CJ for You: dyan

dyan

Showing posts with label dyan. Show all posts
Showing posts with label dyan. Show all posts

Keep mind calm, no need meditation. Is it correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது உதவுமா? அது உண்மையா?!


பதில்: 

தவம் தியானம் தேவையில்லை என்பது உதவிடாது. அது தவறான கருத்தே ஆகும். மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும் என்பது மட்டுமே சரி. அந்த மனம் எப்படி இயல்பாக இருக்கும்? இருக்கமுடியும்? காலம்காலமாக அது தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டேதானே இருக்கிறது! நாம் எப்பொழுதும் அதனோடுதான் கலந்து இருக்கிறோம். அந்த மனதின் வழியாகவே செயல்படுகிறோம். இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பங்களால் வருந்துகிறோம். திட்டமிடுகிறோம், தவறை திருத்த முயற்சிக்கிறோம் இப்படியாக எல்லாமே மனதின் வழியாகத்தானே நிகழ்கிறது. அப்படியான மனதை இயல்பாக வைக்க உதவும் ஒரு பயிற்சிதான் தவம் தியானம் ஆகும்.

தீடீரென்று நீங்கள் முடிவு செய்து ‘மனமே சும்மா இரு’ என்று சொல்லிவிட்டால் சும்மா இருந்திடுமா? இனி இயல்பாக மனதை வைத்திருப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், மனம் அதன்படி நடந்திடுமா? உங்கள் கட்டளைக்கும், வார்த்தைக்கும், செயல்பாட்டுக்கும் அடிபணிவதாகவா உங்கள் மனம் இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் மனம் விரும்பும்படி நடக்கிறீர்களா? அல்லது மனம் உங்கள் விருப்பத்தின் படி நடக்கிறதா? என்று கேள்விகேட்டால் என்ன பதில் தருவீர்கள்? 

தவம் தியானம் வழியாக, நாம் நம்முடைய செயல்பாட்டை, சிந்தனைகளை, எண்ணங்களை ஒழுங்கு செய்து, புலன்களை கட்டுப்பாடாக வைத்திருந்து, மனதை கவனிக்கிறோம் என்பதே உண்மை. மனம் தன்னையே கவனிக்கிறது என்பது கூட இங்கே உண்மைதான். அப்படியாக, மனதிற்கு தரப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிதான் தவம் தியானம். எனவே அது இல்லாமல், மனதை வெறுமனே சும்மா இரு, இயல்பாக இரு என்று இருக்கவைத்தால் இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது பேசுவதற்கும், சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், செயல்பாட்டிற்கு வராது! இல்லை ஐயா, இதை உலகெங்கும் கடைபிடிக்கிறார்கள், அனுபவசாலிகள் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் தொடருங்கள், சிறிதளவு மாற்றம் பெறுவதற்குக் கூட பல ஆண்டுக்காலம் ஆகலாம். அத்தகைய வலிமை படைத்தது நம் மனம்! 

வாழ்க வளமுடன்.

Why we need to join on mass meditation in campus or center?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய பயிற்சி முடித்த பிறகும், அங்கே சென்று கூட்டுத்தவம் செய்தால்தான் தன்னையறிய வழிபிறக்குமா?


பதில்:

அப்படியில்லை, மேலும் அது கட்டாயமும் இல்லை. ஆனால் கூட்டுத்தவம் இயற்றும் பொழுது, எல்லோருக்கும் பொதுவான, நல்ல ஆழ்ந்த தவ நிலை அமைய வாய்ப்பு அதிகம் ஏற்படும். அதுதான் கூட்டுத்தவத்தின் சிறப்பாகும். இதற்காகவேதான் அடிக்கடி மன்றத்தொடர்பு அவசியம் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

