CJ for You: moral

moral

Showing posts with label moral. Show all posts
Showing posts with label moral. Show all posts

What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work?


வேதாந்தம் என்பதற்கும், சித்தாந்தம் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எதை பயனுள்ளதாக கருதலாம்? எப்படி பயனாகிறது?

அந்தம் என்ற வடமொழி, முடிவான உண்மையை குறிக்கும் ஒரு சொல்லாகும். வேதம் என்பது உயர்வான உண்மை, மாற்றுக் கருத்தில்லாதது என்றும் பொருள் தரும் சொல்லாகும். அது மதிப்பானது என்ற தகுதியையும் பெற்றிருக்கும். பொதுவாகவே, வாழ்ந்த முன்னோர்களின் வழியாக, மனித வாழ்வை உயர்த்தக்கூடிய அருளுரைகள் இதில் அடங்கி இருக்கும். ஓவ்வொரு நிகழ்விலும், இயற்கையோடும், இறையாற்றலோடும் ஒருங்கிணைந்து, அறிந்து உணரப்பெற்ற உண்மைகளின் தொகுப்பு வேதம், அதை சொல்லும் வழிமுறையே வேதாந்தம் என்றாகிறது. உலகில் பல்வேறு, பாரம்பரியமான வேதங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் இருக்கின்ற வேதம் மிகச் சிறப்பானது. முழுமையானது என்பதை ஐயமில்லை. உலகுக்கே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.

சித் என்றால் உயிர் ஆகும். இந்த உயிரை ஆராய்ந்து, அதன் பஞ்ச பூதத்தின் முதன்மையான நிலையையும் அறிந்து கொண்டு, அந்த உயிரின் மூலமான, வெட்டவெளி என்ற மெய்ப்பொருள் நிலையையும் உணர்ந்து அறிந்தவர்கள் சித்தர் என்றாயினர். சித் என்ற உயிர் உண்மை வழியாக, மூலமும், முடிவான உண்மையையும் சொல்லும் பொழுது, அது சித்தாந்தம் என்றாகிறது. சித்தாந்தம் என்பது, சித்தர்கள் வழியாக, தமிழ்நாட்டில் தான் உருவானது. அக்காலம் முதல், உலகெங்கும் பரவி உள்ளது. எனினும் அதன் அடையாளம் பல்வேறு வகைகளில் சிதறிவிட்டது. வேறு வேறு பெயர்களில் மாற்றம் பெற்றுவிட்டது. ஆனால், சித்தாந்தத்தின் ‘மூலம்’ அதிலிருந்து விலகவில்லை.

வேதாந்தம் என்பது அறிவுக்கு விளக்கம் அளிப்பது என்றால். சித்தாந்தம் அந்த அறிவையே அறிந்துணரத் தருவதாகும். வேதாந்தம் கேட்டு, படித்து, சிந்தித்து ஏற்றுக்கொள்வதாகும். சித்தாந்தமோ உடல், மன, உயிருக்கான பயிற்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை, வார்த்தைகளால் விளக்குவதை விடவும், அனுபவமாக பெறுவதுதான் சிறந்தவழி. வெற்று வார்த்தைகளில் வித்தியாசப்படுத்தினால், அதன் தரத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே கவனம்.

இந்த இடத்தில், மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், விளக்கமான கருத்துக்களையும் அறிவோம். ‘தானே அவனாகவும் அவனே தானாகவும், சிவனே சீவனாகவும்,  சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான் தெளிவோடு திருப்தியும் வரும்.  இதை நமது மனவளக்கலை (Simplified  Kundalini Yoga - SKY) மூலம் சாதிக்க முடிகிறது.  தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும் பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும்.'

மேலும், ‘தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது.  முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும்.  அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அனுபோக பூர்வமாக பெற்றாக வேண்டும்’ என்கிறார்.

கூடுதலாக, ‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டு தான் உண்டு. அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே. ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும் இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும் எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். 

துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல் இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்க்கை முறையே பக்திமார்க்கம்.’என்று தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?


உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?


சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும்.  இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.  

இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.  

சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை  உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.

பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.  இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல்  செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.  

களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.  

இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில்  ஏழ்மை என்பது இருக்காது.  பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது.  அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.  

எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும்.  வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம்.  அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.

இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்

இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,

ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?

குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?

கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க. 

முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.

மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?

சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!  

சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.


வாழ்க வளமுடன்.

-

Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?


உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள் உள்ளதா?

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா. உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள், வழிமுறைகள் சொல்லியிருக்கிறாரா? 


பதில்

தன்னுடைய வாழ்நாளில், தன் இறையுணர்தல் பயணத்தோடு, அதை மற்றவர்களுக்கும், அறித்தரும் வேளையில், அன்பர்களின் உடல்நலம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிறருக்கு அப்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதன் வழியாக கிடைத்த, அந்த மாற்றங்களையும், விளைவுகளையும் கூட ஆராய்ந்து, திருத்தி, முழுமை செய்திருக்கிறார்.  பல்வேறு வகையான ஆசனம், மூச்சுப்பயிற்சி, உடலியக்கம், அக்குபிரஷர் என்று எல்லாம் கலந்த ஒன்றாகவே, எளியமுறை உடற்பயிற்சியை அமைத்துத் தந்திருக்கிறார். 

    முக்கியமாக, கிட்டதட்ட உண்மையை இழந்திருந்த, சித்தர்களின், அற்புதமான காயகல்ப யோக கலையை, முழுமை செய்தும் தந்தார். எளிமையான குண்டலினி யோகத்தையும் கற்றுத்தந்தார். தன்னைப்போலவே நாமும், மெய்ப்பொருள் விளக்கம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அந்த வகையில், அவர் சொன்ன, உடல் நலம் பெறுவதற்கான அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளை இங்கே காணலாம். வாழும் வாழ்க்கையில், உடல் நலம் மீது அக்கறை கொண்டோர் யாவரும், கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று கூட சொல்லமுடியும். தங்களின் உடலின் மீதும், உயிரின் மீதும், வாழ்நாளின் மீதும் விருப்பம் கொண்டோர், இந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். மற்றவர்கள், வழக்கம்போல, ஒதுக்கி, தள்ளி வைத்துவிடலாம்.

இனி, 

  அடிப்படை: அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.  அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

        அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

ஐந்தில் அளவுமுறை: உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

உணவில் எளிமை: வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

சமநிலை தாக்கங்கள்: கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.  விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

மரு உந்து சக்தி: நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

ஆர்வமும் மாற்றமும்: நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

அகத்தாய்வு: மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை: உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது. 

தூய்மை பெறல்: உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

தன்னில் அக்கறை: எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின், இந்த விளக்கத்தை, நன்கு அறிந்து, நினைவில் கொண்டு, அதன்படி, நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால். தனிமனிதனாகவும் இன்புறலாம். குடும்பமாகவும், சமூகமாகவும் இன்புறலாம். உலக மக்கள் யாவருமே இன்புறலாம். இனிமை நிறைந்த வாழ்வை, எல்லோரும் வாழவும் வழியுண்டாகும்.

வாழ்க வளமுடன்.

-

If everything has already been provided, is it okay to ask for it?


எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?


கேள்வி

        ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.

        பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?


பதில்

பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.

‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே. 

எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது. 

மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.

இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.

அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’

வாழ்க வளமுடன்.

-

Please explain simply the Mukti and Gnana in spirituality?


முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?


பதில்:

எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை (the source of all the forces) அறிவால் அறிந்து வாழ்வில் அமைதி பெறுவதே அறிவில் தெளிவு பெறுவதே முக்தி எனப்படும்.  

விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல் வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் விளக்க வழி வாழ்வே ஞான நெறியாகும்.

வாழ்வில் மனம் தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான்.  உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம் உயிர் மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருக்கின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருள்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் மனவளக்கலையினை அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. 

மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை யோகம் என்றும் ஆராய்ந்த பின் கண்ட விளக்க வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை ஞானம் என்றும் வழங்குகிறோம்  

வாழ்க வளமுடன்.

-

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

The solution and best advice to the husband and wife!


குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        குடும்பத்திலே அமைதி வேண்டுமென்றால், மூன்று ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதுமானது. அது அந்த கணவன் மனைவி இருவருமே செயல்படுத்தவேண்டும். அது 1. விட்டுக்கொடுத்தல் 2. பொறுமை 3. தியாகம் ஆகியன ஆகும். இவற்றை அந்த வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவேண்டுமா? என்று கேட்டால் ஆம். ஆனால் அதற்கு அவசியமிருக்காது. ஏனென்றால் தினமுமே நீங்கள் கணவனாகவும், மனைவியாகவும் இவற்றை செயல்படுத்தும்பொழுது, மூன்று மாதத்திற்குள்ளாக அது உங்களுக்குள்ளாக நிறைந்து, உங்கள் இயல்பாகவேகூட மாறிவிடும். பிறகு நீங்கள் இயல்பாகவே விட்டுக்கொடுத்தல், பொறுமை, தியாகத்தை கடைபிடிப்பீர்கள் என்பதுதான் உணமை.

நீங்கள் சாதாரணமாகப் பெண்மையைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனி மேல் இந்தப் பண்பாடு எல்லா இடத்திலும் வரவேண்டும்.

உலகத்திலேயே நட்பு மிகமிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே கணவன் – மனைவி நட்பைப் பற்றிச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்த விதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும், மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.

அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம், குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


Why most of persons stayed long with their personality?


மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


பதில்:

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இதைச் சொல்லுகின்ற உங்களுக்கும்கூட ‘நான் இப்படித்தான்’ என்ற நிலைபாடு இருக்கும் என்பதும் உண்மையே. அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்களே யாரிடமாவது, உங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டால், அவர்கள் சொல்லிவிடுவார்கள். நாம் யார்? நம் நடவடிக்கைகள் என்ன? என்று விபரமாக சொல்லுவார்கள்.

ஒவ்வொடு பொருளுக்கும் தரம், குணம், செயல்பாடு என்று இருப்பதுபோலவே, எல்லா ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் உண்டு. அதை குணாதசியம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Quality, Personality என்று குறிப்பிடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிக தெளிவாக ‘குணநலப்பேறு’ என்று சொல்லுகிறார். இதிலேயே குணம், நலம், அதனால் அடையும் பேறு என்ற மூன்று வார்த்தைகளும், பொருள்களும் நிறைந்திருக்கக் காணலாம்.

இயக்கமற்ற பொருட்கள், ஓரரறிவு தாவரங்கள் ஆகிய தன்னுடைய கருவழியாகவே தன்னுடைய ‘குணநலப்பேறு’ பெற்றுக்கொள்கிறது. ஒரு களிமண், ஒரு பாறை, உப்புக்கல், மிளகாய், மாம்பழம் என்று உதாரணம் எடுத்துகொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரறிவு முதல், ஆறறிவு மனிதனாக நம்மையும் சேர்த்து, கருவழியான ‘குணநலப்பேறு’ மட்டுமல்லாமல், வாழ்கின்ற சூழல், கூட்டு, சமூகம், தேவை, எதிர்பார்ப்பு, அனுபவம் என்று பலவழிகளில் புதிதாகவும் ‘குணநலப்பேறு’ அமைந்துவிடுகிறது.

முதலில் ஏற்படும் தேவை என்ற உணர்வுதான் எல்லா ‘குணநலப்பேறு’நிலைக்கும் அடிப்படை ஆகிறது. அதன்படிதான் மனிதர்கள் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்கள், தனக்கு பாதிப்பு, இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஒருசிலர் என்ன நிகழ்ந்தாலும் ‘நான் இப்படித்தான்’ என்ற நிலையை (உயிரே போனாலும் கூட) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி, இத்தகைய, இயற்கைதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டும், ‘குணநலப்பேறு’ அடையவேண்டும் என்றுதான், அகத்தாய்வும், தற்சோதனையும் அமைத்திருக்கிறார். முழுமையாக தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, இயற்கையாக ஒன்றிணைந்து இருப்பது என்ற தகுதியையும் அது தரும். மேலும் கருவழியான பதிவுகளை அகற்றிடவும் துணை செய்யும். யோகத்தின் வழியாக மட்டுமே இந்த Personality மாறுமே தவிர, வேறெந்த development பயிற்சியாலும் மாறிடாது என்பதை அறிந்துகொள்க.

வாழ்க வளமுடன்

-


Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

Why need to search good one in life always? Sometimes it is not available also!


வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


பதில்:

உங்களுக்கு ஒர் உண்மை தெரியுமா? இந்த வாழ்க்கை நாம் உருவாக்கிக் கொண்டதல்ல. ஏற்கனவே நம் பெற்றோரும், முன்னோர்களும், தலைமுறையினரும் உருவாக்கி, பாதை போட்டுத்தந்த வழியிலே நாம் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை.  இன்று நீங்கள் பயணிக்கும் பாதையில், இன்னும் சிலவழிகளை, உங்கள் பயணத்தின் பொழுது, நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கிற அதேவேளையில், உருவாக்குகிறீர்கள். அந்தவழியில் பயணிக்க உங்கள் குழந்தைகள், உங்களுக்கு வேண்டியோர் பயணிப்பார்கள். உங்கள் நண்பர்கள்கூட பயணிக்க தயாராவர்கள்.

இப்படியான பாதைகளும், வழித்தடங்களும் எண்ணற்றவை. ஒரு மரத்தின் கிளைகள் போல இல்லாமல், அதன் வேராக எங்கும் படர்ந்து விரிந்து சென்று, ஏதேனும் ஓரிடத்தில் அவை இணைந்து பிண்ணி பிணைந்துகொள்ளவும் செய்யலாம். விடுத்து இன்னொன்றாக பிரிந்தும் விரியலாம். அது அதனதன் தன்மையையை பொறுத்தது.

இந்த பாதைகளை பொறுத்தவரை எது நல்லபாதை? எது கெட்டபாதை? எது அவசியமற்றது? எது தவிர்க்கவேண்டியது? எது பிரச்சனைக்குறியது? எது மிகச்சிறந்தது? என்பதெல்லாம், அந்த வழியில் பயணித்து சிக்கி பாடம் கற்றோர், இந்த சமூகத்திற்கு, உலகுக்கு விபரத்தை தந்திருக்கிறார்கள். அதுதான் அறவழி என்றும் சொல்லுகிறார்கள். மனித வாழ்வின் நோக்கத்தை சிறப்பாக்கும் என்றும் வாழ்க்கையில், நல்ல வழக்க பழக்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அறவழியில் பயணிப்போர், மேலும் பல உண்மைகளை அறிந்து, உணர்ந்து அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு தந்து செல்கிறார்கள்.

என்றாலும், குறுமதியார்கள் மக்களை, அவர்களின் மனதை குழப்பி, பாதை தடுமாறச்செய்து, அதில் தனக்கான பொருளையும், புகழையும் பெறத்துடிக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த பாதையில் நின்று, நல்வழியில் செல்லும் மக்களை தடுத்து திசைமாறச் செய்கிறார்கள். இதனால் பெரும்பாலோர் சிக்கி திணறுகிறார்கள். இப்படியான பாதையில்தான் நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என்று கருத இடமிருக்கிறது. அதனால்தான், வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்.

ஒரு வீட்டின் சமையலையில், உணவு சமைப்பதிற்கு தேவையான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருளை தேடாமல் எடுத்து பயன்படுத்துபவர் உங்கள் தாயாராகவோ, வாழ்க்கை துணைவராகவோ, நீங்களாகவோ இருக்கலாம். இன்னொருவரை அழைத்து வந்து, ‘அந்த வெள்ளை சக்கரையை எடு’ என்றால் அவர், உப்பை எடுத்துத்தரக்கூடும் அல்லவா? அதற்கு வாய்ப்பில்லை என்றால், எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருப்பார். இன்னொரு உதாரணமாக, வெள்ளை சர்க்கரை மட்டுமே இருக்கிற இடத்தில், உப்பையும், மாவையும், ரவையையும், வெள்ளை சோப்புத்தூளையும், இன்னும் சில ரசாயன உப்புக்களையும் நிரப்பி வைத்தால், அனுபவப்பட்ட நீங்களே கொஞ்சம் குழம்பித்தான் போவீர்கள் அல்லவா? இத்தகைய குழப்பும் வேலையைத்தான் ‘இன்றைய சமூகத்தில்’ சில குறுமதியார்கள், உண்மைக்கு புறம்பாக  செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இதை அடையாளம் காணுங்கள், எது உண்மை என்பதை கண்டடைய பழகுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுப்போல, ‘அல்லதை விடுத்தால் நல்லது அங்கேயே இருப்பதை அறியலாம்’.

