CJ for You: daily

daily

Showing posts with label daily. Show all posts
Showing posts with label daily. Show all posts

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 01


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 01


வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஒவ்வொரு நாளும் புதிது. இந்த ஒருநாள் என்பது, அவன் தூங்கத்தில் இருந்து விழுத்து எழுவதை சொல்லலாம். ஆர்பரித்த புயல், அடங்கி அடுத்ததாக ஒரு புதிய ஆர்பரிப்புக்கு தயாராவது போல, மனிதன் ஒருநாளில் களைத்து, சோர்ந்து, தூங்குகிறான், தூங்க முயற்சிக்கிறான். மறுநாளில் கண்விழித்து எழுகிறான். அவனுக்கான புதிய நாள் காத்திருக்கிறது. இது தினமும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், உண்மை என்ன? நொடிக்கு நொடி எதுவுமே, பழசில் இல்லை. அது தன்னில் இருக்கும் பழசை உதிர்த்துக்கொண்டே, புதிதாக மலர்ச்சியை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த பூமி, நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று, பதினைந்து லட்சம் மைல் தூரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதற்காக, இவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது என்றால், எதுவுமே புதிதாக மாறிக்கொண்டே, நிகழ்ந்துகொண்டே இருக்கையில், மனிதன், தன்னை பழசில் தான் இணைத்துக் கொண்டிருக்கிறான். அதை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, அதிலே தங்கி நிற்கிறான். பிரபஞ்சத்தின் மலர்ச்சியோடு, தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இணைத்துக் கொள்ள விரும்புவதும் இல்லை.

ஒரு மழை பொழிந்து, ஓடுகின்ற மழைநீர், ஓடி மண்ணில், ஊறி, மறைந்துபோனால் அது மிக இயல்பானது. ஆனால் எங்கேயாவது, தேங்கி நின்றால், மண்ணும், நீரும் கலந்து, மற்றொரு வளர்ச்சிக்கு ஆளாகிவிடும். நீர் தேங்குதல், சிறு பூச்சிகள், புழு, கொசு என்று பலவித உயிர்களை தோற்றுவிக்கும். பாசம் பிடித்து சிறுசெல் பூச்சிகளும் உருவாகும். மனிதர்களுக்கு ஒவ்வாத பல பிரச்சனைகள் அங்கிருந்து உருவாகும். அதுபோலவே, மனிதன் தேங்கி நின்றால், பலவித உடல், மன பிரச்சனைகளுக்குள் சிக்குகிறான்.

முதலில் மன நலம் பாதிப்பும், அதன்வழியே உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும் நிகழும், அதேவேளையில் முதலில் உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும், அதன்வழியே மன நலம் பாதிப்பும் நிகழக்கூடும். மனித நோய்களின் அடிப்படை இதுதான். இதை வருமுன் காக்கவே உடற்பயிற்சி, மனித வாழ்வின் கலாச்சாரமாக உருவானது. அன்றாட வேலைகளும் கூட, உடற்பயிற்சிக்காகவே உருவாக்கமும் செய்யப்பட்டன. உடல் உழைப்பு இல்லாத மனிதன், நோய்க்கு இடம் தருகிறான் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை தானே?

உடலுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் காற்று, வெப்பம், ரத்தம் இவற்றின் ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு ஈடாக, உடலுறுப்புக்கள் இயல்பாக, இயற்கையாக செயல்படும். இதற்கு வழியும், உறுதுணையும் தர, உடலை தகுந்த அளவில், இயக்குவதும் முக்கியம் அல்லவா? ‘நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் நான் நலமாக இருக்கவேண்டும்’ என்று நினைப்பதும், வாழ்வதும் எப்படி சரியாகும்? இந்த நிலையில்தான், வாழ்வில் உடற்பயிற்சி அவசியமாகிறது.

இப்படி மாற்றத்தை செய்யாமல், உடலில் சோர்வு, வலி, நோய் என்று வரும்பொழுதுதான், மரு உந்து என்ற மருந்து அவசியமாகிறது. உடலின் குறைபாட்டின் அடிப்படையிலே, மருந்தின் தன்மையும், வீரியமும், அளவும், எடுத்துக்கொள்ளும் காலமும் மாறுபடும். இந்த கருத்தின் மற்றொரு வகையில்தான், யோகம் என்பதும் உதவுகிறது. 