பெரும்பாலும் நாம் பரபரப்பான உலகில் வாழ்கிறோம். விழித்தெழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை, நமக்கான உலக கடமைகள் வரிசையாக இருக்கிறது. இதையெல்லாம் முடிப்பதற்கே நேரம் இல்லாமை. அதோடு நாம், உடலை வலுப்படுத்த காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி முடித்து தவமும் செய்யவேண்டும். இதற்கு அதிகபட்சமாக 1:30 முதல் 2:00 மணி நேரம் வரை செலவிட வேண்டும். முக்கியமாக மனம் அதில் ஈடுபடவேண்டும், விருப்பத்தோடும், முயற்சிக்க வேண்டும். அதுதானே முக்கியம்?! ஏதோ கற்றோம், செய்தோம், அடுத்த வேலைகளை பார்ப்போம் என்று கடந்துபோக முடியாது அல்லவா? 

இப்படி நேரத்தை தந்து செய்ய முடியாதவர்கள், கூட்டுத்தவம் செய்துவந்தால், அவர்களுக்கு உயர்வும் கிடைக்கும். தானாக அதை செய்வதற்கு ஆர்வமும், வழியும் கூட கிடைக்கும். ஏதோ வாரம் ஒருநாள் கூட்டுத்தவம் செய்துவந்தாலும் கூட அது உதவிடும் என்பது உண்மை.

என்றாலும், நீங்கள் உங்கள் வீட்டிலே, இருக்கும் இடத்திலேயே வேதாத்திரிய பயிற்சிகளை செய்துவருவதே நல்லது. அதுதான் உங்கள் மனதை, உடலை வெகு சீக்கிரமாக பழக்கப்படுத்தும் வழியாகும். ஒரு செய்யமுடியாமல் போனாலும்கூட, இனிமேல் இப்படி தவற மாட்டேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு, தினக்கடமையாக ‘அதிகாலை, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவமும் செய்து முடித்துத்தான் அடுத்த வேலைகளை தொடர்வேன்’ என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாற்றம் தானாக நிகழும். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தால், கூட்டுத்தவத்தில் கலந்து கொள்ள மறவாதீர்கள்!

வாழ்க வளமுடன்!

Why I am not interested to yoga meditation practice? How I can change it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவம் செய்வதற்கான ஆர்வமே இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? எப்படி திருத்திக்கொள்ளலாம்?!


பதில்:

ஆரம்பகாலத்தில், அதாவது வேதாத்திரிய அடிப்படை பயிற்சி கற்றுக்கொண்ட காலத்தில் அப்படித்தோன்றுவது இயல்புதான். பதினைந்து நாட்களில் நாம் கற்றுக்கொள்ளும் பயிற்சிகள் உடனடியாக நம்மை மாற்றிவிடும் என்று எப்படி நம்பமுடியும்? நாமெல்லாம் எவ்வளவு பெரிய கில்லாடிகள். அப்படியெல்லாம் மாற்றிக்கொள்வோமா? நம்மை அசைக்க முடியாது அல்லவா?

உண்மை என்ன என்றால், நாம் இதுநாள் வரை வாழ்ந்துவந்த நாட்களில், யோகத்திற்கு இடம் அளிக்கவே இல்லை. பக்தியோடும், பக்தி இல்லாமலும் சாமி கும்பிட்டு வந்தோமே தவிர அதன் உண்மை அறிய முயற்சிக்கவில்லை. கோவில், குளமென்று சுற்றி, மலை ஏறி இறங்கினோமே தவிர அதிலும் உண்மை என்ன என்று அறியவில்லை. ஆனால் தொடர்ந்து பலகாலமாக அதை செய்துவந்தோம். அப்படியான பழக்கம் உடனடியாக நம்மைவிட்டு போய்விடுமா? அது கொஞ்சம் கொஞ்சமாகத்தானே விலகும். இதற்கிடையில், யாரோ ஒரு சிலருக்கு, வேதாத்திரியத்தையே விட்டுவிடலாமே என்று கூட தோன்றிவிடும். அப்படியும் சிலர் விட்டுவிட்டு வேறெதோ, வாசி யோகம், சித்தர் யோகம் என்று பயில போய்விட்டார்கள். சரி அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதுதானே?! நாம் என்ன செய்யமுடியும்?

