CJ for You: friends

friends

Showing posts with label friends. Show all posts
Showing posts with label friends. Show all posts

Do you know how to treat a lifelong partner, lover and better half?


உங்களின் மனதை கவர்ந்தவரிடம், வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவருடன், வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?


உலகில் மனிதனின் பிறப்பு, என்றுமே தனியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஆண், பெண் என்றான அன்பு, காதல், அதன் வழியான திருமண பந்தம், குடும்பம் என்ற அமைப்பு ‘பெரும்பான்மையாக’ அமைந்திருக்கிறது. அதுதான் சமூகத்தின், உலகின் நடைமுறையாகவும் இருக்கிறது. பிறக்கும் ஆணும், பெண்ணும் தனக்கு பருவம் வந்த காலத்தில், அடுத்த நிலையான வாழ்வைத் தொடங்க, ஆண் ஒரு பெண்ணையும், பெண் ஒரு ஆணையும் துணையாகக் கொண்டு, திருமணம் வழியாக, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் பெற்றோரும், உற்றோரும், நண்பர்களும் துணையாக இருந்து, இதை வழிநடத்தியும் தருகிறார்கள். இந்த குடும்பம் என்ற அமைப்பு எனக்கு, அமையவில்லையே? என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கமும் காண்போம்.

தனி நபரான வாழ்க்கை, ஓர் முழுமையை தருவதில்லை. எனினும், அது கடமையை தீர்த்தல் என்பதாக நிகழ்ந்துவரும். இந்த தனி நபர் என்ற நிலை, தன் விருப்பத்தாலும், சூழ்நிலையாலும், சந்தர்ப்பங்களாலும் அமைந்துவிடும். ஆனால், எந்த நொடியிலும், இதை அவரே விரும்பி, தன் முயற்சியாலும், மற்றவர்களின் துணை மற்றும் உதவியாலும், நிச்சயமாக மாற்றம் கொள்ள முடியும். அப்படி இருக்கும்பொழுது, யார்மீதோ பழி சொல்லுவதில் அர்த்தமில்லை. உலகின் நடைமுறைக்கு ஏற்றபடி, கல்வி, வழக்க பழக்கம், வேலை, பொருளாதாரம் என்ற வகையிலும், உங்களை தகுதியாக்கிக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். முக்கியமாக காத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கை எந்தவகையிலும், பழி கொள்வதாக கருத இடமில்லை. எனவே தனி நபருக்கும் இயல்பாக, இல்லறம் அமையும்.

எந்த வகையில், ஆண், பெண் என்று இருந்தவர்கள், கணவனும் மனைவியாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, சடங்குகள், சம்பிரதாயம், வழக்கம் வழியாகவோ, ஒப்பந்த பதிவு வழியாகவோ, திருமணமாகி, இல்லறத்தை தொடங்குகின்றனர். அந்த இல்லறம் சிறப்பாகவே தொடர்கிறதா? என்று கேள்வியை முன்வைத்தால், 

‘சிறப்பாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது’ என்போருக்கு, என்னுடைய நல்வாழ்த்தை பகிர்கின்றேன். ‘அது, சிறப்பாக தொடங்கியது உண்மைதான். ஆனால் இன்றோ தடுமாறுகிறது’ என்பது பெரும்பாலோரின் பதிலாகும். 

சிறப்பாக தொடங்கியது ஏன் தடுமாறுகிறது? என்று அதில் சிக்கிக் கொண்ட கணவனும், மனைவியும் சிந்திக்கின்றனர். அதை விலக்கிட, தீர்த்திட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களே அறியாமல், மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பிறகு, அந்த தடுமாற்றம், அவர்களை பாதை மாற்றி, திசைக்கு ஒருவராக பிரித்தும் வைக்கிறது. இந்த தடுமாற்றம், சிக்கல், பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? என்று வேதாத்திரி மகரிஷியிடம், அன்பர்கள் கேட்கிறார்கள். அவர் ஓர் துறவி ஆயிற்றே? என்று கேள்வி எழுந்தாலும், அதற்கு அவரே பதிலும் சொல்லுகிறார். ‘நான் துறவியாகவே ஆன்மீகத்தில் நுழையவில்லை. உங்களைப்போல, நானும் இல்லறத்தில் வாழ்ந்து, அந்த நிறைவில்தான், யோகத்தில் நின்றேன். அதனால், அந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டிடவும் முடியும்’ என்கிறார்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி? இதோ, வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதலை காண்போம். சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு, மூன்று பண்புகள், 1.  விட்டுக் கொடுப்பது, 2.  அனுசரித்துப் போவது, 3.  பொறுத்துப் போவது ஆகிய குணங்கள் அவசியம். இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!’ எல்லோரும் ஆவலோடு, மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா? மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

‘யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.’ என்கிறார்.

