கள் மூலமாக அவன் சுத்தம் செய்யபடுகிறான். உண்மையாகவே நான் அவர்களுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய சுயத்தை பரிசோதனை செய்ய வாய்ப்புத்தந்தவர்கள் அவர்களே. என் பலத்தையும்,  என் பலவீனத்தையும் எனக்கு வெளிச்சம்போட்டு காட்டி, என் சுயபலத்தை உணரச்செய்தவர்கள். நன்றி, நன்றி, நன்றி என் வாடிக்கையாளர்களே.

இந்த 17 வருடங்களில், 12 வருடங்கள் பெரும்பான்மையான வாடிக்காளார்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறேன். ஓவ்வொருவரும், கடைசியாக, “மன்னிக்கனும் சார், உங்களை ரொம்ப கரைக்சன் கேட்டு நோகவைத்துவிட்டேன், பொறுமையாக எல்லாம் சரி செய்து கொடுத்ததற்கு நன்றி” என அவர்களே தானாக சொல்லும்படிச்செய்து, நட்பாகவே முடித்துவைத்திருக்கிறேன். தற்போதைய என்னுடைய பலம், இதுதான். அதோடு நம்பிக்கை. உடனுக்குடன் தகவல். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கங்கள். அவர்களே வியந்து பாராட்டுமளவுக்கு. நான் இந்த இடத்தில்தான் நிமிர்ந்து நிற்கிறேன்.

எல்லாம் நிகழ்வன, நிகழ்ச்சியே, தோற்றமாயைகளே, எங்கள் வேதாத்திரி மகரிசியும், மகாகவி பாரதியும் சொல்லியதை, அனுபவங்களாக, ஆராய்ச்சியால் கண்ட உண்மையில் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மனிதன் பல நிலைகளில், பலதரங்களில், பல காலங்களில் அனுபவித்து வாழலாம், ஆனால் பிறப்பு எப்படி நிகழ்ந்ததோ அப்படி, இறப்பும் காத்துக்கொண்டிருக்கிறது. இறப்பை வெறுக்கலாம், மறக்கலாம், வராது என்று நம்பலாம், மருத்துவத்தால், யோகத்தால், உடல் சாதனையால் தள்ளிவைக்கலாம் கொஞ்சநாளைக்கு... ஆனால் இறப்புக்கான அந்த டிக்கெட்டை யாராலும் வாபஸ் பெற முடியாது. அப்படி போய்ச்சேர்ந்தவர்களின் தோள்கள்மீதுதான் நாமும் நின்றுகொண்டிருக்கிறோம்.

நான், என் பயணத்தில் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கதொடங்கியதாக எண்ணுகிறேன். முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டுமானால், இந்த பயணத்தையும், இலக்கையும் நான் தீர்மானிக்கவில்லை. நான் அதை தொடங்கவும் இல்லை. நான் ஒரு பயணி, ஏதோ ஒன்றை என்னை எடுத்துச்செல்கிறது. நான் அதனிடம் என்னை சில வருடங்களுக்கு முன் ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  அந்த பயணத்திற்கும், அந்த வழியில் நான் காணப்போகும் காட்சிகளுக்கும், சென்றடையும் இலக்குக்கும் நான் மனம் விரித்தும், மனம் ஒடுங்கியும், காத்திருக்கிறேன், விழிப்புநிலையில். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி.

வேலையை எளிமையாக்குவதற்கு ஓப்படைப்பதைத்தவிர வேறு வழியில்லை.

Vethathiri maharishi photos retouched


Hi Friends,
Happy to share, Swamiji Vethathiri Maharishi's Photos
(Re-touched)

Anyone can share or use this photos anywhere by His followers
























Thanks

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Build-up bulwark around me


நீண்ட நாட்களுக்குப்பிறகு தொடர்கிறேன்...

எல்லோருமே என்னை விட அறிவாளிகளாகிக்கொண்டிருப்பதாகவும், நான் முட்டாளாகிக்கொண்டே இருப்பதாகவும் (ஏற்கனவே அப்படித்தானோ) தோன்றுகிறது. இந்த 48 வயதை நெருங்கும் நேரங்களில் காலம் நன்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பதால் இருக்கலாமோ?!