அடுத்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

வாழ்க வளமுடன்.

-

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


Is it okay by practice one meditation per day?


ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


பதில்:

வாழ்கின்ற இந்த உலகில், தனி மனிதராக இருந்தாலும், குடும்ப அமைப்பில் இருந்தாலும் அன்றாடம், பரபரப்பாக இயங்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உண்டு. எந்த வகையிலும் அதை தவிர்க்க முடியாது. சில விடுமுறை நாட்களில் கூட ஓய்வாக இருக்கமுடியாத சூழல் இருப்பதும் உண்மை. அப்படியான நிலையில்,  தவம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதும் கடினமே.

பொதுவாக ஒரு நாளில், நான்கு தவம் இயற்றுவதற்கான் வாய்ப்புக்கள் உள்ளது. 1) அதிகாலை 2) முற்பகல் 3) மாலை 4) இரவு படுக்கைக்கு முன்பாக என்று பிரித்து விருப்பமான தவங்களை செய்யலாம், இரவில், மற்ற எந்த தவங்களையும் தவிர்த்து, சாந்தி தவம் மட்டும் செய்துவருவது சிறப்பு. அப்படியில்லை என்றால், அன்றைய உறக்கம் கெடும், உடலும், மனதும் துன்புறும் என்பது உறுதி.

என்றாலும், இன்றைய சூழலில், எனக்கு தவம் செய்யவே நேரமில்லை என்று ஒதுக்கிவிட்டு, உலகோடு ஓடாமல், ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்ய முடிகிறது என்பதே சிறப்புத்தான். அதற்காக பாராட்டவும் செய்யலாம். ஆனால், நம்முடைய உடலும், மனமும் ஓடுகின்ற பரபரப்பான ஓட்டத்திற்கு அமைதி கொடுக்கவும், யோகத்தின் வழியாக நாம் உயரவும், ஒரு நாளைக்கு ஒரு தவம் மிகதாமதமாகவே உதவும். உதவாது என்று சொல்லுவதற்கு வழியில்லை. எனினும் இந்த யோக பயணம் நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். 

அதனால், வேலை நாட்கள் என்று எடுத்துக்கொண்டால், ஐந்து நாட்களுக்கு, நாளில் ஒரு தவமும், விடுமுறை நாட்களிலாவது, மூன்று முதல் நான்கு தவம் செய்வதற்கு திட்டமிட்டுக்கொள்ளுதல் சிறப்பானதாகும். அப்படியாக உங்கள் சூழலை மாற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம். இன்றே உடனடியாக திட்டமிட்டு தொடங்கிடுக. நிச்சயம் உதவிடும், மாற்றமும் வரும்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் செய்கின்ற அந்த ஒரே ஒரு தவத்தை, அருகில் உள்ள நண்பர்களோடு, தவ மையத்தில் அன்பர்களோடு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்திக் கொள்க. மிகுந்த பயன் தருவற்கு வழி உண்டாகும். மேலும் நீங்கள் வீட்டிலே அதை செய்வதாக இருந்தால், அதிகாலை என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். ஏதெனும் வகையில் அந்த அதிகாலைத் தவம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு உங்களை செயலாற்ற  வைக்கலாம் அல்லவா? அப்படி சிறப்புற உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-

Always we are suffering to find happiness in life, then how will help yoga on that?


வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


பதில்:

அப்படியானால், உங்கள் யோகப்பயணத்தின் நோக்கம் என்னவென்றால், தேடுகின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது அல்லவா? உண்மையாக இப்படி யாரேனும் உங்களுக்குச் சொன்னார்களா? நீங்களாகவே அப்படியாக நினைத்துக் கொண்டீர்களா? என்பதை யோசிக்கிறேன். பெரும்பாலான யோக அமைப்புக்கள், யோகம் செய்தால் உண்மை விளக்கம் பெறலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த உண்மை விளக்கம், பலபடிகளில் உயர்வை அளித்து, ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான விடையை அளித்து, நம்முடைய பிறவி நோக்கத்தையும், இதுநாள்வரை நாம் பெற்றுவந்த பிறவிக்கடனையும் தீர்த்து நம்மை முழுமையாக்கும் என்பதுதான் உண்மை.