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார். ‘அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம். அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள்.  அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!’

இல்லறத்தை விட்டு விலகிடாமல், அதில் ஓர் நிறைவைகண்டு, முழுமை செய்துவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும், யோகத்தின் வழியாக, பருவம் வந்த அனைவருமே, மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், நான் யார்? என்ற தன்னையறிதலும், பிரம்மஞானமும் வழங்கி, தனிமனித விடுதலையும், அமைதியும் தந்து, அதன் வழியாக, உலக சமாதானமும் தந்து வழிநடத்தும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறதுதானே?

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது. அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார் மகரிஷி. அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம். 

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம்.

அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி 

யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

Invitation for Friend and Followers


அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு!


Facebook, Twitter, Instagram, WhatsApp and Telegram, YouTube, SnapChat,  Etc. ஆகிய அனைத்து சமூகத்திற்கு,

வயது வித்தியாசம் இன்றி, ஒரே கருத்துப் பரிமாற்றம், எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு உள்ளார்ந்த விருப்பம், எதிராளை பாராட்டுதல், ஊக்குவித்தல், இப்படியான நோக்கம் அமைந்து, சமூக இணையதளங்களில் கலந்திருக்கிறோம். ஒவ்வொருநாளும் முடிவின்றி அது தொடர்கின்றது.

நாம் இங்கே, நட்பாக இணைந்திருக்கிறோம். எத்தனை ஆண்டுகால நட்பில் நெருங்கி உறவினர்கள் போலான நெருக்கத்தையும் பெற்றிருக்கிறோம். நேராகவும் பார்த்து, எந்த வித்தியாசமும் இன்றி பழகுகிறோம். அன்பு பாராட்டுகிறோம். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் கொள்கிறோம். அதுமட்டுமே, மகிழ்ச்சி, பூரிப்பு, சந்தோசம், கவலை, துக்கம், சினம், வெறுப்பு, சிரிப்பு, மெல்லிய நகைச்சுவை, கேலி, கிண்டல் இப்படி எல்லா உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்கிறோம். பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பும் காட்டுகிறோம். அதை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பிளாக்செய்து நீக்கியும் விடுகிறோம், நீங்கியும் விடுகிறோம்.

நமக்கென்று இருக்கின்ற, இருந்த பிரச்சனைகளில் சிக்கினாலும் கூட தனித்து நின்று, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதைச்சொல்லி புலம்பாமல், இன்னொருவரையும் கஷ்டப்படுத்தாமல், பேஸ்புக் சமூக குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழந்தால் பரிதவிக்கிறோம், அஞ்சலி செலுத்துகிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறோம். ஒரு குழந்தை பிறந்தால் மகிழ்கிறோம். அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். நண்பர்களின் பிறந்தநாளில் நாமும் குதூகலம் அடைகிறோம். 

ஒருவருக்கொருவர் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னால் மிகப்பொருத்தம். பால்பேதம் அற்றும்கூட பழகுதல் இங்கேதான் சாத்தியமாகிற்று என்றும் சொல்லலாம்.

அதுபோக உலகில் நாம் காணும், வஞ்சம், பழிவாங்குதல், ஏற்றத்தாழ்வு, மதியாதிருத்தல் அனுபவங்களும் கூட லேசாக உண்டுதான் எனினும் அவர்களை எளிதாக விலக்கியும், கடந்தும் வந்திருக்கிறோம். நட்பு எண்ணிக்கை அதிகம் ஆகிவிட, அரசியல் மேடையாகிப் போனது என்பது சோகம் தான். எனினும் அவர்களோடு நட்பை முறித்துவிடவில்லையே?! இங்கே இதுவரை சொன்ன எல்லாமே இன்னமும் தொடர்கிறதுதான். எனினும்... ஏதோ ஒன்றை விட்டுவிட்டு கலந்திருக்கிறோம் என்று மனம் உறுத்துகிறது. அது என்ன?