போதுமப்பா என்று எல்லாவற்றிலும் ஒரு நிறைவு, புதிய பொழுதுபோக்கு முயற்சிகளில் ஆர்வமின்மை. என் கடந்த உலகை விட்டுக்கொடுக்க இயலாமல், கண்ணால் காணும் புதிய உலக நோக்கம்.  காதை தீய்க்கும் இசையிலிருந்து பாதுகாக்க புதியஇசை கேளாமை,  சில வரி ஆரம்பத்திலேயே விசயம் சொல்லாமல் இழுக்கும் கதை தவிர்த்தல், அதீத ஆர்ப்பாட்ட கவிதை, எழுத்து, குளத்தில் பாறாங்கல்லை போட்டதைப்போல குழப்பவாதிகளின் கட்டுரைகள் விட்டு ஓடிவிட தோன்றுகிறது.

எதற்கு சிரிக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள இயலாத நகைச்சுவையில் தொலைக்காட்சி, திடீர் திடீர் என அழுவாச்சி அல்லது நெஞ்சு பூரிப்பு அப்படியே எதிர்பதமாக வில்லத்தன்மை, போட்டி, பொறாமை கூடவே ஆவிகளும் பேய்களுமாக தொலைக்காட்சி தொடர்கள்...

செய்தி திரித்து நாடி பிடிக்கும் செய்தி தொலைகாட்சிகள், நிம்மதியை குலைக்கும் விளம்பரங்கள்...

எதைபோட்டாலும் புரிந்துகொள்ளாமல் ஆளைக்கவ்வும் பேஸ்புக் நடைமுறை

கீச்சிலும் வன்மம் கொடுக்கும் வல்லூறாக அப்டேட்கள்

தலைப்பில் நிர்வாணம் காட்டும் யுடுயூப் பதிவுகள்...

போதும்... எனக்கான சுதந்திரத்திற்காக நான் போராட வேண்டியதில்லை. என்னைச்சுற்றி ஒரு சுவர் அமைத்துக்கொண்டால் போதும்போலிருக்கிறது... என்ன ஒரு முரண்?!

Drawing - Never Stop Learning



ஒரு ஓவியன் தன் வளர்ச்சியில், அவன் கற்ற ஓவிய நுணுக்கங்களையும் வளர்ச்சிக்குட்படுத்தவேண்டியது அவசியம். என்றோ கற்ற வித்தை காலாகாலத்திற்கும் போதுமானது என்பது வாழ்வில் ஏமாற்றத்தை தரும்.

Left - Recent / Right - Done 6yr before
நான் ஆரம்பகாலத்தில் ஓவியம் வரைந்ததற்கும், இப்போதைய நிலையில் ஓவியம் வரைவதற்கும் மிக நீண்ட வளர்ச்சி இருப்பதை தெரிந்துகொள்கிறேன். ஆனாலும் இன்னமும் கூட தினம்தினம் புதிய நுணுக்கங்களை, என்னிலும் இளைய ஓவியர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். Template என்று பட்டியலிட்ட ஓவிய முறைகளில் நான் கண்டிப்பாக இல்லை. அதில் நான் சேரவும் மாட்டேன்...

கேரிகேச்சர் என்ற ஓவிய முறையில் என் கற்றுத்தேர்வுகளை தனிப்பதிவாக போடுமளவுக்கு உண்டு... (முயற்சிக்கிறேன்)

என் வாடிக்கையாளர்களுக்கு தரும் ஓவியங்களிலும், அவ்வப்போதைய என் மாற்றத்தை தந்துகொண்டிருப்பேன். ஒரேமாதிரி ஓவியம் என்பதை நான் செய்வதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், என் ஓவியத்தையே நான் மறுபதிப்பு செய்வதை தவிர்த்துவிடுவேன்.

இளைய தலைமுறை ஓவியர்களின் ஓவியங்கள், Tumblr, Behance, Deviantart இப்படியான தளங்களில் காணக்கிடைக்கின்றன. நீங்களும், ஆர்வமுள்ள ஓவியர்களும், (போட்டோவை தடவுவதை விட்டுவிட்டு) பென்சிலும், பேப்பருமாக நிறைய, (or Mousepen and pad) கற்றுத்தேர்ந்து உங்களை வளப்படுத்திக்கொள்ளுங்கள். உலகம் விரைவாக மாற்றம்பெறும்ப்போது கையறு நிலையில் இருக்கவேண்டாமே...!