இப்போது உங்கள் பிரச்சனையும் அதுதான். ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, வழக்கப் பழக்கங்களின் தாக்கம் இன்னமும் உங்களை விட்டு விலகிவிடவில்லை. அதனால், எதற்கடா, இந்த தவமும் யோகமும்?! என்று உங்களை, உங்கள் மனமே குழப்புகிறது.

இதற்கு சரியான வழி என்ன தெரியுமா? உங்களை நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். யாரோ சொல்லித்தான் இந்த யோகமும் தவமும் கற்றேனா? இல்லையென்றால் எனக்கே ஆர்வம் வந்து கற்றுக்கொண்டேனா? இதற்கு தகுந்த நேரம், இடம், சூழ்நிலை இருக்கிறதா? இதனால் என்னுடைய வழக்கமான வேலை பாதிப்படைகிறதா? யாருக்காவது தொந்தரவாக இருக்கிறதா? இதனால் என்னுடைய நட்பு வட்டம் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா? என் வீட்டில் எதிர்க்கிறார்களா? ஏற்கிறார்களா? என் வாழ்க்கத்துணைக்கு பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? இதை செய்யும் பொழுது வேறுவேலை தடங்கல் ஆகிறதா? அடுத்து முக்கியமான வேலை இருக்கிறதா? வீம்பாக இதை செய்கிறேனா? எதிர்பார்ப்போடு செய்கிறேனா? என்ற இந்த கேள்விக்கெல்லாம் பதில் என்ன என்று கண்டுபிடித்து, ஒரு வெள்ளைத்தாளில் பதிலை எழுதிவைத்துக்கொண்டு ஆராய்ந்து சிந்தனை செய்யுங்கள்.

அந்த பதிலின் வழியாக, உங்கள் நிலை உங்களுக்கே புரியவரும், அதன்படி நீங்கள் வேதாத்திரிய யோகத்தை தொடரலாம். உங்கள் ஆர்வமும் கூடிவரும் என்பது உண்மை. அதன்வழியே நன்மை விளையும்.

வாழ்க வளமுடன்.


Why i not interested in yoga and no one do not follow this then why me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது? பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும்?


பதில்:

தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது போலவும் பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு, இந்த உலகில் மனோநிலை மாறிவிட்டது என்பது உண்மைதான். காரணம், மனிதன், தன்னையும், தன்னுடைய ஆதாரமூலம் எது? என்பதையும் ஆராயக்கூடிய நிலையில் இருந்து விலகிவிட்டான். அவனுக்கு, இந்த உலகில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் இவற்றில் கவனம் கொண்டு வாழ்வதற்கு பழகிவிட்டான். வாழும் வரை இதுவே போதும் என்ற நிலைக்கும் நிறைந்துவிட்டான்.

பிறந்த குழந்தைகூட இயல்பான நிலையில் வளர்கிறதா? என்பதை நீங்கள் பார்த்து பரிசோதிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளையே கவனிக்கலாம். மூன்று வயது வரைதான் அந்த குழந்தைத்தனம் என்ற இயற்கையோடு ஒன்றிய செயல்பாடு இருக்கும், மூன்றுவயதை தாண்டிவிட்டால், குழந்தைகளும் பெரியவர்களோடு போட்டிபோட பழகிவிடுகிறார்கள். பெரியவர்களையே அடக்கிடவும் பழகிவிடுகிறார்கள். இயற்கை குறித்து ஏட்டளவில் தான் உள்ளது, தன்னைப்பற்றிய அறிவும் அங்கே இல்லை. நான் யார்? என்ற தேடலுக்கும் இங்கே இடமில்லை. இயற்கையை மதிப்பதும் இல்லை, இறைநம்பிக்கையும் இல்லை. இதனால் பக்தியும், யோகமும் அவசியமற்று போய்விட்டது. செயல் விளைவு குறித்து அக்கறை இருந்தாலும், கர்மா என்ற வினைப்பதிவு குறித்தும் விளக்கமில்லை. இதனால் ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம், போய்ச்சேருவோம், இதுதான் மனித இயல்பும், வாழ்க்கையும் என்று வாழப்பழகிவிட்டார்கள்.

