CJ for You: spiritual

spiritual

Showing posts with label spiritual. Show all posts
Showing posts with label spiritual. Show all posts

Is God man Correct? What is the truth on it? What is the connection between the God and Human?


நான் கடவுள் என்பது சரிதானா? அதன் உண்மை என்ன? மனிதனுக்கும் மெய்ப்பொருளுக்கும் உள்ள தொடர்பு என்ன?



மெஞ்ஞானத்தின் வழியாக, சித்தர்கள், ஞானிகள், மகான்கள், இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து உணர்ந்தார்கள். அந்த விளக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கு, பக்தி வழியாக, கருத்தாக வடிவமைத்தார்கள். விருப்பமுள்ளோர் கற்றுத்தேர யோகம் என்ற மனதின் வழியாக உண்மையறியும் பயிற்சிகளையும் கொடுத்தார்கள். ஒரு மனிதனின் ‘பிறவி நோக்கமும், கடமையும், நான் யார்? என்ற உண்மை அறிதலே’ என்பதையும் அறிவுறுத்தினார்கள். அந்த வகையில்தான், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்று சொன்னார்கள். விஞ்ஞானமும், எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்தி வழியிலான கருத்துக்களை, படைப்புத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை, தெய்வம் என்பதையும் நம்புவதில்லை. வழிபாடு, மந்திரம் இவற்றையும் புறந்தள்ளுகிறது. ஆனால், சில உண்மைகளுக்கு, விடை தெரியாமல் தடுமாறுகிறது என்பதும் உண்மையே. 

உதாரணமாக, ‘உலகில் இருப்பதெல்லாம், காட்சியும், பொருளும் ஆனவை. அவை மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியானால், மாறாதிருப்பது எது? என்ற கேள்விக்கு ‘என்றும், எப்போதும், எவ்விடத்திலும் இருப்பது எதுவோ அதுவே முதன்மையானது. அதை மெய்ப்பொருள் என்று உயர்வாக அழைக்கிறோம்’ என்கிறார். இதை வெட்டவெளி, சுத்தவெளி, இறை, தெய்வீகம், சிவம், ஈசன் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, இதனில் நான்கு தன்மைகள் கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவை, 1) பூரணம் என்ற வற்றாயிருப்பு 2) வேகம் என்ற பேராற்றல் 3) விவேகம் என்ற பேரறிவு 4) காலம் என்று வகைப்படுத்துகிறார். இந்த விளக்கத்தை, அந்த உண்மை நிலையை, யோகத்தின் வழியாக, அறிந்து உணர்ந்தவர் மட்டுமே, தெளிவு செய்திட முடியும். சும்மா, வெறுமனே, மேம்போக்காக சொல்லுவதும், புரிந்து கொள்வதும் உண்மை விளக்கம் ஆகாது. மேலும் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த உணர்தலை, ‘அதுவாகி நின்று அந்நிலையில் உணர்வதாகும்’ என்றும் வேதாத்திரி மகரிஷி தெளிவு செய்கிறார். மாணிக்க வாசகரும், திருவாசகத்தில் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற ஒருமையை குறிப்பிடுகின்றார். இங்கே தான், அத்துவைதம் இரண்டற்ற நிலை தெளிவாகிறது. ஆனால், உலகவாழ்வில் மயங்கி, அன்றாடம் இன்பம் தேடி, துய்த்து வாழும், சராசரி மனிதனுக்கு இது புரியுமா? தெரியுமா? என்றால் மிகக் கடினமே. இந்த நிலையில்தான், அந்த சராசரி மனிதர்களிடம், சித்தர்கள் சொன்ன ‘நான் கடவுள்’ விளக்கம் தொக்கி நிற்கிறது. இந்த வார்த்தையை, சாராசரி மக்களுக்கு ஏற்றபடி, இன்னொருவிதமாக சொன்னால், ‘கடவுளே நானாகவும் இருக்கிறது’ என்பதே சரியாகும்.

மேற்கண்ட நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, வேதாத்திரி மகரிஷி தரும், விளக்கத்தையும் இங்கே அறிந்து கொள்வோம். இதோ, 

மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்_ என்ற தலைப்பிலான ஞானக்களஞ்சிய கவிதையில்...
கடவுள் எனப் படுபவனே மனிதனானான், 
கருத்தியங்கி, கருத்தறிந்தான்; 
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான் 
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான் 
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக் 
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான் 
கடவுள் ரகசியமதனைவெளியாய்க் காட்டும்  
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி. 
 
  இந்த கவிதையில் பொதிந்துள்ள, உண்மையையும், அவரே விளக்குகிறார். எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
 
  மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான். 

  இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.
 
  மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் – அறிய வேண்டிய நிலையில் – உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாகக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை. 

  அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான். இந்தவகையில், விளக்கமும் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
-

Is Blackhole as a Dark matter in the DNA? What is result of the bio-chemical research?


கருந்துளை எனும் கருப்பொருள், உயிர்களின் மரபணுக்களிலும் உள்ளதா? உயிர் வள விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது?

Source from Hashem Al-Ghaili
  

        நாம் வாழும் காலத்தில், விஞ்ஞானம் என்ற Science (அறிவு இயல் அல்ல, விண் அறிவு அல்லது விண் ஞானம் என்பதுதான் சரியானது), பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்திய நாட்டின் ஆதாரமாக, திகழும் மெய்யியலுக்கு காட்சி வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது எனலாம். சிலர் இந்தியாவை, அவர்கள் வணிக ரீதியாக அணுகி, இங்குள்ள பல உண்மை தத்துவங்களை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுவார்கள். அதில் எதோ சில வகையில், உண்மை இருக்கலாம். மதிப்பு வாய்ந்தது என்று எதையேனும் நினைத்தால், எனக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்வது, மனிதனின் இயல்பு. மேலும், அது நம்மிடம் இருக்கும் பொழுது, அவற்றை மதிப்பில்லாததாக வைத்துக் கொண்டதும், நம்முடைய தவறுதானே?

ஆனால், எப்படி ஒரு மனிதனுக்கு, தன்னளவில், அறிவு பல நிலைகளில் இருக்கிறதோ, அதுபோல, பிரபஞ்ச அறிவு என்ற ஒன்று நிலைபெற்றிருக்கிறது. எங்கே? இந்த பிரபஞ்சத்தில்! இந்த பிரபஞ்ச அறிவு, மனித உயிர்களின் அறிவை, தன்னோடு இணைத்துக் கொள்கிறது.  இதனால்தான், ‘நான் நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய்’ என்றும், ‘நான் இதைத்தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், நீ செய்துவிட்டாய்’, என்றும், ‘இதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது, அதை நீ நிறைவேற்றி விட்டாய்’ என்றும் அதிசயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அதனால், இங்கிருந்து, திருடித்தான், அதை இன்னொருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நுணுகி ஆராய்ந்து கொண்டே இருந்தால், சிந்தித்துக்கொண்டே இருந்தால், பிரபஞ்ச அறிவானது, அதற்கான விளக்கத்தை, தூண்டுதலை கொடுத்துக் கொண்டே இருக்கும். மிகச் சரியாக, அதைபற்றிக் கொண்டு உயர்ந்தால், நம் கேள்விக்கான பதிலை, சந்தேகத்துக்கான விளக்கத்தை பெறமுடியும் என்பது உறுதியே. இதெல்லாம் நம்புறமாதிரியாய்யா இருக்கு?! என்று கேள்வி எழுப்புவோருக்கு, இதில் எந்த புனைவும், மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எல்லாம் பொய், கட்டுக்கதை, ஏமாற்றுவித்தை என்போருக்கு, தனியே எந்த விளக்கமும் இல்லை.

இனி, இன்றைய, விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு விளக்கத்தை இங்கே காண்போம். விஞ்ஞானம், மெய்யியலை விரும்புவதும், அணுகுவதும் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே, கருத்துக்கு நிகரான காட்சி, உருவம், வடிவம்  வேண்டும். அப்போதுதான் நம்பும். மெய்யியலை பொய்யியல் என்றுதான் நம்மில் பெரும்பாலோரும் சொல்லுகிறோம் அல்லவா? இந்த விஞ்ஞானம், தனக்கு புரியாத இரண்டு உண்மைகளை, விளக்க முயற்சித்து, தோற்றுக்கொண்டே இருக்கிறது, அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு விருப்பமில்லை, தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்கிறது, இன்னும் நகரும். சரி, அது என்னாய்யா அந்த இரண்டு? அது பொருள் மற்றும் ஆற்றல் (Matter and Power). இரண்டும் இருக்கிறது. ஆனால் அதன் மூலம் நாம் அறியோம் என்று கைவிரிக்கிறது. இன்றைய பதிவு, அந்த விஞ்ஞானம், கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்சிக்கிறது. காண்போம்.

உயிரியல் கருப்பொருள் (Dark Matter) - ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக் குறியீட்டிலும் இருண்ட பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எந்த அளவுகளில் என்றால், நமது முழு மரபணுவிலும், புரதங்களுக்கான டிஎன்ஏ குறியீடுகளில் 1 முதல் 2% மட்டுமே நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 98% மரபணு எதற்கும் குறியிடாது, இடமாக மட்டும் இருக்கிறது. இதை வெறுமை (Emptiness) என்று சொல்லுவார்கள். நான் அறிந்த, அன்பர் ஒருவர், இடமாக இருக்கிறது (Spaceness) என்கிறார்.