தொடர்ந்து முயற்சியுங்கள்.... உங்கள் ஓவியம் நன்கு விலைபோகும், கிடைக்கும் “லைக்”கை விட அதிகமாக...

You are kicked


அடிமேல் அடி :D

ஆரம்பகாலங்களிலேயே, மற்ற எந்த கேரிகேச்சர் ஓவியரும் தராத தரத்தில் நான் தருவதை அறிந்துகொண்டதால், இதுதான் என் ஓவியத்தின் விலை என்ற நிலையில் கொடுத்தேன். ஆனால் நிறைய  வாடிக்கையாளார்கள் கேட்டுக்கொண்டபடி, ஒரு குறிப்பிட்ட விலை வைத்து, அதிகம் பாதிப்படையாமல், அவர்களாகவே விரும்பியும் தரும் வகையில், இதுவரை என் ஓவியங்களை கொடுத்துவந்தேன்.

முன் பணம் கூட வாங்காமல், ஆரம்பித்து முடித்து தரும்போது, இது எனக்கு பிடிக்கலை என்ற ஒரே சொல்லில் என் உழைப்பை உதாசீனப்படுத்தியதால், முன்பணம் கொடுத்தால் மட்டுமே இனி வேலை ஆரம்பிக்கப்படும் என்று மாற்றிக்கொண்டேன். ஆனால் நண்பர்களுக்கும், அவர்களின் அறிமுகத்துக்கும் கொஞ்சம் சலுகை கொடுக்கப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் முன்பணம் முக்கியம் என்பதை அவர்களுக்கு புரியவைத்து, முடித்துக்கொடுத்தவுடன் மீதம் பெற்றுக்கொள்வது தொடர்ந்தது.

முக்கியமாக என் ஓவியவேலைகளில், முதல் நிலையில் கோட்டுவோவியம் அனுப்பி, குறைகளை கேட்டு திருத்தி, மறுபடியும் எத்தனை திருத்தம் வேண்டுமோ அத்தனை வாய்ப்புக்களையும் தந்து, பிறகுதான் வண்ண நிலைக்கு வருவேன். அப்போதும், வண்ணத்தை மாற்றுதல், பின்னணி அமைப்பு, பொருள் மாற்றியும் தருவேன், எந்த முகசுழிப்புமில்லாது.

என் நண்பர்கள் யாருமே இந்த திருத்தம் தருவதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஓவியம் என்பது ஒருமுறை என்பதான படைப்பு, இதில் நெளிவு, சுழிவு, திருத்தத்திற்கு இடமே இல்லை என்றே கூறிவந்தனர். நான் அவர்களிடம் சொல்லுவேன்... ஒருவர் இதற்காக பணம் செலுத்துகிறார். ஆகவே தான்  விரும்பியதை அவர் கேட்கிறார், அவருக்கான ஓவியம், வியாபாரமாக்குகிறேன் என்பதால், திருத்தம் ஏற்றுக்கொள்வதில் பிழை இல்லை என்றே சொல்லிவந்தேன்.

இந்த ஓவியங்களில், வாங்குபவர்களுக்கே தெரியாத, கவனிக்கமுடியாத சிறப்புக்களை தருவேன். ஒரு ஓவியம் போல இன்னொன்று இல்லாதவகையில், என் கையொப்பமில்லாமல், நானே உரிமை கொண்டாடி என் தளத்தில், பிற தளத்தில் பகிர்ந்துகொள்ளாமல், எந்த வடிவ கோப்பாகவும் தருவேன்.

கடந்தமாதம் instagram ல் என் தனிபட்ட பொழுதுபோக்கு ஓவியங்களை பார்த்து நிறையமக்கள் என்னிடம் ஓவியம் கேட்டனர், அதற்கான விலை கேட்டு தயங்கினர். சரி, இவர்களுக்காக தரம் குறைக்காமல், கோப்பின் அளவை குறைத்து தரலாமே என்று ஐந்து விதமான விலைப்பட்டியல் தயாரித்து அதன்படி ஓவியம் செய்துதர எண்ணினேன். ஏதோ ஒரு சில வேலைகள் கிடைத்தன.