வாழ்க வளமுடன்

-

Why unable to complete and get the obstacles on action based on thought?


நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?

பதில்:

நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.

உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம். 

இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.

வாழ்க வளமுடன்.

-

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

Following the Karma Yoga is easy, so no need any other yogas!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்ம யோகம் மிக சுலமானதாக, திருப்தியாக இருக்கிறது, அதனால் மற்ற யோகங்கள் அவசியம்தானா?


பதில்:

மிக நல்ல விஷயமாக, முதலாவதான பக்தியோத்தில் இருந்து, கர்மயோகத்திற்கு, உயர்ந்திருக்கிறீர்கள் என்பது சிறப்பு. உண்மையாகவே, யோகம் எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதற்கு மக்கள் பழகிக் கொள்வதற்காகவுமே யோகம், பல நிலைகளாக உருவாக்கப்பட்டது. இதனால் கர்ம யோகம் எளிதானதுதான் என்பதில் ஐயமில்லை. இது அடிப்படை நிலையில் இரண்டாவது ஆகும். 

உலகில் நாம் காணும் பல்வேறு வகையிலான கருத்துக்களும், விளக்கங்களும், அறிவுரைகளும் இந்த கர்ம யோகத்தின் வெளிப்பாடுகள் தான். அதாவது பக்தி யோகம் என்பதில் ஏதேனும் திருத்தம் பெற்று, தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டவர்கள், மக்களின் நலன் சார்ந்து, இந்தமாதிரி நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.  நல்லதே நினையுங்கள், அதன்வழி நல்லதே செய்யுங்கள், மனதை இப்படியாக பக்குவப்படுத்துங்கள், உடலை இப்படி பேணிகாத்திடுங்கள் என்று சொல்லுவதும் கூட, கர்ம யோக நிலைதான். ஒருவகையில், நம்முடைய அடிப்படை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதாகவும் அமையும்.  பிறருக்கும் அது விளக்கமாகவும் அமையும். அதாவது நம்முடைய செயல் வெளிப்பாடுகளைப் பார்த்து, பிறர் திருத்திக் கொள்கின்ற அளவில் உதவலாம். எனவே கர்ம யோகம் என்பது, பிறருக்கு நேரடியாக உதவி செய்வதுதான் என்ற அர்த்தத்திலிருந்து விலகி, தன்னை திருத்திக் கொண்டு இயங்கினாலும்கூட அது பிறருக்கு உதவும் என்ற நிலை இங்கே அமைந்துவிடுகிறது.

இதுதான் உங்களுக்கும், பெரும்பாலோருக்கும் மிக சுலபமானதாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும், கர்ம யோகத்தை தொடரலாம். அதில் எந்த குறையுமில்லை. இந்த கர்ம யோகத்தின் நிலையில், நானும் பிறமக்களும் சமம் என்ற உணர்வு தோன்றும். அது மிகவும் அற்புதமானதுதான். இந்த நவீன, இணைய தொழில்நுட்ப காலத்தில், இந்த கர்ம யோகம்தான் முதன்மையாக இருக்கிறது எனலாம். எல்லோருமே தனக்குத் தெரிந்ததை, தான் கற்றதை, தன் அனுபவத்தை பிறருக்கு அறியத்தருகிறார்கள். அதை மற்றவர்கள் அறிந்துகொள்கிறார்களோ, கடைபிடிக்கிறார்களோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு இடமின்றி, தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ‘ஏன்யா? இதெல்லாமா கர்ம யோகம்?’ என்கிறீர்களா? இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, அப்படி கேள்வி கேட்கும்படியாகத்தான் இருக்கிறது! ஒன்று செய்யுங்கள், நீங்கள் அவரிடம் சென்று ‘ஏன்யா நீங்கள் இதையெல்லாம் பகிர்கின்றீர்கள்?’ என்று கேள்வி கேளுங்கள். அதற்கு அவர் ‘கர்ம யோகம்’ என்ற விளக்கத்தில்தான் பதில் தருவார்.