இந்த யோகபயணத்தில், அவரவர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, விளக்கம் என்ற வகையில்தான் முன்னேற்றமும் கிடைக்கும். அந்த கால அளவு முறை என்பதை நாம், தீர்மானிக்க முடியாது. ஒருவருக்கு உடனே கிடைக்கலாம், இன்னொருவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். மற்றொருவருக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், யோகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உண்மை எப்படியாவது கிடைத்துவிடுகிறது என்பதுதான் நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

யோகத்தில் இணைந்து அதன்வழியாக, விளக்கம்பெற்று பயிற்சியும், தியானமும் செய்துவந்தால், மகிழ்ச்சியும் சந்தோஷமும் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியும், இதுவரை யோகம் செய்து வந்தும், அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவில்லையே? என்ற மற்றொரு கேள்வியும், உங்களுடைய கேள்வியில் இருக்கிறது எனலாம்.

ஒரு உண்மை விளக்கத்தை, இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்க்கையில் தேடிப்பெற வேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நம்மிடம் ஏற்கனவே நிலைபெற்று இருக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் பலவித தடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த தடைகளை அகற்றி, நமக்குள்ளும், நம்மைச்சுற்றிலும், இந்த உலகிலும், இந்த பிரபஞ்ச அளவிலும், எங்கும் நிறைந்துள்ள ‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’ இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதுதான் யோகத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.

‘அதுதானய்யா, கிடைக்கவில்லையே?’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. உங்கள் யோகப்பயணத்தை, எந்த தேடுதலும், நோக்கமும் இன்றி இயல்பாக தொடருங்கள். உங்களுக்கான வெற்றி இலக்கு நிச்சயமாக கிடைக்கும். அதில் சந்தேகமில்லை. வாய்ப்புக் கிடைத்தால், என்னை நேரில் சந்தித்து உண்மையறியுங்கள். உங்கள் ஆசிரியடமும் கேட்டுப் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்

-


Why does when practice meditation my body get to tremble and anxiety?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுதெல்லாம், உடல் நடுக்கமும், பதட்டமும் உருவாகிறது. நீண்ட நேரம் உட்காரவும் முடியவில்லை ஏன்?


பதில்:

தவம் இயற்றுவதற்கான பொதுவான நேரம் குறைந்தபட்சமாக 15 நிமிடம் தேவைப்படும். பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றினால் மட்டுமே அதிகபட்சமாக 45 நிமிடம் தேவைப்படுகிறது. இத்தகைய தவத்தில் அதற்கான நேரத்தை நாம் மாற்றி அமைக்கலாமா? குறைத்துக்கொள்ளலாமா என்றால் கூடாது என்பதுதான் பதிலாகும். ஏனென்றால், நம்முடைய மனதை அந்தந்த நிலைகளில், ஆதாரங்களில் செலுத்தி கவனத்தில் நிலைப்பதற்கும். மனம் பழகுவதற்கும் தகுந்த நேரம் வழங்கியே ஆகவேண்டும். சும்மா வெறுமனே, ஆக்கினை துரியம் என்று மனதையும் வார்த்தைகளையும் ஓட்டுவதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உங்களால், தவம் இயற்றும் பொழுது நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை என்றால், உங்கள் உடல் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். தவம் இயற்றுவதற்கு முன்பாக, எளியமுறை உடற்பயிற்சியை முழுதுமாக செய்துவிட்டு, பிறகுதான் தவம் என்று மாற்றிக்கொள்க. மேலும், தூக்க கலக்கத்தில் தவம் செய்யக்கூடாது. படுக்கையில் உட்கார்ந்தும் தவம் செய்வதை தவிர்க்கலாம். முக்கியமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு தவத்திற்கு செல்லுதலே நன்று. தவம் இயற்றும் நேரத்திற்கு முன்பாக நேரத்தில், உற்சாகப்படுத்தும், தேனீர், காஃபி, பழரசம் ஆகியன தவிர்த்தாக வேண்டும். அடுத்தடுத்து வரிசையாக வேலைகளை வைத்துக்கொண்டு தவம் செய்ய அமரவேண்டாமே. மேலும் உங்கள் சூழல் தவம் இயற்ற பொருத்தமானதா என்பதை நன்கு சோதனை செய்துகொள்க.