இந்த பெரிய அளவிலான, காலி இடமான, மரபணு குறியீடு, டிஎன்ஏவின் டார்க் மேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உயிரியல் இருண்ட பொருளில், குறியீட்டு அல்லாத டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பகுதிகள் அடங்கும். இந்த DNA வரிசைகளின் சரியான செயல்பாடு அல்லது அவை ஏன் நமது மரபணுவில் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. 

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த, இந்த குறியீட்டு அல்லாத டிஎன்ஏ உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அருகிலுள்ள மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன? மற்றும் எந்த வகையான உயிரணுக்களில் இது பாதிக்கிறது? என்பது ஆய்வில் இருக்கிறது.

இந்த இருண்ட பொருளில், ஆயிரக்கணக்கான புரோட்டீன் அல்லாத குறியீட்டு மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவற்றின் செயல்பாடுகள் அல்லது நோய் தாக்கத்தில், அவற்றின் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதர்கள், எலிகள் மற்றும் கோழிகள் போன்ற பல்வேறு உயிரினங்களில், இந்த இருண்ட பொருளின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உருவாகி வருகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மரபணு வரிசைகள் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறியிடப்படாத பகுதியிலிருந்து, இந்த நான்கு மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் நீக்கியபோது, ​​ எலிகளின் மூளையில் அசாதாரணங்களை அவர்கள் கண்டறிந்தனர், டிஎன்ஏவின் இந்த குறியீட்டு அல்லாத, டார்க் மேட்டர் பிரிவில் உள்ள பிறழ்வுகள், அல்சைமர் போன்ற மூளை நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இன்னொரு ஆராய்ச்சியின் முடிவாக, நமது இரைப்பைக் குழாயில் காணப்படும் சுமார் 40% முதல் 50% வரையிலான மரபணு தகவல்கள், எந்த விலங்கு, தாவரம், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது மனிதர்களுக்கு முன்னர் வகைப்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட எந்த வகையான உயிரினங்களுடனும் பொருந்தவில்லை என்று அறியப்படுகிறது.

அன்பர்களே, இந்த ஆராய்ச்சியின் மூலக்கட்டுரை உதவி, Hashem Al-Ghaili. இணையத்தில் கிடைப்பதால், நீங்களும் நேரடியாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி விளக்கங்கள், நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைதானே?

வாழ்க வளமுடன்.

-


What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-

Why today spiritual world is crowed by Masters?


மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா? 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மாணவர்களை விட ஆசிரியர்கள் நிறைந்திருக்கின்ற வகுப்பறை போல ஆகிவிட்டதே இந்த ஆன்மீகம்? சரிதானா?


பதில்: 

ஒருவகையில், இப்போதைய சூழல், நீங்கள் சொல்வதைபோலத்தான் இருக்கிறது. ஒருவகையிலி இது நல்லதுதான். அந்த அளவிற்கு, நம் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நம்பிக்கை அளிக்கக்கூடிய அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் தேவை சராசரி மக்களுக்கு உதவவும் கூடும் என்பது உண்மைதானே? இதில் சிக்கல் என்னவென்றால், எது சரியானது? என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.

பொதுவாகவே, நாம் விளம்பரங்களால் கவரப்படுவோம். விளக்கின் நெருப்பை, ஒளியென்று கருதி தேடிச்செல்லும் விட்டில் பூச்சிகள் போலவே. அதில் தப்பி வரவும் பெரும் முயற்சி தேவைப்படும். என்னுடைய அனுபவத்தில், ஒரு அன்பர் சொன்னதை அப்படியே தருகிறேன். அந்த அன்பர், தன்னுடைய பள்ளிக் காலங்கங்களியே, கடவுள், தெய்வம், இறைவன் என்பதில் நல்ல தெளிவான விளக்கம் பெற்றிருக்கிறார். கோவிலுக்கும், ஆலயங்களுக்கும் சென்று, வழிபட்டு கேட்டால் மட்டும் எதுவும் கிடைத்துவிடாது என்ற கருத்தில், உண்மையாக இருந்திருக்கிறார். அதை பிறரிடம் சொல்லியும் இருக்கிறார். ஆனால், இறை என்ற ஒன்று இருக்கிறது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதை நம்புகிறார். பகுத்தறிவு வாதம் என்று சொல்லி, இல்லவே இல்லை என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இறையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த வேண்டுதல், வழிபாடு, கொண்டாட்டம், திருவிழா இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அவசியமில்லை என்பது அவரின் சொந்தக் கருத்து.

இந்த நிலையில், விவேகானந்தர், அவரின் குரு ராமகிருஷ்ணர், சாரதாதேவி அம்மையார் இப்படி பலரின் யோக வாழ்வையும் படித்தும், சொல்லக்கேட்டும் அறிந்துகொள்கிறார். இந்த வரிசையில், பல யோகிகளையும், மகான்களையும் அறிகிறார். நம்முடைய குரு வேதாத்திரி மகரிஷியையும் கூட. ஆனால் உடனடியாக ஏற்கவில்லை. பத்தோடு பதினொன்றான போலிச்சாமியாரா? என்று ஆராய்கிறார். சிலரிடம் கேட்டும் தெரிந்து கொள்கிறார். வேதாத்திரி மகரிஷி எழுதிய நூல்களையும் வாசிக்கிறார். நல்ல ஆராய்ச்சி முடிவுக்குப் பிறகுதான், சரி அவரின் அமைப்புக்கு போய்தான் பார்க்கலாமே? என்று ஒருநாள், மனவளக்கலை வகுப்புக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையின், அடிப்படையில்தான், அங்கே உறுப்பினராக, அதுவும் உடனடியாக சேர்ந்து உயர்ந்திருக்கிறார்.

இப்படியான தெளிவான பார்வை, ஒவ்வொரு அன்பருக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். இவர் சொன்னார், அவர் சொன்னார், இவர் இணைந்துவிட்டார், அவர் இணைந்துவிட்டார் என்று நாமும் சிக்கிக் கொள்ள அவசியமும் இல்லை. உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லுகிறது? என்பதை நிதானித்து பிறகு முடிவு செய்யுங்கள். ஆன்மீகம் சொல்லுகிறேன் பேர்வழி என்று, இந்த வழவழா குளகுளா என்று கிராமங்களில் சொல்லிவார்களே அதுபோல, வழுக்கி தப்பிக்கிற ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளாத தெளிவு வேண்டும். உங்கள் முடிவே சரியானது.

ஒரு கேள்விக்கும், விளக்கத்திற்கும், மூன்று நிமிடத்திற்கு மேல், விசயத்திற்கு வராமல், எதை எதையோ மேற்கோள் காட்டிக்கொண்டே இருந்தால், நீங்கள் அந்த இடத்தில் இருப்பதில் அர்த்தமே இல்லை. இந்த நூலில் அப்படி இருக்கிறது, அந்த நூலில் அப்படி இருக்கிறது, இவர் அப்படி சொல்லியிருக்கிறார், அவர் இப்படி சொல்லி இருக்கிறார். என்று இழுத்துக்கொண்டே போகிற ஆசாமிகளின் கைகளில், நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவர் பிடித்தாலும் கையை எடுத்து விலக்கி விட்டு ஓடி வந்துவிடுங்கள். அவர் அனுபவத்தில் இருந்து, உங்களுக்கான பதிலும், விளக்கமும் தருகிறாரா? என்பது மிக முக்கியமானது. போலியான முகமுடியை போட்டுக்கொண்டு, உங்களை அணுகும் ஆசாமிகளை, இனம் கண்டு கொள்வதில் கவனமாக இருங்கள். அதுபோலவே, எப்போதுபார்த்தாலும் தன் குருவின் புகழ்பாடும் ஆசாமிகளும் பிரச்சனைக்குரியவர்களே! இவர்கள் சொந்தக்கருத்துக்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். உங்களையும் தருவதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.

ஆனாலும், இன்றைய மக்களுக்கு புதிது புதிதாக ஏதேனும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்ற காரணத்தால், புதியது சிறப்பானது என்ற மயக்கம் வந்துவிட்டது. அந்த மயக்கம் அவர்களின் அனுபவத்தாலே விளக்கமாகும். நீங்கள் சிக்கிக் கொள்ளாமல், முன்னதாகவே ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். எனினும், இத்தகைய ஆன்மீக வளர்ச்சியை நான், மனதார பாராட்டுகிறேன். விரும்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-


The best way and solution for the perfect and complete life!


உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?


பதில்:

ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?

ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?

மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?

உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும். 

மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Why Vethathiriyam not mentioned Shivan, Shakti and all?


ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?


பதில்: 

அன்பரே, மிக நீண்ட ஆராய்ச்சிக்குரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதை இங்கே எழுத்தில் விளக்கமாக சொல்லிவிட முடியாது. அதை நேரடியாக, உங்கள் முன்னால் சொன்னால்தான் சரியாக புரிந்துகொள்ளவும் முடியும். உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கவேண்டும் என்றால், யாரேனும் உங்கள் ஆசிரியரிடம் கூட கேட்டு தெரிந்துகொள்ளலாம். எனினும் சில அடிப்படை உண்மைகளை, விளக்கங்களை இங்கே தருகிறேன். ஓரளவுக்கு உங்களுக்கான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.

ஒரு உண்மையை, மதிப்பான பொருளை, நிகழ்வை தெரிந்துகொண்ட நீங்கள், அதை பிற மக்களிடமும், சராசரி மனிதனிடமும், உங்களைவிட கல்வியில் ஆரம்பநிலையில் உள்ளவரிடம், கல்வி அறிவே இல்லாதவரிடம் சொல்லுவதென்றால் எப்படி சொல்லுவீர்கள்? ‘இது இப்படியானது’ என்று உயர்வாகத்தானே சொல்லுவீர்கள். அப்படி சொல்லவில்லை என்றால், அதன் தரம் தாழ்ந்துவிடும். மக்கள் அதை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள். தேவையும், அவசியமும் இல்லை என்று போய்விடுவார்கள். உண்மைதானே?

அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளை உணர்ந்தவராக இருந்தால்? அதை எப்படி சொல்லுவீர்கள்? இப்பொழுது ஒரு விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுபோலவே, மெய்ப்பொருள் உண்மையறிந்த ஞானிகள், மனிதனி பிறப்பின் கடமையே, அந்த மெய்ப்பொருளை உணர்வதுதான் என்பதை, மக்களுக்கு விளக்கம் தருவதற்காகவே, அந்த மெய்ப்பொருளை ‘சிவம்’ என்று சொன்னார்கள். உயிரினங்களை ‘சீவன்’ என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலையானது, உயர்வானது, மெய்யானது என்று பொருள் தரும் வார்த்தையாகும். ஆனால் பின்னாளில்தான் அது சிவனாக மாறிவிட்டது. சீவன் என்பதற்கு பொருத்தமாகக்கூட சிவன் வந்திருக்கலாம்.

மெய்ஞானிகள் சொன்ன, சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும், ஆன்மீகவாதிகள் சொல்லுகிற சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது தெளிவானது. பின்னது திறை மறைக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டதாகும். நாமும் பழங்காலமாக மெய்ஞானிகள் சொன்னதை விட்டுவிட்டு, ஆன்மீகவாதிகள் சொன்னதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். உண்மைதானே? சிவம் என்றாலும் சிவன் என்றாலும் ஒரு காட்சி அல்லவா வந்து நிற்கிறது. வார்த்தை சொல்லும் உண்மை இங்கே மாறிவிட்டதே? இதை குரு மகான் வேதாத்திரி மகரிஷி உணர்ந்துதான், வேதாத்திரியம் தனிப்பாதையில் நடைபோட வழி வகுத்தார். உண்மையை, உள்ளது உள்ளபடி உணர்ந்தால்தான், விளக்கமும், நிறைவும் கிடைக்கும் என்றுதான் தன் வேதாத்திரிய பயிற்சிகளையும் வடிவமைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்

Is it perfect the explaining the spiritual truth through with the modern science?


இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது வேதாத்திரியம் இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடுதான் அன்பர்களுக்கு, பயிற்சியோடும் விளக்கிவருகிறது என்பதை யாவரும் அறிவார்கள்

உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளியமுறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனிதகுலத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது. அருட்பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல [பிரபஞ்ச]மாக விளங்குகிறது. 

இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் (Repulsive Force) ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் (Attractive Force) ஆற்றலும் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தகளமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.

இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision & Regularity) எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும் முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால்தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும். பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, உடல் உள்ளப் பயிற்சி முறையே எளியமுறைக் குண்டலினி யோகமாகும்.

இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமுமாகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன்பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள். உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்குபடுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள்.

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க வளமுடன்.

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Welcome Patrons, Sponsors and Supporters for Vethathiriya Channel



அன்பர்களே, 

பொதுவான தளத்தில், உங்களைப்போன்ற, நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமே பதிவுகள் வழங்குவதில் ஒரு தொய்வு இருப்பதாக அறிகிறேன். ஏனென்றால், பொதுவெளியில் தரப்படும் எதுவும், நேரடியாக உங்களுக்கு வந்து சேர்வதில் தாமதமாகலாம். ஆனால் நீங்களே விரும்பி ஏற்கும் நிலையில், அது நேரடியாகவும், உங்கள் விருப்பத்திலும், உங்களுக்கான தீர்வாகவும், முழுமையாகவும் அமைந்துவிடும். சரிதானே?

அப்படியாக ஜூம் (ZOOM) வழியாக காலையும், மாலையும் பதிவுகள் வழங்க விருப்பம் கொண்டுள்ளேன். இதற்கு புரவலர்களும், நன்கொடையாளர்களும்,ஆதரவாளர்களும் தேவை. (Patrons, Sponsors and Supporters).  உங்களில் அத்தகைய விருப்பமுள்ளவர்கள், உங்களால் அனுகூலமான தொகையை, குறைந்தபட்சமாகக்கூட கொடையாக மாதம் ஒருமுறை, இந்திய ரூபாயாக அனுப்பிவைக்கலாம். அது உங்களின் விருப்ப கட்டணமாகவும், நன்கொடையாகவும் இருக்கலாம். கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகியனவும் திட்டத்தில் உள்ளது. உங்கள் நன்கொடை விரைவில் தொடங்கிட உதவி செய்யும். 

இந்த நிகழ்வு, உங்களுக்கும் பயன்படும், உங்களைப்போன்ற பிற அன்பர்களுக்கும் பயன்படும். தனித்தனியாக அன்பர்களுக்கு கட்டணம் அமைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இந்த சேவை தொடங்கவும், வளரவும் உங்கள் ஆதரவை விரும்பும், வேதாத்திரிய சானல்!

வாழ்க வளமுடன்.

-

நன்கொடை அனுப்பிட:
9442783450@UPI

வங்கி விபரம்:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

விபரம் வேண்டுவோர் தொடர்புகொள்ள:
wa.me/919442783450

-

* இது வேதாத்திரியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமான அழைப்பு!

-

Dear Friends, 

In the general domain, I understand that there is a slackness in providing posts only to our Vethathiriya lovers like you. This is because anything that is given in public will be delayed in reaching you directly. But if you accept it voluntarily, it will be direct, voluntary, remedy and complete for you. Right?

So I would like to offer morning and evening events via ZOOM. It needs patrons, donors and supporters. Those of you who are interested can send a favorable amount of Indian Rupees as a minimum by month. It can be your preferred fee and a donation. Google Meet and Microsoft Teams also on process. It helps to start live discussion as soon as possible..

This event will be of use to you as well as to other lovers like you. I'm not interested in setting fees for individual deacons. We would like your support to start and grow this service, Vethathiriya Channel!

Live prosperously.

-

For Digital Donate:
9442783450@UPI

Bank Details:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

Feel free to contact for details:
wa.me/919442783450

-

* This is an invitation only for those interested in Vethathiriyam!

Is it okay by practice one meditation per day?


ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


பதில்:

வாழ்கின்ற இந்த உலகில், தனி மனிதராக இருந்தாலும், குடும்ப அமைப்பில் இருந்தாலும் அன்றாடம், பரபரப்பாக இயங்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உண்டு. எந்த வகையிலும் அதை தவிர்க்க முடியாது. சில விடுமுறை நாட்களில் கூட ஓய்வாக இருக்கமுடியாத சூழல் இருப்பதும் உண்மை. அப்படியான நிலையில்,  தவம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதும் கடினமே.

பொதுவாக ஒரு நாளில், நான்கு தவம் இயற்றுவதற்கான் வாய்ப்புக்கள் உள்ளது. 1) அதிகாலை 2) முற்பகல் 3) மாலை 4) இரவு படுக்கைக்கு முன்பாக என்று பிரித்து விருப்பமான தவங்களை செய்யலாம், இரவில், மற்ற எந்த தவங்களையும் தவிர்த்து, சாந்தி தவம் மட்டும் செய்துவருவது சிறப்பு. அப்படியில்லை என்றால், அன்றைய உறக்கம் கெடும், உடலும், மனதும் துன்புறும் என்பது உறுதி.

என்றாலும், இன்றைய சூழலில், எனக்கு தவம் செய்யவே நேரமில்லை என்று ஒதுக்கிவிட்டு, உலகோடு ஓடாமல், ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்ய முடிகிறது என்பதே சிறப்புத்தான். அதற்காக பாராட்டவும் செய்யலாம். ஆனால், நம்முடைய உடலும், மனமும் ஓடுகின்ற பரபரப்பான ஓட்டத்திற்கு அமைதி கொடுக்கவும், யோகத்தின் வழியாக நாம் உயரவும், ஒரு நாளைக்கு ஒரு தவம் மிகதாமதமாகவே உதவும். உதவாது என்று சொல்லுவதற்கு வழியில்லை. எனினும் இந்த யோக பயணம் நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். 

அதனால், வேலை நாட்கள் என்று எடுத்துக்கொண்டால், ஐந்து நாட்களுக்கு, நாளில் ஒரு தவமும், விடுமுறை நாட்களிலாவது, மூன்று முதல் நான்கு தவம் செய்வதற்கு திட்டமிட்டுக்கொள்ளுதல் சிறப்பானதாகும். அப்படியாக உங்கள் சூழலை மாற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம். இன்றே உடனடியாக திட்டமிட்டு தொடங்கிடுக. நிச்சயம் உதவிடும், மாற்றமும் வரும்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் செய்கின்ற அந்த ஒரே ஒரு தவத்தை, அருகில் உள்ள நண்பர்களோடு, தவ மையத்தில் அன்பர்களோடு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்திக் கொள்க. மிகுந்த பயன் தருவற்கு வழி உண்டாகும். மேலும் நீங்கள் வீட்டிலே அதை செய்வதாக இருந்தால், அதிகாலை என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். ஏதெனும் வகையில் அந்த அதிகாலைத் தவம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு உங்களை செயலாற்ற  வைக்கலாம் அல்லவா? அப்படி சிறப்புற உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

How we can identified the true Yogi or Mahan in this modern world?


யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?

