CJ for You: chance

chance

Showing posts with label chance. Show all posts
Showing posts with label chance. Show all posts

Time is wasted in the economy to satisfy its own needs. Where do I join yoga, get Kundalini initiation and get true explanation? Very confusing. Is this why they ask me that I am not interested in yoga? What is your response to them?


வாழ்க வளமுடன் ஐயா, பொருளாதாரத்தில் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்திடவே காலம் வீணாகி விடுகிறது. இதில் நான் எங்கே யோகத்தில் இணைந்து, குண்டலினி தீட்சை பெற்று, உண்மை விளக்கம் பெறுவது? மிகவும் குழப்பமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கு யோகத்தில் ஆர்வம் இல்லை என்று கேட்கிறார்களே? அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?


அவர் சொல்லுவது உண்மைதான். பக்தியில் இருக்கும் மனிதர், அதிலிருக்கும் உண்மை தத்துவங்களை அறிந்திட நினைத்தால், அவர் யோகத்திற்கு வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒரு சிலருக்கு, யோகத்தில் தானாகவே ஆர்வம் வந்துவிடும். அதற்கு காரணமாக இருப்பது, அவருடைய மூதாதையர்கள், தாத்தா பாட்டி மற்றும் தாய் தந்தையின் ஊக்குவிப்பு. இவர்களுக்கு, தங்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், பொருளாதார வாழ்க்கையோடு போராடிக்கொண்டே யோகத்திலும் இணைந்து உயர்வார்கள்.

எனினும் ஒருவர், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பிறகுதான் யோகத்திற்கு வரவேண்டும் அல்லது வரமுடியும் என்பது தவறான கருத்து. அப்படிப்பார்த்தால், உலகில் உள்ள எல்லா பணக்காரர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் யோகத்திற்கு வந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்துவிட்டதா என்ன? இல்லைதானே?

ஆனால், ‘அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய பாமரனுக்கு யோகம் தேவையில்லை’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆமாம். அவனுக்கு ஒவ்வொருநாளும் மிகுந்த போராட்டமாகவே இருக்கும் அல்லவா? எப்படி வாழ்வது? எப்படி உணவு கிடைக்கும்? எதை சாப்பிடுவது? என்ன வேலை கிடைக்கும்? எப்போது தூங்குவேன்? என்ற சிந்தனை ஓட்டத்திலேயே இருக்கும் மனிதனுக்கு, யோகம் கற்க வாய்ப்பிருக்காது. அவன் பக்தியிலும் இருக்கமாட்டான். ஆனால், கடவுளே, என் நிலமை ஏன் இப்படி இருக்கிறது? என்று புலம்பிக்கொண்டுதான் இருப்பான். சரிதானே?

பொதுவாகவே, உலகில் வாழும் மனிதனுக்கு, பொருளாதாரம் அவசியம். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருள் பலம், அதன் உபயோகம் இல்லாமல் வாழமுடியாது. அந்த பொருளுக்காக, இன்னொரு மனிதரை சார்ந்தும் வாழமுடியாது. அப்படி சார்ந்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அது உண்மைதான், அதற்காக, தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை, சம்பாதித்துக் கொண்டே இருக்கமுடியுமா? அதுமட்டுமேதான் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? நாம், இந்த உலகில் பார்க்கின்றோமே? பலகாலம் ஓடிஓடி சம்பாதித்த பணத்தையெல்லாம், தீடீரென்று ஒருநாள், தன்னுடைய உடலில் ஏற்பட்ட நோய் தொந்தரவுகள் தீர்க்கும் மருத்துவமனைக்குத்தானே செலுத்துகிறார்?. உண்மைதானே? சிலர், தன்னுடைய சொத்துக்களையும் கரைத்துவிடுகிறார்கள். இதுபோலவே சில வழக்கு விசாரனைக்கும் தன் சம்பாத்தியத்தை வழங்கிவிடுகிறார்கள் அல்லவா?