ஆனால், நாம், நமக்கு நம் முன்னோர்களால் ஏற்பட்ட உந்துதலால், துன்பம் தீர்க்கவும், தன்னை அறியவும், இயற்கையை உணரவும், இறையுணர்வு பெறவும் ஆர்வம் கொண்டு யோகத்தில் இணைந்திருக்கிறோம். அதை நினைவில் கொண்டு, மற்றவர்களை பார்க்காமல், அவர்களை அவர்கள்போக்கில் விட்டுவிட்டு, உங்கள் பாதையை மாற்றாமல், யோகத்தில் பயணியுங்கள். உண்மை உணர்ந்து, நிறைவான, முழுமையான மகிழ்ச்சியான உலக வாழ்க்கை வாழலாம். அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். வாழும் வாழ்வில் உயரலாம். மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கலாம். சமூகம் மதிக்கும் உயர் நிலையும் அடையலாம்.

வாழ்க வளமுடன். 


Let's Give Up to Guru - Part 02


 குருவை சரணடைவோம் - பாகம் 02


கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும்.  வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.


கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!

இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம். 


குருவை தேடும் காலம் எது?

ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள். 

கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.


நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை

அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும். 


அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!

எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. 

உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.

உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே.  வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம். 

வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 01


 குருவை சரணடைவோம் - பாகம் 01


உலகின் சிறப்பு என்ன?

இந்த உலகின் சிறப்பே, நேற்றிருந்தோர் இன்றில்லை என்பதே என்றார் அய்யன் திருவள்ளுவர். ஒரு மனிதனின் வாழ்க்கை, சாராசரியாக அறுபது ஆண்டுக்காலம் என்று வைத்துக்கொண்டால். அந்த ஆண்டுகளில் இறை உணர்வு பெற்று, உண்மை விளக்கத்தோடு பிறப்பின் கடமையை முடித்துவிட முடிகிறதா என்றால், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. ஒரு சிலருக்கே நிகழ்கிறது என்பதும் உண்மை.


வாழும்காலம் போதவில்லையே?!

பெரும்பாலான மனிதர்களுக்கு, தான் பிறந்த குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை தீர்க்கவே முழுகாலமும் செலவாகிறது. சிலருக்கு கல்வி கிடைப்பதில்லை, சிலருக்கு வேலை கிடைப்பதில்லை, வேலையும் தொழிலும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் கெட்ட நட்புக்கள், வழக்க பழக்கங்கள் இவற்றில் சிக்கி திசை மாறுதல் நடந்துவிடுகிறது. தன் தவறுகளால் சிக்கிக்கொள்ளுதல், தானாக, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைதல் உண்டு. சிலர், எதிர்கால பயம், குழப்பம் இவற்றால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கின்றனர். சிலருக்கு தீடீரென வரும் நோய் அவற்றால் முடக்கம் அல்லது நோய்தொற்று இவற்றாலும் வாழ்க்கை பாதிக்கிறது. இப்படியாக வாழ்க்கையை முழுமையாக வாழக்கூட வழியில்லை.

இத்தகைய சூழலில், பிறப்பின் கடமையாக, தன்னை அறிதல், இறை உணர்தலுக்கு ஏது வழி? என்றுதான் பொதுவாக தோன்றும். உண்மையாகவே, இத்தனை குழப்பங்கள் உங்களை சூழ்வதே இறையாற்றலின் விளைவால்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த புவியில் உங்களின் பிறப்பு நீங்கள் கேட்டு வாங்கவில்லையே? அது உண்மைதானே? அப்படியென்றால் உங்கள் பிறப்பின் உள் அர்த்தம், உண்மை என்னவாக இருக்கும்? 


உங்கள் பிறப்பின் ரகசியம்!