பதில்:

ஒரே கேள்வியில் இத்தனை துணைக்கேள்வியை இணைத்துக் கேட்டால் எப்படி சுருக்கமாக பதில் சொல்லமுடியும்? எனினும் முயற்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தின் வழியாக தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் உணர்ந்தவர்கள் பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை. ஏனென்றால், ‘பிரம்மஞானம்’ என்ற உண்மைநிலையை எங்குமே, எதிலுமே, எப்பொருளிலுமே, எந்த உயிர்களிடமுமே, எந்த மனிதர்களிடமுமே காணக்கூடிய தன்மைக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள். எந்தவகையிலும் ‘தான், தனது’ என்று பிரித்துப்பார்த்திடாவர்கள். மிக இயல்புக்கு வந்து, இயற்கைத் தன்மையோடு ஒன்றி வாழ்பவர்கள்.

இப்படியான தன்னிலை விளக்கம் பெற்றவர்களும், மெய்ப்பொருள் உண்மை பெற்றவர்களும், பிறருக்கு எடுத்துச்சொல்லி, அவர்களையும் தன்னைப்போல உண்மையும், விளக்கமும் அறியச்செய்வதில் வெகு சிலர்தான் ஆர்வமாக இருப்பார்கள். மற்றோர் எப்போதும் போலான, வாழ்க்கையை, தன்னளவில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களை எளிமையாக காட்டிக்கொள்வதும், உலகுக்கு, அந்த உலகில் இயல்புக்கு மாறாக காட்டிக்கொள்வதும் உண்டு. எந்த ஆடையுமின்றியும் இருக்கலாம், கோவணம் என்ற சிறு மறைப்பு துணி மட்டும் கட்டியிருக்கலாம். சட்டை இல்லாமல் வேட்டி, துண்டு மட்டும் கட்டியிருக்கலாம். ஏதேனும் போர்வையை தன்மேல் போர்த்தியபடி இருக்கலாம். தலைப்பாகை கட்டியிருக்கலாம். தாடி மீசை கலைந்த தலைமுடி என்றும் இருக்கலாம். சிலர் அழுக்கடைந்த நிலையில் கூட இருப்பார்கள். சிக்கல் நிறைந்த, ஜடாமுடி என்று சொல்லப்படும் தலைமுடியிலும் இருப்பார்கள். 

இவர்களை நாம் அடையாளம் காண்பது எளிது. ஆனால் இவர்கள் எதுவுமே பேசாமல், இறையுணர்வை பெறுவது உண்மை எப்படி அறிவது என்று சொல்லாமல், பயிற்சி அளிக்காமல் இருப்பதால் இவர்களை மக்களாகிய நாம் உதாசீனம் செய்துவிடுவோம். மாறுதலாக எதோ சக்தி வாய்ந்தவர் என்று வணங்கவும் செய்துவிடுவோம்.

இந்த வணக்கத்தையும், மரியாதையையும், செல்வாக்கையும், பார்த்துத்தான் ஏமாற்றுப் பேர்வழிகள், தாடி மீசை முடியலங்காரம், ஆடை அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி, பொருள், பணம் பறிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பூஜையும், வழிபாடும், மந்திர உச்சாடனமும், மௌன விரதமும் இருந்து, பல மக்களின் சந்தேக பார்வையில் இருந்து தப்பிவிடுவார்கள்.

மக்களின் அறியாமை உணர்ந்து, அவர்களை வழிநடத்த, உண்மைப்பொருள் உண்மையும், விளக்கமும் அளித்து முன்னேற்ற அக்கறை கொண்டு, ஞானிகள், மகான்கள், யோகியர்கள் தன்னை தனியாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை வழங்குவார்கள். இவர்களையும் மதிக்காது, உதாசீனம் செய்யும் மக்களும் உண்டுதான். இத்தகைய உண்மையானவர்கள் மீது, நம்மக்கள் அக்கறை கூட கொள்வதில்லை, ஏமாற்றுக்காரன் என்றும் சொல்லுவார்கள். ஆனால் எல்லாவற்றையும் சொல்லிக்கொடு என்றும் எதிர்பார்ப்பார்கள். என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்றும் மறுப்பார்கள். 

வாழ்கின்ற இந்த உலகில், நாட்டில் ஒரு மனிதன் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்பது, அவரவர் உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. நீங்கள் சொல்வது போல, எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது, யோகத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, மிக சாதாரண மனிதர்களும் அப்படி இருப்பார்கள் என்பதுதான் உண்மை. இதில் மனிதர்களின் இயல்பும் இருக்கிறது. சோம்பேறித்தனம், இயல்பாக விட்டுவிடுதல், எனக்கு பிடிக்கும் என்று மிகைப்படுத்துதல், நான் இப்படித்தான் என்று தன்னை வெளிக்காட்டுதல், மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்துதல் என்று பலப்பல இருக்கின்றன. அடையாளம் காணத்துடிக்கும் நமக்குத்தான் பெரும் பிரச்சனை என்று சொல்லலாம்.

ஆசான் திருவள்ளுவர், 
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (குறள் 828)

என்று குறள்வழியாக சொல்லுகிறார். இதன் பொருளாக, நம்மை வணங்கி தன்னை தாழ்த்தும் ஒரு மனிதனிடம், நம்மை ஏமாற்றி, படையெடுத்து தாக்கி அழிக்கும் தன்மை இருப்பதுபோலவே, ஒருவருடைய அழுகையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும் என்கிறார்.
 
இதன்படி தோற்றத்தை வைத்து, மயங்கிவிடும் தன்மையை, நாம் தான் மாற்றிக் கொள்ளவேண்டும். அவர் யார்? இதற்குமுன் என்ன செய்தார்? பின்புலம் என்ன? அணுகுமுறை என்ன? அனுபவம் என்ன? என்ன் சொல்லுகிறார்? அதில் உண்மை உள்ளதா? பயன்படுமா? உலகியலுக்கும், இயற்கைக்கும் முரண்படாது செயல்படுகிறாரா? வழிகாட்டுகிறாரா? என்று பலகேள்விகளை முன்வைத்து ஆராய்ந்து மதிப்பளிக்கவேண்டும். தோற்றம் கண்டு ஏமாறவேண்டியது இல்லை. அப்படி ஏமாந்தால் அது உங்கள்பாடு.
 
வாழ்க வளமுடன்
-

How can newcomers approach elevated yoga in spiritual sadhana?


ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?


பதில்:

மிக நல்ல கேள்வியாக கருதுகிறேன். மிக நீண்ட விளக்கம் தரவேண்டிய நிலையிலும், சுருக்கமாக இங்கே காணலாம். இந்த உலகெங்கும் மக்கள் பரந்து நிறைந்து வாழ்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே, மதிப்பாக சொல்லவேண்டுமென்றால் நூற்று முப்பது கோடிக்கு மேலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகமக்கள் தொகையை நீங்களே கணக்கிடலாம். இந்த கணக்கில் நாமும் இருக்கிறோம். சராசரியாக எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் நன்றாக, நிறைவாக, வளமாக உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். ஏன்? என்று கேள்வி கேட்டால், ஏற்றத்தாழ்வுதான் வாழ்க்கையில் நிதர்சன உண்மை என்று பதில் தருவார்கள்.

ஏனய்யா, உலகில் எல்லோருமே மனிதர்கள் தானே?  அப்படியானவர்கள் நன்றாக, நிறைவாக, வளமாக ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழமுடியாது? ஏன் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, குறைகளை உயர்த்தி வாழவைக்க முடியாது? இயற்கையோடு ஒன்றிணைந்த, முரண்பாடுகளற்ற வாழ்வை எல்லா வயதினரும் ஏன் கற்று, தனக்கும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் ஏற்ற நன்மையை பகிர்ந்து வாழமுடியாது? அந்த மாற்றத்தை ஏன் தரவும் முடியாது?

இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்கும் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்தான். ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பலப்பல சிக்கல்கள் இருக்கின்றன. உலகில் மக்கள் மேல் அக்கறையுள்ள, பெரும்பாலான எல்லா தலைவர்களும் இந்த விளக்கங்களோடுதான், மக்களிடம் சொல்லி அவர்களின் ஆதரவில், ஆட்சிப்பணிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஆட்சிக்காலத்தில் செயலிழந்து விடுவதுபோல ஒரு தோற்றம் வந்துவிடுகிறது. நிஜத்தில் ஒரு மாற்றமும் நடப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த நிலையில்தான், தன்னையுணர்ந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் உதவ வருகிறார்கள். தலைவர்களுக்கு அல்ல, எளிய சராசரி மக்களுக்காக. வேதாத்திரி மகரிஷி ‘உலக சமாதானம் வேண்டும் என்றால், முதலில் ஒவ்வொரு தனிமனிதனும், அவனுள்ளாக திருத்தம் பெற்று மன அமைதியும் நிறைவும் பெறவேண்டும்’ என்று சொல்லுகிறார். சமீபகாலமாக அந்த மாற்றம், மனவளக்கலை வழியாக மாற்றம் பெற்று வருகிறது. என்றாலும்கூட, உலகம்முழுதும் உள்ள மக்களுக்கு, எண்ணற்ற பயிற்சி மையங்கள் அவசியமாயிற்றே? அந்த அளவில் ஆசிரியர்களும் அவசியமாயிற்றே? அந்தவகையில்தான் பலப்பல யோக அமைப்புக்கள் உருவாகி மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில்தான் சில, ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளே புகுந்து, மக்களை யோகம் என்ற பெயரில், பணமும் பொருளும் பறித்து, பெயரும் புகழும் பெற நினைக்கிறார்கள்.