ஒரு நட்பாக நாம் இங்கே இணைந்திருந்தாலும், ஓவ்வொருவராக இழந்துகொண்டும் வருகிறோம், காலத்தால், அவர்களின் வயதால், உடல் பிரச்சனைகளால், பொருந்தாத சூழ்நிலைகளால்! அப்படியான சூழல் நம்மை சூழ்ந்துவிடுவதற்கு முன்னால், எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நாம், நம்மை யார்? என்று அறிவதற்கான பகிர்வை பகிர்ந்தோமா? அதுகுறித்து உண்மைகளை அறிந்தோமா? என்றால் இல்லைதானே?

ஒரு மனிதனாக, இந்த உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, நட்பாகி, அனுபவித்து, பகிர்ந்து, பெற்று வாழ்ந்து மறைவது மட்டுமா? இந்த பிறப்பு ஏன் நிகழ்ந்தது? பிறப்பில் ஏதேனும் கடமை இருக்கிறதா? நோக்கம் இருக்கிறதா? மனிதனானவன் யார்? நான் யார்? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? எங்கே போகப்போகிறேன்? அவ்வளவுதானா? வேறேதேனும் உண்மை உள்ளதா? கடவுள் உண்டா? இல்லவே இல்லையா? இருந்தால் எப்படி இருக்கிறது? இல்லையென்றால் எப்படி நிரூபணம் செய்வது?  மிதக்கும் உலகை தாங்கிப்பிடிப்பது யார்? அது இயற்கை என்றால் இயற்கை என்பது என்ன? இப்படி பலவாறாக கேட்டுக்கொண்டோமா? அதை மற்றவர்களிடம் கேட்டோமா? பதில் அறிய முயற்சித்தோமா? தெரிந்த பதிலையாவது சொன்னோமா? என்ற கேள்விகள்தான் என்னுடைய மனதை உறுத்துகிறது.

இங்கே நான் ஏதோ எனக்கு தெரிந்த வழியில் சொல்லுவதாக நினைக்காமல், இதே பதிவையே நீங்கள் எழுதியதாக நினைத்து, உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதும், பகிர்வுகள் இல்லாமல் நீங்களாகவே தேடிக்கொள்ளலாம் என்பதும் என்னுடைய விருப்பம்.

ஒருவேளை இந்த மாற்றத்திற்கான விதையை நானும் விதைக்காமல் போனால், இதை, இப்படி ஒரு திருத்தத்தை, வழியை, யோசனையை, இப்படியும் ஒரு வாழ்கைக்கான நோக்கமும் பாதையும் உண்மையும் இருக்கிறது என்றுகூட சொல்லாமல் ஏமாற்றிவிட்டானே என்று நீங்கள் சொல்லக்கூடும். ஏமாற்றியதற்காக நானும் ஏதோ ஒருநாளில் வருந்தக்கூடும். சரிதானே?!

இன்றோ, நாளையோ, எதாவது ஒருநாளோ, இனி நம்மை அறிந்து உணர விருப்பம் கொள்ளலாமா? யோசித்து முடிவெடுங்கள்! இதெல்லாம் ஆகாத வேலை என்றால் கடந்தும் விடலாம், தவறில்லை. நமக்காக வேறு யாரேனும் ஒருவர் நம் குடும்பத்திலேயே பிறவி வழியாக பிறந்து வந்து நம் கடனையும் சேர்த்து அவரின் கடன் தீர்ப்பார் என்பதுதான் உண்மை!

-

Society, which does not respect a contemporary, celebrate after death? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறதே? ஏன்?


பதில்:

நல்ல சிந்தனைக்குரிய கேள்வி. ஆம் உண்மையே.சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறது. சமூகம் மட்டுமல்ல, இந்த உலகமே என்றும் சொல்லலாம். ஒரே காலத்தில் பிறந்து வளர்ந்த மக்களிடையே, ஒரு சம அளவிலான மனோபாவம் மட்டுமே இருக்கும். ஆனால் அனுபவத்திலும், அறிவின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும், செயலிலும், திட்டங்களிலும் மாறுபட்டு இருப்பதை மறுப்பார்கள். ‘அப்படி என்னய்யா இவர் பெரிய ஆளு?’ என்று வெளிப்படையாகவும் சொல்லுவார்கள்.

