CJ for You: travel

travel

Showing posts with label travel. Show all posts
Showing posts with label travel. Show all posts

Why felt tired on the yoga journey? How long need to move and what is the solution?


வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?


பதில்:

நீங்கள் இப்படி கேட்பது நியாயமானதுதான். இன்றைய வாழ்வுக்கான சூழல் மட்டுமல்ல, பொதுவாகவே மனிதர்களின் வாழ்வில், குண்டலினி யோகம் என்பது தனித்துத்தான் நிற்கிறது. அது ஒரு வாழ்வியல் மாற்றாக, நம்முடைய வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியமான மனவளக்கலையின் வழியாகவே வந்திருக்கிறது எனலாம். யோகம் என்பது, குடும்பஸ்தனுக்கு ஆகவே ஆகாது என்ற நிலையில், அப்படி இல்லவே இல்லை என விளக்கமளித்து, இல்லறத்திலே யோகம் என்ற மாற்றத்தை கொண்டுவந்து, தகுந்த விளக்கமும், பயிற்சியும் அளித்தது ‘வேதாத்திரியம்’ மட்டுமே என்றால் அது மிகையில்லை.

யோகத்தின் வழியாக, தனிமனித விடுதலை பெற்று, நான் யார்? எந்த சிந்தனையின் ஊடாக, உண்மை அறிந்து, இறையுணர்ந்த தெளிவோடு, தன்னுடைய எண்ணம், சொல், செயல் வழியே, மிகத்தெளிவான வாழ்வியலில், இன்பம் மட்டுமே அனுபவித்து, தனக்கும் பிறருக்கும் துன்பமில்லாது வாழ்வதற்கு வழி சொல்வதுதான் ‘வேதாத்திரியம்’. அதுதான் இங்கே பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. படித்து பட்டயம் பெற்று, தகுதிச்சான்று அடைந்த உடனே, அந்த நிலையை நாம் அடைந்துவிட முடியாது என்பதை, நாம் மறந்துவிடுகிறோம்.

கற்றுக்கொண்ட பயிற்சிகளான, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, அகத்தாய்வு, மௌனம் ஆகிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்துவருவது முக்கியம். இது எவ்வளவு காலம் செய்யவேண்டும்? தொடரவேண்டும்? என்பது, நம்முடைய / நமக்கு கிடைக்கும் விளக்கத்தை மட்டுமே பொறுத்தது. பிறர் சொல்லக்கேட்டு விளங்கிக்கொள்வது என்பதை விட, அந்த விளக்கத்தை, உளப்பூர்வமாக தானாக உணர்வதுதான் ‘உண்மை விளக்கமாகும்’ ஒரு பலா பழத்தின் சுவையை என்னதான் மற்றவர் சொன்னாலும், அந்த பலா பழத்தின் சுவையை நீங்கள் அறிந்ததாகுமா? அந்த பலா பழத்தை, நீங்கள் பெற்று, சாப்பிட்டால் அல்லவா? அந்த சுவையும் ருசியும் நீங்கள் அறிந்ததாக கொள்ளமுடியும். அதுதானே உங்களுக்கு திருப்தியும், மன நிறைவும், இன்பமும் அளிப்பது இல்லையா? இதை எப்படி நீங்கள், பிறர் சொல்லும் வார்த்தைகளால் அறிந்துவிட முடியும்?

வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? என்று கேட்பதற்கு, முக்கியமான காரணம் ‘உங்களிடமிருக்கும் ஓர் எதிர்பார்ப்பு’ ஆகும். சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒர் பாத்திரத்தை, ஒரே நாளில் புதிதாக, விளக்கி வைக்க முடியுமா? ஆனால் தினமும் செய்தால், ஒர் நாளில் அது, புத்தம் புதிதாக காட்சியளிக்கும் தானே? அதுபோல, எதிர்பார்ப்பு இல்லாமல் தொடர்ந்து, வேதாத்திரியத்தில் பயணியுங்கள். ஒருபோதும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.

உங்கள் வாழ்வில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை இந்த யோகத்தோடு முடிச்சு போடாதீர்கள். யோகம் பொருளாதாரத்தை கெடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள், இன்னமும் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்றல், நிறைவு பெறவேண்டும் என்றால் அதில் ஈடுபடுங்கள். அதற்காக யோகத்தில் ஏமாற்றம் கொண்டு, கைவிட்டுவிட முயற்சிக்காதீர்கள். ஒரு ஓட்டப்பந்தய விளையாட்டில், பாதியில் நின்றுவிடுவதும், விலகிப்போவதும் ஒருபோதுமே பலனளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இறையருளும், குருவருளும் உதவட்டும். நானும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

How long we need to travel with the Guru, the master in Yoga?


யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.





கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

பதில்:
மிகச்சிறந்த கேள்வி என்று கருதுகிறேன். பெரும்பாலான அன்பர்கள் குருவின் மீது பெரும்மதிப்பு கொண்டு, அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதுமே குருவோடு பயணிப்பார்கள் என்பது பொதுவானது. அது உண்மையும், இயல்பானதும் ஆகும். இத்தகைய மதிப்பு உலகில் உள்ள மற்ற எந்த தலைவருக்கும், பிற சிறப்பான மனிதருக்கும் ஈடு ஆகாத சிறப்பு பெற்றிருக்கும் என்பதும் உண்மை. என்றாலும் ஏறக்குறைய ஒன்றுபோல தோன்றும். மனிதர்களுக்கு என்றுமே தன்னை வழிநடத்தும் உயர்ந்த மனிதருக்கு, மதிப்பு தந்து, ஒழுங்குதல் இயல்பானது. அது யோகத்தில் இன்னமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வாழ்நாளில் நம்மை உயர்த்தி, பிறவிக்கடன் தீர்த்து, தன்னையறிதலையும், இறையுணர்வையும் பெற்றுத்தருபவர் ஆயிற்றே!

நாம் ஏதேனும் சுற்றுலாவிற்கு சென்றால் அங்கே ஒருவழிகாட்டி இருப்பார், அவர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் இருப்பார். தனியாக படிப்பறிவு இல்லாவிட்டாலும், பலமொழிகள் பேசி எல்லாமக்களுக்கும் வழிகாட்டியாக துணைசெய்து வருவார். இப்போது அதுவும் ஒரு கல்லூரி பாடமாகவும் உள்ளது. அந்த வழிகாட்டி, நாம் எங்கே ஆரம்பித்தோமோ, அங்கே வந்து முடிக்கும் வரை துணையாக இருப்பார், அதன்பிறகு அவர் பணி முடிந்துவிடும். அடுத்த நபர்களை நோக்கி அவர், நகர்ந்துவிடுவார். வேறு சில உலகியல், வாழ்வியல், மனித முன்னேற்ற தலைவர்களும் அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேலாக அவரின் துணை நகர்ந்து, வேறு சில புதியவர்களுக்கு நகர்ந்துவிடும்.

ஆனால் யோகசாதனையில், குருவின் துணை என்றுமே நகர்ந்தும் விடாது, அகன்றும் விடாது. ஒருவேளை நாம் குருவை கைவிட்டால் கூட, அவரின் வார்த்தைகளும், அக்கறைகளும் நம்மைவிட்டு பிரியாது என்பதே உண்மை. இதை நீங்கள் அனுபவமாகவும் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இதில், இந்த துணையிருப்பில், குருவும், மற்ற எந்த தலைவர்களும் நம்முடைய எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்னோடு இரு என்று கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். அங்கே ஒரு தனிமனித சுதந்திரமும் இருக்கும். சில உலகியல், வாழ்வியல் தலைவர்கள் விதிவிலக்கு.

அந்தக்கால யோகசாதனையில், குருவோடு பயணித்தல் என்பது, குருவின் காலம் முதல், அவருக்குப் பின்னாலும், அதை ஏற்று வழிநடத்தும் வகையில் இருந்தது. குரு என்ற உயர்ந்த தன்மை என்ற இடம், அடுத்து அடுத்து என்ற நிலையில் மட்டுமே இருந்துவந்தது. எனினும் காலமாற்றத்தில், ஒரு யோகசாதனையில் ஒரு குருவே தன் சீடரை தனக்கு நிகரான குரு அளவிற்கு உயர்த்தியும் வந்தார். இன்றோ, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, தன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு அன்பரையுமே தன்னைப்போல குருவாக உயர்த்தி மகிழ்கிறார். அதுவே அவருடைய நோக்கமாகவும் இருந்தது. அவர் தன்னை பிரபஞ்ச வான்காந்தத்தில் கலந்துகொண்ட பிறகும் அது தொடர்கிறது.

இந்த நிலையில், யோகசாதனையில், நம் உயிரோடு கலந்து நிற்கும் குருவானவரின் துணை, நம்முடைய வாழ்நாள் முழுவதுமே துணையாக வருகிறார் என்பதே உண்மை. நாம் குருவிடம், குருவோடு பயணிப்பது என்பது நம்முடைய நோக்கம், ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, அனுபவம் என்பதை கொண்டுதான் அமையும். எனவே யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

வாழ்க வளமுடன்
-

Nothing miracle not happen by joining and way of yoga, then way?


யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


பதில்:

இந்த கேள்விக்கு எதிர்வினையாக, நான் புன்முறுவல் செய்கிறேன். உங்கள் கேள்வியை, அதனுள் இருக்கும் ஏக்கத்தை வரவேற்கிறேன். அதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதையும், அதனால் எழுந்த ஏமாற்றமும் கலந்திருப்பதை அறிகிறேன். 

உங்கள் கேள்வியின் வழியாக, நீங்கள் மிகப்பெரும் உண்மையை, பிரமாண்டத்தை, ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை, மாயாஜாலத்தை அறியாமல் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதில் பயணிக்கிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள். ஆனால் பயணம் எத்தகையது என்று உங்களுக்கே புரியாமலும் இருக்கிறீர்கள். நேரிலே நாம் பார்த்துக் கொள்ளாததால் அந்த நிலையை என்னாலும் சொல்ல முடியவில்லை, எனினும் யூகிக்க முடியும்.