இத்தகைய ஏமாற்றுப்பேர்வழிகள் குறித்த உண்மைகள் உடனடியாக உலகெங்கும் பரவி, ‘ஆன்மீகத்தை பரப்பும் யோகிகள், மகான்கள், ஞானிகள் எல்லோருமே ஏமாற்றுக்கார்கள்’என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதையே மற்றவர்களுக்கும் சொல்லி, உண்மையான ஆர்வம் உள்ளவர்களையும் தடுத்துவிடுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு பக்தியும், யோகமும் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அப்படியானால் அந்த வகையிலாவது இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்களா? என்றால், அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள். மனிதர்களுக்குள் பிணக்கு, சண்டை, சச்சரவு என்று நிம்மதி இழக்கிறார்கள். பணம், பொருள், செல்வாக்கு, புலன் இன்பம் என்ற நான்கில் சிக்கித்தவிக்கிறார்கள். தினந்தோறும் உடலையும், மனதையும் இழந்து வாழ்வின் நோக்கம் மறந்து துன்பத்தில் வருந்துகிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் பிரச்சனையும், சமூகத்தின் மொத்த வாழ்வியலில் பிரதிபலிக்கிறது. பிறகு அது உலகெங்கும் பரவிவிடுகிறது. நவீன தொழில்நுட்பங்களால் சுருங்கிய உலகம், இதற்கு நீண்ட நேரத்தை எடுத்துகொள்வதில்லை. இதற்கான உதாரணங்களை நீங்களே அறிவீர்கள்.

இத்தகைய தனிமனித போக்கிலிருந்து, உங்களை விடுவித்து, மனிதனின் தற்கால பிரச்சனைகள், துன்பங்கள் இவற்றிலிருந்து விலகி, உண்மை விளக்கம் பெறவும், உடலை வலுவாக்கி, நோய்களில் இருந்து தடுப்பு பெறவும், வருமுன் காக்கவும் யோகம் அவசியம். பிறப்பின் உண்மையையை, மனிதனாக பரிணமித்த காரணத்தை அறிவதற்கு, ‘நான் யார்?’ என்ற கேள்வி வழியாக விளக்கம் பெற, யோகம் மட்டுமே உதவும். இதை அறியாமல், புரியாமல், தெரிந்துகொள்ளாமல் இந்த உலகில் வாழ்ந்து மடிவதால், யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. ஏற்கனவே பலகோடி கோடி மனிதர்கள் அப்படித்தான் வாழ்ந்து மடிந்தார்கள், மறைந்தார்கள். அவர்களின் வரிசையில் நீங்களும் ஏன் இணையவேண்டும்? பரிசோதித்து பார்க்கலாமே?

இரண்டறிவு ஜீவனான மண்புழுவின் பாதையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்துங்கள். அது வந்த பாதையில் திரும்பிப்போவதில்லை. தடையை கண்டு விலகி வேறு பாதையில்தான் முன்னேறும். ஆறறிவு ஜீவனான மனிதர்கள், வழியில் தடை இருக்கிறது என்பதற்காக, வீட்டிற்கே திரும்பிவிட முடியுமா? அங்கேயே வருந்தி உட்கார்ந்து விடவும் முடியுமா? இனி என்னுடைய எல்லாபாதையிலும் தடைகள் இருக்கும், எனக்கெதற்கு பயணம்? என்று தனக்குள்ளாக கேள்வி கேட்டு, தன்னை முடக்கிக் கொள்வானா? உண்மையையும் பொய்யையும் அலசிப்பார்த்து, உண்மை விளக்கம் பெற முடியாதவனா? உணவு சமைக்கும் அரிசியில் கல் இருக்கிறது என்றால், அரிசியையே, வாழ்நாள் முழுவதும் துறந்துவிடுவானா? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

வாழ்க வளமுடன்

-

Needing of money is only the reason of barrier on yoga journey, correct?


பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!

பதில்:

நாம் வாழ்கின்ற இந்த உலகவாழ்க்கையில், பணத்தேவை என்பது மிக அவசியமானதே. மேலும் ‘மனிதர்களுக்கு மட்டுமான வாழ்வில்’ என்றுதான் வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியோ மனிதன் இந்த பணம் என்கின்ற அமைப்பிற்குள் சிக்கிவிட்டான். மனிதன் மட்டுமல்ல மனிதமும் சிக்கிவிட்டது. பொருள்முதல்வாத உலகம் எங்கும் நிரம்பிவிட்டது. மனிதர்கள் எல்லோரும் உழைத்து வருமானம் ஈட்டி, பொருள் பெற்று வாழ்தல் அவசியம் என்பதும், அதன்வழியாக மனிதர்களின் தரமும் நிர்ணயிக்கப்படுவதும் நிலைத்துவிட்டது. அதில் நாமும் வெற்றி பெறவேண்டியது அவசியமே.

பணத்தேவையை பூர்த்தி செய்யாமல், நாம் இந்த உலகில் வாழ்வும் முடியாது.
சில அடிப்படை விசயங்களை பெறவும் பணம் அவசியமாகிறது. முக்கியமாக, ஒரு மனிதன் சும்மா, வெறுமனே இருக்கக்கூடாது. அவன் உழைக்கவேண்டும், தன்னுடைய உழைப்பை, உலகுக்கு, சமூகத்திற்கு, பிறமனிதர்களுக்கு தரவேண்டும், அதற்கு அந்த மனிதன் சன்மானம், வெகுமதி பெற்றுக்கொள்ளலாம் என்பது உலம் ஏற்றுக்கொண்ட ஒரு நியதி. குழந்தைகளும், வயோதிகர்களும் மட்டுமே விதிவிலக்கு. சிலவேளைகளில் அவர்களும் சிக்கிக் கொண்டு துன்புறுகின்றனர். துன்புறுத்தவும்படுகின்றனர்.

இந்த பணத்தேவை, தனிமனிதனுக்கும் அவசியம், குடும்பம் என்ற சமூக நிலையில் வாழ்பவருக்கும் அவசியம். கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால், தனித்தனி நபர்களும், இந்த பணத்தேவையை நிவர்த்தி செய்ய உழைக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்துதான் ‘யோகம்’ என்பதும் அவசியமாகிறது. ஆனால் பணத்தேவை யோகத்திற்கு தடையா? என்ற கேள்வியும், யோகத்திற்கு பணம் தடையா? என்பதும் அவசியமற்ற கேள்விகளாகும். எப்படி என்பதையும் பார்க்கலாம்.

சராசரியாக ஒரு குடும்பத்தின் தேவை, இன்றைய காலத்தில் இந்திய ரூபாய் 20000/- (இருபதாயிரம்) என்று வைத்துக் கொள்ளலாம். இந்த வருமானம் குறைவு, யோகத்தில் பயணிக்க முடியாது என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது பற்றாக்குறை என்றால், கூடுதலாக பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பொழுது இந்த தொகையை ரூபாய் 40000/- (நாற்பதாயிரம்) என்று வைத்துக்கொண்டால், யோகத்திற்கு தடையில்லைதானே? ஆனால் யோகத்திற்கு வந்துவிடுவார்களா? இல்லையே.

அப்படியானால், மாதத்திற்கு 80000/- (எண்பதாயிரம்) வருமானம் ஈட்டுபவர்கள் யோகத்தில் இணைந்திருக்கிறார்களா? அதுவும் இல்லையே. எவ்வளவு வருமானமும் ஈட்டினாலும்கூட குறைவு மனப்பான்மையில் அவர்கள் சிக்கியிருந்தால், யோகம் அவர்களுக்கு கசக்கும். எனவே, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்பதெல்லாம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல ‘சப்பைக்கட்டு’. நீங்களும் இந்த உண்மையை ஆராய்ந்து பார்த்து விளக்கம் பெறமுடியும். 

உங்களுடைய தேவை என்ன? குடும்பத்தின் தேவை என்ன? வருமானம் எந்தெந்த வகையில் ஈட்டமுடிகிறது? எவ்வளவு வருகிறது? அதன் செலவும், அளவும், முறையும் என்ன? வருங்கால தேவை என்ன? அதற்கான சேமிப்பு எவ்வளவு? என்பதெல்லாம் ஆராய்ந்து கணித்துப்பாருங்கள். யோகத்தில் நீங்கள் முழுமனதோடு இணைந்து பயணிக்கலாம் என்பதே முடிவாகும்!

வாழ்க வளமுடன்.
-

How to counter the general notion that devotion and spirituality deceive people?


பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


பதில்:

உண்மையிலேயே பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோலவே பொதுத்தன்மையான கருத்தாக மக்களிடம் பரவியும் உள்ளது. இன்னமும் கூடுதலாக, மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களின் பணத்தையும் பறிக்கிறது என்று சொல்லுகிறார்கள். எப்படி? அதிகவட்டிக்கும், மறைமுகமான இருமடங்கு லாபத்திற்கும், ஏதெனும் ஒரு போலியான நிதி நிறுவனத்தை நம்பி, பெரும் முதலீடு செய்து மக்கள் ஏமாந்து நிற்பதை விட அதிகமாகவா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பக்தியும் ஆன்மீகமும் ஏதோ ஒரு மதத்தில் மட்டுமே, ஏமாற்றுவதாகவும், பணத்தை பிடுங்குவதாகவும் பிரச்சாரம் நிறைந்துவிட்டது சோகமானதே. இதனாலேயே பக்தியும் இல்லை, ஆன்மிகமும் இல்லை, கடவுளும் இல்லை (அதாவது குறிப்பிட்ட வகையிலான மதத்தில் மட்டுமே) என்று சொல்லி வளர்ந்தும் வளர்த்தும் வருகிறார்கள். ஆனால் நாம் எந்த மதத்தையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் குறையாக பார்க்கவில்லை, அது குறித்து தனியாக அடையாளம் காட்டப்படுவதும் இல்லை. நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் விளக்கங்களை தரவேண்டியது உள்ளதே?!

