CJ for You: nation

nation

Showing posts with label nation. Show all posts
Showing posts with label nation. Show all posts

The best way and solution for the perfect and complete life!


உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?


பதில்:

ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?

ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?

மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?

உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும். 

மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Does the occasion and the situation automate? If not, do we create ourselves?


சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


பதில்:

நல்ல மிக சிந்தனைக்குரிய கேள்வியை கேட்ட உங்களை பாராட்டுகின்றேன். பொதுவாகவே உலகில் வாழும் மனிதனை ‘சூழ்நிலைக் கைதி’ என்று பொருள்பட சொல்லுவார்கள். நினைத்தை செய்யமுடியாத தன்மையில் சிக்கிக் கொண்டவன் என்ற உண்மையான அர்த்தத்தை அது தருகிறது எனலாம். அப்படியான சூழ்நிலை கைதி என்றால், மனிதானனவனுக்கு, வாழ்கின்ற இந்த உலகில் அவனுக்கு நிகழ்வது, வந்து சேர்வது ஆகிய எல்லாமே தானாகவே வந்து அமைவதுபோன்ற நிலைதான் இருக்கிறது என்ற பொருளையும் உருவாக்கும். இது ஓரளவு உண்மைதான் எனினும் மற்றொரு தன்மையும் உண்டு.

மனித வாழ்வியலில், எந்த ஒரு மனிதரும் தனித்த வாழ்க்கைமுறையை கடைபிடிக்கவழியில்லை. எப்படியாயினும், ஒரு குடும்பத்தின் வழியாக, சமுகத்தின் வழியாக, நாட்டின் வழியாக, உலகின் வழியாகவேதான், அப்போதுள்ள வழக்க பழக்கங்களை ஏற்றுத்தான் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. தனித்து வாழ்ந்தாலும், விலகி வாழ்ந்தாலும் அது சமூக குற்றமாகவும் ஆகிவிடும். அதற்கு அவன் வாழ்கின்ற நாட்டின் சட்டமும், விதிமுறைகளும் இடமளிக்காது. மேலும் தண்டனையும் தந்துவிடும் என்பது உறுதி.

இதனால், மனம்போன போக்கில் என்பதுபோல ஒரு மனிதன் தற்சார்பாக, தன்னியல்பாக வாழமுடியாது. எந்தவகையிலாவது, இன்னொருவரோடு, பிறமனிதர்களோடு, இந்த சமுகத்தோடு இணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் பகிர்வும் இருந்திடவேண்டும். இந்த வாழ்வியல் அடிப்படையில் கவனித்தால், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைவதும் உண்டு, தேவையின் காரணமாக, நாமும் உருவாக்கிக் கொள்வதும் உண்டு என்ற ‘இரட்டை நிலைப்பாடு’ இருப்பதை அறியலாம்.

ஐந்தறிவு உயிரினங்கள் வரையிலும், அவை ‘இயற்கைச் சூழலின் கைதி’ என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் ஐந்தறிவு உயிரினங்கள் ‘இயற்கையை மீறுவதில்லை’. இந்த இடத்தில்தான் ஆறாவது அறிவான மனிதன் வித்தியாசப்படுகிறான். தான் இயற்கைக்கும் அப்பாற்பட்டவன் என்று கருதிக்கொண்டு, இருக்கின்ற / அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையை தாண்டி, தானாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று, தனக்கும், பிறருக்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் சிக்கலை உண்டாக்கிக் கொள்கிறான். மேலும் இந்த இயற்கையையே பாழ்படுத்திவிட்டு அவனும் அதில் சிக்கி அழிந்தும் போகிறான் என்பதில் மாற்றுக்கருத்துண்டா?