சாரசரியான பொருளாதர உலகின் பார்வையில், பொருளாதார உயர்வை விட்டுவிட்டு, யோகத்திற்கு எப்படி வருவது? என்று உங்கள் நண்பரோ, வேறு சிலரோ கேட்பது உண்மையாகவே தோன்றும். யாருமே, பொருளாதரத்தை விட்டுவிட்டு யோகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை. நிச்சயமாக, வேதாத்திரியம் அப்படி சொன்னதே இல்லை. பொருளாதாரத்தில் நன்கு உயருங்கள். இந்த அளவில் போதும், நான் நிறைவாக இருக்கிறேன் என்ற நிலைக்கு வாருங்கள். உங்களுடைய பொருளாதாரம் பலமாக இருக்கட்டும்.  உங்கள் வாழ்நாளுக்கும் போதுமானதாகவே இருக்கட்டும். அதில் ஒருவகையான மன நிறைவை கொண்டுவாருங்கள். பொருளாதாரத்தில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இருப்பது வேறு. போதும் என்ற மன நிறைவை அடைவது வேறு.

இந்நிலையில், எனக்கு இருப்பது போதும் என்ற நிலையிலும், இந்த நிலையில் இருந்து என்னை நிறைவு செய்துகொண்டு, ‘என் பிறப்பின் நோக்கத்தை அறிவதையும், பிறப்பின் கடமையை தீர்த்திடவும் யோகத்தில் இணைகிறேன்’ என்று மாற்றம் கொள்ள வேண்டும். பொதுவாகவே, யோகத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொல்லுவார்கள். அதில் 1) வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு, 2) வாழ்க்கையில் ஏற்பட்ட நிறைவு. இந்த இரண்டில் எது அவருக்கானது என்பதை சிந்தனை செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், ஒருபோதும், சம்பாத்தியத்தை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதையும் அவருக்கு விளக்குங்கள். அவர் அதில் நிறைவு பெறும் வரை, போதும் என்ற மனநிலை வரும்வரை பொருளாதாரத்திலும், சம்பாத்தியத்திலும் தொடரட்டும். அதுதான் அவருக்கு நன்மையுமாகும்.

இந்த உலகில் வாழும், ஓவ்வொரு மனிதனும், தன்னுடைய வேலை, வியாபாரம், தொழில் என்ற வகையில், பொருளாதார உயர்வை பெற்றே ஆகவேண்டும். தானும் உயர்ந்து, மற்றவர்களுக்கும் உதவும் வகையிலும் மாற்றத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். பிறரை உடலாலும், மனதாலும் வருத்தம் செய்யாத அளவில் தன்னளவில், பொருளாதார உயர்வை பெறவும் வேண்டும். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, இந்த அளவிலான பொருளாதார உயர்வு எனக்கு போதும் என்ற நிறைவை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய விளக்கம் பெறாமல் யோகத்தில் இணைவதை தவிர்க்கலாம்.

என்ன இப்படி சொல்லுகிறீர்கள்? ஒரு யோகி இப்படி சொல்லலாமா? என்று கேட்பீர்கள். வேதாத்திரி மகரிஷியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். இதில் என் கருத்தாக இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒருவேளை, இயல்பாகவே, தானகவே, யோகத்தில் இணைந்திட வாய்ப்பு கிடைத்தால், கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. எதுவும் குழப்பம் அடையப்போவதும் இல்லை. வழக்கமான உங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகிடாமல், யோகத்தையும் தொடரலாம். நன்மையும் அடையலாம். இதனால் அதுவும், அதனால் இதுவும் கைவிட்டு போய்விடுவதில்லை. நிச்சயமாக, பொருளாதார நிறைவு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், யோகத்திலும் நீங்கள் உயர்ந்திருப்பீர்கள் என்பது உண்மையே. இதற்குச் சான்றாக நிறைய அன்பர்களும் இருக்கிறார்கள். சரிதானே?

மறுபடியும் நினைவுறுத்துகிறேன், பொருளாதார நிலையை, வாய்ப்புக்களை கைவிட்டு யோகத்திற்கு வரவேண்டியதில்லை. அதுபோலவே பொருளாதார நிலையும், வாய்ப்பும் மட்டுமே அவசியம் என்று யோகத்தை கைவிட வேண்டியதும் இல்லை.

