CJ for You: culture

culture

Showing posts with label culture. Show all posts
Showing posts with label culture. Show all posts

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


To whom does Vethathiriyam give importance to living people? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். ஏன்?


பதில்:

குரு மகான் வழங்கிய வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆம், உண்மைதான். தெய்வீக பேராற்றலே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றதே? நாம் தந்தால் ஏதும் குறைந்துவிடுவோமா? இந்த இயற்கையின் பரிணாமத்தில் இருக்கிற பெண் என்ற தன்மைக்கான முக்கியத்துவத்தை, நாம் இன்னமும் சரியாக தரவில்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. ஆனாலும் வேதாத்திரியம் முழுமையான முக்கியத்துவம் தருகிறது.

எனக்கும், இந்த வேதாத்திரி மகரிஷி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெண்களுக்கு தருகிறார்? என்ற கேள்வியும் சிந்தனையும் எழுந்தது உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கும்பொழுதான், மகரிஷியின் தெளிந்த பார்வை எனக்கும் கிடைத்தது. அதை நான், என் வாழ்க்கையூடாக அனுபவமாகவும் பெற்றேன் என்பதே உண்மை.

உலக வரலாற்றில், பெண்மைதான் ஆளுமை என்பதாக இருந்தது என்பதை அந்த வரலாற்று சுவடுகள் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதில் குழப்பம் விளைவித்து, பெண்களை இப்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதில் கலாச்சாரம் என்ற விதியையும் அவர்களுக்கு புகுத்திவிட்டனர். பெண்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆண்கள்.

இந்த ஆண்களையும், பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கிறாளே ஒரு பெண்? அவளுக்குத் தெரியாதா தன்னை பாதுகாத்துக்கொள்ள? அவள் தன்னை மட்டுமல்ல, தன் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் உள்ளமைப்பும், திறமையும் கொண்டவள்தான். இல்லையென்றால், இந்த உலகை, புதிய பரிணாமத்தில் நிலை நிறுத்த, குழந்தை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்ப்பதை, இயற்கை அவளிடம் ஒப்படைக்குமா? ஏன் இதை ஆண்கள் வசம் இயற்கை கொடுக்கவில்லை?! பதில் தருவார்களா இந்த ஆண்கள்?!

ஒரு ஆணுக்கு, அவனுடைய வாழ்வில், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக அமைவது பெண் தானே?! மேலும் உறவுகளிலும், நட்புவட்டத்திலும் பெண்கள் உண்டுதானெ? ஆனால், உலகில் பிறந்து இப்போது இருக்கிற பெரியவர்களான ஆண்களும், நடுத்தர வயதுள்ள ஆண்களும், இளையோர்களான ஆண்களும், சிறுவர்களான் ஆண்களும் தன்னுடைய வாழ்வில், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இல்லை என்று சொல்லமுடியும். இதெல்லாம் பிற ஆண்களைப்பார்த்து, பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கற்பிதங்கள். மேலும் வரவேற்பரை வரை வந்து பாடம் நடத்தும் தொலைகாட்சியும், சினிமாவும், இன்னும் பலவும் கூட இருக்கிறதே?!

ஒரு ஆண், தன்னுடைய வாழ்வில், எல்லாமாக இருக்கும் ‘அவனுக்குரிய’ பெண்ணை இழந்தால்தான் அவன் ஒரு நல்ல பாடம் படிப்பான். ஆனால் அந்த திருத்தத்தை பெற்று, வருந்திடவும், இதுநாள் வரை இப்படி செய்துவிட்டேனே என்று மன்னிப்பு கேட்கவும், அவனுக்குரிய பெண் அங்கே இருக்கமாட்டாளே?! ஆனால், பெண்ணுக்கு இதுதான் மதிப்பு என்ற உலகியல் வழக்கம் உடனே மாறிடாது. நாம் நம் குடும்பத்தில் மாற்றினால், நம்முடைய ஆண் குழந்தைகள் மாற்றிக்கொள்ளும், அதைக் கண்டு சமூகத்தில் உள்ள ஆண்குழந்தைகள் மாற்றிக்கொள்ளும். அதன்வழியாக உலக ஆண்களும் மாற்றம் பெறுவார்கள்.

வாழ்க வளமுடன்.

Wife Appreciation Day, Annai Logambal Birthday on August 30


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனைவி நல வேட்பு நாளின் சிறப்பு என்ன? 


பதில்: 

இதற்கான பதிலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷியே கூறுகின்றார்.

 உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய [அருள் அன்னை லோகாம்பாள்] பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன்.

அதுபோலவே, மனவளக்கலை மன்ற அன்பர்களும், அவர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

மேலும் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வாழ்க்கைத்துணையாக வரும் மனைவி குறித்தும், இந்த நாள் குறித்தும் கவியாக சொல்லுகிறார்.


பெற்றோரைப் பிறந்தகத்தைப்

பிறந்த ஊரை விட்டுப்

பிரிந்து வந்து,

பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,

பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்

பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு

என் நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப்

பெண்மை  நல நோக்கில் அன்போடு கருணை

இவை கொண்டு மற்றவர்க்கும் தொண்டாற்றும்

மாண்புமிக்க எந்தன் மனைவியை

நான் மதிக்கின்றேன்

வாழ்த்தி மகிழ்கின்றேன்.


நீங்கள் மிகச்சிறந்த கணவன் எனில் அல்லது அத்தகைய மதிப்பை பெறுவதற்காகவும் கூட, தன் அன்புமிக்க மனைவியை வாழ்த்தி மகிழவும், தன்னுடை அன்பை, அவள்மீது கொண்ட நட்பை, மதிப்பை வெளிக்காட்டவும், இல்லத்தில் இன்பம் பொங்க, வாழ்நாள் சிறக்கவும் இந்த மனைவி நல வேட்பு நாளை மிகச்சிறந்த வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.