CJ for You: at home

at home

Showing posts with label at home. Show all posts
Showing posts with label at home. Show all posts

Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!


வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


பதில்:

வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.

உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.

சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. ஒரு அடி, 12 இன்ச் அளவிற்குள்ளான விக்ரகங்களை வைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு மேல் என்றால், அதற்கான ஆகம விதிகளை கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்திகிறார்கள். எனவே, இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.

மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.

    பூஜை அறையை, அதுவேண்டும், இதுவேண்டும் என்று வேண்டுதல் அறையாக மாற்றாமல், இறைக்கு நன்றி செலுத்தும் விதமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழியிலே, பூஜை அறையில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும், இல்லத்திலும் தெய்வீகம் கமழும்.

ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.

பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.

வாழ்க வளமுடன்

-

Why does when practice meditation my body get to tremble and anxiety?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுதெல்லாம், உடல் நடுக்கமும், பதட்டமும் உருவாகிறது. நீண்ட நேரம் உட்காரவும் முடியவில்லை ஏன்?


பதில்:

தவம் இயற்றுவதற்கான பொதுவான நேரம் குறைந்தபட்சமாக 15 நிமிடம் தேவைப்படும். பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றினால் மட்டுமே அதிகபட்சமாக 45 நிமிடம் தேவைப்படுகிறது. இத்தகைய தவத்தில் அதற்கான நேரத்தை நாம் மாற்றி அமைக்கலாமா? குறைத்துக்கொள்ளலாமா என்றால் கூடாது என்பதுதான் பதிலாகும். ஏனென்றால், நம்முடைய மனதை அந்தந்த நிலைகளில், ஆதாரங்களில் செலுத்தி கவனத்தில் நிலைப்பதற்கும். மனம் பழகுவதற்கும் தகுந்த நேரம் வழங்கியே ஆகவேண்டும். சும்மா வெறுமனே, ஆக்கினை துரியம் என்று மனதையும் வார்த்தைகளையும் ஓட்டுவதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உங்களால், தவம் இயற்றும் பொழுது நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை என்றால், உங்கள் உடல் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். தவம் இயற்றுவதற்கு முன்பாக, எளியமுறை உடற்பயிற்சியை முழுதுமாக செய்துவிட்டு, பிறகுதான் தவம் என்று மாற்றிக்கொள்க. மேலும், தூக்க கலக்கத்தில் தவம் செய்யக்கூடாது. படுக்கையில் உட்கார்ந்தும் தவம் செய்வதை தவிர்க்கலாம். முக்கியமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு தவத்திற்கு செல்லுதலே நன்று. தவம் இயற்றும் நேரத்திற்கு முன்பாக நேரத்தில், உற்சாகப்படுத்தும், தேனீர், காஃபி, பழரசம் ஆகியன தவிர்த்தாக வேண்டும். அடுத்தடுத்து வரிசையாக வேலைகளை வைத்துக்கொண்டு தவம் செய்ய அமரவேண்டாமே. மேலும் உங்கள் சூழல் தவம் இயற்ற பொருத்தமானதா என்பதை நன்கு சோதனை செய்துகொள்க.

சிலருக்கு தவம் இயற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால்தான், உடல் நடுக்கமும், பதட்டமும் தோன்றும். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள தவமையங்களுக்குச் சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அப்படியாக கூட்டுத்தவத்தில் நன்கு பழகிக்கொண்ட பிறகு, தனியாக தவம் செய்தால் உடல் நடுக்கமும், பதட்டமும் வருவதற்கில்லை. இன்னும் தவம் செய்யலாமே என்ற ஆர்வமும், உற்சாகமும் பிறக்கும் என்பதே உண்மை. உடனடியாக் உங்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பியுங்கள். நலம் பெறுங்கள், தவத்தில் உயருங்கள்.

வாழ்க வளமுடன்.

Why we need to join on mass meditation in campus or center?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய பயிற்சி முடித்த பிறகும், அங்கே சென்று கூட்டுத்தவம் செய்தால்தான் தன்னையறிய வழிபிறக்குமா?


பதில்:

அப்படியில்லை, மேலும் அது கட்டாயமும் இல்லை. ஆனால் கூட்டுத்தவம் இயற்றும் பொழுது, எல்லோருக்கும் பொதுவான, நல்ல ஆழ்ந்த தவ நிலை அமைய வாய்ப்பு அதிகம் ஏற்படும். அதுதான் கூட்டுத்தவத்தின் சிறப்பாகும். இதற்காகவேதான் அடிக்கடி மன்றத்தொடர்பு அவசியம் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

பெரும்பாலும் நாம் பரபரப்பான உலகில் வாழ்கிறோம். விழித்தெழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை, நமக்கான உலக கடமைகள் வரிசையாக இருக்கிறது. இதையெல்லாம் முடிப்பதற்கே நேரம் இல்லாமை. அதோடு நாம், உடலை வலுப்படுத்த காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி முடித்து தவமும் செய்யவேண்டும். இதற்கு அதிகபட்சமாக 1:30 முதல் 2:00 மணி நேரம் வரை செலவிட வேண்டும். முக்கியமாக மனம் அதில் ஈடுபடவேண்டும், விருப்பத்தோடும், முயற்சிக்க வேண்டும். அதுதானே முக்கியம்?! ஏதோ கற்றோம், செய்தோம், அடுத்த வேலைகளை பார்ப்போம் என்று கடந்துபோக முடியாது அல்லவா? 

இப்படி நேரத்தை தந்து செய்ய முடியாதவர்கள், கூட்டுத்தவம் செய்துவந்தால், அவர்களுக்கு உயர்வும் கிடைக்கும். தானாக அதை செய்வதற்கு ஆர்வமும், வழியும் கூட கிடைக்கும். ஏதோ வாரம் ஒருநாள் கூட்டுத்தவம் செய்துவந்தாலும் கூட அது உதவிடும் என்பது உண்மை.

என்றாலும், நீங்கள் உங்கள் வீட்டிலே, இருக்கும் இடத்திலேயே வேதாத்திரிய பயிற்சிகளை செய்துவருவதே நல்லது. அதுதான் உங்கள் மனதை, உடலை வெகு சீக்கிரமாக பழக்கப்படுத்தும் வழியாகும். ஒரு செய்யமுடியாமல் போனாலும்கூட, இனிமேல் இப்படி தவற மாட்டேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு, தினக்கடமையாக ‘அதிகாலை, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவமும் செய்து முடித்துத்தான் அடுத்த வேலைகளை தொடர்வேன்’ என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாற்றம் தானாக நிகழும். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தால், கூட்டுத்தவத்தில் கலந்து கொள்ள மறவாதீர்கள்!

வாழ்க வளமுடன்!