ஆனால் இங்கே, இப்படியான கர்ம யோகத்தில் பெரும் சிக்கல் இருக்கிறது. கர்ம யோகம் என்ற புரிதலில் வரும் சிக்கல் அது. கர்ம என்பது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றின் வழியாக தோன்றுவது ஆகும். இதனூடாக, கர்ம வினைப்பதிவும் நமக்குள்ளாக அமைந்தது வெளிவரும், புதிதாகவும் நமக்குள் பதியும் என்பது இயற்கை நீதி. எனவே கர்ம யோகத்தை நீங்கள் செயல்படுத்திவரும் பொழுது, இந்த கர்ம வினைப்பதிவு குறித்த விழிப்புணர்வு அவசிமாகிறது. இல்லையேல் அது உங்களுக்கும், பிறருக்கும் தடையை ஏற்படுத்திவிடுமே?! மேலும் இதன் வழியாக உயர்வதுதான் முறையானது, இங்கே நின்றுவிடுவது உங்கள் விருப்பமாக இருக்கலாம், எனினும் அது பிறவி நீள்வதற்கான காரணமாகிவிடும்! இதனால், பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என்று அடுத்த நிலைகளுக்கு மாறியே ஆகவேண்டும்.

வாழ்க வளமுடன்.

Is mantra and meditation true or fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்ற கருத்தை எப்படி எதிர்கொள்வது?!


பதில்:

இந்த உலகில் வழிவழியாக மனிதனின் அறிவு, இயற்கையாற்றலால் அனுபவமாகி விரிந்துகொண்டே இருக்கிறது. அறிவில் தெளிவும் வந்துகொண்டே உள்ளது. அப்படியாக ஓவ்வொரு மனிதருக்கும் ஏற்கனவே இருந்த நம்பிக்கையும், புதிய கருத்தும், கொள்கையும், அதன் வழி நடத்தலும் வந்துகொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. மனித இனத்தின் வரலாறு அப்படியானது. ஆனால் குறிப்பிட்ட இன்னார்தான் இதை கொண்டுவந்தார் என்று நாம் முடிவு செய்வது சரியாகாது. மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையும், அளவில் பெரிதோ சிறிதோ கணக்கே இல்லை. அதில் கலந்துதான் உள்ளது. 

திருவள்ளுவர் மகான் சொன்னது போல, எண்ணினாலே, நினைத்தாலே போதுமானது, அந்த அறிவு நம்மோடும் கலந்துவிடும். இதனால் வாய்ச்சொல்லாகவோ, எழுத்தாகவோதான் பிறருக்கு பகிர்ந்து, அவர் அறிவில் மாற்றம் தரவேண்டும் என்பது பொய்யாகிவிடுகிறது. 

பிரச்சனை என்னவென்றால், தான் கருதியதை, தன்னுடைய புரிதலை, தன்னுடைய நம்பிக்கையை, வெளி உலகில், பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளும் பொழுது, இப்படி நாம் சிக்கிக் கொள்வது உண்டு. அதாவது நம்முடைய நம்பிக்கையை, இன்னொரு மனிதரின் வார்த்தைகள் சிதறடிக்கும், குழப்பும், சிந்திக்கச் செய்யும், விட்டுவிலவிடவும் உதவும். அப்படியாகவே, மந்திரமும், தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும் மனிதர்கள் நம்மிடையே உண்டு.

முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, அவரவர்களுக்கு அவரவர் கருத்தை சொல்ல இந்த உலகில் இடமுண்டு என்பதை மறவாதீர். அவர் யாராக இருந்தாலும், எதிரியாக, நண்பராக இருந்தாலும் அதை நீங்களோ, நானோ மறுத்துபேச வழியில்லை. அப்படி அவர் பேசினால் அதை அந்த இடத்தில் நாம் மறுப்பதாக இருந்தால், அதற்கான ஆதார செய்திகளை சொல்ல வேண்டும். நிரூபிக்கவும் வேண்டும். அது எப்போதும் இயலாதது. எந்நேரமும் ஆதாரங்களை கைகளில் வைத்திருக்க முடியுமா? எனவே அந்த நேரத்தில் கேட்டு நாம் விலகிவிட வேண்டியதுதான்.