என்னையா இது? ஆண் பெண் சேர்ந்தால் ஒரு குழந்தை பிறக்காதா? என்று கேட்பீர்கள். எல்லா சேர்க்கையிலும் குழந்தை என்றால் இப்புவி தாங்காது. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம், வினைப்பயனே ஆகும். கர்மா என்று வடமொழியில் சொல்வார்களே அதுவே. அவ்வினைகளை தீர்க்க, புதிய அவதாரமாகவே ஒரு குழந்தை இந்தபுவியில் பிறக்கிறது. ஏன் தீர்க்க வேண்டும்? அப்போதுதான் உங்கள் பிறவி முழுமை அடையும். பிறப்பது யார் என்பதும் தெரியும். ஆதிகால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை தன் வாழ்க்கையை, திசைமாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கிறான், தன் இலக்கை எதுவென்று தீர்மானிக்காமல்.


வழிகாட்ட வந்தவர்கள்!

அந்த இலக்கை சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள் சொல்லிச்சென்றார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறையும் ஞானிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பக்தி மார்க்கம் வணிகமாகி, வாழ்க்கையை சிறப்பிக்காத நிலையிலும், அதை விட்டு விலகினால், இறையின் சாபம் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். யோகமார்க்கத்தை விட பக்தி மார்க்கம் எளிதாக இருக்கிறது. ஏதோ மனிதனால் ஆன, வழிபாடு, பூஜை, படையல், தேங்காய் உடைத்தல், பொங்கல் படைத்தல், அம்மாவாசைக்கு பிண்டம் வைத்தல் என்று சுலபமாக செய்யமுடிகிறது, இது போதாதா? இறைவனையும், முன்னோர்களையும் குளிர்விக்க! இதெல்லாம் இந்து மதத்தில் மட்டுமா என்ன? எல்லா மதங்களிலும் கடவுளை குளிர்வித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

 எத்தனையோ ஞானிகள் சொன்னாலும், வழி நடத்தினாலும்,  இவன் கேட்டபாடில்லை. நான் வாழப்பிறந்தேன், உண்ணப்பிறந்தேன், அனுபவிக்கப்பிறந்தேன் என்றே சொல்லிச்சொல்லி வாழ்க்கை சூழலில் சிக்கி சிதறடிக்கப்படுகிறார்கள். 

சரி கர்மா என்பது என்ன? அது என்ன தலைவிதியா அல்லது தலைஎழுத்தா? அடுத்த பதிவில் காண்போம். 

வாழ்க வளமுடன்.


Note: அடுத்த பதிவில் தொடர்கிறது


Athma Goes to


 ஆத்மா எங்கே போகிறது?


ந்த கேள்வி குறித்து சிலர் கேட்டிருந்ததமையால், அதுகுறித்தும் சில உண்மைகளை அறியத்தருகிறேன். கடந்த பதிவுகளின் வழியாக, ஆத்மா என்பது குறித்து தொடர்ச்சியாக பார்த்திருப்பதால், இந்த பதிவும் சுலபமாக புரிந்துவிடும் என்று நம்புகிறேன். ஆத்மா என்பது நமது பிம்பம் என்று உதாரணமாக வைத்துக் கொள்வோம் எனில் நம்முடைய எண்ணங்கள், விருப்பம், வெறுப்பு, செயல்கள், கவலை, கோபம் இப்படி எல்லாமும் ஆத்மாவிலும் இருக்கும். ஆத்மா என்பது சுத்தமானது என்ற பொது கருத்துக்கு வந்துவிடக்கூடாது. நாம் எப்போதோ செய்த தவறுகளைக்கூட, நாம் மறந்திருந்தாலும் கூட, தானாகவே செயலுக்கு வந்து நம்மை ஆட்கொண்டுவிடும் தன்மை கொண்டது நம் ஆத்மா. எனவே உங்களினின் 100% முழுமையான பிரதி ஆனால் உங்களையும் இயக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


சரி, நல்ல ஆத்மா இல்லையா? கிடையாதா?