எனவே, மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால், இயற்கையின் மிகப்பெரும் ஒத்துழைப்போடு,  தனக்கும் பிறருக்கும்  பயனளிக்கும் வகையிலே, இயற்கையை மீறாத நிலையில், பலனளிக்கும் வழியிலே, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து உருவாக்கிக் கொள்ளலாம். தானாக அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய திறமை மனிதனுக்குமட்டுமே உண்டு என்றும் சொல்லமுடியும்.

வாழ்க வளமுடன்

-

Method of realize the Divine by the words


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?


பதில்: 

பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.

ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.

அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!

இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.

அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும். 

வாழ்க வளமுடன்.

My Vote Goes to


 என் ஓட்டு யாருக்கு?


முதல் ஓட்டு அனுபவம்

நான் 18 வயது நிரம்பி, புதிய “மனிதனாக” மாறிய நாட்களில், ஓட்டுசீட்டில் என் பெயர் ஏறிக்கொண்டது. ஓவ்வொரு கட்சி வாக்கு படிவத்திலும் என் பெயரை படித்துப்பார்த்து, வாக்குச்சாவடி சீட்டு வாங்கு வைத்துக்கொள்ளும் பொழுது பெருமையாகவே இருந்தது. என்வீட்டில் மொத்தம் என்னையும் சேர்த்து எட்டு ஓட்டுகள் கிடைக்கும். எங்கள் பகுதி குறிப்பிட்ட கட்சிக்குரியது என்றெல்லாம் இல்லை எனினும்,  திமுக, அதிமுக, ஆர்வமுள்ளவர்களே அதிகம். ஆங்காங்கே சிலர் காங்கிரஸ். சிலர் இ.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. எல்லோருமே கண்ணைப்பறிக்கும் புனிதமான வெள்ளை ஆடைகளில் “தங்களை” மறைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நானும் என் அம்மாவும், அருகே இருந்த வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட பள்ளிக்கு நடந்துசென்றோம். பக்கம் என்பதால், நடந்தே சில தெரு மாறி செல்கையில், ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் பல குதிரை வண்டிகள் நின்றிருந்தன. எங்களைப்பார்த்த அவர்,

“ஓட்டு சாவடிக்குத்தானேம்மா, இருங்க. வண்டி வைக்கிறேன்” என்றார்.

“வேணாண்ணா. நடந்துடறோம்” அம்மா

“அட, இருங்க போவோம். தம்பிக்கி கன்னி ஓட்டா? டேய் தம்பி எந்த கட்சிக்கு ஓட்டு போடனும் தெரியுமா?”

“தெரியும் சார்” நான்

“@க்கு போட்டுடு என்னா!” என்றார் சிரித்துக்கொண்டே.

இவ்வளவு சத்தமாக சொல்லுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில், எப்போதாவது அந்தவீட்டின் அருகே, கடந்துவருகையில் ஏறக்குறைய என்வயதை ஒட்டிய கான்வெண்ட் பள்ளி மாணவியை பார்த்திருக்கிறேன். என்னை விட அழகாகவும் இருப்பாள். அது அவர் மகளா, பேத்தியா என்பது கூட தெரியாது. இந்த நேரத்தில் என் கண்கள், பருவ வயதின் ஆர்வத்தில், அந்த மாணவியை தேடத்தான் செய்தன. வேறு வழியின்றி, எங்கள் வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரமிருந்த பள்ளிக்கு, ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டி பயணம். வாக்கு சாவடியில் என் பெயரையும் என்னையும் சரிபார்த்து, விரலில் மைவைத்து, 

“தம்பி, ஒரு தடவைதான், ஒரு பெயரில்தான், ஒரு சின்னத்தில் தான் குத்தனும் சரியா?”

ஓ அப்போ மூணு தடவை குத்தனுமா?! என்று கிண்டலடிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை. 

வேட்பாளர் பெயர், சின்னம் பட்டியல் கொடுத்து அனுப்பிவைக்க, ஒதுக்கப்பட்டிருந்த அட்டை மறைவுக்கு பின்னே, ஸ்வத்திக் சின்னம் மை தொட்டு அழுத்தி, பதித்தேன். 