இந்த விளக்கத்தை உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். நேரடியாக அவரை, இந்த பதிவை படிக்கச்செய்யுங்கள். தானாக உண்மை விளங்கிக் கொள்வார். சில நாட்கள் சிந்தனை செய்தார் எனில், நல்ல விளக்கமும் அவருக்கு கிடைக்கும். அதன்வழியில், அவருக்கு விருப்பமானதை தொடர ஆயத்தமாவார். உங்களுக்கும் ஒருவரை நன்வழிக்கு கொண்டுவந்த திருப்தியும் கிடைத்துவிடும் அல்லவா?

வாழ்க வளமுடன்.

-

Will karma come to the person who helps the wrong man? What is the reason for this?


தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா,  தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


பதில்: 

இந்த சந்தேகம் எனக்கும், யோகத்தில் இல்லாத காலங்களில் இருந்துவந்தது. வேதாத்திரிய யோகத்திற்கு வந்த பிறகு, செயல்விளைவு தத்துவமும், இயற்கையின் விதி என்பதையும் நன்கு புரிந்து கொண்டபிறகு  அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. உண்மை கண்ட நிலையில், என்னுடைய செயல்களை நான் திருத்தி அமைத்துக் கொண்டாலும், என்னைச்சார்ந்த மற்றவர்களை அறியும் பொழுதும், சில அன்பர்களின் வாழ்க்கை கதைகளை கேட்கும் பொழுதும் ‘நான் அறிந்த உண்மையையும் மீறி’ வருத்தம் எழுவது உண்டு.

துன்பப்படும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே, ஏன் இப்படி நிகழ்கிறது? என்று மனம் வருத்தமடையும். ஆனால் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, இயற்கையின் ஒழுங்கமைப்பு ஒருபோது மாறாத தன்மை கொண்டது. தெய்வீக நீதிமன்றத்தின் செயல்பாடு அது என்றும் சொல்லுகிறார். யாருக்காகவும், எதற்காகவும், எக்காலத்திலும் மாற்றம் பெறாதது. இன்னும் சொல்லப்போனால் ‘தன்னையே தான் தண்டித்து, திருத்திக்கொள்ளும்’ தன்மை உடையதுதான் இறையாற்றல். அத்தகைய உயர்ந்த தன்மை கொண்டது. நம்மை சும்மா விட்டுவிடுமா?

வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், தவறு செய்தவரும், அந்த தவறுக்கு துணை நின்றவரும், வாய்ப்பு இருந்தும் தட்டிகேட்காமல் இருந்தவரும், கூடவே இருந்து அந்த தவறை திருத்தி அமைக்காதவரும், மகிழ்வாக, நிறைவாக, எப்போதும் போலவோ, அதைவிட சிறப்பாகவோ வாழ்வது போல இருக்கலாம். ஆனால் அதனால் எழுந்த கர்மா எனும் வினைப்பதிவு ‘சும்மா’விட்டுவிட்டது. இதென்னெ பயமுறுத்தல் என்கிறீர்களா? நீங்கள் செய்துதான் பாருங்களேன். அப்போது விளைவை அனுபவிக்கும் பொழுதாவது நம்புவீர்கள்தானே?!