நல்ல ஆத்மா இருக்கிறது, யோக சாதனை முலமாக, தவத்தின் வழியாக, தன் சஞ்சித, பிராரப்த, ஆகாமிய (மும்மலங்கள்) (இருவினை என்று சித்தர்கள் சொல்லுவர்) கர்மங்களை, வினைப்பதிவுகளை தன் வாழ்நாளிலேயே போக்கி, இறைநிலையில் முழுமை அடைந்தவரே நல்ல ஆத்மா. அப்படியானால் வினைப்பதிகளை போக்க நாம் வாழும் இந்த பிறவிக்காலமே போதுமானது ஆகும். நாம் இந்த உலகில் பிறப்பதின் காரணமே வினைப்பதிவுகளை, போக்கிக் கொள்வதற்குத்தானே! ஆனால் பிறந்தபிறகு நாம் அதை மறந்துவிடுகிறோம்.


எனக்கு வினைப்பதிகள் இல்லை

இறை மறுப்பாளர்களும், பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. யாரோ செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பாளியா? எனவே எனக்கு வினைப்பதிவுகள் இல்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஒரு மனிதனை யாரும், இரசாயன ஆராய்ச்சி கூடங்களில், “ஒரு பொம்மைகள் போல” உருவாக்குவதில்லை. தாயும், தந்தையும் இணைந்து உறவின் மூலமாக, கருவாகி வளர்ந்து வருகிறோம். எனவே, அவர்கள் இருவரின் வினைப்பதிவுகள் நம் சொத்தாகி விடுகிறதே? கூடவே நாம் வாழும் பொழுது நாமாக சேர்த்துக் கொண்ட வினைப்பதிவுகள் உண்டு. இந்த விதை, நல்ல மாங்கனிகளை கொடுத்த மரத்தின் விதை என்ற எதிர்பார்ப்போடுதானே விதைக்கிறோம். அப்படியென்றால், மாங்கனியின் தன்மை விதையில் உள்ளடக்கமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே நமக்குள் வினைப்பதிவுகள் உண்டு.


வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை

இந்த உலகில், நமக்கு எப்படி வாழப்பிடிக்குமோ அப்படியே வாழ்ந்து, நினைத்ததை சாதித்து, நேர்மையாகவோ, பக்திமார்க்கமாகவோ, இறைமறுப்புடனோ, பகுத்தறிவுடனோ, இயற்கையை மதித்தோ, அவமதித்தோ, பொய், சூது, களவு, கொலை, செய்தும்கூட, மத, இன, ஜாதி பேதம் காட்டி சக மனிதர்களை, இயற்கை வளம், சமூகம், அரசியல் எல்லாம் கெடுத்து, நான் சுத்தமானவன், என்னிடம் தவறே இல்லை என்று இப்படி சொல்லித்தான் வாழ்ந்து, ஒரு நாள் செத்தும்போகிறோம். வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை. நமக்கும் தெரியவில்லை. யாரும் சொன்னாலும் தெரிந்துகொள்வதில்லை. அதுகுறித்து ஆர்வம் கொண்டதும் இல்லை. நிதம் தேடிச்சோறு தின்று, கை நிறைய, அலமாரி நிறைய, தேவைக்கு மீறிய காசும், ஒருத்தருக்கும் கடனோ, அன்பளிப்போ கொடுக்காது சேர்த்து,  நோய்பட்டு, மருத்துவத்திற்கே செலவு செய்து, கிழடுதட்டிப்போய், முரட்டு கௌரவத்தோடு, இன்னும் வாழ முடியவில்லையே, சுகம் அனுபவிக்கவில்லையே, காசு சேர்க்கவில்லையே, இப்படி ஆகிவிட்டதே எனும் வருத்தத்தோடு, செத்துவிடுவோம். நம் உடல் மண்ணோடு மண்ணாகவோ, மாநகராட்சி மின் மயானத்தில் சாம்பலாகவோ மாறிவிடும். ஆனால் நம்முடைய வினைப்பதிவுகளும், அதை தாங்கி நிற்கக்கூடிய ஆத்மாவும் (நாம் தான்) அப்படியே இருக்கும். அதாவது நம் வினைப்பதிவுகள் தீர்ந்து நாம் முழுமை அடையும் வரை.


