April 2025 | CJ for You

April 2025

Time is wasted in the economy to satisfy its own needs. Where do I join yoga, get Kundalini initiation and get true explanation? Very confusing. Is this why they ask me that I am not interested in yoga? What is your response to them?


வாழ்க வளமுடன் ஐயா, பொருளாதாரத்தில் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்திடவே காலம் வீணாகி விடுகிறது. இதில் நான் எங்கே யோகத்தில் இணைந்து, குண்டலினி தீட்சை பெற்று, உண்மை விளக்கம் பெறுவது? மிகவும் குழப்பமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கு யோகத்தில் ஆர்வம் இல்லை என்று கேட்கிறார்களே? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?


அவர் சொல்லுவது உண்மைதான். பக்தியில் இருக்கும் மனிதர், அதிலிருக்கும் உண்மை தத்துவங்களை அறிந்திட நினைத்தால், அவர் யோகத்திற்கு வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒரு சிலருக்கு, யோகத்தில் தானாகவே ஆர்வம் வந்துவிடும். அதற்கு காரணமாக இருப்பது, அவருடைய மூதாதையர்கள், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையின் ஊக்குவிப்பு. இவர்களுக்கு, தங்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொருளாதார வாழ்க்கையோடு போராடிக்கொண்டே யோகத்திலும் இணைந்து உயர்வார்கள்.

எனினும் ஒருவர், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பிறகுதான் யோகத்திற்கு வரவேண்டும் அல்லது வரமுடியும் என்பது தவறான கருத்து. அப்படிப்பார்த்தால், உலகில் உள்ள எல்லா பணக்காரர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் யோகத்திற்கு வந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்துவிட்டதா என்ன? இல்லைதானே?

ஆனால், ‘அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய பாமரனுக்கு யோகம் தேவையில்லை’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆமாம். அவனுக்கு ஒவ்வொருநாளும் மிகுந்த போராட்டமாகவே இருக்கும் அல்லவா? எப்படி வாழ்வது? எப்படி உணவு கிடைக்கும்? எதை சாப்பிடுவது? என்ன வேலை கிடைக்கும்? எப்போது தூங்குவேன்? என்ற சிந்தனை ஓட்டத்திலேயே இருக்கும் மனிதனுக்கு, யோகம் கற்க வாய்ப்பிருக்காது. அவன் பக்தியிலும் இருக்கமாட்டான். ஆனால், கடவுளே, என் நிலமை ஏன் இப்படி இருக்கிறது? என்று புலம்பிக்கொண்டுதான் இருப்பான். சரிதானே?

பொதுவாகவே, உலகில் வாழும் மனிதனுக்கு, பொருளாதாரம் அவசியம். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருள் பலம், அதன் உபயோகம் இல்லாமல் வாழமுடியாது. அந்த பொருளுக்காக, இன்னொரு மனிதரை சார்ந்தும் வாழமுடியாது. அப்படி சார்ந்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அது உண்மைதான், அதற்காக, தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை, சம்பாதித்துக் கொண்டே இருக்கமுடியுமா? அதுமட்டுமேதான் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? நாம், இந்த உலகில் பார்க்கின்றோமே? பலகாலம் ஓடிஓடி சம்பாதித்த பணத்தையெல்லாம், தீடீரென்று ஒருநாள், தன்னுடைய உடலில் ஏற்பட்ட நோய் தொந்தரவுகள் தீர்க்கும் மருத்துவமனைக்குத்தானே செலுத்துகிறார்?. உண்மைதானே? சிலர், தன்னுடைய சொத்துக்களையும் கரைத்துவிடுகிறார்கள். இதுபோலவே சில வழக்கு விசாரனைக்கும் தன் சம்பாத்தியத்தை வழங்கிவிடுகிறார்கள் அல்லவா?