சிலருக்கு தவம் இயற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால்தான், உடல் நடுக்கமும், பதட்டமும் தோன்றும். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள தவமையங்களுக்குச் சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அப்படியாக கூட்டுத்தவத்தில் நன்கு பழகிக்கொண்ட பிறகு, தனியாக தவம் செய்தால் உடல் நடுக்கமும், பதட்டமும் வருவதற்கில்லை. இன்னும் தவம் செய்யலாமே என்ற ஆர்வமும், உற்சாகமும் பிறக்கும் என்பதே உண்மை. உடனடியாக் உங்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பியுங்கள். நலம் பெறுங்கள், தவத்தில் உயருங்கள்.

வாழ்க வளமுடன்.

Why I am not interested on simplified exercise?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதே எப்படி திருத்தலாம்?


பதில்:

அந்த அளவிற்கு உங்கள் மனதை கெடுத்துவைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல, உலகில் கோடிக்கணக்கான இளைஞ சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். காரணம், உலகில் ஏற்பட்டிருக்கும் தகவல் தொடர்பு மலர்ச்சி. உலகை கைகளில் சுருக்கி கைபேசி வடிவில் தந்துவிட்டதால், கண்களுக்கும், விரல்களுக்கும் மட்டுமே அதிக பயிற்சியும், குரலுக்கு கொஞ்சம் பயிற்சியும் தந்துகொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தனியாக, உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பயிற்சி தேவையா? என்று அவர்களே அதை தவிர்த்தும் விடுகின்றனர். முதலில் நீங்கள் சொன்ன சோம்பேறித்தனம் எப்படி வருகிறது என்பதை அறிந்திடுங்கள். உங்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமில்லை. அதை செய்வதால் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்த அக்கறை இல்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு எதற்காக பயிற்சி என்ற அசட்டுத்தனம். ஆனால் உடல் உங்களின் அன்றாட நடவடிக்கைகளால் சோர்வடைகிறது என்பதை நீங்கள் அறிவதே இல்லை. மேலும் மேலும் உடலை படாதபாடு படுத்தி, பகல்முழுவதும் உயயோகப்படுத்திவிட்டு, இரவிலும் கூடுதலாக கஷ்டப்படுத்துகிறீர்கள். இந்த உடலுக்கென்று பாஷை இல்லை. அதனால் அது என்னைவிட்டுவிடு என்று ஒருபோதும் சொல்லாது.

உங்களுக்கு ஏற்றபடி அது உங்களோடு பயணிக்கும். தீடீரென்று ஒருநாள் ஒரு தலைவலி என்று ஆரம்பிக்கும், பிறகு காய்ச்சல், உடல் வலி, சதை பிடிப்பு, உடலில் சூடு, கண்கள் வீக்கம், மூக்கில் சளி, இருமல் என்று படிப்படியாக ஆரம்பித்து நாளடைவில், ஒரு நோய்க்கான அறிகுறியைக் காட்டி, உங்களை படுக்கையில் வீழ்த்தும். அப்போதும் ஏதேனும் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, மருந்துகள் சாப்பிட்டு, உடலுக்கு ஊக்கம் கொடுத்து, பழையபடி அதே வேலையை ஆரம்பிப்பீர்கள். இந்த முறை முன்னைவிட பலவீனமாக மீண்டும் உடல் விழும். இது தேவைதானா? சிந்திப்பீர்.

இயல்பாக, நன்றாக இருக்கும் பொழுதே, உடல்மீது அக்கறை கொண்டு, கவனித்து, பயிற்சியால் ஊக்கம் கொடுத்து வந்தால், வாழ்நாள் முழுவதும் எக்குறையும் இன்றி வாழமுடியுமே? அதை ஏன் தவிர்க்கிறீர்கள்? சிந்திப்பீர். தெளிவீர், உயர்வீர்!

வாழ்க வளமுடன்.