வினைத் தீர்க்க வழி ஏது?

செத்தாகிவிட்டது. அமைதியாக இருந்தால் ஆத்மா, ஆர்ப்பாட்டமாய் இருந்தால் ஆவி. 

ஆட்டத்தில் அவுட் ஆனதுப்போல, வினைப்பதிவு தீர்க்க வந்த வாழ்வில், அதை தீர்க்காமலேயே வாழ்வு முடிந்துபோனது. இருந்த உடலும் இல்லை. ஆனால் வினைப்பதிவு சுமையால் “ஆத்மா” இயற்கையோடு ஒன்ற முடியாது. அது இயற்கையின் வினை விளைவு நீதியாகும். இப்போது உடல் வேண்டுமே? என்ன செய்வது?


இப்படி உடலுமில்லாத, குடலுமில்லாத ஆத்மாவுக்குத்தான், மகனோ, பேரனோ பணம் செலவு செய்து, விற்பனர்கள் மூலமாக பிண்டம் வைத்து, சாந்தி அளிக்கிறார்கள்.


இயற்கை, ஆத்மாவுக்கு உதவுகிறது

ஆனால் இங்கேதான் இயற்கையே, ஆத்ம சாந்தி அடைய, அந்த ஆத்மாவிற்கு உதவி செய்கிறது. அவ்வழியில் ஆத்மா, தனக்கு விருப்பமானவர்களோடு இணைகிறது. தன்னை பகிர்ந்து கொள்கிறது. தன்னுடைய வாழ்க்கை துணை, மகன், மகள், பேரன், பேத்தி இப்படியாக, அவர்கள் உயிரோடு தானுமாய் ஒட்டிக்கொள்கிறது. தான் பெற்ற வினைப்பதிவுகளை, இவர் மூலமாக தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைகிறது. அந்தோ பரிதாபம், இறந்துபோனவரின் வழக்கம், பழக்கம் தானே அவர் குடும்பத்தார்க்கும் இருக்கும்?! பிறகு எப்படி வினைப்பதிவுகளை தீர்ப்பார்கள்? பத்தோடு ஒன்றாகி, பதினொன்றாக வினைப்பதிவுகளின் சுமை இன்னும் ஏறிவிடும். பிறகு?! இப்படியே தொடர்கதைதான்.


இதன் பாதிப்பு என்ன? வினைப்பதிவு இருந்தால்தான் என்னவாம்?

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், வாகன விபத்துக்கள், கூடுதல் இறப்பு, நோய், மன நிம்மதியின்மை, வேலை, தொழில் கெடுதல் ஆகியன போல, ஓவ்வொன்றாக பெற்றுக்கொண்டே வாழ்ந்து, சாகவேண்டியதுதான்.


அப்படியானால் தீர்வு?!

ஆனால், இறந்தவருக்கு, பிண்டம் வைத்து சாந்தி அளிக்காமல், தன்னோடு அந்த ஆத்மா கலந்திருக்கிறது என்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையில் தன்னையும் திருத்தி, யோக சாதனைகளில் இணைந்து, தவம், தற்சோதனைகள் மூலம் வினைப்பதிவுகளை களைந்தால், தன் தகப்பனின் வினைப்பதிவு மட்டுமல்ல, இதுநாள் வரையில் தொடர்ந்திருந்த எல்லா வினைப்பதிவுகளும், தன் வினைப்பதிவுகளும் கலந்தே தீர்ந்துவிடும். அதோடு தான் மட்டுமல்லாது, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும்.


குரு மகான், வேதாத்திரி மகரிசி அவர்களின் வேதாத்திரியத்தின் வழி இக்கட்டுரை எழுதப்பட்டது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால், இந்த WhatsApp Group வழியாக கேட்கலாம். வாழ்க வளமுடன்.




வேதாத்திரிய இறையுணர்வு


----------------

Photo Thanks to: Miguel Bruna, @mbrunacr