CJ for You: child

child

Showing posts with label child. Show all posts
Showing posts with label child. Show all posts

How Vethathiriya Kayakalpa yoga practice helps to fertility?


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி, குழந்தைப் பிறப்புக்கான உயிரணுக்களை ஊக்கப்படுத்துகிறதா? விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி, குழந்தைப் பிறப்புக்கான உயிரணுக்களை ஊக்கப்படுத்துகிறதா? விளக்கம் தருக.


பதில்: 

மரபு, நவீன மருத்துவ உண்மைகளைகடந்து, இப்பயிற்சி வழியான உண்மை மட்டுமே இங்கே சொல்லப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சித்தர்கள் தங்களின் யோகவாழ்வின் சிறப்புக்காகவும், வாழ்நாளின் நீட்டிப்புக்காகவும் உருவாக்கிய, காயகல்ப யோகபயிற்சி உலகெங்கும், உயர்ந்த ஞானிகளி வழியாக பரவினாலும், சராசரி மக்கள் அதில் ஆர்வம் கொள்ளததால், காலப்போக்கில் காயகல்ப யோகபயிற்சி அழியாமல் இருந்தாலும் கூட, அந்த வழிமுறைகள் சிதறிப்போய் விட்டது. முழுமையான அதை உணர்ந்து செய்தவர்கள் யாருமில்லாத நிலை ஆகிவிட்டது.

ஆண்பெண் உடலுறவுக்கு உதவும், அந்த இன்பத்தில் நிலைத்திருக்க துணையாக இருக்கும், அந்த உறவுகளில் உடல் சோர்வை நீக்கி உற்சாகப்படுத்தும் பயிற்சிதான் இந்த காயகல்ப யோகபயிற்சி என்ற நிலையில்தான், உலகில் ஆங்காங்கே சிதறி செயல்பட்டுவந்தது. சொல்லித்தருபவரின் நிலையும் இதுதான், கற்றுகொள்பவரின் நிலையும் இதுதான். ஆனால் இந்த காயகல்ப யோகத்தின் நோக்கமும், உண்மையும் சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும் உண்மை ஆனால் அதில் எப்படிச் செய்வது என்ற விளக்கம் அதில் இல்லை, அக்கவி நூல்குறிப்புக்கள் இன்னமும் நம் கைகளில் இருப்பதும் உண்மை.

அந்த காயகல்ப கவிகள் குறித்து ஆராய்ந்த, குருமகான் வேதாத்திரி மகரிஷி, தனக்கு தெரிந்தவற்றோடு, உலகெங்கும் பரவிக்கிடக்கும் அரைகுறையான அந்த பயிற்சிகளையும், சிலரிடம் கேட்டும், நேரிலே பார்த்து விளக்கம் பெற்றும், அந்த பயிற்சி குறித்து ஆராய்ந்து உண்மை அறிந்தார். அதை செய்துபார்த்து, விளைவுகளை கணித்து, திருத்தமும் பெற்று, முழுமையாக்கினார். அதை வேதாத்திரியத்தின் வழியாக, எல்லா மக்களுக்கும் கிடைக்கச்செய்ய ‘காயகல்ப யோக பயிற்சி’ திட்டமாகவும் கொண்டுவந்தார்.

அத்தகைய காயகல்ப யோக பயிற்சிதான், ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்து நாத சக்தியை அடைப்படையாகக் கொண்டதாகும். மேலும் அந்த வித்துநாதத்தை ஊக்கப்படுத்தி, உயிரணுக்களை வலுப்படுத்துகிறது. உயிராற்றலையும், அதன் படர்க்கை நிலையான மனதையும் வளப்படுத்துகிறது. இந்த உண்மையை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி, 1980ம் ஆண்டுகளின் வெளிநாட்டு பயிற்சி வகுப்புக்களிலே விளக்குகிறார். அந்த வகுப்பில் கலந்து கொண்ட அன்பர், தன் மனைவிக்கு, குழந்தைப்பேறு பிரச்சனை நீங்கி, உயிரணுக்களின் எண்ணிக்கை அபரிதமாக உயர்ந்ததை சொல்லுகிறார். அதுபோலவே இங்கும் பலருக்கு அத்தகைய மாற்றம், ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைத்த உண்மைகளை அறியமுடிகிறது.

        நான் மருத்துவன் அல்ல, யோக ஆராய்ச்சியாளன். எனக்கு கிடைத்த உண்மை தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகளை உங்களுக்கு அளிக்கிறேன்.