அரசு + இயல் = அரசியல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்க்கை வளம், கல்வி, பொருளாதாரம், எதிர்கால சந்ததியினருக்கான வழி இவற்றை, இயல்பாக, அரசால் வழிநடத்துவதற்கு அமைவதுதான் அரசு. ஒரு காலத்தில் “மன்னர் பரம்பரை வழியிலில் இருந்து” மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இது காலப்போக்கில், தலைவர், தலைவர் மகன், தலைவரின் பேரன், தலைவரின் கொள்ளுப்பேரன் என்று நீண்டுக்கொண்டே போய் மறுபடி “தலைவர் பரம்பரை வழிக்கு” மாறிவிட்டது, அத்தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

என்றைக்கு அரசியலில் இருந்துகொண்டு, அதை, தன்னை, தன் குடும்பத்தை உயர்த்துவதற்கு ஒரு தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே இந்த நாட்டிற்கான மலர்ச்சியில் தடை வந்துவிட்டது. இன்னொன்று, சமூகத்தில் தனக்கு கிடைக்கும் மரியாதை, பதவியின் அதிகாரம் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தேவையாகியது. மக்களுக்கான, நாட்டிற்கான சேவைதான் “அரசியல்” என்பது பொய்யாக போனது. 

உன்னால் நான், என்னால் நீ என்று இருகட்சியினருக்கும் இருக்கும் பொது தன்மையில், யாரும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் “இன்றுவரை” வளர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.  


குரங்கும் பகிர்வுகளும்

குரங்குகள் மட்டுமே அதிகமாக வாழும் அந்த சிறு காட்டுப்பகுதியில்,  உணவு கிடைக்காது வாடின. நல்ல உள்ளம் கொண்ட அந்த கிராமத்து மக்கள், தங்கள் தோட்டங்களில் கிடைத்த மாம்பழங்களை, ஒரு பெட்டியில் போட்டு, அந்த குரங்குகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். முதலில் குரங்குகள் அப்பெட்டியில் இருந்த மாம்பழங்களை பார்த்தாலும், கிட்டே வராமல் தள்ளியே நின்றன. நம்மை விட விலங்குகளுக்கு “வாசனை உணர்வு” மிக அதிகம். ஆனாலும் கிட்டே வரவில்லை. சில பெரிய வயதான குரங்குகள் கொஞ்சம் கிட்டே வந்தன. ஆர்வத்தில் நெருங்கப்போன குட்டி குரங்குகளை, அதன் தாய்கள்,  வாலைப்பிடித்து இழுத்து நிப்பாட்டின. 

வயதான குரங்குகள் பெட்டியை பாதுகாப்பாக தட்டி பார்த்துக்கொண்டு, பழத்தை எடுத்தன. சாப்பிட்டன. உடனே மற்ற குரங்குள் அனைத்தும் கிட்டே நெருங்கி, ஒரு குரங்கு, பழத்தை எடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு நகர, அடுத்த குரங்கு பழத்தை எடுத்து அதுவும் பாதுகாப்பாக நகர்ந்துவிட இப்படியே எல்லா குரங்குகளும், மாம்பழத்தை எடுத்துக்கொண்டன. 

இந்த நிகழ்வில்,

1) ஒரு சில குரங்குகள் ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொண்டன.

2) சில குரங்குகள் இரண்டு கைகளிலும் இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டன.

3) எந்த குரங்கும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, இடித்துக்கொண்டு பழங்களை எடுக்க போட்டி போடவில்லை.

4) ஒன்றை ஒன்று தள்ளிவிட்டோ, தலைக்கு மேலே ஏறியே பழத்தை எடுக்கவில்லை

5) தனக்கு கிடைக்கவில்லை என்று எந்த குரங்கும், இன்னொரு குரங்கின் மேல் பாய்ந்து சண்டைக்கு செல்லவில்லை.

6) தனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்க கூடாது என்று பெட்டியை தள்ளி உருட்டிவிடவில்லை.

7) தன்னால் முடிந்த அளவில் மாம்பழம் வேண்டும் என்று நிறைய எடுத்துக்கொள்ளவில்லை.

8) யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று எந்த ஒரு குரங்கும், பெட்டியோடு மாம்பழத்தை தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

9) தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை, சினம் கொள்ளவில்லை, ஆத்திரப்படவில்லை

10) எந்தக்குரங்கும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து மாம்பழத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

குரங்குகளுக்கு கட்சி இல்லை, கொள்கைகள் இல்லை, அரசியல் ஆர்ப்பாட்டமும் இல்லை, தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் இல்லை. இப்படி இல்லாததினால் அவைகள் தாழ்ந்து போகவும் இல்லை. 


#குரங்கிலிருந்து மனிதன் வந்தானா? இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.


வாழ்த்தெரியார் ஆளத்தெரியாதோர்

வாழ்த் தெரியாதோர் பெரும்பாலும் வாழ்நாட்டில்

     ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்

கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

இந்த கவியை, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் 1958ம் ஆண்டு எழுதியிருக்கிறார். (ஞானக்களஞ்சியம் நூல் ஒன்று, 129ம் கவி)


மன்னிப்போம் மறப்போம்

மக்களிடையே பொய்யுரைகள், வெறுப்புரைகள், வெற்றுவாக்குறுதிகள் கொடுத்து, மக்களை தன் வசம் திருப்பும் கலையை, எல்லா கட்சி தலைவர்களும் கற்றிருக்கிறார்கள். தாங்கள் பிறர் மூலமாக தங்களை உயர்வாக சொல்லி, புகழ்பரப்பிக்கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் காலில் விழவும் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு “அதிகார போதையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மை உரக்கச்சொல்வோம் என்ற செய்தித்துறைகள் கூட, பூசி மழுப்பிக்கொண்டிருக்கின்றன, அதுவும் ஒரு கட்சி சார்பாகவே.

நாங்கள் தப்புசெய்திருக்கிலாம். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். என்று “சும்மா” கேட்டாலும், “பணம்” கொடுத்து கேட்டாலும், மக்கள் “மன்னிப்போம் மறப்போம்” என்று கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் பெற்ற எல்லா கொடுமைகளையும் கடந்து, மீண்டும் அதே அரசை வரவேற்கின்றனர்.

குடும்ப பரம்பரை என்பதுப்போலவே, தனி மனித சிந்தனையும், அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பலருக்கு இல்லை. கூடவே தனது “இந்த வளர்ச்சிக்கு” காரணம் இந்த அரசுக்கு ஓட்டு போட்டதால்தான், அதனால் நீயும் போடு என்று பிள்ளைக்கும் ஊட்டி வளர்க்கினர். 

இவர்களிடம் பணம் வாங்கிவிட்டேன். அதை செலவும் செய்துவிட்டேன். தின்ன காசுக்கு, நியாயமா “இவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்” என்று வாக்கு அளித்து விடுகின்றனர். பணம் பெற்று ஓட்டு போட்டால், அடுத்த அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கான தீர்வை எப்படி கொடுப்பார்கள்?!

“யோவ், நீதான் அன்னைக்கே காசு வாங்கிட்டேயேயா? இப்ப என்ன இதுக்கு வந்து இங்க நிக்கிற?!” என்று கேட்க மாட்டார்களா? 