பக்தி என்பது, பிறந்தது முதல் பருவத்திற்கு வரும் வயதுவரை எல்லோருக்குமே அவசியம். அது இந்த இயற்கையை, தெய்வீகமாக கருதி அதற்கு மதிப்பு தந்து அதற்கு முரண்பாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவும், கட உள் என்ற தன்மைக்கு நம்மை தயார் செய்வதற்காகவுமே சித்தர்களாலும், அறிவார்ந்த முன்னோர்களாலும், ஞானிகளாலும் வழங்கப்பட்டது. பருவம் நிறைந்து விட்டால், அந்த பக்தியில் இருக்கும் உண்மையை ‘யோகத்தின் வழியே’ அறிந்துகொள்ளவும் வழிவகை செய்திருந்தார்கள். இதுதான் சிதைந்துபோய், வழிபாடாகவும், சடங்காகவும் உண்மையை மறைத்துக்கொண்டு நிற்கிறது. இந்த சிதைவை திருத்திட வழிகாணாமல், அதில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்ளாமல், மொத்தமுமே தவறு கருவது பெரும்பாலான மக்களின் அறியாமை தான்.

ஆன்மீகம் என்பது பக்தி என்பதிலிருந்து வேறுபட்டது. பக்தியிலிருந்து உண்மையை நோக்கி நகரும் பாதை என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை புரிந்துகொண்டால், யோகம் என்பது என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்கால ஆன்மீகம், பக்தியைத்தான் பிடித்துக்கொண்டு நகர்கிறது. ஆன்மீகமும் பக்தியும் ஒன்றுதான் என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இந்த பணத்தை பிடுங்குவதில் பக்தி, பல ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிவிட்டது. அது ஓரளவில் உண்மைதான். எனினும் அதை எளிதாக கண்டு விலக்கிவிடவும் முடியும். ஆனால் ஆன்மீகமும் பணத்தை பிடுங்குகிறது, பறிக்கிறது, ஏமாற்றுகிறது என்பது சோகம். உண்மையான ஆன்மீகம் எது என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் பயணித்து, உண்மையறிந்து ‘யோகத்திற்குள்’ நுழையவேண்டும். யோகமே உங்கள் பிறப்பின் ரகசியத்தையும், நோக்கத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் உங்களுக்கு அறியத்தரும்.

இதன்படி, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை கொண்டவர்களுக்கு, அதை ஆழ்ந்து பார்த்து, உண்மையை அறிந்து கொள்ளக்கூடிய வழியை சொல்லித்தந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

How can fix fake people in the spiritual and yoga?


ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?

பதில்:
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், இந்தக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நிறைந்து இருக்கக் கூடியவர்கள்தான். நெல் விதைத்தால் நெல்லும் விளையும், புல்லும் விளையும், களையும் விளையும் என்று விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்குத் தெரியும். விளைச்சல் காலத்தின் முடிவில், களைகள் அவ்வப்பொழுது களைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. விவசாயிக்கு என்ன தேவையோ அதை அவன் எடுத்துக் கொள்கிறான். நெற்கதிரை அறுத்து, அடித்து, நெல்லை பிரித்து, தனித்து வைத்துக் கொள்கிறான். நெல்லில் இருந்து அரிசி நமக்கு உணவாகிறாது. நெல்லின் உதிரிகள் பறவைகளுக்கு உணவாகிறது. கதிர்கள் விலங்கினங்களுக்கு உணவாகிறது.

அதுபோலவே இந்த உலகில், மனிதன் வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வாழ்வில் தேவைகளும் நிறைய இருக்கின்றன. ஒரு தன் உடல்பலம், வலிமை, இவற்றைக்கொண்டு உழைக்கிறார், பலன் பெறுகிறார். சிலர் அதன் அறிவை பயன்படுத்தி, அதன் வழியாக நன்மை பெறுகிறார். இன்னும் சிலர், இவர்கள் செய்வதைப்போல செய்து, அவர்களைப்போல நடித்து, அவர்களைச் சார்ந்து, அவர்களை ஏமாற்றி பிழைக்க தயாராகிறார்.

நமக்கு என்ன தேவை என்றால், யார் உண்மையானவர்? என்று ஆராய்ந்து, பிறகு அந்த நட்பை, பலனை பெறுவதுதான் முக்கியம். சிலவேளை நடிப்பு, உண்மையை விட உயர்ந்ததாகவும் இருக்கும். அந்த ஏமாற்று வித்தையை நாம் அடையாளம் கண்டுகொள்ள பழகவேண்டும்.

இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டாலும், நாம் அவரை திருத்தவோ, தண்டணை வழங்கவோ, பெற்றுத்தரவோ அவசியமில்லை. நாம் அந்த நபரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டால் போதுமானது. திருத்தத்தை காலம் பார்த்துக்கொள்ளும் என்பதால் நாம் வருந்தவேண்டியதில்லை. நீங்கள் அவரிடம் சிக்கி வருந்தாமல் கவனமாக இருந்தால் போதுமே.

இப்படி ஒவ்வொருவரும், ஆன்மீகத்திலும், யோகத்திலும், போலியான நபர்களை, ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு விலகிவிடவேண்டும். அவர்களை அடையாளம் காண பழகிக் கொள்ளவேண்டும். நம்முடைய அறிவு அவர்கள் வசம் சிக்கிவிடக்கூடாது. உங்களிடம் இருக்கும் பெரும் பொருள், பெரும் பணம் சிக்கிவிடக்கூடாது.

ஆனால், உண்மையானவரையும் போலி என்று கருதிவிடாத, ஒதுக்கித் தள்ளிவிடாது, ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு வேண்டியதும் அவசியம்!
வாழ்க வளமுடன்.
-

Why there is scarcity always and no fulfillment in our earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில், பற்றாக்குறையாகவே, நிறைவே இல்லாமலேயே இருக்கிறதே ஏன்?


பதில்:

நம்முடைய பாரம்பரியமான இந்தியநாட்டில் இதற்கு நீண்டகாலமாலவே பதில் இருக்கிறது. இந்தியாவை இந்த உலக நாடுகள் ஆன்மீக நாடாகவும், ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும் நினைக்கின்றன. ஓவ்வொருவரும், இந்தியா வந்தால், ஏதேனும் ஒரு உண்மையான ஞானி, மகான், சாது, யோகி  தங்களுக்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் நாம்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை உதாசீனம் செய்து வந்திருக்கிறோம். இன்றும் உதாசீனம் செய்துவருகிறோம். அது என்ன பதில்?

உலகில் பிறந்த மனிதரின் நோக்கம், பொய்யான, நிலையில்லாத இந்த வாழ்க்கையில், தன்னுடைய உண்மையை தேடுவது ஆகும். ஆனால் இதைச்சொன்னால் ‘இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, இது ஏமாற்று வேலை’ என்று முடிவுகட்டிட ஒரு தலைவர் வருவார். அவரின் அரைகுறையான சொல்லைக்கேட்டு பின்னால் செல்ல பெரும்மக்களும் தயாராவார்கள். இது ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. யாருமே உண்மை எது? என்று ஆராய்ந்து பார்க்க தயாரில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமூகவாழ்வில், ஒருவர் தவறு செய்தால், அந்த சமூகமே குற்றவாளி என்று மொத்தமாக முடிவு கட்டிடத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆன்மீகத்தில் இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு மொத்தமான் ஆன்மீகமே பொய் என்றால் எப்படி?!

ஏன் ஆன்மீகத்தில் ஏமாற்றுபேர்வழிகள் உருவாகின்றனர்?! உலக வாழ்வில் தன்னையும் இயற்கையையும் உணர்ந்தவரையும், மெய்ப்பொருள் உண்மையை அறிந்தவரையும் நாம் ஞானி, மகான் என்று அழைக்கிறோம். அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம். கைகூப்பி வணங்கிடவும் செய்கிறோம் அல்லவே? இதைப்பார்க்கிற ஒரு ‘திருடனுக்கும்’ நாமும் இப்படி ஆகிவிடலாமே, மக்கள் என்னையும் வணங்கி, பொன்னும் பொருளும் தந்து காப்பார்களே! என்று நினைத்து ஒரு ஞானி, மகான் போல வேடம் தரித்துக் கொள்கிறான். இந்தமாதிரியான கபட வேடதாரிகள் தான் ஆன்மீகத்தை கெடுக்கிறார்கள். இவர்களால்தான் உண்மை சிதைகிறது!

உங்கள் வாழ்வில் பற்றாக்குறை இருப்பதும், நிறைவே இல்லாத மன நிலையும் இருக்கிறது என்றால், உங்களுடைய மனதின் தேடல் அது அல்ல! நீங்கள் தேடி அடைவதை அது விரும்புவதும் இல்லை. மனம் அதனுடைய இயல்பில், தன்னுடைய மூலத்தை அடைய விரும்புகிறது. ஆனால் அந்த மனதிற்கு உங்களிடம் கேட்கத்தெரியவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், இதுவா, அதுவா, என்று மனதை திருப்திப்படுத்த எல்லாவற்றையும் பெற முயற்சிக்கிறீர்கள். போராடுகிறீர்கள். மனமும் அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்தபிறகு மனம் ‘நான் கேட்டது இது இல்லையே?!’ என்று சொல்லிவிடுகிறது. இதுதான் தினமும் உங்களுக்கு நிழந்துகொண்டே இருக்கிறது. அப்படியானால் இதற்கு ஒரு தீர்வு என்ன? ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள். ‘உண்மையாக இந்த மனம் விரும்புவது என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கு விடை கண்டுபிடியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why is difficult as following the Vethathiriyam? Only easy to Maharishi.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தை கடைபிடிக்க கடினமாக இருக்கிறது. மகரிஷி தனியாள் என்பதால் அவருக்கு சுலபம் தானே?!