நீங்களே உங்களை பரிசோதிக்கலாம். உங்கள் மாணவ பருவத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். உங்களோடு படித்த மாணவர்கள் ஒவ்வொருவரையும் இப்போது பார்த்தால், அவர்களின் வளர்ச்சி, திறமை, சிந்தனை, செயல்பாடு மாறி இருப்பதை கண்டு நீங்கள் வியக்கலாம் அல்லது வருந்தலாம். அதுபோலவே உங்களையும் அதே கண்ணோட்டத்தில் அவர்கள் பார்ப்பார்கள். இதுதான் நிகழும். இதற்கு மேலே உங்களை அவர்களும், அவர்களை நீங்களும் மாறுதலாக பார்க்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் சமகாலத்தவர்கள், ஒன்றாக இருந்தவர்கள் ஆயிற்றே!

இன்னொரு உதாரணமாக, ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்கப்படும் நம் தேசப்பிதா, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’  தன்னுடைய வாழ்நாளில், தான் நினைத்த எண்ணப்போக்கை செயல்படுத்திடும் பொழுது, மற்றவர்களால் அவமானங்களைத்தான் சந்தித்தார். இந்திய சுந்திர போராட்ட காலத்தில், ‘இவருக்கு இதெல்லாம் தேவையா?’ என்றுதான் விமர்சனங்களை பெற்றிருக்கிறார். ஆனால் அவரின் துணிவான, உறுதியான செயல்பாட்டின் வழியாகவே, விமர்சனங்கள் வைத்த்தவர்களை வாயடைக்கச் செய்துவிட்டார். காந்திஜியின் தலைமுறையினரை விட, அடுத்த தலைமுறைதான் அவரை கொண்டாடியது. ஆனால் காந்திஜியின் நோக்கம் வாழும் தலைமுறையின் விடுதலையோடு அடுத்த தலைமுறைக்கான விடுதலையும் இனி வரக்கூடிய தலைமுறைக்கான விடுதலையும் தானே? மேலும் காந்திஜி என்பவரை விரும்பாத, பிடிக்காத நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள் தானே?!

இதுபோல அறியப்படாதவராகவும்,  தவறாக கருதப்படுவோராகவும், இந்திய சுந்திர போராட்டங்களில் அவர் பங்கை மறைத்தும் காட்டப்படுபவர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆவார். அவருடைய வாழும் காலம் முதல் இப்போதுவரை பலப்பல விமர்சனங்களை, கதைகளை, கருத்துக்களை வைக்கிறார்களே தவிர, அவரின் உண்மை சாதனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்றே அறியமுடிகிறது. காந்திஜியின் வழியான அஹிம்சா சுதந்திர போராட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் மாறுதலான நிலையில்தான் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் செயல்பட்டார். இதற்காக, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிரான நாட்டு அரசுகளின் ஆதரவையும் தேடி ஏற்றுக்கொண்டார். அப்போது நடந்த போர்களிலும், சண்டைகளிலும், பிரச்சனைகளிலும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலேய அரசுக்கும் எழுந்த பிரச்சனைகள் பல. அதில் என்னென்ன ரகசியங்கள் இருந்தன என்று யார் அறிவார்? 

குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், தான் பிறந்து வளர்ந்த ‘கூடுவாஞ்சேரி’ ஊரில் பலவித இன்னல்களை சந்தித்தார். அந்த குறிப்புக்கள் அவரின் என்வாழ்க்கை விளக்க நூலில் சொல்லப்படவில்லை என்றாலும், பிறர் எழுதிய மகரிஷியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தொகுப்பில் படிக்கமுடியும். ‘கூடுவாஞ்சேரி’ ஊரில், வேதாத்திரி மகரிஷி அமைத்த தியான குடில், மாவட்ட கலெக்டர் அவர்களால், அரசு வழங்கிய நிலத்தில், மகரிஷியின் தொண்டு செய்யும் கருத்தை ஏற்று அரசாங்கமே அளித்த நிலம் அது. ஆனால். அக்குடில் உடனடியாக அந்த ஊர்கார்களால் கலைக்கப்பட்டு, பெரும் பிரச்சனையாகி, மகரிஷியின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்ததை சொல்லலாம். இதை மகரிஷி அவர்கள் ‘ எனக்கு இந்த ஊரில் வேலையில்லை, என்ற பாடத்தை இறைநிலை எனக்கு சொல்லுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

வேதாத்திரி மகரிஷி குறித்த உண்மைகளை உணர்ந்த நாம், குரு மகான், தத்துவஞானி, அருட்தந்தை, மகரிஷி, என்று புகழ்பாடுகிறோம். இப்போதைய தலைமுறையும் போற்றுகிறது. வரும் தலைமுறையும் உலகமும் போற்றும். இதுதான் புரிந்துகொள்ளும் நிலை.