மனிதனுக்கு மனிதன் செய்யும் பிணக்குத்தான் இன்றைய உலகின் அவலம். உதவியும் செய்யாமல், உபத்திரவும் செய்யாமல் இருந்தால் கூட போதுமானது. ஆனால், எப்படியாவது தான் வளர, முன்னேற, நன்மதிப்பு பெற என்று திட்டமிட்டு, அடுத்தவரை உடலாலும், மனதாலும் துன்பப்படுத்திக் கொண்டே வந்தால், தங்களுக்கான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை எந்த துன்பமும், வருத்தமும் இல்லாமல் இறந்துவிட்டால் கூட, அவர்களின் வாரீசுகளுக்கு அந்த சுமை வந்து சேர்ந்துவிடுமே?! இதற்கான சில உதாரணங்களை, உங்கள் வாழ்க்கையிலேயே பிறரை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் கேட்டது போல, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? என்றால், ஆம் துரத்தும். ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? ஆமாம். காரணம் என்ன? பார்க்கலாமா? உனக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கேட்காமல் இருந்தாய்? நீ அதை மாற்றியிருக்கலாம், திருத்தியிருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம், உதவி செய்திருக்கலாம் தானே? அதை ஏன் நீ செய்யவில்லை. நீ அந்த தவறுகளுக்கு கூட்டுதானே? என்று இந்த இயற்கை கேட்டு அதை பதிவு செய்துகொண்டு, தக்க காலத்தில் திருப்பி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறாயா? என்று பாடம் நடத்துகிறது. ஆனால் மனிதன் ‘இந்த இயற்கையையே மிஞ்சி விட்டதாக வெற்றி பெருமிதம்’ கொண்டு வாழ்கிறான். அந்த பெருமிதம் இன்னும் வடிந்தபாடில்லை!

வாழ்க வளமுடன்

-

Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga?


யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


பதில்:

உங்களுக்குத் தோன்றிய இக்கருத்து, யோகத்தில் தங்களை, இணைத்துக் கொண்ட எல்லோருக்குமே தோன்றும் என்பதே உண்மை. நீங்கள் வாய்திறந்து கேட்டுவிட்டீர்கள். பெரும்பாலோர் கேட்கமாட்டார்கள். தங்களுக்குள் சந்தேகத்தோடு இருப்பார்கள். யோகத்தில் ஆர்வம் வருவதும், அதில் தங்களை இணைத்துக்கொள்வதும், குருவின் வழியாக தீட்சை பெற்று, குண்டலினி சக்தியை உயர்த்திக்கொண்டு தியானம் பழகுவதும் மிக எளிதானதல்ல. பலப்பல பிறவிகளின் வழியாக நாம் இழந்த ஒன்றை, இந்தப்பிறவியில் பெரும்பேறாக அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அத்தகைய உண்மையை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.

காரணம் என்ன? இதற்கு முன்னதாக நாம் வாழ்ந்துவந்த நிலைகளிலும், அதில் கிடைத்த அனுபவங்களிலும் மனம் ஒன்றி அனுபவித்துவிட்டோம். அதனால் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதான ஒன்றாக கருதுகிறோம். அவசியமில்லாததோ? என்றும் சந்தேகப்பட்டு விடுகிறோம்.

வல்லூறு என்ற ஒரு பறவை இருக்கிறது. கழுகு என்ற பறவை இனத்தைச் சேர்ந்தாலும் அது கழுகைவிடவும் விட மிக பெரிதாக இருக்கும். கழுகு என்ற இனத்தில்  ‘கருடன்’ என்பது உண்டு, அதுவும் வேறுவகையானதே. இந்த வல்லூறுக்கு மிக நீண்ட இறக்கைகள் இருக்கும். எட்டுஅடி நீளம் கொண்டவை உண்டு என்கிறார்கள். மிக தீர்க்கமான பார்வை, வேகம், தன்னைவிட பெரும் எடையை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் பறக்கும் தன்மை கொண்டது. சரி, இதை ஏன் இங்கே சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா? வாருங்கள், மேலும் பார்க்கலாம்.

அத்தகைய வல்லூறுக் குஞ்சொன்று அடிபட்டு சாலையில் விழுந்துகிடந்தது. அதை பறவைகளின் ஆர்வலர், வனத்துறையிடம் கொடுத்துவிட்டார். அவர்கள், அந்த வல்லூறுக் குஞ்சை கவனமாக மருந்துகள் கொடுத்து, அதன் காயத்தை ஆற்றி, சிதைந்து போயிருந்த சிறகுகளை வெட்டி ஒழுங்கு படுத்தி, கூண்டுக்குள் வைத்து காத்துவந்தனர். வேட்டையாடும் பழக்கமுள்ள இனம் இந்த வல்லூறு, ஆனால் கூண்டுக்குள் உணவைக் கொடுத்து வளர்த்தனர். நாளடைவில் அது குணமடைந்துவிட்டது. வளர்ந்தும் விட்டது. அதன் இயல்பில் அவர்களை அலகால் கொத்தவும், தாக்கிடவும் செய்கிறது. இப்போது அதற்கு கூண்டு பொருந்தவில்லை. அவ்வளவு பெரிதாகவும் ஆகிவிட்டது. 