பதில்:

இப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தவிதமான கேள்வியை, குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் மூலமாக எதிர்கொண்டுள்ளார். அதை அவரே சொல்லியும் உள்ளார் என்பதுதான் சிறப்பு. ஒரு தத்துவ விளக்கம், வெளிநாட்டில் நடத்திக்கொண்டிருந்த பொழுது ஒருவர், உங்கள் கேள்வி போலவே கேட்டுள்ளார்.

‘சுவாமிஜி, நீங்கள் ஒரு துறவி. அதனால் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது உங்களுக்கு சுலபமானது. ஆனால் நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்கு மிக கடினம், முடியாததும் கூட’ என்று கேட்கிறார்.

‘நான் துறவி என்று சொல்லவில்லையே, நீங்கள் நினைப்பதுபோல் நான் துறவியும் அல்ல. நானும் உங்களைப்போல இல்லறத்தில் வாழ்ந்து நிறைவு கண்டு, பிறகு யோகத்தில் என்னை இணைத்துக்கொண்டு பயணிக்கிறேன். மேலும் ஒன்று அல்ல இரண்டு மனைவிகள்’ என்று மகரிஷி பதில் தந்திருக்கிறார்.

இப்போது கேள்வி கேட்டவர் எப்படியான வியப்புக்கு உள்ளாவார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? மேலும் நான் விளக்கமாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

சரி, நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறலாமா? நீங்கள் வேதாத்திரியத்தை இதற்கு மேலும் தொடரவேண்டாம். சற்று நிறுத்தி வைத்துவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய, என் வாழ்க்கை விளக்கம் என்ற தலைப்பிலான நூலை வாங்கி படியுங்கள். முழுவதும் படித்து முடித்துவிட்டு, இரண்டு மூன்று நாள் சிந்தனை செய்யுங்கள். இந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியமும், நான் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளும் தேவைதானா? இதை தொடரலாமா? விட்டுவிடலாமா? வேறு என்ன செய்யலாம்? என்று கேள்விகள் கேட்டு அதற்குறிய பதிலை தேடுங்கள். என்னிடமோ, வேறு யாரிடமோ ஆலோசனை கேட்காதீர்கள். உங்களுக்குள்ளாக என்ன பதில் விளக்கம் வருகிறதோ அதை கடைபிடியுங்கள். முடிவு எதுவாக இருந்தாலும் அது ‘உங்களுக்கு நல்லதே’ ஆகும்!

வாழ்க வளமுடன்.

Difference between the Siddhar kundalini yoga and Vethathiriya.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் என்ன வித்தியாசம் என்று விளக்குவீர்களா?


பதில்:

வேதாத்திரியம் தந்த, வேதாத்திரி மகரிஷியைக் கூட சித்தர் என்று அழைப்பது பொருத்தமானதுதான். முதலில் சித்தர்கள் என்றால், சித்து என்ற உயிரை, அதன் இருப்பை, தன்மையை, மதிப்பை, இயக்கத்தை அறிந்து உணர்ந்தவர்கள் என்பதாகும். சித்தர்களே, வெட்டவெளி தத்துவத்தை சிவமாக ஏற்று, அதை குண்டலினி யோகத்தின் வழியாக எப்படி பெறுவது என்ற வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும் வடிவமைத்து தந்தார்கள். விரும்பியோருக்கு பயிற்றுவித்தார்கள். கவி பாடல்களாக எழுதியும் வைத்தார்கள். உலகெங்கும் சென்று அங்காங்கே இருந்த மக்களுக்கும் அதை பக்தி வழியில் வழிபாடகவும் அமைத்துத் தந்தார்கள். பின்னாளில்தான் பக்தியில் குழப்பங்கள் நேர்ந்து, சித்தர்களின் உண்மையான கருத்தும், நோக்கமும் சிதைந்துவிட்டது. 

உங்களுக்குத் தெரியுமா? இன்றைய, இப்போதைய காலகட்டத்திலும் அத்தகைய சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

சித்தர்களின் யோகமுறை கடினமானது. என்றாலும் கூட காலத்தால் அவை எளிமையாக மாற்றம் பெற்றன. உலகெங்கும் அந்த சித்தர்களின் வழியாக வந்தவர்கள், அதை ஆராய்ந்து வந்ததால், இறையாற்றலின் கருணையாலும் அத்தகைய எளிய முறைகள் சாத்தியமாகிற்று. எனினும் அந்தக்கால கடின முறையை இப்போதும் பின்பற்றுபவர்கள் உண்டு.

வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம், அத்தகைய எளியமுறையைத்தான் பின்பற்றுகிறது. சித்தர்கள் தந்த விளக்கத்தை அப்படியே ஏற்று, தற்கான விஞ்ஞான வளர்ச்சியில், எது ஏற்றதோ அதைக் கொண்டு, இறைதத்துவத்தை விளக்குகிறது. சித்தர்கள் கண்டு இவ்வுலகுக்கு தந்த காந்தம் என்ற உண்மை விளக்கம், கந்தனாகி பக்தியில் நின்றுவிட்டது. அதே காந்தம், வேதாத்திரியத்தில் வான்காந்தமாகவும், ஜீவகாந்தமாகவும் மலர்ந்து விட்ட உண்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, சித்தர்களின் சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால், பெரும் வித்தியாசம் ஏதுமின்றி, இக்கால மனித அறிவின் வளர்சிக்கு ஏற்றபடி, இறை தத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுப்பது மட்டுமேதான்.

வாழ்க வளமுடன்.


Incomplete Birth-debt on Life


பிறவிக்கடன் தீர்க்காத வாழ்க்கை


அன்பர்களே, என்னுடைய இணைதள பத்திரிக்கை தேடுதல் என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஏனென்றால், இத்தளங்களை பார்த்து செய்தியை வாசிப்பது என்பது, தற்போதைய இணையம், அந்தக்கால, மொட்டையான ஆர்வத்தை தூண்டும் துண்டு தலைப்புக்களை போல எழுதி, மீன் புழுவுக்கு ஆசைப்பட்டு கொக்கியில் மாட்டி சிக்கி தவிப்பது போல, நாமும் அந்த இணையதளத்தில் சிக்கி விடுவோம். ஆனால் சில நல்ல தகவல்களும் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். 


ஓய்வில் உழைப்பு

கடந்த மாதத்தில் அப்படி படித்த, ஒரு இணைதள பத்திரிக்கை ஒரு கட்டுரை படித்தேன். அதில் கிடைத்த செய்தியோடு, என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரில் இருக்கும், முதியோர் இல்லத்தில், அங்கே இருந்து வாழக்கூடிய பணிஓய்வு பெற்றோர்  ஒரு குழுவாக இணைந்து, பண்பலை வானொலி நடத்திவருகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எங்கள் வாழ்க்கை, இப்பொழுது வெறுமனே கழிவதில்லை, எல்லோருக்கும் பயன்படும்வகையில் நாங்கள், ஓவ்வொருவருமே செயல்படுகிறோம்.

இதுவரையில் எங்களின் வாழ்வில், எங்களுக்கு விருப்பமானதை செய்யமுடியாது இருந்தோம், இப்பொழுது அப்படி இல்லை.

எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லாமலிருந்தது. தற்பொழுது அதை செய்கிறோம்.

ஓவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை, வெளிக்காட்ட முடியாமல் அடைத்திருந்தோம். அதை செய்ய தள்ளிப்போட்டோம், அதற்கான கால அவகாசம் இல்லாமலிருந்தோம். கால ஓட்டத்தில் பிறரின் பார்வைக்காக செய்ய தயங்கினோம். இன்று ஓவ்வொருவரும் அத்திறமைகளை வெளியே தருகிறோம். திருப்தியாக இருக்கிறோம்.

இன்று எங்கள் பிள்ளைகளுக்கே, இதுவரை தெரியாத ஒரு முகத்தை அவர்களுக்கு காட்டியுள்ளோம். அவர்களும் பாராட்டுகிறார்கள்.

எங்களைப்போல உள்ள ஓய்வு இல்லத்தில் இருப்பவருக்கும், பணி ஓய்வுக்குப்பிறகு வாழ்க்கை இல்லை என்போருக்கும் உதாரணமாக இருக்கிறோம். சொல்லப்போனால் இளையோருக்கும் உத்வேகமாக இருக்கிறோம்.


எத்தனை கேள்விகள்?!

இந்த உலக வாழ்வியலில் இப்படியான அனுபவ வார்த்தைகள் மிகச்சரியானது என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு மனிதர் எத்தனை காலம்தான் இப்படியான மிகை உணர்ச்சிகளுக்கும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? வாழ்நாளில் என்றைக்கேனும் “அமைதி” எனும் நிலை நாட வேண்டாமா? எதுவுமே செய்யாமல், உள்முக ஆராய்ச்சியிலேயே அந்த ஆழ்ந்த அமைதி கிடைக்கிறதே அது வேண்டாமா? உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறீர்களே, உங்களை யார் என்று அறிந்தீர்களா? “நான் யார்” என்ற கேள்விக்கான பதிலை தேட முயற்சித்தீர்களா?