சாரசரியான பொருளாதர உலகின் பார்வையில், பொருளாதார உயர்வை விட்டுவிட்டு, யோகத்திற்கு எப்படி வருவது? என்று உங்கள் நண்பரோ, வேறு சிலரோ கேட்பது உண்மையாகவே தோன்றும். யாருமே, பொருளாதரத்தை விட்டுவிட்டு யோகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை. நிச்சயமாக, வேதாத்திரியம் அப்படி சொன்னதே இல்லை. பொருளாதாரத்தில் நன்கு உயருங்கள். இந்த அளவில் போதும், நான் நிறைவாக இருக்கிறேன் என்ற நிலைக்கு வாருங்கள். உங்களுடைய பொருளாதாரம் பலமாக இருக்கட்டும்.  உங்கள் வாழ்நாளுக்கும் போதுமானதாகவே இருக்கட்டும். அதில் ஒருவகையான மன நிறைவை கொண்டுவாருங்கள். பொருளாதாரத்தில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இருப்பது வேறு. போதும் என்ற மன நிறைவை அடைவது வேறு.

இந்நிலையில், எனக்கு இருப்பது போதும் என்ற நிலையிலும், இந்த நிலையில் இருந்து என்னை நிறைவு செய்துகொண்டு, ‘என் பிறப்பின் நோக்கத்தை அறிவதையும், பிறப்பின் கடமையை தீர்த்திடவும் யோகத்தில் இணைகிறேன்’ என்று மாற்றம் கொள்ள வேண்டும். பொதுவாகவே, யோகத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொல்லுவார்கள். அதில் 1) வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு, 2) வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவு. இந்த இரண்டில் எது அவருக்கானது என்பதை சிந்தனை செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், ஒருபோதும், சம்பாத்தியத்தை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதையும் அவருக்கு விளக்குங்கள். அவர் அதில் நிறைவு பெறும் வரை, போதும் என்ற மனநிலை வரும்வரை பொருளாதாரத்திலும், சம்பாத்தியத்திலும் தொடரட்டும். அதுதான் அவருக்கு நன்மையுமாகும்.

இந்த உலகில் வாழும், ஓவ்வொரு மனிதனும், தன்னுடைய வேலை, வியாபாரம், தொழில் என்ற வகையில், பொருளாதார உயர்வை பெற்றே ஆகவேண்டும். தானும் உயர்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் வகையிலும் மாற்றத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். பிறரை உடலாலும், மனதாலும் வருத்தம் செய்யாத அளவில் தன்னளவில், பொருளாதார உயர்வை பெறவும் வேண்டும். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, இந்த அளவிலான பொருளாதார உயர்வு எனக்கு போதும் என்ற நிறைவை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விளக்கம் பெறாமல் யோகத்தில் இணைவதை தவிர்க்கலாம்.

என்ன இப்படி சொல்லுகிறீர்கள்? ஒரு யோகி இப்படி சொல்லலாமா? என்று கேட்பீர்கள். வேதாத்திரி மகரிஷியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். இதில் என் கருத்தாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒருவேளை, இயல்பாகவே, தானகவே, யோகத்தில் இணைந்திட வாய்ப்பு கிடைத்தால், கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. எதுவும் குழப்பம் அடையப்போவதும் இல்லை. வழக்கமான உங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகிடாமல், யோகத்தையும் தொடரலாம். நன்மையும் அடையலாம். இதனால் அதுவும், அதனால் இதுவும் கைவிட்டு போய்விடுவதில்லை. நிச்சயமாக, பொருளாதார நிறைவு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், யோகத்திலும் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள் என்பது உண்மையே. இதற்குச் சான்றாக நிறைய அன்பர்களும் இருக்கிறார்கள். சரிதானே?

மறுபடியும் நினைவுறுத்துகிறேன், பொருளாதார நிலையை, வாய்ப்புக்களை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை. அதுபோலவே பொருளாதார நிலையும், வாய்ப்பும் மட்டுமே அவசியம் என்று யோகத்தை கைவிட வேண்டியதும் இல்லை.

இந்த விளக்கத்தை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். நேரடியாக அவரை, இந்த பதிவை படிக்கச்செய்யுங்கள். தானாக உண்மை விளங்கிக் கொள்வார். சில நாட்கள் சிந்தனை செய்தார் எனில், நல்ல விளக்கமும் அவருக்கு கிடைக்கும். அதன்வழியில், அவருக்கு விருப்பமானதை தொடர ஆயத்தமாவார். உங்களுக்கும் ஒருவரை நன்வழிக்கு கொண்டுவந்த திருப்தியும் கிடைத்துவிடும் அல்லவா?

வாழ்க வளமுடன்.