கட்சியற்ற ஆட்சி

மனிதனின் அடிப்படையான தேவைகள் மூன்று,

1) உணவு 2) உடை 3) இருப்பிடம்

மேலும், அடுத்ததாக கல்வி, மருத்துவ உதவி, தொழில்வாய்ப்பு, மக்களின் பாதுகாப்பு ஆகிய அடுத்த நான்கு தேவைகள் போதுமானதாக இருக்கும்.  ஆனால் தனிப்பட்ட தேவைகள் என்றால் ஆளாளுக்கு மாறுபடும் எனவே தனித்தேவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த ஒரு அரசும் இந்த முக்கிய அடிப்படை முன்றும், அடுத்த நான்கும் நிறைவேற்ற முடிவு செய்தாலே போதுமானதுதான்.

ஆனால் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஓவ்வொரு கொள்கைகள், அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சேவை மக்களுக்கானது என்றால் “ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும்?!” எத்தனை கட்சிகள் அரசாள வந்தாலும், 1) கடன் 2) வறுமை 3) கல்வியின்மை ஆகிய மூன்றும் இன்றுவரை தீர்க்கப்படவே இல்லையே?!

எனவே கட்சிகளற்ற ஆட்சிதான் நன்மை தரும் என்றும், வேதாத்திரி மகரிசி அவர்கள் தீர்வு (ஆண்டு 1961) தருகிறார்.


இன்னும் சில வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசி அவர்கள் “அரசியல், ஆட்சி, தலைவர்கள்” குறித்து இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே.

1) அரசியலே மக்களை அடக்கிடவும், உறிஞ்சிடவும் ஏற்றவழி என்பதை தலைவர்கள் அறிந்துகொண்டனர்.

2) அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும் அவலநிலையை முதலில் மாற்றவேண்டும்.

3) தெளிவற்ற மக்களிடம் சுயநலத்தோர், தேச, மத, ஜாதி, இன வெறியூட்டி, தெரிந்தால்போல நடித்து புகழ் பெறும் நடிகராக, அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்


வாழவைக்கும் ஆட்சி

கடன் வறுமை கல்வியின்மை என்ற மூன்று

களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்

உடன்பிறந்தார் போலஉள்ளம் ஒன்றி மக்கள்

உயர்நிலையில் வாழ வைக்கும் ஆட்சி வேண்டும்.

என்று வேதாத்திரி மகரிசி அவர்கள், ஆட்சியாளார்களை வரவேற்கிறார்.


வாக்கு தேர்வு

யாரோ சொல்கிறார்கள், என் நண்பர் சொல்கிறார். என் தந்தை சொல்கிறார், என் வாழ்க்கைதுணை சொல்கிறார். சமூக வலைத்தளங்களில் சொல்லுகிறார்கள். செய்தி தொலைகாட்சியில் சொல்லுகிறார்கள். தொண்டரே சொல்கிறார். தலைவரே சொல்கிறார் என்றெல்லாம் “ஒரு சார்பு” நிலை எடுத்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

ஆட்சியாளர்களின் கடந்த கால நிலையை அலசுங்கள், இப்போது சொல்லும் வாக்குறுதிகளை கேளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள். கடந்த ஆட்சியை நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல் போன காரணமென்ன என்பதை சிந்தியுங்கள். அது அந்த அரசின் அலட்சியம் என்றால், அவர்களுக்கு மறுவாய்ப்பு தருவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். எளிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரோ, அறிமுகமானவரோ இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள். கட்சி என்ற பாசம், ஒட்டுதல் நிலையில், அவர்கள் நிறுத்தும் எந்த மனிதருக்கும், உணர்ச்சி வசத்தால் வாக்களிப்பதை தவிருங்கள்.

உங்கள் வாக்கும், உங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும் எனவே, ஒரு நாள் பணத்திற்கு ஏமாறாதீர்கள். விரலோடு ஒட்டும் மையில், மொத்த வாழ்க்கையையும் இருட்டாக்காதீர்கள். உங்கள் வாக்கால், பிற மனிதரையும், சமூகத்தை அவதிக்குள்ளாக்காதீர்கள்.


வாழ்க வளமுடன். 


-----------------

Photo thanks to: Trac Vu @tracminhvu