Why we need to join on mass meditation in campus or center?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய பயிற்சி முடித்த பிறகும், அங்கே சென்று கூட்டுத்தவம் செய்தால்தான் தன்னையறிய வழிபிறக்குமா?


பதில்:

அப்படியில்லை, மேலும் அது கட்டாயமும் இல்லை. ஆனால் கூட்டுத்தவம் இயற்றும் பொழுது, எல்லோருக்கும் பொதுவான, நல்ல ஆழ்ந்த தவ நிலை அமைய வாய்ப்பு அதிகம் ஏற்படும். அதுதான் கூட்டுத்தவத்தின் சிறப்பாகும். இதற்காகவேதான் அடிக்கடி மன்றத்தொடர்பு அவசியம் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

பெரும்பாலும் நாம் பரபரப்பான உலகில் வாழ்கிறோம். விழித்தெழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை, நமக்கான உலக கடமைகள் வரிசையாக இருக்கிறது. இதையெல்லாம் முடிப்பதற்கே நேரம் இல்லாமை. அதோடு நாம், உடலை வலுப்படுத்த காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி முடித்து தவமும் செய்யவேண்டும். இதற்கு அதிகபட்சமாக 1:30 முதல் 2:00 மணி நேரம் வரை செலவிட வேண்டும். முக்கியமாக மனம் அதில் ஈடுபடவேண்டும், விருப்பத்தோடும், முயற்சிக்க வேண்டும். அதுதானே முக்கியம்?! ஏதோ கற்றோம், செய்தோம், அடுத்த வேலைகளை பார்ப்போம் என்று கடந்துபோக முடியாது அல்லவா? 

இப்படி நேரத்தை தந்து செய்ய முடியாதவர்கள், கூட்டுத்தவம் செய்துவந்தால், அவர்களுக்கு உயர்வும் கிடைக்கும். தானாக அதை செய்வதற்கு ஆர்வமும், வழியும் கூட கிடைக்கும். ஏதோ வாரம் ஒருநாள் கூட்டுத்தவம் செய்துவந்தாலும் கூட அது உதவிடும் என்பது உண்மை.

என்றாலும், நீங்கள் உங்கள் வீட்டிலே, இருக்கும் இடத்திலேயே வேதாத்திரிய பயிற்சிகளை செய்துவருவதே நல்லது. அதுதான் உங்கள் மனதை, உடலை வெகு சீக்கிரமாக பழக்கப்படுத்தும் வழியாகும். ஒரு செய்யமுடியாமல் போனாலும்கூட, இனிமேல் இப்படி தவற மாட்டேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு, தினக்கடமையாக ‘அதிகாலை, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவமும் செய்து முடித்துத்தான் அடுத்த வேலைகளை தொடர்வேன்’ என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாற்றம் தானாக நிகழும். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தால், கூட்டுத்தவத்தில் கலந்து கொள்ள மறவாதீர்கள்!

வாழ்க வளமுடன்!

How many meditation can practice per day and which one is best?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்? எந்த தவம் அதிகம் செய்யவேண்டும்? அது எப்படி உதவும் என்று சொல்லுங்கள்!


பதில்:

ஒரே மூச்சாக மூன்று கேள்விகளை அடுக்கி வீட்டீர்கள். நல்லதுதான். மனவளக்கலை வழியாக கற்றுக்கொண்ட தவங்கள் அனைத்துமே தொடர்ந்து செய்து வரலாம். எனினும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், காலை, நண்பகல், மாலை என்று மூன்று நேர தவம் போதுமானது. இரவு நேரம் / படுக்கைக்கு முன்னதாக தவம் என்பதை ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யத்தேவையில்லை.

பிரம்மஞானி / அகத்தாய்வு நிலைகள் முடித்தவர்கள் / அருள்நிதி / ஆசிரியர்கள் இரவில் தவம் செய்யலாம். அதுவும் ஆராய்ச்சி அடிப்படையில் துரியதவம் மிகச் சரியானது. துரியாதீதம் என்ற உயர்நிலை தவம் இரவில் செய்வதை தவிர்க்கலாம் என்பது பொதுவான கருத்து. மற்றபடி பொதுவாகவே துரியதவம் எல்லோருக்குமே அற்புதமானது. துரியதவம் நன்கு ஆழ்ந்து கற்றுத்தேர்வது உதவும், துரியாதீத நிலைக்கு தானாகவே அது உங்களை உயர்த்திதரும் என்பதும் உண்மை.