ஆனாலும் வாழும் காலத்தில் சக மனிதர்கள், அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்பதுதான் உலக நிலைபாடு. அது அவர்கள் குறை மனமும், அறிவும் செய்யும் மாயமாகும்.

வாழ்க வளமுடன்.

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.

Why is such a change taking place in the conditions of the growing youth in this age?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வளரும் குழந்தைகள் சமூக கட்டமைப்பை உடைத்து, உறவுகளை, பெரியோர்களை, பெற்றோரையும் கூட மதிக்காத நிலை ஏன்?


பதில்:

மிக நுட்பமான, ஆராய்ச்சிக்குறிய கேள்வி. இந்த கேள்வியைக் கேட்கின்ற உங்கள் வயது என்ன என்றும் இங்கே குறிப்பிடவில்லை. அதனால் இந்த கேள்விக்கான முகாந்திரம் என்ன என்பதும் அறியமுடியாது. என்ன வகையான பாதிப்பை நீங்கள் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்பதும் தெரியவில்லை. முக்கியமாக இதற்கு மிக எளிதில் பதில் தந்துவிடவும் முடியாது. உலகில் ஒவ்வொரு மாற்றமும், முன்னேற்றமும், வாழ்கின்ற, வளர்கின்ற, வரப்போகிற மக்கள் சமுதாயத்தை பாதிக்கும் என்பது உண்மை. விஞ்ஞான, அணுவியல், வானியல், தகவல் தொழில் தொடர்பு முன்னேற்றங்கள் முன்னைவிடவும் இக்காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னளவில் அப்படியேதான் இதனை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மையே. 

இந்தக்கால தலைமுறை குழந்தைகள் உலகம் முழுவதும் அப்படி இருப்பதாக சிலர் சொன்னாலும் கூட, இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிப்பவர்களும் நிறைய உண்டு. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு என்பதை மறுக்க இயலாது. பொதுவாக, ஒன்றை குறை சொல்லுபவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார்கள். அவ்வகையில், இப்படி குறையாக சொல்லுபவர்கள், பழமைவாதிகள், வாழ்ந்துமுடித்தவர், பொறாமையில் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இளைய சமுதாயத்தோடு, வாழத்தெரியாத, பிற்போக்குவாதிகள் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள்.

எனவே இந்தக்கேள்விக்கான பதிலை, தனியே தருதல் தகாது. இதை ஒரு குழுவாக ஆராய்ந்து உண்மை அறியலாம். அந்த வகையில் விவாதமும் செய்யலாம். அதில் வரும் அல்லது கிடைக்கும் முடிவுகளை வரிசைப்படுத்தி, அதற்கு மாற்றாக நல்ல மாற்றங்களை செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் அல்லது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! ஏனென்றால் கேள்வி கேட்பவருக்குக்கூட என்ன பதில் என்பது தெரியும் அல்லது என்ன பதிலாக வரும் என்பதும் தெரியும். அந்த வகையில் உங்கள் கருத்தையும் பதியலாம்!

வாழ்க வளமுடன்.

Mobile Service




நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில்,
“கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா என்கூட வாங்க ஜி, என் செல்போன் சர்வீஸ் செய்யனும், போய்ட்டுவருவோமே” என்றார்.
“என்னாயிற்று”
“என் கிட்டே இரண்டு போன் இருக்கு. ஒன்றை பேண்ட் பாக்கெட்டில இருந்தபடிக்கு என் மனைவி தண்ணீரில் துவைக்க போட்டுட்டா”
“அட பாவமே”
“ஒரு அரை மணியில் தேடி எடுத்தாச்சி, கவர் கழற்றி, வெயில் காயப்போட்டு(?!) பிறகு இயக்கினால் ஒரே ஒருநாள் மட்டும் உயிரோடு இருந்தது. பிறகு செயலிழந்துவிட்டது”
“நல்லவேளை வெடிக்காமலோ, வேறெதும் ஆகாமலோ இருந்தவரை நல்லது”
“என்ன ஜி, பயமுறுத்துறீங்க!”
“மின் குறுக்கு ஏற்பட்டால் வெடிக்கவும் செய்யுமே, சரி வாங்க, அதன் நிலைமையை சோதித்துவிடலாம்”