வாழ்க வளமுடன் என்ற வார்த்தையே ஒரு மந்திரம் ஆகும். அதை சொன்னால் வருகின்ற பலன்கள் அளப்பறியது. ஆனால் யாரும் நம்பத்தான் தயாரில்லை. ஒரு மனிதரின் பெயரைச் சொன்னால், அவர் திரும்பிப் பார்க்கிறார்தானே? ஏன் திரும்பவேண்டும்? அந்த பெயருக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. அதுபோலவே மந்திரத்திற்கும், அதன் தேவதா சக்திக்கும், நம் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது. அதை நிரூபணமும் செய்திருக்கிறார்கள். ஒலி அதிர்வுகள் ஏற்படுத்துகின்ற மாற்றம் அது. பிரபஞ்சத்தில் எங்கோ நிகழ்கின்ற, ஈர்ப்பு அலைகளை, இங்கே அறிந்து CERN - European Organization for Nuclear Research விஞ்ஞானிகள் மகிழ்வதும் நாம் அறிந்ததே! 

ஆனால், மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும்பொழுது, அது உண்மையா என்று நமக்குத் தெரியும்தானே? ஒருவேளை உங்களுக்கே அந்த சந்தேகம் இருந்தால், இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, ஆராய்ந்து உண்மை அறியவேண்டும். அதுதான் முக்கியம். இப்படி அவர் சொல்லிவிட்டாரே என்று நீங்கள் வருந்துவதும், அவரை திருத்த முயற்சிப்பதும் வேண்டாம், அது தேவையும் இல்லை. உங்களுக்கு அதன் உண்மை தெரியுமே? பிறகென்ன? அவருக்கு அதில் கிடைத்த அனுபவம் அப்படி இருக்கலாம் அல்லது அதில் இறங்கி உண்மை தெரியாமலேயே அப்படி சொல்லலாம் தானே?! எனவே உண்மை உங்கள்பக்கமாக இருக்கையில், நீங்கள் நிறைவாக, அமைதியாக தொடரலாம்!

வாழ்க வளமுடன்.

Please let me know the rules for a Yogam who one follows!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?


பதில்: 

நிச்சயமாக இருக்கிறது. ஆனால் இப்போது நம்மிடையே இருக்கும் அறிவிலிகள் சொல்லுவது போன்ற சட்ட திட்டங்கள், வரைமுறைகள் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் இணைவதற்கே பல ஆண்டுக்காலம் ஆகும் என்பது நடைமுறையில் இருந்தது. அதுவும் குருவின் ஆசி என்ற கடைக்கண் பார்வையும் வேண்டும் என்பார்கள். பிறந்தபொழுதே யோகத்தில் சிறக்க அமைப்பு இருந்தாலும்கூட உடனடியாக இணைய வாய்ப்பில்லை. 

காலமாற்றத்தில், அஷ்டாங்க யோக சூத்திரத்தை, பதஞ்சலி முனிவர் வகுத்துவைத்தார். ஒரு குருவை அணுகி யோகத்தில் இணைந்து உயர்வது போலவே, தானக்குதானாகவும் இந்த அஷ்டாங்க யோக சூத்திரத்தை கடைபிடித்தால், யோகத்தில் உயரலாம் என்பது உண்மையாகிற்று. எனினும் கூட, தீட்சை என்ற குண்டலினி உயர்த்துதல் என்பதை, யாருமே தானாக கற்றிட முடியாது. அப்படி தானாக கற்றிட பல முறைகள் உண்டு என்றாலும் கூட, உயர்ந்த குண்டலினி பலவித உடல், மன, உயிர், வாழ்க்கை பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தவிர்க்கமுடியாதது. இதனால் நிச்சயமாக குரு வேண்டும்.

இந்த பதஞ்சலி முனிவரின், அஷ்டாங்க யோக சூத்திரத்தை கவனித்தால், அதில் அடிப்படையான சில பாடங்களும் வழிமுறைகளும் இருப்பதை காணலாம். இயமம் என்ற தன்னை திருத்திக் கொள்ளும் சட்டமும், நியமம் என்ற யோகத்திற்காக தான் ஏற்றுக்கொள்ளும் சட்டமும் கடைபிடிப்பது அவசியமாகிறது. அதற்கான பிறகுதான் ஆசனம் என்ற உடற்பயிற்சியை கற்று உடலை, மனதை வளமும், திடமும் செய்துகொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது.

இதை நீங்கள் கவனித்தால், இயமம், நியமம் இந்த இரண்டிலேயே முழுமையாக, அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு யோகி, யோகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டு, அதன்படி வாழவும் தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறார். அப்படியான நிலை இருக்கும் பொழுது, பொதுவாழ்வில் இருக்கின்ற அறிவிலிகள் அப்படி, இப்படி என்று இல்லாத சட்டங்களை சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்னென்ன என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இங்கே அதைச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே யோகத்தில் ஒருவர் இணைந்துவிட்டால் அதற்கான சட்டம் இருக்கிறது. இதுவழிவழியாக தொடரப்பட்டும் வருகிறது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்.