ஏன் இந்த பூமியில் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன நோக்கம் கொண்டு என்னை பெற்றெடுத்தார்கள்? என்ன தேடுதலுக்காக நான் வாழ்ந்தேன்? ஏன் இறை? எது இறை? கோவிலிலா? வீட்டிலா? மலைகளிலா? மலைச்சிகரங்களிலா? எங்கே இறை? நான் யார்? இளமையின் வளர்ச்சியில் நான் ஏன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்? அவர் ஏன் என்வாழ்வில் இணைந்தார்? எங்களுக்கும் ஏன் குழந்தைகள் பிறந்தன? அவர்கள் யார்? எதற்காக பிறந்தார்கள்? இப்படி நீண்டு செல்லும் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தேட முனைந்தீர்களா?

இத்தனை சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் வாழ்ந்து சொல்லிச்சென்றதெல்லாம் பொய்யா? இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும் மேற்குலகம், மன அமைதியை தேடி இந்தியாவுக்கே வருகிறார்களே அதிலெல்லாம் அர்த்தமில்லையா? சில ஆன்மீக, யோக தலைவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள மக்களுக்கு கற்பிக்கிறார்களே அதெல்லாம் விசயமே இல்லையா?


கட உள் என்பதற்கு கூடவா அர்த்தமில்லை?!

இந்த உலகை, இந்த வாழ்க்கையை, இந்த உலக இன்பங்களை, நட்புக்களை, மனிதர்களை புரிந்துகொள்ள அல்லது உங்களை இந்த உலகுக்கு வெளிக்காட்ட, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் வேண்டும்?! இறக்கும் வரையிலும் “இவள்/ன்” உழைத்தான், திறமையோடு இருந்தான். உதாரண மனிதராக வாழ்ந்தார் என்று சொல்லவேண்டுமா? அந்த வார்த்தைகளை பெறுவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? உங்கள் பகிர்வாக இவற்றைத்தான் உங்கள் பங்காக, இந்த உலகில் விட்டுச்செல்ல வேண்டுமா?



பொதுவான வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது?

நம் எல்லோருக்குமே, நம் பெற்றோர் ஏழையோ, நடுத்தரமோ, பணக்காரரோ என்றாலும், பொதுவான ஒரு வாழ்வு உண்டு. 14 வயதுவரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் உண்டு. அதற்கு பிறகு, விளையாட்டுத்தனம் மறைந்து, குடும்ப சூழல் அறிந்து, கல்வி, வேலை, தொழில், வியாபாரம், கடல் கடந்த வேலை அல்லது வணிகள் என்றபடி, நம் எல்லை எல்லைகள் விரிந்துவிடும். கல்வியில் பெற்றோர் துணை செய்தாலும் கூட, வேலை தேடுதல் அவரராகவே தேர்ந்தெடுக்கவேண்டியது இருக்கும்.  பிறகு, வேலை, தொழிலில், வணிகத்தில் ஓரளவு சம்பாத்தியத்தில் நிறைவு பெற்றால், காதல் வழி, திருமணம் வழி வாழ்க்கைத் துணைவர் கிடைத்து விடுவார்கள். சம்பாத்திய நிறைவு இல்லாத காதல் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்ல  வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதற்குள் அல்லது இதற்கிடையில் பெற்றோரின் மறைவு, அவர்களை தன்னோடு வீட்டில் வைத்துக்கொள்ளுதல் உண்டு.


ஓய்வை நோக்கி!

இந்த திருப்தி, அதிருப்தி தம்பதியர் கால வாழ்வில், குழந்தைகள் வந்துவிடுவர், பிறகு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்புக்கு ஆளில்லாமல் கஷ்டம், தன்னுடைய ஓய்வின்மைக்கு நடுவே அக்குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி, அவர்களுக்கான வேலை தேடுதல், ஆம். இப்போதெல்லாம் பெற்றோர்கள்தான் பிள்ளைக்காக வேலை தேடுகின்றனர். பிறகு அவர்களுக்கான மணமகன், மணமகள் தேடுதல் என்று பரபரப்பாகி வாழ்க்கை ஓடும். இதற்குள் தன் வயது கிட்டதட்ட 55க்கும் மேலே வந்துவிடும். அதாவது பணிஓய்வு (Retirement) நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


நம் ஓய்வு வாழ்க்கை!

நம் பெற்றோரை நாம் பார்த்ததுப் போன்ற அன்பும், அக்கறையும் இப்போது இருப்பதில்லை. 58/60 வயதில் பணிஓய்வுக்குப் பிறகு, ஓய்வுகால ஊதியம் வந்தால் அவர்பாடு சுகம். இல்லையேல் அவதி. அதோடு இப்பொதெல்லாம் வெகு சீக்கிரமே உடல்நல குறைபாடுகள் தலைதூக்குகின்றன. அதுவும் சிரமமே. இதனால் தன் பிள்ளைகளுக்கு சுமையாக?! மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். தற்போதைய பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பணிஓய்வுக்கு பிறகு, தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல், நல்ல முதியோர் இல்லங்களில், தாங்களாகவே பணம் கட்டி சேர்ந்துவிடுகின்றனர். அங்கே ஏற்கனவே வந்து தங்கி இருக்ககூடிய மற்றவர்களோடு “நல்ல நண்பர்களாக” வாழத் துவங்கின்றனர்.



materialistic vs spiritual

இப்படியான பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்ப வாழ்க்கைதான், பொருள்முதல்வாத உலகியல் வாழ்வு (Materialistic Life) என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையில் என்ன இழக்கிறோம் என்றால், நாம் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், பிறப்பின் கடமை, நான் யார் என்ற தேடல் ஆகியவை நிறைவு பெறவில்லை. 

ஆனால், பெரும்பாலும் கடவுள் மறுப்பு மிகுந்த இக்காலத்தில் அந்த நாத்திகவாதிகளை விட்டுவிடலாம். சிலரே ஆத்திகவாதிகளாக பக்தி மார்க்கத்தில் திளைத்திருப்பார்கள். அதுகூட என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் பக்தி மார்க்கத்திலும் தொய்வு வந்துவிடும்.  அதோடு இந்த உலகில் “இறை வணிகம்” மிக நன்றாக நடக்கிறது. காவி உடுத்திய போலிச் சாமியார்களும் மலிந்துவிட்டனர். அதனால் அவர்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. 


எனக்கு அவசியமில்லை எனும் கருத்து!

இதில் முக்கியமாக கருதவேண்டியது, இயற்கை குறித்த விளக்கமில்லை என்பதால், இறையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற சிந்தனைதான். வேதாத்திரி மகரிசி அடிக்கடி இரண்டு உதாரண கேள்விகள் கேட்பார்.

நீங்கள் பசியாற உணவு எடுத்துக் கொள்கிறீர்கள். உணவை எடுத்து வாயில்போட்டு, அரைத்து மென்று முழுங்குவதை தவிர உங்கள் வேலை ஏதும் இல்லை. அவ்வுணவை செரிமானம் செய்து, சக்தியாகவும், ரத்தமாகவும், தசையாகவும் மாற்றுவது யார்வேலை? நீங்கள் செய்தீர்களா? வேறு யாரேனும் செய்தார்களா? இல்லை அரசாங்கம் செய்ததா? சரி இந்த உலகில் மிகப்பெரும் அறிவியல் நிபுணர்களிடம் இரண்டு இட்லியை கொடுத்து, ரத்தமாக, தசையாக மாற்றித்தர கேட்டால், அவர்களாலும் முடியுமா?

இந்த பூமி எவ்வளவு எடை இருக்கும்? கணக்குப்போட்டால் 5.972 × 10^24 kg வரும். சூரியனின் எடை கணக்குப் போட்டால் 1.989 × 10^30 kg வரும். இப்படியே எல்லா கிரங்களுக்கும் போட்டுப்பாருங்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருப்பது எது?  ஒரு எடையுள்ள பொருளை ஒன்று, சும்மா தாங்கி, மிதக்க விட்டுக்கொண்டு இருக்கிறது என்றால், மிதக்கும் பொருள் வலிமையானதா? தாங்கும் பொருள் வலிமையானதா?   



இயற்கையும் இறையும்

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். இது அறிவியல், இயற்கை என்று நீங்கள் வாதிடலாம், இதைத்தான் ஞானிகள் “இறை” என்கிறார்கள். பொதுவாக சொல்லுவார்கள், உண்மையான குருவை தேடுதலில் நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அந்த குரு உங்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்துவைப்பார். 

இறை சிந்தனையில் தெளிவு பெற, 18 வயது நிரம்பினால் போதுமானது. வாழ்வில் எப்போது நமக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அந்த வயதே சிறந்தது. அந்த எண்ணம் எழுவதில், ஒரு காரணமும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இதில் யோகம் அறிந்துகொண்டால், பிறக்கும் குழந்தை “கருவிலே திருவுடையார்” என மாறலாம்! ஆனால் 60 ஆகியும், நான் இந்த உலகியலில் இயங்கிக்கொண்டே இருப்பேன் என்பது தவறல்ல. ஆனால் உண்மை உணராமல் இருக்கிறீர்களே?! 

இறந்ததும், பிறர் நினைவுகளால் வாழ்வது, இறவாமல் வாழ்வது வேறு. கடந்து உள்ளே அறிந்து, பிறப்புமின்றி, இறப்புமின்றி, எந்நாளும் அழிவின்றி இருப்பது எதுவோ, அதை தன்னிலே அறிந்து இருப்பதும் வேறு. எது உங்கள் தேர்வு?!

------

Photos thanks to: istockphotos, 123RF,  Dreamstime