நகரில் இருந்த தனிப்பட்ட சோதனை நிலையத்தை அடைந்தோம். அங்கே வரவேற்பாள பெண்ணிடம் விபரம் சொன்னேன். செல்போனுக்கு நடந்ததை கேட்டு அடடா என்று கவலைப்பட்டாள். உள்ளே இருந்த சோதனைச்சாலை அறைக்கு விபரம் சொன்னாள். ஒரு நபர் எட்டிப்பார்த்தார். பிறகு வெளியே வந்தார், புன்னகைத்தவாறே!
அவரிடமும் கதையை சொல்லி, செல்போனை கையில் கொடுத்தோம். பேசிக்கொண்டிருக்கையில்... வழக்கமானபடி என் பிசினஸ் கார்டை கையில் கொடுத்தவாறே

“நான் ஒரு ஆர்டிஸ்ட்” என்றேன்.
“ஓ... உங்களை தெரியும் சார்”
“அப்படியா?”
“ஆமா, 6வது கிராஸ்லதானே இருக்கீங்க?”
“ஆமா”
“பாரதிநகர்”
“அட, ஆமாங்க, நீங்க அங்கேதான் இருக்கீங்களா?”
“சார், நீங்க இரண்டாவது வீடு, நான் முதல் வீடு”
அடப்பாவிகளா!!
“ஓ. அந்த மாடிவீடு?” (கிழ்வீட்டின் உரிமையாளரை எனக்குத்தெரியும்)
“ஆமா சார்”
“அடடா. மனிச்சிக்கங்க... நான் உங்களை பார்த்ததில்லே, அதான் யார்னு தெரியலை”
“அப்படியா, பரவாயில்லை சார்”

பிறகு செல்போன் சோதனைக்கு தயாரானது... என் நண்பர்,
“ஜி, சொல்லவே இல்லே. இவர் உங்க ஏரியான்னு”
“ஹே, எனக்கே இப்ப தானய்யா தெரியும்”

பரிசோதனையின் முடிவு: செல்போன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிலைக்கு போய்விட்டது. எரிக்கவோ, புதைக்கவே அது நண்பரின் விருப்பமாகிவிட்டது.

சோதனைக்கூட புதிய நண்பருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாங்கள் வீடு திரும்பினோம். என் வீட்டில், என் மனைவியிடம் புதிய நண்பரைபற்றி சொன்னேன். செம டோஸ் எனக்கு விழுந்தது.

“வெளியே போனா, வந்தா யார் பக்கத்திலே இருக்காங்க, என்ன பண்றாங்கன்லாம் பேசாம இருந்தா இப்படித்தான் நடக்கும், இனிமேலாவது திருத்திக்கங்க”
“சந்தர்ப்பம் இல்லாம (ஜாமீன் இல்லாம) திடீர்னு போய் நீங்க யாரு, என்ன செய்யறீங்கன்னு கேட்டா பயந்துற மாட்டாங்களா?”
“அதுக்காக... அப்புறம் இப்படித்தான் ஆகும், என்ன நினைப்பாங்க உங்களைபத்தி???”
“அது கவலை இல்லை. நானா போய் பேசுறது ஆகாதவேலை, இப்போதைய காலத்தில், தனக்கான ஆதாயமின்றி யாருமே பேசுவதில்லை. அப்படி பேசுபவர்களில் ஒருவராக என்னை தவறாக எடைப்போடவே வாய்ப்பு அதிகம்”
“அப்போ எப்பத்தான் பேசுவீங்க?”
“நண்பராக இருந்தா!”
“எப்படி நண்பராவீங்க?”

அதானே????

என் பார்வையில் மட்டும் தெரிந்த கொசுவர்த்தி ஒன்று சுழன்று, என்னை முப்பது வருடங்களுக்கு முன்னால் அழைத்துச்சென்றது...
என் நண்பரின் சகோதரி கேட்டார்...
“ஏன்ப்பா சுகுமார்... உன் ஃபிரண்ட் என்னடானா பேசியே கொல்றான். நீ பேசாம கொல்றே. நீ பேசவே மாட்டியா?”
“ஏன் பேசாம, நீங்க பேசினா பேசுவேன், யாராவது பேசினாத்தான் பேசுவேன்”

அவர் முகத்தில் என்ன ரியாக்சன் ஏற்பட்டது என்பதை கவனிக்க தவறிவிட்டேன், அந்தவயதில் வேறெதோ சாலையில் வேடிக்கை பார்த்தபடி...

*image source from istockphoto