Why I can't understand the truth of Yoga? Please Explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் உண்மையை ஏன் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கமுடியுமா?


பதில்:

அந்த அளவிற்கு யோகத்திற்கான விளக்கம், மனிதர்களால் குழப்பமுற்று இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணம். நீங்கள் சாதாரணமாக யாரிடமாவது போய்

‘ஐயா, நான் யோகத்தில் இணைந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியுமா?’ என்று கேட்டுப்பாருங்கள்.

‘அதெல்லாம் காலம் போன கடைசியிலே போய்க்கலாம், இப்போ உன் பொழைப்பை பாருப்பா’ என்று பதிலளிப்பார்கள். இன்னும் கூடுதலாக,

‘உனக்குலாம் இன்னும் வயசு இருக்கு, நல்லா அனுபவிச்சுட்டு போ. நல்ல வயசுலயே ஏன் சாமியாரா போகனும்னு சொல்ற. அதுக்கெல்லாம் தனியா பிறப்புன்னு ஒன்னு அமையனும், அப்போ பாத்துக்கலாம் போ’ என்றும் சொல்லுவார்கள்.

ஏன் இந்த பிறப்பை அதற்காக, உபயோகப்படுத்திக்கொள்ள முடியாதா? ஏற்கனவே தாய் தந்தையால் முடியாத நிலையில்தானே, என்னுடைய பிறப்பும் நிழந்திருக்கிறது. அவர்களுக்காகவும், என் மூதாதையருக்காகவும், நான் என் வாழ்நாளில் யோகத்தில் இணையக்கூடாதா? இதற்குமேலும் விளக்கமறியாமல், என் பிள்ளைகளையும் பெற்று, அவர்களையும் இப்படி வாழ்விட்டு, இந்த உலகில் சராசரி இன்பதுன்பங்களில் வாழ்ந்துதான் சாகவேண்டுமா? இப்படியே என் பரம்பரை போய்க்கொண்டே இருந்தால் என்றைக்கு, கர்மா என்ற வினைப்பதிவை தூய்மை செய்து, நான் யார்? என்று தன்னையறிந்து உண்மை விளக்கம் பெற்று, பிறவிக்கடனை தீர்ப்பது? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

பிறந்தால் துன்பமும் இன்பமும் இருக்கும் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. துன்பம் என்பது இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேதாத்திரி மகரிஷியும், துன்பம் என்பது தனியாக இல்லை, இன்பத்தின் அளவு மீறும்பொழுது, ஏற்படும் பொருத்தமில்லாத உணர்ச்சி தான் துன்பம் என்று விளக்கமாக சொல்லுகிறார்.

எனவே யோகம் என்பது, நாம் வாழும் முறையை, வாழ்க்கையை, இன்பத்தை முறைப்படுத்திக்கொண்டு, அறநெறியோடு வாழ்கின்ற வழிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இந்தக்காலத்தில், அந்தக்கால சாமியார்களை உதாரணமாகச் சொல்லி, யோகத்தில் இணையாமல் இருப்பதும் முறையில்லை. யோகத்தில் இருந்தாலும் கூட, வழக்கமான உலக கடமைகளில் தவறாது, உழைத்து, பொருளீட்டி வாழ்வதில் தவறு ஒன்றுமில்லை. (இந்தக்கருத்துக்கு பலநூறு எதிர் பின்னூட்டங்கள் வரலாம்)

ஊருக்கும், உலகுக்கும் பாரமாக, மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதற்கு பதிலாக, தானாக உழைத்து பொருள் சம்பாதித்து, ஏழைக்கும், பொருளீட்ட முடியாதோர்க்கும், இப்படி பேசுபவர்களிடம்கூட கொடுத்து உதவி வாழலாமே!

எனவே யோகம் என்றால் வாழும் நெறியை கற்றுக்கொள்வதுதானே தவிர வேறு அர்த்தம் ஏதுமில்லை என்று அவர்களிடம் நீங்களே சொல்லி விளக்குங்கள்!

வாழ்க வளமுடன்.