வனக்காவலர்கள் திட்டமிட்டு, அதை மலைக்காடுகளில் விட்டுவிட முடிவு செய்தனர். அடர்ந்த அந்த மலைக்காட்டின் உச்சியில் கொண்டு சென்று, முகத்திலும் கைகளிலும் உறை போட்டுக்கொண்டு கவனமாக, அக்கூண்டை திறந்துவிட்டனர். அந்த வல்லூறு, தன் கூண்டைவிட்டு கொஞ்சம் கூட நகரவே இல்லை. வனக்காவலர்கள் சிறிய மூங்கில் கம்புகளால் வல்லூறை கூண்டுக்கு வெளியே தள்ளுகிறார்கள். அப்படியும் நகரவில்லை. ஆனாலும் தொல்லை தாங்காதவாறு கூண்டுக்கு வெளியே வந்துவிட்டது. அது நடந்து நகர்கிறது. இறக்கைகளை விறிக்கவும் இல்லை, அது பறக்கவும் இல்லை. அதற்குப்பிறகு என்ன நடந்தது? அதை பிறகு சொல்லுகிறேன். இந்த வல்லூறின் நிலைதான் உங்களின் நிலைமை.

கூண்டில் இருந்து பழகியதால் அது கூண்டை விட்டும் நகரவில்லை, பறக்கவும் இல்லை. நீங்களும் இந்த உலக வாழ்க்கையில், மனதைக்கொண்டு வாழ்ந்து பழகிவிட்டு, உண்மையை நோக்கி யோகத்தின் வழியாக பயணிக்க தயங்குகிறீர்கள்.

மனிதனின் இயல்பும், பிறவியின் நோக்கமும் தன்னை அறிவதுதான். அதை விட்டு விலகிவிடலாமா? இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை. 

வாழ்க வளமுடன்

-



Most of people not interested on yoga and they living till end, no issues on that. correct?


யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வளமுடன் ஐயா, யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கையில் தானாகவே யோகத்திற்கு வருபவர்களும், பிறர் சொல்லி கேட்டு யோகத்திற்கு வந்து அதை கடைபிடித்து வருபவர்களும் ஒருசிலர் தான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதனால் நீங்களும் அப்படியே இருந்துவிடலாமே என்று நினைக்கிறீர்கள். சரிதானே?

அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு, நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிலிருக்கும் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். அதுதான் என்னுடைய கடமை. இந்த உலகில் நாம் அடிக்கடி பிறப்பதில்லை. ஏற்கனவே பிறந்தோமா? என்பதும் நினைவில் இல்லை, இனி எப்போதாவது பிறக்கப்போகிறோமா? என்பதும் நமக்குத் தெரியாது தானே? அப்படியானால் இருக்கின்ற இந்த வாழ்க்கையை நல்லவிதமாக, எல்லா இன்பங்களையும் பெற்று அனுபவித்து வாழ்வது நல்லதுதான். ஆனால் உண்மையாகவே அப்படி வாழ்ந்து அனுபவித்தீர்களா? அப்படி அனுபவிக்கவும் முடிகிறதா? என்ற கேள்விக்கு பதிலை சொல்லுவீர்களா?

வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்னிடமே எதிர்கேள்வியும் கேட்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை நீங்கள் ஏன் மறுக்குறீர்கள்? என்று நானும் கேள்வி கேட்பேன். அது உண்மைதானா? ஆம். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்து இருக்கிறது. அதை நானும் அனுபவித்து மகிழ்கிறேன். உங்களைப்பொறுத்தவரை, ஏதேனும் செய்தால்தான் இன்பம் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் சும்மா இருக்கும் சுகம் பற்றிய உண்மையை அறிவீர்களா? எதுவுமே செய்யாமல், இன்பத்தை தேடாமல், இன்பத்திலேயே நிறைந்து இருப்பது குறித்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?

தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதனால் என்ன பிரயோஜனம்? என்று மறுபடி என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறீர்களா? சரி, நீங்கள் பிறந்ததே அந்த உண்மையை அறிவதற்குத்தானே? அதை மறந்துவிட்டீர்களே? அந்த உண்மை அறிந்துவிட்டால், நீங்களாக இருப்பது யார்? என்ற ‘நான் யார்?’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே? அதை கிடைத்த இந்த பிறவியில் அறிந்து கொள்ளாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்வீர்களா? அது சோகம் இல்லையா? உணராமல் இறந்துவிடுவது கொடுமை தானே? இனி அந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்? முடிந்தது முடிந்ததுதான்.

எனவே சுருக்கமாக முடித்துக்கொள்ளாலாம், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யோகத்தில்’ பயணியுங்கள். உங்களோடு வராதவர்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களை முடக்கிவிடும். அதற்கு இடம்கொடுக்காமல், தொடர்ந்து பயணித்து, உண்மை விளக்கம் பெறுங்கள். குருவருள் உங்களுக்கு துணை இருக்கட்டும். நானும் உங்களை வாழ்த்து மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.

Why i need to bless someone who made suffer to me? Which purpose?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நமக்கு துன்பம் தந்த ஒருவரை வாழ்த்த சொல்லுகிறீர்களே? அதனால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது?


பதில்:

நமக்கு துன்பம் எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? நாம் செய்த தவறின் விளைவாக நேரடியாக, அப்போதே கிடைக்கும் துன்பம் ஒருவகை. நம் வாழ்வில் ஏதேனும் ஒரு நாளில் செய்து நாம் மறந்துவிட்ட செயலின் விளைவாக வரும் துன்பம் இன்னொரு வகை. நாம் எதுவுமே செய்யாமல், நம்முடைய கர்மா என்ற வினைப்பதிவின் வழியாக எழுகின்ற துன்பம் மற்றொருவகை. இதில் எது நமக்கு கிடைத்திருக்கிறது என்று உடனடியாக ஆராய்ச்சி செய்து கண்டுபடிப்பது கடினமே. என்றாலும் நம் பெறுகின்ற துன்பத்தால் நம்மிடமிருந்து ஒரு களங்கம் தீர்கிறது, வெளியேறுகிறது என்று அர்த்தம் கொள்வதுதான் சிறந்தது. அப்படியாக அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ள பழகிவிடுவது நல்லதுதான். இதெல்லாம் சாத்தியமானதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது! பிறகென்ன, அவர் செய்ததுக்கு நீங்கள் திருப்பி துன்பம் கொடுங்கள். பிறகு மீண்டும் அவர் தருவார், மறுபடியும் நீங்கள் கொடுங்கள்... இப்படியே போனால் எப்போது இது தீர்வது? சிந்தித்துப் பாருங்கள்.

நம்முடைய கர்மா என்ற வினைப்பதிவு களங்கத்தை நாம், குண்டலினி யோகத்தின் வழியாகவே தீர்க்க முடியும். அதற்கு வாய்ப்பு இல்லாதபோது, அந்த பயணத்தில் நாம் சென்று கொண்டு இருக்கும் பொழுது, நமக்கு துன்பம் தந்த ஒருவரை, நம் களங்கத்தை போக்கிட கருவியாக இருந்த அவரை வாழ்த்துகிறோம், அவ்வளவுதான். இதனால் அவருக்கு நன்மையா? நமக்கு நன்மையா? என்ற ஆராய்ச்சிக்கு இங்கே இடமில்லை. ஒருவேளை நீங்கள் அவரை வாழ்த்துவதால் இனி உங்களுக்கு அவர் துன்பம் விளைவிக்காத நிலை வரலாம் அல்லவா? எனவே, நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ள, அவர் ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார் என்று எண்ணி, அவரை வாழ்த்தலாம். அதில் எந்த தவறும் இல்லை. அப்படியான இறை நீதிக்கும் நாம் நன்றி சொல்லுகிறோம் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்.