சரி, இப்போது உங்கள் அளவிற்கு நானும் இறங்கி நிற்கிறேன். உங்களுக்கு என்ன அதிசயம் நடக்கவேண்டும்? 

நினைத்த உடனே அந்தப்பொருள் உங்கள் கைகளில் தோன்றவேண்டுமா? ஒரு மலர் வேண்டுமென்றால், மலர் வேண்டும். பணம் வேண்டும் என்றால் பணம் வேண்டும். யாராவது வந்து உங்கள் கைகளில் திணித்துவிட்டு, 

‘இதை உங்கள் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள், திருப்பித் தரவேண்டாம்’ என்று சொல்லவேண்டுமா?

‘உங்களைப்போல ஒரு நல்ல மனிதர், உயர்ந்த மனிதர், என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’ என்று யாராவது பாராட்ட வேண்டுமா?

’உங்களை என் வாழ்க்கத்துணைவராக பெற்றது என் பாக்கியம்’ என்று வாழ்க்கைத்துணைவர் போற்றி வணங்க வேண்டுமா?

‘அப்பா, என் வாழ்வில் நீங்கள் பெரும் அதிசயம், உறுதுணை, நன்றி’ என்று பிள்ளைகள் பாராட்ட வேண்டுமா?

எனக்கு இருக்கும் நோய், துன்பம், பிரச்சனை உடனே தீரவேண்டும், அதுபோல மற்றவர்களின் நோய், துன்பம், பிரச்சனை என் மூலமாக தீர வேண்டும், அதன் வழியே உலகப்புகழ் பெறவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஊரும், உலகமும் உங்களுக்கு மட்டுமே உதவவேண்டும், போற்றவேண்டும், மரியாதை செலுத்தவேண்டும், வணங்கவும் வேண்டும் என்கிறீர்களா?

கோடிக்கணக்கான சொத்தும், எண்ணற்ற வைரம், தங்க கட்டிகளும், ஆபரணங்களும், நிலமும், வீடும், தோட்டமும், காரும், ஹெலிகாப்டரும், விமானமும், தனித்தீவும் வேண்டும் என்கிறீர்களா? இல்லை இந்த பூமி போல வேறேதும் உங்களுக்கென்று வேண்டுமா?

இப்படி எல்லாம் நடக்கவேண்டும், அதற்கு இந்த இறையாற்றல் உதவவேண்டும், அதற்காகவே நான் யோகத்தில் இணைந்துகொண்டேன். வேறெதும் எனக்கு தேவையில்லை என்று எதிர்பார்ப்போடுதான் நீங்கள் இங்கே, இந்த உலகில், இந்தப்பிறவியில் வாழ்கிறீர்களா?

போதுமா?

இப்போது இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள், பதில் தெரியவில்லை என்றால் சிந்தித்து பதிலை திரட்டுங்கள். கேட்கலாமா?

இந்த உலகில் எப்படி பிறந்தீர்கள்?

அதில் உங்கள் ஆர்வமும், முயற்சியும், உழைப்பும், விருப்பமும் என்ன?

வேறு எதற்காக பிறந்தீர்கள்?

பிறப்பதற்கு முன்னால் எங்கிருந்தீர்கள்?

பிறந்தபொழுது ஒரு முழம் இருந்த நீங்கள் இன்று கிட்டதட்ட ஆறு அடிக்கு வளர்ந்தது எப்படி?

நீங்கள் பிறந்தது, தவழ்ந்தது, நடக்கமுயற்சித்த மூன்று வயதுக்கு முன்னதான நினைவுகளை ஏன் சொல்லமுடியவில்லை?

உங்கள் தாத்தா, பாட்டி, அவர்களின் தாத்தா, பாட்டி இப்போது எங்கே?!

இதற்கு முன் பேரரசர்களும், மன்னர்களும், கோடீஸ்வர்களும், பெரும் உலக பணக்கார்களும் என்னவானார்கள்? எங்கே போனார்கள்? அவ்வளவு பெரிய நாட்டையும், பொன்னும், பொருளும்,  பணமும், தன் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டுதான் போனார்களா?

வாழும் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னவாக மாறப்போகிறீர்கள்? எங்கே போவீர்கள்?

இந்த அதிசயத்தை, மாயாஜாலத்தை நிகழ்த்துவது யார்? இதைவிட பெரிய அதிசயம், மாயாஜாலம் உங்களுக்கு வேண்டுமா?

சிந்தித்துப்பார்த்து விடை தேடுங்கள், விடை கிடைக்கவில்லை என்றால் ‘யோகத்தின்’ வழியாக முயற்சியுங்கள்.

உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வதுதான் யோகமா? என்று குறுக்கு கேள்வி கேட்காமல் மேலே கேட்டவற்றிற்கு முதலில் சிந்தனை செய்யுங்கள். அதிலே இந்த கேள்விக்கான விடையும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்.