ஆனால் பெரும்பான்மையோர், ஓவியம், ஓவியன் அவனின் உழைப்பு இப்படி எந்த அறிவுமே இல்லாமல், காசு கொடுக்கிறேன் பேர்வழி என்று, எனக்கு ஓவியபாடமே எடுக்குமளவுக்கு, என் பொறுமையை சோதித்துவிட்டனர்.  அதோடு தினமும், காலையும் மாலையும் அழைத்து என்னவாயிற்று? இதை அப்படி போடுங்க, இதை இப்படி போட்டுங்க என்று திருத்தங்கள்...

கேட்கும் எல்லா திருத்தம் செய்து கொடுத்தும், இன்னும் திருத்தம் வேண்டும் என்ற மன நிலையிலேயே இருந்து, கொடுத்த முன் பணத்தோடு, இதுவரை திருத்தங்கள் செய்ததற்கு நன்றி, எனக்கு இந்த ஓவியம் தேவையில்லை என்றும், இதை வாங்கி நான் என் திருமண அழைப்பிதழில் இடும் காலம் கடந்துவிட்டது வேண்டாம் என்றும் தவிர்த்துவிட்டனர்.  எனக்கோ என் உழைப்பும், ஓவியமும் வீணான நிலை. உடல் சோர்வும், மனச்சோர்வும், கண் எரிச்சலுமே மிச்சம். ஆனால் சில ஓவிய பாடத்தோடு இப்படியான மனிதர்களின் குணாதிசங்களை அறிந்துகொண்ட திருப்தி

முக்கியமாக ஓவியம், அது தொடர்பான அறிவு, ஓவியன், அவனின் படைப்பு சுதந்திரம், அவனின் உழைப்பு இப்படி அந்த விபரங்களுமே அறியாதிருக்கிறார்கள். ஒளிப்படம் என்பது வேறு, ஓவியம் என்பது வேறு என்ற வித்தியாசம் தெரிவதில்லை, என் முகம் மாதிரி இல்லை என்று கிண்டலடிக்கிறார்கள். எத்தனை கேமரா, எத்தனை லென்சு, எத்தனை ஒளி கொண்டு ஒருவரை ஒளிப்படமெடுத்தாலும் ஒன்று போல ஒன்று இருப்பதில்லை, முகத்தை இடது வலது திருப்பினால் கூட ஒரேமாதிரி இருக்காது என்பதும் உண்மை. இதில் ஓவியம் எப்படி 100% வரும்? போட்டோவையே Smudge Tool கொண்டு தேய்த்தால் 101% கூட கொண்டுவரலாம்... ஒரு ஓவியன் தான் கற்றுத்தேர்ந்த திறமையை கொண்டுதான் பார்த்ததை, ஓவியமாக்குகிறான். கேட்பவர்களுக்கு, அவர்கள் சொல்லும் காட்சியை பதிவுசெய்கிறான், அதற்கு விலை அல்ல வெகுமானம் பெற்றுக்கொள்கிறான்.

யாரோ ஒருசிலர் இப்படித்தான் என்று நினைத்தால் இது தொடர்கதையாகிவிட்டது... அடிமேல் அடிவிழ நான் விழித்துக்கொண்டேன்... இதற்குமேலே தாங்குவதற்கில்லை :D

இன்று முதல் ஒரே ஒரு விலைப்பட்டியல், ஒரு திருத்தங்களும் ஏற்றுக்கொள்வதற்கில்லை. முழுபணம் கொடுத்தால் மட்டுமே வேலை பெற்று, ஓவியமாக்கப்படும். ஓவியம் முடிந்த நிலையில் ஒரு சிறு மாதிரி அவர்களுக்கு அனுப்பி, திருப்தியா என கேட்கப்படும், ஆம் என்றால், அந்த ஓவியத்தின் முக்கிய, பெரிய அளாவிலான கோப்பு அனுப்பிவைக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் செலுத்திய தொகையிலிருந்து பாதி, அவர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

#முடியலை

Say no template caricature


Say no template Caricature, be Pride with Caricaturelives...

Caricaturelives never start with Templates, You are ready to pay a bill for your caricature, then why pay for old work or template? Are you sure, your caricature is being in 10+1 row? You are OK with head changes with template bodies? Have you no idea or no feel with your individuality?

Be Pride with Caricaturelives, Be individuality with your caricature... only at Caricaturelives

Share your theme or idea and get ever fresh, individual caricature for your wedding, birthday, retirement,  gift, personal and invitation caricatures.


feel free to whatsapp: +91 9442783450 or email: caricaturelives@gmail.com
visit: www.caricaturelives.com