-

At the end of the Vethathiriya meditation, instead of saying Om Shanti three times, it is a bit difficult to say Amaiti or peace. I don't think there's really peace there. Is it right to change it like this without saying Om Shanti? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவத்தின் முடிவில், ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்லுவதற்குப் பதிலாக, அமைதி என்று சொல்லுவது, சற்று நெருடலாக இருக்கிறது. உண்மையிலேயே அங்கே அமைதி வரவில்லை என்று கருதுகிறேன். ஓம் சாந்தி என்று சொல்லாமல் இப்படி மாற்றுவது சரிதானா? விளக்குக.


நீங்கள் வேதாத்திரி மகரிசியின் காலத்து வேதாத்திரிய அன்பர் என்று கருதுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்து கொண்டது 2006ம் ஆண்டில் தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே, ஓம் ஷாந்தி, அமைதியாக மாறிட்டது. இந்த மாற்றத்தற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்று நமக்குத் தெரியாது. எனினும், இந்திய அரசும், அரசியலமைப்பும், மக்களும், மதம் சார்ந்த அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே, தனித்த நிலையில் ‘அமைதி’ என்று மற்றம் செய்யப்பட்டது.

இதில் வேதாத்திரி மகரிஷிக்கு ஏற்பு உண்டா? என்றால் இல்லை என்றுதான் கருத இடமிருக்கிறது. காரணம், வேதாத்திரியம் என்பதே எந்த எல்லைக்குள்ளும் சிக்கிடாத தன்மை கொண்டது. ஆண் பெண் என்ற பேதம் கூட அதற்கு இல்லை என்பதுதான் நிச்சயமான உண்மை. அப்படி இருக்கும் நிலையில், ஓம் ஷாந்தி என்பது மதரீதியாக இருக்கிறது என்பது, புரிந்து கொள்ளாத தன்மை. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் உருவாகாமல இருக்க, மாற்றித்தானே ஆகவேண்டும்? அதனால் மாற்றப்பட்டுவிட்டது.

உங்களுக்கும் எனக்கும் ‘அமைதி’ என்று சொன்னால், அந்த வார்த்தை அமைதியை தருவதில்லை என்பது நிஜமே. ஏனென்றால், ஓம் ஷாந்தி என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால் கடந்த இரு தசாம்ச ஆண்டுகளாக, வேதாத்திரியம் பழகுவோரும், கற்பிக்கும் ஆசிரியரும், ‘அமைதி’ என்று சொல்லித்தான் அமைதியை நிலை நாட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. ஒரே நல்லது என்னவென்றால், இனிமேல் யாரும் ‘ஓம் ஷாந்தி’ என்று சொல்லி தவத்தை முடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தவில்லை. அந்த வகையில் விரும்புவோர் ‘ஓம் ஷாந்தி’ என்றும் சொல்லலாம். ‘அமைதி’ என்றும் சொல்லலாம். நீங்கள் கேட்ட இதே கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே ஒரு அன்பர் கேட்டுள்ளார். அந்த பதிவை இப்பொழுது உங்களுக்காக பகிர்கின்றேன்.  இந்த பதில் வழியாக, நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவரும் என்பது உண்மை. இதோ!

-

கேள்வி: சுவாமிஜி! உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

மகரிஷியின் பதில்: “ஓம்” என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கேத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று. அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க மௌனம் என்ற குணத்தை வைத்து மாத்திரைக் குறைவான “ம்” என்ற மகர மெய்யைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம். அதனுடன் சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலாதாரத்தில் எழுந்து, துரியத்தில் முடியும் உயிர் எழுத்தாக வருவது “ஓ” என்ற சப்தம் தான். “ஓ” என்ற சப்தத்துடன் “ம்” என்ற மகர ஒற்றை இணைத்து “ஓம்” என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது. இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். “ஓம் சாந்தி” என்று தவ முடிவில் கூறுவது நாம் எல்லோரும் இறையருளான அமைதி பெறுவோம் என்பதேயாகும். விருப்பப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தைகளைக் கூறாமல் விட்டு விடட்டுமே.

அப்படி விட்டுவிட்டால் அதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் ஏற்பட்டு உலக சமுதாயம் என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது தவமுறையில் ஒரே சீரானமுறை (Uniformity) போய்விடும்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

-

வாழ்க வளமுடன்!

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்