நீங்களும், காயகல்ப யோக பயிற்சிக்கு முன்னதாக ஒரு மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு, அந்த காயகல்ப யோக பயிற்சி தொடர்ந்து செய்துவந்து, குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்னொரு மருத்துவ பரிசோதனை செய்து உண்மையை அறியமுடியும். மேலும் விளக்கங்களின் உண்மை அறிய, மனவளக்கலை மன்றத்தை அணுகலாம். ஆழியாறு காயகல்ப யோக பயிற்சி ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.

வாழ்க வளமுடன்.

-

Can the horoscope of children born at the same time be the same?


குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான கேள்விதான். நீங்கள் பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கலாமே. நீங்கள் இப்பொழுது அம்மாவின் கருவறையில் இருக்கிறீர்கள். குழந்தைப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்து தகுந்த நேரத்திற்கு மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஐந்து தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரே சமயத்தில் உதவ மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதிகாலை 3. 40 க்கு, உங்களோடு சேர்ந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இத்தனை குழந்தை பிறப்பை, அங்கேயே ஆறு சோதிடர்களை வைத்து ஜாதகமும் எழுதிவிடலாமா? சரி. குழந்தைபிறப்பின் நேரத்தை மருத்துவர்கள் சொன்னபடி குறித்து ஜாதகம் கணித்தாயிற்று.

இப்பொழுது ஏறக்குறைய எல்லா ஜாதகமும் ஒரே மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  என்றாலும், ஜாதகம் அதன் நுணுக்கத்தில், கணிதத்தில் நுண்ணிய மாறுதலாகவே அமைதிருப்பதையும் நாம் அறியமுடியும். இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஒரே பெயர் வைக்கப்போவதில்லை. தனிப்பட்ட விருப்பமான பெயர்தான் வைப்பார்கள். கணித்த ஜாதகம் ஒன்றாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுவதில்லை, கொட்டாவி விடுவதில்லை, தானாக சிரிப்பதில்லை. ஒரு குழந்தை காலையில் தூங்கும், இரவில் அழும், சில குழந்தை இரவில் தூங்கும், வெளிச்சம் வந்தால் அழுதுகொண்டே இருக்கும். ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும், ஒரு குழந்தை அதை அறவே மறுக்கும். ஒரு குழந்தை தாயின் அணைப்பை விரும்பும், மறு குழந்தை தூக்கினாலே அழும். இப்படி பலவித மாறுபாடுகள் அங்கேயே வெளிப்படுவிடுகின்றன அல்லவா?

ஜாதகமும், அதன் கிரநிலைகளும் ஒன்றாக இருக்கட்டும். அந்தந்த கிரக நிலைகளின் அலைவீச்சு ஒன்றாகவே இருந்தாலும், அதை பெறுவது, ஏற்பது, விலக்குவது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை. மேலும் அந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை இப்படித்தான் வளரும் என்று சொல்லவும் முடியாது. அப்படி எந்த ஜோதிடரும் சொல்லவும் மாட்டார். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைகாட்சி டிஷ், உங்களின் ஒரே ஒரு 49 இன்ஞ் ஸ்மார்ட் டிவி வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பது போலவே, இந்த குழந்தைகள் மாறிக்கொண்டுதான் வளரும் என்பது உண்மை. ஒரே மரத்தின் விதைகளை நீங்கள் விதைத்தாலும், வளர்ந்து அதுதரும் அதன் கனிகள் ஒரே சுவையாக இருப்பதில்லை.

அப்படியானால் ஜாதகம்? அது ஒரு குறிப்பு, கையேடு. அதைக்கொண்டு அந்தக் குழந்தைகளின் அடிப்படை அறிந்து மாற்றத்தை விரும்பி செயல்பட்டு வாழ்வில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். பார்வைக்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆராய்ந்து பலன் தரும் பொழுது அது மாறுதலை தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொடு தனித்தனியான குழந்தைக்கும் பதினாறு வகையான மாற்றங்கள் உண்டு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்று மாறினாலும் ஒரே மாதிரி இருக்கபோவதில்லை. அதனால் ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் கணித்தாலும், நகர்ந்துகொண்டே இருக்கக்கூடிய இந்த வானியல் நிகழ்வு, நுண்ணிய மாற்றதை கொண்டிருக்கும். அது அந்த ஜாதகத்திலும் இடம்பெறும் என்பதுதான் உண்மை.

