CJ for You: children

children

Showing posts with label children. Show all posts
Showing posts with label children. Show all posts

I am afraid that whatever happens to others will happen to my family as well. For example, untimely death. This adds to my confusion. This was not easily overcome. I fear for my spouse and children and their future. What to do about it?


வாழ்க வளமுடன் ஐயா, அடுத்தவருக்கு நிகழும் எந்த ஒரு துன்பமும், என் குடும்பத்திலும் நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உதாரணமாக அகால மரணம். இதனால் என் மனம் குழப்பம் அதிகரிக்கிறது. இதை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. என் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை நினைத்தும், அவர்கள் எதிர்காலம் குறித்தும் பயம் வருகிறது. இதற்கு என்ன செய்வது? விளக்கம் தருக.


‘துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக்கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை.’

இப்படியாக வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சொல்லுவதைக் கொண்டு கவனிக்கும் பொழுது, ஒருவரின் உடல் பிரச்சனை, நோய், அகால மரணம் என்பதெல்லாம் இயற்கையின் நிகழ்வு. விபத்து என்பது கூட, நம்முடைய தவறுதானே தவிர, இயற்கை நிகழ்த்துவதில்லை.

ஏதேனும் ஒரு வகையில், நாம் எல்லோருமே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிவு நோக்கி நகர்பவர்கள்தாம். எனவே, வாழும் காலத்தில், நம்முடைய கடமைகளை நிறைவேற்றி, நல்வாழ்வு வாழ்ந்து, நம் வாரீசுகளை நிலைக்கசெய்யவேண்டும். அதன்படி அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள். அதுபோதும். எனவே, பிறருக்கு நடப்பதை எண்ணி, நம்மை வருத்திக்கொள்ள தேவையில்லை. உங்களுடைய இப்போதைய தேவை, எதிர்கால தேவை என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். நம் பெற்றோர் இல்லாமல் நாம் எப்படி மன உறுதி கொண்டோமோ, அதுபோல குழந்தைகளுக்கும் தனித்து செயல்பட பழக்குங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை கற்றுக் கொடுங்கள்.

எதிர்கால பயம் இருந்தால், இருக்கும் நாள் கெட்டுவிடும். செயல்படவும் முடியாது. அதை இறைவசம் விட்டுவிட்டு, அருட்காப்பு செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கும், கணவருக்கும், குழந்தைகளுக்கும் காப்பாக இருக்கும்.

துரிய தவம் அடிக்கடி செய்யுங்கள், மனம் தெளிவு பெறும். முக்கியமாக, இந்த கைபேசி, அதன்வழியான தகவல்கள் இவையெல்லாம், சிறுது நாளைக்கு மூட்டை கட்டுங்கள். அடுத்தவருடைய பிரச்சனை, துன்பம், உலகின் போக்கு, குழப்பம், அரசியல் அடிதடி, தடுமாற்றம், விரோதபோக்கு இதெல்லாம் இப்போது வேண்டாம். விலகிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, கிடைக்கும் நேரங்களில்,  நீங்கள், உங்கள் குடும்பம் என்று மகிழ என்னென்ன வழிகள் உண்டோ அதை கவனியுங்கள். அது போதும், மகிழ்ச்சி உங்கள் இல்லத்தை நிறைக்கும். வாழ்க வளமுடன். மேலும் சில உண்மைகள் அறிய இந்த காணொளி உதவும்.

துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ விருப்பமா? அதற்கான வழி என்ன?

வாழ்க வளமுடன்

-

யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னதான் யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


பதில்:

பக்தி என்பது நிச்சயமாக வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு சிலருக்கு, பக்தியும், கடவுளும், வழிபாடும் அவசியம் இல்லை என்று முடிவுக்கு வரலாம். அவ்வாறே வாழ்ந்தும் வரலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் ஒரு சராசரி மனிதருக்கு பக்தி அவசியமே! முக்கியமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது, இந்த உலகுக்கான நல்ல பழக்க வழக்கங்களை, அக்குடும்பத்தின் பக்தி வழியில்தான் பெற்று வளர்ந்து வருகிறது. மிகச்சில குடும்பங்களில் அந்த பக்தியும் இல்லாது போவதும் உண்டு. அதாவது, பெற்றோருக்கு பக்தி இல்லை என்றால் அது குழந்தைக்கும் இல்லை என்றே வளர்ந்து வரும். இப்படியான குழந்தைகள் தான் பக்தியும் இல்லை, கடவுளும் இல்லை, வழிபாடும் தேவையில்லை என்ற நிலையில் வளர்ந்து நம்மோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

யோகத்திற்கு அடைப்படையே பக்தி தான். அந்த நோக்கத்தில்தான், அந்நாளில் முன்னோர்கள், பக்தியில் மக்கள் தங்களை உயர்த்திக்கொண்டால், யோகமும் எளிதாகும் என்று வழிபாடு முறைகளை அமைத்தார்கள். ஆனால் அது இந்நாளில் உண்மை சிதைந்துவிட்டது.