அதுப்போல தவ ஆற்றல் கூடினால் சாந்திதவம் கட்டாயமாக செய்தாக வேண்டும். அதற்காக வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவும் அவசியமில்லை. 

ஆரம்பகாலத்தில் ஆக்கினையில் நல்ல தேர்ச்சியும், பிறகு துரியத்தில் நல்ல தேர்ச்சியும் இருந்தால்தான், துரியாதீதத்தின் பயன்களை நன்கு பெறவும் முடியும்.

அதுபோலவே இறைநிலைதவமும் மிகசிறப்பு வாய்ந்தது. மற்றபடி, நித்யானந்த தவம் தினமும் செய்துவரலாம். வேறுபல சிறப்பு தவமும் செய்துவரலாம். ஆனாலும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், அடிக்கடி தவம் செய்வதில் ஆர்வம் வந்தாலும் தவிர்ப்பது நல்லது, மூன்று தவம் போதுமானதே. இதில் கூட்டுத்தவம் கணக்கில் சேர்க்கவில்லை.

வாழ்க வளமுடன்.

How many meditation will practice on the starting level?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆரம்ப தவசாதகர் ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்?


பதில்:

ஆரம்ப தவசாதகர் என்றால், முதலில் எளியமுறை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், தவத்தில் அமர்ந்தால், மிக எளிதாக, உடல் வலி ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். முதுகுதண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார வேண்டியது அவசியம். சாதரண பதமாசனத்தில் அமர்ந்தால் போதும் என்றாலும் கூட, அதில் கூட கால்வலி எதுவும் வரக்கூடாது. 

உடலில் வலி, சோர்வு இருந்தால் தவம் மிகச்சரியாக இயற்ற முடியாது, அந்த தவமும் உதவாது, இடைப்பட்ட நேரத்திலேயே முடித்துவிடத் தோன்றும். எனவே உடல் அதை எல்லாம் பொருட்படுத்தாத நிலையை, உடற்பயிற்சியால் வரவழைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒருவாரம் முதல் ஒருமாதம் எடுத்துகொள்வது நல்லதுதான். கூடவே காயகல்பமும் செய்து பழகி வந்தால் இன்னமும் நன்மை கூடும், தவமும் சிறக்கும்.

ஆரம்ப தவசாதகருக்கு, ஆக்கினை முதல் துரியாதீதம் வரை கற்ற அனுபவம் பெற்றிருப்பார் என்றாலும் கூட, முதல் வாரம் ஆக்கினை தவம் மட்டுமே செய்துவரலாம். ஒருநாளைக்கு இரண்டு முறை தவம் இயற்றினால் போதுமானதே. அதிகாலையில் மற்றும் மாலையில் என்று அமைத்துக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த அனுபவத்தி நினைத்துப் பார்ப்பதாக நேரத்தை செலவிட்டுக் கொள்ளலாம்.

அடிக்கடியோ, ஒரு நாளைக்கு பல நேரமோ, அதிக நேரமோ தவம் இயற்ற வேண்டியதில்லை. ஒரு தவம் இயற்ற எந்தளவு நேரம் தரப்பட்டிருக்கிறதோ அந்த நேரம் மட்டும் இயற்றினால் போதுமானது. அமிர்தம் என்பதற்காக அடிக்கடி உண்ணக்கூடாது என்பார்கள். அதுபோலவே தவமும் என்று சொல்லலாம்.

ஆக்கினை தவம் இயற்றிவரும் நாட்களில் ஒரு சிலருக்கு, தவ ஆற்றல் கூடிவிடும். அதனால் தலைபாரம் உணர்ந்தால், உடனடியாக சாந்தி தவம் செய்து, அதிகமான தவ ஆற்றலை, உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றிக்கொள்ளலாம். 

உங்களின் ஆரவம், முயற்சி, ஆராய்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட, ஒருநாளைக்கு இருவேளை தவம் என்பது, ஆரம்ப சாதகருக்கு பொருத்தமானது.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!