        குழந்தையின் அடிப்படை குணாதசியம், கர்மா, செயல்பாடு, மனநிலை, பரம்பரை, வழக்கம், பழக்கம், இப்படியாக எண்ணற்ற விசயங்கள், குழந்தைக்கு குழந்தை மாறுபாடுபெறும் அல்லவா? அதுபோல அந்த ஜாதகமும் தன்னுள்ளே ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும். அதை நல்ல தேர்ந்த, அனுபவம் உள்ள ஜோதிடர் நிச்சயமாக கண்டடைவார்.

வாழ்க வளமுடன்
-

To whom does Vethathiriyam give importance to living people? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். ஏன்?


பதில்:

குரு மகான் வழங்கிய வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆம், உண்மைதான். தெய்வீக பேராற்றலே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றதே? நாம் தந்தால் ஏதும் குறைந்துவிடுவோமா? இந்த இயற்கையின் பரிணாமத்தில் இருக்கிற பெண் என்ற தன்மைக்கான முக்கியத்துவத்தை, நாம் இன்னமும் சரியாக தரவில்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. ஆனாலும் வேதாத்திரியம் முழுமையான முக்கியத்துவம் தருகிறது.

எனக்கும், இந்த வேதாத்திரி மகரிஷி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெண்களுக்கு தருகிறார்? என்ற கேள்வியும் சிந்தனையும் எழுந்தது உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கும்பொழுதான், மகரிஷியின் தெளிந்த பார்வை எனக்கும் கிடைத்தது. அதை நான், என் வாழ்க்கையூடாக அனுபவமாகவும் பெற்றேன் என்பதே உண்மை.

உலக வரலாற்றில், பெண்மைதான் ஆளுமை என்பதாக இருந்தது என்பதை அந்த வரலாற்று சுவடுகள் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதில் குழப்பம் விளைவித்து, பெண்களை இப்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதில் கலாச்சாரம் என்ற விதியையும் அவர்களுக்கு புகுத்திவிட்டனர். பெண்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆண்கள்.

இந்த ஆண்களையும், பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கிறாளே ஒரு பெண்? அவளுக்குத் தெரியாதா தன்னை பாதுகாத்துக்கொள்ள? அவள் தன்னை மட்டுமல்ல, தன் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் உள்ளமைப்பும், திறமையும் கொண்டவள்தான். இல்லையென்றால், இந்த உலகை, புதிய பரிணாமத்தில் நிலை நிறுத்த, குழந்தை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்ப்பதை, இயற்கை அவளிடம் ஒப்படைக்குமா? ஏன் இதை ஆண்கள் வசம் இயற்கை கொடுக்கவில்லை?! பதில் தருவார்களா இந்த ஆண்கள்?!

ஒரு ஆணுக்கு, அவனுடைய வாழ்வில், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக அமைவது பெண் தானே?! மேலும் உறவுகளிலும், நட்புவட்டத்திலும் பெண்கள் உண்டுதானெ? ஆனால், உலகில் பிறந்து இப்போது இருக்கிற பெரியவர்களான ஆண்களும், நடுத்தர வயதுள்ள ஆண்களும், இளையோர்களான ஆண்களும், சிறுவர்களான் ஆண்களும் தன்னுடைய வாழ்வில், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இல்லை என்று சொல்லமுடியும். இதெல்லாம் பிற ஆண்களைப்பார்த்து, பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கற்பிதங்கள். மேலும் வரவேற்பரை வரை வந்து பாடம் நடத்தும் தொலைகாட்சியும், சினிமாவும், இன்னும் பலவும் கூட இருக்கிறதே?!

ஒரு ஆண், தன்னுடைய வாழ்வில், எல்லாமாக இருக்கும் ‘அவனுக்குரிய’ பெண்ணை இழந்தால்தான் அவன் ஒரு நல்ல பாடம் படிப்பான். ஆனால் அந்த திருத்தத்தை பெற்று, வருந்திடவும், இதுநாள் வரை இப்படி செய்துவிட்டேனே என்று மன்னிப்பு கேட்கவும், அவனுக்குரிய பெண் அங்கே இருக்கமாட்டாளே?! ஆனால், பெண்ணுக்கு இதுதான் மதிப்பு என்ற உலகியல் வழக்கம் உடனே மாறிடாது. நாம் நம் குடும்பத்தில் மாற்றினால், நம்முடைய ஆண் குழந்தைகள் மாற்றிக்கொள்ளும், அதைக் கண்டு சமூகத்தில் உள்ள ஆண்குழந்தைகள் மாற்றிக்கொள்ளும். அதன்வழியாக உலக ஆண்களும் மாற்றம் பெறுவார்கள்.

வாழ்க வளமுடன்.

Nature's Gift


 இயற்கையின் பரிசு!



அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 


-

Present by
Sugumarje