யோகத்தில் இணைகின்ற யாருமே, பக்தியை விட்டு விலகவேண்டியதில்லை. மாறாக அந்த பக்தியில் இருக்கிற உண்மை என்ன? என்பதை புரிந்துகொண்டால் போதும். இதுவரை எதை வணங்கினோம்? எதற்காக வணங்கினோம்? அது அந்த இறை என்பதும், கடவுள் என்பதும் என்ன? என்ற உண்மைகளை விளங்கிக் கொண்டால் போதுமானது. விளங்கிக் கொண்ட உண்மையின் வழியாக நீங்கள் பயணித்தால் போதுமேதவிர, பக்தியை தவிர்க்கவோ, விட்டு விலகிடவோ தேவையில்லை.

எனவே, பக்தியையும் யோகத்தையும் குழப்பிக்கொள்ளாமல். பக்தியில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தானாக மாற்றத்தை உருவாக்கித் தந்திடும்! 

வாழ்க வளமுடன்.

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.

Why is such a change taking place in the conditions of the growing youth in this age?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வளரும் குழந்தைகள் சமூக கட்டமைப்பை உடைத்து, உறவுகளை, பெரியோர்களை, பெற்றோரையும் கூட மதிக்காத நிலை ஏன்?


பதில்:

மிக நுட்பமான, ஆராய்ச்சிக்குறிய கேள்வி. இந்த கேள்வியைக் கேட்கின்ற உங்கள் வயது என்ன என்றும் இங்கே குறிப்பிடவில்லை. அதனால் இந்த கேள்விக்கான முகாந்திரம் என்ன என்பதும் அறியமுடியாது. என்ன வகையான பாதிப்பை நீங்கள் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்பதும் தெரியவில்லை. முக்கியமாக இதற்கு மிக எளிதில் பதில் தந்துவிடவும் முடியாது. உலகில் ஒவ்வொரு மாற்றமும், முன்னேற்றமும், வாழ்கின்ற, வளர்கின்ற, வரப்போகிற மக்கள் சமுதாயத்தை பாதிக்கும் என்பது உண்மை. விஞ்ஞான, அணுவியல், வானியல், தகவல் தொழில் தொடர்பு முன்னேற்றங்கள் முன்னைவிடவும் இக்காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னளவில் அப்படியேதான் இதனை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மையே. 

இந்தக்கால தலைமுறை குழந்தைகள் உலகம் முழுவதும் அப்படி இருப்பதாக சிலர் சொன்னாலும் கூட, இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிப்பவர்களும் நிறைய உண்டு. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு என்பதை மறுக்க இயலாது. பொதுவாக, ஒன்றை குறை சொல்லுபவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார்கள். அவ்வகையில், இப்படி குறையாக சொல்லுபவர்கள், பழமைவாதிகள், வாழ்ந்துமுடித்தவர், பொறாமையில் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இளைய சமுதாயத்தோடு, வாழத்தெரியாத, பிற்போக்குவாதிகள் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள்.

எனவே இந்தக்கேள்விக்கான பதிலை, தனியே தருதல் தகாது. இதை ஒரு குழுவாக ஆராய்ந்து உண்மை அறியலாம். அந்த வகையில் விவாதமும் செய்யலாம். அதில் வரும் அல்லது கிடைக்கும் முடிவுகளை வரிசைப்படுத்தி, அதற்கு மாற்றாக நல்ல மாற்றங்களை செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் அல்லது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! ஏனென்றால் கேள்வி கேட்பவருக்குக்கூட என்ன பதில் என்பது தெரியும் அல்லது என்ன பதிலாக வரும் என்பதும் தெரியும். அந்த வகையில் உங்கள் கருத்தையும் பதியலாம்!

வாழ்க வளமுடன்.